கிறித்தவர்கள் இம்மண்ணின் மக்கள். இம்மண்ணின் சமூக, அரசியல் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவர்கள். தங்களின் வாழ்வாலும் பணிகளாலும் இம்மண்ணை, மக்களை, மொழியை வளப்படுத்தியவர்கள். தங்களின் சக்திக்கு அப்பாற்பட்டு கல்வி, மருத்துவம், சமூகப் பணி ஆகிய துறைகளில் அளப்பரிய பங்களிப்பு செய்து, தேசக் கட்டுமானத்திற்குத் தொண்டாற்றி வருபவர்கள்.
இவ்வாறு
இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு அக்கறையுடன் தொண்டாற்றி வரும் கிறித்தவர்கள், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சமூகக் கரிசனையுடன் பங்காற்ற
விழைகின்றனர். அந்நோக்கில், சிறுபான்மையினர் நலனையும், பரந்துபட்ட தமிழ்நாட்டின் நலனையும் முன்னிறுத்தி, கீழ்க்காணும் கோரிக்கைகளைக் கிறித்தவச் சமூகம் முன்வைக்கிறது.
1. சனநாயகம்,
சமத்துவம், சமூக நீதி, சமயச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமதர்மம் இறையாண்மை போன்ற இந்திய அரசமைப்புச் சட்ட விழுமியங்களின் அடிப்படையில் ஆட்சி நடப்பதை உறுதி செய்யவேண்டும்.
2. தலித்
கிறித்தவர்களைப் பட்டியல் சமூகத்தினர் வகைப்பாட்டில் ஒன்றிய அரசு சேர்த்திட தமிழ்நாடு சட்டமன்றத்தின் மூலமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக, தலித் கிறித்தவர்களுக்கு 4.6 விழுக்காடு மாநில அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
3. மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியக் கிறித்தவர்களையும் சேர்க்க வேண்டும்.
4. சிறுபான்மைப்
பள்ளிகளுக்கு,
அ)
1991-லிருந்து நிறுத்தப்பட்டுள்ள மானியத்தை நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று வழங்க வேண்டும்.
ஆ)
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் அனைத்துச் சமூக நலத் திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
இ)
சிறுபான்மைப் பள்ளிகளுக்கான அங்கீகாரம், புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும்.
5. சிறுபான்மையினர்
ஆணையம் மாவட்ட ஆய்வுகள் நடத்தும்போது, திரு அவைகளின் மறைமாவட்ட அமைப்புகளின் ஆலோசனைகளையும் பெறவேண்டும்.
6. உரிய
சான்றுகளுடன் சமர்ப்பிக்கப்படும் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தவேண்டும்.
7. அரசின்
நிலத்தில் நெடுங்காலமாக உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பட்டா வழங்கவேண்டும்.
8. கிறித்தவர்களுக்கான
கல்லறைத் தோட்டம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யவேண்டும். பல்சமய மக்கள் வாழும் ஊர்களில் அனைத்துச் சமூக மற்றும் சமயத்தவருக்கான சமத்துவக் கல்லறைத் தோட்டங்கள் அமைக்கவேண்டும்.
9. கருணை
இல்லங்கள், முதியோர் இல்லங்கள், கைவிடப்பட்டோர் இல்லங்கள் போன்ற கிறித்தவர்களின் அறப்பணிகளுக்கு அங்கீகாரமும் ஆதரவும் உதவிகளும் நல்கவேண்டும்.
10. பொது இடங்களில்
சிறுபான்மையினர் வழக்கமாக நடத்திவரும் சமய நிகழ்வுகளுக்கு, சமூக விரோதிகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டித் தடை விதிக்கக்கூடாது.
11. ஆலயப் பணியாளர்களுக்கு
உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் திரு அவைத் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பதோடு, ஆலய நிர்வாகத்தில் தலையிடக்கூடாது.
12. கிறித்தவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப
தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தவேண்டும். மேலும், அந்தந்தக் கிறித்தவச் சபைகளின் மக்கள்தொகைக்கு ஏற்ப வேட்பாளர்களைத் தேர்வு செய்யவேண்டும்.
13. தமிழ்நாட்டு விவசாயத்தின்
எதிர்காலத்தை வளர்த்தெடுக்க,
அ)
செறிவான விவசாய நிலங்களை வேளாண் மண்டலங்களாக அறிவிக்கவேண்டும்.
ஆ)
மரபார்ந்த இயற்கை விவசாயத்திற்கு ஊறுவிளைவிக்காத வகையில் எந்திரங்கள் பயன்பாட்டை அறிமுகப்படுத்தவேண்டும்.
இ)
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைப் பரவலாக்க வேண்டும்.
ஈ)
விவசாயக் கூலிகளுக்குப் பட்டா வழங்கி, வீடுகள் கட்டித் தரவேண்டும்.
