news
ஞாயிறு மறையுரை
மே 11, 2025, பாஸ்கா காலத்தின் 4-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) நல்லாயன் - இறையழைத்தல் ஞாயிறு; திப 13:14,43-52; திவெ 7:9,14-17; யோவா 10:27-30 - ஆயர் எவ்வழி... அவ்வழி நாம்!

உயிர்ப்புக் காலத்தின் 4-ஆம் ஞாயிறைநல்லாயன் ஞாயிறுஎன்றும், ‘இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள்என்றும் சிறப்பிக்கின்றோம். நல்லாயராம் இயேசுவை நினைவுகூரும் இன்றைய வாசகங்கள் அவரைப் போன்று பொறுப்புடன் ஆயரின் வழியில் நடக்க நம்மை அழைக்கின்றன.

ஆடுகளும் ஆயனும் திருவிவிலியத்தில் மிக முக்கிய உருவகங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்த இஸ்ரயேல் மக்கள் அத்தொழில் அடிப்படையிலான உருவகங்களைப் பயன்படுத்தி வந்தனர். ஆயர் பணி இஸ்ரயேல் மக்களிடையே மிக முக்கியமான தொழிலாகவும் கலாச்சாரமாகவும் இருந்துள்ளன. ஆடுகள் எப்போதும் மென்மையானதாகவும் ஆயரின் குரலைக் கேட்பவையாகவும் காணப்பட்டன. மந்தையைச் சுற்றி எப்போதும் ஆபத்துகளும் நிறைந்திருந்தன. எனவே, ஓர் ஆயரின் மிக முக்கியமான பணி தம் மந்தையை ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தல், மேய்ச்சல் நிலத்திற்குக் கூட்டிச் செல்லுதல், தண்ணீர் இருக்கும் பகுதியை அடையாளம் காணுதல், நேரிய வழியில் நடத்திச் செல்லுதல், சினையாடுகளைப் பாதுகாத்தல், குட்டி ஆடுகளைத் தூக்கிச் சுமத்தல் போன்றவையாகும்.

இஸ்ரயேல் மக்களின் வரலாற்றைப் பார்த்தால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது போன்ற மாபெரும் தலைவர்கள் அனைவரும் ஆயர்களாக இருந்திருக்கிறார்கள். தாவீது மந்தை மேய்ப்பவராக இருந்து பின்னர் இஸ்ரயேலின் ஆயராக மாறினார் (2சாமு 7:8). பின்னாளில் இஸ்ரயேல் மக்கள் தம் அரசர்களையும் (1அர 22:17; எரே 10:21; 23:1-2) தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் ஆயராகப் பார்த்தனர். ஓர் ஆயருக்கு இருக்க வேண்டிய பண்புகளைத் தம் அரசர்களில், தலைவர்களில் எதிர்பார்த்தனர். இஸ்ரயேல் சமுதாயத்தில் இத்துணை உயர்ந்த மதிப்புப் பெற்றிருந்த ஆயர்கள் படிப்படியாகத் தங்கள் மதிப்பை இழந்தனர்.

ஆயர்கள்-தலைவர்கள் நல்லவர்களாக இல்லை; அவர்கள் ஆடுகள் மீது கவலையற்ற ஆயர்களாக இருந்தனர். எசேக்கியேல் இறைவாக்கினர் நீதி நேர்மையற்றுச் செயல்பட்ட ஆயர்களான அரசர்கள், மேய்ப்பர்கள், தலைவர்கள் போன்றவர்களின் வீழ்ச்சியைக் குறிப்பிடுகின்றார் (எசே 34:1-10). இந்த ஆயர்கள் மக்களுக்காக வாழாமல், தன்னலம் நிறைந்த அதிகாரத்தோடு மக்களைச் சுரண்டி வாழ்ந்தனர் (34:7-8).

தலைவர்களும் அரசர்களும் தவறியபோது அவர்களைக் கண்டித்த இறைவன், தம்மையே நல்ல ஆயராக இறைவாக்கினர் வழியாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் (எரே 10:21; எசேக் 34:11-31; செக் 10:3; எசா 44:28). தாவீதின் மரபிலிருந்தே நல்ல ஆயர் தோன்றப்போவதாக உறுதி கூறுகிறார் (எசே 34:23-24). அந்த நல்ல ஆயரே வரவிருக்கும் மெசியா (எசா 40:11). இன்றைய நற்செய்தியில் யோவான், ஆண்டவர் இயேசுவை உண்மையான ஆயராகக் காட்டுகிறார்.

நல்லாயன் என்றதுமே இயேசு ஓர் ஆட்டுக் குட்டியைத் தம் தோள்மீது அல்லது மார்போடு அணைத்துச் சுமந்துசெல்லும் அமைதியான இயேசுவின் உருவம்தான் முதலில் நம் உள்ளங்களில் பதிகின்றது. ‘நல்ல ஆயர்என்ற வார்த்தை மிகவும் ஆழமானது. நல்ல ஆயர் தம் ஆடுகளின் பெயர் அறிந்தவராக, அவற்றின்மீது அக்கறை கொண்டவராக, அவற்றை வழிநடத்தப் பாதை தெரிந்தவராக, ஆபத்து காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வல்லவராக, எதிரிகளை எதிர்த்துப் போராடுபவராக, தக்க வேளையில் உணவளிக்கின்றவராகத் தம்மை அடையாளப்படுத்துகின்றார் (யோவா 10:1-15). நல்ல ஆயர் ஆடுகளுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வார்; ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டுத் தம் உயிரையே கொடுக்க முன் வருவார். இன்றைய நற்செய்தியில் யோவான் இயேசுவைத் தலைசிறந்த, தன்னிகரற்ற ஒரு நல்ல ஆயராகக் காட்டுகிறார்.

முதலாவதாக, நல்ல ஆயர் என்பவர் தம் ஆடுகளை நன்கு அறிபவராக இருப்பார். இயேசுவே நல்ல ஆயர். அவர் சமுதாயத்தில் அடையாளமிழந்து, ஒடுக்கப்பட்டு, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுடன் தம்மை அடையாளப்படுத்தி, அவர்களின் பெயர்களை நன்கு அறிந்து தம் மந்தையை அழைத்தார் (யோவா 10:3). நல்ல ஆயர் தம் ஆடுகளின் நிலை அறிந்து செயல்பட்டார். நலிவுற்ற ஆடுகளைத் திடப்படுத்தினார்; தளர்வுற்ற ஆடுகளைத் தம் தோள்மீது சுமந்து சென்றார். வீழ்ந்து கிடக்கும் ஆடுகளுக்கு வலுவூட்டினார். காயப்பட்ட ஆடுகளை நலமாக்கினார். ஆடுகளின் தேவைகளை முதன்மையாக்கிச் செயல்பட்டார். இயேசுவே நல்ல ஆயராக இருந்து செயல்படுவதால், ஆடுகளுக்கு யாதொரு குறையுமில்லை (திபா 23). ஆயரான இயேசுவின் திருமுழுக்குப் பெற்ற நாம் அவர் மந்தையைச் சேர்ந்த ஆடுகள். இன்றைய பதிலுரைப் பாடலும், “நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்என்கிறது. நமது பலவீனத்தையும் இயலாமையையும் தேவைகளையும் நன்கு அறிந்து, நம்மைக்  கரிசனையோடு காக்கும் நல்லாயனாம் இயேசுவின் குரலைக் கேட்டு அவரைப் பின்தொடர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இரண்டாவதாக, நல்ல ஆயர் என்பவர் தம் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களைப் பாதுகாக்க வல்லவராக இருப்பார். ஆயர் தனது ஆடுகளைத் திருடரிடமிருந்தும் கொள்ளையரிடமிருந்தும் காப்பாற்றுகிறார். ஆடுகளுக்கு ஓநாயாலும், மற்றப் பிற காட்டு விலங்குகளாலும் ஆபத்துகள் ஏற்படுவது போல, மக்களுக்கும் ஆபத்துகளும் அச்சுறுத்தல்களும் ஏற்படும்போது, அவற்றை இனங்கண்டு, அவற்றால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது ஓர் ஆயரின் தலையாயக் கடமை. இப்பணி ஆபத்தானதும் கூட. ஆடுகளைக் காப்பாற்றும் பொருட்டு ஆயருக்கு ஓநாய்களாலும், பிற கொடிய விலங்குகளாலும் ஆபத்து ஏற்படுவதுபோல, தீய சக்திகளும் தலைவரைத் தாக்கலாம்; உயிரையே பறிக்கலாம் (இந்தியாவில் அருள்சகோதரி இராணி மரியா, அருள்பணி. ஸ்டேன் சுவாமி, மறைப்பணியாளர் கிரகாம் ஸ்டெயின்ஸ் போன்றோர் கொல்லப்பட்டதுபோல). இருப்பினும், ஆடுகளுக்காகத் தன்னுயிரையும் கையளிக்க முன்வர வேண்டும். இயேசு நல்ல தலைவர், நல்ல ஆயர். அவர் தம் மக்களின் பொருட்டுத் தம் உயிரையும் கொடுக்கும் அளவிற்கு மக்களை அன்பு செய்தார் (10:12). நல்லாயராம் இயேசு தாம் வாழ்ந்த சமுதாயத்தில் வறியோர், நோயாளிகள், ஒடுக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், சமுதாய விளிம்பிற்குத் தள்ளப்பட்டோர் யாவரும் மனித மாண்போடு, சமத்துவத்தோடு வாழ்ந்திட தம் உயிரையே கையளித்தார் (10:15).

இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவுவதன் மூலம், பிறருக்காகவே பணியாற்றும் தன்னிகரற்ற புதிய தலைமையை, பிறரின் மாண்புநிறை வாழ்விற்காகப் பணியாற்றும் தலைமைத்துவத்தின் புதிய பண்பாட்டைத் தொடங்கி வைத்தார். இயேசுவைப் போன்ற நல்ல ஆயர்களைக் கடவுள் காலத்தின் தேவை உணர்ந்து திரு அவைக்குத் தந்து கொண்டிருப்பதை நினைத்துப் பெருமிதம் கொள்வோம்.

நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இந்நாளில் 12 ஆண்டுகள் திரு அவையின் ஒப்பற்ற பணியாளராக, மக்களின் திருத்தந்தையாக, போர் மற்றும் வன்முறையால் துன்புறுபவர்கள், ஏழைகள், வலுவற்றவர்கள், ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து, நல்ல ஆயராகப் பணியாற்றி இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கையோடு நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

2013, மார்ச் 19-ஆம் நாள் புனித யோசேப்பு பெருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரு அவையின் தலைவராகப் பணியேற்ற அவ் வேளையில், பணியேற்புத் திருப்பலிக்கு முன் திறந்த ஒரு வாகனத்தில் அவர் வளாகத்தைச் சுற்றி வந்தபோது, அங்கிருந்த ஒவ்வொருவரையும் கரம் நீட்டி அவரால் தொடமுடியவில்லை. உடனே வாகனத்தை நிறுத்தச் சொல்லி, இறங்கிச் சென்று அங்கிருந்த ஒரு மாற்றுத்திறனாளியை அரவணைத்து, அவர் நெற்றியில் திருத்தந்தை முத்தமிட்டது, அப்போதே மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஓர் இளகிய, மென்மையான மனத்தையும், மக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள விழையும் ஆவலையும் எப்போதும் வெளிப்படுத்தும் திருத்தந்தை, தலைமைப் பணியேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில், “தலைமைத்துவம், ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்லஎன்றும்தலைவர் அல்லது காவலர் என்பவர் இளகிய, மென்மையான மனம் கொண்டவராக இருக்கத் தயங்கக்கூடாதுஎன்றும் தெளிவாக்கினார்.

ஏழைகளை ஒருபோதும் மறந்துவிடக் கூடாதுஎன்று அடிக்கடி வலியுறுத்திய திருத்தந்தை போர், சமூக அநீதிகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உலகளாவிய அலட்சியத்தைக் கடுமையாகக் கண்டித்தும் குரல் எழுப்பியும் நற்செய்தியின் பாதையில் நடந்து, அனைவரும் சகோதரர்-சகோதரிகளாக, ஒருவருக்கொருவர் இணைந்து நடப்பதன் அழகை மீண்டும் கண்டறிய அழைப்பு விடுத்தார். “மக்களைப் போலவே நானும் ஒரு பாவிஎன்றும், “மக்களோடு பயணம் செய்யும் ஒரு பயணிஎன்றும் கூறி, கடவுளாகிய இயேசுவின் உண்மைச் சீடராக, சிறந்த முன்மாதிரிகையாக, நல்ல ஆயராகத் திகழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மாவை மூவொரு  கடவுளின் எல்லையற்ற இறை இரக்கத்தில் அர்ப்பணித்துச் செபிப்போம்.

எதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற தலைப்பில் இந்த 2025 யூபிலி ஆண்டினை அர்ப்பணித்த திருத்தந்தை அவர்கள் விதைத்த விதையானது, கிறித்தவர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களின் இதயங்களிலும் இன்று மட்டுமல்லாது, என்றென்றும் தொடர்ந்து முளைக்கும் என்பது திண்ணம்.

news
ஞாயிறு மறையுரை
மே 04, 2025, பாஸ்கா காலத்தின் 3-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) திப 5:27-32,40-41: திவெ 5:11-14; யோவா 21:1-19 - காயங்கள் ஆற்றும் கருணைமிக்க கடவுள்!

சுற்றி வாழும் அனைவராலும் கைவிடப்பட்ட சூழலில், அச்சம் மேலிடும்போது, தனிமையில் ஒருவர் நிற்கும்போது, மன அழுத்தத்தால் அழும்போது, வறுமை வாட்டும்போது ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுப்பார்க்கும் கேள்விகள்: ‘என்னைக் கைதூக்கி விடுபவர் யார்?’, ‘என் காயங்களுக்குக் கட்டுப் போடுபவர் யார்?’ என்பதுதான். இந்தக் கேள்விகளில் மறைந்திருக்கும் ஏக்கம்: “ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; எனக்குத் துணையாய் இரும்என்பதுதான் (திபா 30:10). இக்கேள்வியும் மன்றாட்டும் இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்புக்குப்பின் சீடர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மையம் கொண்டன.

கல்வாரிக் கொடுமைகளுக்குப்பின் சீடர்களின் வாழ்நிலை, அச்சமும் விரக்தியும் நிறைந்ததாகவே இருந்தது. தங்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் பொய்த்துப்போனதாக எண்ணினர். உரோமையருக்கும் யூதர்களுக்கும் அச்சப்பட்டுக் கதவுகளை மூடி, தங்களையே பூட்டி வைத்துக்கொண்டனர். “ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும் (திபா 4:6) என்பதுபோல வேண்டிக்கொண்டனர். இந்த நிலையில்தான் உயிர்த்த ஆண்டவர் வெவ்வேறு சீடர்களுக்கு, வெவ்வேறு இடங்களில் தோன்றுகின்றார்.

பல வழிகளில் காயப்பட்டிருந்த தம் சீடர்களை இயேசு தேடிச்சென்று குணமாக்கிய நிகழ்வுகளில் ஒன்றுதான் இன்று நற்செய்தியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. பாடுகளின் நேரத்தில் இயேசுவை விட்டுச் சீடர்கள் விலகிச் சென்றிருந்தாலும், கல்வாரி இயேசு கருணையோடு அவர்களை அண்டிச் சென்று ஒரு தாயைப்போல உணவூட்டுவதைக் காண்கின்றோம்.

சென்ற வார நற்செய்தியில் சந்தேகத்துடன் போராடிப் புண்பட்டிருந்த தோமாவை உயிர்த்த இயேசு சந்தித்து நலமாக்கிய நிகழ்வைச் சிந்தித்தோம். அதன் தொடர்ச்சியாகஇயேசுவை எனக்குத் தெரியாதுஎன்று மறுதலித்த பேதுருவின் மனக்காயங்களை உயிர்த்த இயேசு குணமாக்கும் நிகழ்வை இன்று சிந்திக்கின்றோம்.

பல சீடர்கள் இயேசுவை விட்டு விலகிச் சென்றபொழுது பன்னிரு சீடரின் சார்பாகப் பேதுரு ஒருவரேஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன (யோவா 6:68) எனத் தம் பற்றுறுதியை முழுமையாக வெளிப்படுத்துவார். ஆனால், அவரே இப்போது மற்றச் சீடர்களைப் பார்த்து, தான் மீன்பிடிக்கப் போவதாக அறிவிக்கிறார். உடனே தோமா, நத்தனியேல், யாக்கோபு, யோவான், மேலும் இரு சீடர்களும் சேர்ந்துநாங்களும் உம்மோடு வருகிறோம்என்று கூறிப் படகில் ஏறுகிறார்கள் (21:3).

இனி நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் (மத் 4:19; மாற் 1:17; லூக் 5:10) எனும் இயேசுவின் அழைப்பைத் தங்களால் தொடர முடியவில்லையே என்ற மனக்காயங்களோடும், ‘இயேசுவை எங்களுக்குத் தெரியாதுஎன்று மறுதலித்தக் குற்றப்பழியோடும், எந்த மக்களைப் பிடிப்பதற்காக அழைக்கப்பட்டோமோ அவர்களே தற்போது தங்களைப் பிடித்து உரோமையர் கையில் ஒப்படைக்கத் தயாராகிவிட்டார்களே என்ற மனவேதனையோடும் சீடர்கள் தங்கள் பழைய வாழ்வைத் தேடிச்செல்கிறார்கள். ஆனால், அந்தப் பழைய வாழ்வில் அவர்கள் முதலில் சந்தித்தது ஏமாற்றமே! அன்று இரவு முழுவதும் அவர்கள் முயன்றும் மீன் ஒன்றும் கிடைக்கவில்லை (21:3). யோவான் கூறும்இரவுஅவர்கள் மீண்டும் தங்கள் பழைய வாழ்வுக்குச் சென்ற அந்த நிலையையும் சேர்த்துக் குறிக்கிறது.

தங்கள் பழைய வாழ்விலும் ஏற்பட்ட ஏமாற்றத்தால் உடைந்துபோன சீடர்களை மீண்டும்மனிதர்களைப் பிடிப்பவர்களாகஇயேசு மாற்றுகிறார். அங்கே வியக்கத்தக்க முறையில் ஏராளமான மீன்கள் கிடைத்தது. இயேசுவை அவர்களுக்கு அடையாளப்படுத்தியது. அளவுக்கு அதிகமான இரசம் (2:6), அளவுக்கு அதிகமான தூய ஆவி (3:34), அளவுக்கு அதிகமான வாழ்வு தரும் தண்ணீர் (4:14; 7:37), அளவுக்கு அதிகமான அப்பம் (6:11) அளவுக்கு அதிகமான நிலைவாழ்வு (10:10) ஆகியவற்றின் ஊற்றாகிய இயேசுவே அதிகமான மீன்பாட்டிற்குக் காரணம் என அவர் கண்டுகொள்கிறார்.

இயேசுவின் ஒற்றை வார்த்தையால் படகுகள் மூழ்கும் அளவுக்கு அதிகமான மீன்கள் கெனசரேத்து ஏரிக்கரையில் கிடைத்தது, பேதுருவின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்திருந்ததுஅதுதான் அவரது முதல் அழைப்பு (லூக் 5:1-11). அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றியவர் அல்லவா அவர்! அந்நிகழ்வை அவரால் எப்படி மறந்திருக்க முடியும்? திபேரியக் கடலில் பேதுரு பெற்ற இந்த இறையனுபவம் ஏற்கெனவே அவர் கெனசரேத்து ஏரிக்கரையிலும் பெற்ற இறையனுபவத்தை நினைவூட்டுவதாக அமைந்திருக்கும்.

