2. பொதுவான வழிகாட்டுதல்கள்
உரோமைப்
பேராயம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி திரு அவை தனது உய்த்துணரும் கடமையைக் கீழ்க்காணும் நான்கு பொதுவான வழிகாட்டுதல்கள் அடிப்படையில் செய்கிறது:
1) சாட்டியுரைக்கப்பட்ட
(Alleged) இயல்நிலை
கடந்த நிகழ்வுகளில் இறைச் செயல்பாட்டின் அறிகுறிகளை உறுதிப்படுத்துதல்;
2) சாட்டியுரைக்கப்பட்ட
இயல்நிலை கடந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்களின் எண்ணங்கள் அல்லது எழுத்துகளில் நம்பிக்கை மற்றும் ஒழுக்க நெறிகளுக்கு முரணானது எதுவும் உள்ளனவா? என்று கண்டறிதல்;
3) சாட்டியுரைக்கப்பட்ட
இயல்நிலை கடந்த நிகழ்வுகளிலிருந்து வெளிப்படும் ஆன்மிகக் கனிகளை அடையாளம் கண்டு, அவற்றை ஏற்கலாமா? பிரச்சினைக்குரிய கூறுகளிலிருந்து அவை சுத்திகரிக்கப்பட வேண்டுமா? அல்லது இடையூறு நேர்வுகளிலிருந்து இறைமக்கள் எச்சரிக்கப்பட வேண்டுமா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதல்;
4) சாட்டியுரைக்கப்பட்ட
இயல்நிலை கடந்த நிகழ்வுகளின் அருள்பணித் தரத்தைக் கணித்திட திரு அவைசார் அதிகாரத்திற்குப் (மறைமாவட்ட ஆயர், ஆயர்கள் பேரவை, நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயம்) பரிந்துரைக்கலாமா? என்ற கேள்விக்குப் பதில் காணுதல்.
3. கடைப்பிடிக்க வேண்டிய செயல்பாட்டு
முறைகள்
சாட்டியுரைக்கப்பட்ட
இயல்நிலை கடந்த நிகழ்வுகளைப் பற்றிய தகவலை மறைமாவட்ட ஆயர் பெறும் பொழுது, குறைந்த அளவு உண்மை இருக்கிறதா? என்பதைக் கண்டறியதானோ அல்லது பொருத்தமான தனது பதிலாள் வழியாகவோ கவனமுடன் விசாரணை நடத்த வேண்டும். சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வு போலியானது என்றறிந்தால் அதற்கான அறிவிப்பைக் கொடுத்து அவ்விவகாரத்தை அத்துடன் முடித்துவிட வேண்டும். சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வில் குறைந்த அளவு உண்மை இருப்பதாகத் தெரிந்தால், அடுத்து மறைமாவட்ட ஆயர் ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். அதில் ஓர் இறையியல் வல்லுநர், ஒரு திரு அவைச் சட்ட வல்லுநர், நிகழ்வின் இயல்புக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிபுணர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அக்குழு சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வைப் பற்றிய அறிவியல், தொழில்நுட்ப, உளவியல்பூர்வமான சான்றுகளைச் சேகரிக்க வேண்டும். அச்சான்றுகளைக் கீழ்க்காணும் நேர்மறை மற்றும் எதிர்மறை வரன்முறைகளின்படி திறனாய்வு செய்ய வேண்டும்.
நேர்மறை வரன்முறைகள்
1) சாட்டியுரைக்கப்பட்ட
இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களைப் பெற்றவர்கள் மற்றும் அவர்களது சாட்சிகளின் நன்னடத்தை மற்றும் நம்பகத்தன்மை;
2) இயல்நிலை
கடந்த நிகழ்வும் நிகழ்வின் செய்தியும் திரு அவை மறைக் கோட்பாடு மற்றும் மரபுறுதி வழுவாமைக்கு முரணாக இல்லாதிருத்தல்;
3) நிகழ்வைப்
பற்றி முன்னறிந்து கூற முடியாத இயல்பு; அது சம்பந்தப்பட்டவர்களின் திட்டமிடப்பட்ட செயலாக இல்லாதிருத்தல்;
4) தூய
ஆவியாரிடமிருந்து வரும் கிறித்தவ வாழ்வின் கனிகளான செப ஆர்வம், மனமாற்றம் இறையழைத்தல், பிறரன்புப் பணிகள், பக்தி, திரு அவை உறவு ஒன்றிப்பின் வளர்ச்சி போன்றவை இந்நிகழ்வுகளில் வெளிப்படுகின்றனவா? என்று கண்டறிதல்.
எதிர்மறை வரன்முறைகள்
1) வெளிப்படையான
மறைக்கோட்பாடு சார்புடைய தவறு இந்நிகழ்வில் இருப்பதற்கான சாத்தியம்;
2) திரு
அவையில் பிளவை ஏற்படுத்தும் மனப்பான்மை;
3) நிகழ்வுடன்
நெருங்கிய தொடர்புள்ள ஆதாயம், புகழ், சமூக அந்தஸ்து, சுய இலாபம், ஆதிக்கம்;
4) நிகழ்வுடன்
தொடர்புள்ள மோசமான ஒழுக்கக் கேடு நடவடிக்கைகள்;
5) நிகழ்வில்
சம்பந்தப்பட்டவரின் உளவியல் மற்றும் மனநோய் கோளாறுகள்;
6) காட்சி
அனுபவங்களைப் பெற்றதாகக் கூறுவோரிடம் காணக்கூடிய மனப்பிரமை, மனப்பிறழ்வு, மனச்சிதைவு மற்றும் வெறித்தனம்.
மறைமாவட்ட
ஆயர் மேற்கண்ட நேர்மறை / எதிர்மறை வரன்முறைகளைக் கையாண்டு, சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த நிகழ்வைக் கவனமுடன் ஆய்வு செய்து தனது தீர்ப்பை உரோமைப் பேராயத்திற்கு அனுப்ப வேண்டும்.
4. சாத்தியமான முடிவுகள்
சாட்டியுரைக்கப்பட்ட
இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களின் நிகழ்வைப் பற்றியத் தீர்ப்பை மறைமாவட்ட ஆயரிடமிருந்து பெற்ற பின்னர் கீழ்க்காணும் சாத்திய முடிவுகளை உரோமைப் பேராயம் செயல்படுத்தும்.
‘தடை இல்லை’(Nihil Obstat)
‘தடை இல்லை’ என்ற முடிவு, சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த ஒரு நிகழ்வில் வெளிப்படும் தூய ஆவியானவருடைய செயல்பாட்டின் அறிகுறிகளுக்கு ஏற்புத் தெரிவித்தல் ஆகும். அதாவது, அந்த நிகழ்வின் அருள்பணிசார் பயன்களை உய்த்துணர்ந்து அதனைப் பரப்புவதை-திருப்பயணங்கள் உள்பட- மறைமாவட்ட ஆயர் ஊக்குவிப்பது ஆகும். ‘தடை இல்லை’ என்ற முடிவு அந்நிகழ்வை நேர்மறையாக அங்கீகரிக்கும் அறிக்கை என்று கருதமுடியாது; அதன் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதாகவும் பொருளாகாது; அதை எல்லாரும் ஏற்றுக்கொண்டு நம்பவேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதும் ஆகாது; அதை நம்பினால்தான் ஒருவர் உண்மைக் கிறித்தவராக இருக்கமுடியும் என்று கருதவும் முடியாது. ஏனெனில், கிறித்தவ அருள் வாழ்விற்கும் மீட்பினை வழங்கும் நிரந்தர வழிமுறைகளுக்கும் அடிப்படையானவை நற்செய்திப் படிப்பினைகள். குறிப்பாக, நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கு மட்டுமே (எபே 3:17; தெச 1:3). அதனால் ஒரு சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்விற்கு நம்பிக்கையாளர் தங்களின் பற்றை விவேகமான முறையில் வெளிப்படுத்த அனுமதிக்கிறது என்பதுவே ‘தடை இல்லை’ என்ற முடிவின் அர்த்தம் ஆகும்.
