news
கவிதை
தாரும் அமைதி உங்க மண்ணிலே!

இயேசு நீர் பிறந்த மண்ணிலே

இன்னல்பட்டு மீட்பு நடந்த பூமியிலே

இறைசெய்தி அமைதி அறிவித்த மண்ணிலே

எம் இறைவா

அந்த அமைதியை அருளும் ஐயா!

இயேசுவே நீர் உயிர்த்த பூமியிலே

இறையாசிர் தந்த மண்ணிலே

இந்த யுத்தம் நிற்கவேண்டும்

இதை அழியாது தரிசிக்கணும்

நாங்க என்றுமே!

இயற்கை அமுதமாம்

எமக்களித்த பெட்ரோலியம்

இன்று ஆணவத்தால் அழிக்கப்படுவது

யானை தன்தலையில் தானே மண்வாரிப்போடுவது போல்

எல்லாரும் பாதிப்பு என உணரலையே!

சிலிண்டர் கிடைக்கலையாம்

சீரான பெட்ரோல் பஞ்சம் ஏற்படுமே

சிந்தனை செய்வாய் மனித இனமே

செயற்கைச் சீரழிவு

மன்னிப்பு கேட்பாயோ!

நீர் பிறந்தபோது அறிவித்த சமாதானம் - இயேசுவே

நிரம்பி வழியணும் இப்புவியினிலே

உம்மால் மட்டுமே முடியும் இது

உலகம் உம் ஆட்சி வருக!

உலக சகோதரத்துவம் சமாதானம்

உலகை மீட்டவர் உயிர்த்தவர் தரவேண்டும்.

உண்மை அமைதியின் மூலவர் அவர்.

.நா-வை விட மேம்பட்ட வலிமை இயேசுவே!

எகிப்தில் அன்று துன்புற்ற மக்கள்

எழுப்பிய துயரக் குரல் கேட்ட இறைவன்

எம் புண்ணிய பூமியிலே

என்றும் அமைதி காப்பாராக!

news
கவிதை
சிலுவைப் பாடுகள்!

என்ன குற்றத்திற்கு இந்தத் தீர்ப்பு?

தீர்ப்பை வழங்கியவனும் தீர்ப்புக்குள்ளானான்!

 

சுமக்க முடியாமல் அவர் தோளில் சிலுவை

நம் பாவங்களால் ஆனது அந்தப் பாரச் சிலுவை!

 

முதல்முறை விழுகிறார் மண்ணில்

ஆதவனும் அழுகிறான் விண்ணில்!

 

அன்னையும் மகனைச் சந்திக்கிறார்

மகனுக்கா இவ்வேதனை சிந்திக்கிறார்!

 

நண்பர் சீமோன் உதவுகிறார் - சிலுவையைச்

சுமக்க முடியாமல் அவரும் விலகுகிறார்!

 

துடைத்த துணியில் தூயவரின் முகம்

துயருற்று அழுகிறது இந்த யுகம்!

 

இரண்டாம் முறை விழுகிறார்

இன்னல்கள் சுமந்து எழுகிறார்!

 

எருசலேம் மகளிருக்கு ஆறுதல்

நீங்கள் அழாதீர்கள்!’ - வரும் ஒரு மாறுதல்!

 

மூன்றாம் முறை விழுகிறார் - விழுவது

வீழ்வதற்கல்ல; மீண்டும் எழுவதற்கு!

 

ஆடையில் முழுவதும் இரத்தம் - அதையும்

உரிகிறார்கள். இது ஆண்டவரின் சித்தம்!

 

பிறக்கும் போது வந்தனர் மூன்று ஞானியர்

இறக்கும்போது அறைந்தனர் மூன்று ஆணிகள்!

 

எல்லாம் முடிந்ததுஎன உயிர்விடுகிறார்

இரக்கமில்லாக் கயவர் மனத்தையும் தொடுகிறார்!

 

உயிரற்ற உடலோ அன்னையின் மடியில்

துயருற்ற அன்னையோ வியாகுலத்தின் பிடியில்!

