இன்றைய நவீன காலத்தில் முதியோரின் ஆயுள் காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால், இச் சமூகம் முதியோருக்குரிய இடத்தை வழங்க மறுப்பதுடன், அவர்களை ஒரு சுமையாகக் கருதுகின்றது. ஒரு சமூகம் தன் மூத்த குடிமக்களை எவ்வாறு நடத்துகின்றதோ அதை வைத்துதான் அந்தச் சமூகத்தின் தரத்தை நாம் கணிக்க முடியும். எளிதில் பாதிப்பு அடையக்கூடிய நிலையில் இருக்கும் முதியோர் குறிப்பாக, தனிமையில் மற்றும் நோயில் இருப்போர் நமது சிறப்புக் கவனத்திற்கும் அக்கறைக்கும் உரியவர்கள். இவர்கள் சுமையானவர்கள் அல்லர்; மாறாக, திருவிவிலியம் எடுத்துக்கூறுவது போன்று ஞானத்தின் சேமிப்புக்கிடங்குகள் (சீராக் 8:9). எனவேதான், நம் திருத்தந்தை பிரான்சிஸ் 2021-ஆம் ஆண்டு திரு அவையில் முதலாவது தாத்தா-பாட்டிகள் தினத்தை நிறுவினார்.
முதியோர்களைப்
பயனற்றவர்களாகக் கருதும் ‘தூக்கி எறியப்படும் கலாச்சாரத்திற்கு’ மாறாக, அவர்களின் பங்களிப்புகளை மதிப்பதன் மற்றும் வாழ்க்கையின்
அனைத்து நிலைகளையும் மதிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார். காணாமல் போன
மகன் பற்றிய உவமையைக் குறிப்பிட்ட திருத்தந்தை, வயது முதிர்ந்த தந்தை தனது இரு மகன்கள்
மீது கொண்டிருந்த அன்பு மற்றும் ஏற்றுக்கொள்ளலை விண்ணகத் தந்தையின் அன்போடு ஒப்பிட்டுப்
பேசினார்.
முதியோர்மீது
இரக்கம் மற்றும் கருணையை வலியுறுத்துவதற்காகத் திருத்தந்தை பிரான்சிஸ் அடிக்கடி முதியோர்
குறித்த நற்செய்திப் பகுதிகள் மற்றும் திருவிவிலிய வசனங்களை மேற்கோள் காட்டினார் (திபா
71:9; சீரா 14:2; சீரா 8:9; லூக் 1:42). கடவுளின் தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும்
பராமரிப்பில் முதியோர்களின் நம்பிக்கையை எடுத்துக்காட்ட திபா 71-ஐ மேற்கோள்காட்டினார்.
பெற்றோரை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, முதியோர்களை அவமதிப்பது
கடவுள் பார்வையில் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டார்.
முதியவர்களை
ஒரு சுமையாகப் பார்ப்பதையோ அல்லது அவர்களை நிராகரிப்பதையோ விட, அவர்களை மதிப்பது மற்றும்
பராமரிப்பது, அன்பு மற்றும் இரக்கம் காட்டுவது, அவர்களோடு நட்புறவு பாராட்டுவது, முதியவர்களுடன்
மீண்டும் இணைவது, அவர்களுக்குச் செவிசாய்ப்பது, அவர்களுக்கு மரியாதை காட்டுவது குறித்து
இளைஞர்களுக்குத் திருத்தந்தை பல அறிவுரைகளை வழங்கினார்.
தனிமையாகவோ
அல்லது தனிமைப்படுத்தப்பட்டோ இருக்கும் முதியவர்களுடன் இணைய இளைஞர்களை அவர் ஊக்குவித்தார்.
கருணை மற்றும் பாசத்தைக் காட்ட தொலைப்பேசி அழைப்புகள், வீடியோ அழைப்புகள் அல்லது நேரில்
சென்று சந்திக்குமாறு பரிந்துரைத்தார். இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையிலான
தொடர்புகள் சுயநலத்தையும் தோற்கடித்து, மிகவும் மனிதாபிமான மற்றும் சகோதரத்துவ உலகத்தை
உருவாக்க உதவும் என்று திருத்தந்தை நம்பினார்.
இளைஞர்கள்
முதியவர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் ஞானத்திலிருந்தும் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை
அவர் வலியுறுத்தினார். இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையே ஒரு புதிய கூட்டணிக்குத்
திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார். அங்கு அனுபவம் வாய்ந்த தனிநபர்களின் ‘சாறு’ இளைய தலைமுறையினரில் ‘நம்பிக்கையின் தளிர்களை’ வளர்க்க முடியும் எனக் குறிப்பிட்டார். முதுமையை நோயாகக்
கருதாமல், ஒரு பேறாகப் பார்க்கக் கூறினார்.
மூத்தவர்களுடன்
இணைந்து செயல்படுவதன் மூலம், இளைஞர்கள் மிகவும் சகோதரத்துவச் சமூகத்தை உருவாக்க உதவலாம்;
திரு அவையில் பாரம்பரியத்திற்கும் புதுமைக்கும் இடையிலான உரையாடலை எளிதாக்கலாம். எனவே,
இன்று முதியோரின் முக்கியத்துவத்தை உணர்வோம். முதியோர்களே சமூகத்தின் அடித்தளம்; அவர்களே
சமூகம் எனும் கட்டடத்தின் மூலைக்கற்கள். அவர்களை மாண்புடன் நடத்துவோம்; அவர்களுக்கு
உரிய மரியாதை செலுத்துவோம்; உள்ளன்புடன் அவர்களைப் பராமரிப்போம்.
1. பழைய ஏற்பாடு மற்றும் யூதப் பாரம்பரியம் பெண்களின் தார்மீக வலிமையை வலியுறுத்துகிறது. தாய்மை மற்றும் இஸ்ரயேலின் மீட்புக்காக எதிரிகளுடைய தாக்குதலிலிருந்து காப்பாற்ற வேண்டுவதன் மூலம் கடவுள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அவர்களின் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. பெண்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் நல்லொழுக்கத்திற்காக மதிக்கப்படுகிறார்கள். யூதித்தைப் போன்ற உருவங்கள் குறிப்பாக, சமூகத்தால் அவர்களின் வீரம், ஞானம் மற்றும் போற்றத்தக்கக் குணங்களுக்காகக் கொண்டாடப்படுகின்றன. இந்த நற்பண்புகளை நிலைநிறுத்தவும், தெய்வீக வழிகாட்டுதலில் நம்பிக்கை வைக்கவும் மற்றவர்களை ஊக்குவிக்கிறது.