2) ‘கண்முன் காட்டுக’ (Prae Oclis
Habeatur)
ஒரு
சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வில் முக்கிய நேர்மறை அறிகுறிகள் காணப்பட்டாலும், அதில் குழப்பங்கள் அல்லது சாத்தியச் சிக்கல்களின் அம்சங்கள் இருப்பதாக மறைமாவட்ட ஆயர் உய்த்துணர்ந்தால், அந்நிகழ்விலிருந்து ஆன்மிக அனுபவம் பெற்றதாகக் கூறுபவர்களிடம் கவனமாக உரையாடல் நடத்த வேண்டும் என்பதும், அந்நிகழ்வைப் பற்றிய எழுத்துப் பதிவுகள் அல்லது செய்திகள் இருப்பின், அவற்றின் மறைப்படிப்பினைத் தெளிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் ‘கண்முன் காட்டுக’ என்ற முடிவின் அர்த்தம் ஆகும்.
3) ‘கவனத்தில் கொள்க’ (Curatur)
ஒரு
சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த காட்சி அனுபவ நிகழ்வும் அதனை எண்பிக்கக்கூடிய ஆன்மிகக் கனிகளும் இணைந்துள்ளதாகத் தோன்றும் நிலையில், நம்பிக்கையாளர்களைக் கவலைக்குள்ளாக்கும் தடை பரிந்துரைக்கப்படுவதில்லை. அதேவேளையில், அந்நிகழ்வை மறைமாவட்ட ஆயர் ஊக்குவிக்க வேண்டாம் என்று இந்த முடிவின் வழியாக அறிவுறுத்தப்படுகிறார்.
4) ‘ஆணையின் கீழ்’ (Sub
Mandato)
ஒரு
சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்விற்கும் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் தொடர்பில்லை என்றாலும், அதைத் தவறாகப் பயன்படுத்தி முறையற்றப் பொருளாதார ஆதாயம் அல்லது ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடும் ஆள்கள் அல்லது குழுக்கள் இருக்கும் பட்சத்தில், அந்த இடத்தின் அருள்பணிசார் நிர்வாகத்தை மறைமாவட்ட ஆயரிடமோ அல்லது அவரது உரிமைப் பதிலாளரிடமோ திருத்தந்தை ஆட்சிப்பீடம் ஒப்படைக்கும்.
5) ‘தடை செய்தலும் மூடுதலும்’ (Prohibetur
et Obstruatue)
ஒரு
சாட்டியுரைக்கப்பட்ட இயல்நிலை கடந்த நிகழ்வில் பல நேர்மறை அம்சங்கள்
இருப்பினும், அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளும் சிக்கல்களும் தீவிரமாக இருக்கலாம். அப்பொழுது மக்களுக்கு முறையான மறைக்கல்வி வழங்கி அவர்கள் உண்மையான ஆன்மிக நலன்களில் கவனம் செலுத்தும்படி இடத்து ஆயரிடம் உரோமைப் பேராயம் இந்த முடிவின் வழியாகக் கோரும்.
6) ‘இயல்நிலை கடந்த நிகழ்வல்ல
என்ற
அறிக்கை’ (Declaratio
de Non – Supernaturalitate)
புனைவுக்
காட்சியாளர்கள் அல்லது நம்பத்தகுந்த சாட்சிகளின் உண்மை வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வு இயல் நிலை கடந்ததல்ல என்று அறிக்கையிடும்படி இடத்து ஆயருக்கு உரோமைப் பேராயம் அனுமதி அளித்தல் இந்த முடிவின் அர்த்தம் ஆகும்.
(தொடரும்)
பிப்ரவரி 3-ஆம் தேதி வத்திக்கானில் கிளமெந்தினா அறையில் உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட உலகக் குழந்தைகள் உரிமைகளுக்கான முதல் தினத்தையொட்டி பன்னாட்டுக் கருத்தரங்கில் ‘குழந்தைகளை நேசிப்போம்; பாதுகாப்போம்’ என்ற மையக் கருத்தில் திருத்தந்தை ஆற்றிய உரையை எளிய தமிழில் சுருக்கமாகத் தர விழைகிறேன்.
1. குழந்தைகளின் இன்றைய நிலை
மில்லியன்
கணக்கான குழந்தைகள் வறுமையால், போர்களால், கல்வியின்மையால், அநீதியால், சுரண்டலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை நாடுகளில் குழந்தைகளின் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது.
கட்டாயப்படுத்தப்பட்டு
பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல நாடுகளில் குழந்தைகள்
விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கல்வி மற்றும் நல வாழ்வு பணிக்
குழு அதிகக் கரிசனையுடன் குழந்தைகளை அணுக வேண்டி இருக்கிறது. பலவிதமான
குழப்பங்களில் நடமாடும் இளையோரை, தங்களைத் தாங்களே காயப்படுத்தும் இளையோரை இனம் கண்டு, பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
செயல்திறன்
அதிகமாகக் காணப்பட்டாலும் முதியோரைப்போல குழந்தைகளையும் விளிம்பு நிலையினராய்ப் பார்ப்பதும் வேதனைக்குரியது. நம்பிக்கை இழந்த நிலையற்ற எதிர்காலத்தைச் சந்திக்கும் இளையோர், வேலை வாய்ப்பில்லாத இளையோர், படித்தும் பயனில்லாத நிலைகளை எண்ணிப் பார்க்கும் இளையோர், கனவு நனவாகாது என்னும் மனநிலையில் வாழும்
இளையோரைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இயல்பாகவே அவர்கள் சோர்வடைவது உறுதி.
குண்டுவெடிப்பில்
சிதறிப்போகும் குழந்தைகளைப் பார்க்கிறோம். அதிகார மமதையில் குழந்தைகளைக் கொல்வதை
நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. குழந்தைகளின் வாழ்வைவிட இந்த உலகில் உயர்வானது வேறு எதுவுமில்லை. குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பதாகும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றார்கள்; வன்முறையினால் பாதிக்கப்படுகின்றார்கள்; குற்றமிழைக்கும் கும்பல்களால் குழந்தைகள் அனாதையாக்கப்படுகிறார்கள்; ஓரங்கட்டப்படுகிறார்கள். பாதுகாக்க வேண்டியவர்களே குழந்தைகளைக் கொல்வது ஆபத்தானது. சண்டை சச்சரவுகளுக்கும், சமூக மன அழுத்தங்களுக்கும், பெற்றோரின் பிரச்சினைகளுக்கும்
குழந்தைகள் பலியாகின்றனர்.
புலம்பெயரும்போது
அதிகமான குழந்தைகள் கடலில், பாலைவனத்தில், சாலைகளில் இறக்கின்றனர்.
