மார்த்தா: “தந்தையே, திருமுழுக்கின்போது குழந்தைகளுக்குப் பெயர் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன?”
அருள்பணி: “பெயர் என்பது பல உண்மைகளைத் தன்னிலே
தாங்கியதாக இருக்கிறது. முதலாவதாக, பெயர் என்பது ஒரு நபரைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவதாக, பெயர் என்பது ஒரு மனிதரின் சுய அடையாளத்தோடு (self-identity) தொடர்புடையது. மூன்றாவதாக, பெயரைக் கூறிக் கூப்பிடுவது
உறவு நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னணியில் பார்க்கும்போது, திருமுழுக்கின்போது
ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பது கீழ்க்காணும் உண்மைகளைச் சுட்டிநிற்கிறது: அ) திருமுழுக்கு
அருளடையாளமானது ஒரு குழந்தை கடவுளின் பிள்ளை என்ற உண்மையைச் சுட்டி நிற்கிறது; ஆ) இதன்
காரணமாக ஒரு தனித்தன்மைமிக்க புதிய அடையாளத்தைக் குழந்தை பெற்றுக்கொள்கிறது; இ) இறுதியாக,
திருமுழுக்கின் வழியாக ஒரு குழந்தை கடவுளுடனும் கிறித்தவச் சமூகத்துடனும் உறவுக்குள்
நுழைகிறது.”
அகஸ்டின்: “தந்தையே! திருமுழுக்கு நிகழ்வின்போது
ஞானப்பெற்றோர்கள் நிறுத்தப்படுகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன?”
அருள்பணி: “கடந்த கட்டுரைகளில் நாம் பேசி வந்த
அற்புதமான கொடைகள் திருமுழுக்குப் பெறும் குழந்தைகள்மீது பொழியப்பட்டாலும், அக்குழந்தைகளுக்கு
அவை பற்றிய விழிப்புணர்வு எதுவும் இல்லை. தாங்கள் பெற்றுக்கொண்ட கொடைகள் மட்டில் அக்குழந்தைகள்
விழிப்புணர்வு இல்லாமல் இருந்து, வாழ்வைச் சராசரித்தனமாக ஆக்கி தம் வாழ்வையே தொலைத்துவிடுவதற்கான
வாய்ப்பு உண்டு. எனவே, ஞானம் நிறைந்த, கடவுளுடனான உறவில் ஆழம் கண்ட நபர்கள் அக்குழந்தைகளுக்கு
ஞானப்பெற்றோராகக் கொடுக்கப்படும்போது, குழந்தைகள் வளர வளர பெற்றுக்கொண்ட கொடைகள் மட்டில்
ஞானப்பெற்றோர் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவர். குழந்தைகள் கடவுளுடனான உறவிலும்
பிறரோடுடனான உறவிலும் நாள்தோறும் வளர்ந்து, தங்களது வாழ்வின் முழுமையைக் கண்டு கொள்வதற்கான
வழிவகைகளை ஏற்படுத்துவது ஞானப்பெற்றோரின் கடமை.”
அன்புச் செல்வன்: “தந்தையே, நீங்கள் கூறுவதன் பின்னணியில்
ஏன் திருமுழுக்கு நிகழ்வின்போது, ஞானப்பெற்றோரின் கையில் எரிகின்ற மெழுகுதிரி கொடுக்கப்படுகிறது
என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எரிகின்ற மெழுகுதிரி கடவுள்மீதான நம்பிக்கைக்கு
அடையாளமாக இருக்கிறது. திரு அவையின் பிரதிநிதியாக இருக்கின்ற குருவானவர் கடவுள்மீதான
நம்பிக்கையை ஞானப்பெற்றோரிடம் கொடுத்து, அதைக் குழந்தைக்குக் கொடுக்க அறிவுறுத்துகிறார்.”
அகஸ்டின்: “தந்தையே! சிலர் குழந்தைகளுக்குத்
திருமுழுக்கு வழங்கப்படுவது குறித்துக் கேள்விகள் எழுப்புவதை நான் கேட்டிருக்கின்றேன்.
திருமுழுக்குக் குறித்த தெளிவும், அது வழங்கும் அருள்கொடைகள் குறித்த புரிதலும் குழந்தைகளுக்கு
இருப்பதில்லை. எனவே, வளர்ந்த பிறகு அவை குறித்த தெளிவுகளை அவர்கள் பெற்றுக்கொள்ளும்போது
திருமுழுக்கு பெறலாமே என்கின்றனர். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
அருள்பணி: “நான்கு அல்லது ஐந்து வயதில் எந்தக்
குழந்தைக்கும் கல்வியின் தேவை பற்றி விழிப்புணர்வு இருப்பதில்லை. எனவே, கல்வியின் முக்கியத்துவத்தை
அவர்கள் புரிந்து கொண்ட பின்பு அவர்களாகவே பள்ளியில் சேர்ந்து கொள்ளட்டும் என்று நான்
கூறினால், அது எத்தகைய முட்டாள்தனமான வாதம் என்பது நமக்குத் தெரியும். இத்தகைய வாதமே
மேற்கண்ட வாதம். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைகின்றவரை, அவர்களுக்குத் தேவையான
நல்லவற்றைத் தேர்ந்து கொடுக்கின்ற உரிமையும் கடமையும் பெற்றோர்களுக்கு உண்டு.”
கிறிஸ்டினா: “திருமுழுக்கு அருளடையாளத்தில் இவ்வளவு
அற்புதமான செய்திகள் இருக்கின்றனவா? கேட்கவே ஆச்சரியமாக இருக்கின்றது. ஆனால், இன்று
பல வேளைகளில் திருமுழுக்கு அருளடையாளம் ஒரு வெற்றுச் சடங்காகவும், ஆடம்பரக் கொண்டாட்டமாகவும்
மாறிவிட்டதே!”