இத்தகைய
சிறப்புமிக்க மாதிரிகளாகிய திருவிவிலியக் கதாநாயகிகளுக்கிடையே, எதிர்மறைச் சான்றாக நிற்கக்கூடிய சில பெண்களின் பதிவுகளும் இல்லாமலில்லை. எடுத்துக்காட்டாக, சிம்சோனின் இறைவாக்குரைக்கும் திறமையைச் சீரழித்த தெலீலா (நீத 16:4-21), சாலமோனின் முதிர்ந்த வயதில் அவருடைய இருதயத்தை ஆண்டவரிடமிருந்து திருப்பி மற்ற தெய்வங்களை வணங்கச் செய்த அந்த வெளிநாட்டுப் பெண் (1அர 11:1-8), இறைவனின் அனைத்து இறைவாக்கினர்களையும் கொன்றழித்த ஈசபேல் (1அர 18:13), ஆகாபிற்கு அவருடைய திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பதற்காக நாபோத்தைக் கொன்றவள் (1அர 21) மற்றும் யோபுவின் துன்ப காலத்தில் அவரை அவமதித்து, கடவுளைச் சபிக்கத் தூண்டிய அவருடைய மனைவி (யோபு 2:9).
இந்த
நிகழ்வுகளில், பெண்களின் நடத்தையானது ஏவாளுடைய செயல்களை நினைவுபடுத்தக்கூடியதாக இருக்கின்றது. இருப்பினும், திருவிவிலியத்தின் பொதுவான கண்ணோட்டமானது பெண்ணைக் கடவுளின் தோழியாகப் (ally of God) பார்க்கின்ற தொடக்க நற்செய்தியினால் (Proto-Gospel) தூண்டப்பட்டதாக
இருக்கின்றது.
பெண்ணானவள் ஆண்டவரின்
விலைமதிப்பற்ற
கொடையாவாள்!
2. உண்மையில்,
உண்மையான இறைவனிடமிருந்து சாலமோனைத் திருப்பினார்கள் என்று அந்நிய நாட்டுப் பெண்கள் குற்றம் சாட்டப்படுவார்களேயானால், அதற்கு மாறாக ரூத்து புத்தகமானது ஓர் அந்நிய நாட்டுப் பெண்ணை மிகச்சிறந்தவளாகவும் நமக்குக் காட்டுகின்றது.
மோவாபு நாட்டுப் பெண்ணான ரூத்தின் பக்தி, நேர்மை, தாழ்ச்சி மற்றும் தாராள குணத்தில் அவளின் உறவினர்களுக்கு மாதிரியாக இருந்தாள். மேலும், இஸ்ரயேலின் வாழ்வு மற்றும் நம்பிக்கையைப் பகிர்ந்து, தாவீதின் கொள்ளு பாட்டியாகவும், மெசியாவின் மூதாதையராகவும் திகழ்ந்தாள். நற்செய்தியாளராகிய மத்தேயு இயேசுவின் மூதாதையர் பட்டியலில் அவளுடைய பெயரையும் சேர்த்து, மனுக்குலம் அனைத்திற்கும் கடவுளின் இரக்கத்தைப் பரப்புகின்ற உலகளாவிய தன்மைக்கான அடையாளமாகவும் (A sign of universality) அவளை
ஆக்குகின்றார்.
முதல்
நற்செய்தியாளர், கடவுளுடைய நன்மைத்தனமானது பாவத்தைவிடச் சிறந்தது என்பதை அறிவிப்பதற்காக, இயேசுவின் மூதாதையர்களுக்குள் தாமார், இராகாபு மற்றும் உரியாவின் மனைவியான பத்சேபா என்ற மூன்று பாவிகளான ஆனால், சீர்கேடற்றப் பெண்களையும் மெசியாவின் மூதாதையர் பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கிறார். கடவுளின் அருள் வழியாக, கடவுள் திருமணச்
சட்டங்களுக்கு எதிரான அவர்களின் நிலைகளைப் பிற்காலத்தில் மெசியாவின் பிறப்பிற்கான தயாரிப்பில் கடவுளின் மீட்புத் திட்டத்திற்குப் பங்களிப்பவர்களாக ஆக்குகின்றார் (God, through His boundless grace, employs irregular marriages as
divine instruments to fulfil His sacred and eternal salvation plan for humanity).
ரூத்திடமிருந்து
வேறுபட்ட, தாழ்மையான அர்ப்பணிப்புக்கு மற்றோர் உதாரணம், இப்தாவின் மகள், அம்மோனியர்களுக்கு எதிரான தனது தந்தையின் வெற்றியைக் கொண்டாடுவதற்குத் தன் உயிரைத் தியாகம் செய்ய ஒப்புக்கொள்கிறாள் (நீத 11:34-40). அவளது சோகமான விதியைத் துக்கத்தில் அவள் எதிர்க்கவில்லை. ஆனால், அவளது மரணத்தை ஏற்றுக்கொள்கிறாள். அந்த நேரத்தில் இன்னும் பொதுவான பழமையான பழக்கவழக்கங்களில் வேரூன்றிய பெற்றோரின் தூண்டுதலான சபதத்தை நிறைவேற்றுகிறாள் (எரே 7:31; மீக் 6:6-8).
3. ஞான
இலக்கியமானது (Sapiential Literature) பெண்ணின்
குறைகளை அடிக்கடிக் குறிப்பிட்டாலும், அவளில் மறைந்திருக்கும் செல்வத்தையும் எடுத்தியம்புகின்றது. “நல்ல மனைவியை அடைகிறவன் நலமடைவான்; அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான்”
(நீமொ 18:22) என்று நீதிமொழிகள் புத்தகமானது பெண்மையைப் பற்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாராட்டுகளையும் வெளிப்படுத்தி, பெண்ணானவள் ஒரு விலைமதிக்க முடியாத ஆண்டவருடைய கொடை என்று கூறுகின்றது.
அதே
புத்தகத்தின் இறுதியில் உயர்வான பெண் பற்றியதொரு பிம்பமானது விவரிக்கப்பட்டுள்ளது. அடைய முடியாததொரு மாதிரியைக் குறித்துக்காட்டாத (far from representing an unattainable model), மிகவும் மதிக்கத்தக்கதொரு பெண்ணின் அனுபவத்திலிருந்து பிறந்த அவள் ஒரு நிலையான மாதிரியாக இருக்கின்றாள் என்று கூறுகின்றது: “திறமை வாய்ந்த, மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்” (நீமொ
31:10).
ஞான
இலக்கியமானது, தெய்வீக உடன்பாட்டிற்கான பெண்ணின் நம்பகத்தன்மையில் அவளுடைய திறமைகளின் உச்சநிலையைக் காண்கின்றது. உண்மையில், சில வேளைகளில் அவள் நம்மை ஏமாற்ற முடிந்தாலும், அவளின் உள்ளமானது கடவுளுக்கு விசுவாசமுள்ளதாக இருக்கின்றபொழுது எல்லாவித எதிர்பார்ப்புகளையும் கடந்துசெல்கின்றாள் என்று கூறுகின்றது: “எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்” (நீமொ
31:30). தாயானவள் மதிப்புமிக்கப் புகழ்ச்சிக்குத் தகுதியானவளே!
4. இந்தச்
சூழலில் 2மக்கபேயர் நூலானது, அந்தியோக்கிய எபிஃபானெஸ், இறைவார்த்தைக்காக உயிர்த்தியாகம் செய்த ஏழு சகோதரர்களின் தாயின் கதையில், சோதனையின்போதும் அவளிடமிருந்த வியக்கத்தக்க, மிக உன்னதமான மாண்பின் மாதிரியைத் தூக்கிப்பிடிக்கின்றது.