கெனசரேத்து ஏரிக்கரையிலும் திபேரியக் கடலிலும் நடந்த இரு நிகழ்வுகளை இணைத்துச் சிந்திக்கும்போது, இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே உருவான ஓர் உறவின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. கெனசரேத்து ஏரியில் அளவற்ற மீன்பாட்டைக் கண்டதும் சீமோன் பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்என்றார் (லூக் 5:8). திபேரியக் கடலில் கிடைத்த அளவற்ற மீன்பாட்டைக் கண்டதும், உடனே கடலில் குதித்து, இயேசுவை நோக்கி நீந்திச் செல்கிறார். கெனசரேத்து ஏரியில் தன்னை விட்டுப் போய்விடுமாறு வேண்டிக்கொள்ளும் பேதுரு, திபேரியக் கடலில் இயேசுவை நோக்கி விரைந்து செல்கிறார். கெனசரேத்து ஏரிக் கரையில் பேதுரு பெற்ற தன் அழைப்பை மீண்டும் உணர்கிறார். இந்தமுறை இயேசுவை விட்டு விலகிச் செல்ல மனமில்லாமல் இயேசுவை இறுகப் பற்றிப் பிடிக்கிறார். அதிலும் சிறப்பாக, பழைய நிலைக்குப் போகலாம் என்று நினைத்த பேதுருவை இன்னும் ஆழமாய் உறுதிப்படுத்துகிறார் இயேசு.

மும்முறை இயேசுவை மறுதலித்த பேதுருவிடம் மும்முறை இயேசுநீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” எனக் கேட்டு, மும்முறை அன்பு அறிக்கையிட வாய்ப்பளிக்கிறார்; அவரது மனக்காயங்களையும் போக்கிவிடுகின்றார். அதனால்தான்அவர் தம் காயங்களால் நாங்கள் குணமடைந்துள்ளோம் (1பேது 2:24) எனப் பேதுருவால் அறிக்கையிட முடிந்தது. இச்சந்திப்பில், மன்னிப்பு என்ற சொல்லோ, எண்ணமோ இடம்பெறவில்லை. ஆனால், அங்கு அன்பு பறைசாற்றப்பட்டது; பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பரிமாற்றத்தில் மன்னிப்பு மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்து, பேதுருவை மூழ்கச் செய்தது. ‘கைகளை விரித்துக் கொடுப்பாய்என்பது தன் தலைவர் இயேசுவைப் போலவே பேதுருவும் நற்செய்தியின் பொருட்டுத் தன் உயிரைக் கையளிப்பார். இயேசுவைப் போலவே பேதுருவும் சிலுவையில் அறையப்படுவார் என்பதைக் குறிப்பதாக அமைகிறது.

சீடர்களின் வலையில் கிடைத்த மீன்களின் எண்ணிக்கை ‘153’ என்பது சிறப்புக் கவனம் பெறுகிறது. இதற்கு அறிஞர் பலர் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்தாலும், அவற்றுள் தூய எரோணிமுசு அளிக்கும் விளக்கம் சிறந்ததாகத் தெரிகிறதுஅதாவது, பண்டையக் கால உயிரியல் அறிஞரின் கணக்குப்படி மீன் வகைகள் 153. இந்த 153 மீன்களுள் எல்லா மீன்களும் அடங்கிவிடும். 153 என்பது அனைத்து மீன்களையும் உள்ளடக்கும் ஒரு முழுமைச் சொல். எனவே, 153 மீன்கள் வலையில் பிடிபட்டன என்னும் செய்தியின் வழியாகப் பிற்காலத்தில் எல்லா வகையான மனிதரும் திரு அவை என்னும் படகில் வந்து சேர்வர்; யாரும் விடுபட்டுப் போகமாட்டார்கள் எனப் புரிந்துகொள்ளலாம்.

எனவே, திரு அவை அனைவருக்குமானது. விளிம்புநிலையினர், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றோர், குழந்தைகள், பிறக்காத சிசுக்கள், புதுமைப் பாலினத்தவர், இல்லவாசிகள் என எல்லாருமே திரு அவையின் கரங்களில் உள்ளனர். ஆகவே, உயிர்ப்பின் மக்களாகிய நாம் எவரையும் புறக்கணிக்கக் கூடாது என்பது முதல் செய்தி. மேலும், நமது நற்செய்தி அறிவிப்புப் பணியில் துன்புறுதலும் கடவுளின் ஆசி என்பது நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய மற்றுமொரு பாடம்.

நிறைவாக, இரவெல்லாம் உழைத்தும் பயனேதும் காணாத சீடர்களுக்கு உயிர்த்த இயேசு, ஒரு தாயின் கனிவோடு உணவு தயாரித்துப் பரிமாறியது போல, பசியிலும் களைப்பிலும் காயப்பட்டிருக்கும் இந்த மனிதகுலத்திற்கு நாமும் உயிர்த்த இயேசுவின் இரக்கத்தையும் அரவணைப்பையும் வழங்கிடுவோம்.

news
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 27, 2025, பாஸ்கா காலத்தின் 2-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு - இறை இரக்கத்தின் ஞாயிறு) திப 5:12-16; திவெ 1:9-11,12-13,17-19; யோவா 20:19-31 - தழும்புகள் தரும் நம்பிக்கை!

சந்தேகமும் இரக்கமும் ஒன்றையொன்று சந்திக்கும் ஞாயிறை இன்று கொண்டாடுகிறோம். இந்த ஞாயிறுஇறை இரக்கத்தின் ஞாயிறுஎன்றும், ‘தோமாவின் நாள்என்றும் அழைக்கப்படுகிறது. சந்தேகத்திலும் குழப்பத்திலும் தவித்த சீடர்களைத் தேடி குறிப்பாக, தோமாவைத் தேடிச் சென்று, அவருக்கு உறுதி வழங்கிய இயேசுவையும், இயேசு உயிர்த்து விட்டார் என்பதை நம்புவதில் ஆதாரம் கேட்பவராக, ஆண்டவரின் கைகளிலும் விலாவிலும் உண்டான காயங்களைத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கும் தோமாவையும் இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.

உயிர்த்த ஆண்டவரைப் பிற சீடர்களோடு இணைந்து சந்திக்காத தோமா, திருவிவிலியத்தில் சந்தேகத்துக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் மனிதராகப் பார்க்கப்படுகிறார். இன்று நேற்றல்ல, காலத்திற்கும் அவர்சந்தேகத் தோமாஎன்றே அழைக்கப்படுகிறார்.

உயிர்த்த இயேசுவைக் கண்டதும் அனைத்துச் சீடர்களுக்கும் கலக்கம், குழப்பம், சந்தேகம் எழுந்தன என்பதை நற்செய்திகள் கூறுகின்றன. இயேசுவிடம் கேட்க முடியாமல், மனத்துக்குள் மற்றச் சீடர்கள் புதைத்து வைத்திருந்த இதே சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுக் கேட்டார். எனவே, தோமாவை மட்டும்சந்தேக மனிதர்என்று கண்டனம் செய்யாமல், எல்லாச் சீடர்களுமே சந்தேகத்தில், அச்சத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். சந்தேகப்படுவது நல்லதுதானே! ‘சந்தேகப்படுவது அறிவுக்கான திறவுகோல்.’ எந்தத் தயக்கமுமின்றி ஒன்றைப்பற்றி அறியும் நோக்கில் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துபவரே அதை விரைவாகக் கற்றுக்கொள்கிறார். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு திருத்தூதர் தோமா. இன்றைய நாளில் கிறித்தவ வாழ்வின் மூன்று முக்கியமான கூறுகளைத் தோமாவின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வோம்.

முதலாவதாக, தோமாவின் துணிவு. பெத்தானியாவில் மார்த்தா-மரியாவின் சகோதரர் இலாசர் இறந்ததைக் குறித்து இயேசு, “நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் (யோவா 11:11) என்று கூறும்போது, மற்றச் சீடர்கள் அவரிடம், “ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” (யோவா 11:8) என்று கேட்பார்கள். சீடர்களின் தயக்கத்திற்கான காரணம், இயேசு எருசலேமில் போதித்துக் கொண்டிருந்தபோது யூதர்கள் அவர்மேல் கல்லெறிய முயன்றார்கள் (10:33); இப்போது பெத்தானியாவுக்குப் போனால் இயேசுவுக்கு மட்டுமல்ல, தங்கள் மேலும் கல்லெறிவார்கள் என்ற அச்சத்தில் சீடர்கள் கொஞ்சம் பின்வாங்க நினைக்கும்போது, தோமா மட்டுமேநாமும் செல்வோம், அவரோடு இறப்போம்(11:16) என்ற நம்பிக்கையைக் கொடுப்பார். தோமா இயேசுவோடு இருக்கும்போதேஒரு சீடருக்கான அழகு மறைச்சாட்சியாக இறப்பதேஎன்பதைத் தன் வார்த்தைகள் வழியாக அழகுற வெளிப்படுத்துகிறார்.

