news
ஞாயிறு மறையுரை
செப்டம்பர் 28, 2025, ஆண்டின் பொதுக்காலம் 26 - ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) ஆமோ 6:1,3-7; 1திமொ 6:11-16; லூக் 16:19-31 - ‘உணர்வின்மை’ ஒரு பெருங்குற்றம்!

இரக்கம் என்பது மனிதனின் முதன்மை அடையாளம். மனித சமுதாயம் பரிவும் கரிசனையும் ஒற்றுமையும் தழைத்திருக்க வேண்டிய ஓர் உயிர்மை அமைப்பாகும். ஒருவரின் துன்ப நிலையை மற்றவர்கள் உணர்வதுதான் மனிதநேயத்தின் அடிப்படை. இதுவே, சமூகத்தின் உயிரணு. பிறரின் துன்பத்தை உணர மறுப்பது ஒருவர் மனிதனாக இருக்கவேண்டிய அடிப்படை பண்புகளை மறுப்பதாகும். ஒருவர் தனது நலனையே கருதி, பிறரின் துயரங்களை நோக்காமல், புறக்கணித்து வாழத் தொடங்கினால், அது சமூகத்தின் பேரழிவே. ‘உணர்வின்மைஎன்பது ஒருவர் பிறரின் துன்ப நிலையை, பிணிகளை, வறுமையை, பசியை, சமூக அநீதியை ஏற்க மறுக்கும் மனநிலையாகும். ஆகவேதான், உணர்வின்மை என்பது ஒரு பெருங்குற்றம்; ஒரு பெரும்பாவம்!

இன்று நாம் பொதுக்காலத்தின் 26-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அடுத்தவர்களின் தேவையைப் பற்றிய அக்கறையின்மையும், பிறரது வேதனை பற்றிய உணர்வின்மையும் ஒரு பெருங்குற்றம் என எச்சரிக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் ஆமோஸ் தன்னுடைய சமகாலத்துச் செல்வந்தர்களின் சொகுசு வாழ்க்கையையும் அவர்களது கிறக்க நிலையையும் இடித்துரைக்கிறார். குறிப்பாக, சமாரியாவின் உயர்குடி மக்களுக்கு எதிராக நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கின்றார். செல்வக் குவிப்பும் அதனால் ஏற்பட்ட நுகர்வுவெறிச் சொகுசுகளுமே வாழ்வுக்கான பாதுகாப்பு என அவர்கள் இறுமாந்திருந்தார்கள். வஞ்சிக்கப்பட்ட ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறித்துக் கொண்டுவாழ்வு இனிக்கிறதேஎனச் சுகபோகத்தில் மூழ்கியிருந்தனர். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். ஆடம்பரத்திலும் கேளிக்கைகளிலும் அழகு சாதனங்களிலும் நுகர்வுவெறியிலும் மூழ்கியிருந்த இஸ்ரயேலின் மேட்டுக்குடிப் பெண்டிரை ஆமோஸ், ‘பாசான் மாடுகள் (ஆமோ 4:1) என இடித்துரைக்கிறார். ஏழைகளின் உழைப்பை மனச்சாட்சியின்றிச் சுரண்டுமாறு தங்கள் கணவருக்கு மந்திரம் ஓதிய (ஆமோ 4:1) இவர்களைகொழுப்பேறிய பசுக்களாக (திபா 22:12) சுட்டிக்காட்டுகிறார்.

ஏழைகளின் நலனின் அக்கறையின்றி இருப்பவர்களைஇன்பத்தில் திளைத்திருப்போர், “கவலையற்றிருப்போர், ‘உயர்குடி மக்கள், ‘பெருமை வாய்ந்தவர்கள் (6:1) போன்ற பெயர்களில் அழைக்கும் ஆமோஸ், விருந்து என்னும் உருவகம் வழியாக அவர்கள் வாழ்ந்த ஆடம்பரமான வாழ்க்கையையும் மற்றவர்கள்மேல் அவர்கள் காட்டிய அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டுகின்றார் (6:4). செல்வர்கள் தங்களுடைய மேட்டிமை வாழ்வால் எவற்றையெல்லாம் செய்ய இயலாதோ அவற்றைச் செய்யும் மாயை உலகில் வாழ்ந்தனர் என்று சாடும் ஆமோஸ், தாவீதைப்போல இசைப் பாடகராகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இவர்களின் பாடல் அலறலுக்கு ஒப்பானது என்கிறார் (6:5). இவ்வாறாக, செல்வர்கள் தங்கள் எல்லாச் செயல்கள் வழியாகச் சாதாரண மக்களிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் தங்களை அந்நியப்படுத்திக்கொண்டனர். நல்லனவற்றைத் தேர்ந்தெடுக்கும் மனப்பக்குவத்தையோ அதற்கான வழிகளையோ அவர்கள் தங்களுக்கென உருவாக்கிக்கொள்ளவில்லை. பாவப் பளு ஏற ஏறக் கடவுளின் திசையைக் கண்டறியும் அவர்களின் பார்வைகளும் மங்கிக்கொண்டே இருந்தன.

ஆகவேதான், மற்றவர்கள்மேலும் கடவுள்மேலும் காட்டிய அக்கறையின்மை அவர்களுக்கு ஒருசேர அழிவையே உறுதியாகக் கொண்டுவரும் என ஆமோஸ் எச்சரிக்கிறார் (6:7). ஆமோஸ் உரைத்தபடியே, அவரது இறைவாக்குப் பணி முடிந்த 30-40 ஆண்டுகளில் சமாரியா என்கிற இஸ்ரயேலின் தலைநகரம் அசீரியப் படைகளால் நிர்மூலமாக்கப்பட்டு வடநாடு அழிக்கப்பட்டது (கி.மு. 722) என்பது நாம் அறிந்த இஸ்ரயேலரின் வரலாறு.

வான்வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் (லூக் 16:9) என்றும் கூறும் கடவுள், தங்களுடைய சொகுசு வாழ்வுக்கும் நுகர்வுவெறிக்கும் வாயில்லா ஏழைகளின் உடலையும் உயிரையும் சுரண்டுவதை எப்படிச் சகித்துக்கொள்வார்? சுயநலத்தையும் கண்டுகொள்ளாத தன்மையையும் கண்டு கடவுள் கொதித்துப்போய் விடுகிறார். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும்செல்வரும் இலாசரும்உவமையில், தனக்குக் கீழ் ஏழை இலாசர் உணவின்றி அவதிப்படுவதைப் பற்றிக் கொஞ்சம்கூட அக்கறை கொள்ளாமல் தன்னுணர்வு அற்ற நிலையில் செல்வர் இருப்பதைப் பெருங்குற்றமாகப் பார்க்கிறார்.

மாந்தரெல்லாம் மனநிறைவோடு வாழவேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அந்த மனநிறைவு செல்வத்தால் வந்துவிடாது என்பது இயேசுவின் போதனைத் திருப்பம். இந்த உலகம் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால், சிலர் கடவுளின் படைப்பைச் சூறையாடி, அதனைப் பதுக்கி, உழைப்பவரை அடிமையாக்கி, உழைப்பிற்கும் தேவைக்குமேற்ற ஊதியம் வழங்காமல் தங்கள் வாழ்வை மட்டும் வளப்படுத்திக் கொண்டமையால் உருவானதே ஏற்றத்தாழ்வு. இதன் காரணமாகவே, இலாசர் எவ்வகையிலும் கவனிப்பாரற்றுக் கேவலமாக, உடல் முழுவதும் புண்களாய் நிறைந்துஅச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார் (லூக் 16:20). “கிடந்தார்என்ற சொல்லில் இலாசரின் அவலநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. செல்வரைப் பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட தூசியும் இலாசரும் ஒன்றே!

இலாசரின் நிலைமையை, ) அவர் ஓர் ஏழை, ) அவர் உடல் முழுவதும் புண்கள், ) வீடற்றவர் ) பசியால் துடித்தவர் ) நாய்களோடு இருப்பவர் என விவரிக்கும் லூக்கா, செல்வரின் மனநிலையை இவ்வாறு விவரிக்கிறார்: ) இலாசரைப் பற்றிச் செல்வருக்குக் கவலை இல்லை. ) அவரது பசி, பட்டினி பற்றிச் செல்வர் சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை. ) அவர் இலாசரைக் கண்டுகொள்ளவில்லை. ) தம் செல்வத்தில் சிறு பகுதியைப் பகிர்ந்துகொள்ளவில்லை. ) ஒருவேளை உணவுகூட கொடுக்க முன்வரவில்லை. ஆகவே, இலாசரின் நிலை பற்றியஉணர்வின்மையேசெல்வரின் பெரிய குற்றமாகிறது. செல்வர் தம்மையும் தம் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள அவர் கட்டியெழுப்பிய தடுப்புச் சுவர்களே அவர் விண்ணகம் செல்லமுடியாது அவரைத் தடுத்துவிடுகின்றன (16:26). ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையே உள்ள தடைச் சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். இதுவே, இயேசு நம்முன் வைக்கும் விண்ணகத் தேர்வுக்கான சவால். ஆகவே, இறையாட்சி சமூகத்தின் உறுப்பினர் தகுதியைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்?