அந்த
ஏழு சகோதரர்களின் இறப்பை விவரித்த பிறகு அந்நூலின் ஆசிரியர், “எல்லாருக்கும் மேலாக அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர்; பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தன் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்டபோதிலும், ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக்கொண்டார்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார்; பெருந்தன்மை நிறைந்தவராய் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிச்சலையும் இணைத்து அவர்களிடம் பேசினாள்.” இவ்வாறு உயிர்த்தெழுதல் பற்றிய அவளுடைய எதிர்கால நம்பிக்கையை வெளிப்படுத்தி, “நீங்கள் என்
வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்;
உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்று சேர்த்ததும் நான் அல்ல; உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில், அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை” (2மக்
7:20-23) என்று விவரிக்கின்றார்.
இறைக்கட்டளைக்குக்
கீழ்ப்படிய மறுப்பதைவிட, இறப்பதற்குத் தன்னையே கையளிப்பது மேல் என்று அவளுடைய ஏழாவது மகனைத் தூண்டி, ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் படைத்த கடவுளின் செயலில் அவளுடைய நம்பிக்கையை அந்தத் தாயானவள் வெளிப்படுத்துகின்றாள்: “குழந்தாய், உன்னை நான் வேண்டுவது; விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்றுநோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்துகொள்வாய். இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால், நீ உன் சகோதரர்களுக்கு
ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு.
இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்” என்று
கூறி ஊக்கமூட்டினார் (2மக் 7:20-23).
ஏழுமுறை
இதயத்தில் சித்திரவதை அனுபவித்த
பிறகு அசைக்க முடியாத நம்பிக்கை, அளவிட முடியாத எதிர்நோக்கு மற்றும் வீரமுள்ள துணிவுக்குச் சான்றுபகர்ந்து, கொடூரமான சாவிற்குத் தன்னையே கையளிக்கின்றார்.
இறையருள்
வெளிப்படுகின்ற வியத்தகு செயல்கள் இத்தகைய பெண்களில் மிகவும் உன்னதமானவராக, ஆண்டவரின் தாய் மரியாவை நாம் காண்கின்றோம்.
மூலம்:
John Paul II, Ideal woman is a precious treasure, in
“L’Osservatore Romano”, Weekly Edition in English, 17 April 1996,
p.7.
மெஜோலின் சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. ‘யார் மெஜோலின்?’ என்று கேட்கிறீர்களா? ஐந்தாவது படிக்கும் என் பங்குச் சிறுமி; பீடப் பணியாளர். வயது 10. பங்கு நிர்வாகம் மற்றும் ஆன்மிகப் பணிகளில் என் முதன்மை ஆலோசகர்.
ஜூன்
15 அன்று ஞாயிறு திருப்பலி முடிந்து வீட்டிற்குச் சென்றபின், என்னைப் போனில் அழைத்து, “Happy Father’s Day” என்று கூறினாள். “அது இன்றைக்கா?” என்றேன். “ஆமாம். இதுகூட உங்களுக்குத் தெரியலியா? செமினேரியில் அப்படி என்னதான் கற்றுக்கொண்டீர்கள்?”
கூடுதல்
அவமானங்களைத் தவிர்க்க அவசரமாகப்
போனைத் துண்டித்துவிட்டு, கூகுளில் தேடினேன். அதுவும், ‘ஆம், இன்றைக்கு ஃபாதர்ஸ் டேதான்’ என்று ‘அப்பா சத்தியம்’
செய்தது.
Father’s
Day-க்கு ஐந்து நூற்றாண்டு கால வரலாறு உண்டு. 1500-களின் ஆரம்பங்களிலேயே ஐரோப்பாவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தொடக்கத்தில் இது ஒரு சமய வழிபாட்டு நிகழ்வாக இருந்துள்ளது. நாள் - மார்ச் 19, புனித யோசேப்பு விழா தினம். திருப்பலி வைத்து, யோசேப்பு போலவே எல்லா அப்பாக்களும் உத்தமர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டியிருக்கிறார்கள். விழா நாளடைவில் மற்ற கலாச்சாரங்களுக்குச் சென்றபோது, நோக்கத்திலும் வடிவத்திலும் மாற்றங்கள் வந்தன.
நவீனத்
தந்தையர் தினம் அமெரிக்காவில் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாகி, பின் உலகம் ழுழுவதும் பரவி பிரபலமடைந்த ஒரு கொண்டாட்டம். வியாபார நோக்கங்கள் மலிந்தது. ஒருசில நாடுகளில் வேறு நாள்களில் அனுசரிக்கப்பட்டாலும், ஜூன் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு என்பது ஓரளவு நிலைபெற்றுவிட்டது.
தந்தையரை
‘the unsung parent’ என்றுதான் கூறவேண்டும். அமெரிக்காவில் கூட கவனித்திருக்கிறேன். அன்னையர்
தினத்தின் மவுசு, தந்தையர் தினத்திற்கு இல்லை. உலகம் முழுவதும் அதுதான் நிலைமை. தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம்!
அப்பா
என்றாலே பல குழந்தைகளுக்கு அலர்ஜி!
பெரிதாகக் கொண்டாடப்படவில்லையென்றாலும்,
ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில், நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தந்தை மிகப்பெரும் தாக்கம் செலுத்துகிறார். இது யாரும் மறுக்க முடியாத உண்மை. அப்பாவின் முன்மாதிரியால் சிறப்பாக உருவான குழந்தைகளும் உள்ளனர். அப்பாவைப் பின்பற்றிக் கெட்டுப் போனவர்களும் உள்ளனர்.
அண்மையில்,
‘National Catholic Register’ எனும் இணையப் பத்திரிகையில், ‘திருத்தந்தையர்களும் அவர்களின் தந்தையர்களும்’ என்ற
தலைப்பில் நான்கு திருத்தந்தையர்களின் அப்பாக்கள் குறித்து வெளியான சிறு குறிப்புகளை இரசித்து வாசித்தேன்.
லூயிஸ் ப்ரெவோஸ்ட்
திருத்தந்தை
பதினான்காம் லியோ அவர்களின் தந்தை. முன்னாள் அமெரிக்கக் கடற்படை வீரர். 23 வயதில் கல்லூரி முடித்தவுடன் 1943-ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்காற்றினார். ‘D-Day Operation’ என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் மிக முக்கிய இராணுவ நடவடிக்கையில் ஏறக்குறைய 1,56,000 நேசப் படை வீரர்களைப் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி கடற்கரையில் கொண்டு வந்து இறக்கிய கப்பல்கள் ஒன்றின் அதிகாரியாக லூயிஸ் இருந்தார்.
போர்
முடிந்தபின்பு சிகாகோ நகரில் மவுண்ட் கார்மெல் துவக்கப்பள்ளியின் முதல்வராகப் பணியாற்றினார். குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்பித்தார். 1949-ஆம் ஆண்டு நூலகராகப் பணிபுரிந்த மில்ட்ரெட் மார்டினெஸ் என்ற பெண்ணை மணந்தார். மூன்று ஆண் குழந்தைகள். கடையவர்தான் இன்றைய திருத்தந்தை லியோ.