இரண்டாவது, தோமாவின் நேர்மை. தோமா எதையும் எளிதில் ஏற்பவர் அல்லர்; தனக்குப் புரியாத ஒன்றை அவர் புரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவும் மாட்டார் (14:5); நம்புவதாக நடிக்கவும் அவரால் இயலாது. இயேசு மூன்று முறை தம் இறப்பைக் குறித்து முன்னறிவித்தபோது, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் எல்லாச் சீடர்களுமே குழப்பத்தில் இருந்தார்கள். அப்போது இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்... நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும் (14:1-4) என்பார். இயேசுவின் இந்தக் கூற்று சீடர் எவருக்கும் புரியவில்லை; கேள்வி கேட்டுத் தெளிவு பெறத் துணிவும் இல்லை. எல்லாரும் அமைதியாக இருக்கும் சூழலில் தோமா மட்டுமேஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்று எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” (14:5-6) என்ற கேள்வியை எழுப்பினார். தனக்குத் தெரியாததைதெரியாதுஎன்று சொல்வதற்கும், புரியாததைபுரியவில்லைஎன்று சொல்வதற்கும் ஓர் ஆரோக்கியமான நேர்மை வேண்டும். அது தோமாவிடம் இருந்தது. ‘எல்லாம் எனக்குத் தெரியும்எனக் காட்டிக்கொள்ளும் மனிதர்கள் மத்தியில், நேர்மையோடும் தாழ்ச்சியோடும் நடந்துகொண்டவர் தோமா.

மூன்றாவதாக, தோமாவின் சாட்சிய வாழ்வு. உயிர்ப்பின் உண்மையான மகிழ்ச்சி என்பது உலகின் கடையெல்லை வரைக்கும் சென்று, உயிர்ப்பின் நற்செய்தியை அறிவிப்பதுதான். “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; பாவங்களை மன்னியுங்கள்; உயிர்ப்பின் சாட்சிகளாய் மாறுங்கள் (20:22-23) என்பதுதான் இயேசு சீடர்களுக்கு முன்னுரைத்தது. எனவே, ‘கிறிஸ்து உயிர்த்தார்என்ற உண்மையை அறிந்து, அனுபவித்த தோமா அமைதியாக இருக்கவில்லை. உயிர்ப்பின் பொருள் புரிந்து, உள் மனமாற்றம் பெற்றார்; முற்றிலும் புதிதாய்ப் பிறந்த மனிதராக மாறினார். “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு...” (20:27) என்று இயேசு தோமாவிடம் கூறியபோது, அவர் இயேசுவைத் தொட்டாரா? என்பதில் தெளிவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், சிலுவையில் அறையுண்ட அதே இயேசு அவர்முன் நிற்பதைக் காண்கின்றார். “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” (20:28) எனக் கூறித் தன் நம்பிக்கையை வெளியிடுகின்றார். அவர் கூறிய சொற்கள் உண்மையிலேயே அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் ஆழத்தைக் காட்டுகின்றன.

தோமாவின் இந்த உயர்ந்த நம்பிக்கை எந்த நற்செய்தியிலும் எவர் வாயிலிருந்தும் வந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. ‘இயேசு இறைவனும் ஆண்டவரும்என்னும் உண்மையை அப்படியே அறிக்கையிடுகிறார் தோமா. நம்பத் தயங்கிய தோமாவின் வாயிலிருந்தே நம்பிக்கையின் ஒப்புயர்வற்ற வாய்ப்பாடு வெளிவருவது வியப்பன்றோ! அன்றைய உரோமைப் பேரரசர்கள் தங்களை மக்கள் அனைவரும்ஆண்டவரே, கடவுளேஎன அழைக்க வேண்டும் என ஆணை பிறப்பித்த சூழலில், தொடக்க காலக் கிறித்தவர்கள் அரசர்களைகடவுள்என்று அழைக்காமல், அத்தகைய அடைமொழிக்கு உரியவர் இறைவனும், அவர் திருமகனுமான இயேசு மட்டுமே என்பதை அறிக்கையிட ஆதாரப் புள்ளியாகத் தோமாவின் நம்பிக்கை முழக்கம் அமைகிறது. ஆகவே, முதலில் நம்ப மறுத்த தோமா, கிறித்தவ நம்பிக்கையின் உச்சக்கட்ட அறிக்கையை வெளிப்படுத்தியவராகிறார்.

இயேசு தோமாவைத் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும் சிறப்பாக அறிவிக்கப் புறப்பட்டார். வேறுபட்டக் காலச்சூழல், புதிய பண்பாடு, கலாச்சாரம், வேற்று மக்கள், புதிய மொழி போன்ற தடைகள் எதுவும் அவரைத் தடுக்க இயலவில்லை. உயிர்ப்பின் உண்மையை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதற்காகக் கடல் கடந்து இந்தியா வந்தார். இயேசுவின் காயத்தின் தழும்புகளைத் தாங்கி நிற்கும் மாந்தர்களுக்குப் பணிசெய்வதன் விலையாகத் தன் உயிரையே கையளித்து, இந்தியாவின் முதல் மறைச்சாட்சியானார். ஆகவே, தோமா வாழ்வில் எது உண்மை என்பதைத் தேடினார்; அந்த உண்மைக்குச் சாட்சியாகத் தன்னையே கையளித்தார்.

இறுதியாக, இந்த நாள் நமக்கு உணர்த்தும் சில பாடங்களை மனத்தில் ஏற்போம். கிறித்தவ வாழ்வு தொடக்கம் முதல் இறுதிவரை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆகவேதான் கிறித்தவச் சமூகத்தைத் திருத்தூதர் பவுல்நம்பிக்கை கொண்டோரின் குடும்பம் (கலா 6:10) என்று அழைக்கிறார். மேலும் அவர் கிறித்தவ வாழ்வைநம்பிக்கை வாழ்வு எனும் போராட்டம் (1திமோ 1:1-2) என்றே வரையறை செய்கிறார். நமது இறைநம்பிக்கை வாழ்வில் கடவுள் மீதான சந்தேகங்களும் மனப்போராட்டங் களும் துயரங்களும் தோல்விகளும் ஏமாற்றங்களும் எண்ணிலடங்கா வகையில் ஊற்றெடுக்கும்போது, இறைநம்பிக்கையற்றவர்களாக வாழாமல் இறை நம்பிக்கை கொண்டவர்களாக வாழ தோமாவின் சாட்சிய வாழ்வு நம்மைத் தூண்டுகிறது.

நமது சமூகம் போர்க்குணங்களாலும் ஏழ்மை நிலையாலும் சமூக வெறுப்புகளாலும் நம்பிக்கையற்றத் தன்மைகளாலும் சிதைந்து கிடக்கும் இச்சூழலில், இன்று நாம் கொண்டாடும் இறை இரக்க ஞாயிறு இறைவனின் இரக்கத்தை, அன்பை, மன்னிப்பை எண்ணிப் பார்க்கப்படும் வெறும் பக்தி முயற்சியாக, வழிபாடு நிகழ்வாக மட்டும் அமைந்துவிடாமல், அது வாழ்வாக மாறவேண்டும். சிறு சிறு செயல்களில் இறைவனின் அன்பைக் கொடுப்போம். நிபந்தனைகள் ஏதுமின்றி நம்மை ஒவ்வொரு நாளும் தேடிவரும் இறைவன், சந்தேகம் என்ற சிறைக்குள் சிக்கித் தவிக்கும் நம் குடும்ப உறவுகளை விடுவிக்க மன்றாடுவோம். இறைவனின் இரக்கத்தை, வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் நாம் உணர, திருத்தூதர் தோமாவின் பரிந்துரையை நாடுவோம்.

news
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 19, 2025, ஆண்டவருடைய உயிர்ப்பின் விழா (மூன்றாம் ஆண்டு) தொநூ 1:1-2:2; உரோ 6:3-11; லூக் 24:1-12 - வெறுமையாக இறப்போம்... வெற்றியோடு உயிர்ப்போம்!

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் பேச்சாளருமான டாடு ஹென்றி (Todd Henry) ஒருமுறை தனது பேச்சைக் கேட்பதற்காக அரங்கத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து, “இந்த உலகிலே மிகவும் செல்வச் செழிப்பான இடம் எது?” என்று கேட்டார். கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து, “அரபு நாடுகளில் பெட்ரோலியம் இருக்கும் நிலம்தான் மிகவும் செல்வச் செழிப்பான நிலம்என்றார். மற்றுமொருவர் எழுந்து, “உலகிலேயே அதிக செல்வச் செழிப்பான நிலம் ஆப்பிரிக்கக் காடுகளில் உள்ள வைரச்சுரங்கம்என்றார். மூன்றாவதாக ஒரு நபர் எழுந்து, “உலகிலேயே மிகவும் செல்வச் செழிப்பான நிலம் கல்லறைதான்என்றார்.

இந்தப் பதிலைச் சற்றும் எதிர்பார்க்காத ஹென்றி, “உலகிலேயே செல்வச் செழிப்பான நிலம் கல்லறைதான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்குப் பதில் கூறிய மூன்றாமவர், “ஒவ்வொரு மனிதரும், தான் வாழும்போது உயர்ந்த இலட்சியங்களோடும் தனித்துவமான திறமைகளோடும் வாழ்கின்றனர். ஆனால், அவர்கள் எதிர்பாராத சூழலில் இறக்கும்போது அவர்களது கனவுகளும் சிந்தனைகளும் உயர்ந்த இலட்சியங்களும் திறமைகளும் செயல்வடிவம் பெறாமலேயே அவர்களோடு கல்லறையில் புதைக்கப்பட்டு விடுகின்றன. ஆகவே, கல்லறையில் வெறும் உடல்கள் புதைக்கப்படுவதில்லை; மாறாக, அவர்களின் நிறைவேறாத இலட்சியங்களும் எண்ணங்களும் திறமைகளும்தான்என்றார்.

இந்த வியப்பான பதிலின் அடிப்படையில் ஹென்றி எழுதிய புகழ்பெற்ற நூல்தான்வெறுமையாய் இறப்போம் (Die Empty) என்பதாகும். ஒருவர் இறப்பதற்கு முன்னர் தன்னிடம் உள்ள நன்மைகளையும் திறமைகளையும் முழுமையாகப் பயன்படுத்தி விட்டு, வெறுமையாய் இறக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.

