news
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 28, 2025, திருக்குடும்ப விழா - சீஞா 3:2-7,12-14; கொலோ 3:12-21; மத் 2:13-15,19-23 - அன்பின் இல்லிடம் திருக்குடும்பம்

நமக்கு முகமாய், முகவரியாய், அடையாளமாய் அமைவது குடும்பம். குடும்பம் பாசத்தின் உறைவிடம்; அன்பின் இல்லிடம்; நெருக்கத்தின் இருப்பிடம். இங்குதான் உரையாடல் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றம் ஆகிய கலைநுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. குடும்பத்தில்தான் ஒவ்வொருவரும் தங்கள் மேன்மையையும் பெருமையையும் அறிந்துகொள்கின்றனர். அன்பு செய்கின்ற, ஒருவரையொருவர் முழுமையாக நேசிக்கின்ற, ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்கின்ற, மற்றவர்களுக்காகத் தன்னையே அர்ப்பணிக்கக்கூடிய குறிப்பாக, மிகவும் நலிந்தோரையும் நோயுற்றோரையும் கனிவாய்ப் பாதுகாக்கக்கூடிய தளமாகப் பல தன்மைகளைக் கொண்டதே குடும்பம். எனவேதான், குடும்பம் சமுதாயத்தின் அடித்தளம் எனவும், அடிப்படை உயிரணு என்றும் அழைக்கிறோம்.

குடும்பம் என்பது மனித உறவின் நிறைவு. இங்கேதான் ஒருவரையொருவர் மதிக்கவும் அன்பு கூரவும் வேண்டும் என்ற பண்பும் ஒற்றுமையும் மேலோங்கி இருக்கும். குடும்பம் என்பது நம்பிக்கையின் தொடக்க வித்து. குடும்பத்தில் நம்பிக்கை என்பது தாய்ப்பாலுடன் சேர்ந்தே ஊட்டப்படுகிறது. குடும்பத்தில்தான் பெற்றோரும், தாத்தா-பாட்டிகளும் தங்கள் நம்பிக்கையை அடுத்த தலைமுறைக்கு வழங்குகின்றனர். எனவேதான்குடும்பம் என்பது நற்செய்தி அறிவிப்பதற்குச் சிறந்த தளம்என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். மனிதகுலத்திற்கு நற்செய்தியை அறிவிக்க முதன்முதலில் அழைக்கப்பட்ட சமூகம் கிறித்தவக் குடும்பங்களே.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால், “திரு அவையின் இதயமே குடும்பங்கள்தாம்; இந்த இதயம் பழுதடைந்தால் மனிதன் வாழமுடியாது; குடும்பங்கள் சிதைவுற்றால் திரு அவையும் சிதைவுறும்என்கிறார். ஒரு நல்ல குடும்பம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, திரு அவைக்கும் அடித்தளமாக இருக்கிறது. ஒரு நல்ல குடும்பம் கத்தோலிக்க நம்பிக்கையை, அன்பை, கிறித்தவ ஆன்மிகத்தைத் தன்னுடைய பிள்ளைகளின் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்கிறது. அதனால்தான், கிறித்தவக் குடும்பம்ஒரு குட்டித் திரு அவைஎன்ற கருத்துருவாக்கத்தைத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் தன்னுடையகுடும்ப வாழ்வு (Familiaris Consorti) என்ற சுற்றுமடலில் முன்மொழிந்தார். குடும்பம் என்பது குட்டித் திரு அவை என்பதற்கு முதல் மாதிரியாக வாழ்ந்த குடும்பம் நாசரேத்தூர் திருக்குடும்பம்.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறன்று திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திரு அவை நம்மை அழைக்கின்றது. இயேசுவின் குடும்பத்தைப்போலவே உலகில் உள்ள எல்லாக் குடும்பங்களும் இருக்கவேண்டும் என்பதே இவ்விழா இன்று விடுக்கும் அழைப்பு. திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திரு அவை அழைப்பு விடுத்ததன் காரணம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

திருக்குடும்பத் திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாகத்தான் தொடக்கத் திரு அவையில் வளர்க்கப்பட்டு வந்தது. முதன்முதலில் 1893-ஆம் ஆண்டு திருத்தந்தை 13-ஆம் லியோ இவ்விழாவை அறிமுகம் செய்தார். 1921-ஆம் ஆண்டு திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட் இத்திருவிழாவைத் திருவழிபாட்டுக் கால அட்டவணையில் இணைத்தார். இதற்கு முக்கியக் காரணம், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப் போர். 1918-இல் நடைபெற்ற இப்போரில் பல்லாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. தந்தையையும் மகனையும் இழந்த பல குடும்பங்கள் ஆழ்ந்த துயரத்தில், அவ நம்பிக்கையில் மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத் திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களைக் கட்டியெழுப்ப திரு அவை முயன்றது.

1962-ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் திருக்குடும்பம் குறித்த சிந்தனைகளைப் புதுப்பித்தது. நடைபெற்ற உலகப் போர்களுக்குப் பின்னர் குடும்பங்கள் சந்தித்த துயரங்கள், சிதைவுகள், அவநம்பிக்கைகள், போராட்டங்கள் மற்றும் போதைப்பொருள்களின் பரவலான பயன்பாடுகள், கலாச்சாரச் சீரழிவுகள் போன்ற காரணிகளால் நிலைகுலைந்த குடும்பங்களைக் காப்பது என்பது திரு அவையின் முக்கியக் கடமையாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் உண்மையான அன்பையும் அமைதியையும் திருக்குடும்பம் வழங்கமுடியும் எனத் திரு அவை உணர்ந்தது.

எகிப்தில் அடைக்கலம் தேடி, நாடு கடந்து செல்லும் துயரமான சூழலை யோசேப்பு, மரியா, குழந்தை இயேசு அனுபவித்தனர். பச்சிளம் குழந்தை இயேசுவோடு மரியாவும் யோசேப்பும் எகிப்துக்கு ஓடிப்போன நேரத்தில், அக்குழந்தையை அழித்துவிடும் வெறியில், ஏரோது பல நூறு குழந்தைகளின் உயிர்களைப் பலிவாங்கினான். திருக்குடும்பம் சந்தித்த அதேபோன்ற மோசமான சூழ்நிலையை இன்று குடும்பங்கள் சந்திக்கின்றபோது, கடவுளின் அன்பிலிருந்தும் நெருக்கத்திலிருந்தும் புறக்கணிக்கப்படுவதாக எவரும் நினைக்கக்கூடாது. இதுபோன்ற கடினமான பிரச்சினைகளைச் சந்திக்கின்ற குடும்பத்தில் ஓர் உறுப்பினராக இயேசு இருக்க விரும்புகிறார் என்ற ஆழமான நம்பிக்கையைத் திரு அவை குடும்பங்களுக்கு ஊட்டியது. அனைத்துக் குடும்பங்களுக்கும் முன்மாதிரியாகத் திருக்குடும்பத்தை முன்னிறுத்தியது. கிறிஸ்துமஸ் விழாவைத் தொடர்ந்து வரும் ஞாயிறைத் திருக்குடும்பத் திருவிழாவாகக் கொண்டாடவேண்டும் என்று 1960-இல் திரு அவை அறிவித்தது.

திருக்குடும்பம் நம் மத்தியில் எப்படி வாழ்ந்தது? அந்தக் குடும்பம் கடைப்பிடித்து வாழ்ந்த விழுமியங்கள் என்னென்ன? என்பதை இன்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பம் பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடு இரவாக வேறொரு நாட்டிற்கு அகதிகளாய் ஓட வேண்டியிருந்ததுநாட்டிற்குள்ளும் அடுத்த நாடுகளுக்கும், இரவோடு இரவாக ஓடும் இன்றைய புலம்பெயர்ந்தோரின் நிலையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குடும்பம் அனுபவித்தது. வானவரின் செய்தியைக் கலக்கத்தோடு ஏற்றுக்கொண்ட மரியா, இச்செய்தியை அறியும்போது மனக்கலக்கமும் குழப்பமும் அடைந்த யோசேப்பு, குழந்தை இயேசுவைக் குறித்த சிமியோனின் இறைவாக்கு (லூக் 2:35), தாயும்-தந்தையும் இயேசுவைக் காணவில்லையே என்ற ஏக்கமிகு தேடல் (லூக் 2:44) எனத் திருக்குடும்பம் எந்நேரமும் பிரச்சினைகளோடே வாழ்ந்து வந்தது. இருப்பினும், அவர்கள் அந்தப் பிரச்சினைகளைச் சந்தித்த விதமும், அவற்றிற்குத் தீர்வு கண்டவிதமும் நமக்கு நல்லதொரு பாடம்.

