news
சிறப்புக்கட்டுரை
அன்னை எலிஸ்வா: ஆழ்மனச் செபத்தின் அருள்கனி!

ஆழ்மனச் செப அனுபவம் என்பது ஆண்டவருக்கும் தூய ஆவியாருக்கும் முழுமையாக, திறந்த மனத்துடன் இருத்தலாகும். வாழ்வின் ஒவ்வோர் அனுபவத்திலும் நிகழ்விலும் இறைவனின் உடனிருப்பை உணர்தலும், அனைத்திலும் இறைவனைக் காணும் உளக்கண்களைப் பெறுதலும் இதன் மையப்பொருளாகும். இவ்வாறு இறைவனுக்குத் தொடர்ந்து திறந்த மனநிலையில் வாழ்ந்ததுதான் அன்னை எலிஸ்வாவின் ஆளுமையின் மிக முக்கியமான பண்பாக விளங்கியது.

திருமணம்தாய்மை, விதவையாதல் என வாழ்வில் நிகழ்ந்த எல்லா நிலைகளிலும் அந்த மனநிலையை அவர் கலையாமல் காத்தார். ஒரு மனைவி, தாய் மற்றும் விதவை என்ற நிலைகளுக்குரிய அனைத்துக் கடமைகளையும் கடுகளவும் பிறழாது நிறைவேற்றினார். அதேசமயம், இறைப்பிரசன்னத்தை எப்போதும் உணரவும், தன் இறையனுபவத்தை மேலும் ஆழப்படுத்தவும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் அவர் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். தன் வாழ்வில் ஏதோ ஓர் உயர்ந்த, அர்த்தமுள்ள செயலைச் செய்யவேண்டும் என்ற உள் அழுத்தம் எப்போதும் அவரது உள்ளத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.

நாம் நமது அறிவுக்கும் திறனுக்கும் ஏற்றாற்போல் எல்லாச் செயல்களையும் செய்து வந்தாலும், இன்னும் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதை உணர்த்தும் ஒரு வலி என் உள்ளத்தில் இருக்கிறதுஎன்று அவர் தன் சகோதரர் அருள்திரு. லூயிஸ் OCD அவர்களிடம் கூறிய வார்த்தைகள் இதற்குச் சான்றாகின்றன.

கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள் (உரோ 8:14) என்ற இறைவாக்கிற்கேற்ப, அன்னை எலிஸ்வா தனிப்பட்ட முறையில் இறைத்தூண்டுதலுக்குத் திறந்த மனத்துடன் செவிமடுத்தார். ஆழ்ந்த நம்பிக்கை, ஆழமான தாழ்ச்சி, பற்றற்ற நிலை, தைரியமான மனப்பான்மை ஆகிய நற்குணங்கள் அவரை ஒரு வித்தியாசமான, ஒளிரும் பெண்மணியாக மாற்றின.

தாழ்ச்சியில் தூய ஆவியாருக்கு முழுமையாகப் பணிந்திருந்ததால், தன் உள்ளத்தில் உண்மை மற்றும் நேர்மையின் மூல காரணத்தைத் தேடும் ஆன்மிகப் பயணத்தில் அவர் ஈடுபட்டார். கார்மல் ஆன்மிகத்தின் மையக் கருப்பொருளான ஆழ்மன செபம் அன்னை எலிஸ்வாவின் வாழ்வில் இளம் வயதிலிருந்தே இடம்பிடித்திருந்தது. தொல்லைகளுக்குத் துணை போகும் தேவையற்ற பேச்சுகளை அவர் தயக்கமின்றித் தவிர்த்து வந்தார். உள்மன அமைதியும், ஒப்பற்ற தனிமையும் ஆன்மிக உயர்வுக்கு அழைத்துச் செல்லும் சிறந்த வழி என அன்னை உறுதியாக நம்பினார்.

என் முன் பழுதின்றி உன்னைக் காத்துக்கொள்வேன்; உன்னைப் பெரும் குலமாகப் பெருகச் செய்வேன்என்ற இறைவாக்குறுதிக்கேற்ப மண்ணின் ஆசைகளை மனத்திலிருந்து நீக்கி, விண்ணின் ஆசையில் விருப்பம் கொண்டு வாழ்தலே ஆழ்மன செபத்தின் அடித்தளம் என அவர் போதித்தார்.

இறைச் சேவைக்கு ஆன்மாவை முழுமையாக அர்ப்பணித்தால், தேவையான ஆறுதல்கள் அனைத்தும் அவரிடமிருந்தே கிடைக்கும் என்ற அசையா நம்பிக்கை அன்னையிடம் இருந்தது.

ஆகவே, செபத்தில் நிறைவும், பணியில் பணிவும், உதட்டில் உண்மையும், இதயத்தில் குழந்தைத் தன்மையும், நல்லதையே பேசும் மனநிலையும் நம்மில் இருந்தால், நாம் உண்மையில் அன்னை எலிஸ்வாவின் அன்புக் குழந்தைகளாக வாழ்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
அன்னை எலிஸ்வா கேரளாவின் முதல் பெண் துறவி!