அன்புச் செல்வன்: “நான் வாசித்த ஒரு நிகழ்வு என் நினைவிற்கு
வருகிறது. அயர்லாந்து நாட்டில் ஆயராக இருந்தவர் புனித பேட்ரிக் (பத்ரீசியார்). அவர்
ஒருமுறை அரசராக இருந்து கிறித்தவ மதத்தைத் தழுவிய ஆங்குஸ் (íngus) என்ற அரசருக்குத் திருமுழுக்குக்
கொடுத்தார். திருமுழுக்கு நிகழ்வின்போது ஆயர் தவறுதலாகத் தனது செங்கோலை மன்னரது பாதத்தின்மீது
வைத்துவிட்டார். அந்தச் செங்கோல் மிகவும் எடையுள்ளதாக இருந்தது மட்டுமல்லாமல், அதன்
அடிப்பகுதி மிகவும் கூர்மையான நுனியைக் கொண்டாதாகவும் இருந்தது. எனவே, செங்கோல் மன்னரது
பாதத்தில் வைக்கப்பட்டபோது, அது அவரது பாதத்தில் காயத்தை ஏற்படுத்தி, அக்காயத்திலிருந்து
இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. மிகவும் வலியோடு மன்னர் ஆங்குஸ் திருமுழுக்கு நிகழ்வில்
பங்கெடுத்துக் கொண்டிருந்தார். திருமுழுக்கு முடிந்த பின்னர்தான் ஆயர் பேட்ரிக் மன்னரது
காயத்தையும், அதிலிருந்து வழிந்தோடிய இரத்தத்தையும் கவனித்தார். தனது கவனமின்மையை நினைத்து
வருத்தப்பட்ட ஆயர் மன்னரிடம், ‘இதை ஏன் நீங்கள் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை?’ என்று
கேட்க, மன்னர் ‘இதுவும் திருமுழுக்குச் சடங்கின் ஒரு பகுதியென நினைத்தேன்’ என்று பதில் தந்தாராம்.”
அருள்பணி: “ஆம், இன்றுகூட பலருக்குத் திருமுழுக்குச்
சடங்கு குறித்து தெளிவான புரிதல் இருப்பதில்லை. இத்தகைய தெளிவற்றப் புரிதல்கள் காரணமாக,
திருமுழுக்கு அருளடையாளம் வெற்றுச் சடங்காகச் சுருங்கி, சடங்காச்சாரமாகக் கொண்டாடப்பட்டு
வருகிறது. திருமுழுக்கு அடையாளம் வெற்றுச்சடங்காக மாறி வருவதற்கான ஒருசில காரணிகளை
நாம் பார்க்கலாம்: அ) குழந்தைகளின் பெற்றோர்களும் உறவினர்களும் இதை ஒரு பெயர் வைக்கும்
சடங்காக மட்டுமே கருதுகின்றனர். இதன் ஆன்மிக முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிவதில்லை.
ஆ) போதுமான அளவு தயாரிப்பு இருப்பதில்லை. பெரும்பாலும், ஞாயிறு அன்று இவ்வருளடையாளம்
கொண்டாடப்படுவதன் காரணமாகவும், அன்றைய தினத்தில் குருக்களுக்குப் பல வேலைகள் இருப்பதன்
காரணமாகவும் இந்நிகழ்வை அவசரகதியில் நிகழ்த்திவிடுகின்றனர். குழந்தையின் பெற்றோரும்
ஞானப்பெற்றோரும் தங்களையே போதுமான அளவிற்குத் தயாரிப்பதில்லை. தயார் நிலையில் உள்ள
உள்ளத்தில்தான் கடவுளின் அருள் பொங்கிப் பாயும் என்பது நம் மனத்தில் நிறுத்த வேண்டிய
ஒன்று. இ) உறவினர் அல்லது நண்பர்கள் என்பதற்காக ஆன்மிகம் பற்றிய கொஞ்சங்கூட விழிப்புணர்வு
இல்லாத நபர்கள் ஞானப்பெற்றோராக நிறுத்தப்படுகின்றனர். அவர்கள் குழந்தையின் தொடர் ஆன்மிக
வளர்ச்சியில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. இதன் காரணமாக, தற்போது ஞானப்பெற்றோர்
செயல்பாடு ‘ஒரு திருவழிபாட்டுப் பொய்’ (a liturgical
lie) என்று அழைக்கப்படுகிறது. காரணம் பல
ஞானப்பெற்றோர் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் கொஞ்சமேனும் நிறைவேற்றுவதில்லை.’
மார்த்தா: “புகைப்படம் எடுப்பதற்கும், வீட்டில்
விருந்து கொடுப்பதற்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தைப் பலர் திருமுழுக்கு நிகழ்விற்குக்
கொடுப்பதில்லை.”
அருள்பணி: “அண்மைக்காலம் வரை திருமுழுக்கு நிகழ்வை
Christening ceremony என்று
ஆங்கிலத்தில் குறிப்பிடுவது வழக்கம். Christen என்றால் ‘கிறிஸ்துவைப்போல் ஆக்குதல்’ (make it Christ) என்று பொருள்.”
அன்புச் செல்வன்: “தந்தையே, எனக்கு ஓர் ஒப்புமை தோன்றுகிறது.
Ligten என்ற
ஆங்கில வார்த்தை ‘make
it light’ என்று
அர்த்தம் பெறுகிறது. Brighten என்ற ஆங்கில
வார்த்தை ‘make
it bright’ என்று
அர்த்தம் பெறுகிறது. எனவே, Christen என்ற வார்த்தை ‘make it Christ’ என்ற அர்த்தம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. எத்துணை
அற்புதமான வார்த்தை அது!”
அருள்பணி: “ஆம்! இதன் காரணமாகவே இரெய்மண்ட் ப்ரௌன்
(Raymond E. Brown)
என்ற இறையியலாளர், ‘ஒருவரது திருமுழுக்கு நாள் அவரது குருத்துவத் திருநிலைப்பாட்டு
நாளைவிட முக்கியமானது’ என்கின்றார்.”
(தொடரும்)
“ஒரு திருடனின் ஆயுதம்
ஒரு
கூர்மையான சக்தி;
ஓர்
அரசியல்வாதியின் ஆயுதம்
தனது
செருக்குப் பிடித்த பணம்;
ஓர்
ஆசிரியரின் ஆயுதம்
தூய்மையான
ஞானம்; ஆனால்,
ஒரு
கத்தோலிக்கரின் ஆயுதம்,
வல்லமை
மிக்க செபமாலை!”
இப்பொழுது
நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். செபமாலை கண்டுபிடித்து ஏறக்குறைய 700 முதல் 800 ஆண்டுகள் ஆகின்றன. முதன்முதலில் செபமாலை என்பது 13-ஆம் நூற்றாண்டில் புனித தோமினிக் அவர்களுக்குப் புனித கன்னி மரியா காட்சி அளித்தார். அந்தக் காட்சியில் மாதா புனிதரிடம், ‘செபமாலை ஓர் ஆன்மிக ஆயுதம்’ என்று உணர்த்தினார். இந்த ஆயுதத்தை அல்பிஜென்ஸ் என்னும் கூட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்தினர்.