திருக்குடும்பம் துன்பங்கள், சோதனைகள் வேளையிலும் செபத்தில் இணைந்திருந்ததைச் சிறந்த மாதிரியாக நாம் பார்க்கிறோம். அன்னை மரியாவும் யோசேப்பும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருப்பதிலும், அவரின் திட்டத்தை நிறைவேற்றுவதிலும் எப்போதும் கவனமாய் இருந்தனர். எப்போதும் கடவுளுக்காக வாழக்கூடியவர்களாவும், தங்களையே முழுவதும் அர்ப்பணிக்கக்கூடியவர்களாவும் இருந்தனர். கடினமான சூழலிலும், கலக்கமடைந்த வேளையிலும் கடவுளுக்குஆம்என்றே பதிலளித்தனர். குறிப்பாக, அன்னை மரியாவின்ஆம்கல்வாரி மலையின் உச்சம்வரை தொடர்ந்தது. இறை நம்பிக்கை என்பது தங்களையே முழுமையாக இறைவனிடம் அர்ப்பணிப்பதைவிட வேறு எது இருக்கமுடியும்? இறுதிவரை பரிவு, இரக்கம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய நற்பண்புகளால் தங்கள் உள்ளங்களை அணிசெய்தனர் இயேசு-மரி-யோசேப்பு குடும்பம்.

திருக்குடும்ப விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில் நம்பிக்கையின் நாற்றங்காலாய் விளங்கும் நமது குடும்பங்களை எண்ணிப்பார்ப்போம். இன்றைய வணிகப் பொருளாதார வாழ்க்கை அமைப்பில் குடும்ப உறவுகள் சீர்குலைந்து வருகின்றன. திருமணத்தின் புனிதமும், அதன் முறிவுபடாத் தன்மையும் இன்று உலகுசார்ந்த நவீன கலாச்சார அழுத்தத்தால் சிதைவுற்றுப்போகின்றன. தாயின் கருவறையில் உள்ள குழந்தைகளுக்கு எதிராக எழும் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. தாயின் மடியில் தலைவைத்துப் பாசத்தைப் பகிர்ந்துகொள்ள குழந்தைக்கும், குழந்தையின் மழலையில் குதூகலிக்க பெற்றோருக்கும் இன்று நேரமில்லை.

ஒரு குழந்தை வளர ஒரு கிராமமே தேவைப்படுகிறதுஎன்ற ஆப்பிரிக்க முதுமொழி நினைவுகூரத்தக்கதே. மனிதர்கள் இன்று நுகர்வுக் கலாச்சாரத்தில் சந்தைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு புறந்தள்ளப்படுகின்றனர். ‘பயன்படுத்தித் தூக்கியெறிஎனும் கலாச்சாரத்தை நாம் உருவாக்கிவிட்டோம். முதியோர் குறிப்பாக, நோயுற்றோர் இன்று சுமையாகி விட்டனர். மனித உறவுகள் எப்போதும் ஒருவரையொருவர் சார்ந்த உறவுகள் என்பதைப் பல வேளைகளில் நாம் மறந்துவிடுகிறோம்.

உலகமனைத்துக்கும் மகிழ்ச்சியைக் கொணர விரும்பினால் வீட்டுக்குச் சென்று உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்என்றார் அன்னை தெரேசா. எனவே, தங்களைச் சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி அன்பை, அக்கறையை, ஆதரவைத் தங்கள் குடும்பத்திலும், தாங்கள் வாழ்ந்த சூழல்களிலும் நிலைநாட்டிய திருக்குடும்பத்தைப்போல மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த குடும்ப வாழ்வு வாழ திருக்குடும்பத்திடம் வேண்டுவோம்.

அனைவருக்கும் திருக்குடும்ப விழா வாழ்த்துகள்!

news
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 25, 2025, ஆண்டவருடைய பிறப்புப் பெரு விழா - எசா 9:2-4,6-7; தீத் 2:11-14; லூக் 2:1-14 – தீவனத்தொட்டியில் குழந்தை இயேசு!

கடவுள் மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார். அவர்தாம் இம்மானுவேல்! கடவுள் நம்மோடு! அவர் அந்நியர் அல்லர்; அவருக்கு முகம் உண்டு; அதுவே இயேசுவின் முகம். மீட்பின் இந்நாளில் நாம் பெருமகிழ்ச்சிகொள்கிறோம். இந்நாள் இரக்கத்தின் நாள்! இதில் நம் தந்தையாம் இறைவன் தம் உன்னத பாசத்தை உலகம் முழுமைக்கும் வெளிப்படுத்தியுள்ளார். இது ஒளியின் நாள்! இது அச்சம், ஏக்கம் எனும் இருளை விரட்டியடிக்கிறது. இது அமைதியின் நாள்! இது சந்திப்பிற்கும் உரையாடலுக்கும் ஒப்புரவிற்கும் வழியமைக்கிறது. இது மகிழ்வின் நாள்! இது ஏழைகளுக்கும் தாழ் நிலையில் உள்ளோருக்கும் அனைத்து மக்களுக்கும் உன்னத மகிழ்வைத் தருகிறது.

கடவுள் குழந்தையாகப் பிறந்துள்ளார் என்ற வியப்புக்குரிய செய்தி முதலில் இடையர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழ்மையான நிலையில் அவர் பிறந்திருக்கிறார் என்பது இடையர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஓர் அடையாளம். அதாவது, தீவனத்தொட்டியில் குழந்தை கிடத்தப்பட்டிருக்கும் என்பதுதான் அந்த அடையாளம். அங்கு ஆடம்பர அலங்கார விளக்குகளோ அல்லது வானதூதர்களின் பாடல்களோ இல்லை. ‘ஒரு குழந்தை பிறந்துள்ளதுஎன்பது மட்டுமே அடையாளம்.

பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார் (லூக் 2:7), “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் (2:12), “விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத்தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள் (2:16) என்ற இறைவார்த்தைகளில் மூன்றுமுறைதீவனத்தொட்டிஎன்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மையான அர்த்தத்தைக் காண நாம் தீவனத்தொட்டியை உற்றுநோக்குவோம். ஏனெனில், கிறிஸ்து ஏன் இந்த உலகிற்கு வந்தார் என்பதை அது நமக்கு விளக்கிக் கூறுகிறது. இதன் அடிப்படையில் தீவனத்தொட்டி நமக்கு உணர்த்தும் 1. நெருக்கம், 2. ஏழ்மை, 3. தாழ்ச்சி ஆகிய மூன்று இறைப்பண்புகளைச் சிந்திப்போம்.

முதலாவதாக, தீவனத்தொட்டி என்பதுகடவுளின் நெருக்கத்தைநமக்கு உணர்த்துகிறது. தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையைக் காண்பிப்பது, ஆடம்பரம் இல்லாத எளிமையான ஓரிடத்தையும் காட்டுகிறது. கடவுளை எப்போதும் எளிமையான ஒரு சிறிய இடத்தில் மட்டுமே காணமுடியும். நம்மிடம் நெருக்கமாக வரவும், நம் இதயங்களைத் தொடவும், நம்மை மீட்கவும் கடவுள் இந்தச் சிறிய வழியைத்தான் தேர்ந்துகொள்கிறார். எனவே, தீவனத்தொட்டியில் பிறந்துள்ள கிறிஸ்து நம்முடன் நெருக்கமாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது. அவர் நமது உணவாகவேண்டும் என்பதற்காக அதில் தம்மை வெளிப்படுத்துகிறார். அவர் நம்முடன் எப்போதும் மிகவும் நெருக்கமாக இருக்கவும், விண்ணக அரியணையை விடுத்து ஏழ்மை நிலையில் தம்மை ஒரு தீவனத்தொட்டியில் வெளிப்படுத்தவும் திருவுளம்கொண்டார்.

பொதுவாக, நாம் யாரை அன்பு செய்கின்றோமோ அவர்களையே தேடிச்செல்கின்றோம். நாம் அன்பு செய்யும் ஒருவருக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கின்றோம். நாம் அன்பு செய்பவர்களைத் தேடிச்சென்று சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும் உறவாடுவதிலும் நம் உள்ளம் பெருமகிழ்ச்சிகொள்கின்றது. அதேபோன்று, இறைவன் நம்மைத் தேடி வருகின்றார். ஆம், விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகின்றது. தமது அளவுகடந்த அன்பினால் நம்மை அரவணைக்க வருகின்றார். தீவனத்தொட்டியைத் தேர்ந்தெடுத்த கடவுள், தாம் எவரிடமும் தூரமாக இல்லை என்பதைக் காட்டுகிறார். எந்த நிலை, எந்தச் சூழல், எந்த வறுமை இருந்தாலும், கடவுள் மனிதருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார் என்பதை இது காட்டுகிறது. ‘கடவுளின் நெருக்கம்கடவுள் உயர்ந்த அரண்மனைகளில் அல்லது பிரமிப்பூட்டும் இடங்களில் அல்ல; சாதாரண மக்கள் வாழும் எளிய இடங்களிலும்கூட வருகிறார்.