முதலாவதாக, இன்றைய உலகில் பெரும் பிரச்சினை பற்றாக்குறையல்ல, பகிராக்குறையே! தான் படைத்த அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவைக் கடவுள் தந்துள்ளார். ஆனால், மனிதருள் பலர் போதுமான வளங்களைப் பறித்து அவற்றைத் தமக்கும் தம் தலைமுறைகளுக்கும் சேர்த்து வைத்துள்ளனர். ஒருவர் எவ்வளவு செல்வத்தை வைத்திருக்கிறார் என்பதை வைத்து இந்த உலகம் கணக்கிடும், ஆனால் அவர் எவ்வளவு கொடுக்கிறார் என்பதை வைத்துக் கணக்கிடுபவர் கடவுள். அளவுக்கு அதிகமான செல்வம் அநீதியானது. ஏனெனில், அது அநீதியாகச் சேர்க்கப்பட்டது. செல்வம் நம் அன்றாட அனுபவத்திற்கே, அவை அன்பிற்குரியவை அல்ல. வாழ்வே உயர் செல்வம். அதை நமக்கென மட்டும் என்றில்லாமல் பிறர்க்கென வாழ்கையில் உண்மையான செல்வந்தர் நாமே. “பகிரப்படாத செல்வம் பாவமானதுஎன்ற புனித பேசிலின் பார்வை முற்றிலும் உண்மை. பகிர முன்வராதோர் இறையாட்சி சமூகத்தில் உறுப்பினராகத் தகுதியற்றவர்களே!

இரண்டாவதாக, இந்த உலக வாழ்வு மறுவாழ்வை நமக்குப் பெற்றுத்தரும். மறுவாழ்வுக்கு இந்த உலக வாழ்வே ஆதாரம். வாழ்வில் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் நம்முடைய மறுவாழ்வை நிர்ணயிக்கின்றன. செய்த குற்றங்களுக்குத் தண்டனை என்பது பொதுவாக இவ்வுலக நீதியின் அளவுகோல். ஆனால், செய்யத் தவறிய நன்மைகளுக்காகத் தண்டனை பெறுதல் என்பது மறு உலக நீதியின் அளவுகோல். நம் அயலார்மீது அன்பு, பரிவு, கருணை காட்டுவது நாம் செய்யவேண்டிய நன்மைகள். இவற்றைச் செய்ய மறுக்கும்போது, நம் வாழ்வில் கடவுளின் எண்ணங்களும் ஏக்கங்களும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இதுவே தொடர்கதையானால் பாவமே நெறிமுறையாக்கப்பட்டு கடவுளை நிரந்தரமாக மறந்துபோய்விடும் நரக நிலையை நாமே உருவாக்கிக்கொள்வோம்.

மூன்றாவதாக, அடுத்தவர்களின் தேவைகளைப் பற்றிய கவலையின்மை, அவற்றைக் கண்டுகொள்ளாமை குறிப்பாக, பிறரின் துன்பநிலை பற்றியஉணர்வின்மைஒரு பெருங்குற்றம். கொடும் வறுமை, கடுமையான நோய், பெருந்தோல்வி, இழப்பு, வஞ்சிக்கப்பட்ட நிலை, போன்றவற்றால் நொந்து நொடிந்து முகவரியற்ற நிலையில் இருக்கும் இலாசர்கள் நம் மத்தியில் ஏராளம். “இரக்கம் என்பது புலனாகாத ஒரு சொல் அல்ல, அது ஒரு வாழ்வு முறை. இரக்கத்திற்குப் பார்க்கக்கூடிய கண்களும், கேட்கக்கூடிய காதுகளும், தீர்த்து வைக்கக் கூடிய கைகளும் உள்ளன (சிறப்பு யூபிலி மறைக்கல்வி உரை, 30.06.2016) என்ற திருத்தந்தை பிரான்சிஸின் எண்ணங்கள் எண்ணிப்பார்க்கத்தக்கதே. எனவே, பிறரின் துன்பங்கள், தேவைகளின் நிலைபற்றி உணர்வற்றும் கவலையற்றும் நாம் வாழ்ந்தோமெனில் அதுவே, இன்றைய பெரும் பாவம்! பெருங்குற்றம்!

news
ஞாயிறு மறையுரை
செப்டம்பர் 21, 2025, ஆண்டின் பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) ஆமோ 8:4-7 1திமொ 2:1-8 லூக் 16:1-13 - இயேசுவே நம் ஒப்பற்ற செல்வம்!

கடவுள் இந்த உலகைத் தமது சாயலில் மிக அழகாகப் படைத்தார். ஆனால், மனிதனோ செல்வத்தைப் படைத்தான். தன் படைப்பாம் செல்வத்தை வைத்து உலகை ஆட்டிப் படைக்க விரும்புகின்றான். இன்று செல்வத்தை நம்பியே தங்கள் செல்வாக்கை நிலைப்படுத்த விழைகின்றனர் பலர். செல்வம் தங்களைப் பாதுகாக்கும் என்ற போலி நம்பிக்கையில்தான் பலரும் பொழுதைக் கழிக்கின்றனர். செல்வம் நமக்காகவேயன்றி, நாம் செல்வத்திற்காக இல்லை என மனம் உணர மறந்துபோகிறோம். படைத்தவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, செல்வத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தும்போது அதற்கு அடிமையாகிறோம். வாழ்வில் நாம் பெற்ற உயர்ந்த செல்வம் நம் நெஞ்சம் வாழும் நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் நாயகருமான கடவுளுமே. ஒப்பற்ற செல்வம் இயேசுவைத் தவிர வேறு எவர்? (பிலி 3:8). இன்றிலிருந்து நாளை காணாமல்போகும் செல்வத்தின்மீது பற்றுக்கொண்டு, அதற்கு அடிபணிந்து வாழ்தல் மடமையும் அறிவீனமுமேயன்றி வேறேது?

பொதுக்காலத்தின் 25-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் பயன் கருதாப் பாசத்தோடு நம்மை அரவணைக்கும் கடவுளைப்போல, ஏழை எளியோரை அரவணைத்து மதித்து நடக்க அழைப்புவிடுக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில், செல்வத்தின்மீது மிதமிஞ்சிய பற்றுக்கொண்டு தவறான வழிகளில் பணத்தைக் குவித்து, வறியோரையும் ஒடுக்கப்பட்டோரையும் அழித்தொழிக்க நினைக்கும் செல்வந்தர்களைக் கண்டிக்கிறார் இறைவாக்கினர் ஆமோஸ். ஆடு மேய்த்தும், அத்திமரம் வளர்த்தும் பிழைப்பை நடத்தியவர் ஆமோஸ். தென்னாடான யூதாவைச் சார்ந்த இவர், வடநாடான இஸ்ரயேலுக்குச் சென்று இறைவாக்குப் பணியை மேற்கொண்டார். ஆமோஸ் இஸ்ரயேல் மக்களிடம் இறைவாக்குரைக்கக் கடவுளால் அனுப்பப்பட்டபோது, அவர்கள்  பொருளாதாரத்தில் வேரூன்றியிருந்தனர். வளமும் வாழ்வும் செல்வரிடமும் வலியோரிடமும் மட்டுமே இருந்தன. அவர்களின் ஆன்மிகச் சக்தி அதல பாதாளத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. சிலை வழிபாடு எனும் தீயப்பழக்கம் வானம் வரையிலும் விரிந்து பரந்திருந்தது. இந்நாட்டின் சமயத் தலைநகரம் பெத்தேல் தீமைகளின் மையப்புள்ளியாக இயங்கிச் செயல்பட்டது. தங்கள் செல்வாக்கைப் பறைசாற்ற அரண்மனை போன்ற வீடுகளை வானளாவாகக் கட்டி நிமிர்ந்து பார்த்தார்கள். அடிப்படை வசதிகளுடன் வீடு கட்டுவது நியாயம். ஆனால், செல்வப் புகழைப் பறைசாற்றும் நோக்குடன் வீடு கட்டுதல் என்பது கடவுள் தந்த வளங்களை வீணாக்குவதே! இந்தப் போக்கு இப்போதும் இவ்வுலகில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஓய்வுநாள் போன்ற திருநாள்களில்கூட இறைவாக்கினைக் கேட்டுச் சிந்திக்கும் பொறுமையில்லாமல், தங்கள் வியாபாரத்திலே ஈடுபட்டு இலாபத்தை இஸ்ரயேலர் குவித்து வந்தனர். கள்ளத்தராசு, சிறியனவாக்கப்பட்ட எடைக்கல் போன்றவற்றால் பொருள்களின் அளவுகளைக் குறைத்துக்கொண்டு விருப்பம்போல் விலையேற்றிக் கொள்ளை இலாபம் ஈட்டினர் (8:5). தவிட்டைக்கூட தானியம் எனக் கூறி மனச்சாட்சியை விற்றுக் கலப்படம் செய்து கொள்ளையடித்துக் குபேரர்கள் ஆயினர் (8:6). ஏழை எளிய மக்களை அடிமைகளாக விற்றனர் (8:6). சமயக் கொண்டாட்டங்களுக்கான வெளிப்புற ஆடம்பரங்களைப் பகட்டுடன் கொண்டாடுவதற்காக நிதிகளைக் கொட்டிக் குவித்தனர். தங்கள் தவறை மறைப்பதற்காக, திருவிழாக்களையும் தேரோட்டங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்தனர். வேடங்களிலும் பக்தி முழக்கங்களிலும் மயங்கி விடுபவரல்லர் இறைவன்! (5:23)

செல்வத்தில் மூழ்கி நிச்சயமற்ற வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்த தம் சமகாலத்துப் பணக்கார மற்றும் ஆதிக்க வர்க்கத்திடம் ‘கடவுளைத் தேடு; நீ வாழ்வாய் என அழைப்பு விடுக்கிறார் ஆமோஸ்.  அதுமட்டுமன்றி, கடவுளின் சட்டங்களுக்கு எதிராகச் செயல்படுவது நாட்டுக்கே அழிவை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கிறார்.