உ)
நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், சதுப்பு நிலக் காடுகள் போன்றவற்றைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சீமைக் கருவேல மரங்கள், சீமைப் பூண்டுகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
14. தமிழ்நாட்டின் மரபார்ந்த
தொழிலான பனைத் தொழிலைப் பாதுகாக்க,
அ)
பனை மரங்களின் எண்ணிக்கையை 50 கோடியாக உயர்த்தவேண்டும்.
ஆ)
பனை உற்பத்திப் பொருள்களை அரசே கொள்முதல் செய்யவேண்டும்.
இ)
பனைகளில் ஏறி பதநீர் எடுக்க ஏணிகள், சிறு மோட்டார் வண்டிகள், தொழிற்சாலைகளைத் தொடங்கி நவீனப்படுத்தவேண்டும்.
ஈ)
கள் ஓர் உணவுப் பானம் என ஏற்று, அதற்கான
தடையை நீக்கவேண்டும்.
உ)
மது, போதை ஒழிப்பை முன்னெடுக்கவேண்டும்.
15. தமிழ்நாட்டின்
பொருளாதார வளமான மீன்பிடித் தொழிலை வளர்க்க,
அ)
மீன்பிடித் தொழிலிலும், மீன் விற்பனையிலும் பெருமுதலாளிகளிடமிருந்து மீனவர்களைக் காப்பாற்றவேண்டும்.
ஆ)
மீன்பிடித் தடை, பேரிடர் காலங்களுக்குப் போதுமான உரிமைத்தொகை (உதவித்) வழங்கவேண்டும்.
இ)
மீனவர்களின் சிதைவுக்குள்ளான வீடுகளுக்கு மாற்றாக, பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டித் தரவேண்டும்.
ஈ)
இலங்கை இராணுவத்தினரின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.
16. தமிழ்நாட்டின்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க,
அ)
சுற்றுச்சூழலுக்கு எதிரானத் திட்டங்களுக்கு மக்களின் கருத்துக்கேட்பைக் கட்டாயமாக்கவேண்டும்.
ஆ)
கனிம வளங்கள், மண், மலைகள் ஆகியவற்றைக் கொள்ளையிடுவதைத் தடுக்க வேண்டும்.
இ)
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக்கி, மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
17. இலஞ்சம்,
ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யவேண்டும்.
இரவு முழுவதும் பட்டாசு சத்தங்கள்! காலையும் அது தொடர்ந்தது. அன்று தீபாவளி. “அம்மா, நேத்தில இருந்தே கேட்டுட்டு இருக்கேன். பட்டாசு வாங்கக் காசு குடுமா” என்று நச்சரித்துக் கொண்டிருந்தான் அஜித். தன் பத்து வயது மகன் அஜித்திடம், கடையிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளை அருவாமனையில் அறுத்தவாறே, “அதான் நேத்தே பிஜிலி வெடி ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்தேன்ல... அது எங்க?” என்று அதட்டல் தொனியிலேயே கேட்டாள் சாந்தி.
“அம்மா, அதெல்லாம் காலியாயிடுச்சு! எனக்கு யான வெடி வாங்கித்தாம்மா.”
சாந்திக்கு
என்ன சொல்வதென்று தெரியவில்லை. இறைச்சி வாங்கி வருவதாகச் சொல்லிச் சென்ற தன் கணவனை இன்னும் காணவில்லை என்பதே அவள் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது.
“டேய், அம்மாக்கிட்ட இவ்வளவு காசுதான் இருக்கு. இனி கேட்கக்கூடாது சரியா” என்று சொல்லிக்கொண்டே தன் மசாலா டப்பாவில் சேமித்து வைத்திருந்த நூறு ரூபாய் தாளை எடுத்து மகனிடம் கொடுத்தாள்.
“அம்மா, இதுக்கு இரண்டு யான வெடிதாமா கிடைக்கும். சரி கொடு” என்று மாமரத்தில் மாங்காய்களைத் துள்ளிப் பறிப்பதுபோல அந்த நூறு ரூபாய் நோட்டைப் பறித்துக்கொண்டு வெளியே பறந்தான் அஜித்.
தடபுடலென்று
அடுப்பில் சோறு கொதித்துக் கொண்டிருந்தது. காய்கறிகள் பொரியலுக்காகத் தயாரானது. இறைச்சிதான் பாக்கி. வீட்டுக்காரர் வந்தாரென்றால் அதுவும் தயாராகிவிடும். ஊரிலிருந்து தங்கையும் அவ புருஷனும் கிறிஸ்மசுக்கு
வருவதாகச் சொல்லியிருந்தார்கள். வரக்கூடிய நேரம்தான். அதுக்குள்ள எல்லாம் தயாராகிவிடும்’ என்று
தன் மனத்தில் சொல்லிக்கொண்டவாறே அடுப்பங்கரை கதவில் சாய்ந்துகொண்டு பட்டாசு வெடிச்சத்தத்திற்குப் பயந்து ஒடுங்கிப்போய் படுத்திருந்த தன் வீட்டு நாயைக் கவனித்துக்கொண்டிருந்தாள் சாந்தி.