கிறிஸ்து உயிர்த்து விட்டார்! இச்செய்தியை அறிவிப்பதில் எத்துணை மகிழ்ச்சி! கிறித்தவம் கொண்டாடுகின்ற திருவிழாக்களிலெல்லாம் முதன்மையான, தலைசிறந்த விழா கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா! ஏனெனில், அது கிறித்தவ நம்பிக்கையின் திருவிழா! கிறிஸ்துவின் உயிர்ப்பே நமது நம்பிக்கையின் ஆணி வேர், அடித்தளம் மற்றும் நமது வாழ்வின் எதிர்நோக்கு. இறைமகன் மனிதனாகப் பிறந்து, இறுதிவரை தாழ்ச்சி எனும் பாதையைப் பின்பற்றி, நம்மை முற்றிலுமாக அன்பு செய்த இயேசு வெறுமையாய் இறந்தார்; வெற்றியோடு உயிர்த்தார். அவரைப்போல நாமும் வெறுமையாய் இறக்கவும் வெற்றியோடு உயிர்க்கவும் அழைக்கப்படுகின்றோம்.

பழைய ஏற்பாட்டுக் காலத்திலிருந்தே பெருவாரியான யூத மக்கள் உயிர்த்தெழுதல் உண்டு என்று நம்பி வந்தனர். ஆனால், சதுசேயர் என்ற ஒரு பிரிவினர் மட்டும் இதில் எந்த நம்பிக்கையும் கொள்ளவில்லை (மத் 22:23). இயேசுவின் உயிர்ப்பின் நிகழ்வு அவரை ஆழ்ந்து நம்பினோருக்குப் பெரும் மகிழ்வைக் கொடுத்தது. ஆண்டவரின் உயிர்த்தெழுதல், நம்மை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் முன்னோக்கிச் செல்லத் தூண்டுகிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல், நமது நம்பிக்கையை அடிக்கடிச் சிறைபிடிக்கும் கல்லறைகளின் கல்லை அகற்றுவதற்கும், எதிர்காலத்திற்கான முழு நம்பிக்கையுடன் முனைந்து முன்னேறுவதற்கும் உதவுகிறது. அவர் நம்மைக் கைவிடாமல் எப்போதும் நம்முடன் இருக்கிறார். மரணத்தை வென்றவர் நமக்கு ஆற்றலைத் தருகின்றார். இதுவே நம் நம்பிக்கை. இறைவனுக்கு நம் உள்ளத்தைத் திறக்கும்போது, இறைவன் நமக்கு வழங்கும் கொடையே கிறித்தவ நம்பிக்கை. எனவே, கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் உச்ச உண்மையாக உயிர்ப்பு திகழ்கிறது.

இறையியலாளர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் மட்டுமன்றி, எந்த ஒரு கிறித்தவரும் இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை உணரவும் நம்பவும் ஏற்றதாக இருக்கக்கூடிய இருபெரும் அனுபவங்கள்: 1. வெறுமையான கல்லறை (மத் 28:6; மாற் 16:6; லூக் 24:5; யோவா 20:2,6,7), 2. திருத்தூதர்களின் வியப்பூட்டும் உயிர்ப்பு அனுபவங்கள்.

உண்மையைப் பேசியதற்காக, வாழ்வைக் கொடுத்ததற்காக, வாழும் வழியைக் காட்டியதற்காக இயேசு கொல்லப்பட்டார். தீமையின், அநீதியின், பாவத்தின் சக்திகள் அனைத்தும் சேர்ந்து அவரைக் கொலைக்குட்படுத்தின. ஆனால், இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார்; இறந்த மூன்றாம் நாள் வெற்றி வீரராய்க் கல்லறையிலிருந்து உயிரோடு வெளியே வந்தார். தம்மோடு நெருங்கிய உறவு கொண்டிருந்த தம் சீடருக்குத் தோன்றி அவர்களோடு அவர் உரையாடினார்; உணவு உட்கொண்டார். இயேசுவின் உயிர்ப்பிற்கான முதன்மையான அடையாளம் வெறுமையான கல்லறையே.

பெண்கள் நம்பத்தகுந்த சாட்சிகளாக எதற்கும் கருதப்படாத சூழலில், ‘அவர்கள் வெறுமையான கல்லறையைப் பார்த்தார்கள்என்று நான்கு நற்செய்தியாளர்களும் எழுதுகின்றனர். மத்தேயுவும் மாற்குவும் இன்னும் துல்லியமாக, “அவர் இங்கே இல்லை; இதோ அவரை வைத்த இடம் (மாற் 16:6; மத் 28:6) என்று எழுதுகின்றனர். வியப்பூட்டும் வகையில், மரபுக்கு மாறாக, பெண்களின் சாட்சியத்தை நற்செய்தியாளர்கள் வரைந்திருப்பது, உண்மையிலேயே உயிர்ப்பு மறுக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை நமக்கு உணர்த்துகிறது. இயேசுவின் உயிர்ப்பின்போது, பெண்கள் வெறுமையான கல்லறை மற்றும் அவரின் உயிர்த்தெழுதலின் அனுபவத்தால் உடனடியாக மனமாற்றமடைந்தனர். “கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!” என்ற உயிர்ப்புச் செய்தியைச் சீடர்களிடமும் கூறினர். இயேசுவைக் காணச் சென்ற சீடர்களும் மகதலா மரியாவும் இயேசுவைக் கல்லறையில் காணவில்லை; மாறாக, வெறுமையான கல்லறையை மட்டுமே கண்டார்கள். இதுவே இயேசுவின் உயிர்ப்பு பற்றிச் சீடர்களுக்குக் கிடைத்த முதல் அடிப்படை அனுபவம்.

வெறுமையான கல்லறை இயேசுவின் மண்ணுலக வாழ்வின் உச்சக்கட்டம் எனலாம். வெறுமை என்பது ஒன்றுமில்லாமை என்பதல்ல; மாறாக, இருந்தது அனைத்தையும் முழுமையாகக் கொடுத்ததன் நிறைவே வெறுமை. இயேசுவின் வாழ்வு முழுவதும் இந்த வெறுமை நிரம்பி இருந்தது. பிறப்பில்கூட இயேசு ஒரு வெறுமை நிலையிலேயே பிறந்தார். ஏனெனில், அவர் பிறக்கும்போது அவருக்குச் சொந்தம் என்று சொல்ல உறவோ உறைவிடமோ இல்லை! இருந்தவை வெறும் மாட்டுத்தொழுவமும், ஒரு தீவனத் தொட்டியும், உறவுகளாகச் சில ஆடு மேய்த்தவர்களும்தாம்.

இயேசு இளைஞரான போதும் அவர் ஓரிடத்திலும் தங்கவில்லை. உண்மையாகவே பல ஊர்கள், கிராமங்கள் என்று பயணித்தவர். கலிலேயா நாடு முழுவதும் பயணித்தவர். அவரது பயணமே அவரது பணியாகவும் வாழ்வுமுறையாகவும் இருந்தது. தம்மைப் பின்பற்ற விரும்பிய ஒரு மறைநூல் அறிஞரிடம், “நரிகளுக்கு... மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை (மத் 8:20) என்றார். இயேசு எங்குத் தங்கினார் என்று கூட தெரியாது. இயேசு வளர்ந்தபோதும் வெறுமை நிலையையே தக்கவைத்துக் கொண்டார். அவர் சிலுவை மரணத்திலும் வெறுமையையே அனுபவித்தார். பிறப்பிலும் தம்மைத் தாங்குவதற்கு உடைமைகளைக் கொண்டிருக்கவில்லை; இறப்பிலும் தம்மைத் தாங்குவதற்கு உடைமைகளைக் கொண்டிருக்கவில்லை. ஒன்றுமே இல்லாத வெறுமை நிலையில்தான் இயேசு இருகரம் விரித்துச் சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்தார். இயேசுவின் சிலுவை மரணமும் ஓர் அழகான வெறுமைதானே!

எனவே, இயேசு பிறக்கும்போதும் வெறுமை; வாழும்போதும் வெறுமை; இறக்கும்போதும் வெறுமை; கல்லறையில் அடக்கம் செய்தபோதும் வெறுமை. மற்றொருவருக்காக வெட்டப்பட்ட கல்லறையிலே இயேசு அடக்கம் செய்யப்படுகிறார். இயேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறையும் வெறுமையான கல்லறைதான். யோவானும் லூக்காவும் அக்கல்லறையில் யாரையும் வைத்ததில்லை என்று கூறுகின்றனர் (யோவா 19:41; லூக் 24:53). இது ஒரு புதிய கல்லறை; வெறுமையான கல்லறை; இதுவரை யாரும் அடக்கம் செய்யப்படாத தூய்மையான கல்லறை. வெறுமையின் வடிவம் தூய்மை!

இயேசுவின் வெறுமை என்பது அவர் உடைமைகள் ஏதுமின்றிப் பிறந்தார், வாழ்ந்தார், இறந்தார் என்பதல்ல; மாறாக, அவர் தமது இறையாட்சிக் கனவின் செயல்பாடுகளை முழுமையாக நிறைவேற்றினார் என்பதுதான் பொருள். இயேசு கல்லறைக்குள் செல்லும்போதுஎல்லாம் நிறைவேறியமனத்தோடு சென்றார். இனி நிறைவேற்றுவதற்கு எதுவுமில்லை என்பதுஎல்லாம் நிறைவேறிற்று (யோவா 19:30) என்பதிலே அடங்கியிருக்கிறது. தம்மையே வெறுமையாக்கிய இயேசு, தாம் வாழ்ந்த கொஞ்ச காலத்திலேயே தமது அனைத்து உயர்ந்த சிந்தனைகளையும் நன்மைகளையும் நீதியையும் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் நாம் வாழ்வுபெற, வளம்பெற முழுமையாகக் கொடுத்து விட்டுச் சென்றார். ஆகவேதான் தமது இலட்சியப் பயணத்தில் அவர் சந்தித்த கொடிய வேதனைகளுக்குப் பரிசாக இறைத்தந்தை உயிர்ப்பு என்னும் உயரியப் பரிசை அவருக்குக் கொடுத்தார். மண்ணுலகில் தோன்றிய மனிதர்களுள் முழுமையாக, வெறுமையாக வாழ்ந்தவர் இயேசுவைத் தவிர வேறு எவருமிலர்

நிறைவாக, சில சிந்தனைகள்: இன்று நாம் கல்லறைக்குச் செல்லும்போது, நாம் நிறைவேற்றாத பற்பல கனவுகளோடும் இலட்சியங்களோடும்தான் புதைக்கப்படுகின்றோம். இதனால் நிறைவேற்றப்படாத அழகான இலட்சியங்கள் கல்லறைக்குள்ளே புதைக்கப்படுகின்றன. வாழும்போது நம்மிடம் உள்ள அன்பு, இரக்கம், மன்னிப்பு, நீதி, உண்மை போன்ற கிறித்தவப் பண்புகளையும் இந்தச் சமூகத்திற்கு முழுமையாகக் கொடுத்து விட்டு இறந்தால்வெறுமையாககல்லறைக்குச் செல்லலாம் அன்றோ!

