news
வத்திக்கான் செய்திகள்
‘வணக்கத்திற்குரியவராக’ அறிவிக்கப்பட்ட இந்திய ஆயர்!

கொலம்பிய அருள்சகோதரி இனெஸ் அரங்கோ வெலாஸ் குவெஸ், இந்திய ஆயர் மேத்யூ மாகில், ஸ்பெயின் ஆயர் அலெக்ஸாண்ட்ரோ இலபாகா உகார்த்தே ஆகிய இறை ஊழியர்களைவணக்கத்துக்குரியவர்நிலைக்கு உயர்த்தும் ஆணைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார் திருத்தந்தை லியோ. ஆயர் மேத்யூ மாகில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் மஞ்சூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். 1896-இல் சங்கனாச்சேரியின் திருத்தந்தையின் பதிலாளாக நியமிக்கப்பட்டவர். இவர் அன்னை மரியா வினவுதல் சபையின்  நிறுவுநர். அலெக்ஸாண்ட்ரோ இலபாகா உகார்த்தே, அருள்சகோதரி இனெஸ் அரங்கோ வெலாஸ்குவெஸ் ஆகிய இருவரும் பூர்வக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்போது ஈக்குவதோர் மலைக்காடுகளில் நிகழ்ந்தவன் முறையில் மறைச்சாட்சிகளாகத் தங்கள் இன்னுயிரைக் கையளித்தவர்கள்.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்பு!

மே 18, ஞாயிறு அன்று திரு அவையின் 267-வது திருத்தந்தையாகக் கர்தினால்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘14-ஆம் லியோஎன்ற பெயரை ஏற்றிருக்கும் புதிய திருத்தந்தை அவர்களின் பணியேற்புச் சடங்கு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இவ்வழிபாட்டுச் சடங்கின்போது, தலைமைத்துவத்தின் அடையாளமாகப் புதிய திருத்தந்தைக்குப் பால்யம் மற்றும்மீனவர் மோதிரம்எனப்படும் முத்திரை மோதிரம் வழங்கப்பட்டது. திருத்தந்தையின் பணியேற்பு விழாவில் உலகின் பல பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர். ஏறக்குறைய 150 நாடுகளின் பிரதிநிதிகள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தனர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த அனைத்து மக்களின் பிரதிநிதியாகப் பன்னிரண்டு பேர் திருத்தந்தையைச் சந்தித்து வாழ்த்தினர்.

news
வத்திக்கான் செய்திகள்
திருஅவையின் 267 - வது திருத்தந்தையாகப் பதினான்காம் லியோ தேர்வு

திருஅவையை வழிநடத்தும் 267-வது திருத்தந்தையாக அகுஸ்தீன் சபையைச் சார்ந்த கர்தினால் Robert Francis, O.S.A. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Robert Francis Prevost என்னும் இயற்பெயர் கொண்ட கர்தினால் அவர்களைத் திரு அவையின் திருத்தந்தையாகக் கர்தினால் தோமினிக் மாம்பெர்தி அவர்கள் மே 8 வியாழன் மாலை 7.30 மணியளவில் வத்திக்கான் வளாகத்தின் மேல் மாடத்தில் இருந்து அறிவித்தார்.

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக, மேல் மாடத்தில் தோன்றிய கர்தினால் தோமினிக் மாம்பெர்தி அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோவைச் சார்ந்த கர்தினால் Robert Francis Prevost அவர்கள் திருஅவையின் 267-வது திருத்தந்தையாகத் தேர்த்தெடுக்கப்பட்டு பதினான்காம் லியோ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை அறிவித்தார். மக்கள் அனைவரும் இடைவிடாது கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர்.

