news
ஞாயிறு மறையுரை
ஆகஸ்டு 17, 2025, ஆண்டின் பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எரே 38:4-6,8-10; எபி 12:1-4; லூக் 12:49-53 - அநீதிக்கு எதிரான நீதித் தீ பற்றியெரியட்டும்!

நான் உண்மையானவனாய் வாழ்வதற்காக இந்த உலகம் எனக்கு அபராதம் போடுகிறது. பரவாயில்லை, பொய்மையின் தோள்களில் பயணிப்பதைவிட, உண்மையின் கால்களைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதுகூட சிறந்ததுதான்.” சிந்திக்கத் தூண்டும் கவிஞர் மு. மேத்தாவின் கவிதை வரிகள் இவை. உண்மைகளை உணர்ந்து, உண்மைகளைப் பகரும் மனிதர்கள் சராசரி மனிதர்கள் அல்லர்; அவர்கள் கூட்டத்தோடு சேர்ந்து முழக்கமிடுபவர்களும் அல்லர்; மாறாக, தனித்து நின்று, இறையாட்சியின் உண்மைகளை அச்சமின்றி முழங்குபவர்கள்.

இறைவாக்கினர்களின் மேலான பணி என்பது பொய்மைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து உண்மையை எடுத்துரைப்பதாகும். தீமையைச் சுட்டிக்காட்டுவதும், தீமையிலிருந்து விலகியிருக்க வழிகாட்டுவதும், கடவுளின் வழியைக் காண்பிப்பதும் இறைவாக்கினர்களின் சவால் நிறைந்த பணி. உண்மையை உரக்க உரைப்பதன் நிமித்தம் இவர்கள் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினரின் பகைக்கு ஆளாவார்கள்; கலகக்காரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்; சிறைவாழ்வுக்குத் தள்ளப்படுவார்கள்; எண்ணிலடங்காத் துன்ப துயரங்களை அனுபவிப்பதுடன், கொடூரச் சாவினையும் அவர்கள் சந்திக்க நேரிடும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

மத்திய அமெரிக்காவின் ஒரு சிறு நாடு எல் சால்வதோர். இதன் தலைநகரமான சான் சால்வதோர் நகரின் பேராயராக இருந்தவர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள். 1970-களில் அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கிய நிதி உதவியுடன் எல் சால்வதோர் அரசு ஏழைகளைத் துன்புறுத்தியது. அந்நாட்டு அரசின்கொலைப் படையால் (Death squad) பலர் கொல்லப்பட்டனர். கருணை ஏதுமின்றி வறியோரைக் கொன்று குவித்த இராணுவத்திற்கு அமெரிக்க அரசு அளித்து வந்த நிதி உதவியை உடனே நிறுத்தவேண்டும் என சான் சால்வதோர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அமெரிக்க அரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்தக் கடிதம் அனுப்பப்பட்டு இரு மாதங்களுக்குப்பின், 1980, மார்ச் 24-ஆம் தேதி திருப்பலி நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில், இராணுவ வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்று நாம் பொதுக்காலத்தின் 20-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அநீதிக்கு எதிராக நீதித்தீயைப் பற்றவைக்க வேண்டுமென நம்மை வலியுறுத்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் எடுத்துக்காட்டப்படும் இறைவாக்கினர் எரேமியா உண்மையைப் பேசியதால் உயிரை இழக்கவேண்டியிருந்த பலரை நம் நினைவுக்குக் கொணர்கிறார். பாபிலோனிய அரசன் நெபுகத்நேசர் யூதாவை முற்றுகையிடுகின்றார். எனவே, பாபிலோனியாவுடன் போர் தொடுக்குமாறு யூதாவின் அரசன் செதேக்கியாவை அரச அலுவலர்கள் தூண்டுகின்றனர். ஆனால், அப்படிப் போர் செய்வது பெரிய அழிவை உண்டாக்கும் எனவும், அவர்களிடம் சரணாகதி அடைவதே சிறந்த வழி என்றும் கூறுகிறார் எரேமியா (38:18). ஆனால், ஆட்சியாளர்கள், தலைவர்கள் எரேமியாமீது இரண்டு வகையான குற்றங்களை முன்வைக்கின்றனர். அவை: ) எரேமியா எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச் செய்து வருகிறான்; ) இவன் மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை (38:4). எனவே, அவர்கள் எரேமியாவைப் பாழுங் கிணற்றில் தள்ளி, பசியால் அவரைக் கொன்றுவிட நினைக்கின்றனர்.

இறைவாக்கினர் எரேமியா யூதாவின் அரச குடும்பத்திற்கு எதிராக (22:1-9), அரசனுக்கு எதிராக (23:24-30), எருசலேம் மக்களுக்கு எதிராக (23:20-23), குருக்களுக்கு எதிராக (20:1-6), போலி இறைவாக்கினர்களுக்கு எதிராகப் பேசியதால் (23:9-15) பிரச்சினைகளுக்கு ஆளானார். உண்மையை உரைத்ததாலேயே அத்தனை இன்னல்களையும் அனுபவித்தார். ஒரு குறிக்கோளுக்காக வாழ்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும், அவர்கள் சுடச்சுட ஒளிர்விடும் பொன்னைப்போல் புகழ் பெற்றே உயர்வார்கள் எனும் வள்ளுவரின் வாக்கு எரேமியாவின் வாழ்வில் பொருத்தமாக அமைகிறது.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (குறள் 267).

தன்னைச் சுற்றி நிகழும் அநீதிகள், அவலங்கள் அனைத்தையும் கண்டபின், “உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது (எரே 20:9) என்றும் சூளுரைத்தார் எரேமியா.

இன்றைய நற்செய்தியில்மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன் (லூக் 12:49) எனக் கூறுகின்ற இயேசு, “மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவை உண்டாக்க வந்தேன்என்று முழங்குகிறார் (12:51). அன்பு, அமைதி, பொறுமை, தாழ்ச்சி என்ற உன்னதமான கொடைகளின் ஊற்று இயேசு. ஆனால், “தீ மூட்ட வந்தேன்; அமைதியை அல்ல, பிளவை உருவாக்கவே வந்தேன்எனும் இயேசுவின் வெப்பமான வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது?

முதலில், “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் (12:49) என்கிறார் இயேசு. பொதுவாக, திருவிவிலியத்தில் தீ என்பது அன்பை, நீதியை, நற்செய்தியை, தூய ஆவியாரின் கொடைகளைச் சுட்டும் வார்த்தைகள். முதல் ஏற்பாடு தீயைக் கடவுளின் நீதியின் அடையாளமாகக் காட்டுகிறது (தொநூ 19:24). நெருப்பு கடவுளின் பிரசன்னத்தை வெளிக்காட்டியது (தொநூ 15:17). முதன் முதலில் கடவுள் தம்முடைய இருப்பைத் தீச்சூளையிலே மோசேவுக்குக் காட்டினார் (விப 3:2). திருத்தந்தை பிரான்சிஸ், “இயேசு தாலாட்டுப் பாடலை அல்ல; மாறாக, நற்செய்தி எனும் தீயை மூட்டவே இம்மண்ணுலகிற்கு வந்தார்என்கிறார் (மூவேளைச் செபவுரை, 14.8.2022).

இயேசு மூட்ட விரும்பும்நற்செய்திஎனும் தீ பழமையை எரித்துவிடும்; தீமையை அழித்துவிடும்; தூய்மை தரும்; ஆற்றல் தரும்; மனமாற்றத்தின் பாதையில் நாம் முன்னோக்கிச் செல்ல நம்மைத் தூண்டும் என்ற பொருளில் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் உள்ளத்தில் பற்றியெரிந்த தீ என்பது அநீதிக்கு எதிரான நீதி என்னும் தீ. இந்தத் தீயை மற்றவர் உள்ளத்திலும் மூட்டவே, ‘மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்என்று கூறுவதாகப் புரிந்துகொள்ளலாம். இயேசு தமது உள்ளத்தில் பற்றியெரிந்த அநீதிக்கு எதிரான நீதி எனும் தீயை மூட்டத் தம்மையே பலியாகக் கொடுக்கவேண்டியிருந்தது (லூக் 12:50).

இரண்டாவதாக, “மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் (12:51) என்கிறார் இயேசு. தமது பிறப்பிலே அமைதியைக் கொண்டுவந்தவர் அவர் (2:13-14). தாம் உயிர்த்து விண்ணுக்குச் செல்லும்முன் அதே அமைதியையே அளித்தார் (24:36). இப்போதுபிளவை உண்டாக்க வந்தேன்என்று கூறுவதும் அவர் தரவிருக்கும் அமைதிதான். ஆனால், அந்த அமைதி உலக அரசுகள் மற்றும் பல்வேறு சமுதாய அமைப்புகள் பெரும்பாலும் குறிப்பிடும் போரும் வன்முறைகளும் இல்லாத ஓர் அமைதி அல்ல; அந்த அமைதி பல அப்பாவி மக்களின் மரணத்தால் விளைந்த அமைதி. அதுகல்லறை அமைதி.’ இயேசு தம் பிரியாவிடை உரையில், “நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல (யோவா 14:27) என்று தெளிவாகக் கூறினார்.