முதலில்
நாம் ‘அல்பிஜென்ஸ்’ என்றால்
யார் எனக் காண்போம். அல்பிஜென்ஸ் என்பது அல்பி என்னும் நகரத்திலிருந்து உருவாகியது. இவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளாமல் ஓர் இறைவனின் தூதராக ஏற்றுக்கொண்டார்கள். மேலும், கடவுளின் சிலுவைப் பாடுகள், நற்கருணை, கடவுளின் விண்ணேற்பு மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், பல அவதூறுகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
இந்த அவதூற்றைப் பல கத்தோலிக்கரும் நம்பி
அவர்களைப் பின்தொடரத் தொடங்கினார்கள். அதைப்பார்த்து மனம் நொறுங்கிய கன்னி மரியா, புனித தோமினிக் மூலமாகச் செபமாலை என்னும் வல்லமையுள்ள ஆயுதத்தை அறிமுகப்படுத்தினார். புனித தோமினிக் செபமாலையை மதம் மாறிய கத்தோலிக்கரிடமும் அல்பிஜென்ஸிடமும் போதித்தார். அப்பொழுது பல மக்கள் மனம்
மாறினார்கள். தங்கள் தவற்றை உணர்ந்தார்கள். இந்த மனமாற்றத்தின் முக்கியக் காரணம் மறையுண்மைகள். இந்த மறையுண்மைகள் நேரடியாக அல்பிஜென்ஸ்களின் அவதூறை முறியடித்தது. அதன் பிறகு அல்பிஜென்ஸை செபமாலை மூலம் புனித தோமினிக் வென்றார்.
1569-ஆம் ஆண்டு
திருத்தந்தை ஐந்தாம் பயஸ் (Papul Bull Consueverunt romaniiontifices) என்னும் செபமாலையின் கட்டமைப்பை உருவாக்கினார். லெப்பான்டோ போரில் 1571-ஆம் ஆண்டில் நடந்த இந்தப் போரில் உள்ள கத்தோலிக்க வீரர்களின் எண்ணிக்கை குறைந்தது. அப்பொழுது அவர்கள் செபமாலையைச் செபித்து எதிரிகளை வீழ்த்தினார்கள். அதனால் அந்நாளை (அக். 7) திருத்தந்தை பயஸ் வெற்றியின் மாதா திருநாளாக மாற்றினார். அந்நாளைச் சில ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தந்தை கிரகோரி XIII செபமாலையின்
மாதா திருவிழாவாக மாற்றினார். திருத்தந்தை புனித
இரண்டாம் ஜான்பால் அவர்கள் ‘ஒளியின் மறையுண்மைகளை’ 2022-ஆம்
ஆண்டு அறிமுகப்படுத்தினார். பிறகு 2002-2003 ஆண்டை, செபமாலையின் ஆண்டாகப் பெயர் சூட்டினார். மேலும், செபமாலை கூறுவதுதான் அவருக்கு மிகவும் பிடித்த செபம் என்றும் கூறினார்.
இப்பொழுது
நாம் செபமாலையின் ஓர் அற்புதத்தைப் பார்ப்போம்! 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது எட்டு சேசு சபை அருள்பணியாளர்கள் ஜப்பானில் குருத்துவப் பணி செய்துகொண்டு இருந்தனர். அப்பொழுது ஒருநாள் அணுக்கரு குண்டு ஹிரோசிமாவில் வெடிக்கப் போகின்றது என அறிந்து அச்சம்
கொண்டு இருந்தனர். ஏனென்றால், அவர்களின் பங்கும் ஆலய விடுதியும் ஹிரோசிமாவும் ஒரு கி.மீ. தொலைவில்
உள்ளன. அதனால் அவர்கள் செபமாலை செபிக்கத் தொடங்கினர். அந்தக் குண்டு வெடித்தப் பின்பு, அவர்கள் அருகில் இருந்த வீடு மற்றும் அனைத்துக் கட்டடமும் சிதைந்தன. ஆனால், சிப்பியில் பத்திரமாக இருக்கும் முத்தைப் போல் அவர்களுக்கும், அவர்கள் இருந்த கட்டடத்திற்கும் ஒன்றுமே ஆகவில்லை. இந்நாள்வரை
எப்படி அணுக்கதிரிலிருந்து அவர்கள் தப்பினர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நாம்
செபமாலையைச் சாதாரணமாக எண்ணக்கூடாது. அது அசாதாரணமானது; தினமும் ஒரு செபமாலை செபியுங்கள், பிறருக்கும் அந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். செபமாலையைச் செபிக்கும் போது நமது புனித கன்னி மரியா உடன் வருவார் என்று உணர்ந்து செபிப்போம். புனித கன்னி மரியாவின் முழு ஆசிரைப் பெறுவோம். நாமும் நமது பிரச்சினைகளை, லெப்பான்டோ போர் வீரர்களைப் போன்று செபமாலையால் கையாள்வோம். புனித தோமினிக் அல்பி ஜென்ஸ்சியர்களை வீழ்த்தியதுபோல, நாமும் நமது பிரச்சினைகளை வீழ்த்துவோம்.
(சென்ற இதழ் தொடர்ச்சி...)
பிற
இனத்தாரிடையே தூதுரைப் பணியாற்றுவோரை இங்கே சிறப்பாக நினைவுகூர்கிறேன். இயேசு ஆண்டவரின்
அழைப்பை ஏற்று, கிறிஸ்துவில் இறைத்தந்தை வெளிப்படுத்திய அன்பை அறிவிக்க நீங்கள் அனைத்து
நாடுகளுக்கும் பயணித்துள்ளீர்கள். இதற்காக நான் உங்களைப் பெரிதும் பாராட்டுகிறேன்,
நன்றி கூறுகிறேன். “உயிர்த்த கிறிஸ்து, எல்லா மக்களினத்தார்க்கும் நற்செய்தி அறிவிக்கிற
கட்டளையைத் தம் சீடர்களுக்குத் தந்து அனுப்பியதும்...” (மத் 28:18-20), அவர்கள் அதனை
ஏற்றுச் செயல்பட்டது போன்று, உங்கள் தூதுரைப்பணி ஒரு பதிலிறுப்பே ஆகும். இவ்வாறு தூய
ஆவியாரின் வல்லமையால் உந்தப்பட்டு, எல்லா மக்களினத்தாரிடையேயும் தூதுரைப் பணியாற்றி
இயேசு ஆண்டவர் நமக்குத் தந்துள்ள உயர்ந்த எதிர்நோக்கிற்கு உலகிலே சான்றுபகர அழைப்புப்
பெற்றுள்ள திருமுழுக்குப் பெற்ற அனைவரோடும் நீங்களும் சிறந்த அடையாளங்களாய் விளங்குகிறீர்கள்.