துன்ப துயரங்கள் இல்லாத கிறித்தவ வாழ்வைத் தேடுகிறது இன்றைய உலகம். இத்தகையோருக்குச் சவாலாக, தூய உதாரணமாக கேரளாவில் மலர்ந்து நறுமணம் வீசும் துறவியாக வலம் வந்து, எம் கார்மல் தோட்டத்தை அலங்கரித்தவர்தான் எம் சபை நிறுவுநர் அன்னை எலிஸ்வா.

கேரள மண்ணில் மலர்ந்த தூய மலர்

ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று தளிர்விடும். அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும் (எசாயா 11:1).

கேரள மாநிலத்தில் ஓச்சன்துருத்துவிலுள்ள குருஸ்மிலாகிரிஸ் பங்கில் தொம்மன் மற்றும் தாண்டா என்பவர்களுக்கு 15.10.1831-இல் பக்தியுள்ள குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர்தான் அன்னை எலிஸ்வா. ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்என்பதற்கிணங்க சிறுவயதிலேயே பக்தி முயற்சிகள், ஏழை எளியோருக்குச் செய்யும் சேவை ஆகியவற்றில் மகிழ்ச்சி கண்டார்.

துறவறப் பயணத்திற்குள் புனித நிலை

சிறுபிள்ளைகளுக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கேரளாவில் இருந்த சூழ்நிலையில் பிறரன்பு, தன்னடக்கம், இரக்கம் ஆகிய போற்றுதற்குரிய குணங்களைப் பெற்றிருந்த இவர் ஏழைகளில் இயேசுவைக் கண்டு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர்பெற்றோரின் விருப்பத்தால் இல்லற வாழ்வில் இணைந்து அழகான பெண் குழந்தையை ஆண்டவர் வழங்க தன்னுடைய வாழ்க்கைத் துணையின் பிரிவால் துறவறப் பயணம் மேற்கொண்டார். செபம், அமைதி மற்றும் தனிமையில்நிலையிலா இன்பம் கண்டேன், நிலத்திடை எதுவும் வேண்டேன், நலமெல்லாம் நல்கும் இயேசு நாதனுக்குரிமை நானே, என்பது இத்துறவியின் அசையாத அன்பு நிலை.

எதிர்கால நலனைக் கொண்டு துறவற வாழ்வு

துறவற வாழ்வு என்பது மகிழ்ச்சியின் பயணம் அல்ல; 19-ஆம் நூற்றாண்டில் கேரளத் திரு அவையின் அவசரத் தேவையாக இருந்த பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மனிதநேயம் மற்றும் பற்றின்மை ஆகியவற்றைக் கண்முன் கொண்டு எல்லாவற்றையும் கடவுளுக்காக விட்டுவிட்டு, பல மடங்கு கடவுளிடமிருந்து பெற்று கடவுளின் பராமரிப்பினால் TOCD இலத்தீன் கிளையின் வளர்ச்சியை, தூய தெரசாவின் கார்மல் சபை (CTC) என்ற பெயரில் தொடர்கிறது.

அன்று கேரள மண்ணில் மலர்ந்து மணம் வீசிய துறவியின் புனித வாழ்வு எம் CTC தெரேசாவின் கார்மல் சபை துறவிகளுக்குப் பாதை காட்டும் கலங்கரை விளக்கு என்பது உண்மை. அதிலும், எம் விமலா மறைமாநிலத் துறவிகளுக்கு இன்னும் அதிக நம்பிக்கையை ஊட்டுகிறது (மத் 7:24). நல்ல சமாரியனைப் போல் இயேசுவைப் பின்பற்ற ஆற்றல் அளிக்கிறது. இம்மனநிலையில் இயேசுவைப் பின்பற்ற விரைந்து வருவோம், நம் தமிழ் மண்ணில் புனிதம் மலரட்டும்!

news
சிறப்புக்கட்டுரை
அன்னை எலிஸ்வாவின் தனிச்சிறப்புகள்

அன்பென்னும் மழையில் மலர்ந்தவர்!

கருணை மணம் வீசும் தாய்மையின் இசை அவர்!

பெண்களின் வாழ்வில் ஒளியாய் நின்று,

வீழ்ந்த மனங்களுக்கு விடியலைத் தந்து,

மௌன சேவையில் மகத்துவம் காட்டி,

சுயநலமற்ற சேவையை அவள் சுவாசமாக,

வார்த்தையினால் அல்ல; தன் வாழ்க்கையினால்

பிரதிபலித்தவர்தான் நம் அன்னை எலிஸ்வா!

சிரிப்பில் சாந்தம், செயலில் தியாகம்,

ஒவ்வோர் அடியிலும் மனிதநேய இராகத்தை

இசைத்த அன்னையின் தனிச்சிறப்புகள் இதோ...

