லிட்வினா, 1380 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் பிறந்தார். இவர் சிறு வயது முதலே அன்னை மரியாவிடம் அளவு கடந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார். இவரிடமிருந்த பக்தியைக் கண்டு எல்லோரும் வியப்படைந்தார்கள்.
1396 ஆம் ஆண்டு லிட்வினாவின் வாழ்வில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த விபத்து அவரை படுத்த படுக்கையாக்கியது. இது நடந்த சில நாட்களிலே அவருடைய முகம் மற்றும் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டன. அந்தப் புண்கள் எல்லாம் அவருக்குத் தீராத வலியைத் தந்தது. இத்தகைய தருணங்களில் அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது தான் இவருடைய ஆன்ம ஆலோசகர் தந்தை ஜான் பாட் என்பவர் அவரிடம், இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிக்கச் சொன்னார்.
லிட்வினா, இயேசுவின் பாடுகளை தியானிக்கத் தொடங்கியதிலிருந்து அவருடைய உடல் வேதனைகள் எல்லாம் தணிந்தன. அது மட்டுமல்லாமல், அவர் ஒருவிதமான பரவச நிலையை உணர்ந்தார். இதனால் அவர் இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிக்கத் தொடங்கி, இயேசுவுக்கு உகந்தவராக வாழத் தொடங்கினார். லிட்வினா அவ்போது காட்சிகள் கண்டார். அந்தக் காட்சிகளில் ஆண்டவர் இயேசு அவரோடு உறவாடினார், பல காரியங்களை அவருக்கு வெளிப்படுத்தினார்.
லிட்வினா, தனது கடைசிப் பத்தொன்பது ஆண்டுகளில் அவ்வளவாக உணவு உட்கொள்ளவில்லை, அதிக நேரம் ஓய்வெடுக்கவும் எப்போதும் அவர் இயேசுவின் பாடுகளைக் குறித்தே தியானித்துக் கொண்டிருக்கவும் செய்தார். இதனால் அவர் இயேசு தன்னோடு எப்போதும் இருக்கின்றார் என்பதை உணர்ந்தார். நற்கருணை மட்டுமே உட்கொண்டு வந்தார். வேறு எந்த உணவையும் அவர் உட்கொள்ளவில்லை. நற்கருணைதான் அவருக்கு ஆன்மீக உணவாக மட்டுமல்ல, வாழ்வளிக்கும் உணவாக இருந்து வந்தது. இப்படி தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட வலிகளைப் பொறுத்துக்கொண்டு ஆண்டவர் இயேசுவின் பாடுகளைப் பற்றியே தியானித்துக் கொண்டிருந்த லிட்வினா 1433 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1890 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.