ஆமோஸ் இஸ்ரயேலின் அநீதியான செயல்களைச் சாடுகின்ற அதேவேளையில், நேர்மையற்று தவறான செயல் புரிந்த வீட்டுப்பொறுப்பாளரை இயேசு இன்றைய நற்செய்தியில் பாராட்டுகின்றார். இயேசு கூறிய இந்த உவமை புரிந்துகொள்வதற்குக் கடினம், ஆயினும், இவ்வுவமை வழியாக இயேசு நமக்குக் கூறும் பாடம் குறித்துச் சிந்திக்கவேண்டும். ‘முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப்பொறுப்பாளர் உவமையில், நேர்மையற்ற வீட்டுப்பொறுப்பாளரின் முன்மதியை இயேசு பாராட்டினாலும், நேர்மையற்ற செல்வத்தை நீதியான முறையில் எப்படிக் கையாள்வது? அழியா விண்ணகச் செல்வம், பணிவிடையின் முக்கியத்துவம் குறித்துச் சில முக்கியப் பாடங்களை இயேசு நம்முன் வைக்கின்றார்.

முதலில், “நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள் (16:9) என்கிறார் இயேசு. ‘நேர்மையற்ற செல்வத்தைப் பயன்படுத்தி நண்பர்களைத் தேடிக்கொள்வது எப்படி முறையாகும்?’ என்ற கேள்வி நம்மில் எழாமல் இல்லை. எனினும், இக்கூற்றில் ஓர் ஆழமான உண்மை பொதிந்துள்ளதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். லூக்காவின் பார்வையில் எல்லாச் செல்வமும் நேர்மையற்றதுதான். அதாவது, தேவையில் இருக்கும் பிறரின் தேவையை நிறைவேற்றாது, சேர்த்து வைக்கப்பட்ட செல்வம் எல்லாமே தவறான செல்வம்தான். எனவே, நேர்மையற்ற செல்வம் கொண்டிருப்போர் இறையாட்சியில் நுழைய முடியாது (மத் 19:24; மாற் 10:25; லூக் 18:25). எனினும், அவர்களும் இறையாட்சி சமூகத்தில் இணைய ஒரு வாய்ப்புள்ளது. ஆம், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்வது. அதாவது, பிறரின் தேவைகளைக் கண்டுகொள்ளாது சேர்த்து வைக்கப்பட்ட செல்வத்தை - நேர்மையற்ற செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும். “முன்மதி மற்றும் படைப்பாற்றலை நல்லவற்றிற்கும் மற்றவருக்குப் பணிபுரியவும் பயன்படுத்தப்படலாம் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவார் (மூவேளைச் செப உரை, 18.09.2022). தொடர்ந்து “இவ்வுலகப் பொருள்களை நமக்கு மட்டுமே என்றில்லாமல், பிறருக்கும் பயன்படுத்தும் உடன் பிறந்த உணர்வின் உறவுகளால் வெளிப்படுத்தப்படும் அன்பே அவசியம் என்பார் திருத்தந்தை. இக்கருத்தில் ஐயன் வள்ளுவன் தம் ஈரடியில்,

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள (குறள் 241)

எனப் பாடுகிறார். தவறான செயல்கள் புரியும் இழி மக்களிடம் கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம். ஆனாலும், அந்தச் செல்வம் அருள் செல்வத்துக்கு ஈடாகாது. நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்போதுதான் அவற்றின் உண்மைப் பயன் வெளிப்படும்.

இரண்டாவது, இயேசு ‘மிகச்சிறியவற்றில் நம்பத்தகுந்தவர், பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பர் (16:10) என்கிறார். நம்பகத்தன்மை மற்றும் நேர்மை திரு அவையின் தலைமைப் பண்புக்கான தகுதி எனலாம். நேர்மையற்ற செல்வத்தைக்கூட கையாள்வதிலேயே நம்பகத்தன்மை இல்லையெனில் அவர்கள் இறையாட்சி சமூகத்தில் எந்தப் பொறுப்புக்கும் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். செல்வத்தை முறையாகக் கையாள்பவரே அதாவது, செல்வத்தைப் பகிர்ந்து அளிப்போரே இறையாட்சி சமூகத்தில் உறுப்பினராகவும், அச் சமூகத்தில் பணிப்பொறுப்பையும் ஏற்கத் தகுதிபெற முடியும். பிறருக்கு நன்மை செய்யாதவர் தனக்கும் நன்மைசெய்ய முடியாதவர் என்பதுதான் இங்குப் புரிந்துகொள்ளும் அழகான செய்தி.

மூன்றாவது, செல்வத்தைப் பற்றி மிக பொதுவான இறையியல் செய்தியைத் தரும் இயேசு, “ஒருவரால் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது (16:13) என்கிறார். செல்வம், நமக்குப் பணிவிடை செய்யவேண்டும்; அதற்கு மாறாக, உயிரற்ற செல்வத்திற்கு உயிரும் அறிவும் கொண்ட நாம் பணிவிடை செய்வது தவறு என்று இயேசு எச்சரிக்கிறார். அதாவது, செல்வமே எல்லாம் என்று அதற்காகவே நாம் வாழ்ந்தால், அதுவே நம் ‘கடவுளாகி உண்மைக் கடவுளிடமிருந்து நம்மைப் பிரித்துவிடும் என எச்சரிக்கின்றார்.

செல்வத்தின்மீது நாம் கொள்ளும் மிதமிஞ்சிய பற்று கடவுளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்தி விடும். காசையும் கவலைகளையும் கடவுளுக்கு இணையாகவோ, கடவுளாகவோ மாற்றவேண்டாம். அவற்றிற்குக் கோவில் கட்டவோ, அவற்றிற்கு அடிமைகளாய் பணிவிடை செய்யவோ வேண்டாம் என்பதே இயேசு ஆணித்தரமாகக் கூறும் ஆலோசனைகள். கடவுளின் கரம் பற்றும் முயற்சி நம் நம்பிக்கையை உயர்க்கச் செய்யும். வேதனை, விரக்தி, கண்ணீர், கவலை எனத் துன்பங்கள் கழுத்திற்குமேல் போனாலும் கடவுளைத் தேடும்போது வாழ்வுக்கான வழி பிறக்கும்.

நிறைவாக, அ) நாம் செல்வத்தை ஈட்டுவதிலும் பயன்படுத்துவதிலும் நேர்மையான எண்ணம் கொண்டிருப்போம். ஆ) அழியும் இவ்வுலகச் செல்வத்தைக்கொண்டு விண்ணுலக அழியாச் செல்வத்தை ஈட்டிக்கொள்ள வேண்டுமெனில், இருப்பவற்றை இல்லாதவர்களிடம் கொடுத்து மகிழ்வோம் (லூக் 13:33). இ) எல்லாவற்றிற்கும் மேலாகப் பாசத்தோடு நம்மைப் பராமரிக்கும் இறைவன் ஒருவருக்கே பணிவிடை புரிவோம். இயேசுவே நம் ஒப்பற்ற செல்வம்!

news
ஞாயிறு மறையுரை
செப்டம்பர் 14, 2025 பொதுக்காலத்தின் 24 -ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (திருச்சிலுவையின் மாட்சியின் விழா) எண் 21:4-9; பிலி 2:6-11; யோவா 3:13-17 - திருச்சிலுவை கடவுளின் அளப்பரிய அன்பு!

நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உரோமைப் பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்களின் அன்னை புனித ஹெலெனா அவர்கள், கிறிஸ்துவின் வாழ்வோடு தொடர்புடைய புனித இடங்களைத் தேடி புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அச்சமயம், எருசலேமில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் ஓரிடத்தில் மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்ட சிலுவை எது என்பதை ஆய்வுசெய்ய, மரணப்படுக்கையில் போராடிக்கொண்டிருந்த ஒரு பெண் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்டார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக, மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும் குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்ட சிலுவை எனப் புனித ஹெலெனா அறிந்துகொண்டார்.

அச்சிலுவையைக் கண்டுபிடித்த இடத்தில், 335-ஆம் ஆண்டு புனித கல்லறைக் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, செப்டம்பர் 13, 14 ஆகிய நாள்களில் அர்ப்பணிக்கப்பட்டது. இந்த அர்ப்பணிப்பின் நினைவாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14-ஆம் நாள் திருச்சிலுவையின் மகிமை விழாவெனத் திரு அவையில் கொண்டாடப்படுகிறது.

