தேசிய
இனங்களில் பூர்வீகக்குடிகளே மண்ணின் மாந்தர்கள். அவர்கள் மண் சார்ந்த, இனம் சார்ந்த,
மொழி சார்ந்த, பண்பாடு, கலாச்சார, நாகரிகம் சார்ந்த தம் தேசத்தில் முதன்மை மூத்தகுடிகள். அறிவார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் பின்புலம் கொண்ட ஓரின மக்களாகிய அவர்கள் என்றும் தங்கள் மரபார்ந்த தொன்மையைத் தொலைக்க விரும்புவதில்லை. அவர்களைத் தாய்மொழி ஒரு தாய்ப்பிள்ளைகளாய்க் கட்டமைக்கிறது. தொப்புள் கொடி உறவுகளாய் வாழவைக்கிறது.
1937 முதல் தமிழரின்
மொழிப்போர் வரலாறு தொடங்குகிறது. 1948, மற்றும் 1952 ஆகிய ஆண்டுகளில்
மொழிப்போர் மாநாடு, போராட்டங்கள் என உருபெற்றாலும், 1965-இல் உச்சம்
பெறுகிறது. இந்தித் திணிப்பு, மும்மொழிக் கொள்கை என ஒன்றிய அரசிற்கு
எதிரான போராட்டங்கள் வலுபெறுகிறது. தமிழ்நாடு எங்கும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்கள் ‘இந்தி எதிர்ப்புச் சங்கம்’ என்ற பெயரில் ஒருங்கிணைகிறார்கள். 18 மாணவத் தலைவர்கள் போராட்டத்தை வழிநடத்துகிறார்கள். வன்முறை மற்றும் கலவரம் வெடிக்கிறது. இதில் 70 பேர் உயிரிழக்கின்றனர். அதில் இருவர் காவல் துறையினர். ஒரு காவலர் திருப்பூர் ஆற்றுப்பாலம் அருகே கொல்லப்பட்டார். திருப்பூரில் நடைபெற்ற கலவரம் குறித்து, சிறு வயதில் கூறக்கேட்டு அதிர்ந்து உள்ளோம்.
1965 - மொழிப்போரின் நீட்சியாகப்
பல மாணவத் தலைவர்கள் தி.மு.க.வில் இணைகிறார்கள். தி.மு.க.
கட்டணம் வசூலித்துக் கொண்டு அரங்கக் கூட்டங்களை நடத்துகின்றது. மாலைநேரப் பல்கலைக்கழக வகுப்புகள் என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. பத்திரிகைகள், நாளேடுகள், விழிப்புணர்வு நாடகங்கள், திரைப்படங்கள் என இவை இளைஞர்களைக்
கவர்கிறது. 1967 - சட்டமன்றத் தேர்தலில் மாணவத் தலைவர்கள் வெற்றி பெறவும், தி.மு.க.
ஆட்சியைப் பிடிக்கவும் இளையோரின் தீவிர அரசியல்மயமாக்கப்பட்ட போக்கு ஒரு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. பிற்காலத்திலே தி.மு.க.
ஆட்சி அதிகார இழப்பு, எம்.ஜி.ஆரின் அரசியல்
செல்வாக்கு எனப் பின்னடைவைச் சந்திக்கிறது. மீண்டுமாக 1980-இல் இளைஞரணி என்ற அமைப்பை உருவாக்கி, 1982-இல் அமைப்பு முழு வடிவம் பெறுகிறது.
இளைஞரணி
என்ற அமைப்பிற்குப் பாசறைக் கூட்டங்கள் இரண்டு அல்லது மூன்று நாள்கள் நடக்கின்றன. அதில் கட்சியின் மூத்த தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்பட்ட பல்துறை அதிகாரிகள், புதிய இளையத் தலைமுறை தலைவர்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள். புல்வெளிக் காடுகளில், புற்களின் வேர்கள்
சேர்த்திருக்கும் நீர் ஓடையாகி, அருவி விழுந்து நதியில் கலப்பது வரை விளக்குகிறார்கள். குண்டுவெடிப்பு, கலவரங்கள், தற்காப்புகள் கற்றுத் தரப்படுகிறது. அரசியல் தலைவர்கள் சமூக நீதி, மொழிப்போர், காவேரி, முல்லை பெரியார், கச்சத்தீவு பற்றிய வகுப்பு எடுக்கிறார்கள்.
அடிப்படை அரசியல் அறிவு புகட்டப்படுகிறது. இதில் வியந்த ஆளுமைகள் தமிழ்நாட்டில் நீதித்துறையில், ஊடகத்துறையில், அரசுத்துறைகளில், ஆட்சியில் முக்கிய முகங்களாக இன்று மிளிர்வது
கண்கூடு.
ஓர்
இருநாள் பாசறைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து, அதன் மாநிலச் செயலாளர் கூட்ட இடத்திலேயே தங்கியிருக்கிறார். இறுதி இரண்டாம் நாள் மாலை, ஒவ்வோர் ஊரின் மூன்று இளைஞரணி அமைப்பாளர்களும் மாநில அமைப்பாளரிடம், புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது நடைமுறை. பாசறையில் கலந்து கொள்வோரின் சுய விவரம் (பயோ-டேட்டா) மாநிலச் செயலாளரிடம் இருக்கும். அவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நிர்வாகிகளையும் அறிந்துகொள்ள இது ஓர் ஏற்பாடு. ஏதாவது குறிப்பிடத்தக்கச் செய்தி இருந்தால், மாநிலச் செயலாளர் நேரடியாக அந்த நிர்வாகியிடம் பேசுவார். தனித்திறமைகள் பற்றிய கேள்விகளும் முன்னெடுப்புகளும் அங்கு நடக்கும்.