‘அம்மா!’ என்று அலறல் சத்தத்தோடு கையைப் பிடித்துக்கொண்டே வீட்டிற்குள் ஓடிவந்தான் அஜித். அவன் வலது கைவிரல்கள் தீக்காயத்தால் பூத்திருந்தன. புதிய சட்டைத்துணி இரத்தத்தால் நனைந்திருந்தது. பட்டாசு வாங்கச் சென்றபோது யாரோ சில இளைஞர்கள் வீரியமான பட்டாசைக் கொளுத்தி அவன் மீது எறிந்ததாகவும், ஏதேச்சையாக அதைக் கையில் பிடிக்கும்போது அது வெடித்ததாகவும் அவன் அழுதுகொண்டே சொன்னது சாந்திக்கு மனத்தில் பெரும் வலியை ஏற்படுத்தியது. அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தாள். அவனிடமிருந்த நூறு ரூபாயும் கூடுதலாக இருநூறு ரூபாயும் செலவானது.
இவ்வளவு
நடந்திருந்தும் ஐந்நூறு ரூபாய் கொடுத்து கறி வாங்கி வரச்சென்ற கணவர் இன்னும் வீடு திரும்பாததிலிருந்தே அவர் நன்றாகக் குடித்துவிட்டு மாலைதான் வீடு வருவார் என்பதை சாந்தியால் யூகிக்க முடிந்தது.
கிறிஸ்துமஸ்
விருந்திற்காக ஊரிலிருந்து தங்கையும், அவ புருஷனும் சாப்பாட்டு
நேரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். மீதமிருந்த பணத்தை மருந்திற்கும் மருத்துவமனைக்கும் செலவு செய்தாகிவிட்டது. டப்பாக்களைத் தேடிப் பார்த்தும் ஒன்றும் கிடைக்காததால் பக்கத்து வீட்டு விஜி அக்காவிடம் கடன் வாங்கினாள். ஐந்நூறு ரூபாய்க்கு ஹோட்டலிலிருந்து பொரித்த கோழி வாங்கி வந்து அவர்களுக்குப் பரிமாறி எப்படியோ சமாளித்தாள்.
இனி
செலவு இல்லையென்று நினைத்துக் கொண்டிருந்தபோது, “அக்கா! சூப்பர் ஸ்டார் படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்காம். பாத்திட்டு வரலாமா?” என்று கேட்டாள் சாந்தியின் தங்கை. ‘ஏழைகளுக்குத் திருவிழாக்கள் இல்லாமலேயே இருந்திருக்கலாம்’ என்று
சாந்திக்கு அன்று தோன்றியது.
குழந்தைகளையும்
குடும்பங்களையும் குறிவைத்துத் தாக்குகின்ற யானை வெடி இன்று சமூக ஊடகங்கள் எனச் சொல்லலாம். திறன்பேசியினை (Smart phone) குழந்தைகளின் கரங்களில் திணித்ததில் கொரோனா பெருந்தொற்றின் பங்கும் அதிகம் இருக்கின்றது எனலாம். கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில்தான் இணையவழிக் கல்வி என்ற போர்வையில் சிறார்கள் திறன்பேசியின் வழியாகக் கல்வியினை நுகரத்தொடங்கினர். இந்த நுகர்வு இணையம்வழிக் கல்வி என்று நின்றுவிடாமல் இணைய விளையாட்டு, இணைய நண்பர்கள், இணைய உணவுகள், இணைய வியாபாரம், இணைய சூதாட்டம் என்று விரியத்தொடங்கியது. இதனால் திறன்பேசியினைப் பயன்படுத்தும் சிறார் அதிகமாக இணையத்தைச் சார்ந்து இருப்பதால் திறனற்றக் கூட்டமாக உருவாகி வருகின்றனர்.
இப்பெரும்
உண்மையைக் கூர்ந்து கவனித்த சில நாடுகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் சிறாருக்குப் பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன.