இந்த
எதிர்நோக்கு ‘எட்டக்கூடிய தொலைவு’ என்று இவ்வுலகு காட்டும் நிலையற்றவைகளைத்
தாண்டி, இப்போதே நாம் பங்கேற்கிற தெய்வீக உண்மைகளை நோக்கிய கதவுகளைத் திறந்து வைக்கிறது.
புனித ஆறாம் பவுல் குறிப்பிடுவதுபோல, கிறிஸ்து தரும் மீட்பை இறை இரக்கத்தின் கொடையாக
புனித திரு அவை அனைவருக்கும் வழங்குகிறது. “அம்மீட்பு, பொருள் மற்றும் ஆன்மிகத் தேவைகளை
மட்டும் சார்ந்தது அல்ல; இம்மைக்குரிய ஆசைகள், போராட்டங்கள், எதிர்பார்ப்புகள், செயல்பாடுகள்
ஆகியவற்றையும் உள்ளடக்கியது அல்ல; மாறாக, இத்தகைய எல்லைகளையெல்லாம் தாண்டி, ‘இறைவன்
என்ற முழுமையில் ஒன்றிணைதல்’ என்கிற நிறைவுக்கு இட்டுச்செல்வதாகும்.
ஆக, மீட்பு என்பது நிறைவு காலத்தை நோக்கியது; அனைத்தையும் கடந்தது. அது இம்மை வாழ்வில்
தொடங்கித் தொடர்கிறது; எனினும், அது நிலை வாழ்வில் நிறைவு பெறுகிறது” (இன்றைய உலகில் நற்செய்திப்பணி எண். 27).
உலகின்
பல முன்னேறிய நாடுகளில் பின்வரும் சமூக அவலங்கள் மலிந்து காணப்படுகின்றன: பரவலான குழப்ப
உணர்வு, தனிமை, முதியோரின் நியாயமான தேவைகளைக் கண்டுகொள்ளாமை, தேவையில் உழலும் அடுத்தவர்க்கு
உதவுவதில் காட்டும் தயக்கம் என்பன அவை. இத்தகைய சூழமைவுகளில், கிறித்தவக் குழுமங்கள்
எதிர்நோக்கினால் உந்தப்பட்டு, புதிய மானுடத்தை உருவாக்குவதில் முன்னோடிகளாக விளங்க
முடியும். இது உன்னதமான செயல்முறை அல்லவா! தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில்
‘நெருக்கமான உறவு நிலை’ மறைந்து வருகிறது. நாம் அனைவரும் ஒருவர்
ஒருவரோடு தொடர்பில் இருக்கிறோம்; ஆனால், உறவில் இல்லை. செயல்திறன் பற்றிய எண்ணமே நம்மை
ஆட்கொண்டுள்ளது. இவ்வுலகு சார்ந்த பொருள்கள் மேலுள்ள பிடிப்பும் பேரார்வமும் நம்மைச்
சுயநலவாதிகளாக மாற்றி, பிறர்நலம் பேண இயலாதவர்களாய் ஆக்கி விடுகிறது. குழும வாழ்வில்
நாம் பெறும் நற்செய்தி அனுபவம் நம்மில் முழுமைபெற்ற, மீட்படைந்த, நலமான மனிதப் பண்பை
மீட்டெடுக்க இயலும்.
இதற்கு,
யூபிலி பற்றிய அதிகாரப்பூர்வ ஆணை மடலில் 7 முதல் 15 வரையுள்ள எண்களில் குறிப்பிட்டுள்ள
பணிகளைச் செயல்படுத்த மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். அவற்றைச் செயல்படுத்தும்போது
ஏழையரிலும் ஏழையர், வலுவற்றோர், நோயுற்றோர், முதியோர் மற்றும் பொருள் முதன்மையிலும்
நுகர்வுச் செயல்பாடுகளிலும் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டோர்
ஆகியோர்மேல் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும். இதனைக் ‘கடவுளின் பாணி’யில் செய்யவேண்டும். அதாவது, அவர்களின் வாழ்விடச் சூழல்களில்
அவர்களுடன் நெருக்கமாகவும் மென்மையுடனும் பழகி, பரிவிரக்கம் காட்டி, அவர்களுடன் தனிநபர்
உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் (நற்செய்தியின் மகிழ்ச்சி, எண்கள் 127-128). நாம் எதிர்நோக்குடன்
வாழ்வது எப்படி என்பதைப் பல சமயங்களில் அவர்கள்தான் கற்றுத்தருகிறார்கள். தனிநபர் உறவுகளின்
வழியாக, இரக்கம் வழிந்தோடும் இறைவனின் பேரன்பை அவர்களுக்குக் கொண்டுசேர்க்க இயலும். அப்போது ‘கிறிஸ்துவின் இதயத்தினின்று பொங்கி வழியும்
அன்பே, தொடக்க நற்செய்திப் போதனையின் மையம்’ என்பதை
நாம் உணர்வோம்.
நாம்
இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை, இயேசுவின் அணைகடந்த அன்பு எனும் மூலத்திலிருந்து
பெற்று எளிதாகப் பிறருக்கு வழங்க முடியும் (1பேது 1:21). இவ்வாறு, நாம் கடவுளிடமிருந்து
பெற்றுள்ள அதே ஆறுதலைப் பிறருக்குக் கொண்டுசேர்க்க முடியும் (2பேது 1:3-4). இயேசுவின்
இறை-மனித இதயத்தின் வழியாக இறைவன் அனைவரையும் அவரது அன்பின்பால் ஈர்த்து, ஒவ்வொருவரின்
இதயத்துடன் பேச விரும்புகிறார். “இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்துடன், இறைத்தந்தையின்
அன்புடன் இவ்வுலகம் முழுவதையும் அரவணைத்துக்கொள்ளும் அடையாளங்களாக விளங்கும் தூதுரைப்
பணியைத் தொடரவே நாம் அனுப்பப்பெற்றிருக்கிறோம்”
(திருத்தந்தையின் தூதுரைக் கழகங்களின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ஆற்றிய உரை
3-6-2023).
