news
கவிதை
பேறுபெற்ற பெத்லகேம்!

பேறுபெற்ற பெத்லகேமே- நீ

வேறுபட்ட பெத்லகேமே!

பேரருளின் பெட்டகமானாய் -நீ

பேரரசரின் பிறப்பிடமானாய்!

 

நாடப்படா இடமாய் கிடந்த நீ,

தேடப்படும் இடமாய் உயர்ந்தாய்!

சிறு கிராமமாகிய நீ -இயேசுவே

சிசுவான சிங்கார வனமானாய்!

 

வைக்கோலின் மணமாய் இருந்த நீ,

வான் தேவனின் பிறப்பின் கனமானாய்!

அற்பமான மாட்டுத் தொழுவத்தை நீ

ஆசிர்வாதமான இல்லமாக்கினாய்!

 

மதிக்கப்படாமல் வாழ்ந்த மேய்ப்பர்களை நீ

மாண்புமிக்க சாட்சிகள் ஆக்கினாய்!

அச்சத்துடன் வாழ்ந்த மனிதர்களை நீ

ஆச்சரியத்தால் மகிழச்செய்தாய்!

 

மாட்டுத் தொழுவம் கூட - இறைமகிமையைப்

பாட்டாக்க முடியும் எனக் கற்றுத் தந்தாய்!

இருள் சூழ்ந்து சோர்ந்த இடமதில்  நீ

இறை அருள் சூழ்ந்து ஒளிர்ந்திட வழி வகுத்தாய்!

 

உயர்ந்த மாளிகைகள் இல்லாத நீ

உன்னத தேவனின் உறைவிடமானாய்

அயர்ந்த மனிதருக்கு ஆறுதல் தந்தாய் நீ

அன்பினால் அனைவருக்கும் தேறுதல் தந்தாய்!

 

வரலாறு உன்னை மதிக்கவில்லை - ஆனால்

வானமே உன்னை வர்ணிக்கச் செய்தாய்!

ஆசிர்வதிக்கப்பட்ட நகரமானாய்-இறை

அன்பு சூழ்ந்த சிகரமானாய்!

 

புனித நகரமே, புண்ணிய பூமியே!

பூபாளங்கள் முழங்கிடச் செய்தாய்,

புன்னகை பூத்திடச் செய்தாய்

உன்னை நினைக்கையில்,

உள்ளம் குளிரச் செய்தாய்!

 

நம்பிக்கை நகரமே,

நித்தியத்திற்குத் துணை நின்றாயே!

வேதம் அறியாத நீ அமைதியில்

போதனை செய்கின்றாயே!

 

இதயத்தில் தாழ்ந்தோரை,

இன்பமுடன் வாழ அழைத்தாய்!

குறைகளால் நிறைந்தோரை

இறையருளைச் சுவைக்கச் செய்தாய்!

 

கருணை நிறைந்த தேவனை,

கண் திறக்க வைத்தாயே உன் மடியில்!

விண்ணின் ஆசிர் மண்ணில் மலர,

உன்னையே தாரைவார்த்துத் தந்தாயே!

 

அரவமற்ற இரவுதனில் - இறை

அமைதியைச் சுவைத்திட அழைப்பு விடுத்தாய்!

விண்மீன்களால் மட்டுமல்ல அந்த இரவு

மன்னவனின் கருணையாலும் ஒளிரச் செய்தாய்!

 

பொன்னோ பொருளோ அல்ல

உன்னைச் சிறப்பித்தது,

அரசனோ அறிவியலோ அல்ல

உன்னை உயர்த்தியது,

அன்பு நிறைந்த ஆன்மிகமும்

தாழ்ச்சி நிறைந்த தியாகத் திருமகனும்தான்!

 

வாரி வழங்கும் வள்ளல் தேவனைப்

பாரினில் மலரச் செய்தாயே!

பேறுபெற்ற பெத்லகேமே,

உன்னில் பூரிப்படைந்துதான் போகிறேன்!

news
கவிதை
சன்னலுக்குள் சுதந்திரம்

சிறகொடிந்த பறவை போல்

சிறையுண்டு கிடப்பவளே!

 

சுதந்திரம் கிடைத்த பின்னும்

இயந்திரம் போல் வாழ்பவளே!

 

மனம் ததும்பி வெதும்புகையில்

பழுகிக் காயும் காரிகையே!