எனவே, ஆண்டவர் இயேசுவின் சொற்களை, செயல்களை, நன்மைத்தனத்தை எப்போதும் நினைவில் கொள்வோம். நாம் இறை இரக்கத்தால் புதுப்பிக்கப்படவும், இயேசுவால் அன்புகூரப்படவும், அவர் அன்பின் சக்தி கொண்டு நம் வாழ்வை மாற்றியமைக்கவும் உதவுவோம். சாவையே வாழ்வாக மாற்றிய உயிர்த்த கிறிஸ்துவிடம், பகைமையை அன்பாகவும், பழிவாங்குதலை மன்னிப்பாகவும், போரை அமைதியாகவும் மாற்றும்படி வேண்டுவோம். உயிர்த்த ஆண்டவரை அனைவரும் காண்பதற்கு நாம் உதவியாக இருப்போம். அனைத்தையும் கொடுத்துவிட்டு வெறுமையாக இறப்போம். வெற்றியோடு உயிர்ப்போம்!

news
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 13, 2025, திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 50:4-7; பிலி 2:6-11; லூக் 22:14-23:56 - கடவுள் ‘தேவையில்’ இருக்கிறார்!

பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில், ஒவ்வொரு ஞாயிறன்றும் ஓர் இளைஞர் நின்றுகொண்டு, ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும்முட்டாள்கள்என்று உரத்தக் குரலில் கேலிசெய்து வந்தார். ஒருமுறை அந்த இளைஞரின் கேலிகளைக் கேள்விப்பட்ட பங்குத்தந்தை அவரிடம் சென்று, “நான் இப்போது உனக்கு விடுக்கும் சவாலை உன்னால் நிறைவேற்ற முடியுமா? உனக்கு அவ்வளவு துணிவு இருக்கிறதா?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் அந்த இளைஞர் கோபமுற்று, “முட்டாள் சாமியாரே! எனக்கே சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து காட்டுகிறேன்என்று அனைவரும் கேட்கும்படிக் கத்தினார்.

பங்குத்தந்தை அந்த இளைஞரிடம், “சிலுவையில் இருக்கும் இயேசுவை உற்றுப்பார். உன்னால் முடிந்த அளவு உரத்தக் குரலில், ‘கிறிஸ்து எனக்காகச் சிலுவையில் இறந்தார்; ஆனால், அதைப்பற்றி எனக்குக் கவலையில்லைஎன்று உன்னால் கத்த முடியுமா?” என்று சவால் விடுத்தார். அந்தச் சவாலை ஏற்ற இளைஞர், பீடத்தை நெருங்கி வந்து உரத்தக் குரலில், “கிறிஸ்து எனக்காகச் சிலுவையில் இறந்தார்; ஆனால், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லைஎனக் கத்தினார். பங்குத்தந்தை அவரிடம், “இன்னொரு முறை கத்துஎன்றார். இரண்டாவது முறையும் இளைஞர் கத்தினார். ஆனால், இம்முறை அவரது குரலில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்குத்தந்தை இளைஞரிடம், “தயவுசெய்து, இறுதியாக ஒருமுறை மட்டும் கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு நீ போகலாம்என்றார். இம்முறை இளைஞர் சிலுவையை உற்றுப்பார்த்தார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள் வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை; கண்களைத் தாழ்த்தினார்; கண்ணீர் வழிந்தோடியது.

இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர் சிறிது நேரம் அமைதியாக இருந்தபின் தொடர்ந்தார்: “அந்த இளைஞன் நான்தான். கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால், கடவுள் எனக்குத் தேவை என்பதைச் சிலுவையில் தொங்கிய இயேசு எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத் தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்என்று கூறினார்.

தவக்காலத்தின் 6-ஆம் ஞாயிறைகுருத்து ஞாயிறுஅல்லதுபாடுகளின் ஞாயிறுஎனக் கொண்டாடுகிறோம். இன்று முதல் உயிர்ப்புப் பெருவிழா வரை உள்ள ஏழு நாள்களையும்புனித வாரம்என்று அழைக் கிறோம். புனித வார நாள்கள் கடவுள் நம்மை மீட்டு வெற்றி கொண்ட நாள்கள்! இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என்னும் பாஸ்கா மறைபொருளைப் பொருள் உணர்ந்து கொண்டாடும் நாள்கள். ‘உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர், அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தியதன்...’ (யோவா 13:1) அடையாளமே இயேசு தம் சாவைப்பற்றி அறிந்த பின்னும் துணிவுடனும் வெற்றி ஆர்ப்பரிப்புடனும் எருசலேமுக்குள் நுழையும் இன்றைய நிகழ்வு.

ஆண்டவர் இயேசு எருசலேமில் நுழைந்தது முதல் சிலுவையில் அறையப்பட்டு இறக்கும் வரை இயேசுவின் பல தேவைகள் ஆங்காங்கே வெளிப்பட்டன. அந்தத் தேவையில் சிலர் இணைந்து கொண்டனர்; பலர் பிரிந்து சென்றனர். இயேசுவின் புனித தேவைகளில் நாமும் இணைந்துகொள்ள பாடுகளின் ஞாயிறு நம்மைப் பாசத்தோடு அழைக்கிறது.

கடவுள் அனைத்தையும் அறிந்தவர்; அனைத்தையும் கடந்தவர்; அனைத்தையும் படைத்தவர்; முழு ஆற்றல் கொண்டவர்; எல்லா இடங்களிலும் இருப்பவர்; அனைத்து நன்மைகளாலும் நிறைந்தவர்; தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருப்பவர்; முழுமையான நல்லவர். சின்னக் குறிப்பிடத்தில் கடவுளைப் பற்றிப் படித்த பாடங்கள் இவை. எல்லாவற்றையும் படைத்து, படைப்பின்மீது அதிகாரம் கொண்ட கடவுளுக்கு என்ன தேவை இருக்கிறது? அவர் எந்தத் தேவையும் அற்றவர். அவர் தருகிறவர், பெறுகிறவர் அல்லர்; எனினும், கடவுள் தேவையில் இருக்கிறார். The Lord is in need!

பல நேரங்களில் கடவுளின் தேவைகளில் நாம் இணைந்துகொள்ளாமல், நம்முடைய தேவைகளைக் குறித்தே நாம் கடவுளைப் பின்தொடர்கிறோம் என்பதுதான் உண்மை. இயேசுவும் ஒருமுறை தங்களுக்கு என்ன கிடைக்கும் என்னும் நோக்கத்தோடுதான் மக்கள் கடவுளைத் தேடுகிறார்கள் என்றே குறிப்பிட்டார் (யோவா 6:26). தம்மைத் தேடி வந்தவர்களை இயேசு ஒருபோதும் கைவிட்டதில்லை. இன்றைய நாளில் இயேசு எரிகோவை விட்டு எருசலேம் நோக்கிச் செல்லும் பயணத்திலும் வழியோரம் அமர்ந்திருந்த திமேயுவின் மகன் பர்த்திமேயுவுக்குப் பார்வை கொடுக்கிறார் (மாற் 10:47). நலம்பெற்ற அவர் உடனே இயேசுவைப் பின்தொடர்கிறார் (மாற் 10:52). இதை வியப்புடன் பார்க்கும் மக்கள் இயேசு தாங்கள் எதிர்பார்த்த ஒரு மெசியாவாக, ஒரு புதிய தாவீது அரசராக இருப்பாரோ என்றெண்ணிஓசான்னா!’ அதாவதுஎங்களை விடுவித்தருளும், ‘எங்களுக்கு உதவ வாரும்  என ஆர்ப்பரித்து முழக்கமிடுகின்றனர்.

எருசலேமில் தமக்கு நிகழவிருப்பவை அனைத்தையும் தெளிவுற தெரிந்த பின்பும் இயேசு துணிவுடன் மக்கள் பேரணியோடு நகரில் நுழைகிறார். இந்தப் பவனியில் இயேசு ஒலிவ மலையிலுள்ள பெத்பகு, பெத்தானியா (லூக் 19:29) எனும் ஊர்களுக்கு அருகில் வர, தம் இரு சீடர்களை அனுப்பி, கழுதைக்குட்டியை அவிழ்த்து வரக் கூறுகிறார். ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், “இது ஆண்டவருக்குத் தேவைஎனச் சொல்லுங்கள் (லூக் 19:31) என்கிறார்.

இந்தப் புனித வாரத்தில் தேவையில் இருக்கும் கடவுளுக்கு முதன்முதலில் உதவிட முன்வந்தது ஒரு கழுதைக் குட்டியே. கழுதை ஓர் அமைதியின், எளிமையின் அடையாளம். இயேசு கழுதையின்மேல் அமர்ந்து வரும்போது, மக்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக்கொண்டே செல்கின்றனர். தரையில் விரிக்கப்பட்ட மேலுடைகளும், மரங்களிலிருந்து வெட்டித் தரையிலே பரப்பப்பட்ட மரக்கிளைகளும் இயேசுவுக்கு வாழ்த்தும் மரியாதையும் செலுத்துகின்றன.