இரண்டாவதாக, தீவனத்தொட்டி வெளிப்படுத்தும் முக்கியமான செய்திகடவுளின் ஏழ்மை.’ இயேசு ஏழையாகப் பிறந்தார்; ஏழையாக வாழ்ந்தார்; ஏழையாகவே இறந்தார். தீவனத்தொட்டி- எளிமையின் உச்சமிது. தீவனத்தொட்டியைச் சுற்றி நின்றவர்களும் ஏழைகளே. அன்னை மரியா, யோசேப்பு, இடையர்கள் மற்றும் அனைத்து ஏழையரும்! இவர்கள் செல்வம் மற்றும் பெரும் எதிர்பார்ப்புகளால் அல்ல; மாறாக, அன்பால் மட்டுமே அங்கு ஒன்றுபட்டிருந்தனர். பணத்திலும் பதவியிலும் அல்ல; ஆனால், உறவுகளிலும் நபர்களிலும்தான் வாழ்க்கையின் உண்மையான செல்வங்கள் காணப்படுகின்றன என்பதைத் தீவனத்தொட்டியின் ஏழ்மை எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்து பிறப்பு விழாவை உண்மையிலேயே நாம் கொண்டாட விரும்பினால், புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தையின் வலுவற்ற எளிமையின் திருவுருவைக் காணவேண்டும்; அங்கே தான் இறைவன் இருக்கின்றார்.

எல் சால்வதோர் நாட்டின் பேராயராகப் பணிபுரிந்த புனித ஆஸ்கர் ரொமேரோ தன் மக்களுக்கு வழங்கிய கிறிஸ்துமஸ் செய்தியில் கூறிய வார்த்தைகள் இவை: “உண்மையில் ஏழையாக மாறாதவர்கள் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடமுடியாது. தன்னிடம் எல்லாமே உள்ளன, தனக்கு மட்டும் போதும் என்ற மனநிலையில் வாழ்பவர்களுக்கு இறைவன் தேவைப்படுவதில்லை; அவர்களுக்குக் கிறிஸ்து பிறப்பும் தேவைப்படுவதில்லை. ஏழைகள், பசியுற்றோர், தேவையில் இருப்போர்... இவர்களாலேயே கிறிஸ்து பிறப்பு விழாவில் பொருள் காண முடியும். அவர்களைத் தேடியே இம்மானுவேல் அதாவதுகடவுள் நம்மோடுஎன்ற பெயர் தாங்கிய இறைவன் வருவார்.”

எனவே, இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் நாம், நம்மைக் கடந்துசெல்வோரில் குறிப்பாக, எளியோர் மற்றும் உதவி தேவைப்படுவோரில் அவரைக் கண்டுகொள்ள அழைப்புப் பெற்றுள்ளோம். நம் மீட்பரின் நிச்சயமான வருகை குறித்து மகிழ்வதற்கு அழைப்புப்பெற்றுள்ள நாம், அந்த மகிழ்வைப் பிறருடன் பகிர்ந்து, ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் தனிமையில் இருப்போருக்கும் மகிழ்வின்றி வாழ்வோருக்கும் ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம்.

மூன்றாவதாக, தீவனத்தொட்டி வெளிப்படுத்தும் செய்திகடவுளின் தாழ்ச்சி.’ பெண்களுக்குள் பேறு பெற்ற, கடவுளின் அருளை அடைந்த அன்னை மரியா, ‘இதோ அடிமைஎன்று தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார். தான் கடவுளின் தாய் என்ற ஆணவத்திற்கு ஒருபோதும் இடம் கொடுத்ததேயில்லை. இத்தகைய ஒரு புண்ணியம் நிறைந்த தாழ்ச்சியைத் தீவனத்தொட்டி நமக்கு உணர்த்துகிறது. உலகினர் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த கடவுளின் மேன்மையான குணம் இவ்வகையில் வெளிப்பட்டது. எனவே, தீவனத்தொட்டியில் இருக்கும் இந்தக் குழந்தையைக் காணவேண்டுமெனில் அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று, நம்மையே அவருக்கு முன் தாழ்த்தவேண்டும்.

தாழ்ச்சி என்பது தன்னைப் பற்றிக் குறைவாக நினைப்பது அல்ல; மாறாக, ‘தான்என்ற எண்ணத்தைக் குறைப்பது. தாழ்ச்சி என்பது, தன் கருத்துகளை அடக்கி வைப்பது அல்ல; மாறாக, பிறரது கருத்துகளுக்கு மதிப்பு தருவது. தாழ்ச்சி என்பது, தன் திறமைகளை மறைப்பது அல்ல; மாறாக, பிறர் திறமைகளையும் பாராட்டுவது. தாழ்ச்சி என்பது, தன்னைப்பற்றிக் குறை கூறுவது அல்ல; மாறாக, பிறரின் குறையை மிகைப்படுத்தாமல் இருப்பது. தாழ்ச்சி என்பது, தன்னை விலக்கிக்கொள்வது அல்ல; மாறாக, பிறருக்கு முக்கியத்துவம் தருவது. தாழ்ச்சி என்பது, தனது உரிமைகளை விட்டுக் கொடுப்பது அல்ல; மாறாக, பிறரின் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பது. தாழ்ச்சியாய் இருப்பது என்பது, அடக்கமாக இருப்பது அல்லது கண்களை மூடிச்செபிப்பது அல்ல; மாறாக, அவமானங்களை ஏற்கும் திறனைக் கொண்டிருப்பது. தாழ்ச்சியுள்ளவர் இயேசுவைப் போன்று அவமதிப்புகளை ஏற்றுக் கொள்வார்.

நிறைவாக, தீவனத்தொட்டியில் படுத்திருக்கும் குழந்தையின் வடிவில் இறைவன் நமக்கு விடுக்கும் செய்தி: எங்கெல்லாம், அமைதியும் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதோ, அங்குள்ள குழந்தைகளின் முகங்களில், இயேசுவைக் காண வேண்டும். பாலன் இயேசுவைக் கைகளில் தாங்கி, தூக்கி, அரவணைக்கும் நாம் தாகமுற்றிருப்போரை, அந்நியரை, உடையின்றி இருப்போரை, நோயாளிகளை, கைதிகளை... அவரில் ஏற்று அரவணைக்கத் தயங்கக்கூடாது. இயேசுவின் பிறப்பு கொணர்ந்துள்ள பெரும் மகிழ்ச்சியை விளிம்புநிலை மனிதர் ஒவ்வொருவருக்கும் வழங்குவோம். பெத்லகேமின் சின்னக் குழந்தையின் அழுகை நம்மை உலுக்கி, நம் பாராமுகம் எனும் போக்கிலிருந்து நம்மை அகற்றி, துன்புறுவோர் குறித்து நம் கண்களைத் திறக்கட்டும். தீவனத்தொட்டியிலும் சிலுவையிலும் தமது ஒன்றுமில்லாத் தன்மையில் ஏழ்மையை வெளிப்படுத்திய இயேசுவைப்போல ஏழ்மை நிலையிலும் ஆதரவற்ற நிலையிலும் இருக்கும் அனைவரையும் அரவணைத்துக்கொள்வோம். தீவனத்தொட்டியில் இயேசு நமக்காகப் பிறந்துள்ளார். நாம் பிறருக்காகப் பிறப்போம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகள்!

news
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 21, 2025, திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 7:10-14; உரோ 1:1-7; மத் 1:18-24 - செவிமடு... ஆய்ந்துணர்... வாழ்வாக்கு..!

ஒவ்வொருவரும் இறைவனின் அழைப்புக்கு இயைந்தவகையில் வாழ்வதற்கு, ‘செவிமடுத்தல், ஆய்ந்துணர்தல் மற்றும் அவற்றை வாழ்வாக்குதல்என்ற மூன்று கூறுகள் உதவுகின்றன. நம் ஒவ்வொருவரின் அழைப்பும் வேறுபட்டதாக இருப்பினும், இறைவனிடமிருந்து வரும் அழைப்பின் குரலுக்குச் செவிமடுத்து, ஆய்ந்துணர்ந்து, அவ்வார்த்தைகளை வாழ்வாக்குவதன் வழியாக, நாம் மீட்பின் கருவிகளாக மாறவும் முழு மகிழ்வை நோக்கி நடக்கவும் உதவி பெறுகிறோம்.

இன்று திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு. இறைவனின் மீட்புத் திட்டத்தில் திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்டவராக, தன்னை எவ்விதத்திலும் முன்னிலைப்படுத்திக்கொள்ளாத நேர்மையாளரான புனித யோசேப்பு இன்றைய நாளின் கதாநாயகராகிறார். இன்றைய மூன்று வாசகங்களுமே இறைவனின் திருச்சொற்களுக்குச் செவிமடுத்து வாழ நம்மை அழைக்கின்றன.

சிரியாவும் இஸ்ரயேலும் யூதாவிற்கு எதிராகப் போர் செய்ய முயன்ற காலத்தில் நடந்த நிகழ்வை இன்றைய முதல் வாசகம் விவரிக்கின்றது. சிரியாவும் இஸ்ரயேலும் அசீரியாவிற்கு எதிராகப் போர் தொடுக்க முயன்றபோது, யூதாவையும் தங்களுடன் சேருமாறு கேட்டனர். ஆனால், அதற்கு யூதாவின் அரசன் ஆகாசு மறுக்கவே, இஸ்ரயேல் நாட்டு அரசர் பெக்காவும் சிரியா நாட்டு அரசர் இரட்சினும் (2அர 16:5; எசா 7:1) யூதாவின்மீது போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். இதனால் அரசர் ஆகாசும் நாட்டு மக்களும் பதற்றமடையவே (7:2), ஆண்டவர் எசாயா வழியாக, “நீ அமைதியாய் இரு; அஞ்சாதே (7:4) என்றும், “அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது; அது ஒருபோதும் நிறைவேறாது (7:7) என்று ஆகாசிடம் உரைக்கிறார். எசாயாவின் இவ்வார்த்தைகள் ஆகாசுக்கு ஆறுதல் அளித்திருக்கவேண்டும். ஆனால், அவர் ஆண்டவருடைய வார்த்தைகளை நம்ப மறுத்து, அசீரிய அரசர் மூன்றாம் திக்லத் பிலேசரின் உதவியை நாடுகின்றார் (2அர 16:7-9).