இயேசு வழங்கும் அமைதி என்பது ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரிய மாண்பை, நீதியின் அடிப்படையில் வழங்குவதால் உருவாகும் அமைதியாகும். இயேசு விரும்புவது மனித மாண்பை அடித்தளமாகக் கொண்ட உண்மையான அமைதி. இந்த அமைதி எப்போது ஒருவருக்கு மறுக்கப்படுகிறதோ, அங்கே வேறுபாடுகளும் பிளவுகளும் எழுகின்றன. இயேசு ஏற்படுத்தும் பிளவு என்பது நாம் நீதியான, உண்மையான நிலைப்பாடுகள் எடுக்கும்போது ஏற்படும் பிளவுகள் ஆகும். குடும்பங்களில் நம் மனச்சான்றை மையப்படுத்தி நாம் எடுக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் உருவாகும் கருத்து வேறுபாடுகளாகும். சாட்சிய வாழ்வுக்காய் குடும்பங்களில் ஏற்படும் பிளவு ஆகும். இயேசு கூறும் இத்தகைய பிளவுகள் தேவையான ஒன்றே. அவை நன்மை செய்யக்கூடியது; நீதிக்கான அமைதியை ஏற்படுத்தக்கூடியது.

நிறைவாக, அநீதிக்கு எதிராக நீதித்தீயைப் பற்றவைக்க விரும்பும் அனைவரும் நெருக்கடிகள், மன உளைச்சல்கள், ஏளனப் பேச்சுகள், துன்புறுத்தல்கள், கொடிய சாவுகள் ஆகிய அனைத்தையும் சந்திக்கவேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. எனினும், இயேசுவின்மீது நம் கண்களைப் பதியவைத்து (எபி 12:2), மனித மாண்பைச் சிதைத்தழிக்கும் அநீதிகளுக்கு எதிராக (12:4) நீதித் தீயைப் பற்றி எரியச்செய்வோம். இவ்வுலகில் இறைவாக்கினர் எரேமியா, இறைமகன் இயேசு, புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோர் மூட்டிய அநீதிக்கு எதிரான நீதியின் தீ நம் உள்ளங்களிலும் பற்றியெரியட்டும்.

news
ஞாயிறு மறையுரை
ஆகஸ்டு 10, 2025, ஆண்டின் பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) சாஞா 18:6-9; எபி 11:1-2,8-19; லூக் 12:32-48 - இழக்கக்கூடாதது இறைவன் மீதுள்ள நம்பிக்கையே!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் கென்னடியின் தாய் ரோஸ் கென்னடி. கத்தோலிக்கரான இவர் ஆழமான இறைநம்பிக்கையோடு வாழ்ந்தவர். இவரது மகன் ஜான் கென்னடி அமெரிக்க அதிபராகி, சமத்துவத்திற்காக உழைத்ததற்காகக் கொல்லப்பட்டார்.  அவருக்குப்பின் அரசியலில் ஈடுபட்டு, தேர்தலில் போட்டியிட்ட அவரது தம்பி இராபர்ட் கென்னடியும் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது ஒரே மகளும் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார். இத்தகைய வேதனையான குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், ரோஸ் கென்னடி ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலிக்குச் செல்வதை ஒருபோதும் விட்டுவிடவில்லை. இது குறித்துக் கேட்டபோது அவர் கூறிய பதில்: “பல்வேறு துயரமான நிகழ்வுகளுக்குப் பின்னும் நான் நம்பிக்கையோடு இருப்பதற்கான காரணம், நான் நாள்தோறும் வேண்டும்ஆண்டவரே, உம்மில் நான் கொண்டுள்ள நம்பிக்கையைத் தவிர அனைத்தையும் எடுத்துக்கொள்ளும்என்ற இறைவேண்டல்தான்.”

நம்பிக்கை என்பது மனிதருக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் வரம். கிறித்தவ வாழ்வு தொடக்கம் முதல் இறுதிவரை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அது நம்பிக்கையினாலேயே கட்டி எழுப்பப்படுகிறது. கிறிஸ்துவே நமது தலைவர். நம் வாழ்வில்நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துவரும் அதை நிறைவு செய்பவரும்...” (எபி 12:2) அவரே. அவர்மீதே நம் கண்களைப் பதிய வைக்க அழைக்கப்படுகிறோம். பொதுக்காலத்தின் 19-ஆம் ஞாயிறான இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள் நம்பிக்கையைப் பற்றிச் சிந்திக்க அழைக்கின்றன.

சாலமோனின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. சாலமோனின் ஞானநூல் ஆசிரியர், இஸ்ரயேல் மக்கள் விடுதலைப் பயண நிகழ்வில் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த இரவை நினைத்துப் பார்க்கிறார் (18:6). அந்த இரவு இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நம்பிக்கையின் இரவாக அமைந்திருந்தது. எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய அவர்கள் நலமான வாழ்விற்கு எத்தனையோ போராட்டங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டியிருந்தது. பசி, தாகம், பாலைவன வாழ்வு இப்படிப் பல துன்பங்களை அவர்கள் சந்தித்தாலும், தங்கள் விடுதலைப் போராட்டத்திலும் பாலைநில வாழ்விலும் கடவுளைக் கண்டுகொண்டனர்கடவுளின் வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டனர். தங்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்விலும், கடவுள் தங்களுக்காகத் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற இறைநம்பிக்கையை வளர்த்துக்கொண்டனர்.

எபிரேயர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் ஆபிரகாமின் நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறது. நம்பிக்கை என்பதற்கான அற்புதமான வரையறையை எபிரேயத் திருமுக ஆசிரியர் தருகிறார்: ) நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; ) கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1). இவ்வரையறையை ஆழமாகச் சிந்திக்கும்போது, ‘எதிர் நோக்கி இருப்பதுஎன்பது, நாம் எதிர்பார்ப்பவை அனைத்தும் கிடைக்கும் என்று எண்ணுவது அல்ல; மாறாக, திருத்தூதர் பவுல் குறிப்பிடுவதுபோல, “கடவுளின் மாட்சியில் பங்குபெறுவதே (உரோ 5:2) நம் ஒரே எதிர்நோக்கு. இந்த எதிர்நோக்கே பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவது என்பது கண்ணுக்குப் புலப்படக்கூடிய பணம், வீடு, பொருள் சார்ந்தவற்றில் நம்பிக்கை கொள்ளாமல், கண்ணுக்குப் புலப்படாத கடவுளின் வாக்குறுதியில் நம்பிக்கை கொள்வதாகும்.

திருவிவிலியத்தில்இறைநம்பிக்கையின் தந்தையாக (உரோ 4) நம் கண்முன் வருபவர் ஆபிரகாம். இவர் தான் காணாதவற்றையும் நம்பி ஏற்றார். ஆபிரகாம் கடவுளைச்சிக்கெனப் பற்றிக்கொண்டார்வாக்களிக்கப்பட்ட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியது (எபி 11:8), அவர் குடியேறிய நாட்டில் ஓர் அன்னியரைப்போல வாழ்ந்தது (11:9), மிக வயதான காலத்திலும் கடவுள் ஒரு மகனைக் கொடுப்பார் என்ற அவரின் வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டது (11:10), சோதிக்கப்பட்டபோது தன் ஒரே மகனையே பலியிடத் துணிந்தது... (11:17) என எல்லாவற்றிலும் ஆபிரகாம் கடவுளின் வாக்குறுதியின்மேல் நம்பிக்கைகொண்டார். ஆபிரகாம் நம்பிக்கையினால் மட்டுமே கடவுளுக்கு ஏற்புடையவரானார் (தொநூ 26:5). சில வேளைகளில் கடவுள்மீது நம்பிக்கை கொள்வதற்கு அவரது உள்ளம் போராடிய சூழலிலும் (தொநூ 15:8; 16:2; 20:1-2), கடவுள் மீதான தன் நம்பிக்கையை அவர் புதுப்பித்துக்கொண்டார்.

இன்றைய நற்செய்தி வாசகம் நம்பிக்கையின் பொருளை இன்னும் ஆழமாக விவரிக்கிறது. தொடக்க வரிகளான, “உங்கள் உடைமைகளை விற்று தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள். அங்கே திருடன் நெருங்குவதில்லை, பூச்சியும் அரிப்பது இல்லை (லூக் 12:33) என்று செல்வத்தைப் பற்றிய சில தெளிவுகளை இயேசு நம் அனைவருக்கும் தருகிறார்.