 

இயேசுவின் உடலோ கல்லறையில் அடக்கம்

முடிவல்ல.... இது மீட்பின் தொடக்கம்!

news
கவிதை
தந்தையின் தவிப்புக் குரல்! (சிந்தனை - வார்த்தை)

மூன்று மணியளவில் இயேசு, ‘ஏலி, ஏலி லெமா சபக்தானி?’ அதாவது, ‘என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?’ என்று உரத்த குரலில் கத்தினார் (மத் 27:46).

மகனே, என் மகனே.....

உன்னை நான்

கை நெகிழ்ந்தேனே!

தந்தை நான் கதறுகின்றேன்...

தனயன் உன்னை நினைக்கையிலே

எல்லையில்லாத் துன்பமதை

என் மகனே நீ ஏற்றுக்கொள்ள...

வான்மகனை வாட்டும் வதையைக்

கண்டு வலிக்காதோ என் இதயம்?

உடையாதோ என் உள்ளம்?

என் நுகம் நீ... என் முகம் நீ...

எனக்குள் கிழிகிறதே!

என் சித்தம் ஏற்றுக்கொண்டாய்

தாய் மரி முத்தம்

பெற்றுக் கொண்டாய்

பண முத்தம் காட்டிக் கொடுத்தும்

அன்பில் நித்தம் நீ

தொடர்ந்து சென்றாய்!

துரோகத்தை மன்னித்து பூலோகத்தைக் காக்க

பரலோக மகனே

உன்னைக் கையளித்தேன்

கை கழுவி விலகும்

பல பிலாத்துகளையும் மன்னிக்க

கருணாகரனே உன்னைக்

கை நெகிழ்ந்தேனே!

நீ சாய்ந்து போய் மடியும் வேலை

நான் ஓய்ந்து போய் ஒடிகின்றேன்!

பாவத்தின் கொடுக்குப் படைப்பினைத் தாக்க

பரிகாரப் பலிக்கு

உன்னைப் பரிசளித்தேனே!

கெத்சமனி தோட்டத்தில்

மரண பய நாட்டத்தில்

செந்நீர் வியர்வை ஓட்டத்தில்

துயரமது கூடி நிற்க கூடுமானால்

துன்ப கிண்ணம் அகற்ற

நீயும் வேண்டிய போதும்....

ஆபிரகாம் தன் மகனைப்

பலியாக்கும் வேளை

தடுத்து நான் நிறுத்தினேன்.

ஆணி, முள், சிலுவை என

மரணப்பிடியில் என் மகன்

நீ தவிக்கும் வேளை

தடுக்காமல் நான் தவித்தேனே!

உன் வலியில் அழுகின்றேன்

உன் சுவாசத் தவிப்பில்

நான் சுவாசம் இழக்கின்றேன்!

உன் வறண்ட நா வெப்பத்தில்

என் உள்ளம் கொதிக்கிறது!

தந்தை என்னைச் சிதைத்த

தனயன் உன் நிந்தை யாவும்

தரணியின் பாவக் கேட்டை நீக்கவே!

ஆசியையே வழங்கிட்ட கரங்களை

ஆணிகள் தொலைத்திட்ட வேளை

உடைந்து போன

தந்தையின் வேதனை

தணிக்க வேறு தந்தை உண்டோ?

என் நெஞ்சில் எரியும் நெருப்பை

அணைக்கும் நீரைப்

படைக்கும் வேறு கடவுள் உண்டோ?

பாவ மண்ணின் சத்தம்

வரைந்தது என்னில் மீட்பின் சித்தம்

சிந்தப்பட்டது குற்றமற்ற

உன் இரத்தம்.

இதனால் ஒழிந்தது நித்தம்

பாவக் கடன் குத்தம்!

காலத்தினாலும் ஞானத்தினாலும்

கணிக்க முடியா என் பேரன்பைக்

கல்வாரியில் பொழிகின்றேன்!

அதை உன் சிலுவைச் சாவில் மொழிகின்றேன்! சாகடிக்கும் சோதனையில் நான் எழ...

சாதிக்கும் வேதனையில் நீ விழ...

சாவை வென்ற பலனில் நம்பிக்கையாளன் வாழ...!

முடிந்துவிடும் உன் மரண வலி

தொட்டுவிடும் தூரமே!

முடிந்திடாத என் மனவலியோ

தொடர்ந்து கொண்டு நீளுமே!

தொட்டு என்னைத்

தேற்றுவார் யாரோ?