மருத்துவ உபகரணங்கள் இல்லாமல், உதவிக்கு யாரும் இல்லாமல் தவிக்கின்றனர். சூழ்நிலைகள் வித்தியாசமாக இருந்தாலும், ஒரே ஒரு கேள்விதான்: ‘குழந்தைகள் வாழ்வு இப்படித்தான் முடிய
வேண்டுமா?’ இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
2. கேள்விக்குறியாகும் குழந்தைகளின்
எதிர்காலம்
சமத்துவமற்ற
பொருளாதாரம், போர்களின் கொடுமை, போதிய மருத்துவமும் கல்வியும் இல்லாமை போன்றவற்றால் குழந்தைப்பருவம் மறுக்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல. இதனை எதிர்த்துக் கண்டிப்பது அமைதிக்கான ஒரு கூக்குரலாக அமையும். இந்த அநீதியின் சுமை நமது சகோதர-சகோதரிகளில் மிகவும் பலவீனமானவர்களையும் பாதுகாப்பற்றவர்களையும்தான்
அதிகம் பாதிக்கிறது. இது ஓர் உலகளாவிய
தார்மீகப் பிரச்சினை.
நம்
இதயத்தின் கருணையும் இரக்கமும் ஒருபோதும் கடினமாகி விடக்கூடாது. 40 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பல்வேறு பிரச்சினைகளால் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வீடிழந்து நிற்கின்றனர். குழந்தைகள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். சுமார் 160 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
பலர் கடத்தப்படுகிறார்கள். குழந்தைத் திருமணத்தைக் கட்டாயமாக்கியுள்ளனர். மில்லியன் கணக்கில் அகதிகளாய் குடும்பங்களோடு அதேநேரத்தில் தனிமையாக அலைகிறார்கள்.
யார்
துணையும் இல்லாமல் வாழும் குழந்தைகளின் வாழ்வு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கண்ணுக்குத் தெரியாத ஒரு கோடியே ஐம்பது இலட்சம் குழந்தைகளுக்குச் சட்டப்பூர்வ இருப்பு இல்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கல்வி சுகாதாரப் பராமரிப்பை அணுகுவதில் ஒரு தடையாக இருக்கிறது. சட்டப் பாதுகாப்பு இல்லாததால் அடிமைகளாக விற்கப்படலாம். ரோஹிங்கியா இளையோர் பதிவு செய்யப் போராடுகிறார்கள். அமெரிக்க எல்லையில் உள்ள ஆவணமற்ற குழந்தைகள் தெற்கிலிருந்து அமெரிக்காவை நோக்கி விரக்தியுடன் வருகின்றனர். இவ்வாறு குழந்தைகள் மீதான அடக்குமுறை வரலாற்றில் தொடர்கிறது.
3. குழந்தைகளுக்கான கரிசனையே எதிர்நோக்கின்
ஆதாரம்
நமது
தாத்தா-பாட்டிகளிடம் சிறு வயதில் அனுபவித்த போரைப் பற்றிக்கேட்டால் அவர்களின் நினைவுகளிலிருந்து சோகம் வெளிப்படுகிறது. போர்க்காலம் இருளின் காலம். துர்நாற்றம், குளிர், பசி, அழுக்கு, பயம், உறவுகளை, உடைமைகளை இழப்பது போன்ற வன்முறை நிறைந்த கதைகளைத் தாத்தா வழியாகக் கேட்டபோது முதல் உலகப் போரின் பயங்கரத்தை அறிந்ததாகவும் அது தன் கண்களையும் இதயத்தையும் திறந்ததாகவும் திருத்தந்தை பதிவு செய்கிறார். விலைமதிப்பற்ற வாழ்வைப் போரில் பாதிக்கப்பட்டோரின் கண்கள்
வழியாகப் பார்த்தால் நன்கு
புரிய முடியும். கருக்கலைப்பு தொடர்வது கொடூரமான நடைமுறையாகப் பார்க்கப்படுகிறது. எந்த ஒரு மதிப்பீடும் இல்லாமல், மரியாதையும் இல்லாமல் தூக்கியெறியும் கலாச்சாரம் தொடர்வது ஆபத்தானது.
செவிசாய்த்தல்
மிக முக்கியம். சிறு குழந்தைகள் கவனிக்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள், நினைவில் கொள்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். குழந்தைகள் தங்கள் பார்வையாலும் அமைதியாலும் நம்மிடம் பேசுகிறார்கள். நாம் அவர்களுக்குச் செவிசாய்ப்போம். நமது பங்களிப்பு குழந்தைகளுக்குப் புதிய உலகைக் காண துணை புரியட்டும். எதிர்நோக்கின் ஆதாரமே நாம் நமது குழந்தைகளின் கனவுகளை, தேவைகளை,
உரிமைகளை, நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் உள்ள கரிசனைதான் என்பதை மனத்தில் பதிய வைப்போம். இதை அடிப்படையாகக்கொண்டு விரைவில் குழந்தைகளுக்கான திருத்தூது ஊக்கவுரை ஒன்று தயாரிக்கப்படும் என்பதையும் திருத்தந்தை உறுதி செய்திருக்கிறார்.
நமது இறைவேண்டல், சொற்களையும் எண்ணங்களையும் கடந்து செயல்வடிவம் பெறவேண்டும் என்னும் புரிதல் இன்று மிகவும் தேவைப்படுகிறது. நம் வழிபாடுகளில் நாம் செய்யும் இறைவேண்டல் நம் வாழ்வுக்கு நம்மை இட்டுச் சென்று செயல்வீரர்களாக மாற்ற வேண்டும். அதுவே சிறந்த இறைவேண்டல்.
இறைவேண்டலின்
அடிநாதம் இறைவன் மீதும், பிற மனிதர்கள் மீதும் நாம் காட்டும் அன்பே. அன்பின் நுட்பமான வெளிப்பாடு. குறிப்பாக, துன்புறுவோர் மீதும், துயர் நிறைந்தவர் மீதும் காட்டப்படும் அன்பே பரிவு எனப்படுகிறது. இறைவனின் கனிந்த அன்பை இரக்கம், பரிவு என அழைக்கிறது திருவிவிலியம்.
திருவிவிலியத்தின் பார்வையில் பரிவு பல செயல் வடிவங்களில்
வெளிப்படுகிறது. இதோ, அவற்றில் சில:
1) அவசரத்தில் உதவி: பரிவு என்றாலே அது செயல் வடிவில் வெளிப்படும்போதுதான் சிறப்படைகிறது. செயல் வடிவம் பெற்ற பரிவிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இயேசு உவமையாகக் கூறிய நல்ல சமாரியர்தான். கள்வர் கையில் அகப்பட்டு, குற்றுயிராக விடப்பட்ட அவரைக் கண்ட குருவும், லேவியரும் மறுபக்கமாய் விலகிச் சென்றனர். ஆனால், அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும், எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தான் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார் (லூக்கா 10:33-34). இதுவல்லவோ பரிவின் மிகச் சிறந்த வெளிப்பாடு.
2) உணவு கொடுத்தல்: பசியோடு இருப்பவர்களைப் பார்த்துப் பரிவு கொள்ளும்போது என்ன செய்ய வேண்டும்? அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். பாலைநிலத்தில் தம்மோடு இருந்த மக்கள் திரளைக் கண்டு இயேசு தம் சீடரிடம் “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை. இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை. அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” (மத் 15:32)
என்று கூறினார். இந்தப் பரிவின் வெளிப்பாடாக ஏழு அப்பங்களைக் கொண்டு, நாலாயிரம் பேருக்கு வயிராற உணவு வழங்கினார்.