பணத்திற்கு ஏறத்தாழ ஒரு தெய்வீக நிலையை அளித்து வருகிறோம். தீமையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை செல்வத்தைச் சேர்ப்பது. நன்மையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை செல்வத்தைப் பகிர்வது. பணமும் செல்வமும் தம்மிலேயே தீமைகள் அல்ல; அவற்றைத் திரட்டுவதிலும் குவித்து வைப்பதிலும் நாம் காட்டும் அரக்கத்தனமான சுயநலமே செல்வத்தைத் தீயதாக்கி விடுகிறது. பணமே ஒரு மனிதரின் சமூகச் செல்வாக்கையும் வாழ்வுநிலையையும் நிர்ணயிக்கக்கூடிய கருவியாக மாறிவிட்டது. பணத்தின்மீதான பற்று பணத்தை முழு மூச்சோடு ஒரு மனிதரைத் தேடவைக்கிறது. மனிதரும் கடவுளை விடுத்து, பணத்திற்கும் செல்வத்திற்கும் அடிமையாகும்போது அவர்களின் முழுக்கவனமும் எப்போதும் செல்வத்தின்மீதுதான் இருக்கும். அதனால்தான் இயேசுஉங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும் (12:34) என்று எச்சரிக்கிறார். இறைநம்பிக்கையை வாழ்வாக்க இயேசு முன்வைக்கும் சில படிப்பினைகள்:

முதலில், பணத்தின்மீதான பற்றிலிருந்து விடுபடுவதற்கான வழி எப்போதும் விழிப்பாய் இருப்பதுதான். விழிப்பாக இருக்கும் பணியாளர்தான் தன் தலைவனிடத்தில் நற்பெயர் பெறுவார் என்பதை இயேசு தெளிவாக எடுத்துரைக்கின்றார். நம் உள்ளத்திலும் அருகிலும் கடவுள் இருக்கிறார் என்பதை நம்மால் உணர முடியாமல் இருப்பதே விழிப்பற்ற மனநிலைஅதாவது, இவ்வுலக மாயையும், செல்வத்தின்மீதான பேராசையுமே கடவுளைக் காணும் நம் அகக்கண்களை மறைக்கின்றன. பற்று உண்மையைப் பார்க்கவிடாமல் நம் கண்களை மறைத்துவிடுகின்றது. “கடவுளைக் கண்டடைவதற்கு, ஒன்றையும் உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளாதீர்கள்என்று எழுதுகிறார்ஆன்மிகவியலின் இளவரசர்என அழைக்கப்படும் புனித சிலுவை யோவான். எனவே, உண்மையான நம்பிக்கை என்பது, கடவுளிடம் முழுமையாகச் சரணடைவதாகும். கடவுளிடம் முழுமையாகச் சரணடைதல்தான் நம்பிக்கை வாழ்வின் உச்சநிலை (12:22-28).

இரண்டாவது, நாம் சேர்த்து வைத்தவை செல்லரித்துப் போகலாம் அல்லது திருடப்படலாம் என்று எச்சரிக்கும் இயேசு, அழியாத செல்வங்களான பகிர்தல், தர்மம் இவற்றைச் சேர்த்து வையுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். பணம் அல்லது செல்வம் மரணத்திற்குப் பின் ஒருவருக்கு முற்றிலும் பயனற்றுப் போகின்றன. எனவே, அவை பயன்தரும் காலம் வரையில் அதாவது, இவ்வுலகில் செல்வத்தைத் தகுந்த வகையில் பயன்படுத்த வேண்டும். பணம் என்பது உரம் போன்றது. அது நிலங்களில் பரப்பப்படும்போதுதான் வளம் தரும், உயிராக மாறும். பணம் பதுக்கப்படவேண்டியது அல்ல; அது பகிரப்படவேண்டியது. அவற்றை முக்கியமாக ஏழை மக்களுக்காகப் பயன்படுத்தவேண்டும். அவ்விதம் செய்தால், அவர்கள் மறுவுலகில் நம்மை வரவேற்கத் தயாராக இருப்பார்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்பவர் ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருள்களைப் பிறருக்குப் பரிசாகக் கொடுப்பாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது, “இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றிற்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றிற்கு நான் அடிமைஎன்று அவர் பதில் கூறினாராம்.

மூன்றாவது, உண்மையான நம்பிக்கை என்பது பணிபுரிவதில் அடங்கியிருக்கிறது எனப் போதிக்கிறார் இயேசு. அதாவது, பணிபுரிதல் என்பது தலைவரின் மன விருப்பத்திற்கேற்பச் செயலாற்றி அவரது பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவதாகும். நன்மதிப்பைப் பெறுவதே ஒரு பணியாளரின் தலையாயக் கடமை. அதுவே, அவர் சேர்க்கும் நிலையான செல்வம். திருத்தந்தை பிரான்சிஸ், “கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள நற்செயல்களை ஆற்றிய முறைகள், வாழ்வின் இறுதி நேரத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்என்கிறார் (மூவேளைச் செபவுரை, 07.08.2022).

புனித யாக்கோபுவின் கூற்றுப்படி, நம்பிக்கை என்பது நற்செயல்களில் மட்டுமே காணக்கூடிய ஒன்று என்பது தெளிவு (2:17,18). கிறித்தவர்களாகிய நாம் அடிப்படையில் நம்பிக்கையின் மக்கள்; நற்செயல்கள் வழியே உலகில் நம்பிக்கையை வளர்ப்பதே நமது அழைத்தல்! ஆகவே, இன்றைய திருப்பாடல் கூறுவதுபோலநாம் ஆண்டவரையே நம்பியிருப்போம் (34:20). எச்சூழலிலும் இறைவன்மீதுள்ள நம்பிக்கையை இழக்காதிருப்போம்!

news
ஞாயிறு மறையுரை
ஆகஸ்டு 03, 2025, ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) சஉ 1:1:2;2:21-23; கொலோ 3:1-5,9-11; லூக் 12:13-21 - உண்மையான செல்வம் விண்ணகத்தில் உள்ளது!

ஜெர்மனி நாட்டவரான இரண்டாம் லூட்விக் (Ludwig II 1845-1886) ஜெர்மனியின் பவேரியா (Bavaria) மாநிலத்தில் அரசராக இருந்தார். மன்னராக முடிசூட்டப்பட்டபோது அவருக்கு வயது 18. ‘கற்பனைக் கதை மன்னன் (Fairy tale King) என்றழைக்கப்படும் அவரின் மற்றொரு பட்டப்பெயர்மதியற்ற மன்னன் லூட்விக் (Mad King Ludwig). செல்வம் மிகுந்துவிட்டால் மனிதர்கள் மதியற்ற செயல்களில் ஈடுபடத் துணிகின்றனர் என்பதற்கு மன்னன் இரண்டாம் லூட்விக் ஓர் எடுத்துக்காட்டு. ஜெர்மனி நாட்டில் உள்ள Chiemsee ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறு தீவில், இரண்டாம் லூட்விக் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்ட ஆணையிட்டார். 70 அறைகள் கொண்ட இந்த அரண்மனையின் ஒருசில அறைகள் கட்டப்பட்டதும், 1885-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவர் அங்குத் தங்கியிருந்தபோது, யாரையும் சந்திக்கவில்லை. அவருக்கெனத் தயாரிக்கப்பட்ட உணவு, ஓர் இயந்திரத்தின் வழியாக அவரது அறைக்கு அனுப்பப்பட்டது. அவர் அங்குத் தங்கியிருந்த அறைகளில் பிரம்மாண்டமான கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. தன்னை மட்டுமே நாள் முழுவதும் பார்த்தவண்ணம் அவர் அந்த அரண்மனையில் வாழ்ந்தார். 70 அறைகள் கொண்ட அந்த அரண்மனையில் 30 அறைகளே கட்டி முடிக்கப்பட்ட நேரத்தில் அவர் மர்மமான முறையிலே இறந்தார். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வினோத மனிதர் மன்னன் லூட்விக். நாம் வாழும் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் இத்தகைய வினோதமான செயல்களில் ஈடுபடும் செல்வந்தர்களைக் காணமுடிகிறது.

இன்று ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு. இன்றைய உலகில் பீடமேற்றி வணங்கப்பட்டு வரும் சுயநலம், பேராசை, பணம், செல்வம் ஆகிய நோய்களிலிருந்து நலம்பெற இன்றைய வழிபாட்டு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்று செல்வம். வாழ்வின் பெரும்பகுதியை இப்பொருளீட்டலுக்காகவே செலவிடுகிறோம். நாளைக்கு வாழவேண்டும் என்பதற்காக எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தை இழந்துவிடுகிறோம். அறம், பொருள், இன்பம் என்ற வழிமுறை வகுத்து, அறவழியில்தான் பொருள் சேர்க்க வேண்டும் என்றும், அந்தப் பொருளைக்கொண்டே இன்பம் துய்க்கவேண்டும் என்றும் முறைவைத்தனர் நம் முன்னோர். நிலையில்லாச் செல்வத்தின்மீது கொள்ளும் பற்று உயிரின் உய்வுக்குத் தடையாகிறது.