குறிப்பாக, ஆஸ்திரேலியா அண்மையில் டிக்டாக் (TikTok), இன்ஸ்டாகிராம்
(Instagram), யூடியூப்
(YouTube),
ஸ்நாப் சாட் (SnapChat) போன்ற தளங்களை 16 வயதிற்குட்பட்டவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்தது. அந்நாட்டின் தொடர்புத்துறை அமைச்சர் அன்னிக்கா வெல்ஸ் (Anika Wells) இது
பற்றிக் குறிப்பிடும்போது, “சமூக ஊடகங்கள் சிறார்களை இயங்குநிலை உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு (online purgatory) இழுத்துச் செல்கிறது”
என்று குற்றம் சாட்டுகிறார். மேலும், “சமூக ஊடகங்களை இயக்கும் நெறிப்பாட்டுமுறை (algorithm) சிறார்களின் நடத்தையில் போதை யூட்டியாக (behavioral cocaine) இருந்து
அவர்களின் முழுமனித வளர்ச்சியைப் பாதிக்கிறது” என்கிறார்.
பல்வேறு ஊடக அறிஞர்கள் மற்றும் இணையச் செயற்பாட்டாளர்கள் இதற்கு எதிர்வினையாற்றினாலும், சிறார்களின் பாதுகாப்பிற்காக ஒரு நாடு திட்டமிடுகிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியே.
ஆஸ்திரேலியாவைப்
போன்று இன்று பல நாடுகள் சமூக
ஊடகங்களைச் சிறார் பயன்படுத்துவதற்கு எதிராகச் சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கின்றன. டென்மார்க், சீனா, பிரான்ஸ், பிரிட்டன், மலேசியா, அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளும் சில வழிகாட்டுதல்களையும் சட்டங்களையும் சிறார்களை இணைய ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கக் கொண்டு வந்திருக்கின்றன.
அதிகமாக,
சமூக ஊடகங்களை நுகரும் சிறார்கள் அதிகமாக உளநலப் பாதுகாப்புகளை எதிர்கொள்கின்றனர். தங்கள் உடல் பற்றிய எண்ணத்தில் எதிர்கருத்துகளைக் கொண்டுள்ளனர். தங்களை
எப்போதும் இணைய உலக ஆளுமைகளோடு ஒப்புமைப்படுத்தித் தங்களைக் கீழ்த்தரமாகப் பார்க்கின்றனர். எனவே, இத்தகைய சமூக ஊடகத் தடை என்பது சிறார்களை நல்வழிப்படுத்தி, அவர்களை மனப்பிறழ்வுகளிலிருந்தும் தூக்கமின்மையிலிருந்தும் பாதுகாக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.
யானை வெடிக்கு ஆசைப்பட்டு திருவிழா மகிழ்ச்சி திவாலானது போல, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது சிறார் தங்கள் கைகளை மட்டுமல்ல, தங்கள் அறிவையும் ஆற்றலையும் பாழ்படுத்திக்கொள்கின்றனர்.
(தொடரும்)
மத்திய அரசு ‘தேசியக் கல்விக் கொள்கையை’ நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது. இக்கொள்கை இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்லாது, அரசியல் சாசன அடிப்படைக்கும் குறிப்பாக, இந்நாட்டின் சமயச்சார்பின்மை, பன்முகத்தன்மை மற்றும் அதிகாரப் பகிர்விற்கும் விடப்பட்ட சவாலாக உள்ளது.
வேதக்கல்வியும் குருகுலமும்!
இந்திய
நாடு பன்முகத்தன்மை கொண்டது. பலவித கலாச்சாரங்கள், இனங்கள், மொழிகள், மதங்கள், வரலாற்றுப்
பின்னணிகள், மரபுகள் இந்நாட்டையும் மண்ணையும் செழுமைப்படுத்துகின்றன. இப்பன்முகத்தன்மையை
இக்கல்விக் கொள்கை மறுப்பதாக உள்ளது. வேதக்கல்வியையும், குருகுலக் கல்வி முறையையும்
இலட்சியக் கல்வியாக முன்னிறுத்துகிறது. பள்ளிகளை அருகிலுள்ள ஆசிரமங்களுடன் தொடர்புபடுத்த
முயல்கிறது.
அடிப்படையில்,
இத்தகைய கல்விமுறை சாதி அடிப்படையிலான வர்ணாசிரமத் தர்மத்தின் வழிபட்டது. மனனக் கல்வியே
இதன் ஆன்மா. அறிவு வளர்ச்சியிலும் ஆராய்ச்சியிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் அக்கறை
கொண்ட எவரும் இதனை ஏற்க இயலாது. எனவேதான் நமது தமிழ் நாடு அரசு, இந்திய அரசியல் சாசனம்
கூறியபடி அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில்,
நமது மாநிலத்திற்கெனத் தனியாகக் கல்விக் கொள்கை வகுக்க முயல்கிறது. இது மனமுவந்து வரவேற்கத்தக்க
நடவடிக்கை.