பிற அரசர்களைப்போலவே ஆண்டவர் முன்னிலையில் தீயவராகக் கருதப்பட்ட ஆகாசு, அதிகாரத்தில் நிலைத்திருக்கத் தன் சொந்த மகனையே வேற்றுத் தெய்வங்களுக்குப் பலியாக்கினான் (2அர 16:3). வேற்றுத் தெய்வங்களின் வழிபாடுகளை ஆதரித்தான் (16:4). இது ஆண்டவரின்மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, ஆண்டவருடைய வார்த்தையை மதிக்காமல் அசீரிய அரசரிடம் தஞ்சம் புகுவது இறுதியில் அவனுக்கே எதிராக அமைகிறது (2குறி 28:20-21). ஆண்டவரால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவருடைய உதவி எப்போதும் உண்டு. ஆனால், ஆண்டவரின் செயல்களில் நம்பிக்கை வைக்காமல் வேற்று மனிதரில் நம்பிக்கை வைத்தால் அல்லல்கள் அதிகமாகுமே தவிர குறையாது. அரசர் ஆகாசுவின் செயல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

இறைவாக்கினர் எசாயா ஆகாசிடம் இறைவனிடம் தஞ்சமடையக் கேட்டும், ஆண்டவரே அவனிடம் ஓர் அடையாளத்தைக் கேட்கச் சொல்லியும் அவன் அதைக் கேட்க மறுத்தான் (எசா 7:12). ஆகாசின் இச்செயல் சரியானதுபோலத் தோன்றினாலும் (கடவுளைச் சோதிப்பது ஒரு பாவம் - இச 6:16; மத் 4:7), ஆகாசு ஏற்கெனவே கடவுளின் வாக்கை மறுத்து, அசீரியரின் சொல்லைக் கேட்டதாலோ கடவுளிடம் அடையாளம் கேட்கத் தயங்கினான் என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும், உலகிற்கு வரவிருந்த இயேசுவையே ஆண்டவர் அவனுக்கு அடையாளமாய்க் கொடுத்தார் (7:14). ‘இம்மானுவேல்எனும் குழந்தையைப் பற்றிய இறைவாக்கு பலவழிகளில் புரிந்துகொள்ளப்பட்டாலும் மத்தேயு மற்றும் நம்மைப் பொறுத்தவரையில்இம்மானுவேல்என்றால்இயேசு ஆண்டவரே (மத் 1:25).

கடவுளின் திருவாக்கிற்குச் செவிகொடாமல் தனது நம்பிக்கையின்மையால் அசீரியாவின் கையாலே மடிந்த ஆகாசுக்கு (எசா 7,17: 8,1-10) மாற்றாக, ஆண்டவருடைய வார்த்தையை ஆழ்ந்து கேட்பவராகவும், அதைத் தியானிப்பவராகவும், நம்பிக்கையின் மாதிரியாகவும் வாழ்ந்த புனித யோசேப்பு நமக்கான இன்றைய மாதிரி.

இறைவனின் மீட்புத்திட்டம் நிறைவேற தனது தூக்கத்தைத் தொலைத்தவர் யோசேப்பு. “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம். ஏனெனில், அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான் (மத் 1:20) என்று தனது கனவுகளில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தைகளைத் தீர்க்கமனம் கொண்டு தீவிரமாய்ச் செயல்படுத்தினார். மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒருசில நாள்களில், மரியாகருவுற்றிருந்ததுதெரியவரவே, ஒரு சாதாரண மனிதர் எதிர்கொள்ளும் அத்தனை கேள்விகள் மற்றும் ஐயங்களுக்கு மத்தியில் இறைவனின் மீட்புத்திட்டத்திற்காகத் தன்னையும் கறைபடுத்திக் கொள்ளாமல், கருவில் இயேசுவைச் சுமந்தவராய், கலக்கமுற்ற நிலையில் இருந்த அன்னை மரியாவையும் கறைபடுத்திவிடாமல், திருக்குடும்பத்தின் தூணானார்.

மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு மூன்று முறை கனவுகள் வழியாகச் செய்தியைப் பெறுகிறார். முதலில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படியாகவும் (மத் 1:18-24), இரண்டாவதாக, இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளங்குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்குச் செல்லும்படியாகவும் (மத் 2:13-14), மூன்றாவதாக, ஏரோது இறந்து விடுகிறான்; எனவே, மீண்டும் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்பும்படியாகவும் (மத் 2:19-21) ஆண்டவரின் தூதரிடமிருந்து செய்தி வருகிறது. முதலில் அவருக்குக் கனவில் கிடைத்த செய்தி நம்பமுடியாத, அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தபோதிலும், அதுநல்ல செய்திஎன்று நம்பினார். இரண்டாவதாக, கடினமான சூழல்களிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்ட யோசேப்பு அதை உடனே செயல்படுத்தினார். கனவில் ஆண்டவரின் தூதர் அவருக்குப் பணித்தவாறேதன் மனைவியை ஏற்றுக்கொண்டார் (மத் 1:24) என்ற இறைவார்த்தைகள் அவர் ஒரு நேர்மையாளர் என்பதற்குச் சான்றுபகர்கின்றன. ஆகவே, புனித யோசேப்பை மரியாவின் கணவர், இயேசுவின் தந்தை, திரு அவையின் காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர், கனவுகளின் காவலர்... எனப் பல வழிகளில் வாழ்த்திப் பெருமைப்படுத்துகிறோம்.

கடவுள் இறைவாக்கினரின் வாயிலாகப் பல முறை எச்சரித்தும் அவற்றிற்குச் செவிமடுக்காத ஆகாசைப் போலல்லாமல் (எசா 7:10-14), தன் கனவில் கூறப்பட்டவற்றை மனதார நம்பிச் செயல்பட்டார் யோசேப்பு. கடவுளை நம்மோடு இம்மானுவேலாகத் தங்கவைத்தார். கிறித்தவ வாழ்வு என்பது கடவுளின் குரலுக்குச் செவிமடுத்து, அதை ஆய்ந்துணர்ந்து, வாழ்வாக்கும் வாழ்வுமுறை என்பதையே புனித யோசேப்பு தந்தையிடமிருந்து நாம் கற்றுக்கொள்கின்றோம். ‘தூங்கும் புனித யோசேப்புஎனும் பக்திமிகு வாழ்வுமுறையை உள்வாங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், “கிறித்தவ வாழ்வு உண்மையிலேயே மிகவும் எளிதானது. இயேசுவே நம் வாயில்; அவர் நம் பாதையை வழிநடத்துகிறார்; அவரின் குரலுக்கு நாம் செவிசாய்க்கவேண்டும்எனும் கூற்று உள்ளபடியே எண்ணிப்பார்க்கத்தக்கதே (மறையுரை, 18.04.2026).

திருவிவிலியத்தில் ஆண்டவரின் திருவார்த்தைகளுக்குஆம்என்ற பதிலிறுப்பைக் கூறுவோரின் தொடர் ஆபிரகாமில் தொடங்கியது. அவரைத் தொடர்ந்து தலைமைப் பணிக்கு அழைக்கப்பட்ட மோசேவும் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையால், ‘ஆம்என்ற பதிலை அளித்தார். வானதூதரின் செய்திக்கு இளம்பெண் மரியா கூறியஆம்என்ற பதில், தொடர்ந்து யோசேப்பு, கெத்சமனி தோட்டத்தில் துன்பக் கிண்ணத்தை ஏற்பதற்கு இயேசு கூறியஆம்என்ற பதில்வரை தொடர்ந்தது. கிறிஸ்து பிறப்பு நெருங்கி வரும் இவ்வேளையில், நாம் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்புக்குஆம்என்று பதிலிறுக்க விரும்புறோமா? அல்லது ஆதாம், ஏவாளைப் போல் நம்மையே மறைத்துக் கொண்டுமுடியாதுஎன்று கூறப்போகிறோமா? என்ற கேள்வியை இன்று நம்மில் எழுப்புவோம். கடவுளுடைய வார்த்தைகள் நம் வாழ்வைத் தொடுகின்றன, வடிவமைக்கின்றன, தீமையிலிருந்து விடுவிக்கின்றன மற்றும் அவை நம்மில் மகிழ்வை ஏற்படுத்துகின்றன. எனவே, இறைவனின் திருச்சொற்களுக்குச்  செவிமடுக்கவேண்டும் என்பதை மரியா, யோசேப்பின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம்

இந்த உலகம் ஒவ்வொரு நாளும், உனது பிரச்சினைகளுக்குப் பதில்களைத் தந்துகொண்டே இருக்கின்றது. செவிமடுக்கக் கற்றுக்கொள்என்று கூறுகிறார் ஓர் அறிஞர். இன்றைக்கு நம்மில் பலர் புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்பதில்லை; மாறாக, பதில் கூறவேண்டுமென்ற சிந்தனையோடே கேட்கின்றோம். நாம் வாழ்வில் முன்னேறவும், நம் குடும்பங்களிலும் சமூகத்திலும் வாழ்வோர் மகிழ்வான மாண்புடைய வாழ்வு வாழ செவிமடுத்தல், உன்னிப்பாக உற்றுக்கேட்டல் மிகவும் அவசியம். எனவே, ஏழைகளின் குரலுக்கு, இயற்கையின் குரலுக்கு, பிறக்கின்ற பாலன் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்கக் கற்றுக்கொள்வோம்.