3. எதிர்நோக்கின் தூதுரைப்
பணியைப் புதுப்பித்துக்கொள்வோம்
எதிர்நோக்கின்
தூதுரைப் பணியின் அவசரத்தை எதிர்கொள்ளும் கிறிஸ்துவின் சீடர்கள், அப்பணியில் ‘நிபுணத்துவம்
பெற்ற சிற்பிகளாவது எப்படி?’ என்பதை முதலில் கண்டறிய வேண்டும். மேலும், கவனம் சிதறிய,
மகிழ்ச்சி இழந்த மனித இனத்தை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும். இந்த
இலக்கை அடைய ஒவ்வொரு திருப்பலிக் கொண்டாட்டத்திலும் குறிப்பாக, வழிபாட்டு ஆண்டின் உச்சமாகிற
உயிர்ப்புப் பெருவிழாவின் முத்திருநாள்களிலும், நம் உயிர்ப்பு அனுபவத்தைப் புதுப்பித்துக்கொள்ள
வேண்டும். கிறிஸ்துவின் மீட்பளிக்கும் இறப்பு-உயிர்ப்பில் என்றும் நிலைத்திருக்கிற
‘வசந்த கால’ வரலாற்றை அடையாளப்படுத்தும் ஆண்டவரின்
பாஸ்கா கடத்தலில் நாம் திருமுழுக்குப் பெற்றுள்ளோம். இதன் விளைவாக அனைவருடனும் பகிர்ந்துகொள்ள
எதிர்நோக்கின் நிறைவினால் நிரம்பி வழியும் ‘வசந்த கால’ மனிதர்களாக
உருவாகிறோம்.
நாம்
கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டிருப்பதாலும், ‘சாவும் வெறுப்பும் மனித வாழ்வைத் தீர்மானிப்பவை
அல்ல’ என்பதை உணர்ந்திருப்பதாலும் இது சாத்தியமாகிறது.
திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும் அருளடையாளங்களிலும் நிகழ்த்தப்படும் மறைபொருள்களிலிருந்து,
உலகளாவிய பாஸ்கா நற்செய்தி அறிவிப்புப் பணியாற்றத் தேவைப்படும் ஆர்வம், வேகம், மனவுறுதி,
பொறுமை ஆகியவற்றைத் தூய ஆவியாரின் வல்லமை வழியாகப்
பெற்றுக்கொள்கிறோம். “உயிர்த்து மாட்சியடைந்த இயேசு கிறிஸ்துவே நமது எதிர்நோக்கின்
ஊற்று; அவர் நம்மிடம் ஒப்படைத்துள்ள தூதுரைப் பணியைத் தொடர்ந்தாற்றத் தேவைப்படுகிற
அனைத்தையும் தந்து உதவிடாமலிரார்” (நற்செய்தியின் மகிழ்ச்சி, எண்
275).
கிறித்தவர்களாகிய
நாம், இறைவனிடமிருந்து பெற்றிருக்கிற கொடையும் பணியுமாகிற எதிர்நோக்கிற்குச் சான்றுபகர
அவருடன் ஒன்றித்து அவரில் வாழ்கிறோம். இறைவேண்டலில் ஊன்றியிருப்போரே எதிர்நோக்கின்
பணியாளர்கள்! ஏனெனில், வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் சேவியர் வான்துவான் கூறுவதுபோல,
“இறைவேண்டல் செய்பவரே எதிர்நோக்குபவர்.” வான்துவான் தன் நீண்ட சிறையிருப்புக் காலத்தில்
இறைவேண்டலில் பிரமாணிக்கமாய் இருந்தார்; நற்கருணை கொண்டாட்டத்தில் உறுதியாக இருந்தார்;
இவ்விரண்டிலிருந்தே உரிய ஆற்றல் பெற்று எதிர்நோக்கில் தொடர்ந்து நிலைத்திருந்தார்.
இறைவேண்டல்தான் தூதுரைப் பணியின் முதன்மைச் செயல்பாடு; அதுவே எதிர்நோக்கின் முதன்மை
ஆற்றலுமாகும். இதனை நாம் மறவாதிருப்போமாக!
எனவே,
ஆண்டவரின் அருள்வாக்கை குறிப்பாக, சிறந்த சுருதி இசைவு கொண்டவையும், தூய ஆவியாரே உருவாக்கியவையுமான
திருப்பாடல்களை அடிப்படையாகக் கொண்ட இறைவேண்டலில், எதிர்நோக்கின் தூதுரைப் பணியைப்
புதுப்பித்துக்கொள்வோமாக. இடுக்கண்கள் மத்தியில், நம்மைச் சுற்றிக் காணப்படும் எதிர்நோக்கின்
அறிகுறிகளைத் தேர்ந்து தெளிந்திட திருப்பாக்களே நம்மைப் பயிற்றுவிக்கின்றன. மக்களினத்தார்
அனைவரும் கடவுளைப் போற்றிப் புகழவேண்டும் என்ற நிலையான தூதுரைப் பணி ஆவலைக் கொண்டிருக்கத்
துணைநிற்கின்றன. இறைவேண்டல் செய்வதன் வழியாக, இறைவன் நமக்குள் ஏற்றி வைத்திருக்கும்
எதிர்நோக்கின் சுடரை உயிரோட்டத்துடன் வைத்திருப்போம். இதனால் அச்சுடர் பெருநெருப்பாக
மாறும். இந்தச் சுடரின் தீ நம்மைச் சுற்றி வாழும் அனைவரிலும் ஒளியேற்றி அவர்களைக் கதகதப்பாக
வைத்திருக்கும். இறைவேண்டல் தூண்டியெழுப்புகிற நமது தெளிவான செயல்பாடுகளும், கருத்துணர்த்தும்
செயற்குறிப்புகளும்கூட அவர்களில் ஒளியேற்ற உதவும்.
நிறைவாக,
கிறித்தவ எதிர்நோக்கு போன்று நற்செய்தி அறிவிப்புப்பணியும் குழுமப் பண்புடையதாகும்.
இப்பணி தொடக்கத்தில் நடைபெறும் நற்செய்திப் போதனை, அதைத் தொடர்ந்து நிகழும் திருமுழுக்கு
வழங்குதலுடன் முடிவுறுவதில்லை; மாறாக, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருடனும் இணைந்து
நற்செய்திப் பாதையில் பயணிப்பதன் வழியாகக் கிறித்தவக் குழுமங்களைக் கட்டியெழுப்புவதில்
தொடர்கிறது. இன்றைய சமுதாயத்தில் திரு அவையின் உறுப்பினர் என்ற நிலை, ஒரே முறையில்
அடைந்துவிடக்கூடிய ஒன்றல்ல; அதனால்தான், கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கையில் அவர்களை
வளர்த்து முதிர்ச்சியடைய செய்கிற அனைத்துத் தூதுரைப்பணிச் செயல்பாடு “திரு அவையின்
அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ஒரு வகைமுறையாக உள்ளது”
(நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 15) என்பதை நாம் உணர வேண்டும். இதற்கு ஒன்றிணைந்த இறைவேண்டலும்
செயல்பாடும் தேவை.