 

உலகம் உன்னைத் தூற்றினாலும்

காலம்தந்த

வலிகள் தீர

சோகம் உன்னை வாட்டும்போது-உன்

கண்ணீர்த்துளிகள் மருந்தாகும்!

 

பீறிட்டு ஒழுகும் குருதி போலப்

பொங்கியெழு பொற்சிலையே!

 

இச்சைக்கு இரையானாய் - பரத்தைப் பட்டம் நீ பெற்றாய்

செல்வம் பணம் பகட்டின்றி - புகலிடம் என்று

இன்று உண்டோ?

 

தென்றலாக இருப்பவளே

கொடும் புயலாக

எழுந்து வா!

 

மெழுகாயுருகி

அழுதது போதும்

சுட்டெரிக்கும் கதிராய்

சுடர்வீச வா!

 

பாலைவனமாக

இருந்தது போதும்

விளைச்சல் நிலமாகச்

செழித்திட வா!

 

ஜன்னலுக்குள்

தோன்றி மறையும்

நிலவைப் போல்

வாழ்க்கையடி!

 

சாதிக்க மனம் இருந்தால்

அகிலமே உன் வசமாகுமடி

நமக்கும் உண்டு சமநீதி

நாமும் பெறுவோம் பொதுநீதி!

 

எழுத முடியாப் புத்தகமாய்

முற்றின்றி முடியாத்

தொடர்கதையாய் முட்டி மோதிப்

பிழைத்தாலும் - தலையில்

குட்டிக் குட்டித் 

தாழ்த்துவோன் யார்?

 

வார்த்தையால் மட்டும்

சமத்துவம், சுதந்திரம்

என்று ஆகிடுவோம்?


news
கவிதை
தேசம் கடமைப்பட்டிருக்கும்

அவன் மனத்தைப் போல் உறுதியுடனும்

தைரியத்துடனும் நிறைந்தவன்!

முகமூடி போன்ற

அந்தத் திடீர் புயலைத்

தன் கண்களில் கொண்டு தாங்கினான்!

உலகையே இழந்த

மனைவி ஒரு பக்கம்!

அவனது நினைவுகளைப் பேணும்

ஐந்து வயது மகளோடு

தன் பக்கம்!

இந்த வலிகளைத் திருந்தி,

தன் கடமையில் உறுதி காட்டும்

ஓர் இராணுவ அதிகாரி

தன் துயரத்தை வானிற்கே

அழுது காட்ட விரும்பினாலும்

தன் தோளில் இருக்கும்

அந்தப் பட்டம்,

கண்ணீர் வண்டல் நொறுங்கும்

இதயத்தின்போது மரியாதையுடன்

நிற்கச் சொல்கிறது.

ஒரு தாயாய்,

ஒரு மனைவியாக,

ஓர் இராணுவ அதிகாரியாக,

உள்ளுக்குள்

எண்ணற்ற போராட்டங்களைக் கொண்டவர்.

தாங்க இயலாத

வலியும் வேதனையும்

ஒரே நேரத்தில்

கண்டுபிடிக்க முடியாத

அளவில் அனுபவித்தவர்.

அவன் காதலித்த மனைவி,

அன்பு மகள்,

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கான

மரியாதையைச் செலுத்தி

விடையேற்றிய வான் வீரனே,

உனக்கு என்றும்

இந்தத் தேசம் கடமைப்பட்டிருக்கும்!

news
கவிதை
நலிந்தோருக்கு நல்வாழ்வு!

அன்பின் ஒளியாம் அவனியில் வந்தீர்;

அருளின் வடிவாய் எளியோரைக் கண்டீர்

இன்பம் தனைநீர் என்றும் பாராமல்

துன்பம் துடைப்பதே பணியெனக் கொண்டீர்!

 

கல்விக் கண்திறக்கும் கருணையின் கரங்கள்

இல்லாமை போக்கும் இறைவனின் வரங்கள்

பெண்களின் வாழ்வுயரப் பெரும்பாடுபட்டீர்

மண்ணில் மாந்தர்க்கு மறுவாழ்வு தந்தீர்!

 

ஆதரவு அற்றவருக்கு அன்னையாய் திகழ்ந்தீர்

ஆறுதால் மொழியாய் ஆனந்தம் தந்தீர்

சாதிகள் பாராமல் சேவையைச் செய்தீர்

சமூக நீதிக்காய் சளைக்காமல் நின்றீர்!