செப வாழ்வு: செபம் நம் அன்னையின் வாழ்வின் உயிர்மூச்சாக இருந்தது. துன்பங்கள் அன்னையை விடாது துரத்திய தருணத்திலும், கடினமான சூழல்கள் அன்னையைச் சூழ்ந்திட்ட வேளையிலும் அன்னை எலிஸ்வா தன் சொந்த அறிவில் நாட்டம் கொள்ளவில்லை; மாறாக, சிறு குழந்தைபோல் இறைவன் முன் தவழ்ந்து, செபத்தின் மூலம் இறைவனிடமிருந்து சக்தியையும் மன வலிமையையும் பெற்று, சோதனைகளைச் சாதனைகளாகவும், தடைக்கற்களைப் படிக்கற்களாகவும் மாற்றினார்.

தாழ்ச்சி: தாழ்ச்சியே அன்னை எலிஸ்வாவின் வாழ்வில் முக்கிய எழுச்சி. சபையின் தோற்றுவிப்பாளர், பல உயர்ந்த பணிகள் மற்றும் பல சவால்கள் இருந்த பொழுதிலும், அவர் எப்போதும் தன்னைச் சிறியவர் எனக் கருதி, பிறரின் தேவைகளை முதன்மையாகக் கருதினார். இவ்வுலகப் புகழும் பெருமையும் வெறும் மாயையே என்பதை இறைஞானத்தால் அன்றே உணர்ந்து, மறுவுலக வாழ்வு ஒன்றே தனது இலக்கு என்பதில் கவனத்தைச் செலுத்தி, தாழ்மையான உள்ளத்தோடு வாழ்ந்தார்.

அன்பும் கருணையும்: குழந்தைப் பருவம் முதல் பெறுவதில் அல்ல, கொடுப்பதில் இன்பம் கண்டவர் அன்னை எலிஸ்வா. ஏழைகளுக்கு உணவு மற்றும் உடை வழங்குதல், நோயாளிகளை அரவணைத்துச் சேவை செய்தல், ஒதுக்கப்பட்டவர்களிடம் நல்லன்புடன் உறவாடுதல் எனத் தனது சக அருள்சகோதரிகளின் நலனில் முழுமையான அக்கறை காட்டினார். குறிப்பாக, பெண் கல்விக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் எடுத்த பல முயற்சிகள். இவை யாவும் அன்னையின் அன்பினையும் கருணையையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

மனவுறுதி மற்றும் பொறுமை: சவால்களும் போராட்டங்களும் சூறாவளியாய்த் தன்னைப் புரட்டிப்போட்ட நேரத்திலும் அன்னை எந்தவொரு பயமும் படபடப்பும் இன்றி, மனம் தளராமல் பொறுமையுடன் அமைதியாகச் செயல்பட்டார். புரியாத சூழ்நிலைகளிலும் எதிர்ப்புகளிலும் குறிப்பாக, காலத்தின் சூழ்நிலையால் தனது சொந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நேரத்திலும் அவர் உறுதியுடன் இந்நாள்வரை வழிநடத்திய இறைவன் இனிவரும் நாள்களிலும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் வீறுநடை கொண்டு பயணித்து, பலருக்கு வாழும் சாட்சியாகத் திகழ்ந்தார்.

சமூகச் சேவை: ஏழைகளிடம் அன்பு, நோயாளிகளிடம்  நேசம், புறக்கணிக்கப்பட்டவர்களிடம் பாசம், பெண் கல்வி இவை யாவும் இவரது அன்பின் ஆழமான வெளிப்பாடாக இருந்தது. ‘அடுப்பூதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு?’ என்ற காலகட்டத்தில் பெண்களுக்குக் கல்வி வழங்கியது இவரது சமூகச் சேவையின் உச்சக்கட்டம். ஆம், கேரளாவில் முதன் முதலாகப் பெண்களுக்கென்று தொடங்கப்பட்ட துறவற சபையின் முதல் தோற்றுவிப்பாளர் அன்னை எலிஸ்வா. மேலும், அன்னை எலிசுவா கேரளத் திரு அவை வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறார். இவரது வாழ்க்கை இன்றும் கிறித்தவர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

இறைவனிடம் அன்னை எலிஸ்வா வழியாக மன்றாட்டுகளை எழுப்பிய பலர் மகிழ்வுடன் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதை எண்ணி மகிழ்ந்து சாட்சி சொல்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவேதான் நம் தாயாம் திரு அவை நம் அன்னை எலிஸ்வாவைஅருளாளர்நிலைக்கு உயர்த்திப் பெருமைப்படுத்தியுள்ளது.  

news
சிறப்புக்கட்டுரை
கார்மலின் தனிச்சிறப்பு

கார்மல் மலைத்தோட்டம்

கார்மல் என்பது திருவிவிலியக் கூற்றுப்படி எலியா இறைவாக்கினர் இறைவனைச் சந்தித்த புனிதமிகு சிறப்புமிக்க இடமாகும். இறைவனின் திராட்சைத் தோட்டம் என்றும், கார்மல் அன்னையின் பாதுகாப்பை உணர்த்தும் இடம் என்றும் கூறப்படுகிறது, வனவாசம் செய்தவர்கள் வணங்கி வாழ்ந்த இடம் என்றும், உண்மைக் கடவுளை மக்களுக்கு உணர்த்திய உன்னதமான உயர்ந்த இடம் என்றும், இறையன்பில் பற்றி எரிந்து, இறைவனுக்காகக் காத்திருந்த புனித எலியா இறைவனைச் சந்தித்த இடம் என்றும் கூறப்படுகிறது.