3) நலமாக்குதல்: இயேசுவின் பரிவு
நோயாளர்களைச் சந்தித்தபோது, குணமாக்குதலின் வழியாக வெளிப்பட்டது. இயேசு பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார். அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார் (14:14) என்று மத்தேயு பதிவு செய்துள்ளார்.
4) கற்பித்தல்: இயேசு கரையில்
இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால், அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் (மாற் 6:34). கற்றுக் கொடுத்தலும் ஒரு பரிவின் செயலே என்பதை அறிந்து நாம் வியக்கிறோம்.
5) மன்னித்தல் பரிவின் மற்றொரு
சிறந்த
அடையாளம்:
“ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர். பாவங்களை மன்னிப்பவர்” (சீஞா
2:11) என்று சீராக்கின் ஞானநூல் இறைவனின் இயல்பை எடுத்துரைக்கிறது. பவுலடியாரும் “ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள். கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்” (எபே
4:32) என்னும் அறிவுரை வழியாக மன்னிப்பைப் பரிவின் வெளிப்பாடாகக் காட்டுகிறார்.
6) செல்வத்தைப் பகிர்தல்:
“உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதர, சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால், அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?” (1யோவா 3:17) எனக் கேள்வி எழுப்புகிறார் புனித யோவான்.
7) கடன்களைத் தள்ளுபடி செய்தல்:
நம்மிடம் பொருளாகவோ, பணமாகவோ கடன் பட்டிருப்பவர்களிடம் அதனைத் தள்ளுபடி செய்வது பரிவின் ஒரு சிறந்த அடையாளம். இயேசுவின்
மன்னிக்க மறுத்த பணியாள் உவமையில் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்த பணியாள் தலைவரின் காலில் விழுந்து மன்றாடியபோது, அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து, அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார் (மத் 18:27). திருவிவிலியம் காட்டும் யூபிலிக் கொண்டாட்டத்தின் மையமாகக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் அமைகின்றது (லேவி 25).
8) தண்டனையிலும் பரிவு: மக்கபேயு மற்றும் அவரது ஆள்கள் இறைவனிடம் மன்றாடியபோது, அவர்கள் எப்போதாவது பாவம் செய்ய நேரிட்டால், கடவுளால் ‘பரிவோடு தண்டிக்கப்பட’ வேண்டுமென்று
மன்றாடினார்கள் (2மக் 10:4) என்னும் செய்தி நமக்கு வியப்பைத் தருகிறது.
சாலமோனின்
ஞானநூலில் இறைவனின் கனிவும் இரக்கமும் நிறைந்த தண்டனை மனம் திரும்புவதற்கான வாய்ப்பு என்ற செய்தி தரப்பட்டுள்ளது. “உம் ஊழியர்களின் பகைவர்கள் சாவுக்குரியவர்களாய் இருந்தும், மிகுந்த கனிவோடும் இரக்கத்தோடும் அவர்களைத் தண்டித்தீர். அவர்கள் தங்கள் தீச்செயல்களை விட்டுவிடும்பொருட்டு, காலமும் வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுத்தீர்” (சாஞா
12:20).
9) இறந்தவர்களுக்கும் பரிவு: வாழ்வோருடன் பரிவின் செயல்கள் முடிந்துவிடுவதில்லை, இறந்தோருக்கும் அது தொடர வேண்டும் என்னும் இனிய செய்தியைத் திருவிவிலியம் நமக்குத் தருகிறது. தோபித்து நூலில் அவரது பல இரக்கச் செயல்களைப்
பற்றி வாசிக்கிறோம். “பசியுற்றோருக்கு உணவும், ஆடையற்றோருக்கு ஆடையும் அளித்து வந்தேன். என் இனத்தாருள் இறந்த யாருடைய சடலமாவது நினிவே நகர மதில்களுக்கு வெளியே எறியப்பட்டிருக்கக் கண்டால், அதை அடக்கம் செய்துவந்தேன். சனகெரிபு கொன்றவர்களையும் அடக்கம் செய்தேன்”
(தோபி 1:17) என அவரே கூறியுள்ளதை
அறிகிறோம். மறைக்கல்வி போதிக்கும் இரக்கச் செயல்களுள், இறந்தோரை நல்லடக்கம் செய்வதும் ஒன்று.
10) கால்நடைகளுக்கும் பரிவு: பரிவுணர்வு வாழ்வோரையும் இறந்தோரையும் தாண்டி, கால்நடைகளையும், எல்லா உயிரினங்களையும் தொட வேண்டும் என்பதே இன்றைய தேவை. இதனைத் திருவிவிலியமும் எடுத்துரைப்பதை அறிந்து வியக்கிறோம். “நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர்” (நீமொ
12:10) என்கிறது நீதிமொழிகள் நூல்.
“நாம் சொல்லிலும், பேச்சிலும் அல்ல; செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்”
(1யோவா 3:18) என்னும் அறைகூவலுக்கேற்ப, தூய ஆவியாரின் கனிகளுள் ஒன்றான பரிவை (கலா 5:22) நாம் செயல்படுத்திக் காட்டுவோமாக! அதுவே சிறந்த இறைவேண்டல்.
பொறுப்புடைமையையும் (accountability), வெளிப்படைத்தன்மையையும் (transparency) திறனாய்வு செய்யும் அங்கங்கள்
ஆயர்
மற்றும் மறைமாவட்ட இறைநம்பிக்கையாளர்களின் சமூகத்திற்கும் இடையில் தொடர் கலந்தாலோசனைகள் நடைபெறுவதற்கு முக்கியக் காரணியாக விளங்குகிற மறைமாவட்ட மன்றத்துக்கு உரிய அங்கீகாரம் அளிப்பது அவசியம் என்று இந்த இறுதி ஆவணம் எடுத்துக் கூறுகின்றது. மறைமாவட்ட மேய்ப்புப்பணித் திட்டங்கள், கூட்டொருங்கியக்கத் திரு அவையை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையும் செயல்முறைகளையும் உருவாக்குதல், நிதி மேலாண்மை மற்றும் மேய்ப்புப்பணிச் செயல்பாட்டுத் திட்டங்களைப் பொறுப்புணர்வோடு இறைநம்பிக்கையாளர்களுக்குச்
சமர்ப்பிக்க ஆயருக்கு உதவுகிற ஒரு தளமாக மறைமாவட்ட மன்றம் செயல்பட வேண்டுமென்றும் இந்த இறுதி ஆவணம் கூறுகின்றது. இந்த முயற்சி பொறுப்புடைமையையும் (accountability) மற்றும் வெளிப்படைத்தன்மையையும் (transparency) ஊக்குவித்து வளர்த்தெடுக்க வழிவகை செய்யும்.
தனிப்பேரவைகளைப்
புதுப்பித்தல்
மற்றும்
அதிகாரப்
பரவலாக்கல்
(decentralization)
அதிகாரப்
பரவலாக்கலைச் சாத்தியமாக்கும் பொருட்டு, மறைமாநிலப் பேரவைகள் (provincial councils), முழு நிறைவான பேரவைகள் (plenary councils) ஆகிய நிறுவன அமைப்புகளுக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு அவை நடத்தப்பட வேண்டும் என்ற தேவையை முன்னிறுத்துகின்றது இந்த இறுதி ஆவணம். இத்தகைய பேரவைகளை அவ்வப்போது தொடர்ந்து கூட்டுவது திரு அவை வரலாற்றில் ஒரு கடமையாக இருந்திருக்கின்றது. மேலும், இது திரு அவைச் சட்டத்தாலும் தேவையான ஒன்றாக அறிவுறுத்தப்படுகின்றது (தி.அ.ச.எ. 439-446).