2024-ஆம் ஆண்டு
அப்போதைய கர்தினால் இராபர்ட் ப்ரெவோஸ்ட் ஓர் இத்தாலிய டி.வி. சேனலுக்குக்
கொடுத்த நேர்காணலில் பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிட்டார்:
இளம்
அருள்பணியாளராக இருந்தபோது இராபர்ட் அழைத்தல் வாழ்க்கையில் ஒரு நெருக்கடியைச் சந்தித்தார். ஏதோ ஒன்றை இழந்துவிட்டது போல உணர்ந்தார். தான் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறோமோ என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது.
ஒருநாள்
தன் தந்தையை அழைத்து, “நான் துறவற வாழ்வைக் கைவிட்டு, திருமணம் செய்துகொள்வது நல்லது என நினைக்கிறேன்.
எனக்குக் குழந்தைகள் வேண்டும். நான் ஓர் இயல்பான வாழ்க்கை வாழ விரும்புகிறேன்” என்று
இராபர்ட் கூறினார்.
தந்தை
லூயிஸ், “நீ எதையும் இழந்துவிடவில்லை.
எனக்கும் உன் அம்மாவிற்கும் இடையே உள்ள அன்பு மிக முக்கியமானது. ஆனால், அதற்கு எந்த அளவிலும் குறைவில்லாதது, ஓர் அருள்பணியாளருக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிற அன்பு. யோசித்து முடிவெடு”
என்று கூறினாராம். அதை நினைவுகூர்ந்து, ‘There is something to listen to here’ என்று அந்த நேர்காணலில் குறிப்பிடும் இராபர்ட், அதன்பின் எந்தவித மாற்றுச் சிந்தனைக்கும் தன் மனத்தில் இடம்கொடுக்காத காரணத்தால்தான் இன்று
அவர் திருத்தந்தை!
கரோல் வொய்த்திவா
சீனியர்
திருத்தந்தை
புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் தந்தை. இருவரின் இயற்பெயர்களும் ஒன்றே. கரோல்,
போலந்து நாட்டு இராணுவத்தில் லெஃப்டினன்ட் பதவி வகித்தவர். தன்
இறையழைத்தல் ஊக்குநர் என்று ஜான்பால், தந்தை கரோலையே குறிப்பிடுகிறார்.
“எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது, என் அம்மா இறந்துபோனார். நான் புதுநன்மை கூட பெற்றிருக்கவில்லை. என் மூத்த சகோதரனும் சீக்கிரமே இறந்துவிட, நான் என் தந்தையுடன் தனித்து விடப்பட்டேன். அவர் ஒரு போர்வீரர். ஆழமான நம்பிக்கையாளர். அம்மாவின் இறப்புக்குப் பின், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். பெரும்
பொழுதை இறைவேண்டலிலேயே செலவழித்தார். இரவில் சில நேரங்களில் நான் கண்விழித்துப் பார்க்கும்போது, என் தந்தை முழந்தாளிட்டு வேண்டிக் கொண்டிருப்பார்.
நான்
அருள்பணியாளராக வேண்டும் என்று ஒரு நாளும் அவர் என்னிடம் கூறியதில்லை. இறையழைத்தல் குறித்து நாங்கள் இருவரும் வீட்டில் ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை. ஆனால், என் தந்தையின் வாழ்க்கைதான் அருள்பணியாளராக என்னைத் தூண்டியது. அவருடைய முன்னுதாரணம்தான் என் முதல் குருமடம்”
என்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் குறிப்பிடுகிறார்.
ஜோசப் இராட்சிங்கர்
திருத்தந்தை
16-ஆம் பெனடிக்ட் அவர்களின் தந்தை. அவர் பெயரும் ஜோசப் இராட்சிங்கர்தான். ஒரு போலிஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர். 43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. ‘Liebfrauenbote’ என்ற பத்திரிகையில் ‘மணமகள் தேவை’ என்று விளம்பரம் கொடுத்துள்ளார். ‘மாநில
அரசு ஊழியர். கத்தோலிக்கர். வயது 43. ஒரு திறமையான கத்தோலிக்கப் பெண் தேவை.’ இராட்சிங்கர் குடும்பம் கத்தோலிக்க நம்பிக்கை, வழிபாடு, இறைவேண்டல் ஆகிய மூன்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது.
பெனடிக்ட்
1927-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் நாள் பிறந்தார். அது ஒரு புனித சனிக்கிழமை. அந்த நாளில் திருமுழுக்குத் தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை அகற்றி, புதுத் தண்ணீரை நிரப்புவது வழக்கம். இராட்சிங்கருக்குத் தன் மகன் பாஸ்கா புது தண்ணீரில் திருமுழுக்குப் பெறவேண்டும் என்று ஆசை. குழந்தை பிறந்து சில மணி நேரங்கள்தான் ஆகியிருந்தது. அம்மா இன்னும் படுக்கையிலிருந்து எழவில்லை. இராட்சிங்கர் தன் மகனை ஒரு துணியில் சுருட்டி எடுத்துக்கொண்டு, வேகமாகக் கோவிலுக்கு ஓடிப்போய், அவன் பிறந்த நாளிலேயே திருமுழுக்குப் பெறச்செய்தார். இது குறித்துப் பின்னாளில், “பாஸ்கா மறைபொருளில் மூழ்கி எழும் அனுபவத்தை என் வாழ்வின் முதல் நாளிலேயே எனக்குப் பெற்றுத் தந்த என் தந்தைக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று
பெனடிக்ட் குறிப்பிடுகிறார்.
மரியோ பெர்கோக்லியோ
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் தந்தை. இரயில்வே துறையில் கணக்கராகப் பணிபுரிந்தார். இளம்வயதிலேயே ஒரு பெரும் கப்பல் விபத்தில் இறக்க வேண்டியவர். அவர் உயிர் தப்பிய நிகழ்வு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘Hope’ தன் வரலாற்று
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டிலிருந்து அர்ஜென்டினாவுக்குப் புறப்பட்ட ‘SS Principessa Mafalda’ என்ற பயணிகள் கப்பல், 1927-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் நடுக்கடலில் மூழ்கியது. மொத்தம் 314 பேர் இறந்தனர்.
“இந்தக் கதை எங்கள் குடும்பத்தில், எங்கள் ஊரில், குடியிருப்பில் திரும்பத்
திரும்பக் கூறப்பட்டது. என்னுடைய தாத்தாவும், பாட்டியும், பிற்காலத்தில் என் தந்தையான இளம் மரியோவும், அந்தக் கப்பலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கித் தயாராக இருந்தார்கள்.
கடைசி நேரத்தில் அவர்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லை. எனவே
உயிர் பிழைத்தார்கள்.\"
ஒரு
தந்தை காப்பாற்றப்பட்டு, ஒரு திருத்தந்தை நமக்குக் கிடைத்தார்.
ஒவ்வொரு
மனிதத் தந்தையும், தந்தை கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்ய அழைக்கப்படுகிறார்.