ஆன்மிகச் சிறப்பு

12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுகளில் இறையன்பால் பற்றியெரிந்து மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த துறவிகள் ஒன்றுகூடி தியானம், இறைவேண்டல், தனிமையில் இறையன்பில் இணைந்திருத்தல், ஆழ்ந்த அமைதியான சூழலில் இறைவனோடு  இணைந்திருத்தல், இவற்றிற்காகக் கார்மல் அன்னையின் பாதுகாப்பில் குழுவாக இணைந்து வாழ்ந்த சிறப்புமிக்க ஆன்மிகத் தொட்டிலே கார்மல்!

உத்தரியம்

கார்மல் சபையினர்  துன்பப்படுத்தப்பட்டபோது புனித சைமன் ஸ்டாக்  என்பவர் பாதுகாப்பு வேண்டி அன்னையை அணுகி வந்தபோது 1251, ஜூலை 16 அன்று உத்தரியத்தை அளித்து வாக்குறுதி அளித்தார் அன்னை மரியா.

உத்தரியத்தின் சிறப்பம்சம்

இந்த உத்தரியத்தை அணிபவர் எவரும் அழியா நெருப்பில் இருந்து காக்கப்படுவர்.

அகால மரணம் அடையமாட்டார்.

பேயின் பிடியும் பாவச் சூழலும் அகலும்.

எந்த ஆபத்திலும் பாதுகாப்புக் கேடயமாக அமையும்.

இறைப்பக்தியில் வாழ வழிகாட்டும்.

இறுதியில் அவர்கள் நல்ல மரணம் அடைவர் என்பது உத்தரியம் அணிவோருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி.

கார்மல் அன்னை

கார்மல் மலையில் காட்சி தந்த அன்னையின் பெயரில் விளங்கும் துறவற சபைகள் அன்னையை இராணியாக, பாதுகாப்புப் பெட்டகமாக, இறையன்பிலும் செப-தவ வாழ்விலும் வழிகாட்டி வழிநடத்தும் அன்னையாகக் கொண்டுள்ளனர். புண்ணியங்களின் சிகரமாம் கார்மலில் தோன்றிய அன்னையின் பரிந்துரையால் உண்மையான கிறித்தவ வாழ்வும், பாவங்களுக்கு மன்னிப்பும், விண்ணகப் பேரின்பமும் அளிக்கவல்ல துன்பங்களில் அரவணைக்கும் அன்னை! தூயோராய் வாழ வழிநடத்தும் அன்னை!

கார்மல் சபையின் தனிச்சிறப்பு

ஆழ்நிலை தியானம், தவம், செபம் இவற்றிற்கு முதலிடமும், அதிலிருந்து உருவாகும் இறையன்பால் உந்தப்பட்டு பிறரன்புப் பணிக்குத் தங்களை இட்டுச் செல்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதும் இன்றுவரை மக்களின்  நம்பிக்கை. இதுவே கார்மலின்  தனிச்சிறப்புநாமும் இவ்வன்னையின் பாதுகாப்பில், அரவணைப்பில், வழிகாட்டலில், வழிநடத்துதலில் நம்மையும் இணைப்போம். அன்னையின் அருள்வரங்களால் நம்மை நிரப்புவோம்.

news
சிறப்புக்கட்டுரை
கிறிஸ்துமீது பற்று! மனிதநேயத்துடனான இரக்கம்! (அருளாளர் அன்னை எலிஸ்வாவின் வாழ்க்கைக் குறிப்பு)

அன்னை எலிஸ்வா அவர்கள், கேரளாவில் பெண்களுக்கான துறவற வாழ்வின் முன்னோடியாகவும், ‘பாதுகையற்ற கார்மல் சபையின் மூன்றாம் நிலை (TOCD) சபையின் நிறுவுநருமாவார். கேரளத் திரு அவை வரலாற்றில் அவர் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். நற்செய்தி விழுமியங்களால் ஈர்க்கப்பட்ட கிறித்தவக் கல்வியையும், முழுமையான ஆளுமை உருவாக்கத்தையும் பெண்களுக்கு வழங்கும் நோக்கில், அவர் கேரளாவின் முதல் பள்ளிக்கூடம், முதல் கன்னியர் இல்லம் மற்றும் பெண்களுக்கான முதல் ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றை நிறுவினார்.

தொம்மன் மற்றும் தாண்டா ஆகியோரின் எட்டுப் பிள்ளைகளில் மூத்தவராக 1831, அக்டோபர் 15 அன்று கேரளாவின் வராப்பொலி மறைமாவட்டத்திலுள்ள ஒச்சந்துருத்து குரூஸ் மிலாக்ரஸ் பங்கில், வைப்பிசேரி எனும் உயர்குடியில் எலிஸ்வா பிறந்தார்.