திரு
அவையின் தூதுரைப் பணிச் செயல்பாடு, கூட்டொருங்கியக்கமாகச் செயல்வடிவம் பெற வேண்டும்
என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். திருமுழுக்குப் பெற்றவர்களின் ‘தூதுரைப் பணிப்
பொறுப்பு’ மற்றும் ‘புதிய தனித்திரு அவைகளுக்கு
நல்கும் ஆதரவு’ ஆகிய இரண்டிற்கும் திருத்தந்தையின்
திருத்தூதுக் கழகங்கள் செய்து வரும் உதவிகளையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அன்புப்
பிள்ளைகளே, இளையோரே, வயது வந்தோரே, முதியோரே! உங்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் சாட்சியவாழ்வு, இறைவேண்டல், தியாகம், தாராளப் பண்பு ஆகியவற்றின் மூலம் திரு
அவையின் நற்செய்தி அறிவிக்கும் பணியில் தீவிரமாகப் பங்குபெறுங்கள். உங்களின் இந்தப்
பங்கேற்பிற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புச்
சகோதரிகளே, சகோதரர்களே! எதிர்நோக்கில் ஊன்றி நின்ற இயேசு கிறிஸ்துவின் அன்னையாகிற மரியாவின்பால்
நம் பார்வையைத் திருப்புவோம். இந்த யூபிலி ஆண்டிற்கும் வரவிருக்கும் ஆண்டிற்கும் நாம்
செய்யும் இறைவேண்டல்களை அவரிடம் ஒப்படைப்போம். “கிறித்தவ எதிர்நோக்கின் ஒளி ஒவ்வொருவரையும்
ஒளிர்விப்பதாக! இதுவே அனைவருக்கும் நாம் வழங்கும் இறையன்பின் செய்தி. திரு அவை, மாந்தர்
உலகின் அனைவருக்குமான இறையன்பின் நற்செய்திக்கு, ஒவ்வொரு பகுதியிலும் சான்று பகர்வதாக!”
(யூபிலி பற்றிய ஆணை மடல்: ‘எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது’. எண்: 6) - திருத்தந்தை
பிரான்சிஸ்
ஏழைகளின் புனிதர் தூய அசிசி பிரான்சிஸ்-இன் திருவிழாவான அக்டோபர் 4-இல் திருத்தந்தை லியோ அவர்களால் கையெழுத்திடப்பட்டு அக்டோபர் 09 -இல் வெளியிடப்பட்ட ‘நான் உன்னை அன்பு செய்தேன்’ (DILEXI TE) எனும் திருத்தூது அறிவுரை மடல் ஏழைகள், துன்புறுவோர், புலம் பெயர்ந்தோர், விளிம்புநிலை மக்கள் சார்பாக திரு அவை நிலைப்பாடு (Option) எடுக்க வேண்டும் என்கிற புரட்சிகர அழைப்பை விடுக்கிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் எழுதிய
இயேசுவின் திரு இருதயம் பற்றிய அப்போஸ்தலிக்க
மடலான ‘Dilexit nos’-ஐத் தொடர்ந்து ஏழைகள் சார்பு நிலைப்பாட்டை வலிறுத்தி இந்த அழகிய அறிவுரை மடலை எழுதத் தொடங்கி இருந்தார். திருத்தந்தை லியோவும் அதை பிரான்சிஸ் அவர்களின் கனவுகள் மற்றும் கருத்துகளை உள்வாங்கி தனக்கே உரிய பாணியில் மெருகேற்றி இந்த அறிவுரை மடலை எழுதியுள்ளார். இரண்டாம் வத்திக்கான் சங்கம் தொடங்கி கத்தோலிக்கத் திரு அவையில் ஏழைகள் சார்பு பற்றிய ஓர் அருமையான தொடர்ச்சி இருப்பதை இந்த மடல் வெளிப்படுத்துகிறது.
ஐந்து தலைப்புகளில்...
121 எண்களில் 21,000 வார்த்தைகளைக் கொண்ட
இம்மடல் காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்தறிந்து இன்றைய
சூழலுக்குச் சரியாக, திரு அவை தன் அன்புப் பணியால் பதில் கூற அழைப்பு விடுக்கிறது என்று கூறலாம். கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் அன்பு என்பது துன்புறுவோர், நலிந்தோர், ஏழைகள் மீதான அன்பு என்பதே இந்த மடலின் சாராம்சம் எனலாம். ஏழைகள் சார்பான நிலைப்பாடு அல்லது ஏழைகளுக்கு முன்னுரிமை (Preferential Option for the poor)
என்கிற கோட்பாடு இலத்தீன் அமெரிக்கப் பின்னணியில் எழுந்தாலும், இது யாரையும் புறந்தள்ளவில்லை. எல்லாரையும் உள்ளடக்கிய கோட்பாடே என்கிற புரிதலையும் திருத்தந்தை லியோ ஏற்படுத்துகிறார்.
‘காயப்பட்ட ஏழைகள் மற்றும் துன்புறும் மக்கள் முகங்களில் துன்புறும்
இயேசுவே தெரிகிறார்’ என்று
கூறும் திருத்தந்தை, ஏழ்மை மற்றும் வறுமையின் பல்வேறு கோரமுகங்களையும் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய
வறுமை மற்றும் ஏழ்மைக்குக் காரணம் பெருகிவரும் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் அதைத் தீவிரப்படுத்தும் பொருளாதாரச் சித்தாந்தங்களே என்பதையும் கோடிட்டுக் காட்டும் திருத்தந்தை, சர்வாதிகாரப் பொருளாதாரம் கொல்லும் (Dictatorship of Economy will kill) என்று எச்சரிக்கை
செய்கிறார். உலகில் ஒரு சிறு குழுவினரின் சொத்து அசுர வேகத்தில் வளர்வதையும், அதனால் ஏழை-பணக்காரன் இடைவெளி அசுர வேகத்தில் அதிகரிப்பதையும், எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத சந்தை மற்றும் ஊக வணிகம் பற்றியும்
குறிப்பிடுகிறார்.
தூக்கி
எறியும் கலாச்சாரம் மேலோங்கி வருவதையும், பட்டினிச்சாவுகள் தொடர்வதையும், மனித உரிமைகள் மீறப்படுவதையும், சந்தைப் பொருளாதாரமே தீர்வு என்ற போலியான அறிவியல் தகவல்கள் தரப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.