திரு
அவையின் ஒருமை மற்றும் அதன் படிப்பினைகளில் ஒன்றித்திருத்தல் ஆகியவற்றைப் பாதுகாக்கிற அதே வேளையில், தனிப் பிரச்சினைகள் எழும்போது அதை நிவர்த்தி செய்ய ஆயர்களுக்கு அனுமதி வழங்குகிறது ‘நற்செய்தியை அறிவியுங்கள்’ (Praedicate Evangelium)
என்று பொருள்படும் திருத்தூதுக் கொள்கை விளக்கம். இதனை அவர்கள் திருத்தந்தை தனது சொந்த விருப்பத்தினால் வெளியிடும் ‘Motu proprio’ எனப்படும்
சமீபத்திய சிறப்பு அறிக்கையான competentias quasdam decernere’ என்ற ஆவணம் மாற்றியமைத்த 11 திரு அவைச் சட்டங்களைப் பின்பற்றி, அதற்கான வழி வகைகளை வகுக்கவேண்டும் என்றும் இறுதி ஆவணம் வலியுறுத்துகின்றது. 2022-ஆம் ஆண்டு வரை திரு அவையில் மேல்நிலைப் பொறுப்பில் இருந்தவர்கள் மட்டுமே பெற்றிருந்த அதிகாரத்தைக் கீழ்நிலையில் இருக்கும் பொறுப்பாளர்களும் பெறும் வகையில் இந்த மாற்றியமைக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட திரு அவைச் சட்டம் வழங்குகிறது. இத்தகைய சட் டங்கள் திரு அவையின் ஒவ்வொரு தளங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்றும் இறுதி ஆவணம் அடிக் கோடிட்டுக் காட்டுகின்றது.
குருமடப் பயிற்சிகள்
குருப்பட்டப்
பணிக்கான குருமடப் பயிற்சியிலும் கூட்டொருங்கியக்கத் திரு அவையைப் பிரதிபலிக்கும் கூறுகள் இடம்பெறும் வகையில் அமைய வேண்டுமென ஒரு பரவலான கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கான அழுத்தமும் இந்த இறுதி ஆவணத்தில் விரவிக் கிடக்கின்றது. குறிப்பாக, குருமடப் பயிற்சியில் பெண்களின் பங்கேற்பு மற்றும் பங்களிப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கை குறித்த ஆழமான புரிதல், திரு அவையில் இருக்கிற அனைவரோடும் இணைந்து செயல்படுதலைச் சாத்தியமாக்கும் பயிற்சி மற்றும் திரு அவையின் ஒருமித்த மனநிலையை எட்டும் பயிற்சி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் குருத்துவப் பயிற்சிக்கான பொதுவான வரைமுறைக் கையேடான ‘Ratio fundamentalis
instituitonis sacerdotalis (தி.அ.ச.எ. 241)’ என்ற ஆவணத்தைப் புதுப்பிக்கவும் அழைப்பு விடுத்திருக்கின்றது இந்த இறுதி ஆவணம்.
கலந்தாலோசிக்கப்படுபவர்களின்
குரல்களை
ஒடுக்காமல்
இருத்தல்
திரு
அவையில் நிறையச் சூழ்நிலைகளில் அதிகாரத்தில் இருப்போர் முடிவுகளை எடுப்பதற்கு முன் பங்கேற்பு அமைப்புகளைக் கலந்தாலோசித்தல் என்பது திரு அவைச் சட்டபடி அவர்களுடைய கடமையாகும். இது பங்கேற்பு அமைப்புகளின் உரிமையும் கூட. கலந்தாலோசனையின் வழியாக விளைந்த கனிகளால் ஒருமித்த ஒரு முடிவு எட்டப்படும்போது, அதனினும் மேலோங்கிய ஒரு காரணம் இருந்தாலொழிய, அதிகாரத்தில் இருப்போர், அவர்கள் கலந்தாலோசித்து உள் வாங்கிய ஆலோசனைகளை ஏதோ கலந்தாலோசித்தலே நடைபெறாதது போல், அவைகளைப் புறந்தள்ளக்கூடாது. எனவே, அதிகாரத்தில் இருப்போர் கலந்தாலோசனையில் பங்கேற்பவர்களுக்குச் செவிமடுத்தல் அவசியம். அவர்களுடைய உணர்வுகளையும், உள்ளச் சிந்தனைகளையும் இனம் கண்டுகொள்ளாமல் பொறுப்புகளிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் அவர்களுடைய விருப்பங்களை மட்டும் முடிவுகளாக மாற்றிச் செயல்படுத்த நினைப்பது கூட்டொருங்கியக்கத் திரு அவையின் போக்கிற்கு எதிரானது (தி.அ.ச.எ. 127 ப2, 2).
திரு அவையின்
மற்ற
நிலைகளில்
பொதுநிலையினரின்
பங்கேற்பு
திரு
அவைச் சட்டம் மற்றும் இந்த இறுதி ஆவணம் குறிப்பிடுகிற பங்கேற்பு அமைப்புகளைத் தவிர்த்து, மறைமாவட்டப் பொறுப்புகள் மற்றும் திரு அவையின் நிறுவனங்களாகிய குருமடம், கல்வி நிறுவனங்கள், இறையியல் பிரிவு சார்ந்த துறைகள் ஆகியவற்றில் பொதுநிலையினர் ஈடுபடும் வாய்ப்புகளை அதிகப்படுத்துதல் அவசியப்படுகிறது. அர்ப்பண வாழ்வில் உள்ள துறவற நிலையிலிருக்கும் இருபால் துறவியர்கள் பெற்றுள்ள கொடைகளுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதும், திரு அவைச் சட்ட வழக்குமன்ற நடவடிக்கைகளில் தகுதியான பொதுநிலையினரை நீதிபதிகளாகத் தகுந்த திரு அவைச் சட்டத் தயாரிப்புப் பயிற்சிக்குப்பின் ஈடுபடுத்துவதும் அவசியம் என்பதை மிக அதிகமாகவே இறுதி ஆவணம் வலியுறுத்துகின்றது. அதோடுகூட திரு அவையின் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் பொதுநிலையினர்களின் உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் உரிய மரியாதை வழங்குவதும் அவசியம். அவர்களுடைய திறமைகளையும் தனிப்பண்புகளையும் இனம் கண்டு, அவற்றை வளர்த்தெடுக்க விளைவதும் மிக அவசியம்.