இயேசுவின் இந்தப் பயணத்தில், இயேசுவைத் தீர்ப்பிடத் துடிக்கும் சமய மற்றும் அரசியல் தலைவர்கள், காட்டிக்கொடுக்க விரும்பிய யூதாசு, மறுதலிக்கும் பேதுரு, ஒரு மணி நேரம் விழித்திருக்க வலுவில்லாத சீடர்கள், ஆடையின்றித் தப்பி ஓடிய இளைஞர், நிர்வாணப்படுத்தும் படைவீரர்கள், ‘பரபாவையே விடுதலை செய்யும்எனக் கேட்கும் கூட்டத்தினர், ‘அவனைச் சிலுவை அறையும்என்று உரக்கக் கத்துபவர்கள், காறி உமிழ்பவர்கள், கன்னத்தில் அறைபவர்கள், கசையால் அடிப்பவர்கள், பொய்ச்சாட்சி சொல்பவர்கள், ஆணியால் அறைந்து முள்முடி சூட்டியவர்கள், ‘யூதரின் அரசரே வாழ்கஎன ஏளனம் செய்பவர்கள், கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்த பிலாத்து, கசப்புக் காடியைக் குடிக்கக் கொடுப்பவர்கள், இயேசுவின் ஆடையைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக்கொள்பவர்கள், ‘நீ மெசியா தானே! உன்னையும் எங்களையும் காப்பாற்றுஎனப் பழித்துரைத்த குற்றவாளி, இயேசு இறந்த பிறகும் விலாவில் ஊடுருவக் குத்துபவர்கள், ‘நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வாஎனப் பழித்துரைத்த வழிப்போக்கர்கள் எனப் பலரும் கடவுளின் தேவையில் இணைந்து கொள்ள மறுக்கின்றனர்.

அதேநேரத்தில், இயேசுவுக்காகப் பேச முடியாமல் மௌனியாய்ப் பயணிக்கும் சிலர், இயேசுவின் சிலுவையைச் சிறிது நேரம் சுமந்து சென்ற சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன், மாரடித்துப் புலம்பும் பெண்கள், ‘என்னை நினைவிற்கொள்ளும்என இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும் நல்ல கள்ளன், ‘இவர் உண்மையாகவே நேர்மையாளர்என்று கூறிய நூற்றுவர் தலைவர், தனது கல்லறையைத் தானமாய் அளித்த அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு, மறுப்பேதுமின்றிக் கழுதையைக் கொடுத்தவர், வெள்ளைப்போளமும் சந்தனத்தூளும் கொண்டு வந்த நிக்கதேம், மகதலா மரியா, குளோப்பாவின் மனைவி மரியா, சலோமி போன்ற பெண்கள், இறுதிவரை துணைநின்ற அன்னை மரியா மற்றும் அன்புச் சீடர் யோவான் போன்ற பலரும் கடவுளின் தேவையில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர்.

நிறைவாக, இந்தப் புனித வாரத்தில் இயேசுவின் பாடுகளில் பங்கேற்கும் நாம், அவரின் தேவைகள் என்ன என்பதைச் சிந்தித்துச் செயல்பட அழைப்புப் பெறுகின்றோம். கெத்சமனி தோட்டத்தில் அவரோடு சேர்ந்து செபிக்க மூன்று சீடர்கள் தேவைப்பட்டனர். இரத்த வியர்வை வியர்க்கும்போது ஆறுதல் கூற வானதூதர் தேவைப்பட்டனர். சிலுவையைச் சுமக்கும்போது கூடவே இருந்து இலட்சியப் பயணத்தை நிறைவுசெய்ய அன்னை மரியாவின் உடனிருப்பு தேவைப்பட்டது. சிலுவையைச் சிறிது தூரம் தூக்கிச் சுமக்க சீமோன் தேவைப்பட்டார். பார்ப்பதற்கேற்ற அமைப்பும் விரும்பத்தக்க தோற்றமும் இல்லாத இயேசுவின் முகத்தைத் துடைக்க வெரோணிக்கா தேவைப்பட்டார். கல்லறையில் அடக்கம் செய்ய அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு தேவைப்பட்டார். இறுதியில் தம்முடைய அன்புத் தாயைப் பாதுகாப்பாய் ஒப்படைக்க யோவான் தேவைப்பட்டார்.

ஆம், ஆண்டவர் தேவையிலிருக்கிறார். ‘நான் தேவையில் இருக்கிறேன்என்று கூறியபோதுஇதோ, நான் வருகிறேன் ஆண்டவரேஎன்று கூறி ஒரு கழுதை முன்வந்தது. இயேசு தேவையிலிருப்பது அவரது பலவீனமோ அல்லது இயலாமையோ அல்ல; மாறாக, அவர் மனித இயல்பு (மனித உரு) எடுத்ததன் மகத்துவம் (யோவா 1:14). கடவுள் நிலையிலிருந்து மனுவுரு ஏற்று, நம்மில் ஒருவராய் வாழ்ந்து, நமக்காகவே இறந்த நம் மீட்பர் இயேசுவுக்கு, நீங்களும் நானும் தேவைப்படுகிறோம் என்பது நாம் பெற்ற பெரும்பேறு! இயேசுவின் தேவைகளில் இணைந்துகொள்ள முன்வருவோம். அவர் பாதையில் நம் கண்களைப் பதிப்போம்.

news
ஞாயிறு மறையுரை
ஏப்ரல் 06, 2025, தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 43:16-21; பிலி 3:8-14; யோவா 8:1-11 - இரக்கமுள்ள இறையன்பு நமக்காகக் காத்திருக்கிறது!

இறந்துபோன என் தாத்தா கத்தோலிக்கர் அல்லர்; அவர் விண்ணகத்திற்குப் போவாரா?” என்ற கேள்வியைச் சீனாவைச் சேர்ந்த எய்டென் என்ற ஒரு சிறுவன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியிருந்தான். அச்சிறுவனின் கேள்விக்கு, ‘அர்ஸ் நகரின் வழிகாட்டிஎன்று புகழப்பெறும் புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைச் சுட்டிக் காட்டி திருத்தந்தை பதிலளித்தார்.

ஒருநாள் புனித வியான்னியைத் தேடி வந்த ஒரு பெண், தன் கணவர் பாலத்தின் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறினார். அவர் செய்த பாவத்தால் கட்டாயம் நரகத்திற்குத்தான் சென்றிருப்பார் என்றெண்ணிக் கதறி அழுதார். அப்போது, புனித வியான்னி அப்பெண்ணிடம், “மகளே, அந்தப் பாலத்திற்கும் ஓடுகின்ற ஆற்றுக்கும் இடையே இறைவனின் இரக்கம் நிறைந்திருக்கிறது. அதை நீ புரிந்துகொள்ள வேண்டும்என்று கூறி அவரை அமைதிப்படுத்தி அனுப்பினார்.

எங்கும் நிறைந்திருப்பது இறை இரக்கம்; எச்சூழலிலும் எவ்வேளையிலும் எல்லாரையும் காக்கக்கூடியது, இறைவனின் இரக்கம். எங்கே இரக்கம் உள்ளதோ அங்கே இறைவன் இருப்பார். இரக்கம் இல்லாத இடத்தில், இறைவனுக்கும் இடமில்லை. இறைவனின் பெயர் இரக்கம்; அவரது அடையாள அட்டை இரக்கம். இரக்கம் என்பது தன்னிலேயே ஒருவரை முழுமை அடையச் செய்வதில்லை; மாறாக, அடுத்தவரைத் தேடிச்சென்று, அவரை வரவேற்று அரவணைப்பதில்தான் இரக்கம் முழுமைகொள்கிறது.

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வாசகங்கள், ஒரு குழந்தையை அரவணைத்துப் பாதுகாக்கும் பெற்றோரைப்போல, இறைவனின் இரக்கம் நம்மை அரவணைத்துப் பாதுகாக்கிறது எனும் சிந்தனையைச் சுமந்து வருகிறது.

இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேலின் புதிய விடுதலைப் பயணத்தைப் பற்றி உரைக்கிறது. இஸ்ரயேலைத் தம் மக்களாகத் தேர்ந்தெடுத்தவர் கடவுள். ஆனால், அவர்கள் கடவுளைப் புறக்கணித்ததால் பல நாடுகளுக்குக் கடத்தப்பட்டார்கள். கீழ்ப்படியாத தம் மக்களை ஆண்டவர் தண்டித்தார். “துன்பமெனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்தார் (எசா 30:20). ஆனாலும், ஆண்டவர் அவர்களை முழுமையாக அழியவிடவில்லை. இக்கட்டான நேரங்களிலும் அவர்களுக்குக் கற்பித்து அவர்களை வழிநடத்தினார். தாம் முன்னின்று நடத்த இருக்கும் இந்தப் புதிய விடுதலைப் பயணம் அருங்குறிகளால் எகிப்திலிருந்து இஸ்ரயேலரை மீட்டுவந்த முதல் விடுதலைப் பயணத்தைப் போலவே (விப 14) சிறப்பானதாக இருக்கும் என்கிறார். கடவுள் இஸ்ரயேலைத் தேர்ந்தெடுத்து அன்பு செய்தபோதும் அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தவில்லை; மாறாக, அவருக்கெதிராகப் பாவம் செய்தனர். அந்த நிலையிலும் கடவுள் அவர்களைக் கைவிடவில்லை; காரணம், அவர் அவர்கள்மேல் கொண்டிருந்த இரக்கம்!