புலம்பெயர்வது
அதிகரிப்பது, புலம்பெயர்வோர் நிலை மற்றும் உரிமைகள், போர்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டோர், பெண்கள், சமூக அமைப்புகளால் புறக்கணிக்கப்படுவோர் ஆகியோரின் மாண்பு, உரிமை பற்றியும் பேசுகிறார்.
ஒரு
கிறித்தவன், ஏழைகள் சமூகத்தில் இருக்கிறார்கள்; எனவே, சமூகம் தீர்வு காணட்டும் என்று தப்பிவிட முடியாது. ஏழைகள் நம்மில் ஒருவர், நம் குடும்பம், ஏழைகள் திரு அவையின் இதயம். ஏழைகளுக்கான பணி என்பது வெறும் மற்றோர் இரக்கப் பணியல்ல; சமூக மாற்றத்திற்கான பணி என்றும் தெளிவுபடுத்துகிறார்.
இது
இரத்தினச் சுருக்கமே. விரிவாகக் கட்டுரையாக எழுதுகிறேன். அனைவரும் வாசித்து உள்வாங்க வேண்டிய அருமையான மடல்.
வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுகிற ‘மறைபரப்பு ஞாயிறு’ எந்த அளவுக்கு இறை மக்களின் மறைபரப்பும் கடமையை உணரச் செய்கிறது? அல்லது அதற்கான செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துகிறது? என்பது பெரிய சந்தேகம்தான். ஏதோ அந்த ஞாயிறுக்காகக் கொடுக்கப்படுகிற கவர்களில் கொஞ்சம் போட்டுக் கோவிலில் கொடுப்பது தவிர, வேறு அதிகமாக ஏதாவது ஒரு சில நகர்புறங்களில் மட்டும் சில கேளிக்கை விளையாட்டுகளைக் கொண்டு பணம் சேர்ப்பதுதான் நடக்கிறது. அதுதவிர, மக்களின் உள்ளங்களில் மறைபரப்புப் பற்றிய தேவை, கடமை போன்ற கருத்துகள் அதிகமாகப் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை என்பதுதான் நாம் காண்பது. எனவே, மறைபரப்பு, சான்று வாழ்வு, நற்செய்திப் பகிர்வு, பிறரன்புச் செயல்களில் ஈடுபடுதல் போன்றவைகளை மக்களுக்கு நினைவூட்டுவதும் தெளிவூட்டுவதும் பங்குப் பணியாளர்களுடைய கடமையாகிறது.
பங்குத்தளங்கள்
இன்றைய நாள்களில் அன்பியங்கள் வழியாகப் பல இடங்களில் உயிருள்ள (vibrant) குழுமங்களாக இயங்கிவருகின்றன. இருப்பினும்,
அடிப்படையில் அன்பியங்களின் நோக்கம் - குடும்பங்களின் சான்று வாழ்வுக்கு உரமூட்டுவதாகவும்,
அவர்களின் இறைநம்பிக்கை, பிறரன்புச் செயல்களின் வழியாகத் தங்கள் வாழ்க்கைச் சூழலில்
எளிதாகக் காணப்படுவதாகவும் வளர வேண்டும் என்பதே. இதுவேதான் கடந்த ஆண்டு செப்டம்பர்
மாதத்திற்கான திருத்தந்தையின் செபக்கருத்தாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று
பெரும்பாலும் அன்பியங்கள் ஆலயப் பணிகளுக்கு நன்கொடை வசூலிக்கவும், வழிபாடுகளில் வாசகம்
வாசிக்கவும், மன்றாட்டுகள் எழுப்பவும், காணிக்கைப் பவனியில் பழங்கள், காய்கறிகள் தூக்கி
வரவும், மாதம் இருமுறை அன்பிய உறுப்பினர் அனைவரும் என்றில்லாமல் அன்பியத்தைப் ‘பெண்பியம்’ என்று அழைக்கும் அளவுக்குப் பெண்கள் மட்டும் அதிகம் கூடிப்
(புறணி) பேசுகிற ஓர் அமைப்புதானோ என மாறிக்கொண்டிருக்கிறதோ என்றாகிவிட்டது!
இதுதவிர
மற்ற மன்றங்களோ, சபைகளோ கூட அவைகளின் அடிப்படை நோக்கமாகிய சான்று வாழ்வு, மறைபரப்பு
தவிர மற்ற பல வகைகளில் செயல்படுவதே எதார்த்தமாக இருக்கிறது. ஒரு பங்கில் உள்ள கத்தோலிக்கக்
கிறித்தவக் குடும்பங்கள், தாங்கள் நற்செய்தி அறிவிப்பவர்களாக வாழ, பிறரன்புச் சேவைகளின்
வழியாக மறைபரப்பும் தூதர்களாக வாழ என்னென்ன வழிகளில் எப்படிச் செய்யலாம் என்று நற்செய்தியை
வாசித்து, விவாதித்து வழி காண்பதற்குப் பதில், தங்களுக்கு வேண்டியவர் வீட்டில் கூட்டம்
என்றால் பலரும், வேண்டாதவர் வீட்டில் என்றால் ஒருசிலர் மட்டும் என்ற பாணியில் அன்பியக்
கூட்டங்களும் நடைபெறுகின்றன.
மேலும்,
பங்குப்பணியாளர்கள் அன்பியங்களைத் தங்களது திட்டங்களுக்காக நன்கொடை வசூல் செய்து உதவுபவைகளாக
இருந்தால் போதும் என்ற நிலைதான் மேலோங்கி நிற்கிறது. அதாவது, பழைய கோவிலை இடித்துக்கட்ட,
சிறிய கோவிலைப் பெரிதாக்க, கோபுரம், கொடிமரம் புதிதாக அமைக்க, குறைந்தபட்சம் பீடத்தை
மாற்றியமைக்க அல்லது புதிய தளம் போட அல்லது இந்த நவீன காலத்தில் வருடத்தில் ஒருநாள்
பவனிக்காக புதிய தேர்/சப்பரம் செய்ய என்று, மக்களின் கிறித்தவ வாழ்வு முன்னேற்றத்திற்கான
வழிகாட்டுதல் தவிர, விளம்பரத்திற்காகவே புதுப்பிக்கும் கலை நிபுணர்களாகச் செயல்பட பணம்
திரட்டும் ஏஜெண்டுகளாக அன்பிய மக்களைப் பயன்படுத்துவது வெகுசாதாரணமாகிவிட்டது.