ஆலோசனை வாக்கு
‘மட்டுமே’ என்பதில், ‘மட்டுமே’ என்ற வார்த்தை
நீக்கப்பட்டது
திரு
அவைச் சட்டத்தின் பல இடங்களில் முடிவுகளை
எடுப்பதற்கு ஆயருக்கும் பங்குத்தந்தைக்கும் ஆலோசனை வாக்குகள் அவசியப்படுகிற நிறைய இடங்களில் ‘மட்டுமே’
(only / merely tantum) என்ற
வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்தப் போக்கு பல நேரங்களில் கலந்தாலோசித்தலை
இரண்டாந்தர ஒரு தேவையாகத் தவறான புரிதலுக்கு வழிவகுக்கின்றது. கலந்தாலோசித்து ஆலோசனைகளைப் பெறுவதையும் முடிவெடுத்தலையும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் வைப்பது சரியன்று; திரு அவையில் முடிவெடுத்தல் என்பது அனைவரது உதவியோடு நிகழ்கின்றது. கலந்தாலோசனைகளின் வாயிலாகவே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆலோசனைகள் வழங்குகின்ற பங்கேற்பு அமைப்புகள் எந்த விதத்திலும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களுக்குக் கீழானவர்கள் அல்லர்; மாறாக, இந்த இரண்டு நிலையினரும் சமமானவர்கள் என்பதைப் புரிந்து திரு அவையில் பணிபுரிய வேண்டும். எனவே, தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் ஆலோசனை வாக்கு ‘மட்டுமே’ என்ற வரிகள் திரு அவைச் சட்டத்திலிருந்து அகற்றப்பட ஆவன செய்ய வேண்டும் என இந்த இறுதி
ஆவணம் அறைகூவல் விடுக்கின்றது. திரு அவைச் சட் டத்தில் ‘ஆலோசனை வாக்கு மட்டுமே’ என்று மீண்டும் மீண்டும் வரும் வாக்கியத்தால் எழும் தெளிவின்மையைப் போக்கும் வண்ணம் ‘மட்டுமே’ என்ற வார்த்தை நீக்கப்படல் வேண்டும்.
திருத்தந்தை
பிரான்சிஸ் இந்த இறுதி ஆவணத்தின் கற்பிதங்களைக் கூட்டொருங்கியக்கத் திரு அவையை மலரச் செய்வதற்கான ஒரு வழிகாட்டுதலாகக் காண்கின்றார். எனவே, இந்த ஆவணத்தின் படிப்பினைகளைச் செயல்படுத்தத் தேவையான நடைமுறைகளை ஒவ்வோர் ஆயரும் தம் தலத் திரு அவையில் மேற்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். இந்த இறுதி ஆவணத்தின் கற்பிதங்கள் திரு அவையில் கட்டமைப்புப் பரிணாமங்களாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். திரு அவைச் சட்டங்கள் வலியுறுத்துகின்ற பங்கேற்பு அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கட்டாயமாக நிறுவப்பட வேண்டிய பங்கேற்பு அமைப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். மேலும், பொதுநிலையினருக்கான பங்கேற்புத் தளங்கள், அமைப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் இனம் காணப்பெற்று, அவர்களுடைய பங்கேற்பு மற்றும் பங்களிப்புத் திரு அவையில் மலர்கின்ற பொழுது, திரு அவை கூட்டொருங்கியக்கத்தின் பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டு மிளிரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
திருத்தந்தை 8-ஆம் போனிபாசு அவர்களால் கி.பி. 1300-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கத்தோலிக்க யூபிலி ஆண்டு, சிறைக்கைதிகளை விடுவிக்கவும், கடன்களைத் தள்ளுபடி செய்யவும், நல்லிணக்கத்தை மீட்டெடுக்கவும் 50 ஆண்டுகளுக்கொருமுறை கொண்டாடப்பட்ட யூத மதத்தைச் சேர்ந்த நம் சகோதர-சகோதரிகளின் தொன்மை மரபிலிருந்து பிறந்ததாகும்.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற
மையக் கருத்தில் டிசம்பர் 24, 2024 முதல் சனவரி 6, 2026 வரை கொண்டாடப்படும் இந்த யூபிலி ஆண்டின் வாயிலாகத் திருத்தந்தை பிரான்சிஸ் எதிர்காலத்தின் மீது நமக்குள்ள எதிர்நோக்கு, நம்பிக்கை இவற்றைப் புதுப்பிக்கவும், அறச்செயல்கள், ஒறுத்தல் முயற்சிகள், ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குபெறுதல் மற்றும் திருப்பயணங்கள் வழியாகக் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் தங்கள் நம்பிக்கை வாழ்வில் வேரூன்றித் திளைத்திட இந்த யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்கள் வழிவகுக்கும் என நம்புகிறார்.
நல்லெண்ணம்
கொண்ட மக்கள் யாவரும் எதிர்நோக்கு தரும் இறைவார்த்தையால் ஊட்டம் பெறவும், எதிர்நோக்கின் பயணத்தை நம்பிக்கையுடன் தொடரவும், நாம் வாழும் இக்காலச் சூழலில் நம்மைச் சுற்றி இருக்கும் எதிர்நோக்கு தரும் அறிகுறிகளை இனம் கண்டுகொண்டு, அவைகளினால் ஊக்கம் பெறவும், எதிர்நோக்கு தரும் சொற்களால் செயல்களால் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொள்ளவும், எதிர்நோக்கில் இன்னும் ஆழமாக வேரூன்றி வளர உதவும் செப
வழிபாடுகள், கலந்துரையாடல்கள், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் ஆகியவை வத்திக்கானில் இந்த யூபிலி ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ளன. இக்கருத்தரங்குகள் பெரும்பாலும் இத்தாலிய, ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் நடக்கவிருப்பதால், இக்கருத்தரங்குகளின் மையக்கருத்துகள் மற்றும் அவற்றின் நடைமுறை சாத்தியங்களை நம் தாய்த் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துத் தொகுத்து வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி.
அக்கருத்தரங்குகளுக்கெல்லாம்
தொடக்கமாக அமைந்தது சனவரி 24 முதல் 26 வரை நடந்த ‘தகவல் தொடர்பு உலகமும் யூபிலி ஆண்டும்’ என்ற கருத்தரங்கமாகும். இக்கருத்தரங்கில் பங்குபெற்று பயன்பெற உலகெங்குமுள்ள பத்திரிகையாளர்கள், ஊடகப்பணி செய்வோர், செய்தித்தாள் மேலாளர்கள், ஆசிரியர்கள், பத்திரிகை இயக்குநர் குழுவில் உள்ளோர், காணொளிப் படங்கள் தயாரிப்போர், வரை கலை (கிராபிஃக்) வடிவமைப்பாளர்கள், பதிப்புரிமையாளர்கள், மக்கள் தொடர்பு பணியாளர்கள், சமூக வலைதளங்களை மேலாண்மை செய்வோர், ஒலி-ஒளி தொழில்நுட்ப வல்லுநர்கள், அச்சுக்கலை வல்லுநர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பலர் அழைக்கப்பட்டனர்.
மேற்கூறிய
துறைகளில் பணிபுரியும் சகோதர- சகோதரிகள், தாங்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்பு கருவிகளை, தங்களின் தனித்திறமையை, படைப்பாற்றலை, பல்வேறு துன்பங்களினால் அலைக்கழிக்கப்படும் மனித உள்ளங்களுக்கு நம்பிக்கை, அன்பு குறிப்பாக எதிர்நோக்கு அளிக்கும் அருளடையாளக் கருவிகளாக எண்ணிச் செயல்பட இந்த யூபிலி ஆண்டு அறைகூவல் விடுக்கிறது. ‘தகவல்
தொடர்பு கருவிகள் நன்னெறி ஒழுக்க விதிமுறைகளுக்குள் பயன்படுத்தப்பட்டால், அவை மனித சமூகத்திற்கு ஆனந்தமளிக்கும் பொழுது போக்குக் கருவிகளாகவும், அறிவு புகட்டும் ஆசானாகவும் இருப்பதோடு, நற்செய்தி மதிப்பீடுகள் நிறைந்த இறையாட்சி அவர்களிடையே மலர உதவும் உன்னதக் கருவிகளாகவும் இருக்கும்’
என்ற இரண்டாம் வத்திக்கான் சங்கப் படிப்பினையை (சமூகத் தொடர்புக் கருவிகள் பற்றிய விதித் தொகுப்பு, பத்தி எண். 2, 4) இந்த யூபிலி ஆண்டிலே திரு அவை மீண்டும் வலியுறுத்த விழைகிறது.