அன்பானவர்களே! நமது பாவம் மற்றும் உலகின் தீமையைச் சிலுவை மரத்தோடு ஏற்றுக்கொண்டு, உலக மக்களை அன்பால் வெற்றிகொண்ட இயேசு கிறிஸ்துவினுடைய திருச்சிலுவையின் மகிமையை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இவ்விழாதிருச்சிலுவையின் மாட்சி, ‘திருச்சிலுவையின் வெற்றி, ‘பெருமைமிகு திருச்சிலுவை நாள், ‘சிலுவை உயர்த்தப்பட்ட நாள்எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

நாம் இந்த உலகில் பிறந்தபோது, நம்மை வரவேற்க நம் பெற்றோர் நம்மீது வரைந்த முதல் வரவேற்பு அடையாளம் சிலுவை. திருமுழுக்கு அருளடையாளம் வழியாக, நம்மைத் திரு அவையில் ஓர் உறுப்பினராகச் சேர்த்திடும் அடையாளம் சிலுவை. நாம் இறந்தபோது நம் கல்லறையின்மீது ஊன்றப்படும் அடையாளம் சிலுவை. இறந்த நாம் அனைவரும் மீண்டும் உயிர்ப்பெற்றெழ இறைமகன் தேர்ந்தெடுத்த அடையாளம் திருச்சிலுவை. பிறப்பு முதல் இறப்பு வரை சிலுவையோடு தொடர்பு கொண்டிருக்கின்றோம். சிலுவை அடையாளம் வரைந்து நாள்தோறும் நமது நம்பிக்கையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றோம். எங்குச் சென்றாலும் சிலுவையை நாம் மறப்பதில்லை. சிலுவை என்பது நம் வாழ்வில் ஒரு தவிர்க்கமுடியாத நம்பிக்கையின் அடையாளமாக அமைந்துள்ளது. கிறித்தவர்களின் அடிப்படையும் ஆணிவேருமாய் அமைந்திருந்திருப்பது திருச்சிலுவை. சிலுவையின்றிக் கிறித்தவத்தைப் புரிந்துகொள்ள இயலாது. திருச்சிலுவை நம்பிக்கையின் அடையாளம்; திருச்சிலுவை வாழ்வின் அடையாளம்; சிலுவை வெற்றியின் அடையாளம்; சிலுவை மீட்பின் அடையாளம்; திருச்சிலுவை அனைத்து நன்மைகளின் ஊற்று. இன்று நாம் கொண்டாடும் திருச்சிலுவையின் மாட்சி விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

முதலில், திருச்சிலுவை என்பது நம் நம்பிக்கையின் அடையாளம். இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் ஏதோம் என்ற நாட்டைச் சுற்றி வந்து, ஓர் என்ற மலையிலிருந்து செங்கடல் சாலை வழியாகப் பயணப்படும்போது மோசேவுக்கும் கடவுளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகின்றனர். இறைவனுக்கு எதிராகப் பேசி, பாவம் செய்த மக்களைப் பாம்புகள் கடித்தன. இச்செயல் இஸ்ரயேல் மக்கள் கடவுள்மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதற்கான அடையாளமாகவும் அமைந்திருக்கின்றது. வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குப் பாலைவனத்தின் வழியாகக் கடந்து சென்ற கடவுளின் மக்கள், தங்களின் பயணத்தைத் தொடர முடியாமல் சோர்வடைந்தனர். நம்பிக்கையை இழந்த மக்கள் இறுதியில் கடவுளின் வாக்குறுதியையும் மறந்து, வளமான நாட்டை நோக்கி வழிநடத்துகின்றவர் நம் கடவுள் என்பதை நம்பும் வலிமையையும் இழக்கின்றனர்.

கடவுளை நம்பாத மக்கள் பாம்பினால் கடிபட்டது தற்செயலான நிகழ்வு அல்ல; திருவிவிலியத்தில் தொடக்க நூலில் குறிப்பிடப்படும் முதல் பாம்பு ஆதாம்-ஏவாள் இதயத்தில் அவநம்பிக்கையை விதைத்தது. கடவுள் நல்லவரல்லர் என்றும், அவர்களின் மகிழ்ச்சி, சுதந்திரத்தைக் கண்டு பொறாமைப்படுபவர் கடவுள் என்றும் தீய நஞ்சைக் கக்கியது. பாலைவனத்தில் இப்பாம்புகொள்ளிவாய்ப் பாம்பாகதோன்றுகிறது. அதாவது, மீண்டும் மக்களின் செயலால் பாவம் திரும்புகின்றது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை நம்பாமல், அவர்களுக்கு வாழ்வளித்த கடவுள் மேல் குற்றம் சுமத்துகின்றார்கள். குழப்பம் விளைவிக்கின்றார்கள். இதனால் தங்களது மரணத்தைச் சந்தித்து நம்பிக்கையற்றவர்களின் முடிவு இதுதான் என்பதை வெளிப்படுத்துகின்றார்கள். ஆக, இன்றைய வாசகத்தின் முதல் பகுதி, நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில், இறைவன்  மீதும் ஒவ்வொரு மனிதர்மீதும் ஏற்பட்ட அவநம்பிக்கையின் தருணங்களை ஆய்வு செய்துபார்க்க அழைக்கின்றது. எத்தனை முறை நம்முடைய மனச் சோர்வு, தோல்வி, விரக்திநிலை, பொறுமையற்ற தன்மை போன்றவற்றால் நமது உள்ளத்தைப் பாலைநிலமாக்கி இருக்கின்றோம்? நம் இதயங்களில் தங்கியிருக்கும் தோல்விகள் மற்றும் சோர்வுகள் இறைவனை நோக்கிப் பார்க்கும் வலிமையை இழக்கின்ற சூழல்களை உருவாக்குகின்றன. இத்தகைய சூழலில் நமது நம்பிக்கையின் அடையாளமாக இருப்பது சிலுவையே என்பதை உணர்கிறோம்.

இரண்டாவதாக, திருச்சிலுவை என்பது நம் வாழ்வின் அடையாளம் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதி நமக்கு உணர்த்துகிறது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மோசேவிடம் திரும்பி வரும்போது, மோசே ஆண்டவரிடம் மக்களுக்காக மன்றாடுகின்றார். கடவுள் கூறியபடியே மோசே, வெண்கலப்பாம்பு ஒன்றைச் செய்து, அதை ஒரு கம்பத்தில் பொருத்த, அதைப் பார்த்தவர்கள் அனைவரும் உயிர் பிழைத்தனர். நச்சுப்பாம்புகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற மோசேவுக்கு வழிசொல்லும் இறைவன் அப்பாம்புகளை அழிக்கவில்லை. கடவுளின் இச்செயல் மனித வாழ்வில் ஏற்படும் துன்பம், பாவம், அவநம்பிக்கை போன்றவற்றைக் கையாள வழிகாட்டுகின்றது.

கம்பத்தில் பொருத்தப்பட்ட வெண்கலப் பாம்பை நோக்கியோர் அனைவரும் வாழ்வு பெற்றது போன்று, சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை நோக்கிப் பார்த்து, அவர் காட்டும் வழியில் நடப்போர் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். இக்கருத்தை இன்றைய நற்செய்தி முன்னுணர்த்துகிறது. “பாலை நிலத்தில் மோசேவால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல, மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கைகொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர் (யோவா 3:14-15).

இன்றைய இரண்டாம் வாசகத்தில், அன்பிற்காக அனைத்தையும் துறந்து, தம்மையே தாழ்த்தி, தம் நிலையை விட்டுக் கீழிறங்கி வந்து, சிலுவைச் சாவுவரை கீழ்ப்படிபவராக இருந்த இயேசுவை, இறைவன் மேலுலகிற்கு உயர்த்தினார் எனப் பவுல் குறிப் பிடுகிறார். எனவே, நமக்காகச் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு, மரணத்திற்கு நம்மை இட்டுச்செல்லும் பாம்பின் விசத்தன்மையை அகற்றி, சாவிலிருந்து புதிய வாழ்வுக்கு உயர்த்துகிறார். எனவே, நாம் அவரைப் பார்க்கும் போது பாவம், துன்பம் அனைத்தையும் அதன் ஆற்றலையும் அழித்துவிடுகின்றார் என்பதே இவ்விழா உணர்த்தும் உண்மை

மூன்றாவதாக, திருச்சிலுவை என்பது நன்மைகளின் ஊற்று. நம்முடைய கிறித்தவ வாழ்விற்கான எல்லா நன்மைகளையும் திருச்சிலுவையிடமிருந்து பெறுகின்றோம். திருச்சிலுவையே நமது மீட்பின் பாதை, மறுவாழ்வு மற்றும் உயிர்ப்புக்கான பாதை. சிலுவையில் தொங்கும் இயேசுவிடமிருந்து வெறுப்பை அல்ல, அன்பை, வேறுபாட்டை அல்ல, இரக்கத்தை, பகைமையை அல்ல, மன்னிப்பைக் கற்றுக்கொள்கின்றோம். அவரின் நீட்டிய கரங்கள், இறைவனின் மென்மையான அரவணைப்பை வெளிப்படுத்துகின்றன. அவ்வன்பினை நாமும் மற்றவரிடத்தில் வெளிப்படுத்தவே அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

நான்காவதாக, திருச்சிலுவை என்பது கடவுளின் அளப்பரிய அன்பே. இதுவே கிறித்தவத்தின் வழி. இது பதவி, ஆற்றல், தகுதி போன்றவற்றினால் வருவதல்ல. தம் மக்களுக்காகத் தம் உயிரையே கொடுத்த இயேசுவின் மீட்பின் வழி. தம் உடன் சகோதர-சகோதரிகளுக்கு எதிராகச் செயல்படாது, தாழ்ச்சி, உலகளாவிய அன்பு கொண்ட தன்னிகரற்ற வழி. “திருச்சிலுவை ஓர் அலங்காரப் பொருள் அல்ல; இது நம்மைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளமும் அல்ல; மாறாக, இது நம் பாவங்களைத் தம்மீது சுமந்த, தம்மையே தாழ்த்திய இறைவனின் பேருண்மைஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (மறையுரை, ஏப். 8, 2014).