‘தந்தைமை’யைக்
கொண்டாடுவோம்!
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
“கடவுளின் இதயத்தில் ஏழைகளுக்கும் ஓரங்கட்டப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டோருக்கும் தனியோர் இடம் உண்டு. இதனால் அவர்கள் திரு அவையின் இதயத்திலும் இருக்கின்றனர். ஏழைகளாக்கப்பட்டோரிடம் இயேசுவின் முகத்தையும் ஊனுடலையும் இனம் கண்டுகொள்ள கிறித்தவக் குழுமம் முழுவதும் அழைக்கப்படுகிறது”(இஅ 19). மேலும், அவர் ஏழையாகவும் தாழ்ச்சி உடையவராகவும் இருந்தவர்; ஏழைகளிடம் நட்புறவு கொண்டிருந்தவர்; அவர்களுடன் சமபந்தி அமர்ந்தவர்; ஏழ்மைக்கான காரணிகளைக் கண்டித்தவர். அவருடைய மனநிலையைக் கொண்டிருக்க வேண்டிய திரு அவையும், ஏழைகளுக்கும் விளிம்புநிலையினருக்கும் முதன்மை தருவது அவசியம். இது கிறித்தவ நம்பிக்கையின் இன்றியமையாத ஒரு கூறும், இறையியல் அடிப்படையிலான கடமையும் ஆகும்.
“பல வேளைகளில் ஏழைகளே
திரு அவையில் பெரும்பான்மையினராக உள்ளனர். அந்த ஏழைகளோடு ஏழையாக இருக்கவும், அவர்களது குரலைக் கேட்கவும், அவர்களுக்கு ஆவியார் தரும் அருங்கொடைகளை எவ்வாறு கண்டறிவது என அவர்களோடு இணைந்து
கற்றுக்கொள்ளவும் அது அழைக்கப்படுகிறது” (இஅ
19).
ஏழைகள்
திரு அவையிடம் கேட்பது அன்பையே. அன்பு செய்தல் என்பது அவர்களுக்கு நமது ஏற்பையும் மதிப்பையும் புரிதலையும் தருவது. அவை இன்றி உணவு, பண உதவிகள் என்பனவற்றை
எவ்வளவுதான் தந்தாலும், அது அவர்களது மனித மாண்பை முழுமையாக மதிக்கத் தவறுவது ஆகும். அத்தகைய புரிதலும் மதிப்பும் தருவதுதான் பிறருடைய உதவிகளின் பயனாளர்களாகிய அவர்களைத் தங்களது வளர்ச்சியைத் தாங்களே முடிவு செய்ய ஆற்றல் படைத்தவர்கள் ஆக்குகிறது.
ஏழைகள் பல
வகையினர்!
மாண்புடன்
வாழ்வதற்கான பொருள் வளம் அற்றவர்கள், புலம்பெயர்ந்தோர், அகதிகள், பழங்குடியினர், வன்முறைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டோர் சிறப்பாகப் பெண்கள், தீய பழக்கங்களுக்கு அடிமையாகி அவற்றிலிருந்து மீண்டுவரப் போராடுவோர், அமைப்பு முறையாலேயே குரலற்றோர் ஆக்கப்பட்ட சிறுபான்மையினர், கைவிடப்பட்ட முதியோர், இனவெறி, சுரண்டல், ஆள்கடத்தல் என்பனவற்றிற்கு ஆளாக்கப்பட்டோர், அதிலும் குறிப்பாக இளையோர், சுரண்டப்படும் தொழிலாளர்கள், பொருளாதாரத்தின் பயன்களிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலையினர் ஆகிய அனைவரும் ஏழைகளே. மிக அதிகமாகப் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்கள் கருவிலிருக்கும் குழந்தைகளும், அவர்களின் அன்னையருமே. அவர்களுக்கான ஆதரவுக் குரலும் செயல்பாடுகளும் மிகவும் அவசியம். மேலும், பல நாடுகளில் நிகழும்
போர்களும் பயங்கரவாதமும் புதுவகை ஏழைகளை உருவாக்கியுள்ளன. அவர்களின் குரல் தங்களுக்குக் கேட்கிறது என அறிவிப்பதுடன், அவற்றிற்குக்
காரணிகளான ஊழல் அரசியல் மற்றும் சுரண்டல் பொருளாதார அமைப்புகளையும் மாமன்றம் கண்டிக்கிறது.
ஏழ்மையின்
மற்றொரு வகை அருள்வாழ்வைச் சார்ந்தது. வாழ்வில் அர்த்தம் இல்லாத நிலை, பிறரைத் தனக்குப் போட்டியாகவோ பகையாகவோ கருதும் மிகையான தன்னல நோக்கு என்பன அதன் சில வடிவங்கள். “இத்தகைய அருள்வாழ்வுசார் ஏழையரும் பொருளாதார ஏழையரும் சந்திக்கும்போது, இருவரும் ஒருவர் மற்றவரது தேவையை நிறைவு செய்யும் இணைந்த பயணத்தைத் தொடங்குகின்றனர்” (முஅ
5d). இவ்வாறுதான்
“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்” (மத்
5:3) எனும் நற்செய்திப் பேற்றினை நிறைவாக அனுபவமாக்கும் வகையிலான இணைந்து பயணிக்கும் திரு அவை செயலாக்கம் பெறும்.
மேலும்,
ஏழைகள் சார்பாக நிலைப்பாடு எடுப்பது என்பது நமது பொதுவீட்டின் நலம் காக்க அவர்களுடன் இணைந்து செயல்படுவதும் ஆகும். ஏனெனில், “நிலவுலகின் அழுகுரலும் ஏழ்மையில் வாடுவோரின் அழுகுரலும் ஒரே அழுகுரலே”
(முஅ 5e).
ஏழைகளுக்காகச்
செயல்படுவது
ஏழைகளின்
நலனுக்காகச் செயல்படுவது என்பது ஏழ்மை மற்றும் ஒதுக்கப்படுதல் என்பனவற்றிற்கான காரணிகளை அகற்றுவதும் ஆகும். அவர்களுடைய உரிமைகளுக்காகக் குரல் எழுப்புதல், அவர்களுக்கு எதிரான அநீதிகளைப் பொதுவெளியில் வெளிப்படையாகக் கண்டித்தல் என்பனவையும் அதில் உள்ளடங்கும். அவை தனியார் மற்றும் தொழில்நிறுவனங்கள், அரசுகள் என்பன இழைக்கும் அநீதச் செயல்களாகவோ, அநீதச் சமூக அமைப்புகளாகவோ இருக்கலாம். அவற்றை இனங் கண்டு எதிர்ப்பதற்குத் திரு அவையின் சமூகப் படிப்பினை உதவ முடியும். அதனால் தூண்டுதல் பெற்று, பொதுநலம் பேணுவதிலும், மனித மாண்பைக் காப்பதிலும் ஈடுபடுவது கிறித்தவர்களது கடமை. இப்பணியில் அவர்கள் குடிமைச் சமூக அமைப்புகளுடனும் தொழில் சங்கங்களுடனும் மக்கள் இயக்கங்களுடனும் அடித்தட்டுக் குழுக்களுடனும் பல்வேறு வகைகளில் இணைந்து செயல்படுவது அவசியம். அரசியலிலும் இத்தகைய ஈடுபாடு அவசியம் ஆகலாம். இவ்வாறு ஈடுபடுவோருக்குக் கிறித்தவக் குழுமங்கள் தங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருவது அவசியம். ஏனெனில், “அவர்களது செயல்பாடும் நற்செய்தி அறிவித்து இறையாட்சியைக் கொணரும் திரு அவையின் பணியைச் சார்ந்ததே”
(முஅ 4 g).