பரிகசித்து பாழ்படுத்தும்

பாவிகளிடத்தில் நீ விழுந்தாய்!

கொடியவரின் கொலைவெறிக்கு

உன்னையே கொடுத்துவிட்டாய்!

இறை உன் முகத்தை

மறைத்துக் கொண்டு

கொடியோரை மன்னிக்கச் செய்தாய்!

இத்தனை பரிகாச கொடுமைகளிலும்

அவர்களுக்காய் பரிந்து பேசினாய்!

என்னை மாட்சிப்படுத்திய

உந்தன் இரத்தம்

மண் சாபங்கள் தீரவே!

நம் சாயல்கள் மீளவே!

இத்துணை துயரங்களும்

சிலுவைப் பாடுகளும்

தூரமாய் விலகிப் போன

நன்றி மறந்தவர்களாலே!

என்னை உடைத்து

உன்னைக் கிழித்த கொடுமைகள்

யாவும் பாவத்தின் விளைவுகளாலே!

நம் சாயல்களின் மீறுதல்களாலே!

மீட்பர் உன்னில்

நம்பிக்கை கொண்டு

பாவத் தடைகளை மீண்டு வர

பாவிகள் மீண்டும் உயிர்த்து எழ

பரிகாரப் பலியாக உன்னை

நான் கையளித்தேனே!

(இப்படைப்பு தவக்காலத்தின் இசைக் காவியமாக அருள்பணி. பிலிப் அவர்களின்santhanam creations’ என்ற you tube காணொளி வழியாக கண்டு பயன்பெறலாம். தொடர்புக்கு: 82485 07089)

news
கவிதை
தாயின் மடியில் இயேசு - கவிதையாக...

உலகத்திற்கு இறைமகன்,

மெசியா, அரசர்

என்ன சொல்லிப் புகழ்ந்தாலும்

எனக்கு நா பெத்த பிள்ளை

தல பிள்ளை, ஒரே பிள்ளை

பத்து மாசம் சுமந்த பிள்ளை!

 

பத்து மாசம் சுமந்தத நா

சொல்லிக் காட்டல

என் மடில உசுரு இல்லாம

இருப்பனு நினைச்சி பாக்கல...

ஏரோதுகிட்ட இருந்து தப்பிச்சது

மக்களுக்காகவா உசுர குடுக்கவா...!

 

பாத்து பாத்து வளத்த பிள்ளைய

மக்கள் கிட்ட குடுத்துபுட்டேன்

பாலூட்டி வளத்த பிள்ளைய

இரத்தத்துல பாத்துப் புட்டேன்...

தலைக்குக் குளிச்ச உன்னோட

தல முடிய துவட்டும் போது

கலச்சி விட்டு அழகு பாத்தேன்!

அழகு பாத்த இடத்துல

முள் செடிய இறக்கி

வச்சத பாத்து நொந்து போனேன்...!

 

சின்ன வயசுல உங்க அப்பாக்குத்

தச்சு வேலைல உதவி செஞ்ச

பிஞ்சு கைகள

ஒரு பக்கம் பாய்ந்து மறு பக்கம்

வெளிய தெரியுற மாதிரி

ஆணி அடிச்சி வச்சிருக்காங்க...!

நீ எப்படித்தான் வலிய தாங்கினியோ

மகனே... வாரிசே... செல்லமே...!

 

உசிரில்லா உன் உடல கூட

தொட யோசிக்கிறேன்

உன் காயத்துல என் விரல் பட்டு

திரும்பவும் வலில

துடிப்பியோனு அழுகுறேன்...

என் கண்ணீர உன் காயத்துக்கு

மருந்தா தாறேன்

விழுந்த கண்ணீர வச்சே உன்னோட

மொத்த காயத்தையும் தொடைக்கிறேன்...!

 

குழந்தைல உன்ன தலைக்கு மேல

தூக்கிக் கொஞ்சும் போது உன்னோட

அடி வயித்துல குடுத்த முத்தத்தால நீ சிரிப்ப...

நா முத்தம் குடுத்த இடத்த

கிழிச்சி வச்சிருக்காங்க...

மனிதாபிமானம் இல்லாதவங்க!

 

நாம மூணு பேரும் இரவு தூங்கும்போது

உன்னோட வலது பாதத்த

என்னோட கன்னத்துலையும்

இடது பாதத்த உங்க அப்பா கன்னத்துலையும்

வச்சி அழகு பாத்தோம்...