அளவுக்கு அதிகமான ஆசை ஒருவரைத் தீய வழிக்கு அழைத்துச்சென்று, துன்பம் என்ற விலையைப் பெற்றுக்கொடுக்கிறது. எனவேதான் புத்தர்ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் போலும். ‘காதற்ற ஊசியும் வாராது காண் உம் கடை வழிக்கே என்றார் பட்டினத்தார். நாம் இறந்த பிறகு இவ்வுலகில் சேர்க்கும் செல்வங்களோ, பொருள்களோ எவையும் நம்முடன் வருவதில்லை. “அற்றது பற்றெனில் உற்றது வீடு என்று பாடினார் நம்மாழ்வார். பற்றுதல் அற்றுவிட்டால் வீடுபேறு கிடைக்கும் அன்றோ! இறைவன்மீது பற்றுக்கொண்டு, நம் துன்பங்களை நீக்கும் வழியறிந்து வாழவேண்டும். ஈட்டியப் பொருள்கள் நேர்மையாக வாழவும்தேவையில் இருப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுகின்றவையாக இருக்கவேண்டும் எனும் அழகிய பாடங்களைஅறிவற்றச் செல்வன் உவமை வழியாக இயேசு இன்று நமக்குக் கற்றுத் தருகிறார்.

போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும் (லூக் 12:13) என்ற சொற்றொடரோடு இன்றைய நற்செய்தி தொடங்குகிறது. “சமயத் தலைவர்களின் தவறான வழிநடத்துதலைக் குறித்துக் கவனமாக இருங்கள் என்று இயேசு மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர் கூறிய அழகான பாடங்களுக்குச் சற்றும் செவிகொடாமல், தன்னுடைய உலகத்தில் தன்னுடைய பிரச்சினைக்குள் மூழ்கிக்கிடந்த ஒருவர், இயேசுவின் போதனையை இடைமறித்து, தன் பிரச்சினையைக் கூறுகிறார். புகழும் பொருளும் திரட்டி வந்த சமயத் தலைவர்களைப்போல தம்மையும் அந்த மனிதர் கருதியதைக் கண்டிக்கும் இயேசு, சூழ இருந்த மக்கள் அனைவருக்கும்பேராசை பெரும் இழப்பு என்ற ஒரு மேலான உண்மையை எடுத்துரைக்கிறார். “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள்; மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது (12:15) எனும் பேருண்மையைத் தெளிவாக்க, செல்வன் ஒருவனது கதையை உவமையாகத் தருகிறார்.

இந்த உவமையில் இயேசு செல்வனைஅறிவற்றச் செல்வன் என வருணிக்கிறார். என்ன காரணம்? அறிவற்றச் செல்வனைப்பற்றி இயேசு அறிமுகப்படுத்தும் வரிகளில், “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது (12:16) என்கிறார். இந்தச் செல்வந்தனின் விளைநிலம், அந்நிலத்தின் விளைபொருள்கள். அவை வழியே வந்து சேர்ந்த செல்வங்கள், இறைவன் இச்செல்வந்தனுக்கு வழங்கிய பரிசுகள் அல்லவா! இவனின் நல்ல விளைச்சலுக்கான காரணங்கள் இறைவனின் இரக்கம், பொய்க்காமல் பெய்த மழை, உழைப்பாளிகளின் வியர்வை. ஆனால், இவை எவையும் இச்செல்வனின் சிந்தையில் எழவில்லையே! அவனது உழைப்புக்கும் உயர்வுக்கும் முதற்காரணரான கடவுளைத் தன் வாழ்வில் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவன் சிந்தனையை நிறைத்ததெல்லாம் அவன் களஞ்சியங்களில் குவிக்கப்பட்டிருந்த விளைபொருள்கள் மட்டுமே. எனவேதான், இச்செல்வனின் மனத்தில் தோன்றிய முதல் எண்ணங்கள், நான் என்ன செய்வேன்? என் விளைப்பொருள்களைச் சேர்த்துவைக்க இடமில்லையே!” (12:17).

பேராசை சுயநலமானது; அது தன்னை, தன் மகிழ்ச்சியை மட்டுமே முக்கியமாக நினைக்கும். பேராசை ஒருபோதும்போதும் என்று சொல்லாது. அது இறையாட்சியின் வாயிலையே நமக்கு அடைத்துவிடும் (மாற் 10:23, 1 திமொ 6:8). “பணம் கடல்நீரைப் போன்றது. அதைப் பருகப்பருக இன்னும் கூடுதலாகத் தாகம் எடுக்கும் என்பது ஓர் உரோமைப் பழமொழி. அறிவற்றச் செல்வன் உடலளவில் தான் பெற்ற வாழ்வும், தன்னைச் சுற்றிக் குவிந்துள்ள செல்வங்களும் நிரந்தரமாக இருக்கும் என்று எண்ணினான். தனக்கு நல்ல எதிர்காலம் உள்ளதால் மகிழ்வாக இருப்பதாக நம்பினான். தான் சேமித்துவைத்த பொருள்களில் பாதுகாப்பை உணர்ந்தான்; வாழ்வில் கடவுளைப் புறக்கணித்தான். பெரும் களஞ்சியங்களில் தானியத்தைத் தனக்கென மட்டும் குவித்து வைக்காது, மக்களோடு சிறப்பாக, இல்லாதவர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு அவன் செய்யவில்லை. அவன் தனக்குள் சொல்லிக்கொண்டவை எல்லாம்என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு (12:19) என்ற மிகவும் ஆபத்தான சொற்களே. இவனுடைய எண்ணங்களும் செயல்களுமே இச்செல்வனுக்குஅறிவிலியே என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது.

நாம் செல்வத்தைக் கொண்டிருப்பது பாவமல்ல; செல்வம் தன்னிலே தவறானதும் இல்லை; செல்வம் ஓர் ஆற்றல். ‘செல்வம் செல்லவேண்டும்; அவை கொடுக்கப்படவேண்டும். நாம் ஈட்டும் செல்வம் தேக்க நிலையில் இருந்தால், அங்கே பூச்சியும் புழுவும்தான் இருக்கும் (யாக் 5:1-5). உலகப் பொருள்களை அளவுக்கதிகமாகத் தேடுவது கவலை, அச்சம், பகைமை, சுயநலம், பேராசை, போர் போன்றவைக்கே இட்டுச்செல்லும்.

இவ்வுலகில் அனைவரும் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருந்தும், உணவைப் பணமாக மாற்றும் பேராசையினால், உணவைப் பதுக்கும் சுயநலவெறி வளர்ந்துவிட்டதால் பசியும் பட்டினியும் இவ்வுலகில் தாண்டவமாடுகின்றன. இன்றைய அரசியல், சமூகம், கல்வி, மருத்துவம், விளையாட்டு என எல்லாத் துறைகளிலும் நிலவும் இலஞ்சம் வேதனைக்குரியது. செல்வத்தின்மேல் பற்றுக்கொள்வது வீண். இதனையே இன்றைய முதல் வாசகத்தில் பொருள்சார்ந்த, பேராசைமிக்க உலகத்தைக் காணும் சபை உரையாளர்வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண் (1:2) என்று கூறுகிறார்.

உலகப் பொருள்கள் நம் வாழ்வுக்கு அவசியமானவைதான்; ஆனால், அவையே நம் வாழ்வின் இறுதி இலக்கை எட்டுவதற்கான கருவிகளாக இருத்தலாகாது. மாறாக, அப்பொருள்கள் நேர்மையாக வாழவும், மிக அதிகத் தேவையில் இருப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவுபவையாக இருக்கவேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ்நம் கரங்கள் கட்டியெழுப்புவதற்கும் சேவையாற்றுவதற்கும் கொடுப்பதற்குமெனப் படைக்கப்பட்டுள்ளன. இதுவே வாழ்வின் இரகசியம் என்று குறிப்பிடுகிறார் (ஐரோப்பிய சாரணர் இயக்க இளையோர் சந்திப்பு, 03.08.2019).

எனவே, எவற்றிலிருந்து நாம் பற்றறுந்து விலகி நிற்கிறோமோ, அவற்றினால் வரும் துன்பங்களிலிருந்தும் அப்போதே விலகிவிடுகிறோம் என்பதுதான் வாழ்வின் பேருண்மை. வாழ்க்கைப் பயணத்தில் வருவது அனைத்தும் நில்லாது ஒருநாள் நீர்க் குமிழியாக மறைந்துவிடும். உலகப் பற்றுகளிலிருந்து விடுபட, இதயத்தில் இறைவனைப் பற்றி நிற்போம். நமக்கான உண்மையான செல்வக் குவியல் விண்ணகத்தில் உள்ளது!

news
ஞாயிறு மறையுரை
ஜூலை 27, 2025, ஆண்டின் பொதுக்காலம் 17- ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) தொநூ 18:20-32; கொலோ 2:12-14; லூக் 11:1-13 - கேளுங்கள், கொடுக்கப்படும்! தட்டுங்கள், திறக்கப்படும்!

2023, நவம்பர் 12-ஆம் நாள் உத்தரகாண்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் எதிர்பாராத மண்சரிவு ஏற்பட்டதில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்த சூழலில், இறுதி முயற்சியாகஎலி வளை தொழிலாளர்கள்வரவழைக்கப்பட்டு கைவேலைப் பாடாக 21 மணி நேரத்தில் 13 மீட்டர் துளையிட்டு, 17 நாள்களாக உள்ளே சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை உயிரோடு மீட்டனர். அந்நேரத்தில் ஊடகங்கள் பதிவிட்ட மிக முக்கியமான செய்தி: “பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தினர் மற்றும் 140 கோடி மக்களின் தொடர் இறைவேண்டலே இவர்களைக் காப்பாற்றியதுஎன்பதுதான்.