வத்திக்கானில்
நடைபெற்ற ‘தகவல் தொடர்பு உலகமும் யூபிலி ஆண்டும்’ என்ற கருத்தரங்கில் பின்வரும் தலைப்புகளில் உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. தகவல் தொடர்பும் எதிர்நோக்கும், ஒரே பயணத்திற்காகத் தகவல் தொடர்பு பணி செய்வோரை ஒருங்கிணைத்தல், பத்திரிகைத் தொழிலை ஓர் இறைப்பணியாகக் கருதுதல், மக்களாட்சிக்குத் துணைபுரியும் பத்திரிகைப்பணி, எதிர்நோக்கையும் அமைதியையும் பகிர்தல் மற்றும் அமைதியின் தூதர்களாகக் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் செயல்படுதல்.
பல்வேறு
மக்களையும் கலாச்சாரங்களையும் உரையாட வைக்கும் உன்னத இடமாக,
நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்புக்குச் சாட்சியாக உலகின் மூலை முடுக்குகளில் இருக்கும் நிகழ்வுகளை, கதைகளை, வாழ்க்கைச் சரித்திரங்களை உலகமெங்கும் பரப்பிடும் கருவிகளாக, தூய்மையான இதயத்திலிருந்து உதித்து மற்றவரை உருகச் செய்யும் அருமருந்தாக, ஏழைகள்,
அகதிகள், அநியாயமாகத் துன்புறுவோரின் குரலாக, யாரையும் ஒதுக்காத, அமைதி மற்றும் உரையாடல்களுக்கு வழிவகுக்கும் நண்பராக, இரக்கம், மன்னிப்பு, ஒற்றுமை இவற்றை வளர்க்கும் தளங்களாகத் தகவல் தொடர்பு கருவிகள் மாற வேண்டுமெனவும் தகவல் தொடர்பு பணி செய்வோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நம்
தனிப்பட்ட வாழ்வில், குடும்ப மற்றும் தோழமை உறவுகளில், பணிபுரியும் இடங்களில் பல்வேறு தகவல் தொடர்பு கருவிகளை, செல்போன் செயலிகளைப் பயன்படுத்தும் நாம், அவற்றை நம்பிக்கை, அன்பு குறிப்பாக, எதிர்நோக்கு என்னும் இறையியல் அறங்களை நம்மிலும் பிறரிலும் வளர்க்கும் வகையில் அவற்றைப் பயன்படுத்துகின்றோமா? என்று சிந்தித்துச் செயல்படுவோம். நாம் பயன்படுத்த நம்மால் உருவாக்கப்பட்ட இந்தத் தகவல் தொடர்பு கருவிகள் மற்றும் சமூக வலை தளங்கள் நம்மை அடிமைப்படுத்தி விடாமல் பார்த்துக்கொள்வோம்.
உலகின்
எந்தப் பகுதியில் இருப்பவரோடும் நம்மைத் தொடர்புகொள்ளச் செய்யும் இச்சாதனங்கள், நம் இல்லத்தில் இருப்பவர்கள், உடன் பணி புரிவோர், மற்றும் நம்மைச் சுற்றி இருக்கும் நபர்களிடமிருந்து நம்மைப் பிரித்துவிடாமல் பார்த்துக் கொள்வோம். நம் சொல்லாலும் செயலாலும் அலைபேசியை, சமூக வலைதளங்களை எங்கே, எப்படி, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என நம் குடும்ப
உறுப்பினர்களுக்கும்,
நம்மைச் சுற்றி இருப்போருக்கும் கற்றுத்தருவோம். வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் மற்றும் பல சமூக வலைதளங்களில்
நாம் இடும் அன்றாட பதிப்புகளும் பகிர்வுகளும் எதிர்நோக்கை விதைப்பதாகவும் வளர்ப்பதாகவும் விளைவிப்பதாகவும் இருக்கட்டும். பிறந்திருக்கும் இந்த யூபிலி ஆண்டில் ஆண்டவர் நம் உள்ளங்களையும் இல்லங்களையும் எதிர்நோக்கால் நிரப்புவாராக!
(தந்தை அன்பு செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அகஸ்டின்: “தந்தையே, கிறிஸ்து தனக்குள் இருந்த கடவுளின் ஆற்றலை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றார் என்றும், அத்தகைய உயர்நிலை ஆற்றலே அவரது பிரசன்னமாக ஆலயத்தில் குடியிருக்கிறது என்றும் நான் அறிந்துகொண்டது இந்த வார ஞாயிறு திருப்பலியில் நான் புதிய கண்ணோட்டத்தோடு பங்கெடுக்க உதவியது. கடவுள் ஆலயத்தில் இருக்கிறார் என்பதை வெறுமனே நம்பிக்கை அளவில் மட்டும் அணுகாமல், அறிவுப்பூர்வமாக அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் கடந்த வார உரையாடல் அமைந்திருந்தது.”
கிறிஸ்டினா: “கிறிஸ்துவில் செயல்பட்ட ஆற்றலே அவர் செய்த பல்வேறு நற்செயல்களுக்கான - அதாவது குணமளித்தல், வல்லமையோடு போதித்தல், பாவங்களை மன்னித்தல் போன்றவற்றிற்கான - காரணமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அது மட்டுமல்லாமல், அவரது ஆற்றல் இன்றும் செயல்படுவதன் காரணமாக மேற்காணும் நற்செயல்பாடுகளை நாமும் இன்று பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்து கொண்டேன்.”
மார்த்தா: “பாதர், சென்ற வாரம் அகஸ்டினும் கிறிஸ்டினாவும் நான் எதுவும் சொல்லாமலேயே ஆலயத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.”
அன்பு செல்வன்: “தந்தையே! ஜேம்ஸ் ரெட்பீல்டு (James Redfield) என்பவர் எழுதிய ‘The Celestine Prophesy’ என்ற புத்தகம் என் நினைவிற்கு வருகிறது. அப்புத்தகத்தில் உலகின் எல்லா உயிரினங்கள் வழியாகவும் பிரபஞ்சத்தின் ஆற்றல் பாய்ந்துகொண்டே இருக்கிறது. இந்த ஆற்றலை விழிப்புணர்வோடு கையாள்கின்ற தன்மை மனிதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட மாபெரும் கொடை என்று சொல்கிறார்.”
அருள்பணி: “ஆம்! மனிதரைத் தவிர மற்ற அனைத்திலும் பிரசன்னமாயிருக்கின்ற ஆற்றல், ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட நிலையில் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளது. ஆனால், மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரம் எத்தகையது எனில், தங்களது உடல்நிலையையும் மனநிலையையும் சரியாக வைத்துக்கொள்வதன் மூலம், தங்களை ஆற்றலின் உச்சத்திற்கே எடுத்துச் செல்ல முடியும். கிறிஸ்துவைப் பொறுத்த அளவில் அவர் தம் ஆற்றலை அதன் உச்சத்திற்கே எடுத்துச் சென்றவர். அதிலும் சிறப்பாக உயிர்ப்பிற்குப் பின்பு ஆற்றலின் முழுவடிவமாகவே விளங்கினார். எனவேதான் மூடியிருந்த கதவுகளை அவரால் ஊடுருவ முடிந்தது. மேலும், இத்தகைய உயிர்த்த நிலையில் அவரின் ஆற்றலுக்கும் கடவுளின் ஆற்றலுக்கும் இடையே வேறுபாடு இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு இரண்டும் ஒத்த நிலைக்குச் சென்றன. கிறிஸ்து தமது ஆற்றல் நிலையில் கடவுளோடு ஒத்த நிலையில் இருக்கின்ற வேளையில், தனித்துவம் வாய்ந்தவராகவும் விளங்குகின்றார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.”