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் துளையுண்ட காயங்களிலிருந்து நாம் பிறப்பெடுத்துள்ளோம். எனவே, அன்பால் தீமையை வெல்வோம். இந்நாளில் நம்பிக்கையோடு சிலுவையை நோக்குவோம். சிலுவையை ஓர் அடையாளமாக நம் வீடுகளிலோ, கழுத்திலோ, வாகனத்திலோ மாட்டிவைத்தால் மட்டும் போதாது. அந்தச் சிலுவையையும், அதில் அறையப்பட்டவரின் அன்பையும் ஆழமாக உணர்வோம். அன்பும் அமைதியும் கொண்டு, மகிழ்வான சான்று தரும் புதிய வாழ்வு வாழ்வோம். திருச்சிலுவை என்பது கடவுளின் அளப்பரிய அன்பு!

news
ஞாயிறு மறையுரை
செப்டம்பர் 07, 2025, ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) சாஞா 9:13-18; பில 9-10,12-17; லூக் 14:25-33 - சீடத்துவம் ஒரு விலைமதிப்பற்ற தியாகம்!

இயேசு தாம் உருவாக்கிய இறையாட்சிப் பணிக்காகச் சீடர்களை, திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், இயேசுவின் சீடர்கள் பெரும்பாலும் தாம் சீடராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுள் பலரும்இயேசு அரசராக ஆட்சி செலுத்துவார். அவ்வாட்சியில் தாமும் பங்கு பெறுவோம் (மாற் 10:35-45; மத் 20:20-28) என்றே கருதினர். “மானிட மகன் பலவாறு துன்பப்படவும், உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும்...” (மாற் 8:31; மத் 16:21; லூக் 9:22) வேண்டும் என இயேசு கூறியபோது அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். எனவேதான், இயேசு தம் சீடர்களுக்கு மட்டுமல்ல, தம்மைப் பின்பற்றிய மக்கள் கூட்டத்திற்கும் சீடத்துவ அழைப்பின் தன்மையைப் பற்றித்தெளிவாய் விளக்குகிறார்.

சீடத்துவம் என்பதுஒரு விலைமதிப்பற்ற தியாகம்என்பது இன்றைய வழிபாட்டின் மையப்பொருளாக அமைகிறது. இன்றைய நற்செய்தியில் மூன்று முக்கியமான பண்புகளைச் சீடத்துவ வாழ்வின் இலக்கணங்களாக முன்வைக்கின்றார் இயேசு: 1) உறவுகளையும் உயிரையும் மேலாகக் கருதுபவர்கள் (லூக் 14:26); 2) தம் சிலுவையைச் சுமக்கத் தயங்குபவர்கள் (14:27); 3) தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாதவர்கள் (14:33) ஆகியோரைத் தம் சீடத்துவ வாழ்விற்குத் தகுதியற்றவர்களாக எடுத்துக்காட்டுகின்றார். இந்த மூன்று தலைப்புகளின் கீழ் நமது சிந்தனைகளைச் சற்று விரிவாக்குவோம்.

முதலாவதாக, இயேசு தமது சீடராக இருக்க விரும்புவோர் தம் உறவுகளை இழக்கவேண்டும் (லூக் 14:26) என்கிறார். பத்துக்கட்டளைகளில் நான்காவது கட்டளை, “உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட (விப 20:12) என்கிறது. இயேசுவின் போதனையின் மையமும்ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் (யோவா 13:34) என்பதுதான். அப்படி இருக்க, உறவுகளை எப்படித் துறப்பது? இங்கே இயேசுவின் கூற்றை எப்படிப் புரிந்துகொள்வது? இயேசு தம்மிடம் வரும் சீடர் அனைவரும் தம் உறவுகளைத் துறந்துவிடவேண்டும் அல்லது வெறுத்து ஒதுக்கிவிட்டுத் தம்மைப் பின்பற்றவேண்டும் என்று கேட்கவில்லை; மாறாக, இவர்கள் அனைத்திற்கும் மேலான இடத்தைத் தமக்கும் தம் பணிக்கும் தரவேண்டும் என்றே கேட்கிறார். கிறித்தவச் சீடத்துவ வாழ்விற்குக் குடும்ப உறவுகள் தடையாக இருக்கக்கூடாது என்பதே இயேசுவின் கரிசனை (லூக் 9:59, 61; 1அர 19:20). அழைக்கும் குரல் கேட்டவுடனே பின்தொடர்வதே முழுமையான சீடத்துவம் (மத் 4:22; 9:9).

இரண்டாவதாக, தமது சீடராக இருக்க விரும்புவோர் சிலுவையைச் சுமக்க வேண்டியிருக்கும் (லூக் 14:27) என்கிறார். அதாவது, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23) என்கிறார். மேலும், “தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர்; என் பொருட்டுத் தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர் (மத் 10:39) என்றும்மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை (மத் 8:20; லூக் 9:58) என்றும் கூறி, தம் வாழ்வைத் தொடர்ந்தவரைப் பின்பற்றிய சீடருக்குச் சிலுவைதான் சீடத்துவத்தின் அடையாளம் என உணர்த்துகிறார். எனவே, சீடர்கள் சிலுவையைச் சுமக்க, துன்பங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். இலட்சியச் சிலுவைகளைச் சுமக்க மனமில்லாதவர்கள் துறவு வாழ்வில் தூரமிக்கவர்கள். சுமக்கத் தெரிந்தவர்கள் வரலாற்றில் வாழ்கிறார்கள்.

மூன்றாவதாக, இயேசு தமது சீடராக இருக்க விரும்புவோர் தங்கள் உடைமைகளை எல்லாம் இழக்க வேண்டும் (லூக் 14:33); தங்கள் உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும் (மாற் 10:21). இயேசுவின் சீடர் என்பவர் தன்னையே முழுவதுமாகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கிறவர். தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கடவுளுக்குக் கொடுப்பவர். எனவே, உலகச் செல்வத்தின் மீதான பற்றை விட்டுவிட்டு, இறைவனை இறுகப் பற்றிக்கொள்வதுதான் சீடத்துவம்.

இத்துணை கடினமான சீடத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுப்போர் அதன் தன்மையை நன்கு உணர்ந்திருக்கவேண்டும்; சீடராக முடிவு செய்யு முன் தீவிரமாய்ச் சிந்திக்கவேண்டும்; மேற்குறிப்பிட்ட இழப்புகளை ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் தம்மிடம் உண்டா என்று சோதிக்கவேண்டும். இவ்வுண்மையை உணர்த்தத்தான் இயேசு கோபுரம் கட்டுதல், போருக்குச் செல்லுதல் என்னும் இரண்டு சிறு உவமைகளை எடுத்துரைக்கிறார். கோபுரம் கட்ட விரும்பும் ஒருவர் அதனைக் கட்டி முடிக்கத் தம்மிடம் பொருள் வசதி இருக்கிறதா? என்றும், போரிடப் போகும் அரசர் தம்மை எதிர்த்து வரும் வலிமை பொருந்திய அரசரை வெல்ல தம்மிடம் படைபலம் உண்டா? என்றும் சிந்தித்துத் தெளிந்த முடிவு செய்வதுபோல், இயேசுவைப் பின்பற்ற முன்வரும் சீடரும் இத்தனை இழப்புகளைத் தாங்கி இயேசுவைப் பின்பற்ற தம்மால் முடியுமா? எனத் தீவிரமாகச் சிந்தித்து இயேசுவைப் பின்பற்ற முன்வர வேண்டும் எனச் சீடத்துவத்தின் தன்மையை அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.

இன்றைய சூழலில் இயேசுவின் சீடராக வாழ்தல் என்பது மிகவும் கடினமானதே. இன்று இயேசுவின் சீடராக வாழ்வதைவிட நம்பிக்கையாளராக, இயேசுவை மனத்தளவில் நம்புவோராக வாழ்வது மிக எளிது. இயேசுவை நம்பி வாழ்வதை ஒரு சமய வாழ்வு வடிவில் புரிந்துகொண்டதால் சமயச் சடங்குகள், வழிபாடுகள், கோட்பாடுகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கடைப்பிடித்தால் போதும் என நினைக்கின்றோம். இதுவல்ல சீடத்துவம். ஓர் அடிமையான ஒனேசிமுவைத் தன்னுடைய இதயத்துக்கு நெருக்கமான சகோதரராக ஏற்றுக்கொண்ட பவுல் (பில 12), சீடத்துவ வாழ்வுக்கு மிகச்சிறந்த ஓர் எடுத்துக்காட்டு. மன்னிப்பதும் தீமை செய்தோரை அன்புடன் ஏற்பதுமே சீடத்துவம் என்பதைப் பவுல் இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக நமக்குக் கற்பிக்கின்றார்.