சமஸ்கிருதமயமாக்கல்
தேசத்தின்
கலாச்சார ஒற்றுமைக்கும், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் சமஸ்கிருதம் சிறப்புப் பங்காற்றியுள்ளது
என்று இக்கொள்கை குறிப்பிடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைத்
திணிக்கிறது. சமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்த மொழி. இந்திய மொழிகள் அனைத்தும் அதிலிருந்து
தோன்றியவை அல்ல; நம் தமிழே திராவிட மொழிகளின் தாய். கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு
போன்ற திராவிட மொழிகள் தமிழிலிருந்தே தோன்றியவை.
சமஸ்கிருத
எதிர்ப்பின் ஊடாகவே தமிழ் வளர்ந்துள்ளது. கால்டுவெல், மறைமலையடிகள், உ.வே.சா., க. அப்பாத்துரை,
தேவநேயப் பாவாணர் போன்றோரின் ஆய்வுகள் இதற்குச் சான்றாகும். தமிழுக்குச் சமஸ்கிருதத்துடன்
ஒட்டுமில்லை, உறவுமில்லை. இவ்வுண்மைகளை இக்கல்விக் கொள்கை இருட்டடிப்பு செய்கிறது.
கலாச்சார ஒற்றுமை வேண்டும், அதற்குச் சமஸ்கிருதம் கற்கவேண்டும் என்கிறது. இது இந்தியத்
தேசியத்திற்கு எதிரானது.
நாட்டுப்பற்று
என்பது வேறு; தேசியவாதம் (nationalism) என்பது வேறு. ஒரு குறிப்பிட்ட இனம்,
மொழி, கலாச்சார அடிப்படையிலான தேசியவாதம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல வாய்ப்புண்டு.
ஹிட்லரின் ஜெர்மானிய ஆரிய தேசியவாதம் பல கோடி மக்களைக் கொன்று குவித்தது. பன்முகப்பட்ட
இந்தியாவில் ஒற்றைத் தேசியவாதத்திற்கு இடமில்லை. அத்தகைய தேசிய இறுமாப்புவாதத்தை (Hindu nationalism) இக்கல்விக் கொள்கையில் காணமுடிகிறது.
இது இந்நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லவே உதவும். இதனை இந்தியர்கள் குறிப்பாக,
தமிழர்கள் ஏற்க இயலாது.
யோகா கல்வியை நிபந்தனையாக்குதல்
இக்கல்விக்கொள்கை
யோகாவைக் கட்டாயப்படுத்துகிறது. யோகா பாடத்தைப் பள்ளி அங்கீகாரத்தின் நிபந்தனையாக்குகிறது.
அதன் முன்னுரையில் பதஞ்சலி முனிவர் போற்றப்படுகின்றார். யோகாவைத் தன்னார்வமாகவும்,
ஒரு பயிற்சியாகவும் மேற்கொள்வதை நமது பள்ளிகள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், கட்டாயப் பாடமாய்
அங்கீகார நிபந்தனையாக (Condition of Recognition)
ஆக்குவதை நாம் ஏற்க முடியாது.
மாணவர்களைத் தரம் பிரிக்கும்
கல்வி
இக்கல்விக்கொள்கை,
பத்தாம் வகுப்பில் மாணவர்களை இரண்டாகத் தரம் பிரிக்க முயல்கிறது. கணிதம், அறிவியல்,
ஆங்கிலம் இவற்றில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை உயர்கல்விக்குரியவர்கள் எனவும்,
பின்தங்கும் மாணவர்களைத் தொழில் கல்விக்குரியவர்கள் எனவும் வேறுபடுத்தி, இருபிரிவினருக்கும்
இருவேறு தேர்வுகளை நடத்த முற்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில், வசதி வாய்ப்புள்ள
மாணவர்கள் உயர்கல்விக்கும், வசதி மறுக்கப்பட்டவர்கள் தொழில்கல்விக்கும் தள்ளப்படுவர்.
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இச்சமூக அமைப்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள்
பின்தள்ளப்படுவர். சமூக அடிப்படையில், பலவிதமான கல்விக்கூடங்கள் செயல்படும் சூழலில்,
இத்தகைய தரம் பிரித்தல் கிராமப்புற ஏழை மாணவர்களை வெகுவாகப் பாதிக்கும். இது மீண்டும்
வர்ணாசிரமக் குலக்கல்விக்கும், குலத்தொழிலுக்கும் வழிகோலும். சமூக நீதியில் அக்கறை
கொண்ட எவரும் இதனை ஏற்க இயலாது.
கிராமப் பள்ளிகளுக்கு
மூடுவிழா
தற்போது
நடைமுறையிலுள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் - 2009, குழந்தைகளின் குடியிருப்பிலிருந்து
மூன்று கி.மீ. தூரத்திற்குள் தொடக்கப்பள்ளி அமைக்க முற்படுகிறது. ஆனால் இப்புதியக்
கல்விக்கொள்கை இதனை மறுக்கிறது. மாறாக, மாணவர்களின் எண்ணிக்கை அல்லது பள்ளியின் உள்கட்டமைப்பு
குறைவுபடும் பட்சத்தில், அப்பள்ளிகளை மூடவும், அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்கவும் வேண்டுமென்கிறது.