 

தங்கள் நலமே ஒருபோதும் கருதா

தருமம் ஒன்றே தலைசிறந்த தென்றீர்

எங்கும் நிறைந்திடும் இறைவனின் ஒளியாய்

கொன்சாகா அன்னையே வாழ்க நீர் என்றுமே!

 

நற்செய்தி கல்வி சமூகப்பணி வழியிலே

நலிந்தோருக்கு தந்தீர் நலமான வாழ்வையே

ஐந்தைம்பது ஆண்டுகளாய் ஆற்றிய பணிகளை

அகிலமும் போற்றுமே! சேவை தொடர என்றும் வாழ்த்துமே!

 

news
கவிதை
இறையாட்சியின் சாட்சிகள்

இறையாட்சியின் அரும் சாட்சியாக வாழ்ந்த

இலட்சியச் செம்மல் மைக்கேல் அன்சால்தோ

இயேசு சபையின் இணையில்லாச் சொத்து!

 

ஏனென்றால் -

இயேசு சபையானது பல்வேறு காரணங்களினால் இரத்து செய்யப்பட்ட

காலச் சூழலமைவானது

இடறல் கொண்டதாக இருக்கும்போதே,

 

அலோசியஸ் கொன்சாகாவின்

இனிய நாமத்துடன் புதியதொரு

துறவற சபையினை இடம்பெறச் செய்தார்,

திரு அவையின் வரலாற்றிலே!

அன்சால்தோ அடிகளாரின்

அடிச்சுவடுகளைப் பின்பற்றி

அசிசியாரின் அருள்சகோதரிகளாக

அலோசியஸ் கொன்சாகா சபையினர்

அரும்பெரும் பணிகள் பல

ஆற்றி வருகின்றார்கள் 250 ஆண்டுகளாக!

 

அவர்களின் எதிர்காலமும் அதற்கான

அவர்களின் எதிர்நோக்குகளும்,

அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி அமைந்திட,

ஆவியின் ஆற்றலால், இறை இயேசு தாமே

ஆசிர் வழங்கிட அரவணைத்திட வாழ்த்திடும்...

news
கவிதை
தாயாய் அரவணைக்கும் கொன்சாகா!

துறவியாக வாழ ஆசை கொண்ட தருணம்

ஆர்வமாய் அரவணைத்த கொன்சாகா தாய்

வழிநடத்திய பாதைகள்தந்த அனுபவங்கள்.

கற்றுக் கொடுத்த பாடங்கள்ஏராளம்ஏராளம்!

 

பிறந்த மண்ணை விட்டு வட மாநிலத்தில்

பணியாற்ற - அதுவும் முதன்முறை

மூன்று சகோதரிகளுடன் பயணித்த

இரயில் பயணம்

நிறைத்தது கண்களை கண்ணீரால்

அந்தக் கண்ணீரும் ஆனந்த கண்ணீரானது

பெற்ற அனுவங்களால்...

செப்பனிடப்பட்ட தருணங்களால்!

 

புது இடம் புது மொழி

புதுக் கலாச்சாரம் புது உணர்வு

மத மொழி இன வேறுபாடு இருப்பினும்

இறைவனின் அன்பை

குழந்கைகளுக்கு எடுத்துரைக்க

பெரியவர்களை அனுபவித்து உணர வைக்க!

 

இறைவனே இல்லை என்றவர்களின் நம்பிக்கையைத் தட்டியெழுப்ப

வாய்ப்பு மனவலிமை விசுவாசம் - இவற்றை

கற்றுத் தந்தது

எம் கொன்சாகா சபை!

 

இயேசுவை அறிவித்தால் தண்டனை ஒருபுறம்;

இயேசுவை அறியத் துடிக்கும் மக்கள் மறுபுறம்;

இரண்டின் மத்தியில் இறையரசைப் பரப்ப

எம் சபை ஊட்டியது வலுவை

இவ்வலுவுடன் ஆற்றினேன் நற்செய்திப்பணி!

கல்விப்பணியிலும் குழந்தைகளின்

மனத்தில் நற்பண்புகளை விதைத்து

இறை விழுமியங்களை மலரச் செய்து

உண்மையின் பிரதிபலிப்பாக மாற்ற

வாய்ப்பு தந்த எம் கொன்சாகா சபைக்கு

250-ஆம் ஆண்டு கொண்டாடும் இத்தருணத்தில்

எம் சபையை வாழ்த்தி - இன்னும்

பல பணிகளைச் சிறப்பாக செய்ய

இறையருள் வேண்டி இறைஞ்சுகிறேன்!