இன்றைய முதல் வாசகமும் கடவுள் அருளிய ஞானத்தாலும், அவர் அனுப்பிய தூய ஆவியாலும் கடவுளின் திட்டத்தை அறிவதும், அவரது திருவுளத்தை நிறைவேற்றுவதுமே நிலையான சீடத்துவம் என்கிறது. இறையாட்சிக்கான பயணத்தில் பயனற்ற (சாஞா 9:14), ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிற, கவலை தோய்ந்த மனத்திற்குச் சுமையாய் அமைகிற (9:15) சாதி, இனம், பணம், பதவி, அதிகாரம், அகங்காரம், புகழ், மமதை, வீண் பெருமை ஆகிய சாத்தானுக்கே உரிய சிறுமைகளைச் சுமந்தலையாமல், கடவுள் அருளும் தூய ஆவி என்னும் ஞானத்தால் (9:17) கடவுளின் திட்டங்களை அறிந்து, அவற்றிற்கேற்ப வாழ்வதே (9:18) நிலையான சீடத்துவம்.

நிறைவாக, இயேசு காட்டிய, அவர் வாழ்ந்த சீடத்துவம் என்பது ஏழையரின் உள்ளத்தோராய் முழுமையாய் பகிர்தலும், இரக்கமுடையோராய் வாழ்தலும், எல்லாச் சூழலிலும் அன்புநெறியில் செயல்படுதலும், பகைவரை மன்னித்து அவர்களுக்காக வேண்டுவதும் ஆகும். மேலும், உண்மைக்காகவும் நீதிக்காகவும் எல்லாச் சூழல்களிலும் குரல் எழுப்பிப் போராடுவதும் உண்மையை நிலைநாட்டுவதும் கனிவு, பரிவு, பொறுமை, நன்னயம், நம்பிக்கை ஆகிய அறநெறிப் பண்புகளை வாழ்வாக்குவதும் இயேசுவின் சீடரின் இன்றியமையாத செயல்பாடுகளாகும்.

நாம் கிறித்தவச் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பதைவிட கிறிஸ்துவின் சீடராக, அவர் காட்டிய நெறியில் வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம். மக்களைக் கிறித்தவர்களாக மாற்றவேண்டும் என்பதல்ல நம் பணி; மாறாக, இயேசுவின் பாதையில் சீடராகப் பயணிக்க உதவுவதும் அவரது போதனையை வாழ்வாக்க வழிகாட்டுவதுமே நமது கடமை.

இறுதியாக, ஓர் எண்ணம்... இயேசுவின் சீடர்கள் என்று இன்று நாம் பகிர்ந்த சிந்தனைகள் குருக்கள், துறவறத்தாருக்கு மட்டும் என்று நாம் எண்ணிவிட முடியாது. இயேசு கலிலேயாவில் பணிகளை முடித்தபின், எருசலேம் நோக்கிய தமது பயணத்தில் (லூக் 9:51) அவரது வல்ல செயல்களைக் கண்டு தம்மைப் பின்தொடர்ந்தபெருந்திரளான மக்களை (14:25) நோக்கிச் சீடத்துவத்தின் தன்மையை விவரித்துக் கூறுகிறார். எனவே, அவரோடு செல்லவும் அவரின் இறையாட்சியைக் கட்டி எழுப்பவும் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.

எனவே, ‘என் சீடராய் இரு (14:26,27,33) எனும் குரல் கேட்கும் ஒவ்வொருவரும் துணிவோடும் தெளிவோடும் பணிவோடும் அவரைப் பின்தொடர முற்படவேண்டும். இவ்வழைப்பின் உயிர்நாடியாக, தன்னலம் மறந்து, சிலுவையைச் சுமந்து, இயேசுவைப் பின்தொடர்வது என்பது சவால் நிறைந்ததே. இருப்பினும், திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவது போல, “இயேசுவோடு பின்செல்லுதலே நம் மகிழ்வு (மறையுரை, மார்ச் 6, 2014), தியாகங்களுக்குத் தயாராக இல்லாத உள்ளங்களால் சீடத்துவம் தரும் மகிழ்வை நிறைவாகப் பெற இயலுமோ? சீடத்துவம் ஒரு விலைமதிப்பற்ற தியாகம்!

news
ஞாயிறு மறையுரை
ஆகஸ்டு 31, 2025, ஆண்டின் பொதுக்காலம் 22 - ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) சீஞா 3:17-18, 20, 28-29; எபி 12:18-19, 22-24; லூக் 14:1, 7-14 (தாழ்ச்சி என்பது இறைவனின் பாதை!)

ஆகஸ்டு மாதம் 4-ஆம் நாள் புனித ஜான் மரிய வியான்னியின் விழாவினைக் கொண்டாடினோம். இவர் காலத்தால் அழியாத எந்த ஒரு நூலையும் எழுதவில்லை. புனிதர்களான அகுஸ்தினார், அக்குவினாஸ் போன்று இவர் ஒரு மறைவல்லுநரும் அல்லர். பெரிய துறவற சபைகளை இவர் ஏற்படுத்தவில்லை; பல நாடுகளுக்கு மறைப்பணியாற்றவும் சென்றதில்லை. இவர் திருமறைக்காக இரத்தம் சிந்தவில்லை. இருப்பினும், அகில உலகின் அனைத்து அருள்பணியாளர்களின் பாதுகாவலராக இவரையே திரு அவை அழைக்கிறது. காரணம், இவர் கிறிஸ்துவின் பணிவையும் தாழ்ச்சியையும் அப்படியே அணிந்துகொண்டார். இயேசுவும் திருமுழுக்கு யோவானும் சுட்டிக்காட்டிய தாழ்ச்சி எனும் பாதையைப் பணிவுடன் ஏற்றுக்கொண்டார். தான் மற்றவர்களால்கழுதைஎன அழைக்கப்பட்டாலும், ‘இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!’ என்பதில் பணிந்து நடந்தார். “மேன்மையடையத் தாழ்மையே வழி (நீமொ 18:12) என்பதில் உறுதியாக இருந்தார்.

தாழ்ச்சியுடையவர் எப்போதும் கடவுளுக்குப் பணிந்திருப்பார். ஏழை எளியவர்களுடன் தோழமை கொள்வார். தாழ்ச்சி என்பது தாழ்வுமனப்பான்மை அல்ல; தாழ்ச்சி என்பது உண்மைநிலை; உயர்வுநிலை. “தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும் (நீமொ 22:4). தாழ்ச்சியும் பணிவும் உடையவராக வாழ்தல் பொதுவாக எல்லாருக்கும் நல்லதாகும். அவர்களுள் சிறப்பாக, செல்வருக்கே மற்றொரு செல்வம் போன்றதாகும் என்றுரைக்கின்றார் திருவள்ளுவர்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)

பொதுக்காலத்தின் 22-ஆம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். எந்நிலையிலும் நாம் பணிவோடும் தாழ்ச்சியோடும் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்குக் கற்பிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி இயேசு கலந்துகொண்ட ஒரு விருந்தைப்பற்றியும், அவ்விருந்திலே அவர் கற்றுத்தந்த பாடங்களைப் பற்றியும் விவரிக்கின்றது. பரிசேயர் வீட்டில் ஓய்வு நாளில் நடந்த ஒரு விருந்தில் இயேசு பங்கெடுக்கிறார். பல கண்கள் அவரையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றன. இது இயேசுவின்மீது கொண்ட உயர்ந்த மனநிலையில் அல்ல; அவர்மீது குற்றம் சுமத்தும் நோக்கில்  ‘அவரைக் கூர்ந்து கவனித்தனர் (லூக் 14:1). பரிசேயர் தலைவர் வீட்டில் கூடியிருந்தவர்கள் அனைவரும், தம்மைக் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும் தம் மனத்தில் தோன்றிய உண்மைகளை இயேசு பாடங்களாகப் புகட்டுகிறார்.

இயேசு தமது பணிவாழ்வு முழுவதும் எந்தவோர் இடத்திலும் ஆணவத்துடனோ, இறுமாப்புடனோ நடந்துகொள்ளவில்லை. மேலும், தாம் இறைத்தந்தையின் ஒரே மகன், மீட்பர், போதகர், எல்லாம் வல்லவர், அருளடையாளங்களை நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர் என்றெல்லாம் கூறிக்கொண்டு எந்த இடத்திலும் முதன்மையான இருக்கையைத் தேடவில்லை. மாறாக, சிலுவை மட்டும் தம்மைத் தாழ்த்திக்கொண்டார் (பிலி 2:8). தாழ்ச்சி மட்டுமே நிலையான மகிழ்ச்சியைத் தரும். எல்லா நற்பண்புகளின் தாய் தாழ்ச்சியே. ஆகவேதான், இன்றைய நற்செய்தியில் பொதுவிருந்தில் முதன்மையான இடத்தைத் தேடிச்சென்ற விருந்தாளிகளுக்குப் பணிவோடு நடந்துகொள்ளுங்கள் என அறிவுறுத்துகின்றார் இயேசு.

சமுதாயக் குழுமங்களில் நாமாக முதன்மையான இடத்தைத் தேடி அமரக்கூடாது என்பது படிப்பினை. எந்த ஒரு செயல்பாட்டிலும், பிறரை முன்னிறுத்திச் செய்வது நல்லது. தங்களைத் தாங்களே உயர்வாக நினைப்பவர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்பது உறுதி. தாழ்ச்சியான நிலையைத் தழுவுபவர்கள் உயர்வைக் கண்டடைவார்கள் என்பதும் உறுதி. பணிவு பாடத்தைக் கற்றுத்தரும் இயேசு, பணிவு பாடங்களுக்குச் சிகரமாகத் தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர் என்ற புகழ்பெற்ற அறிவுரையை வழங்குகிறார் (லூக் 14:11).