தீண்டாமையும், சாதிப்பாகுபாடும் நிறைந்திருந்த 19-ஆம் நூற்றாண்டுச் சூழலில், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது அவர் காட்டிய இரக்கமும் அன்பும் அனைவராலும் வியந்து பாராட்டப்பட்டது. 1847-இல் கூனமாவு பங்கைச் சார்ந்த வதருவாகயில் என்பவரைத் திருமணம் செய்த எலிஸ்வாவுக்கு, 1850-இல் அன்னா என்ற மகள் பிறந்தார். 1851-இல் கைம்பெண்ணான அவர், 1852 முதல் 1862 வரை செபத்திலும், துறவற வாழ்வின் ஆழத்தைப் புரிந்துகொள்வதிலும் தன்னை அர்ப்பணித்து ஒரு தவ வாழ்வை மேற்கொண்டார்.

1862-இல் செபத்தில் இருந்தபோது இறைவனின் அழைப்பை உணர்ந்த அவர், அதைத் தந்தை லியோபோல்டு பெக்காரோ OCD அவர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவரிடம் கார்மல் சபைக்கான தனிவரத்தை அடையாளம் கண்ட தந்தை லியோபோல்டு, அவருக்கு ஆன்மிக வழி காட்டினார். எலிஸ்வாவின் மகள் அன்னாவும் மற்றும் சகோதரி தெரேசியாவும் அவரைப் பின்பற்ற விரும்பினர். இது குறித்துப் பேராயர் பெர்னார்டின் பாச்சினெல்லி OCD அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர் ஒரு புதிய சபையைத் தொடங்க சபைத் தலைவரின் (Superior General) அனுமதி பெற்றார்.

1866, பிப்ரவரி 12 அன்று பெண்களுக்கானபாதுகை அணியா கார்மல் சபையின் மூன்றாம் நிலை (TOCD) சபையைத் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் பேராயர் கையெழுத்திட்டு எலிஸ்வா, அன்னா மற்றும் தெரேசியா ஆகியோரை இச்சபையின் தொடக்க உறுப்பினர்களாக அறிவித்தார்.

அன்னை எலிஸ்வா தொடங்கிய இச்சபையின் தனிவரமானது, கடவுளுடனான ஆழமான தியான ஒன்றிப்பையும், திரு அவைக்கு ஆற்றும் பிறரன்பு மற்றும் சமூகப் பணி வாழ்வுமாகும். மேலும், ‘கிறிஸ்துமீது பற்று, மனித நேயத்துடனான இரக்கம்என்பதே அவரது வாழ்வின் தாரக மந்திரமாக இருந்தது.

1890-இல் பெண்களுக்கான TOCD சபையானது இலத்தீன் மற்றும் சீரோ-மலபார் வழிபாட்டு முறைகளின் அடிப்படையில்தெரேசியன் கார்மல் சபை (CTC-இலத்தீன் வழிபாட்டு முறை) மற்றும்கார்மல் அன்னையின் சபை (CMC சீரோ - மலபார் வழிபாட்டு மறை) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

கேரளாவின் முதல் பெண் துறவியும், பெண்களுக்கான முதல் சுதேச (Indegenous) துறவற சபையின் நிறுவுநருமான அன்னை எலிஸ்வா, 1913, ஜூலை 18, வெள்ளிக்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் தனது 82-வது வயதில் அன்னை மரியாவின் திருப்பெயரை உச்சரித்தபடியே இறைவனடி சேர்ந்தார்.

அன்னை எலிஸ்வா அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, அவர் தனது கடைசி 23 ஆண்டுகளைக் கழித்த வராப்பொலி தூய யோசேப்பு கன்னியர் இல்ல வளாகத்தில் உள்ளஸ்மிருதி மந்திர் (நினைவு இல்லம்) எனும் கட்டடத்தில் அமைந்துள்ளது.

இன்று கேரளா முழுவதும் எண்ணற்ற கன்னியர் இல்லங்களும், ஆயிரக்கணக்கான துறவற சகோதரிகளும் உருவாக அன்னையின் முதல் முயற்சியே காரணமாக அமைந்தது. 1971 வரை மறைமாவட்டப் பேராயர் கண்காணிப்பின் கீழ் இருந்த இச்சபை, திருத்தந்தையின் அங்கீகாரம் (Pontifical Status) பெற்றது.

2005, ஏப்ரல் 12 அன்று அன்னை எலிஸ்வாவின் பரிந்துரையால் நடந்த புதுமைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் ஒப்புதல் அளித்தார். அதனைத் தொடர்ந்து 2025, நவம்பர் 8 அன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் அவர்அருளாளர் (Blessedநிலைக்கு உயர்த்தப்பட்டார்