மிருகக் குணம் பிடிச்சவங்க...

பாதத்துல துளை போட்டு வச்சிருக்காங்க...

ஐயா... என்னைப் பெத்த ராசாவே...!

 

நா செத்து என் கல்லறையில நீ

மண் அள்ளி போடுவனு பாத்தேன்...

இங்க நீ செத்து நா மண் அள்ளி போட வச்சிட்டாங்க...!

என்னையும் உன் கூடவே

கூட்டிட்டு போயிடு ஐயா!

ஊருக்குலாம் பதில் சொல்லிட்டுப் போயிட்ட...

நா மட்டும்தான் நாதி இல்லாம

புலம்பிட்டு இருக்கேன்...

பெத்த மனம் பித்தாச்சு

பிள்ளை மனம் கல்லாச்சு...!

news
கவிதை
இறையடியார் தந்தை ‘லெவே’ போற்றுக! (திருத்தசாங்கம்)

(பெயர்)

மழலை மொழிக்கிள்ளாய்! அண்ணலாரின் தூய

பழம்பெரும் பேர்புகழைக்கூறு! - நலம் காண

வேண்டினாலும் வண்ணத் தமிழாலே பாடினாலும்

யாண்டும்லெவேயென்றே கூறு.

 

(நாடு)

இன்பத் தமிழ்க் கிளியே! நம் தாத்தா சாமியின்

அன்னைத் திருநாட்டைச் சாற்றிடு - தொன்மை

தகவுரு தேசமும் பக்திபிரான்சும் இராசி

முகவைகண் சீமையென்று ஓது!

 

(நகர்)

கூவும் கருங்குயிலே! நற்செய்தி வித்தகரின்

மேவும்சீர் ஊரெதுவோ? சாற்றுக - பூவேந்தும்

மாஞ்சோலைச் சிட்டுகள், பண்ணிசைக்கும்

சர்வகாணி

தீஞ்சொல் ஞானிஊர் சாற்று!

 

(ஆறு)

பஞ்சவர்ணம் பைங்கிளியே! வாழ்வில் ஒளியேற்றும்

பிஞ்சுமணச் சாமியின் ஆறு என்ன? - கொஞ்சும்

தமிழ்பேசி நற்செய்தி வாழ்வாக்கும் தந்தை

அமைதியுற்றரோகினியே கூறு.

 

(மலை)

பைந்தமிழ் பேசும் கிளியே! வான் தேவபுறா

நம்தேயம் வாழும்மலைசொல்வாய் - மஞ்சுசூழ்

ஆண்டாவூரணி - நல்முகவைசருகணியும்

யாண்டும் புகழும் மலை.

 

(தேர்-ஊர்தி)

பேர்பாடும் மாங்குயிலே ஓரியூர் ஒண்கதிரின்

சீர்மிகு தேர்எது? சொல்வாய்நீ - பார்மிசை

கால்நடையும்காளைமாட்டுவண்டியும் அஞ்சாமல்

தாளாற்றி வந்தசாமி தேர்.

 

(படை)

முத்துமணிக் கிள்ளாய்! கருணை உருவான

சித்தர்படையென்ன சொல்லு - கத்தும்

குயிலோசைப்பீடச்சிறுவர்கள்செம்மண்

புவனம் புகழ்படைசாற்று

 

(முரசு)

செம்பவள வாய்க்கிளியே! யேசுபடை வீரரின்

அன்பென்று கொட்டும்முரசெது?  - இன்பங்கள்

யாவும் பெருக்கெடுக்க மக்களெல்லாம் ஒன்றெனக்

கூவும்நற்செய்திபோற்று.

(மாலை-தார்)

பாடும் தமிழ்க்கிளியே! ஏழைநம் பங்காளர்

நாடுபோற்றும் சாது லெவேதார்என்ன? - நீடு

துயிலினை நீக்கவந்த ஆன்மிகச் சூரியனின்

திருச்செபமாலையென்றே கூறு!

 

(கொடி)

சந்தக்கவிக்கிளியே! ‘சர்வகாணித் தென்றலவர்

சிந்தைமிகு ஞானிகொடியென்ன? -விந்தை மிகு

மாசுதன் ஆட்சியை () ‘ராசியில் ஏற்றிவைத்த

() யேசுவின்... நற்கொடியே பேசு!