இது கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும். பள்ளிகளை மூடத்
தடையாக உள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தைத் திருத்தவேண்டுமெனவும் இக்கொள்கை
பரிந்துரைக்கிறது. அத்துடன் பன்னாட்டு நிறுவனங்களின் கல்விக்கூடங்களை நாடு முழுவதும்
நிறுவிட இக்கல்விக்கொள்கை கதவைத் திறப்பதோடு, பல்லாயிரம் ஏழைப் பள்ளிகளுக்கு மூடுவிழா
நடத்தவே இக்கொள்கை முனைகிறது.
ஆசிரியர்களை எடுபிடிகளாக்கும்
கல்வி
இக்கொள்கையின்படி,
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறவேண்டும். ஐந்தாண்டுகளுக்கு
ஒருமுறை திறனறியும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இல்லாவிடில், அவர்களுக்குப் பதவி
உயர்வும், ஊதிய உயர்வும் மறுக்கப்படும். எனவே, இறுதிவரை அவர்களின் பணியில் நிச்சயமற்றத்தன்மை
ஏற்படும். பள்ளிகளின் முதல்வர்கள் பணிமூப்பு அடிப்படையிலன்றி, திறமை மற்றும் தனிப்பயிற்சி
அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். எனவே, தலைமையாசிரியரின் புதிய பணியிடங்கள் வழக்கமான
முறையில் நிரப்பப்படாது. மாணவர்கள் முறையாகத் தேர்ச்சி பெறாவிடில், ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும். வசதி படைத்த பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும்,
ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும் இந்நாட்டில் ஒன்றாக
இருக்க வாய்ப்பில்லை. எனவே, ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது ஏழைகள் படிக்கும்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை வெகுவாகப் பாதிக்கும். மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின்
அதிகாரத்திற்குட்பட்ட கல்வித் தீர்ப்பாயங்கள் (Central
Educational Tribunals)
நிறுவப்படும். இவை பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பலவற்றில் தீர்ப்பு வழங்கும்.
ஒட்டுமொத்தமாக, ஆசிரியர்களின் சுதந்திரச் சிந்தனை, கற்பித்தல் திறன் இவற்றை இச்சூழல்
வெகுவாகப் பாதிக்கும். கல்விக்குத் தொடர்பற்ற இந்தியக் கல்விப்பணி (Indian Education Service)
என்கிற அதிகார வர்க்கத்தின் கீழ் ஆசிரியர்கள் பணிசெய்ய நேரிடும். சுருக்கமாக, அறிவைத்
தேட வேண்டிய ஆசிரியர்கள், நிர்வகிக்கப்படும் பணியாளர்களாய் மாறுவர்.
அதிகாரத்தை மையப்படுத்தும்
கல்விமுறை
1975
வரை கல்வி மாநிலப் பட்டியலில் மட்டுமே இருந்தது. நெருக்கடி நிலையின்போது, இந்திராகாந்தி
அம்மையார் அதனைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றார். அதன்பின் மெல்ல மெல்ல அதில்
ஒன்றிய அரசு அதிகக் கட்டுப்பாடு செலுத்தத் தொடங்கியது. இருப்பினும், பாடத்திட்டம் முழுவதும்
இதுவரை மாநில அதிகாரத்திற்கே உட்பட்டுள்ளது. இப்புதிய கொள்கை, மாநிலத்தின் இந்த அதிகாரத்தைப்
பறிக்கின்றது. பள்ளிகளிலே கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் இவற்றிற்குத் தேசியப்
பாடத்திட்டத்தைக் கொண்டுவர முயல்கிறது. அந்தந்த மாநிலங்களின் தனித்தன்மைக்கேற்ப பாடத்திட்டங்கள்
தற்போது அமைகின்றன. இப்பன்முகத்தன்மையை உடைத்து, ஒருபடித்தான கல்வியை இந்தியா முழுவதும்
கொண்டுவர இக்கொள்கை முனைகிறது. இவை தவிர கல்வி நிர்வாகம் முழுவதையும் ஒன்றிய அரசின்
கட்டுப்பாட்டில் கொண்டுவர இக்கொள்கை முயல்கிறது.
அதிலும்
கூடுதலாக, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நாடு முழுவதும் ஒருபடித்தாக
நடத்த இது பரிந்துரைக்கிறது. அனைத்து ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளையும் தேசிய அளவில்
கட்டுப்படுத்த முயல்கிறது. தேசியக் கல்வி ஆணையம் என்ற பெயரிலும், இந்தியக் கல்விப்
பணி என்ற பெயரிலும் அதிமேதாவிகள் சிலர் மாநில அதிகாரங்களின் அனைத்து மட்டங்களிலும்
குறுக்கீடு செய்ய வழிவகுக்கிறது. இவ்வாறு மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் இக்கல்விக்கொள்கை
பறிக்க முயல்கிறது. இதனால் அரசியல் சாசன அடிப்படையிலான மாநிலங்களின் அதிகாரப் பரவலை
இக்கொள்கை கேலிப் பொருளாக்குகிறது.