ஏழைகள்
மற்றும் துன்புறுவோரிடம் கிறித்தவச் சமூகம் “தாம் செல்வராக இருந்தும் தமது ஏழ்மையின் வழியாக நாம் செல்வராகும் பொருட்டு நமக்காக ஏழையான...” (2கொரி 8:9) கிறிஸ்துவைக் காண்கிறது. அவர்களிடம் நெருங்கி வரவும், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அது அழைக்கப்படுகிறது. “இணைந்து பயணிப்பது என்பது ஒன்றிணைந்து நடப்பது. அதனால் ஏழ்மையை அனுபவிப்போரைக் கூட்டியக்கத் திரு அவை தனது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மையப்படுத்த வேண்டும். ஏனெனில், தங்கள் துன்பங்கள் வழியாக அவர்கள் துன்புறும் இயேசுவை நேரடியாக அறிந்தவர்கள். அவர்களது வாழ்வு இயேசுவின் வாழ்வோடு ஒத்திருப்பதால் ஏழைகள் கொடையாகப் பெற்றுக்கொள்ளப்படும் மீட்பின் அறிவிப்பாளர்களாகவும் நற்செய்தியின் மகிழ்ச்சிக்குச் சாட்சிகளாகவும் அவர்களை அது ஆக்குகின்றது” (முஅ
4h).
செயல்படுத்த சில
பரிந்துரைகள்
1. ஏழைகள்
வேறு, நாம் வேறு எனத் திரு அவையினர் எவரும் ஏழைகளை நம்மிடமிருந்து அந்நியப்படுத்தியும், அவர்களை நம்மிடம் கையேந்தி நிற்பவர்களாகவும் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும் (முஅ 4i).
2. திரு
அவைகளின் நிதி நிர்வாகம் நற்செய்தியின் கோரிக்கைகளைத் துணிந்து எடுத்துரைக்கத் தடையாகிவிடக்கூடாது. இறைவாக்குத்தன்மையுடன் அநீதச் சூழமைவுகளைக் கண்டிப்பதும், சட்டங்கள் இயற்றுவோரைப் பொதுநலனுக்காகச் செயல்படத் தூண்டுவதும் ஒன்றுக்கு ஒன்று தடையாகிவிடாதவாறு இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் (முஅ 4j).
3. தான்
நடத்தும் நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் நீதி நெறிமுறைக்கு ஏற்ப நடத்தப்படுகிறார்களா? என்பதைப் பற்றிய நேர்மையான சுய ஆய்வைத் திரு அவை மேற்கொள்ள வேண்டும் (முஅ 4l).
4. பல்வேறு
நிலப்பகுதிகளில் உள்ள தலத் திரு அவைகளிடையே தாங்கள் பெற்றுள்ள வளங்களையும் கொடைகளையும் பகிர்ந்துகொள்வது அவர்களுக்கு இடையே நிலவும் கூட்டுத்தோழமையின் அடையாளம் ஆகும். இது அத்திரு அவைகளுக்கு இடையே ஒன்றிப்பை வளர்க்கும் (முஅ 4m).
5. திரு
அவையின் சமூகப் படிப்பினை எனும் வளம் அதிகம் அறியவும் பயன்படுத்தவும் அதனை அதிகமாகப் பரவலாக்கம் செய்வதுடன் பிறரும் ஏற்றுச் செயல்படுத்தத் தூண்டுதல் தரும் வகையில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும் (முஅ 4n).
6. கிறித்தவக்
குழுமங்களில் தரப்படும் அனைத்து உருவாக்கப் பயிற்சிகளிலும் சிறப்பாக, அருள்பணியாளர் மற்றும் துறவியருக்குத் தரப்படுவனவற்றிலும் ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் வாழ்வோரைச் சந்தித்தல், அவர்களது வாழ்வைப் பகிர்ந்து அவர்களுக்குப் பணிசெய்தல் என்பன இன்றியமையாது இடம்பெறவேண்டும் (முஅ 4h).
7. திருத்தொண்டர்
பணி மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். அதில் ஏழைகளுக்குப் பணி செய்யும் பரிமாணம் அதிக அழுத்தம் பெறவேண்டும் (முஅ 4p).
8.“திரு
அவையின் படிப்பினை, திருவழிபாடு, செயல்பாடுகள் என்பவற்றில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல் சார்ந்த விவிலிய, இறையியல் அடித்தளங்கள் வெளிப்படையாகவும் கவனமாகவும் இணைக்கப்பட வேண்டும்”
(முஅ 4q).
திரு அவையின் அனைத்து ஆவணங்களும் திருமடல்களும் மரியன்னையின் உதவியை நாடி நிறைவடைவதை ஒரு மரபாகவே கொண்டுள்ளன. எனவே, இறைவேண்டல் பற்றிய நமது பார்வையும் பகிர்வும் அன்னை மரியாவோடு நிறைவடைவது பொருத்தமானதே.
அன்னை
மரியாவுக்கு எத்தனையோ சிறப்புப் பெயர்களைச் சூட்டி நாம் மகிழ்கிறோம். அவர் இறைவேண்டலின் தாய் என்பது அவற்றுள் ஒன்று. நாம் இறைவேண்டல் செய்வதற்கும், நமது எல்லாப் பணிகளையும் நிறைவாக ஆற்றுவதற்கும் நம் தாய் நமக்குத் துணை நிற்கிறார். திருவிவிலியம் காட்டும் உண்மை இதுவே. திரு அவையின் மரபும் இதுவே. நமது சொந்த அனுபவமும் இதுவே.
தொடக்கத்
திரு அவையினர் இறைவேண்டலில் ஈடுபட்டபோது, அன்னை மரியாவின் துணை அவர்களுக்கு இருந்தது என்பதைத் திருத்தூதர் பணிகள் நூல் பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளது. “இயேசுவின் சீடர்கள் அனைவரும் சில பெண்களோடும் இயேசுவின் சகோதரர்களோடும் அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்” (திப
1:14). அந்த இறைவேண்டலின் விளைவாகத்தான் தூய ஆவியார் பெருவிழாவின்போது அனைவரும் தூய ஆவியாரைக் கொடையாகப் பெற்றுக்கொண்டார்கள்.