பொதுக்காலத்தின் 17-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இறைவேண்டலின் வலிமையையும் வல்லமையையும் தொடர்வேண்டலின் அவசியத்தையும் சிறப்பாக நமக்கு எடுத்துரைக்கின்றன.

நமது தனிப்பட்ட நேரத்தையும் இடத்தையும் ஒதுக்கி, இறைவனோடு நாம் தொடர்புகொள்வதையேசெபித்தல்அல்லதுஇறைவேண்டுதல்என்கிறோம். செபித்தல் என்பது இவை மட்டுமல்ல; இவற்றைத் தாண்டி எப்பொழுதெல்லாம் கடவுளின் பெயரை உச்சரிக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் கடவுளை மனதார நினைக்கின்றோமா அப்பொழுதெல்லாம் ஏதோ ஒருவகையில் நாம் இறைவனுடன் தொடர்புகொள்கிறோம். இறைவனுடன் நாம் கொள்ளும் ஒவ்வொரு தொடர்பும் செபமே.

இயேசு தமது வாழ்வில் மாலையில் (மத் 14:23), இரவில் (லூக் 6:12) அல்லது விடியற்காலையில் (மாற் 1:35) எனப் பல நேரங்களை ஒதுக்கி தந்தையோடு செபித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வல்ல செயலைச் செய்வதற்கு முன்னும் அவர் தம் தந்தையை அழைக்கத் தவறியதில்லை. பல வேளைகளில் இயேசு செபத்தில் ஆழ்ந்திருந்ததையும், செபத்தின் மூலமாக அவரிடம் ஏற்பட்ட அற்புதமான மாற்றங்களையும் (மத் 17:1-13; மாற் 9:2-8; லூக் 9:28-36) சற்று தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த சீடர்களுள் ஒருவர் ஆவலுடன், “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக் கொடும்என்று கேட்கிறார். சீடரின் இந்த ஆர்வமான விண்ணப்பத்திற்கு விடையாக, “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்; தந்தையே, உமது பெயர்...” (லூக் 11:2) என்று இயேசு கூறிய பதில், காலத்தால் அழியாத ஒரு செபமாக அமைந்துள்ளது.

கடவுளுக்கென்று தனி இடங்களை ஒதுக்கி, அங்கும் அவரைச் சந்திக்க பல விதி முறைகளை வகுத்து, இறைவனை மக்களிடமிருந்து வெகுதூரத்தில் வைத்திருந்த இஸ்ரயேல் சமயத் தலைவர்களுக்கு ஒரு பேரிடியாக, இயேசு இறைவனைதந்தைஎன்று மக்களிடம் அறிமுகப்படுத்துகிறார். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் (மத் 6; லூக் 11) நாம் காணும் இந்தப் புகழ்மிக்க செபம், கிறித்தவ உலகில் கத்தோலிக்கத் திரு அவையினர், ஆங்கிலிக்கன் சபையினர், லூத்தரன் சபையினர், ஆர்த்தடாக்ஸ் சபையினர் என்று பல பிரிவுகள் இருந்தாலும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பொதுவான இறைவேண்டலாக இது அமைகிறதுஇயேசு கற்றுத்தந்தவிண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே...” (மத் 6:9) என்ற இச்செபம், ‘உலகளாவிய வேண்டுதல் (Universal Prayer) என்று தயக்கமின்றிக் கூறலாம்.

இயேசு கற்றுத்தந்த செபத்தைத் தொடர்ந்து, நாம் எவ்விதம் செபிப்பது என்பதைக் கற்றுத்தர இயேசுநள்ளிரவில் நண்பர்என்ற ஓர் எளிய உவமையைக் கூறுகிறார். “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று...” (லூக் 11:5) என்று ஆரம்பிக்கும் இந்த உவமையில், இயேசு இறைவனிடம் வேண்டுதல் என்ற உயர்ந்த முயற்சிக்குத் தேவையான மூன்று பண்புகளைச் சுட்டிக்காட்டுகிறார். செபத்தில் 1. பிறர் தேவைக்காகச் செபிக்கவேண்டும்; 2. உண்மைநிலை இருக்க வேண்டும்; 3. நம்பிக்கையுடன் தன் விண்ணப்பத்தை எடுத்துரைக்க வேண்டும். இந்த உவமையில் வரும் கதாநாயகர் () தன் பசியைத் தீர்த்துக்கொள்வதற்கு அல்ல; தன் நண்பரின் பசியைத் தீர்க்க அடுத்தவரை நாடிச் செல்கிறார். () அவரிடம் மூடி மறைக்காமல் தன் உண்மை நிலையை எடுத்துச்சொல்கிறார். () நண்பர் கதவைத் திறக்காத போதும், நம்பிக்கையுடன் தன் விண்ணப்பத்தைத் தொடர்கிறார்.

செபத்தின் முக்கியமான இந்த மூன்று கூறுகளை இன்றைய முதல் வாசகத்தில் (தொநூ 18:20-32) ஆபிரகாமிடம் காண்கிறோம். சோதோம் கொமோரா நகரங்களில் வாழும் நீதிமான்களைக் காப்பாற்றுவதற்காகக் கடவுளோடு ஆபிரகாம் நடத்தும் உரையாடல் ஒரு செபமாக மாறுகிறது. செபம் என்பதே கடவுளுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்தானே! ஒரு நீதிமான்கூட அநீதியாகத் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆபிரகாம் கடவுளோடு மேற்கொண்ட உரையாடலும் உரசலும் தனக்கு வேண்டியதைப் பெற அடம்பிடிக்கும் குழந்தையை நம் நினைவுக்குக் கொணர்கிறது.

நற்செய்தி வாசகத்தின் கதாநாயகர் வேண்டிக் கொண்டது போலவே ஆபிரகாமும், (1) தன்னை மையப்படுத்தாமல், மற்றவர்களை மையப்படுத்தியும், (2) கடவுளிடம் எதையும் மறைக்காமல் தன் உண்மைநிலையை எடுத்துச்சொல்லியும், (3) மனம் தளராமல் நம்பிக்கையுடன் தொடர்ந்து மன்றாடியது, ‘நான், எனது, எனக்குஎன்ற மயக்க நிலையில் மரத்துப்போன ஒரு மனசாட்சியுடனும் தன்னைச் சுற்றியே இந்த உலகம் இயங்குகிறது என்ற எண்ணத்திலும் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு.

இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்தும் உன்னதப் பாடங்கள்:

முதலாவதாக, ‘எனக்கு இதைத் தாரும், அதைத் தாரும்என்று தன்னைச் சுற்றியே செபங்களை எழுப்புவதற்குப் பதில், அடுத்தவரது தேவைகளை நம் செபங்களில் சுமந்துசெல்வது அழகானது. அடுத்தவரது தேவைகள் நம் எண்ணங்களையும் மனத்தையும் நிறைக்கும்போது, நமது தேவைகள் குறையுமன்றோ!

இரண்டாவதாக, நமது உண்மை நிலையை உள்ளவாறு எடுத்துரைத்துச் செபிப்பது நன்மை பயக்கும். “நண்பருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை (லூக் 11:6) என்ற வேண்டுதலை எழுப்பும் நம் உவமையின் நாயகர், நம்மிடம் உள்ள நிறை-குறைகளை ஏற்றுக்கொள்ளும் பணிவான, துணிவான மனநிலையைக் கற்றுத்தருகிறார். செபத்தில் தன் இயலாமையை எடுத்துரைக்க, உண்மையிலேயே மிகுந்த பணிவும் துணிவும் தேவை. ஆணவமும் தற்பெருமையும் சுயநலமும் நிறைந்த நமது இறைவேண்டல்களைக் கடவுள் எப்போதும் விரும்பமாட்டார்.

மூன்றாவதாக, செபத்தில் பல தடைகளும் மறுப்பும் தொடர்ந்தாலும், நம்பிக்கையோடு மனம் தளராமல் செபிக்கவேண்டும். ‘எறும்பு ஊரக் கல்லும் தேயும்என்பார்கள். எறும்பின் தொடர்முயற்சியே அதன் வலிமை. அதுபோலவே நமது தொடர் இறைவேண்டலே நமது செபத்தின் வலிமை. நாம் இடைவிடாமல் வேண்டுவதால், நாம் எண்ணியபடியே முற்றிலும் நிறைவேறும் என்பதல்ல; பல நேரங்களில் நாம் கேட்பதைக் காட்டிலும் இன்னும் சிறப்பான தீர்வுகளை இறைவன் தருவார் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்கவேண்டும்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆஸ்வால்டு சேம்பர்ஸ் என்ற மறைப்போதகர், “நாம் செபிக்கும்போது கடவுள் மீது கண்களைப் பதித்து நாம் செபிக்க வேண்டும்; நம் கவலைகள் மீதல்லஎன்கிறார். “செபம் என்பது இறைவனின் விருப்பம் நம்மில் நிறைவேற நாம் அளிக்கும் அனுமதிஎன்பார் புனித அர்னால்டு. “இறைவா, எங்கள் தேவை என்னவென்று உமக்கு நன்றாகத் தெரியும்; உம் விருப்பத்தை நிறைவு செய்தருளும்என்று வேண்டும் போது, நமது செபங்களில் நம் தேவைகளைவிட, தந்தையாம் இறைவனே முன்னிலை பெறுவார்.