இன்றைய இரண்டாம் வாசகம், பவுல் வாழ்வில் நடந்த மிகப்பெரிய மாற்றத்தைப் பற்றிக் கூறுகிறது. பவுல் தனக்குள் நிகழ்ந்த மனமாற்றம் என்பது தனது உயர்வான வளர்ப்பு, குடும்பப் பின்னணி, நாடு, மரபுவழி உடைமை, பாரம்பரிய நம்பிக்கை, செயல்பாடு, அறநெறி வாழ்வு ஆகிய சிறப்புப் பண்புகளை அடிப்படையாகக் கொள்ளாமல் இறைவனின் அளப்பரிய இரக்கத்தை முன்வைத்தே நிகழ்ந்தது என்கிறார் (பிலி 3:4-7). எனவேதான், ‘கிறிஸ்துவைப் பற்றிய அறிவே இவ்வுலக அனைத்துச் சிறப்புகளைவிட மேலான ஒன்றுஎன்று அவரால் உறுதிபடக் கூற முடிந்தது.

இன்றைய நற்செய்திப் பகுதியில், தம் அன்புத் திட்டத்தில் யாரையும் ஒதுக்குவதற்கு விரும்பாத இயேசுவின் இரக்கம் மிகுந்த இதயத்தை நம்மால் உணர முடிகிறது. ஒலிவ மலையில் இரவு முழுவதும் தாம் அனுபவித்த இறையனுபவத்தை (8:1) அதிகாலையில் தம் மக்களுக்குக் கொடுக்க கோவிலுக்கு வருகிறார். காலையிலேயே விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வந்து ஒரு வழக்கை ஆரம்பிக்கின்றனர் மறைநூல் அறிஞரும் பரிசேயரும். இயேசுவை எப்படிச் சிக்க வைக்கலாம் என இவர்கள் தூங்காமல் இரவெல்லாம் சதித்திட்டம் தீட்டியிருப்பார்கள் போலும். இவர்களுடைய நோக்கம் மோசேயின் சட்டத்தை நிறைவேற்றுவது அல்ல; மாறாக, இயேசுவின்மீது குற்றம் காண்பதே (8:6). இயேசு இரக்கம் கொண்டு அப்பெண்மீது கல் எறிய வேண்டாம் என்று சொன்னால், அவர் மோசேயின் சட்டத்தை மீறுகிறார் எனக் குற்றம் சுமத்தலாம். ஒரு வேளை கல்லால் எறிந்துகொல்ல அனுமதித்தால் அவர் உரோமைச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் எனப் பழி சுமத்தலாம். காரணம், இயேசுவின் காலத்தில் மரண தண்டனை அளிக்கும் அதிகாரம் உரோமை அரசைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. எனவே, எப்படியேனும் இயேசுவைச் சிக்கலில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெண்ணைப் பகடைக்காயாய் அழைத்து வருகின்றனர்.

இறைமகனின் இரக்கத்திற்கும் பரிசேயரின் வன் முறை நிலைகளுக்கும் இடையே நிறுத்தப்பட்ட அந்த அபலைப் பெண்ணைக் கனிந்த இதயத்தோடு இயேசு பார்க்கிறார். பொதுவெளியில் ஒரு பெண்ணை நிறுத்தி அவரது அறநெறியை விவாதிக்க விரும்பாத இயேசு அமைதியோடுகுனிந்து விரலால் தரையில் எழுதிக் கொண்டிருக்கிறார் (8:6). இது இயேசு, பரிசேயர் தொடுத்த வழக்கில் ஈடுபாடு காட்டவில்லை எனப் புரிந்துகொள்ளலாம் அல்லது மாசுபட்ட ஆண் வர்க்கத்தை உற்றுநோக்க விரும்பவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், ஆணாதிக்கக் கோர முகம்கையும் மெய்யுமாகப் பிடிபட்ட (8:4) இவளை மோசேயின் சட்டப்படி கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் (லேவி 10:10; இச 22:22); ‘நீர் என்ன சொல்கிறீர்?” (8:5) என்று இயேசுவிடம் தொடர்ந்து கேட்கவே, “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்என்று இயேசு பதில் கூறுகிறார்.

இயேசுவின் இந்தப் பதில் பரிசேயருக்கும் மறைநூல் அறிஞருக்கும் பேரிடியாக விழுந்தது. இந்த ஒற்றை வாக்கியம் குற்றம் சுமத்த வந்த பரிசேயரையும் மறை நூல் அறிஞரையும் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றியது. தண்டிக்கத் துடித்தவர்கள் இப்போது தண்டிக்கப்பட வேண்டியவர்களாயினர். குற்றம் சுமத்தியவர்கள் இப்போது குற்றவாளியாகிப் போயினர். “உங்களில் யார் தான் குறையின்றி வாழ்கிறீர்கள்? நீங்கள் அனைவருமே குறையுள்ளவர்கள்தாம். எனவே, குறைகளில் உங்கள் கவனத்தைச் செலுத்தாமல், நல்லது செய்வதில், வீழ்ந்து கிடப்போரைத் தூக்கி எழுப்புவதில் கவனம் செலுத்துங்கள்எனச் சொல்லாமல் சொல்கிறார் இயேசு.

முதியோர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அனைவரும் சென்றுவிடவே, இறுதியில், அங்கு நின்றது இயேசுவும் அப்பெண்ணுமே! அதாவது, இரக்கமும் துன்பமும் மட்டுமே தனியாக நின்றன. இந்நிகழ்வு பற்றி புனித அகுஸ்தின் விளக்கும்போது, இறுதியில்இரக்கத்தின் இயேசுவும் இரங்கத்தக்க அந்தப் பெண்ணும்தனியாக (இலத்தீனில்  Misecordia et misera) இருந்தனர் என்கிறார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு எந்த ஒரு கடுமையான சொல்லையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, இரக்கமும் அன்பும் மட்டுமே அவரிடமிருந்து வெளிப்பட்டன. இயேசு அந்தப் பெண்ணிடம், “அம்மா, நானும் தீர்ப்பு அளிக்கவில்லை; நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர் (8:11) என்று கூறி அப்பெண்ணை அனுப்பிவிடுகிறார். ஒரு பாவியின் உள்ளத்தைத் தொடும் பேருண்மை இறைவனின் இரக்கமாகத்தான் இருக்கமுடியும். “கிறித்தவ இறைநம்பிக்கையின் பேருண்மை, இறை இரக்கம்; இறை இரக்கத்தை இறைஞ்சும் எல்லாருக்கும் அது இலவசமாக வழங்கப்படுகிறதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இறை இரக்கத்தை இறைஞ்சிய விபசாரத்தில் பிடிபட்ட பெண், நம்பிக்கையோடு தனது எதிர்காலத்தை நோக்கவும், புதிய வாழ்வைத் தொடங்கவும் இயேசு உதவுகிறார். இனி இப்பெண்ணிற்குப் பாவம் செய்வதற்கான விருப்பம் ஏற்பட்டாலும்கூட, இவர் ஒருமுறை இரக்கத்தை அணிந்துகொண்ட பின்னர், அந்த விருப்பம் இறையன்பால் வேறு திசையில் மாற்றப்பட்டு, இவர் தனது வாழ்வைப் புதுவிதமாக நோக்கவும் வாழவும் ஆரம்பிப்பார் என்பதில் ஐயமில்லை.

அன்பிற்குரியவர்களே, இறைவனின் இரக்கத்தை நம் வாழ்வில் எத்தனையோ முறை அனுபவித்திருக்கிறோம். அவரின் அன்பிரக்கமின்றி நம்மால் வாழ முடியாது. பிறர் குறைகளையே பெரிதுபடுத்தும் நம் இயல்பை, விரைவாகத் தீர்ப்பு வழங்கும் நம் இயல்பை எண்ணிப் பார்ப்போம். பிறரைத் தீர்ப்பிடுவதற்கு முன், நாம் எவ்வாறு காணப்படுகிறோம் எனக் கண்ணாடியில் முதலில் பார்ப்போம். நாம் தீர்ப்பிடப்பட விரும்பவில்லையெனில், நாம் பிறரையும் தீர்ப்பிடக்கூடாது. நாம் தொடர்ந்து மற்றவரைத் தீர்ப்பிட்டுக் கொண்டே இருந்தால், அதே அளவையுடனே நாமும் தீர்ப்பிடப்படுவோம். எனவே, மற்றவரைத் தீர்ப்பிடுவதற்குப் பதிலாக அவர்களுக்காக மன்றாடுவோம். தீர்ப்பு கடவுளுக்கு மட்டுமே உரியது. நம் தீர்ப்பு ஒருபோதும் ஆண்டவரின் தீர்ப்புபோல உண்மையாக இருக்காது, இருக்கவும் முடியாது; ஏனென்றால், நம் தீர்ப்பில் இரக்கம் குறைவுபடுகின்றது.

நிறைவாக, இரக்கத்தின் தூதுவர்களாக அழைக்கப்பட்டுள்ள நாம் தெளிவான அன்புச் செயல்கள் வழியாக, இறைவனின் இரக்கத்திற்குச் சான்றுகளாக மாறுவோம். நமது நிழல்கூட நன்மை செய்யட்டும்! நாம் செய்யும் இரக்கச் செயல்களால் இரக்கமிக்க கடவுளை முகம் முகமாய், இதயத்துக்கு நெருக்கமாய்ச் சந்தித்து உரையாடுவோம். நிபந்தனையற்ற இறைவனின் இரக்கம் நம் வாழ்வில் ஆற்றக்கூடிய செயல்களை எண்ணிப் பார்ப்போம். எதிர்நோக்கின் யூபிலி ஆண்டில் இறைவனின் இரக்கத்தை நோக்கித் திரும்பி வருவோம் (யோவே 2:12). நம் வாழ்வில் மாபெரும் செயல் புரிய இரக்கமுள்ள இறையன்பு நமக்காகக் காத்திருக்கிறது (திபா 126:2).