மார்த்தா: “இப்பொழுது நாம் பேசிக் கொண்டிருக்கும் ஆற்றலுக்கும், சில வாரங்களுக்கு முன்பாக நாம் பேசிய அருள்செல்வத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?”
அருள்பணி: “நல்லதொரு கேள்வி! நிச்சயமாகத் தொடர்பு உண்டு. அருள்செல்வம் என்பது நம் அகவாழ்வை உயர்நிலையில் வைத்திருக்க உதவும் ஒன்று என்று நாம் பார்த்தோம். ஒரு மனிதருக்குள் ஆற்றல் பெருகுகின்ற போது, அவருக்குள் இருக்கின்ற அகச்செல்வங்கள் உயிர்பெற்று எழ ஆரம்பிக்கின்றன. ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களாகிய நாம் பூமியில் படைக்கப்பட்டபோது, வாழ்வை நிறைவாக வாழ்வதற்குத் தேவையான அத்தனை அருள்வளங்களோடுதான் உருவாக்கப்பட்டோம். எனினும், பல வேளைகளில் நமக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் அருள்வளங்கள் வெளிப்படாமல் புதைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து விடுகின்றன. கடவுளின் ஆற்றலை நமக்குள் உள்வாங்குகின்றபோது, உறங்கிக் கொண்டிருக்கின்ற அருள்வளங்கள் உயிர்பெற ஆரம்பிக்கின்றன.”
அன்பு செல்வன்: “தந்தையே, என் மனத்திற்கு ஓர் உதாரணம் தென்படுகிறது. ஒரு நிலத்தில் விவசாயி பல்வேறு வகையான விதைகளை விட்டு அங்கிருந்து போய்விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அந்நிலத்திற்குத் தண்ணீர் கிடைக்கும் வரை, விதைகள் புதைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். தண்ணீர் பாய ஆரம்பிக்கின்றபோது, புதைக்கப்பட்ட விதைகள் புதுவாழ்வு பெற ஆரம்பிக்கின்றன.”
அருள்பணி: “சரியாகச் சொன்னீர்கள். பொருள் செல்வத்தைப் பொறுத்த மட்டிலும், திறமைகளைப் பொறுத்த மட்டிலும் மனிதர்களுக்கிடையே பிறப்பின்போது வேறுபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஞானம், தன்னம்பிக்கை, தன்னுணர்வு (self-awareness), அன்பு, மகிழ்ச்சி போன்ற அருள்வளங்கள், அதாவது அருள்செல்வங்கள் கடவுளால் எல்லா மனிதர்களுக்கும் அபரிவிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், ஆற்றல் நிலையில் நாம் பலவீனர்களாக இருப்பதன் காரணமாக மேற்காணும் வளங்கள், செடியாகாத விதைபோல, வெளிப்படாமலேயே மறைந்து விடுகின்றன.”
மார்த்தா: “எனவே, அருளடையாளக் கொண்டாட்டங்கள் வழியாக நாம் இறைவனின் அளப்பரிய ஆற்றலை நமதாக்கி, வாழ்வைச் சிறப்பாக வாழ்வதற்கான அருளை நாம் பெற்றுக்கொள்கிறோம். அப்படித்தானே பாதர்?”
அருள்பணி: “ஆம்! இதுவரை நாம் உளவியல் பின்னணியிலும், அறிவியல் பின்னணியிலும் பார்த்த கருத்துகளை இறையியல் பின்னணியில் உங்களுக்கு எடுத்துச்சொல்ல விரும்புகிறேன். அருளடையாளக் கொண்டாட்டங்களின் பய(ல)ன்களாகக் கீழ்கண்டவற்றைத் திரு அவை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.”
அ) “திருவருள்சாதனங்கள் கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டு, திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை புலன்களுக்கு எட்டாத ஆற்றல்மிக்க அருளின் அடையாளங்கள் ஆகும். இவற்றின் வழியாக, அருள்வாழ்வு நமக்கு வழங்கப்படுகிறது” (கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு, எண். 1116).
ஆ) கிறித்தவ மரபில் திருவருள்சாதனங்களைக் கடவுள் உலகினருக்கு தம்மை வெளிப்படுத்தும் தளமாகவும், மனிதர்களோடு தம் உறவை வைத்துக் கொள்ளும் தளமாகவும் பார்க்கின்ற தன்மை இருந்து வருகிறது. இப்படிப்பட்ட வெளிப்பாடு மற்றும் உறவின் வழியாக கடவுள் திரு அவையையும், இந்த உலகையும் புனிதப்படுத்துகின்றார், புதுப்பிக்கின்றார்.
இ) இயேசுவின் மானிட வாழ்க்கை மூலம் ஒட்டுமொத்த உலகமே, முக்கியமாக மானிட வாழ்வு, புதிய அர்த்தம் பெற்றது என்று சொன்னால் அது முற்றிலும் உண்மை. பணமோ, வசதியோ, பதவியோ மனிதத்தன்மைக்கான அளவுகோலாக இருக்க முடியாது; மாறாக, தனக்குள் உறையும் இறைவனைக் கண்டுகொள்வதே முழுமனித வாழ்வு என்ற புதிய நெறிமுறையை அவர் விட்டுச் சென்றார். அந்தப் புதிய நெறிமுறையை வாழ்வாக்குவதற்கான வழியும் வல்லமையும் திருவருள்சாதனங்கள் வழியாக நமக்குத் தரப்படுகின்றன.
ஈ) திருவருள்சாதனக் கொண்டாட்டத்தில் ஒரு நபர் ஈடுபாட்டோடும், அர்ப்பண உணர்வோடும் பங்கெடுக்கும்போது கீழ்க்கண்ட மூன்று மாற்றங்கள் அவரில் நடைபெற ஆரம்பிக்கின்றன: 1. மனமாற்றம், 2. வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான உள்ள உறுதி அதிகமாதல், 3. சமூகத்தோடு இயைந்து வாழுகின்ற தன்மையில் அதிக ஈடுபாடு.
உ) ஒவ்வொரு திருவருள்சாதனக் கொண்டாட்டத்தின் மூலம் கடவுளோடும் சக மனிதர்களோடும் உள்ள உறவில் நாம் மேலும் மேலும் வலுவடைகின்றோம்.”
கிறிஸ்டினா: “தந்தையே! நீங்கள் சொல்வதைக் கேட்கின்றபோது, ஒரு கத்தோலிக்கக் கிறித்தவராக இருப்பது எவ்வளவு பெரிய கொடை என்கின்ற உணர்வை என்னில் ஏற்படுத்துகிறது. இருப்பினும், எனக்குள் ஒரு கேள்வி எழும்பிக் கொண்டுதான் இருக்கின்றது. கடவுளின் அளப்பரிய ஆற்றல் ஆலயத்தில் இருந்தாலும், ஆலயத்திற்குச் செல்லும் பலர், அதைப் பெற்றுக்கொள்வது போல தெரியவில்லையே!”
அருள்பணி: “கொடைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக அவை பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. அது குறித்து அடுத்த வாரம் நாம் விவாதிக்கலாம்.
(தொடரும்)