உண்மையிலே, நாம் இறைவார்த்தைக்கு மனதார செவிமடுத்து வாழ்ந்தால், அவை நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருக்காது (எசா 55:10-11). ஆம், இறைவனின் வார்த்தைக்குச் செவிமடுத்து, ஆய்ந்துணர்ந்து அதன்படி வாழும் போது நம் வாழ்வும், நம்முடன் வாழ்வோர் வாழ்வும் மகிழ்வாய் அமையும். கிறிஸ்துமஸ் காலத்திலும் புலரும் புத்தாண்டிலும் கடவுளின் வார்த்தையைச் செயல்படுத்தி, அவரை நம்மோடு தங்கவைப்போம்.

news
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 14, 2025, திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 35:1-6,10; யாக் 5:7-10; மத் 11:2-11 - ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்!

ஒவ்வொரு மனிதச் செயலின் அடிப்படை இலக்காக இருப்பது மகிழ்ச்சியே! “மகிழ்ச்சிக்குப் பாதை இல்லை, மகிழ்ச்சியே பாதைஎன்பார் புத்தர். “நம் வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதுதான்என்கிறார் தலாய் லாமா. மகிழ்ச்சி என்பது ஒருவரின் வெற்றியையும் தோல்வியையும்- நன்மையையும் தீமையையும் சார்ந்ததல்ல; அது மனம் சார்ந்த உணர்வுநிலை. அனைத்தையும் கடந்து வாழும் இறைவனில் ஒருவர் இணைந்துள்ளதால் ஏற்படும் சலனமற்ற உணர்வுநிலை. கிறிஸ்துமஸ் விழாவிற்கு இன்னும் பத்து நாள்கள் இருக்கும் இவ்வேளையில், நாம் மகிழ்ச்சியில் திளைக்கவும், அதில் ஆழப்படவும் திரு அவை இன்று நம்மை அழைக்கின்றது.

இன்று திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு. இந்த ஞாயிறைGaudete Sundayஅதாவது, ‘மகிழும் ஞாயிறுஎன்று கொண்டாடுகிறோம். மனித சமுதாயம் என்ற குடும்பத்தில் இறைவன் ஒரு குழந்தையாய்ப் பிறக்கவிருப்பதை மகிழ்வுடன் நாம் எதிர்பார்க்க இன்றைய ஞாயிறு நம்மை அழைக்கிறது.

இன்றைய வழிபாட்டின் தொடக்க வருகைப் பல்லவியில் இடம் பெறும் புனித பவுலின் வார்த்தைகள்: “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார் (பிலி 4:4-5). ‘மகிழ்வு என்றால் என்ன?’ கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நெருங்கிவரும் இவ்வேளையில், மகிழ்வு கண்ணைக் கவரும் வெளிப்புற அலங்காரங்களிலும் ஆடம்பரங்களிலும் இருப்பதாக வர்த்தக உலகம் நம்மீது திணிக்க முயலும் தவறான எண்ணங்களில் விழாமல், இயேசு காட்டும் வழியில் பயணிக்கும்போது அகமகிழ்ச்சி ஏற்படும் என்பதை இன்றைய மூன்று வாசகங்களும் கற்றுத்தருகின்றன.

இரண்டாம் எசாயா பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், மெசியா காலத்தில் நிகழ இருப்பவை எவை என்பன குறித்து முன்னறிவிக்கின்றன. அசீரியப் படை யூதாமீது படையெடுத்து வந்த பொழுது, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, வேற்று நாட்டினரான எகிப்தியரின் உதவியை நாடினார்கள். யாவே ஆண்டவரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காதது அவர்கள் செய்த குற்றம். மேலும், தாங்கள் ஆண்டவரோடு நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டார்கள். ஆனால், உண்மையில் அவ்வாறு இல்லை. அவர்களுடைய வழிபாடுகள் வெறும் வெளிவேடங்கள்தாம். எனவேதான் ஆண்டவர் அவர்களைக் கண்டிக்கிறார் (எசா 29:13-14). ஆண்டவருடைய கண்டிப்பு என்பது அவர்களை அழிப்பதற்காக அல்ல; மாறாக, அவர்கள் இறைவன் பக்கம் திரும்பி வருவதற்காகவே.

நம்பிக்கையில்லாத தன்மை, கடவுளால் கைவிடப்பட்ட உணர்வு, அரசரின் துரோகம், அரசின் பலவீனம், அசீரியரின் அச்சுறுத்தல் மற்றும் வட அரசான இஸ்ரயேலின் அழிவு, இவற்றிற்கு மத்தியில் சீயோனின் மேன்மைமிகு வருங்காலத்தைப்பற்றி எசாயா எடுத்துரைக்கிறார். வருங்காலத்தில் எருசலேமுக்கு ஆண்டவருடைய மீட்பு உண்டு என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார். பாலைநிலம் போல் ஆகிவிட்ட ஏதோமில் மறுபடியும் வாழ்வு துளிர்க்கும்; அமைதி திரும்பும்; மனிதர்களின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பும் (எசா 35:1-2) என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

பார்வையற்றோர் பார்வை பெறுவர், காது கேளாதோர் கேட்பர், கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்என எசாயா முன்னறிவித்துள்ள வாக்குகள் (35:5-6), மெசியாவின் காலத்து அடையாளங்கள். எசாயாவின் இந்தக் கனவு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. மேலும், ‘ஒடுக்கப்பட்டோரின் நிலை மாறும். மக்கள் ஆண்டவரிடம் திரும்பி வருவர்; அவரில் அகமகிழ்வர். அன்பும் அமைதியும் நீதியும் நேர்மையும் கொண்ட ஒரு புதிய சமுதாயம் உருவாகும் (29:17-19) எனும் எசாயாவின் வாக்குகள் இயேசுவில் நனவாகின்றன. இதை நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

திருமுழுக்கு யோவான் தனது இறைவாக்குப் பணியின் விளைவாகச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன் சீடரை இயேசுவிடம் அனுப்பி இயேசுவின் பணியைப் பற்றி உறுதி செய்துகொள்கிறார். “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்கவேண்டுமா?” (மத் 11:3) எனும் திருமுழுக்கு யோவானுடைய சீடர்களின் கேள்வி, திருமுழுக்கு யோவான் இயேசுவை அறியாததாலோ அல்லது நம்பாததாலோ எழுந்ததல்ல; மாறாக, தன்னுடைய சீடர்களே இயேசுவின் உண்மை நிலையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் எனப் புரிந்துகொள்ளலாம். இயேசு சீடர்களின் கேள்விக்கு வெளிப்படையாகப் பதில் கூறாமல், மெசியாவின் பணிகளைப் பற்றி ஏற்கெனவே கூறப்பட்ட இறைவாக்கின் நிறைவே தமது பணி என்று பேசுகிறார் (எசா 35:5-6). அதாவது, தம் வல்ல செயல்களால் நோயுற்றோர் நலம்பெறுவதே தமது நற்செய்திப் பணி என்று கூறுகிறார்.

யோவானின் சீடர்கள் சென்றபின் இயேசு யோவானைப் பாராட்டிப் பேசுகிறார். நாணலும் மெல்லிய ஆடைகளும் திருமுழுக்கு யோவான் வாழ்ந்த யோர்தான் பாலைநிலத்தையொட்டிய அரச மாளிகைச் சொகுசுகளின் அடையாளங்கள். ஆனால், யோவானுக்கு இவற்றில் ஈடுபாடு இல்லை (மத் 11:8). அவர் அரச மாளிகையைக் கண்டித்து இறைவாக்கு உரைத்தவர் (11:9). மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர் (11:10). அவர் இயேசுவின் முன்னோடி என்ற காரணத்தால் இறைவாக்கினருக்கும் மேலானவர். இதனால் அவர் மனிதருள் சிறந்தவர் (11:11) என இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்துச் சான்று பகர்கிறார்.