தனது
‘இறைவேண்டல்’ என்னும்
மறைக்கல்வித் தொடரில் அன்னை மரியா பற்றி உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், குழந்தைப் பருவத்திலிருந்தே மரியா இறைவேண்டலில் ஆர்வம் உடையவராக இருந்தார் என்றும், இளமைப் பருவத்தில் அமைதியிலும், இறைவனோடு உரையாடுவதிலும் அவர் நேரம் செலவழித்திருப்பார் என்றும் கூறுகிறார். வழக்கமான யூத மரபிலான மன்றாட்டுகளோடு, தன் வாழ்வில் இறைவன் செய்த அருஞ்செயல்களைப் போற்றிப் புகழும் இறைப்புகழ்ச்சியாளராகவும் (லூக் 1:47-55) அன்னை மரியா இருந்தார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.
இதைவிட
மேலாக, “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்” (லூக்
2:19) என்னும் பதிவின் வழியாக, மரியா ஓர் ஆழ்நிலைத் தியானி (Contemplative) என்பதையும்
நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார் நம் திருத்தந்தை.
மேலும்,
மரியா மரபார்ந்த இறைவேண்டலில் மட்டும் ஈடுபடவில்லை; அவரது வாழ்வே ஓர் இறைவேண்டலாக
இருந்தது என்கிறார். மரியாவின் தாழ்ச்சியும், இறைத்திருவுளத்துக்குப் பணிதலும் இறைவேண்டலின் வடிவங்கள் என்பது திருத்தந்தையின் கருத்து.
“நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்
1:38) என்பதே மரியாவின் மிகச்சிறந்த இறைவேண்டல் என்று கூறி நம்மை நெகிழ வைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் இறைப்பற்றை இழக்காமலிருப்பதும், இறைநம்பிக்கையில் நிலைத்திருப்பதும் எத்துணை பெரிய பேறு! “மரியா சிலுவையடியில் நின்றபோது இறைநம்பிக்கையில் உயர்ந்து நின்றார். அது மிகச்சிறந்த இறைவேண்டல் அல்லவா!” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை
16-ஆம் பெனடிக்ட் அவர்களும் 2011-12-ஆம் ஆண்டுகளில்
‘இறைவேண்டல்’ பற்றிய
தொடர் உரைகளைத் தனது புதன்கிழமை மறைக்கல்வி நேரங்களில் வழங்கியுள்ளார். நாற்பத்தைந்து வாரங்கள் தொடர்ந்து வழங்கிய இந்தத் தொடரில், ‘மரியாவின் இறைவேண்டல் உடனிருப்பு’ என்னும்
தலைப்பில் மரியன்னையின் இறைவேண்டலைப்பற்றிக் கற்பித்துள்ளார்.
மரியா
இறைவனின் தாய் மட்டுமல்ல; திரு அவையின் தாயும்கூட அல்லவா! எனவே, மன்றாடும் திரு அவைக்கு மாதிரியாகவும் உடன் வேண்டுபவராகவும் திகழ்கிறார். நற்செய்தியாளர் லூக்காவின் பார்வையில் மீட்பின் வரலாறு மரியாவுடன் தொடங்கி, திருத்தூதர் பணிகள் நூலில் திரு அவையின் பிறப்பின்போது இறைவேண்டல் செய்த மரியாவுடன் நிறைவடைகிறது. வழிநெடுக மரியா இறைத்திருவுளத்திற்குப் பணிபவராகவும், அதனைப் பற்றிச் சிந்திப்பவராகவுமே காட்சி தருகிறார். எனவே, அந்தத் தாயை நாமும் பின்பற்ற வேண்டும் என்கிறார் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்.
திருத்தந்தையர்களைப்
போலவே, திரு அவைப் புனிதர்களும் மரியாவைத் தங்களின் இறைவேண்டல் மாதிரியாகக் கொண்டனர். தங்கள் பணிகளையும் இறைவேண்டலையும் மரியன்னையின் பாதுகாவலில் ஒப்படைத்தனர்.
அன்னை
மரியாவிடமிருந்து இறைவேண்டல் செய்ய கற்றுக்கொண்டவர்கள் என்று சில புனிதர்களைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, புனித தோமினிக் மரியன்னையைக் காட்சியில் கண்டு, ‘வானதூதரின் வாழ்த்து’
என்னும் செபமாலையைத் தோற்றுவித்தார்.
லூர்து
நகரில் காட்சி தந்த மரியன்னையோடு இணைந்து செபமாலையை வேண்டும் வியப்பான பேற்றைப் பெற்றவர் புனித பெர்னதெத். அன்னை காட்சி தந்த 18 முறையும் செபமாலை அவரின் கைகளில் இருந்தது. பெர்னதெத் செபமாலையை மன்றாடியபோது, மரியன்னை அமைதியில் அவரோடு இணைந்தார். திருத்துவப் புகழ் கூறப்பட்டபோது மரியன்னையும் இணைந்துகொண்டார் என்னும் வியப்பான செய்தி பெர்னதெத்தின் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்,
மரியன்னையின்மீது கொண்ட பக்தியினால் அனைத்துப் புனிதர்களுமே தங்கள் இறைவேண்டல் வாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டனர். இன்றளவும் பல கத்தோலிக்கர்களின் இறைவேண்டலில் செபமாலைக்கும்
மரியன்னை மன்றாட்டுகளுக்கும் சிறப்பிடம் இருக்கிறது. இவர்கள் அனைவருக்குமே மரியா இறைவேண்டலின் தாயாக விளங்குகிறார்.
நமது
இறைவேண்டல் வாழ்வுக்கும் நம் தாய் மரியா துணை நிற்பாராக! அவரது துணையும் பரிந்துரையும் நம் அருள் வாழ்வை, இறைவேண்டலை ஊக்கப்படுத்தட்டும்.
மரியன்னையைப்
போலவே நாமும் தனி வேண்டலில் இறைப்புகழ்ச்சியும், பிறரோடு இணைந்து மன்றாடுவதில் பரிந்துரையும், நம் வாழ்வின் நிகழ்வுகளை ஆய்வு செய்து, சிந்திப்பதில் தியானியாகவும் வளர்வோமாக! இறைத்திருவுளத்திற்குப் பணிதலும் எளிமையும் தாழ்ச்சியும் பிறரன்பும் நம்மில் செழிக்கட்டும்.
கடந்த
50 வாரங்களாக இந்தத் தொடரை எழுத அருள்கூர்ந்த இறைவனைப் போற்றி மகிழ்கிறேன். யூபிலி 2025-க்கு ஆயத்தமாக இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு இறைவேண்டலின் பரிமாணங்களை விரிவாக எழுத என்னை ஊக்குவித்து, பெருமைப்படுத்திய நம் வாழ்வின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்களுக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன். இறைவனுக்குத் திருவுளமானால், மற்றொரு தொடரில் மீண்டும் சந்திப்போம்.
“ஒத்துழைப்பான மற்றும் அமைதியான சிவில் சமூகங்களை உருவாக்குவது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாகும். இதை முதலில் குடும்பத்தில் முதலீடு செய்வதன் மூலம் செய்யலாம். ஆணும்-பெண்ணும் இணைந்து உருவாக்கும் நிலையான ஒன்றிப்பே (stable union between a man and a woman) குடும்பம். சிறியதாயினும், இது உண்மையான சமூகம். எந்தச் சிவில் சமூகத்திற்கும் முந்தையது.”