சிறுபான்மை அடையாளங்களைச்
சிதைக்கும் கல்விக்கொள்கை
இக்கல்விக்கொள்கையில்
சிறுபான்மையினரைப் பற்றியோ, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றியோ,
அவர்களின் அரசியல் சாசன உரிமைகள் பற்றியோ எந்த விவாதமும் கொள்கையும் இல்லை. மாணவர்களின்
கல்வி உதவித்தொகை பற்றிக் குறிப்பிடும்போதுகூட, ‘பொருளாதார அடிப்படையில் பிற்பட்டவர்கள்’ என்றே குறிப்பிடுகிறது. இவ்வாறு சாதி அடிப்படையிலான சமூகத்தின்
பிற்பட்டத்தன்மையைக் கருத்தில் கொள்ள இக்கொள்கை மறுக்கிறது.
மேலும்,
சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் அரசியல் சாசனப் பாதுகாப்பை இது பொருளற்றதாக்குகிறது.
பிரமதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள்
மீது இட ஒதுக்கீட்டைத் திணிக்க முயல்கிறது. பள்ளி மேலாண்மை குழுக்களை (School management
Committee) ஏற்படுத்தி,
சிறுபான்மைப் பள்ளிகளில் அரசியல் குறுக்கீட்டிற்கு வழிவகுக்கிறது. சிறுபான்மைக் கல்வி
நிறுவனங்கள் அவர்களின் கலாச்சாரம் மற்றும் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் நிறுவனங்களாகும்.
அவற்றில் யோகா, சமஸ்கிருதம், வேதக்கல்வி போன்றவற்றைப் புகுத்தி, சிறுபான்மைக் கல்வி
நிறுவனங்களின் அடையாளங்களை இக்கல்விக்கொள்கை சிதைக்க முயல்கிறது. இது அரசியல் அமைப்புச்
சட்டத்தின் அடிப்படைக்கே எதிராக உள்ளது.
108 – இதன் ஆழமான பொருள்
2005-ஆம் ஆண்டிலிருந்து
இந்தியா முழுவதும் ‘108’ என்ற எண் பரவலாக அறியப்பட்டு வருகிறது. இது அவசர மருத்துவச் சேவையுடன் தொடர்புபடுத்தப்பட்டதால் முக்கியத்துவம் பெற்றது. 2005, ஆகஸ்டு மாதம் கிறித்தவரான ஆந்திரப் பிரதேச மேனாள் முதலமைச்சர் திரு. ஒய்.எஸ். இராஜசேகர ரெட்டி அவர்களின் ஆட்சிக் காலத்தில், அவசர மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (EMRI) இணைந்து ‘108 ஆம்புலன்ஸ்’ சேவையைத்
தொடங்கியது. அதன் பின்னர், இந்தியாவின் பல மாநிலங்களில் 108 அவசர மருத்துவ
எண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில்
இச்சேவை 2008-இல் மதுரையில் அன்றைய முதலமைச்சர் திரு.மு. கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அனைவருக்கும் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கச் செய்வதில் முக்கியமான படியாக அமைந்தது.
நடைமுறை
முக்கியத்துவத்தைத் தாண்டி ‘108’ என்ற எண்ணுக்கு ஆன்மிக அர்த்தமும் உண்டு. பாரம்பரியமாக இது ‘தேவதூதர் எண்’ எனக் கருதப்படுகிறது. இது இறைவழிகாட்டுதல், ஆன்மிக வளர்ச்சி மற்றும் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதைச் சுட்டிக்காட்டுகிறது.
இந்த
அவசர எண் நாம் ஒவ்வொருவரும் நவீனகால நல்ல சமாரியர்களாக மாறி, துன்புறுவோருக்கு உதவ அழைக்கிறது. இது இயேசுவின் வார்த்தைகளை எதிரொலிக்கிறது: “நோயாளிகளை நலமாக்குங்கள்;… நீங்கள் இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்”
(மத்தேயு 10:8). இது பாகுபாடின்றி கருணையுடன் உயிர்களைக் காக்கும் அவசரச் சேவைகளின் பணியோடு முழுமையாக ஒத்திசைக்கிறது.