திருமுழுக்கு யோவான்தான் வரவேண்டிய எலியா என மக்கள் கருதி, அவரை அவர்கள் தேடி வந்தபோது, அத்தருணத்தைத் தனக்கு ஏற்றதாக்கிக் கொண்டு, பெயரும் புகழும் பெறுவதற்குப் பதில், தான் உலக மீட்பர் அல்லர்; அந்த மீட்பர் வரும் வழியைக் காட்டும் கைகாட்டி மட்டுமே என்பதைத் திருமுழுக்கு யோவான் வெளிப்படையாகக் கூறினார். நெருக்கடி, அடக்குமுறை, கைது, கொலை இவற்றிற்கு மத்தியிலும் ஆண்டவருக்குள் இணைந்து வாழ்பவரால் மகிழ்ந்திருக்க முடியும் என்பதற்குத் திருமுழுக்கு யோவான் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு கூற விளையும் செய்தியும் இதுதான். ஆங்கிலத்தில்பர்ன் அவுட் (burn Out) என்ற ஒரு சொல் உண்டு. ஒரு நபர் நிறைய வேலைகள் செய்ய முயன்று மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்ந்து வீழ்வதை அல்லது உடலும் மனமும் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் சொல் இது. எப்போதுமே பரபரப்பாக வாழும் நம்மை, சற்று நிதானமாகச் செயல்பட்டு, பொறுமை, அன்பு, நம்பிக்கை ஆகிய பண்புகள் நம்மை மகிழ்விற்கு இட்டுச்செல்கின்றன என்கிறார் யாக்கோபு.

தொடக்கத் திரு அவை வேதகலாபனை மற்றும் நெருக்கடியை அனுபவித்த வேளையில் எழுதப்பட்ட இந்நூல் பொறுமையோடு இருந்து இயேசுவை ஏற்றுக்கொள்வதா? அல்லது உலகத்தோடு சேர்ந்து இயேசுவை மறுதலிப்பதா? என்ற முக்கியக் கேள்விக்கு விடையளிக்கிறது. “பொறுமையோடிருங்கள்; உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள்; ஏனெனில், ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது (யாக் 5:8) என யூதக் கிறித்தவர்களைத் திடப்படுத்துகிறார் யாக்கோபு. அவரின் போதனை நமக்கும் பொருந்திச்செல்லும்.

ஒருவர் துன்புறுத்தப்படும்போது முதலில் இழப்பது பொறுமையே. தொடக்கக் காலத் திரு அவை தனது வேதகலாபனைக் காலங்களிலும் முதலில் இழந்தது பொறுமையே. அதனுடைய நீட்சிதான்ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடுதல் (5:9). எனவேதான்துன்பத்தைத் தாங்குவதில் பொறுமையைக் கடைப்பிடிக்க... (5:7,8,10) என்று மூன்று முறை அழைப்புவிடுக்கும் யாக்கோபு, பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா, ஆமோஸ், ஓசேயா, யோனா போன்று ஆண்டவருக்குள் மகிழ்ந்து வாழ அழைக்கிறார்.

இன்றைக்கு மன அழுத்தம் நிறைந்த பரபரப்பான உலகில் வாழும் நாம் சந்திக்கும் பிரச்சினைகளுடன் எப்படி மகிழ்ந்திருக்க இயலும்? பெரும்பாலும் நமக்கு நம்மிடம் இல்லாதவை குறித்த வருத்தம் அதிகமாக இருக்கிறதே தவிர, இருப்பதைக் குறித்த மகிழ்ச்சி இல்லை. ‘உள்ளதை அனுபவித்து மகிழ்பவரே உண்மையான செல்வந்தர்என்பது யூதப் பழமொழி. முதலில், இல்லாதவருடன் இருப்பதைப் பகிர்வது, நமது நன்மைகளைப் பிறருடன் பகிர்ந்து அவர்கள் வாழ்வில் மாற்றம் காண்பதே உண்மையான மகிழ்ச்சியின் காரணிகள்.

இரண்டாவதாக, போர்களாலும் வன்முறைகளாலும் மதவாத அடக்குமுறைகளாலும் அறமற்ற வாழ்வுமுறையாலும் இயற்கை அழிப்புகளாலும் இந்த உலகம் கெட்டுவிட்டது என்ற நம்முடைய எதிர்மறை எண்ணங்கள், மகிழ்வை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்றன. துன்பங்கள், இழப்புகள், சோதனைகளுக்கு மத்தியிலும் நம்மைச் சுற்றி வாழும் நல்லவர்கள், சுற்றி நிகழும் நல்ல நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டு மகிழ்வோம்.

நிறைவாக, இறைவேண்டல் செய்வதற்கும், நன்றியுணர்வோடு வாழ்வதற்கும், இறைவனின் வழித்தடத்தில் அவரோடு பயணிக்கவும் நேரம் ஒதுக்குவோம். நம்மீது கொண்ட அன்பினால் மனிதனாகப் பிறந்து, நம்மோடு இணைந்த இறைவனோடு நாமும் இணையும்போது, மகிழ்ச்சி இயல்பாகவே நம் வாழ்வில் வெள்ளமெனப் பாய்ந்தோடும்.

news
ஞாயிறு மறையுரை
டிசம்பர் 07, 2025, திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 11:1-10; உரோ 15:4-9; மத் 3:1-12 - மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது!

திருவருகைக் காலம் என்பது நம் உள்ளங்களில் பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காக நம்மையே தயார் செய்யும் காலம். இது கிறிஸ்து பிறப்பின் உண்மைப்பொருளை உணர்வதற்கு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல காலம். “பாவங்களை அறிக்கையிட்டு, கடவுளின் மன்னிப்பை வரவேற்று, மனம் புண்படச் செய்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அக விடுதலையை அனுபவிக்க அருள்தரும் காலமே திருவருகைக் காலம்என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் (டிச. 4, 2022). திருவருகைக் காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், இறை-மனித உறவில் உள்ள பிணக்குகளை மனமாற்றத்தின் வழியாகச் சரிசெய்து சமத்துவத்தைப் பேணவேண்டும் என்று அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய வாசகங்களில் இறைவாக்கினர் எசாயாவும் திருமுழுக்கு யோவானும் மனமாற்றத்தின் வழியாகப் பெறப்போகின்ற புதிய வாழ்வைக் குறித்து உரையாடுகின்றனர். தம்மை மீட்க வரவிருக்கும் மெசியாவின் வருகைக்குக் கரடுமுரடுமானதும் கோணலுமாணலுமான, குண்டும்குழியுமான பாதையைச் செம்மைப்படுத்த மனம்வருந்தி மனமாற்றம் பெற இறைவாக்கினர் எசாயா அழைப்புவிடுக்கிறார். இயேசுவின் பணிவாழ்வுக்கு முன் மக்களைத் தயாரித்த திருமுழுக்கு யோவான் இயேசுவின் பிறப்பிற்கு நம்மையும் தயாரிக்கிறார்.

முதல் வாசகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதி, ஒரு நீதியுள்ள அரசரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது பகுதி, மெசியாவின் வருகையில் வெளிப்படும் உண்மையான சமத்துவம் எது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

ஒரு நீதியுள்ள அரசரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி எசாயாவின் முதல் பகுதி (11:1-5) நமக்கு விவரிக்கின்றது. ஈசாய் என்பவர் தாவீதின் தந்தை. எசாயாவின் வார்த்தைகள் (11:1) ஈசாயின் மகன் தாவீதையும், அவரது வழிமரபில் தோன்றிய இயேசு கிறிஸ்துவையும் குறிப்பதாக உள்ளன. இவர் உண்மையில் கடவுளின் மனிதரே. அடிமரத்திலிருந்து தளிர் வருதல் மற்றும் வேரிலிருந்து கிளை வருதல் என்பது அழிவிலிருந்தும் வாழ்வைத் தரக்கூடியவர் கடவுள் என்னும் பொருளைக் காட்டுகிறது. தாவீதின் வழி மரபில் வந்தவர்கள் எல்லாரும், தாவீதுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதிகளைப் பெறாமலே போயினர். ஆனால், இனி வருபவர் புதிய தாவீதாக அவர் தந்தையிலிருந்து வருவார். வெட்டி வீழ்த்தப்பட்ட யூதாவிலிருந்து நீதியுள்ள அரசர் வருவார். ஆண்டவர் தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதி நிலைநிறுத்தப்படும் என எசாயா முன்னறிவிக்கிறார்.

அரசர் தாவீதின் காலத்திற்குப் பிறகு தாவீதைப்போல ஓர் அரசரை மக்கள் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பே பின்னாளில் மெசியாவைப் பற்றிய எதிர்பார்ப்பிற்கு அடிப்படையாக அமைந்தது. இப்பகுதியில் எசாயா, ஆண்டவரின் ஆவியின் பலன்களாக, ஆறு நற்பண்புகளைக் குறிப்பிடுகின்றார். அவை, ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி மற்றும் ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு. இப்படியான பண்புகள் கொண்ட அரசன் இப்போது இல்லை எனவும், நேர்மையையும் உண்மையையும் இடைக்கச்சையாக அணிந்துள்ள அரசர் தோன்றுவார் எனவும் எசாயா முன்பே உணர்ந்திருந்தார் போலும்.

இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதி, நீதியுள்ள அரசரின் வருகையின்போது நிலவும் சமத்துவத்தைப்பற்றி எடுத்துரைக்கிறது. மெசியாவின் வருகையில் ஒரு புதிய ஆட்சி மலரும்; அது ஒரு பொற்காலமாக இருக்கும்; அன்பும் அமைதியும் சமத்துவமும் மக்களிடையே நிலவும். இது நிறைவேறும் என ஒரு மாற்றுச் சமுதாயக் கனவு காண்கிறார் எசாயா (11:6-8)

ஓநாய்-செம்மறி ஆடு, சிறுத்தைப் புலி-இளம் ஆடு, சிங்கக்குட்டி-கன்று, பசு-கரடி என எசாயா வரிசைப்படுத்தும் விலங்குகள் சேர்ந்து வாழமுடியாதவை. தொடர்ந்து  கரடி, பசு மாட்டோடு மேயும்; சிங்கம் மந்தையைப்போல் வைக்கோல் புசிக்கும்; பால்குடி மறவாத குழந்தை விரியன் பாம்பின் வளைக்குள் கையைவிடும் என மெசியாவின் ஆட்சியின் சிறப்பை அடையாள ரீதியாகக் குறிப்பிடுகின்றார் எசாயா. எதிரும் புதிருமான தன்மைகொண்ட விலங்கினங்கள் தங்கள் கொடிய இயல்பை விடுத்து, படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஏற்படுத்திய இறை-மனித-உயிரின சுமூக உறவிற்குத் திரும்புவர் என்ற ஆழமான அர்த்தத்தை எசாயா இங்கே கொடுக்கிறார். மனித மனங்களில் புதைந்துகிடக்கும் சமத்துவம், சகோதரத்துவம், கருணை, அன்பு என்ற இறைத்தன்மை மேலோங்கி வரவேண்டும் என்பதே எசாயாவின் கனவு. எசாயா குறிப்பிடும் இந்த இயல்புநிலை மாற்றம், மனமாற்றம் நீதியுள்ள அரசரின் வருகையின்போது மீண்டும் உருவாகும் என நம்புகிறார்.

எசாயா கண்ட கனவை இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துகிறார். திருமுழுக்கு யோவான் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்; “எனக்குப் பின்வருபவரின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவராய்...” (யோவா 1:27) தாழ்மையின் நிலையை ஏற்றவர்; மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர். ஒட்டக மயிராடை, தோள்கச்சை, வெட்டுக்கிளி, காட்டுத் தேன் போன்றவற்றைக் குறிப்பிட்டு, அவரை இரண்டாவது எலியாவாகச் சித்தரிக்கின்றார் மத்தேயு.

இன்றைய நற்செய்தியில் யோவான், “மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது (மத் 3:2) எனப் போதிக்கிறார். வெளி வேடத்திற்குப் பெயர்போன பரிசேயர்களும் சதுசேயர்களும் தாங்கள் மனம்மாறத் தேவையில்லை என்ற மனநிலையோடு அவரை அணுகியபோது அவர் அவர்களுக்குச் சவால் விடுத்தார். இத்தகைய மனநிலையும் இரட்டைவேடமும் ஒரு புதிய வாழ்வைத் தொடங்குவதற்கும், கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்வதற்குமான வாய்ப்பை வழங்காது. எனவே, கடவுளை வரவேற்பதற்குமனம் வருந்துதல்மிக முக்கியம். ஆகவேதான் திருமுழுக்கு யோவான்மன மாற்றத்தை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்என்கிறார் (மத் 3:8).

மனமாற்றம் (Conversionஎன்ற வார்த்தையின் பொருள் வாழ்க்கைமுறை மாற்றம் என்பதாகும். தீமைகள் நிறைந்த உலகில் தீமைகளைத் தவிர்த்தல் மட்டுமல்லாதுதீமைகளை எதிர்த்து வாழும் புதிய வாழ்க்கை முறையே மனமாற்றம் ஆகும். அதாவது, தீய பிரிவினை நாட்டங்கள் மறைவதும் நீதி, உண்மை, அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்தல் எனும் இறையாட்சித் தன்மையில் ஒளிர்வதுமே உண்மையான மனமாற்றம். மனமாற்றத்திற்கான கிரேக்க வார்த்தையானMetanoiaஎனும் சொல் பாவங்களையும் பாவ வாழ்வையும் விட்டு விலகுவது மட்டுமல்ல, தீய வழிகளை விட்டு விட்டு ஆண்டவரை நோக்கி நெருங்கி வருவதைக் குறிக்கிறது.

அடிப்படையில் மனமாற்றம் என்பது இரு பொருள் கொண்டது. ஒன்று, தீமைகளைத் தவிர்த்து நன்மை செய்வது; மற்றொன்று, பாவ வாழ்விலிருந்து விடுபட்டு வாழும் உயிருள்ள கடவுளை நோக்கித் திரும்பி வருவது. எனவே, இயேசுவின் வருகையை எதிர்நோக்கித் தயாரிப்புடன் காத்திருக்கும் இத்திருவருகைக் காலத்தில் நாம் மனமாற்றத்தின் வழியே இயேசுவை நோக்கித் திரும்புவதே இறையாட்சியில் பங்குபெற, இயேசுவைச் சந்திக்கத் தகுந்த, சரியான வழியாகும்.

ஆகவே, எசாயா மற்றும் திருமுழுக்கு யோவான் கண்டமாற்றுச் சமுதாயம்என்பது நீதியும் நேர்மையும் அன்பும் அறனும் அமைதியும் எளியவரை ஏற்றலும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறையாகும். அத்தகைய ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் தொடர்ந்து உழைக்க வேண்டியுள்ளது. நாமும் நமது அன்றாட வாழ்வில் வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் ஒன்றிணைந்து வாழும் இறையாட்சிக்கான இயேசுவின் கனவை நனவாக்க முற்படவேண்டும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒற்றுமையின் தேவையையும் நீதியையும் பற்றி விளக்கும் பவுல், இயேசுவிற்குயூதரன்றோ யூதரல்லாதவரென்றோ இல்லை; அவர் அனைவரையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எவ்விதத்திலும் தகுதி இல்லாத பாவிகளாகிய நம்மை அவர் ஏற்றுக்கொண்டது போல, நாமும் நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் பிறரை ஏற்றுக்கொள்வது மட்டுமே கடவுளைப் பெருமைப்படுத்தும்என எடுத்துரைக்கிறார்.

ஆகவே, பழைய ஏற்பாட்டு மக்கள் எசாயாவின் வார்த்தைகளை நம்பி மெசியாவின் வருகைக்குத் தங்களையே தயாரித்ததுபோல, ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும் நாம் பழைய பாவ வாழ்க்கை முறையை விலக்கி, புதிய வாழ்க்கை முறையைத் தழுவிக்கொள்வோம். நல்லவை நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் தொடங்கியுள்ள திருவருகைக் காலத்தில் மீட்பரின் வருகையை, அர்த்தமற்ற வழிகளில் எதிர்பார்க்காமல், தனக்குள் தொடங்கும் மாற்றங்களை ஏற்றுக்கொண்ட அன்னை மரியாவைப்போல மாசற்ற வழியில் பயணிப்போம். அமல அன்னையின் பரிந்துரையாலும் வழிநடத்துதலாலும் நாம் திருவருகைக் காலத்தில் இறைவனின் வருகையையும், கிறிஸ்துமஸ் பெருவிழாவின் முழுப்பொருளையும் உணர்ந்து வாழும் வரம் வேண்டுவோம்.

மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது!” என்ற தொனியில் ஒலிக்கும் திருமுழுக்கு யோவானின் குரல் இன்று நம் செவிகளுக்கு எட்டட்டும்!

news
ஞாயிறு மறையுரை
நவம்பர் 30, 2025, திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (முதல் ஆண்டு) எசா 2:1-5; உரோ 13:11-14; மத் 24:37-44 - நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்; விழிப்பாக இருப்போம்!

இன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும் திருவருகைக் காலத்துடன் ஒரு புதிய வழிபாட்டு ஆண்டைத் துவக்குகிறோம். வருகிற நான்கு வாரங்களிலும், இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுமாறு நம்மை அழைக்கின்ற திருவழிபாடு, அவர் நம் வாழ்வில் அன்றாடம் வருகிறார் என்றும், இறுதி நாள்களில் மாட்சியுடன் மீண்டும் வருவார் என்றும் நினைவூட்டுகிறது.

திருவருகைக் காலம் என்பது எதிர்பார்ப்பின் காலம். நம்பிக்கையை நம் உள்ளங்களில் விதைக்கும் காலம். இது அருளின் காலம்! கடவுள் நமக்குச் செய்துள்ள, செய்கின்ற, செய்யவுள்ள வாக்குறுதிகளை நமக்கு நினைவுபடுத்தும் காலம்! திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நம்மிடையே குடிகொள்ளும் நோக்கத்தில் வானிலிருந்து இறங்கி வந்த இறைவனின் நெருக்கத்தை அதிகமதிகமாக உணரும் காலம் (ஞாயிறு மறையுரை, 30.11.2020).