 

ராசி - இராமநாதபுரம், சிவகங்கை பகுதி.

குறிப்பு: ஒரு மன்னரை, அரசியை, தெய்வீகக்

குழந்தையை, ஞானியை, சித்தரை, சான்றோரை,

மகான்களை, அரசனாக எண்ணிப் போற்றி,

மன்னர்க்குரிய பத்து உறுப்புகள்கொண்டு பாடுவது

கவிதை இலக்கண மரபு - திருத்தசாங்கம் 10

உறுப்புகள்) அவ்வாறு இறையடியார் லூயி மரி லெவே

அடிகளைப்பற்றிப் பாடப்பட்டது.

news
கவிதை
தரணி போற்றும் தந்தை லெவே!

விண்ணகப் பிறப்பு முடிவல்ல - வெற்றி தானே!

ஐம்பத்து மூன்று ஆண்டுகள் நினைவுகள் அல்ல - அது

அர்ப்பணத்தின் உயிரோவியமே; அருள்நிறை காவியமே!

1921- இல் இந்தியா நோக்கிய பயணம்

அழைப்பால் கொண்ட தியானம்!

1943 - இல் ஆண்டாவூரணி பங்குப்பணி

மறைநிறை கல்விப்பணி!

 

வானம் மூடியதால் வறண்டு போன நீர் நிலைகள்

வாடியது பயிர்கள் மட்டுமல்ல, மக்களும்தான்! தந்தை

வாஞ்சையோடு கைவிரித்துச் செபிக்கக் கண்டு,

வான்மழை கொட்டியதே; மகிழ்ச்சியெங்கும் கிட்டியதே!

மழைச்சாமிவேண்டியதால் இறைச்சாமி அருள்பொழிந்தார்!

 

பதினைந்து கிராமங்கள் பக்தியுடன் பாத யாத்திரை!

ஓரியூரின் திருத்தலத்தில் ஒற்றுமையில் ஒருங்கிணைப்பு;

வயிற்றுப் போக்கு, காலரா வலிநோய்கள் நீங்கிடவே

அன்பின் மருந்து ஆறுதலே அவர் விருந்து!

அற்புதங்கள் நிகழும் ஆற்றல்மிகு வல்லமையாய்!

 

கிராமந்தோறும் பணிகள் கால்நடந்த பயணம்;

ஆண்டாவூரணியில் ஆண்டுகள் இருபத்திரண்டு!

ஆற்றலுடன் ஆர்வமுடன் ஆண்டவனின் மகிமைக்காக!

இராமநாதபுர மண்ணிற்கு இடமாற்றம் கண்டதனால்

இறைப்பணிகள் தொடர்ந்தனவே பதின்மூன்று ஆண்டுகளாய்!

 

பெரும்புயல் வீசியதால் பெயர்ந்தனவே நம்பிக்கையும்

வீடுகள் இடிந்தனவே, மனங்களும் உடைந்தனவே.

உயிரான பயிர்களும் பூச்சியினால் அழிந்தனவே!

உணவும், உடையும், ஆறுதலும் ஓயாத நம்பிக்கையும்

ஓலைகொண்ட இறைவார்த்தை தீர்த்தம் சுகம் தந்தனவே!

 

சருகணி பங்கினிலே பணிக்காலம் 17 ஆண்டுகள்

புன்னகை பூத்த மனம் பூரிப்பில் திளைத்த குணம்

வளமில்லா இடத்தில் வளம் சேர்ந்ததங்கே!

பலமில்லா இடத்தில் பலம் சார்ந்ததங்கே!

ஒளியினிலே நாளெல்லாம் மிளிர்ந்ததங்கே!

 

உயிரோடு இருந்தபோதும் ஓயாத அற்புதங்கள்!

மண்ணில் அவர் ஓய்ந்தாலும் மறையாத சொற்பதங்கள்;

அன்பின் வாசமலர் அவரே! அருள்நிறைந்து - இறைப்

பண்பில் ஒளிர்ந்த திருச்சுடர் தந்தை லெவே!

வாழிய வாழியவே; நின்புகழ் என்றும் வாழியவே!