இன்றைய முதல் வாசகமும் தாழ்ச்சியோடு நடந்துகொள்பவர்கள் பெறுகின்ற மூன்று நற் பயன்களை அடையாளப்படுத்துகின்றது. முதலாவது, செய்கின்ற செயல்கள் அனைத்திலும் தாழ்ச்சியோடும் பணிவோடும் நடந்துகொள்பவர்களை இந்த உலகம் நேசிக்கும் (சீஞா 3:17). இரண்டாவது, தாழ்ச்சியோடு நடந்துகொள்பவர்களுக்கே ஆண்டவர் முன்னிலையில் பரிவு கிடைக்கும் (3:18). மூன்றாவது, தாழ்ச்சி உள்ளவர்களுக்கே தமது மறைபொருளை வெளிப்படுத்தும் கடவுள் (3:19) தாழ்ந்தோராலே அவர் மாட்சி பெறுகிறார் (3:20). எனவே, தலையாயப் பாவம் ஆணவம் என்றால், தலையாயப் புண்ணியம் தாழ்ச்சி. இறுமாப்பு அழிவுக்கு அடித்தளம். அகம்பாவம் பெரும்பாவம். அதுவே அருளின் வாய்க்காலுக்குத் தடை. இறுமாப்புக் கொண்டோரின் நோய்க்கு மருந்தே இல்லை (3:28). இறுமாப்பு தீமைகளின் வேர். இறுமாப்பே பலரையும் நெறிபிறழச் செய்திருக்கிறது (3:24). “இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும் (நீமொ 29:23), “இறுமாப்பு வானதூதர்களைச் சாத்தான்களாகவும், தாழ்ச்சியானது மனிதர்களை வானதூதர்களாகவும் மாற்றுகிறதுஎன்கிறார் புனித அகுஸ்தின்.

இயேசுவின் தாழ்மைக்கும் பணிவுக்கும் அவரே ஒப்பற்ற முன்மாதிரி. “கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் (பிலி 2:5) என்கிறார் திருத்தூதர் பவுல். இயேசுவின் மனநிலை என்றாலே தாழ்ச்சிதான்! தாழ்ச்சி என்பதுதான் இயேசுவின் அழியாத அடையாளம்.  “ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாக அணிந்திருங்கள். ஏனெனில், செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார் (1பேது 5:5). “ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார் (4:10) என்கிறார் யாக்கோபு. “முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழுங்கள் (எபே 4: 2-3) என்கிறார் பவுல்.

தாழ்ச்சி என்பது செயல்பாடாக மாறும்போது, ஒருவர் ஏழைகளில் ஒருவராக மாறமுடியும்; அவர்களுக்காகக் கைம்மாறு எதிர்பாராமல் பணி செய்ய முடியும். “தாழ்ச்சி என்பது பிறருக்கான சேவையைக் குறிக்கிறதுஎனும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்று எண்ணிப்பார்க்கத்தக்கதே (மார்ச் 30, 2015, குருத்து ஞாயிறு மறையுரை). கிறித்தவர்களுக்கான உண்மையான வாழ்வுப்பாதை தாழ்ச்சியே. கடவுள் தம் மக்களுடன் இணைந்து நடக்க அவர் தேர்ந்துகொண்ட பாதையும் தாழ்ச்சியே (பிலி 2:7). இயேசு நமக்குக் காட்டிய தாழ்ச்சியின் பாதையைப் பின்பற்றுவதன் வழியே அவருடைய விண்ணக விருந்திலே நாம் பங்குபெற முடியும். ஆகவேதான் இயேசு நற்செய்தியின் இறுதிப்பகுதியில் ஒரு புரட்சிகரச் சிந்தனையைத் தருகிறார்.

விருந்துக்கு அழைப்பது என்பதும், அழைக்கப்படுவது என்பதும் ஒருவரின் சமூக நிலையின் அங்கீகாரம். சமூகத்தின் சமநிலையில் இருப்போர் தங்களுக்கு நிகரான ஒருவரை விருந்துக்கு அழைத்துக்கொள்வர். செல்வந்தர்கள் நடத்தும் விருந்துகளில் செல்வந்தர்களின் எண்ணிக்கையே நிரம்பி வழியும். இவர்களின் விருந்திலே அன்பைவிட ஆடம்பரமும், பாசத்தைவிட பாசாங்குமே நிழலாடும். விருந்து நேரங்களில் அவரவர் தங்கள் பெருமைகளைப் பறைசாற்றவேண்டும் என்றே விரும்புவர். இச்சூழலில் எந்தக் கணக்கும் பார்க்காமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் கைம்மாறு செய்ய இயலாத ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் விருந்துக்கு அழையுங்கள் என்கிறார் இயேசு. கைம்மாறு செய்ய இயலாதவர்களுக்கு விருந்தளிப்பது மற்றவர்கள் பார்வையில் தாழ்வானதாகத் தெரியலாம். ஆனால், இவர்களோடு தன்னை இணைத்துக்கொள்ளும் அளவுக்கு ஒருவர் தம்மையே தாழ்த்திக்கொண்டால் கடவுள் முன்னிலையில் அவர் உயர்த்தப்பெறுவார்.

இயேசுவின் புரட்சிக்கரப் போதனை இன்று நம்முன் வைக்கும் சவால்கள் என்னென்ன? நமக்கான முதல் சவால், எல்லாரும் சமூகப் படிநிலையில் உயர்நிலையில் இருப்பவர்களைத் தேடும்போது, சமூக ஏணியில் கடைசிப்படியில் இருப்பவர்களை, முற்றிலும் வலுக்குறைந்தவர்களை நம் விருந்தினர்களாகத் தேடப் பணிக்கிறார் இயேசு. இரண்டாவதாக, கடவுள் அனைவரையும் சமமாகவே படைத்தார். தம் உருவிலே படைத்தார். யாரையும் யாருக்கும் கீழானவர்களாகப் படைக்கவில்லை. எனவே, இல்லாதவர்களோடும் இயலாதவர்களோடும் வேற்றுமை பாராட்டாத அன்புக் கட்டளையை நாம் ஏற்கப் பணிக்கிறார். மூன்றாவதாக, இயேசுவைப் பொறுத்தமட்டில் தாழ்ச்சியைத் தேடுவதே உயர்வின் இலக்கணம். இயேசுவின் இவ்விலக்கணத்தை ஏற்பது கடினம் எனினும், தாழ்ச்சியில் உயர்வு தேடும் மனம் கொண்டு வாழ இன்று அவர் நம்மை அழைக்கிறார்.

ஆகவே, இயேசு நமக்குக் காட்டிய தாழ்ச்சியின் பாதையைப் பின்பற்றி இயேசுவுக்கு நம் இதயத்திலே இடமளிக்க முயல்வோம். தாழ்ச்சியின் மகிமையை உணர்ந்து பிறருக்கான சேவையில் ஈடுபாடு கொள்வோம். எளிய வழியே புனிதத்துக்கான பாதை. தாழ்ச்சியே இறைவனின் பாதை!

news
ஞாயிறு மறையுரை
ஆகஸ்டு 24, 2025, ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 66:18-21; எபி 12:5-7,11-13; லூக் 13:22-30 - இடுக்கண் வழியே இறையாட்சிக்கான வழி!

இன்று நாம் பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். கடவுள் என்ற இலக்கணத்தின் ஒரு முக்கியக் கூறு, ‘அவர் எவரையும் புறக்கணியாது, அனைவரையும் அன்புடன் அழைத்து, அணைத்து விருந்துகொடுத்து மகிழ்பவர் எனப் புரிந்துகொள்ளலாம். மனிதர் மட்டுமல்லர், இந்த உலகம் முழுவதும் மீட்புப் பெறுவதையே கடவுள் விரும்புகிறார். ‘மீட்புப் பெறுவது என்பது இறைவன் தரும் கொடை. இந்தக் கொடை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த மீட்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்? என்ற வினாவுக்கு விடை தருகின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகம் எசாயா நூலின் இறுதிப் பகுதியாகும். அழிந்துபோன தங்கள் எருசலேம் நகரையும், பறிக்கப்பட்ட தங்கள் அதிகாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப முனைகின்றனர் இஸ்ரயேல் மக்கள். தங்கள் சமூகமே தனித்தன்மை வாய்ந்த சமூகம்; தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் எனக் கருதினர். தங்களுடைய தனித்தன்மையைத் தக்க வைக்கவும், தாங்கள் மட்டுமே கடவுளுக்குரியவர்கள் என்பதை நிலைநிறுத்தவும் ஆலயம் கட்ட விரும்பினர். இவர்களின் இந்த விருப்பத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறார் எசாயா.

கடவுள் இஸ்ரயேலுக்கு மட்டும் உரியவரல்லர்; பிற இனத்தாருக்கும் அவர் கடவுள். பிற இனத்தாரையும் தம்முடைய ஆலயத்திற்கு அவர் கூட்டி வருவார்; எல்லாப் பக்கங்களிலிருந்தும் கடவுள் அவருக்கென மக்களைக் கூட்டிச் சேர்ப்பார் என்ற கருத்தை இப்பகுதியில் பதிய வைக்கிறார் எசாயா. பிற இனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடி வந்து என் மாட்சியைக் காண்பார்கள் (எசா 66:18) என்கிறார் ஆண்டவர். மேலும், கடவுள் எல்லா மக்களுக்கும் தம்மை வெளிப்படுத்துவார் என்ற செய்தி, “அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச்செய்வேன்... என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் (56:7) எனும் கடவுளின் வார்த்தையில் விரிவடைகிறது. எனவே, ஆண்டவருடைய மீட்பு ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கோ, நாட்டினருக்கோ மட்டுமல்ல; மாறாக, எல்லா மக்களுக்கும் உரியது. எல்லா மக்களும், எந்த நிலையில் உள்ளவர்களும் ஆண்டவரின் உடன்படிக்கையை மதித்து, உடன்படிக்கை விதிகளைப் பின்பற்றி, ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்தால், மீட்புக்கு உரியவர்கள் என்பதை எசாயா தெளிவாக எடுத்துரைக்கிறார்.