நிறைவாக, ஒவ்வோர் ஆண்டும் நம் ஆண்டவராகிய இயேசுவின் தாத்தா-பாட்டியும், அன்னை மரியாவின் தாயும்-தந்தையுமான புனிதர்கள் சுவக்கீன்-அன்னாவின் நினைவு நாளை ஒட்டி வருகின்ற சூலை மாதத்தின் நான்காம் ஞாயிறைஉலக தாத்தா-பாட்டிகள்தினமாகக் கொண்டாடுகிறோம். அதன்படிநம்பிக்கை தளராதோர் நற்பேறுபெற்றோர் (சீரா 14:2) என்ற மையப்பொருளில் சிறப்பிக்கும் இந்நாளில், நம் குடும்பங்களில் வாழும் தாத்தா-பாட்டிகளையும் முதியோர்களையும் நினைவுகூர்ந்து இறைவனிடம் வேண்டுவோம். நம் குடும்பங்களின் வேர்களை மறவாதிருப்போம். “நம் குடும்ப வாழ்வில் இறைநம்பிக்கையை அறிவிப்பதில் முக்கியப் பங்காற்றும் தாத்தா-பாட்டிகளை (திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இன்ஸ்டா பதிவு, 26.07.2019) குழந்தை மனநிலையுடன் ஏற்றுக்கொள்வோம். குழந்தை மனத்தை ஏற்றுக்கொண்டால் நம் செபம் எளிதாகுமன்றோ!

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையேஎன்ற செபத்தில் நாம் கேட்கும் அனைத்தும், நமக்கு இறைமகன் வழியாக உரிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனவேதான், இயேசு உறுதிப்படக் கூறுகிறார்: “கேளுங்கள், கொடுக்கப்படும்! தட்டுங்கள், திறக்கப்படும்!”

news
ஞாயிறு மறையுரை
ஜூலை 20, 2025, ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) தொநூ 18:1-10; கொலோ 1:24-28; லூக் 10:38-42 - இறைவனின் சாயலே விருந்தினர்!

நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றில் முதலிடம் பிடிப்பது உணவே. உணவின் அடிப்படைத் தேவையை நன்கு உணர்ந்ததாலே நம் முன்னோர்கள் தாம் உண்பதோடு மட்டுமல்லாமல், உணவில்லாமல் வறுமையில் வாடிய ஏழை எளியவர்களுக்கும், வீட்டிற்கு வரும் புதியவர்களுக்கும் உணவினை வழங்கி அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ்ந்தனர். ‘முகர்ந்தாலே வாடிவிடும் அனிச்சம் மலர்போல (குறள் 90), முகத்தை மாறுபட்டு வைத்தாலே விருந்தினர் மனம் வருந்துவர் என்பதால், விருந்தினரை அன்போடு உபசரித்தனர். வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாறி, விருந்துண்டு செல்வதற்காகவே வீட்டிற்கு முன்பு திண்ணை அமைத்து வீட்டைக் கட்டினர். வேலை செய்து சேமித்த செல்வத்தின் ஒரு பகுதியைப் பிறருக்கு உணவு அளித்தல் போன்ற செயல்களுக்குச் செலவிட்டனர். தற்போது வீடுகளில் திண்ணையும் இல்லை; அறிமுகமில்லாதவர்களை வீட்டிற்குள் அழைப்பதுமில்லை. நம் பண்பாடுகளினுள் பல மறக்கப்பட்டு வருகின்றன. விருந்தோம்பல் என்பது கற்பனையாய், கனவாய் மாறிவருவது, உண்மையிலேயே நம் தலைமுறை சந்தித்துவரும் பெரும் இழப்புதான்.

ஆண்டின் பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். உறவுகளை வளர்க்க மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிக முக்கியக் கொடைகளில் ஒன்றுதான் விருந்தோம்பல். இன்றைய வாசகங்கள் விருந்தோம்பலால் வரும் வியத்தகு கொடைகளைப்பற்றிய சிந்தனைகளை நமக்கு வழங்குகின்றன.

நாம் உண்கின்ற உணவைப் பசியோடு வருகின்றவர்களுக்குக் கொடுத்து உபசரிக்கும் பண்பு தமிழர்களுக்கே உரிய ஒன்று. பசி எப்போதும் அவமானத்தைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்என்பது திருமூலரின் திருமந்திர வரி. உணவில்லையென்றால் உடலும் உடலில் ஒட்டியிருக்கும் உயிரும் அழிந்துவிடும். அனைத்துச் சமயங்களும் பசியோடும் களைப்போடும் வருபவர்களுக்கு உணவளிப்பது உயர்ந்த புண்ணியம் என்கின்றன. ‘விருந்தாளிகள் அடிக்கடி வரும் வீடு அல்லாஹ் நேசிக்கும் வீடுஎன்கிறது இசுலாமிய மறை. மண்ணில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உணவும் உடையும் வீடும் அளிப்பதுதான் உயர்ந்த அறம். ‘அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் (142:9-11) என்கிறது நற்றிணை. சங்க கால மகளிர் நள்ளிரவில் விருந்தினர் வந்தாலும் முகம் திரிந்து நோக்காது, அவர்களை எதிர்கொண்டு வரவேற்று உணவளித்தமையைக் கற்புடைமைக்குப் பொருத்திக்காட்டியுள்ளனர் நம் முன்னோர்கள். ‘விருந்தினர் போற்றுதும்என்பது நம் தமிழ் மரபு. இந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களை உற்றுநோக்கும்போதுநிறைந்த மனத்துடன் நாம் ஒருவருக்குச் செய்யும் விருந்தோம்பல் இறைவனின் வியத்தகு அருளை நாம் பெற்றுக்கொள்ள வழிசெய்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், முன்பின் அறிமுகமில்லாத மூன்று மனிதர்கள் தன் அருகில் நிற்கக் கண்ட ஆபிரகாம் அவர்களுக்கு விருந்து படைக்க முன்வருகிறார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வந்துவிடும் விருந்தினருக்குத் தன் வீட்டில் ஒன்றுமில்லாத நிலையிலும், தன் மகனை அடுத்த வீட்டிற்கு அனுப்பி அல்லது வீட்டிற்கு எதிரே உள்ள கடையில் கடனைச் சொல்லி ஒரு பழ இரசமோ, காப்பியோ வாங்கி வந்து கொடுக்கும் ஓர் எளிய குடும்பத்தில் நடக்கும் காட்சியைப்போல இங்கே ஒரு காட்சி நம் கண்முன் விரிகிறது. வானவர் என்று தெரியாமலேயே அவர்களை அழைத்து விருந்து படைத்த ஆபிரகாமின் செயலை வள்ளுவர் இவ்வாறு பாடுகிறார்:

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு (குறள் 86)

நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்துவரும் விருந்தினரையும் எதிர்கொண்டு வாழ்பவர், விண்ணவர் மத்தியில் விருந்தினர் ஆவார் என்பது வள்ளுவர் கூறிய அழகான கருத்து.

ஆபிரகாமின் விருந்தோம்பலைப் பற்றி விவரிக்கும்போது மூன்று மரக்கால் நல்ல மாவு, நல்ல இளங்கன்று, வெண்ணெய், பால் என மேன்மையானதையும் சிறந்ததையும் அவர் தெரிவுசெய்து விருந்து படைப்பது, நிறைவையும் அவரது நல்ல பண்புகளையும் காட்டுகிறது. எனவே, ஆபிரகாம் தங்களுக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்னும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறார். ஆபிரகாமைப் போலவே, இன்றைய நற்செய்தியில் மார்த்தாவும் மரியாவும் இயேசுவுக்கு கொடுக்கின்ற விருந்தோம்பலின் விளைவாக, சிறப்பான நன்மைகளையும் பாராட்டுகளையும் பெறுகின்றனர்.

யூதப் பாரம்பரியத்தில் வீட்டுக்கு வரும் போதகருக்கு விருந்து படைப்பதுதான் தலையாயக் கடமை. இதை நன்கு உணர்ந்ததால்தான் மார்த்தா உணவு தயாரிப்பதில் பரபரப்பாக இருந்தார். தன் சகோதரி தனக்கு உதவி செய்யாமல், இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தது குறித்து அவரிடம் புகார் கூறியபோது இயேசு மார்த்தாவிடம், “நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்; ஆனால், மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது (லூக் 10:42) என்று கூறுகிறார்.