ஒவ்வோர்
ஊர் பாசறைக் கூட்டத்திலும் அக்கட்சி தோற்றம், வளர்ச்சி, போராட்டங்கள், ஆட்சி, ஆட்சியின் திட்டங்கள் என்ற புகைப்படக் கண்காட்சி அமைக்கப்படும். பயிற்சியாளர்கள் அதைப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயம். ஒருமுறை வேறு பணிகளில் இருந்த காரணத்தால், அக்கண்காட்சியைக் காணாத இரு அமைப்பாளர்களை
மாநிலச் செயலாளர் கண்டித்துப் பேசியதை நாம் பார்த்திருக்கிறோம்.
இதுபோன்ற
கண்காட்சி அவர்கள் தலைமை அலுவலகத்தில் உள்ளது. அதைப் பார்த்த என் நண்பர் பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய குறிப்பு கட்சித் தலைவரால் குறிப்பிடப்பட்டுச் செய்தியானது. அக்கட்சியில் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சி அமைப்பின் அடிமட்டம் வரை வேரூன்றி இருந்தனர்; தொண்டர்களிடம் பேசிப் பழகினர்.
விழிப்புணர்வு
மிக்க இவ்வாறான தமிழ்ச் சமூக மக்களுக்குப் பிராணிகள் நலச்சங்கம், உச்ச நீதிமன்றம் வழி ஜல்லிக்கட்டு தடை வந்தது. 2017, சனவரியில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெடித்தது. 2017, சனவரி 21 ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்
‘20 இலட்சம் மாணவர்கள்,
இளைஞர்கள், இளம் பெண்கள், சென்னை மெரினாவில் கூடிப் போராட்டம் நடத்தினர்’
என வருணிக்கிறது. தன்னெழுச்சியாகக் கூடிய கூட்டத்திற்குத் தண்ணீர், உணவு சரியான முறையில் வழங்கப்பட்டன. இயற்கை உபாதை கழிக்க நடமாடும் கழிவறைகள் கொண்டுவரப்பட்டன. அவசரக்கால ஊர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இரவு தெருவிளக்குகள் வேண்டுமென்றே அணைக்கப்பட்டபோது எந்தச் சலசலப்பும் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் கைப்பேசி விளக்குகளை ஒளிரவிட்டு மெரினாவையே வெளிச்சக் காடாக்கினர். 20 இலட்சம் பேர் கலந்துகொண்ட அறவழிப் போராட்டத்தில் இன, மொழி உணர்வுப் பாடல்கள் பாடப்பட்டன; உரைவீச்சுகளும் நடந்தன.
உலகமே
வியந்த தமிழ் இளைஞர்களின் போராட்டம் உலக வரலாற்றில் இடம்பெற்றது. உலகளாவிய மானிடச் சமூகத்திற்கு ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும் கண்ணியத்திற்கும் தமிழ் இளைஞர்களே பாடமாகி இருந்தார்கள். மேலும், தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பத்து இலட்சம் இளைஞர்கள் அமைதி வழியில் போராடினர் என்பது வரலாற்றுப் பதிவு.
வாருங்கள்...
வெளிச்சப் பக்கங்களை விட்டு, இருண்ட பக்கத்திற்கு நகர்வோம். தெருக்களில் திரைப்பாடல்களை ஒலிக்கவிட்டு, சிலர் மது மயக்கத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறை சிறு சிறு சீண்டல் புகார்களால் ஆண்களையும் பெண்களையும் தனித்தனியே பிரித்து நிற்க வைக்கிறது. அவர்களுக்கு அடிப்படை அரசியல் புரிதல் இல்லை. இவர்களை அரசியல் மயமாக்க எவரும் இல்லை. கூட்டமாகக் கூடினால் நாம் ஒரு பெருங் கூட்டத்தில் உள்ளோம், எதையும் செய்ய துணியும் மனோபாவம் மேலோங்கி இருக்கிறது. தத்துவமில்லாத தலைமையால் யாருக்கும், எதற்கும், கட்டுப்படாத, கட்டுப்பட மறுக்கிற, இரசிக மனப்பான்மை வீறுகொள்கிறது.
தமிழ்நாட்டின்
முன்னணி நடுநிலை நாளேடு கோபமாகத் தன் தலையங்கத்தில் தன் மென்மை இயல்பு மாறிப் பேசுகிறது. “கேமிரா வெளிச்சத்திலும், விளம்பர வெளிச்சத்திலும் குழந்தைப் பருவம் தொடங்கி, வளர்ந்த நடிகருக்கு, நடைமுறை எதார்த்தமும் அரசியல் அனுபவமும் இல்லாததன் விளைவுதான்
பல அப்பாவிகளின் உயிரிழப்பிற்குக் காரணமாகி இருக்கிறது. கார்ப்பரேட் பாணியில் பல கோடிகள் செலவழித்துத்
திரைப்படங்களை விளம்பரப்படுத்தி வெற்றியடைவதுபோல, அரசியல் வியாபாரமும் நடத்தலாம் என முனைந்ததன் பேரில்,
மரண சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன” என்கிறது.
தலைவர் உள்பட தொண்டர்கள்வரை நிகழ்விற்குத் தார்மீகப் பொறுப்பு ஏற்காமல், ‘சதிக் கோட்பாடு’
என முழங்குவது இவர்களின் அடிப்படை
அறம் மறந்த அரசியலை வெளிக்காட்டுகிறது.
அடிப்படையில்
ஏட்டுக்கல்வி மட்டும் கற்ற பெரும்பான்மையான
இந்த இளையோரை யார் அரசியல்வயப்படுத்துவது? என்பதே நாளைய தமிழ்ச்
சமூகம் எதிர்கொள்கிற பெரும் சவாலாகும்.