எருசலேமிலுள்ள தம் திருமலைக்கு அனைவரையும் இறைவன் அழைத்துவருவார் (66:20) என்று எசாயா கூறும் ஒன்றிப்பையும் தாண்டி, இயேசு இன்றைய நற்செய்தியில் “இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள் (லூக் 13:30) என்கிறார். அதாவது, எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் மனம் மாறி இயேசு காட்டிய நெறியில் வாழ்வர் என்பதாகும். ஒருவர் கூட மீதம் இல்லாமல் அனைவரும் வாழ்வு பெறவேண்டும், மீட்புப் பெற வேண்டும் என்பது மட்டுமே இறைவனின் விருப்பம், இயேசுவின் விருப்பம். ஆயினும், யூதர் பலர் இயேசு காட்டிய நெறியை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவின் சமத்துவ விருப்பத்தை ஏற்றுக்கொள்வதில் யூதத் தலைவர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் எத்துணை தயக்கம்!

இறைவனைத் தங்கள் தனியுடைமையாக்கி, மீட்பையும் தங்கள் தனிப்பட்ட சொத்து என்று உரிமை கொண்டாட மதத்தலைவர்கள் நினைத்தனர். அவ்வாறே போதித்தும் வந்தனர். தாங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட குலம், பிற இனத்தவரிடையே இருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு மீட்கப்பட்ட குலம். அப்படியிருக்க, சமாரியர், வரி தண்டுவோர், பிற இனத்தார், பாவிகள் என்று பிறரோடு ஒரே மலையில் அமர்ந்து, சமபந்தியில் விருந்து உண்பதா? என்ற கேள்வி யூத மதத் தலைவர்களிடத்தில் எழாமல் இல்லை. மக்கள் எல்லாரும் மீட்கப்படுவாரா?  அல்லது ‘எஞ்சியோர் (எசா 11:11-16; 60:1-22) எனப்படும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டும்தானா? எனும் கேள்வி இயேசுவின் காலத்தில் மக்களிடையே வெகுவாகப் பேசப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் ஒருவர் இயேசுவிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” (லூக் 13:23) எனும் வினாவை எழுப்புகிறார். இயேசுவுக்கு இது ஒரு பயனற்ற கேள்வியாக இருந்தாலும், ‘ஒருவர் மீட்படைய என்ன செய்யவேண்டும்?’ என்ற முக்கியமான கேள்விக்கு இயேசு பதிலளிக்கிறார்.

மீட்புப் பெறுகிறவர் யார்? இனமோ, பிறப்போ, மொழியோ, மதமோ, நாடோ மீட்பைத் தீர்மானிக்க முடியாது. மீட்பு என்பது முற்றிலும் கடவுளின் ஒரு கொடை. அவர் எல்லாருக்கும் பொதுவான தந்தை. அவர் தரும் மீட்பு அனைவருக்கும் கொடுக்கப்படும் பரிசு. இந்தப் பரிசை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் எடுக்கும் முடிவு. விண்ணகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால், அது குறுகலான, இடுக்கமான வாயில். வருந்திதான் உள்ளே நுழையமுடியும். ஆகவேதான், “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்; ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும் (13:24) என்ற பாடத்தைச் சவாலாக நம்முன் வைக்கிறார் இயேசு.

வாழ்க்கை ஒரு பயணம். இந்தப் பயணத்தைத் தொடர ஏராளமான வழிகள் நம் முன்னே உள்ளன. உலகம் ஒளியும்-இருளும், உண்மையும்-பொய்யும், நன்மையும்-தீமையும், வாழ்வும்-சாவும் சூழ்ந்தது. இவற்றுள் எதை, எப்படித் தேர்ந்து வழிநடப்பது என்பதே எல்லாருக்குமான ஒரு தேடல். எந்த வழியைத் தேர்கிறோம்? என்பதிலேதான் அடங்கியுள்ளது நம் வெற்றி-தோல்வி. இங்கே இடுக்கமான வாயில் என இயேசுவால் மொழியப்படுவது வெறுமனே நுழைவு வாயில் அன்று; மாறாக, அன்பு, அமைதி, நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், பொதுநலம், தியாகம், தன்னலம் துறப்பு, பொறுமை, பொறுப்பு, மன்னிப்பு, ஒன்றிப்பு, சகிப்புத்தன்மை எனும் மதிப்பீடுகளின் ஊடாகப் பயணிப்பதே. எங்கே ஒருவர் தன்னை வருத்திப் பொதுநலப் பணியில் இணைகின்றாரோ, அவர் வாழ்வின் பாதையில் பயணிக்கின்றார் என்பதே இயேசுவின் புரிதல். நம்மை ஒடுக்குவதால் பிறர் பெறும் வாழ்வே நம் நிலைவாழ்வின் தொடக்கம்; அதுவே, மீட்பின் பாதை.

சட்டங்களை உற்பத்தி செய்து அவற்றைக் கடைப்பிடிக்கக் கற்பித்தால் போதும்; மறைநூலைப் புள்ளி மாறாமல் விளக்கிப் போதித்தால் போதும்... விண்ணுலகம் சேர்ந்துவிடலாம் என்ற கற்பனையில் ஆழ்ந்திருந்தனர் யூத சமயத் தலைவர்கள். இறையாட்சி என்பது போதிப்பதிலும் புனைதலிலும் சட்டமியற்றுதலிலும் கண்காணிப்பதிலும் இல்லை அல்லது இயேசுவோடு உண்பதிலும் குடிப்பதிலும் இல்லை (லூக் 13:26). அது தியாகமிக்க, நேயம் நிறைந்த, இழக்கின்ற, வெறுமைப்படுத்துகின்ற வாழ்வில் புலர்வது. அது எவருக்கும் தீங்கு இழைக்காமல், அறிநெறி வாழ்வு வாழ்வது. அது அலங்கார ஆடம்பரங்களைக் கடந்த அர்த்தமுள்ள வாழ்வு. அதுவே இடுக்கமான வாயில். எனவே, மனமாற்றம், அறநெறி வாழ்வு எனும் இடுக்கமான வாயில் வழியாக நுழைவது நம் கையில்தான் உள்ளது.

இறையாட்சியின் வழி அவ்வளவு எளிதான தன்று. இறையாட்சிக்குள் நுழைய வேண்டுமென்றால், இயேசுவின் கோதுமைமணி உவமையை  (யோவா 12:24-25) மனம் சுமந்து அதனைப் போல் தங்களை இழக்கத் துணியவேண்டும். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் ஆசிரியர் குறிப்பிடுவதுபோல, கிறித்தவர்கள் துன்பத்தைத் தொல்லையாகக் கருதக்கூடாது. ஆண்டவருடைய கண்டிப்பை வேண்டாம் என்று தள்ளிவிடக்கூடாது (12:5). சிலுவையைச் சுமந்து செல்லும் பாதையே இடுக்கமான வாயில் (மத் 16:24). நம் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “கடவுளுக்கும் மக்களுக்கும் பணி செய்வதே இடுக்கமான வாயில்!” (மூவேளைச் செபவுரை, 21-08-2022). 

எனவே, விண்ணக விருந்தில் பங்குகொள்ள நாம் வாழ்வில் திரட்டி வைத்திருக்கும் சில பெருமைகளைக் களையவேண்டும். பணம், பதவி, புகழ், செல் வாக்கு, அதிகாரம், ஆணவம், இறுமாப்பு, சுயநலம், பிரித்தாளும் சக்தி ஆகிய அனைத்தும் அழிவுக்குச் செல்லும் அகன்ற வழிகள். அன்பு, அமைதி, நீதி, நேர்மை, உண்மை ஆகியவை இடுக்கண் வழிகள். பாலைவனச் சோதனையில் அலகை காட்டிய அகன்ற  வழிப்பாதையை (பதவி, அதிகாரம், புகழ், வீண்பெருமை, செருக்கு) இயேசு தேர்வு செய்யவில்லை. அதற்கு நேரெதிரான இடுக்கமான வழியைத் (தாழ்ச்சி, ஏழ்மை, நிந்தை அவமானம், உண்மை, சமத்துவம்) தெரிந்துகொண்டார்.

இன்றைய நம் சமுதாயத்தில் அகன்ற பாதையில் பயணிக்க பலர் உள்ளனர். ஆனால், இடுக்கண் வழியைப் பெரும்பாலானோர் தேர்வு செய்வதில்லை. இடுக்கமான வாயில் வழியாகப் பயணிப்பதே மகிழ்வு, மீட்பு, நிறைவாழ்வு. “இருட்டில் மட்டுமே நட்சத்திரங்களைப் பார்க்கமுடியும். இடுக்கண் வழியே இறையாட்சிக்கான வழி!