திருவருகைக் காலம் என்பது இரண்டு முக்கிய நோக்கங்களை வலியுறுத்துகிறது: முதலாவதாக, கிறிஸ்துவின் முதல் வருகையின் நினைவாய் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நம்மைத் தயாரிக்கும் காலமாகவும் இரண்டாவதாக, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நம்பிக்கையோடு எதிர்நோக்கி நம் வாழ்வை மாற்றி அமைத்துக்கொள்ள அருளப்படும் காலமாகவும் திருவருகைக் காலம் அமைகிறது. எனவே, இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது. திருவருகைக் கால முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் 16-ஆம் நாள் வரை உள்ள நாள்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தயாரிப்பு நாளாகவும், டிசம்பர் 17 முதல் 24 உள்பட வரும் வாரநாள்கள் கிறிஸ்து பிறப்புக்கு நேரடி முன்னேற்பாடாகவும் அமைகின்றன.

கிறிஸ்துவின் முதல் வருகையை ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களைப்போல், அவரின் இரண்டாம் வருகையைப் புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம்எச்சரிக்கையாகவும்-விழிப்பாகவும்இருந்து எதிர்நோக்கவேண்டும் என்பதே இந்தத் திருவருகைக் காலத்தின் மையக் கருத்து. இக்கருத்தை மையப்படுத்தியே இன்றைய வாசகங்களும் இறுதிக்காலத்தைப் பற்றி எடுத்துரைத்து, நாம் மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, மெசியாவின் காலத்தில் நிகழவிருப்பன பற்றி எடுத்துரைக்கின்றார். இவ்வாசகத்தில் கடவுள் தரும் முடிவில்லா அமைதியைப் பற்றி எசாயா இறைவாக்குரைக்கிறார். ‘இறுதி நாள்களில் மக்களினங்கள் யாவே இறைவனை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்என்கிறார் எசாயா. அவர்கள் இங்கு வருவதன் நோக்கம்ஆண்டவரின் வழிகளைக் கற்றுக்கொள்வதே.’ எல்லா மக்களும் யாவே இறைவனைத் தேடி வருவதால், ‘யாவே அனைவருக்கும் ஆண்டவர்என்ற கருத்து இங்கே வலியுறுத்தப்படுகிறது. எனவே, யாவே ஆண்டவரின் வழியில் அவருடைய கட்டளைகளைக் கேட்டு மக்கள் நடக்கும்போது அமைதியில் அவர்கள் வாழ்வார்கள் என எசாயா எடுத்துரைக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் நமக்கான அழைப்பு என்பது, ஆண்டவரின் மலைக்குச் செல்லவேண்டுமெனில், அழிவுக்கு இட்டுச் செல்லும் செருக்கையும் ஆணவத்தையும் விட்டுவிடவேண்டும் என்பதுதான். மனிதரில் வெளிப்படும் செருக்கும் ஆணவமும் அழிவுக்கானவை. இவை பல வழிகளில் மனிதரைச் சிறுமைப்படுத்துகின்றன (5:11); கடவுளை அறியவோ, அவருக்குப் பணிவிடை புரியவோ விடாமல் மனிதரைத் தடுத்துவிடுகின்றன. ஆகவே, இன்று இவற்றிலிருந்து விடுபட்டு, கிறிஸ்துவை நோக்கிப் பயணம் செய்யும் உளப்பாங்கை நாம் பெறவேண்டும். இயேசு நம் நடுவில் அமைதியை விதைக்க வருகிறார். அவரை நோக்கிப் பயணம் செய்யும் நாம் அமைதியை நம்மில் ஏந்தவேண்டும். வாள்கள் கலப்பைக் கொளுக்களாகவும், ஈட்டிகள் கருக்கரிவாள்களாகவும் மாறவேண்டும் (2:4).

இன்றைய நற்செய்தியில் இயேசு இறுதித் தீர்ப்புப் பற்றிப் போதிக்கையில் (மத் 24:37-44) மூன்று கருத்துகளை நமக்கு முன்வைக்கின்றார். அவை: ) எச்சரிக்கையாக இருத்தல், ) தயார்நிலையில் இருத்தல், ) விழிப்பாய் இருத்தல்.

முதலாவதாக, ‘எச்சரிக்கையாக இருத்தல்குறித்து இயேசு பழைய ஏற்பாட்டில் நிகழ்ந்த நோவா காலத்து வெள்ளப்பெருக்கு நிகழ்வை மேற்கோள்காட்டுகிறார். எல்லாரும் மனம்போன போக்கில் வாழ்ந்தாலும், நோவா மட்டும் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். நேர்மையாளராக வாழ்ந்த நோவாவும் அவரது குடும்பத்தாரும் கடவுளின் அருளால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பெட்டகம் செய்வதைக் கண்டும்கூட, மக்கள் விழிப்பாக இல்லை. மனமாற்றம் பெறாததால் அவர்கள் சந்தித்தது அழிவையே. இந்நிகழ்வைக் குறிப்பிடும் இயேசுவும், ‘மானிட மகனின் வருகையின்போதும் இவ்வாறே இருக்கும்என எச்சரித்து, அவரின் குரலுக்குச் செவிமடுக்க அழைப்பு விடுக்கிறார்.

இரண்டாவதாக, எதிர்பாராத நேரத்தில் ஆண்டவரின் திடீர் வருகைக் குறித்து எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்த, “இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்...” (மத் 24:40,41) என்னும் உருவகம் வழியாகத் தீயவர்கள் கைவிடப்பட்டு நல்லவர்கள் கடவுளால் என்றுமுள்ள வாழ்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என்று பொருள்பொதிந்த விதத்தில் எடுத்துரைக்கின்றார். ஆண்டருடைய வருகை வந்தே தீரும் என வலியுறுத்தும் இயேசு, தம் வாழ்வால் அவருக்கு உகந்தவராய் இருந்து அவரை வரவேற்க எப்போதுமே தயாராக இருக்கவேண்டும் என அறிவுரை தருகிறார். ஆகவே, கடவுளுக்காக நமது கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றுவதில் பிரமாணிக்கமாக இருப்பதுகூட நமது மீட்புக்குப் பெரிய அளவில் உதவும்.

மூன்றாவதாக, இயேசு திருடர் குறித்த ஒரு கருத்தைக் கூறி, ‘விழிப்பாய் இருங்கள்என்று நம்மை எச்சரிக்கின்றார். நமது வீட்டிற்குள் திருடர் எப்போது வருவார் என்பதை நாம் அறிந்திருந்தால், நமது உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால், திருடர்கள் எப்போது வருவார்கள் என்பது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுபோலவே, மானிடமகனின் இரண்டாவது வருகை எப்போது நிகழும் என்பது எவருக்கும் தெரியாது (மத் 24:36). எனவே, எந்நேரத்திலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பது ஓர் அழுத்தமான அழைப்பாகும்.

திருவள்ளுவர் தனது குறளில்,

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும் (435)

என்கிறார். அதாவது, முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கையானது, நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல்போர் போலக் கருகிவிடும் என்று எச்சரிக்கின்றார்.

ஆகவே, ‘விழிப்பாக இருத்தல்என்பது இன்று மிக முக்கியக் கிறித்தவக் கடமையாகப் பார்க்கப்படுகிறது. ‘நகைச்சுவைப் புனிதர்என்று அழைக்கப்படும் புனித பிலிப்நேரி நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் அவரிடம், “பிலிப், இதோ அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?” என்று கேட்டார். அதற்கு அவர் புன்னகையுடன், “தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பேன்என்றாராம். அதுபோலவே, 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞரான ஜான் வெஸ்லியிடம், “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்க, வெஸ்லியோமாலை நான்கு மணிக்கு நான் வழக்கம்போல் தேநீர் அருந்துவேன்; ஆறு மணிக்கு நோயுற்றிருக்கும் திருமதி. பிரவுனை மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன்; எட்டு மணிக்கு மாலை செபங்களைக் கூறிவிட்டு, உணவிற்குப் பின் வழக்கம்போல் தூங்கச் செல்வேன்; விழித்தெழும்போது இறைவன் முகத்தில் விழிப்பேன்என்று கூறினாராம்.

நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்துவேன் (யோவா 17:4) எனும் இயேசுவின் கூற்றுக்குப் புனித பிலிப் நேரி மற்றும் ஜான் வெஸ்லி ஆகியோர் நல்லதோர் எடுத்துக்காட்டு.

நிறைவாக, திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில், ‘இறுதிக் காலம் இதுவேஎன்று கூறி, உறக்கத்திலிருந்து விழித்தெழ நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார். இங்கேஉறக்கம்என்பது ஊனியல்பின் நாட்டத்தைக் குறிப்பதாக அமைகிறது. பவுல்இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக!’ என்கிறார். அதாவது, தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்புக்குரிய செயல்களை விட்டுவிட்டு, ஆவிக்குரிய செயல்களை அணிந்துகொள்வோம்.

நாம் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி செயல்பட்டு, தம் கடமைகளை முழுமையாக நிறைவேற்றி, அவர் மீண்டும் வரும்போது அவரை மகிழ்ச்சியோடு சந்திக்கத் தயாராவோம். ஆக, மகிழ்வோடு ஆண்டவரின் இல்லத்திற்குப் போக (திபா 122:1) இன்றே அன்பையும் அமைதியையும் நம் வாழ்வில் வெளிப்படுத்துவோம். நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்; எனவே, விழிப்பாக இருப்போம்!