இவ்வார்த்தைகளைக்
கடந்த மே 16 வெள்ளியன்று திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்தபோது திருத்தந்தை 14-ஆம் லியோ பகிர்ந்துகொண்டார். திருத்தந்தையின் சர்ச்சைக்குரிய வார்த்தையாக ‘ஆணும்-பெண்ணும் இணைந்த நிலையான ஒன்றியம்’
என்ற சொற்றொடரில் கவனம் செலுத்தி டிரென்டிங் செய்தன உலக ஊடகங்கள். தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கை-நம்பிகள் போன்றவர்களைக் காயப்படுத்திவிட்டார் என்றெல்லாம் பேசின. ஆனால் உண்மையென்ன?
மறைந்த
திருத்தந்தையர்களான 13-ஆம் லியோ (ரேரும் நோவாரும்), புனித இரண்டாம் யோவான் பவுல் (ஃபாமிலியாரிஸ் கான்சோர்டியோ) மற்றும் பிரான்சிஸ் (அமோரிஸ் லெட்டீஷியா) இவர்களைத் தொடர்ந்து திருத்தந்தை 14-ஆம் லியோ
அவர்களும் திரு அவையின் சமூகக் கோட்பாட்டில் குடும்பத்தை முக்கியமாகக் கருதுகிறார். “மனிதர் - ஆணும் பெண்ணும் - என்பதன் உண்மை ஒரு கலாச்சாரக் கட்டுமானம் அல்ல; மாறாக, இறைவனின் கொடையாகும். நம் குழந்தைகளைக் குழப்பும், இறைவனின் திட்டத்தைத் திரித்துவிடும் சித்தாந்தங்களை நாம் எதிர்க்கவேண்டும். குடும்பம் என்பது இறைவனால் வடிவமைக்கப்பட்ட வாழ்வு மற்றும் அன்பின் புனிதத் தலமாகும். இந்த அடித்தளத்தை மறுவரையறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என்கிறார். இந்நிலைப்பாட்டினை
உறுதிப்படுத்த முன்னோடி திருத்தந்தையர்கள் மூவரின் சிந்தனைகளையும் அடிக்கடி பயன்படுத்துகிறார்.
தனது
‘ரேரும் நோவாரும்’
பகுதிகள்
9-11-இல், திருத்தந்தை 14-ஆம் லியோ, ‘குடும்பம்’
என்பதன் கத்தோலிக்கப் பார்வை சோசலிசப் பார்வையிலிருந்து வேறுபட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். குடும்பம் ஒரு ‘புரோலெட்டேரியா நிறுவனம்’
மட்டுமே. இது முதலாளித்துவ அமைப்பின் கீழ் அடக்கப்படுகிறது. மதம் மற்றும் பாரம்பரிய மதிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள இவ்வமைப்பை அழித்து, அதற்குப் பதிலாகச் சமூகக் கட்டமைப்பான அரசுகள் குழந்தை வளர்ப்பு, கல்வி போன்றவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சோசலிசம் வாதிட்டது. இதற்கு மாற்றாய், குடும்பம் என்பது இயற்கையான, மனித இயல்புக்கு அடிப்படையான அமைப்பு. இது ‘இல்லத் திரு அவைச் சமூகம்.’ எந்தச் சிவில் சமூகத்திற்கும் முந்தையது. எனவே, இதற்குச் சொந்த உரிமைகள் உண்டு. அரசுகள், மாநிலங்கள் இந்த உரிமைகளை அளிப்பதில்லை. அங்கீகரிக்க மட்டுமே செய்கின்றன. குடும்பத்தை அரசு கட்டுப்பாட்டில் வைத்து ‘ரொட்டித் தொழிற்சாலையாக’ சோசலிசம்
மாற்றப் போராடிய தருணத்தில் திரு அவை குடும்பத்தைச் சுதந்திரமான ஆனால், சமூகத்துடன் இணைந்து ‘உணவு தயாரிக்கும் வீடாக’ மாற்றப் போராடியது. ஆனால், 1968-க்குப் பிறகு, குடும்பத்தின் அர்த்தமே கேள்விக்குள்ளாகியது. உலகமயமாக்கலின் தாக்கம் குடும்பக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தத் தொடங்கியது. அதன் நீட்சியாக இன்று ‘எப்படியும் வாழலாம், யாரோடும் வாழலாம்’ என்கிற அணுகுமுறைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இம்மாபெரும்
சவால்களை உற்றுநோக்குகையில், நவீனகாலச் சவால்களின் இதயம் குடும்பம் எனலாம். இங்குதான் மிக முக்கியமான போர் நடக்கிறது என்பதைத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் ஆழமாகப் புரிந்துகொண்டார். எனவே, குடும்பங்களுக்காக அதிகம் உழைத்தார்.
தனது
‘பாமிலியாரிஸ் கான்சோர்டியோ’வில்
குடும்பத்தை ‘சமூகத்தின் அடிப்படைச் செல்’ என்று ஒரு தீர்க்கதரிசன பார்வையை மொழிந்தார். இப்போதனையைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிசும் தனது திருத்தூதுப் பணியில் குடும்பத்தை மையமாக வைத்தார். இரண்டு ஆயர் மாமன்றங்களைக் கூட்டினார். ‘அன்பின் மகிழ்ச்சி’
(Amoris Laetitia) என்ற
திருத்தூது ஊக்கவுரை வழியாகக் குடும்பங்களின் அனுபவங்களையும் சவால்களையும் கருத்தில் கொண்டு, தெளிந்து தேர்ந்து செயல்படுவது, உடன் பயணிப்பது போன்ற மறைபரப்புத் திட்டங்களை முன்மொழிந்தார்.
புதிய
திருத்தந்தையும் குடும்பத்தின் முன்னுரிமையை அரசுகள், அவற்றின் மாநில அமைப்பு முறைகள் மற்றும் உலகமய சந்தைப் பொருளாதாரத்திற்கு மேலானதாக மீண்டும் உயர்த்திப் பிடிக்கிறார். நேற்றும் இன்றும் என்றுமான சமூகப் பிரச்சினையின் வேர்கள் குடும்பத்திலிருந்துதான் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
இவ்விதம்
குடும்பத்தைத் தனிப்பட்ட மற்றும் ஆன்மிக விவாதத்தின் மையமாக மட்டுமல்ல, சமூக மற்றும் அரசியல் விவாதத்தின் இதயத்திலும் மீண்டும் வைக்கிறார்; குடும்பத்தை உள்ளார்ந்த மற்றும் தனிப்பட்டத் தேர்வுகளின் கோளத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கான அவசரத்தேவையை முன்னெடுக்கிறார்.
இதன்
முத்தாய்ப்பாகக் கடந்த ஜூன் 1 அன்று நடந்த குடும்பங்களின் யூபிலி அமைந்திருந்தது.
“கிறிஸ்துவைச் சந்திப்பதன் வழியாகத் தீமை மற்றும் மரணத்தின் நீரிலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்காக, மனிதகுலத்தின் ‘மீனவராக’நாம் மாறவேண்டும்” என்கிற
திருத்தந்தையின் அழைப்பை வாழ்வாக்குவோம்.