இவ்வாறு இயேசு கூறுவதன் வழியாக மார்த்தாவின் பணிவிடையை அவர் சிறுமைப்படுத்தி விட்டார் என்று எண்ணவேண்டாம். ‘என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டார், ‘உமக்குக் கவலை இல்லையா?’ என்ற முறைப்பாட்டில் எழுந்த சிறு கோபத்தை இயேசு மாற்ற விரும்புகிறார். தமக்குப் பணிசெய்வதாக நினைத்து, அந்தப் பணிகளாலேயே மார்த்தா திசைதிருப்பப்பட்டதை இயேசு கண்டிக்கிறார். அவரது திசை இயேசுவாக இருந்திருக்கவேண்டும் என்று மார்த்தாவுக்கு உணர்த்துகிறார். முதலில் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியது, இயேசுவின் திருவார்த்தைக்கு என மார்த்தாவுக்குப் புரியவைக்கின்றார்.

இருவருமே இயேசுவின்மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். விருந்தாளியாக வந்த இயேசு வழங்கும் நற்செய்திக்குச் செவிமடுப்பதே சிறந்த விருந்தோம்பல். அதுவே சீடத்துவம் என்பதை மரியா புரிந்துகொண்டார். வீட்டிற்கு வந்த விருந்தினரை வரவேற்பதும், சிறந்த விருந்து கொடுப்பதும் அன்பின் வெளிப்பாடு என்பதை மார்த்தா புரிந்துகொண்டார். வீட்டிற்கு வந்த இயேசுவை முதலில் வரவேற்றவர் மார்த்தாதான் (10:38). எனவே, மார்த்தா மற்றும் மரியா ஆகிய இருவரின் செயல்களும் ஒன்றுக்கொன்று எதிரானவையல்ல; மாறாக, ஒன்றுடன் ஒன்று இணைந்து, நிறைவு செய்யக்கூடியவையாக உள்ளன. இயேசுவின் அருகில் அமர்ந்து அவர் குரலுக்குச் செவிமடுத்தல், விருந்தோம்பல் பணிகளில் ஈடுபடுதல் என்ற இரு நற்பண்புகளையும் ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும். இந்த இருவகை ஆன்மிகமும் இணைந்த வாழ்வுதான் சிறந்த செப வாழ்வு. சிறந்த செபம் என்பது தன் தேவைகளை முன்னிலைப்படுத்தாது, செபத்தில் தன்னையே இழந்துவிடுவதுதான்! அந்த வகையில் இரு பெண்களுமே தங்கள் தேவைகளை முன்னிலைப்படுத்தாது இயேசுவுக்கு முதலிடம் கொடுத்தனர்.

ஆகவே, நமது அன்றாட வாழ்வில் இறைவனுக்கும் அயலாருக்கும் விருந்தோம்பல்மிக்க கிறித்தவர்களாக வாழ்ந்து, நிறைந்த பயனையும் மகிழ்வையும் பெறுவோம். “நம்மைத் தேடி வந்து நம் கதவுகளைத் தட்டும் ஏழைகளும், தங்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வைப் பெறும் வகையில் நம் விருந்தோம்பல் பண்பு இருக்க வேண்டும்எனும் நம் திருத்தந்தை பிரான்சிசின் கூற்று நம் பாடமாகட்டும் (மூவேளைச் செப உரை, 22.7.2019).

நாம் உடன்பிறந்த உணர்வோடு அன்னியரையும் வரவேற்று விருந்து படைக்கும்போது அவர்கள் மத்தியில் வானதூதர்களும் இருக்கலாம். வானதூதர்கள் நம் இல்லங்களுக்கு வந்து நம்மை வாழ்த்திடும் வாய்ப்பையும் பெறலாம் (எபி 13:2). எனவே, விருந்துகளைவிட விருந்தினர்கள் முக்கியத்துவம் பெறும்போதுவிருந்தோம்பல்என்ற வார்த்தை இன்னும் பொருளுள்ளதாக மாறும்.

விருந்து என்பது வெறும் உணவு மட்டுமல்ல, ஒவ்வொரு விருந்துக்கும் பின்புலத்தில் பாசம், பந்தம், பண்பாடு, உறவு, நட்பு என்று எத்தனையோ அம்சங்களை நாம் கொண்டாடுகின்றோம். உணவு வெறும் பொருள் அல்ல; அது அக்கறை. அது உயிர் வளர்க்கும் சக்தி. பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய மகிழ்ச்சி. எனவே, அக்கறையற்ற மனநிலையோடு கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதோ, ஒன்றும் செய்ய இயலாது என்ற மனநிலையோடு கைகளை விரித்தபடி தன் இயலாமையை வெளிப்படுத்துவதோ ஒரு கிறித்தவரின் செயலாக இருக்கமுடியாது.

இன்றைய உலகில் அடுத்தவரை, இறைச்சாயலாகக் கருதாவிட்டாலும், மனிதராகவாகிலும் வரவேற்க வேண்டும். “இறைவனின் சாயலே விருந்தினர் (Athiti devo bhava).

news
ஞாயிறு மறையுரை
ஜூலை 13, 2025, ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) இச 30:10-14; கொலோ 1:15-20; லூக் 10:25-37 - நாமும் போய் அப்படியே செய்வோம்!

கடந்த 20 நூற்றாண்டுகளாகப் பிறரன்பைக் குறித்த உண்மைகளை மனித சமுதாயத்தின்மீது ஆழமாகப் பதித்துவரும் ஓர் அற்புதமான உவமைநல்ல சமாரியர்உவமை. இவ்வுவமைக் கிறித்தவம் என்ற வட்டத்தையும் தாண்டி, ஏனைய சமயத்தினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறான இன்று உலகப் புகழ்பெற்றநல்ல சமாரியர்உவமை வழியாக இயேசு நம் உள்ளங்களில் பதிய வைக்கும் சில பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.

நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” (லூக் 10:25) என்ற திருச்சட்ட அறிஞரின் கேள்வியோடு இன்றைய நற்செய்திப் பகுதி துவங்குகிறது. இவரின் கேள்வி ஓர் அறிவுத்தேடலால் எழுந்த கேள்வி அல்ல; மாறாக, பதிலைத் தெரிந்து வைத்துக்கொண்டுஇயேசுவுக்குத் தெரியுமா?’ எனச் சோதிக்கும் நோக்குடன் கேட்கப்பட்ட கேள்வி. திருச்சட்ட அறிஞரின் எண்ண ஓட்டங்களை ஆய்ந்தறிந்த இயேசு, “திருச்சட்ட நூலில் நீர் என்ன வாசிக்கிறீர்?” (10:26) என்ற மறு கேள்வியை முன்வைக்கிறார். எவ்விதத் தயக்கமும் இன்றித் திருச்சட்ட அறிஞர், மனித வாழ்வின் ஆணிவேராக அமையும் இறையன்பு, பிறரன்பு ஆகிய இருபெரும் கட்டளைகளை இணைச்சட்டம் (6:5) மற்றும் லேவியர் நூல் (19:18) என்ற இருவேறு இடங்களிலிருந்து எடுத்து ஒரே மூச்சில் இணைத்துக் கூறுகிறார். இயேசுவோ அறிஞரிடம், “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும், அப்பொழுது வாழ்வீர் (10:28) என்றதும்திருச்சட்ட அறிஞர் தன்னை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” (10:29) என்று இயேசுவிடம் கேட்கிறார். திருச்சட்டங்களை எல்லாம் அறிந்த அவருக்கு அடுத்திருப்பவர் யார் என்பது தெரியாமலா இருக்கும்?

திருச்சட்ட அறிஞர் மேற்கோள்காட்டியஅடுத்திருப்பவர் (லேவி 19:18) என்ற சொல் தன் சொந்த இஸ்ரயேல் இனத்தவரைக் குறிக்கும் சொல். ஒவ்வோர் இஸ்ரயேலரும் சக இஸ்ரயேலரைச் சகோதரராகப் பார்க்க வேண்டும் என்ற சட்டமிருந்தது. இதனை அதிகமான வேளைகளில் இஸ்ரயேலர் கடைப்பிடித்தனர். மோசே கூறிய அதே அதிகாரத்தின் 34-ஆம் சொற்றொடரில் கூறப்பட் டுள்ளஅடுத்திருப்பவர்என்ற சொல் அந்நியரைக் குறிக்கும். திருச்சட்ட அறிஞர் மோசே கட்டளைகளின் முதல் பகுதியை மட்டும் மேற்கோளாக இயேசுவிடம் கூறிவிட்டு, அந்நியரைப்பற்றிக் குறிப்பிடும் இரண்டாம் பகுதியைப்பற்றிக் குறிப்பிடவில்லை. தன் வசதிக்காக அவர் அதை மறைத்துவிட்டார் போலும்! நிலைவாழ்வைப் பெறுவதற்கு நான் அன்பு செலுத்தவேண்டியஅடுத்திருப்பவர்இஸ்ரயேல் இனத்தவரா? அல்லது அந்நியரா? என்பதைத் தெளிவுபடுத்துங்கள் என்று இயேசுவிடம் கேட்பது போன்று அமைகிறது திருச்சட்ட அறிஞரின் கேள்வி.