அவரது மறைவிற்குப் பிறகு, புனித வாழ்வு குறித்த அவரது நற்பெயர் வராப்பொலி பகுதியில் தொடங்கி விரைவாக எங்கும் பரவியது. அவரது வலிமையான பரிந்துரையால் சாத்தியமற்ற பல காரியங்கள் நிறைவேறியுள்ளன; சிக்கலான பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, குழந்தை இல்லாத தம்பதியர் பலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. இத்தகைய ஏராளமான நிகழ்வுகள் அங்கே பதிவாகியுள்ளனமேலும், கடன் தொல்லைகள் தீர, நல்ல வேலை கிடைக்க, பிரிந்த உறவுகள் ஒன்றுசேர, தீராத நோய்கள் தீர... எனப் பலரின் வேண்டுதல்கள் கேட்கப்பட்டு, அன்னையின் பரிந்துரையால் குறை நீங்கப் பெற்று வருகின்றனர். அன்னையின் பரிந்துரையால் நாமும் நமது துன்பங்களிலிருந்து வெளி வர நம்பிக்கையோடு செபிப்போம்.

news
சிறப்புக்கட்டுரை
“கடவுளின் விருப்பமே முதன்மை!”

புனித தெரேசியன் கார்மல் சபையின் நிறுவுநர் அன்னை எலிஸ்வா அவர்களின் அருளாளர் பட்ட நிகழ்விற்காக, CTC சபையின் தலைமை அன்னை மதர் ஷஹிலா CTC அவர்களுடன்நம் வாழ்வுகண்ட நேர்காணல்:

தலைமை அன்னை அவர்களே! தங்களுடைய சபையின் நிறுவுநர் அன்னை எலிஸ்வா அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்வு பெரும் மகிழ்வுக்குரியது. இந்தச் சிறப்புத் தருணத்திலேநம் வாழ்வுவாசகர்கள் சார்பாக, ஆசிரியர் குழு சார்பாக உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தங்களுடைய சபையைப் பற்றி, அருளாளர் அன்னை எலிஸ்வா அவர்களைப் பற்றி, அவருடைய கனவைப் பற்றி ஒருசில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?

அருளாளர் அன்னை எலிஸ்வா கேரளத் திரு அவை வரலாற்றில் தூய ஆவியால் வழிநடத்தப்பட்ட ஓர் அரிய ஆன்மிகத் தாய். மனித ஆதரவுகளோ, திட்டமிட்ட எதிர்கால வரைபடங்களோ இல்லாமல் முழுமையாக இறைவனின் சித்தத்திற்குத் தன்னை ஒப்படைத்த ஒரு பெண்தான் இவர். விதவையான இவரது வாழ்க்கையில், வேதனையிலும் தனிமையிலும் இவர் கண்ட கனவுகளும் பெற்ற அழைப்புகளும் இன்று எங்களுடைய கார்மல் சபை CTC என்ற பெரும் ஆன்மிக இயக்கமாக மலர்ந்துள்ளது.

அன்னை எலிஸ்வாவின் வாழ்க்கையின் மையம் தூய ஆவியானவரின் வழிநடத்துதல். 14 வருடங்கள் எந்த மனிதத் தூண்டுதலோ, உதவியோ இல்லாமல் தூய ஆவியானவரின் தூண்டுதலால் கடவுளோடு மட்டும் உறவாடியவர்தான் இந்த விதவைப் பெண். இவர் தொடங்கிய TOCDஇன்று CTC சபை, கார்மேல் ஆன்மிகத்தின் ஆழத்திலிருந்து பிறந்தது. அன்னை எலிஸ்வா கண்ட கனவு ஒரு குறுகிய கால இலக்காக இல்லை; அது எதிர்காலத் தலைமுறைகளை நோக்கிய கனவுஇறைவன் மட்டுமே என் வழிகாட்டிஎன்ற உறுதியான நம்பிக்கை. இவர் கண்ட கனவுகள் இன்று ஒரு வாழும் உண்மையாக மாறி, ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டு மாற்றி வருகிறது.”

அன்னை அருளாளர் எலிஸ்வா அவர்களுடைய  கனவை நனவாக்கும் வண்ணம் இந்நாளில் அருள்சகோதரிகள் தங்கள் சபையில் மேற்கொள்ளும் பணிகளை, அந்தக் கனவு நனவாகிய தருணங்களை, இன்னும் இறையாட்சிப் பணியில் ஈடுபாடு கொண்டிருப்பதைப் பற்றி சற்று விளக்கமாகக் கூறுங்களேன்?

எங்கள் சகோதரிகள் பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

கல்விப் பணியில்: குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பின்தங்கியவர்களுக்குத் தரமான கல்வி வழங்கி, அறிவின் ஒளியைப் பரப்புகின்றனர்.

சமூக சேவையில்: ஏழைகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக அன்பின் கரங்களாக நிற்கிறார்கள். நோயாளிகளுக்குக் கருணையுடனும் மனிதநேயத்துடனும் சேவை செய்து, கிறிஸ்துவின் குணமளிக்கும் அன்பை வெளிப்படுத்துகின்றனர். செபம், வழிகாட்டல், ஆன்மிக ஆலோசனை மூலம் மக்களை இறைவனுடன் நெருங்கச் செய்கிறார்கள். மத, சமூக வேறுபாடுகளைத் தாண்டி, சகோதரத்துவமும் சமாதானமும் நிலவச் செய்கிறார்கள்.”