1955 -ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அமெரிக்காவின்  சிகாகோவில் இல்லினோய்ஸ் என்னுமிடத்தில் பிறந்தவர் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 15, அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவரை கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், 2023, ஜனவரி 30, அன்று, ஆயர்களுக்கான திருப்பீடத்துறையின் புதிய தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் வெளியிட்டுள்ள புதிய அஞ்சல் தலை

ஏப்ரல் 28 திங்கள்கிழமைSede Vacanteஅதாவது தலைமைப்பீடம் காலியாக இருக்கும் காலம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் புதிய அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது வத்திக்கானின் தபால் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் அமைப்புகள் இயக்குநரகம். 266-வது திருத்தந்தையாக 12 ஆண்டு காலம் திரு அவையை வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஏப்ரல் 21 அன்று இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தத் திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வரையுள்ள காலத்தை அடையாளப்படுத்தும் விதமாகப் புதிய தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. திருப்பீடத்தினை அடையாளப்படுத்தும் சின்னங்களும், திருத்தூதர் பேதுருவின் சாவியைத் தாங்கிய வண்ணம் வானதூதர்களும் இந்தத் தபால் தலையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். தபால் தலையின் மேல்பகுதியில் தலைமைப்பீடம் காலியாக இருக்கும் காலம் 2025 என்பதும், கீழ்ப்பகுதியில் வத்திக்கான் நகரம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.   

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தைக்கு நினைவுத் திருப்பலி

எருசலேமில் உள்ள புனித கல்லறைப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவுத் திருப்பலி ஏப்ரல் 23-அன்று நடைபெற்றது. இலத்தீன் வழிபாட்டு முறையில் முதுபெரும் தந்தை கர்தினால் Pieroattista Pizzaoalla திருப்பலியை நிறைவேற்றினார்.  ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் இறைமக்கள் ஒருங்கிணைந்து திருத்தந்தையின் அர்ப்பண வாழ்வை நன்றியுடன் நினைவுகூர்ந்தனர். அவர் மாற்றத்தைத் தூண்டி, வலுவற்றவர்களை அரவணைத்து அன்பு மற்றும் இரக்கத்தின் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்ததை நினைவுகூர்ந்தார் அருள்பணியாளர் Francesco Patton. திருத்தந்தையின் பணிவும், இறைவேண்டல் செய்யும் அழைப்பும் அவரின் மறையுரையில் கோடிட்டுக் காட்டப்பட்டது.

news
வத்திக்கான் செய்திகள்
திரு அவையின் 266-வது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு

17-12-1936 அன்று அர்ஜென்டினா நாட்டில் பியூனஸ் அயர்ஸ் எனும் நகரில் ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ.

இவரது தந்தை இரயில்வே துறையில் பணிபுரிந்த ஓர் இத்தாலியர்.

வேதியியல் துறையில் பட்டம் பெற்றபின், 1958-ஆம் ஆண்டு தனது 22-வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.

தத்துவ இயலிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்ற இவர், பியூனஸில் உள்ள கொலிஜியோ டெல் சால்வதோர் என்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

13-12-1969 அன்று அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1972 முதல் 1973 வரை சான் மிகுவேல் என்னுமிடத்தில் உள்ள வில்லா வாரிலாரி இல்லத்தில் நவத்துறவறப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

1973 முதல் 1979 வரை அர்ஜென்டினா இயேசு சபை மாநிலத்தில் தலைவராகப் பணியாற்றினார்.

1992-ஆம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1998-ஆம் ஆண்டு அம்மறை மாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்றார்.

2001-ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் இவரைக் கர்தினாலாக உயர்த்தினார்.

2013-ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று 266-வது திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார். தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறை.

2025 -ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று உரோமை நேரப்படி காலை 7:35 மணிக்குச் சாந்தா மார்த்தா இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.

ஏப்ரல் 26 காலை 10 மணிக்குப் புனித பேதுரு பெருங்கோவிலில் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கு திருவழிபாட்டு நிகழ்வு, தொடர்ந்து மேரி மேஜர் பெருங்கோவிலில் நல்லடக்கம் நடைபெற்றது.