எனக்கு அடுத்திருப்பவர் யார்?’ அடுத்திருப்பவர் என் உறவினரா? என் இனத்தைச் சார்ந்தவரா? அல்லது எல்லாருமா? யாருக்கெல்லாம் உங்கள் உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் அனைவரும்அடுத்திருப்பவர்என்று இயேசு பதில் கூறுகிறார். அதாவது, நான் யாருக்கெல்லாம் அன்பு செய்யக் கடமைப்பட்டுள்ளேனோ அவர்கள் அனைவரும் அடுத்திருப்பவர்கள் அல்லது அயலார்கள் (லூக் 10:27). நம்மைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் வசிப்போர், அனாதை இல்லங்கள், குழந்தைக் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், தொழுநோயாளர் அகங்கள், மாற்றுத்திறனாளிகளின் உறைவிடங்கள், திருநர்களின் வாழ்விடங்கள், புலம்பெயர்ந்தோர் முகாம்கள் போன்ற இடங்களிலெல்லாம் வாழ்வோர் அனைவரும் நம் அடுத்திருப்பவர்களே. இவர்கள் யாவரும் நம் சொந்தங்களே. இத்தகையோருக்குச் செய்யும் உதவி அவர்களின் தேவையில் மலர்வதாகும். ‘உதவி என்பது தேவையில் மலர்வதே அன்றி, காரணத்தால் வருவது அல்லஎன்கிறது ஜெர்மன் பழமொழி. இயேசு கூறிய இவ்வுவமையில், குற்றுயிராய் அடிபட்டுக் கிடப்பவர் யார்? ஏன்? எவ்வாறு? யாரால் அடிபட்டார்? என்று கண்டுபிடிப்பதில் அவ்வழியே வந்த சமாரியர் தன் சக்தியையும் நேரத்தையும் வீணாக்காமல், அடிபட்டுக் கிடப்பவரை எவ்விதம் காப்பாற்ற முடியும் என்பதில் கவனத்தைத் திருப்பினார் என்பது இவ்விடம் எண்ணிப் பார்க்கத்தக்கதே.

எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் செல்லும் வழியில் ஆடைகள் களையப்பட்டு, அடிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நபரை ஒரு குரு, ஒரு லேவியர், ஒரு சமாரியர் ஆகிய மூவருமே பார்க்கின்றனர். குரு போகிற போக்கில் அவரைக் கண்டார், விலகிச் சென்றார். லேவியரோ அவ்விடத்துக்கு வந்தார், கண்டார், பின்னர் விலகிச் சென்றார். ஆனால், அடுத்து வந்த சமாரியரோ, அருகில் வந்தார், கண்டார், பரிவு கொண்டார். இம்மூவரின் விழிகளிலும் பதிந்த காட்சி ஒன்றுதான். ஆனால், செயல்களில் மாற்றத்தை உருவாக்கியது எது? கண்கள் அல்ல, இதயம்! இதயத்தில் உருவான பரிவு சமாரியரைச் செயலில் ஈடுபட வைத்தது.

பரிவு என்பது சமயம் சார்ந்தது என்பதற்கு முன்னதாக அது, மனிதகுலத்திற்கான ஒன்று. நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க அழைக்கப்படுவதற்கு முன்பாக மனிதர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்என்ற திருத்தந்தை லியோ அவர்களின் கூற்றும் (மே 28, 2025, புதன் மறைக்கல்வி உரை), “தேவையிலிருப்போருக்குப் பரிவு காட்டுவதே அன்பின் உண்மை முகம்என்னும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றும் சாலச் சிறந்ததே! (ஜூலை 24, 2019, மூவேளைச் செப உரை). 

இந்த மூவரின் மனங்களில் ஓடிய எண்ணங்களைப் பற்றி மார்ட்டின் லூதர் கிங் இளையவர் இவ்வாறு தன் உரையில் குறிப்பிடும்போது, அடிபட்டுக் கிடந்தவரைக் கண்ட குருவுக்கும் லேவியருக்கும் மனத்தில் எழுந்த கேள்வி: “இந்த மனிதருக்கு நான் உதவி செய்தால், எனக்கு என்ன ஆகும்?” இந்தக் கேள்வியே அவர்களை அடிபட்டவரிடமிருந்து விலகிச்செல்ல வைத்தது. இதற்கு நேர்மாறாக, அங்கு வந்த சமாரியரின் மனத்தில் எழுந்த கேள்வி: ‘இந்த மனிதருக்கு நான் உதவி செய்யாவிட்டால், இவருக்கு என்ன ஆகும்?’ பரிவும் இரக்கமும் அன்பும் நிறைந்த உன்னத உணர்வே சமாரியரைச் செயலுக்கும் இட்டுச்சென்றன

இன்றைய உவமையில் சமாரியர் செய்த செயல் நமக்கு விடுக்கப்படும் ஒரு சவால். சமாரியர் ஆற்றியுள்ள செயலை இயேசு பட்டியலிடும்போது, சமாரியர் அடிபட்டவரைக் காண்கிறார், பரிவு கொள்கிறார், அணுகி வருகிறார், காயங்களைக் கட்டுகிறார், சுமந்து செல்கிறார் (விலங்கின்மீது), அவரோடு தங்குகிறார், பொறுப்பாளரிடம் ஒப்படைக்கிறார், செலவுகளை ஏற்கிறார் (10:33-35).

அருகில் வருவதும், பரிவு கொள்வதும், காயங் களைஆற்றுவதும் தங்குவதும் சுமத்தலும் கொடுத்தலும் இயேசுவின் பரிவுமிக்க செயல்பாடுகள். சமாரியரின் அத்தனை செயல்களும் இயேசுவின் முழு இரக்கக்குணத்தையும்  வெளிக்காட்டக் கூடியவையாக இருந்தன. தன்னலத்தோடு மற்றவரைப் புறக்கணிக்கும் நடத்தையிலிருந்து விடுபட்டு, நம் பாதையில் சந்திப்பவர்கள் மீது, குறிப்பாக, துன்புறுவோர் மற்றும் தேவையில் இருப்போர் மீது பரிவு காட்டும்போதும், அவர்கள் அருகில் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றும்போதும் நாம் இயேசுவின்வழியோரச் சீடர்களாகமாறுகின்றோம்.

கடவுளின் கட்டளை நமக்குப் புரியாததும் இல்லை, அது தொலைவிலும் இல்லை. அதைத் தேடி வானத்திற்கும் செல்லவேண்டாம், கடல்களைக் கடக்கவும் வேண்டாம். கடவுளுடைய கட்டளைஉனக்கு மிக அருகில், ‘உன் வாயில், ‘உன் இதயத்தில்இருக்கிறது என்கிறது இன்றைய முதல் வாசகம். கைக்கெட்டும் தூரத்தில் அடிபட்டுக் கிடக்கும் பெயரில்லா மனிதர்களைக் கைதூக்கி விடுவதில் கடவுளின் கட்டளை அடங்கியிருக்கிறது; ‘அடுத்தவர்மீது அக்கறையின்மைஎன்ற நோயை நலமாக்குவதில் அடங்கியுள்ளது. பார்க்கும் தூரத்தில் குற்றுயிராய்க் கிடந்த பெயரில்லா நபரைச் சமாரியர் கைநீட்டித் தழுவிக்கொண்டதில் திருச்சட்டம் நிறைவுகண்டது. “அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ 13:10).

நீரும் போய் அப்படியே செய்யும்என்ற இயேசுவின் வரிகள் மற்றவர்களைக் கவனிக்காமல் எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திக்கும் நமக்கான வரிகள். சமாரியர் செய்ததுபோல் அன்பு செய்ய வேண்டும். அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல; அது ஒரு செயல். நாம் மேற்கொண்டுள்ள இந்த உலகப் பயணத்தில், தேவைகளில் இருப்பவர்களைக் கண்டதும், அவர்களின் தேவைகள் நிறைவேறும்வரை மீண்டும் மீண்டும் உதவிகள் செய்யவேண்டும். திருத்தந்தை லியோ குறிப்பிட்டுள்ளதுபோல, “ஒருவருக்கு நாம் உதவ வேண்டும் என்று எண்ணினால், அவர்கள் அருகில் நெருங்கிச் சென்று உதவ வேண்டும். அவர்களுக்கு உதவுவதில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். நமது கரங்கள் அழுக்காகிட அனுமதிக்க வேண்டும் (மே 28, 2025).

எனவே, இயேசுவின் பாதச்சுவடுகளைப் பின்பற்றுவதன் வழியாக நாம்கிறிஸ்துவின் பயணிகளாகமாறுவோம். நமது பயணத்தை நிறுத்தி மற்றவர்களிடத்தில் இரக்கம் காட்டுவோம். சாலையில் காயமடைந்து கிடந்த அந்த மனிதர் நம் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்துகின்றார் என்பதை மறவோம். நாமும் போய் அப்படியே செய்வோம்.