அண்மையிலே நாம் மாபெரும் யூபிலி 2025 நிறைவு செய்திருக்கின்றோம். நம்பிக்கையின் திருப்பயணிகளாக ஒன்று கூடியிருக்கின்றோம். இப்போது நாம் ஒருங்கிணைந்த திரு அவையாகப் பயணிக்கக் கூட்டொருங்கியக்கத் திரு அவையாக இணைந்து பணியாற்றவேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கின்றோம். இவ்வேளையில், தங்கள் சபையோடு பொதுநிலையினர் இணைந்து ஈடுபடக்கூடிய சிறப்புத் தருணங்களைப் பற்றிச் சற்றுத் தெளிவாகக் கூறுங்களேன்?

இந்த யூபிலி ஆண்டு 2025 நிறைவு காலத்தில் நாம் அனைவரும் நம்பிக்கையின் யாத்திரையாக ஒன்றிணைந்துள்ளோம். இது வெறும் ஒரு விழா அல்ல; மாறாக, கடவுள் தமது மக்களை எவ்வாறு ஒன்றாக நடக்க அழைக்கிறார் என்பதைச் சிந்தித்து, அதை வாழ்வாக்கும் ஓர்  ஆன்மிகப் பயணம் ஆகும். எங்கள் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சமூகப் பணிகள் அனைத்தும் கூட்டொருங்கியக்க நிலையில் செயல்படுகின்றன. ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவரும் பங்கேற்பாளர்களாக, கருத்து பகிர்வு, ஆலோசனை, பொறுப்பு பகிர்வு, மதம், மொழி, கலாச்சாரம் கடந்த ஒற்றுமையுடன் பணியாற்றுகின்றனர்.

இன்றைய உலகிற்கு எங்கள் துறவற வாழ்வு வழங்கும் முக்கியமான சாட்சி: கேட்பதன் கலாச்சாரம், உரையாடலின் ஆன்மிகம், ஒற்றுமையில் வேறுபாட்டை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு! பலவீனர்களுடன் துணை நிற்கும் மனம் கொண்டு எங்கள் சகோதரிகள் பணியாற்றுகின்றனர்.”

அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாள்களோ குறைவாக இருக்கிறார்கள்என்னும் இறைவாக்கிற்கேற்ப இறையழைத்தலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இறைஅழைத்தலைத் தூண்டுவதற்காக அல்லது அவர்களை உருவாக்குவதற்காக நாம் என்ன முயற்சிகளை முன்னெடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

துறவற அழைப்பு என்பது மனிதன் தேர்ந்தெடுக்கும் ஒரு தொழில் அல்ல; கடவுள் தனிப்பட்ட முறையில் வழங்கும் ஓர் அழைப்பு; ஓர் அருள். அது ஒருவரின் திறமைகளையும் அறிவையும்விட கடவுளின் விருப்பத்திற்கான திறந்த மனம், சேவைக்கான மனநிலையே முக்கியம்.

அன்னை எலிஸ்வா, தன் மகள் அன்னாவின் வாழ்வில் துறவற அழைப்பை வளர்த்த விதம், இன்று நமக்கு ஒரு வலுவான முன்மாதிரி. அவர் கட்டாயப்படுத்தவில்லை; கடவுளின் அழைப்பை அன்னா தாமே உணர இடம் கொடுத்தார். செபத்தின் சூழலை உருவாக்கினார். அமைதி, இறைநம்பிக்கை, தியாகம் நிறைந்த குடும்பச் சூழல் போன்றவற்றை வார்த்தைகளால் அல்ல, வாழ்க்கையால் கற்றுக்கொடுத்தார்.

துன்பத்தில் பொறுமை, துறவற வாழ்க்கையில் நம்பிக்கை, கடவுள்மீது முழு நம்பிக்கை. தாயாக இருந்தாலும், ‘கடவுளின் விருப்பமே முதன்மைஎன்ற மனப்பாங்கை அன்னாவுக்குள் விதைத்தார். இதனால் அன்னாவின் துறவற அழைப்பு சுதந்திரமான அர்ப்பணிப்பாக வளர்ந்தது.”

தங்களுடைய சபையின் பாதுகாவலரான புனித குழந்தை இயேசுவின் தெரசாள் வழங்கிய எளிய வழி என்னும் ஆன்மிகமே இவர்களின் வழிநடத்துதல் ஆகும். பரந்து விரிந்த கலாச்சாரச் சீர்கேடுகளில் சிக்கிக் கொண்டிருக்கின்ற இளையோருக்கு எவ்வளவு அவசியமாக இருக்கிறது என்பதைப் பற்றிக் கூறுங்களேன்?