பங்குமக்கள்
எல்லாச் செயல்பாடுகளிலும் நற்செய்தியை ஏற்று, ஒருவர் ஒருவரை அன்பு செய்து வாழ்பவர்களாகப்
பயிற்றுவிக்கப்பட வேண்டும். மக்கள் மேற்கொண்டிருக்கிற விண்ணரசை நோக்கிய பயணத்தில்,
பங்கு எனும் குடும்பம் ஒரு நீர்த்தடாகமாக இருந்து, தாகம் தீர்த்து தங்களது மறைபரப்புப்
பணியைத் தொடர உதவ வேண்டும். இதுவே அவர்களது கிறித்தவ வாழ்வின் முழுமுதற்பணியாக உணரச்
செய்ய வேண்டும். ஏனெனில், இயேசுவே நாம் அவரது சீடர்களாயிருப்பதற்குக் (கிறித்தவர் களாக
இருப்பதற்கு) கொடுத்த அடையாளம்: “நீங்கள் ஒருவர், மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” (யோவா 13:35) என்பதுதான். எப்பொழுது இறைமக்கள் இந்த நிலையில்
வளர்ந்துவிட்டார்களோ, அதற்குப் பின் கோவிலை அழகுபடுத்துதல், விரிவுபடுத்துதல் போன்ற
காரியங்களில் அவர்களை ஈடுபடுத்துவது நலமாயிருக்கும். இவ்விதம்தான் நமது பங்குத்தளங்கள்
இறைநம்பிக்கையையும் அன்புச் செயல்களையும் வெளிப்படுத்தும் இடங்களாக அமைய முடியும்;
அன்பியங்களின் வழி மறைபரப்பும் வளரும்!
திரு அவையின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தூய ஆவியார் அதற்குத் தருகின்ற அருங்கொடைகள் மிகப்பல. அவற்றுள் தனிச் சிறப்பு வாய்ந்தது துறவு வாழ்வுக்கான அழைப்பு. தனது தனியாள் சுதந்திரத்தையும் சொகுசுகளையும் திருமண வாழ்வையும் விட்டுவிட்டு பணிவு, எளிமை, மணத் துறவு எனும் உறுதியேற்புகளைச் செய்து இறையாட்சிப் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்து, சகோதரக் குழுமங்களாக வாழ்வோரே கிறித்தவத் துறவியர்.
இந்தத்
துறவு வாழ்வு எனும் அருங்கொடையினால் திரு அவை அடைந்துள்ள வளர்ச்சிகள் மிகப்பல. அதன் வழியாக தூய ஆவியார் ஒவ்வொரு காலத்திலும் திரு அவையைப் புதுப்பித்துள்ளார். அதன் மாற்றுப் பண்பாட்டு வாழ்க்கை முறை வழியாக உலகப்போக்கில் செல்ல திரு அவைக்கு எப்போதும் ஏற்படும் சோதனையை எதிர்த்து நிற்கும் ஆற்றலைத் தருகின்றார்.
தங்கள்
தனித்தன்மை வாய்ந்த இறைவேண்டல் முறைகள், மக்கள்பணி என்பனவற்றின் வழியாகப் பல்வேறு துறவு அவைகள் கிறித்தவச் சீடத்துவத்தின் அழகையும் புனிதத்தையும் வெளிப்படுத்துகின்றன. பல வேளைகளில் முக்கிய
வரலாற்று மாற் றங்களையும், அவற்றின் வழியாக தூய ஆவியார் தரும் தூண்டுதல்களையும் முதலில் இனம்கண்டவர்கள் துறவியரே. காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப திரு அவை மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பணிகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்பவர்களும், முன்னின்று சிறப்பாகச் செய்து வருபவர்களும் அவர்களே.
“துறவு அவைகள் இறைவாக்கு உரைக்கும் தங்களது குரலால், அவை திரு அவையையும் சமூகத்தையும் நோக்கிக் கேள்விகள் எழுப்ப அழைக்கப்பட்டுள்ளன” (இஅ
65).
இறைவாக்குத்
தன்மையுடைய அவர்களது குரலும் செயல்பாடுகளும் திரு அவைக்கு இன்றும் மிகவும் அவசியமே. சிறப்பாக, பல நூற்றாண்டுகளாகத் தங்கள் குழுமங்களில்
அவர்கள் கடைப்பிடித்துள்ள கூட்டியக்க வாழ்வு மற்றும் தெளிதேர்வு நடைமுறைகளிலிருந்து திரு அவையும் கூட்டொருங்கியக்கப் பாதையில் நடக்கப் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள
முடியும். இதற்கு எடுத்துகாட்டுகளாக தங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கவும், அமைப்புகளைப் புதுப்பிக்கவும் தங்கள் பணிகளிலும் ஏழைகளுடனான உடனிருப்பிலும் புது முறைகளைச் செயல்படுத்த தங்கள் மாநில மற்றும் பொதுப்பேரவைகளில் அவர்கள் செய்யும் தெளிதேர்வுமுறை, தனி உறுப்பினர்களுடைய திறமைகளையும், தங்கள் துறவு அவைக்குப் பொதுவான மறைத்தூதுப் பணியையும் ஒத்திசைவாக்கல் என்பவற்றைக் குறிப்பிடலாம். இருப்பினும், அவற்றுள் சிலவற்றில் காணப்படும் நலமான உரையாடலுக்கு வாய்ப்பளிக்காத ஆதிக்க அதிகார நடைமுறைகள் கவனமாகத் தவிர்க்கப்படவேண்டும்.
செயல்படுத்தச்
சில
பரிந்துரைகள்
1. ஆயருக்கும்
துறவியருக்கும் இடையிலான உறவு பற்றிய ஆசிரிய ஏட்டைத் (Mutual relationship
1978) திருத்தி
எழுதுவதற்கான காலம் கனிந்துள்ளது. அத்தகைய திருத்தம் அதனுடன் தொடர்புடைய அனைவருடனும் கலந்தாய்வு செய்து, கூட்டொருங்கியக்க முறையில் செய்யப்பட வேண்டும்.
2. ஆயர்கள்
பேரவைகளுக்கும் துறவு அவைகள் மற்றும் திருத்தூது வாழ்வு கழகங்களின் பேரவைகளுக்கும் இடையே சந்திப்பையும் ஒத்துழைப்பையும் வளர்க்கும் வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
3. அருள்பணித்
தலைவர்களும் துறவு அவை மற்றும் திருத்தூதுக் கழகங்களின் பொறுப்பாளர்களும் பொதுவான மறைத்தூதுப் பணிக்கெனத் தங்கள் வளங்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் தங்களுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.