சிறு வழி இன்றைய காலத்திற்கான ஆன்மிக மருந்து. ‘Little Flowerஎன்பது சிதறும் கலாச்சாரத்தில்சிறு வழிதரும் சிகிச்சை, உடைந்த உறவுகளுக்கான சிகிச்சை. இந்தக் காலத்திற்குத் தேவைப்படுவது உண்மையான அன்பு, நம்பிக்கையுள்ள இதயம், உள்ளார்ந்த நம்பிக்கை... இவையெல்லாம் தருவதுசிறு வழிஆன்மிகம். இன்றைய உலகிற்கான கார்மேல் செய்தி, எங்கள் கார்மேல் ஆன்மிகத்தில் Little Flower கூறும் செய்தி: இந்த உடைந்த உலகைச் சிறிய அன்பு மீட்கும் என்பதாகும். இன்றைய இளையோருக்கும், சிதறும் கலாச்சாரத்திற்கும், மனஅழுத்தம் நிறைந்த மனிதகுலத்திற்கும்சிறு வழி -  ஒரு புதிய நம்பிக்கையின் பாதை.”

அருளாளராக உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய அன்னை எலிஸ்வா அவர்கள் விரைவிலேயே புனிதர் நிலைக்கும் உயர்த்தப்படவேண்டும் என்று எங்களுடைய செபங்களை உரித்தாக்குகிறோம். அவருடைய புனித நிலைக்கான ஆயத்தப் பணிகள் பற்றி கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்?

புனிதர் பட்டத்திற்கான அடுத்த நிலை அறிவிக்கப்படுவதற்கு அருளாளர் அன்னை எலிஸ்வாவின் பரிந்துரையால் நிகழும் ஓர் உறுதியான புதுமை தேவை. இந்தப் புதுமை மருத்துவ ரீதியாக விளக்க முடியாத, முழுமையான மற்றும் நிரந்தரக் குணமடைதலாக  இருக்கவேண்டும். அன்னை எலிஸ்வாவை நோக்கிச் செபித்ததால் மட்டுமே இது நிகழ்ந்தது என்று நிரூபிக்கப்படவேண்டும். தீவிர செபமே புனிதர் நிலைக்கான முதல் படி. சபையின் முக்கியப் பங்கு அன்னை எலிஸ்வாவின் வாழும் சாட்சியாக இருக்கவேண்டும் எங்கள் வாழ்க்கை, பணி, சமூக உறவுகள் அவரின் ஆன்மிகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். அன்னை எலிஸ்வாவைப் பேசுவது மட்டுமல்ல; அவரைப் போல வாழ்வதே மிகப்பெரிய தயாரிப்பு. ‘புனித அன்னை எலிஸ்வாஎன்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் நாளை நம்பிக்கையுடன் எதிர் நோக்குவோம். வாழ்த்தப்பட்ட அன்னை எலிஸ்வாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.”

குழந்தை இயேசுவின் தெரேசாவுடைய ஆன்மிகத்தில் பயணிக்கும் தங்கள் சபையைப் பற்றியும், அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட அன்னை எலிஸ்வா அவருடைய வாழ்வைப் பற்றியும், இந்த இதழை வாசித்துப் பெற்றிருக்கக்கூடியநம் வாழ்வுவாசகர்களுக்குத் தாங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?

அன்பும் மதிப்பும் கொண்டநம் வாழ்வுவாசகர்களே, இந்த இதழின் பக்கங்களை நீங்கள் புரட்டும்போது, ‘சிறு வழிஅருளாளர் அன்னை எலிஸ்வாவின் வாழ்க்கை, சேவை, ஆன்மிகம் என்ற மூன்று ஒளிமயமான வாழ்வுச் சாட்சிகளை நீங்கள் சந்திப்பீர்கள். இவை வெறும் வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; இன்றைய மனிதனுக்கான வாழ அழைப்புகுழந்தை தெரேசா நமக்குக் கூறுவது ஒன்றே: ‘பெரிய காரியங்களைச் செய்ய முடியாவிட்டாலும், பெரிய அன்புடன் சிறியதைச் செய்.’ துன்பத்திலும் கடவுளை நம்பும் துணிவு, அமைதியில் பிறக்கும் சேவை, விதவையாக இருந்தபோதும் அர்ப்பணிப்பின் உயரம், தியானத்தில் ஊன்றிய செயல் இவற்றை அன்னை வாழ்ந்து காட்டினார். இந்த இதழை வாசித்த பிறகு, நாம் நம்மிடம் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: ‘நான் என் அன்றாட வாழ்க்கையில் சிறு வழியை எப்படி வாழ்கிறேன்? என் குடும்பம், பணி, சமூகத்தில் அன்னை எலிஸ்வாவின் ஆன்மிகத்தை எப்படி வெளிப்படுத்துகிறேன்?’

அன்பார்ந்த வாசகர்களேசிறிய அன்பை நடைமுறையில் மாற்றுவோம். அமைதியில் இருந்து சேவைக்கு நகர்வோம். வார்த்தைகளைவிட வாழ்க்கையால் சாட்சி அளிப்போம். அப்பொழுது ஒவ்வொரு குடும்பமும் ஒரு சிறு கார்மேலாக, ஒவ்வோர் இதயமும் கடவுளின் வாசஸ்தலமாக மாறும். புனிதம் என்பது சிலருக்கான உயரம் அல்ல; அன்புடன் வாழ விரும்பும் அனைவருக்கான பாதை. அருளாளர் அன்னை எலிஸ்வா, நம்மை வழி நடத்தட்டும்.”