நோயுற்றோர் உலக
நாள்
துன்புறுவோரை
ஆதரித்து மதிப்பளிக்கும் வகையில் திரு அவை ஒவ்வோர் ஆண்டும் நோயுற்றோர் நாளைக் கொண்டாடுகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் நோயுற்றோருக்கு உறுதி அளிக்கிறது:
“நீங்கள் தனியாகவோ, கைவிடப்பட்டவர்களாகவோ, பயனற்றவர்களாகவோ இல்லை. நீங்கள் கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்கள்; நீங்கள் அவரது உயிருள்ள, வெளிப்படையான உருவம்.”
வரலாறும் முக்கியத்துவமும்
1992-ஆம் ஆண்டு
திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் நோயுற்றோர் உலக நாளை நிறுவினார். அக்காலத்தில் அவரே பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது திருத்தூதுக் கடிதத்தில், ‘துன்பம் கிறிஸ்துவுடன் இணைக்கப்படும்போது மீட்புப் பொருள் பெறுகிறது’ என்று போதித்தார்.
இந்த
நாள் பிப்ரவரி 11 அன்று கொண்டாடப்படுகிறது. இது லூர்து அன்னைப் பெருவிழாவாகும்; அங்கு புனித பெர்னதெத் சூபிரூ அவர்களுடன் தொடர்புடைய குணமளிப்பு மற்றும் நம்பிக்கையின் தலம் உள்ளது. முதல் நோயுற்றோர் உலக நாள் 1993-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், 2013, பிப்ரவரி 11 அன்று திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்கள் உடல்நலக் குறைவால் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.
34-வது நோயுற்றோர் உலக
நாள்
(2026)
2026, பிப்ரவரி 11 அன்று
34-வது நோயுற்றோர் உலக நாள் சிலிக்லாயோ நகரில் கொண்டாடப்படும். இது இலத்தீன் அமெரிக்காவுடன் திரு அவையின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.
நல்ல
சமாரியரின் எடுத்துக்காட்டால் ஈர்க்கப்பட்டு, கிறித்தவர்கள் துன்புறுவோரின் அருகில் ‘நிற்க, பராமரிக்க,
சேவை
செய்ய’ அழைக்கப்படுகிறார்கள்.
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘சமாரியரின் இரக்கம்: மற்றவரின் வலியைத் தாங்கி அன்பு செய்வது’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார். இது உண்மையான அன்பு, கனிவு, நெருக்கம் மற்றும் இரக்கமிக்கப் பராமரிப்பில் வெளிப்படுகிறது என்பதை நினைவூட்டுகிறது.
‘Dilexi Te’- ஏழைகளின்
மீதான
அன்பு
பற்றிய
போதனை
‘ஏழைகளின் மீதான அன்பு பற்றிய போதனை’(Dilexi Te) என்ற சுற்றறிக்கையின் 49-52 பதிவுகளில், திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் நோயுற்றோர் மற்றும் துன்புறுவோர் பற்றிய நான்கு ஆழமான கருத்துகளை முன்வைக்கிறார்:
1. துன்புறும் கிறிஸ்துவின் உடலைத் தொடுதல்
நோயுற்றோரைப் பராமரிப்பதில் கிறித்தவ இரக்கம் வெளிப்படுகிறது. அவர்களைச் சந்தித்து, ஆறுதல் அளித்து, சேவை செய்வது வெறும் தர்மம் அல்ல; அது நம்பிக்கையின் செயல். துன்புறுவோரைப் பராமரிக்கும்போது நாம் கிறிஸ்துவையே தொடுகிறோம்.
2. ‘என் சகோதர சகோதரிகளே,
நன்மை
செய்யுங்கள்’
புனித
இறை யோவான் மற்றும் புனித கமில்லஸ் டி லெல்லிஸ் ஆகியோர்
தங்கள் வாழ்வை நோயுற்றோருக்காக அர்ப்பணித்தனர். புனித கமில்லஸ், ஒரு தாய் தனது ஒரே குழந்தையைப் பேணும் மென்மையுடன் நோயுற்றோருக்குச் சேவை செய்ய அழைத்தார்.
3. இரக்கத்தின் தொடுதல்
பல
மகளிர் சபைகள் மருத்துவப் பணியில் முக்கியப் பங்கு வகித்தன. அவர்கள் நோயுற்ற ஏழைகளுக்கு ஆறுதல், சுகாதாரம், மருந்து மற்றும் மனித மாண்பை வழங்கினர். புனித லூயிஸ் டி மரில்லாக் இந்த
இரக்கமிக்கப் பராமரிப்பை ‘முதல் மருந்து’ என்று அழைத்தார்.
4. இயேசுவின் மிகவும்
மறைந்த
முகம்
இன்றும்
கத்தோலிக்க மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள் மற்றும் பணித்தளங்கள் கிறிஸ்துவின் குணமளிக்கும் பணியைத் தொடர்கின்றன. இயேசு கூறினார்: “நான் நோயுற்றிருந்தேன்; நீங்கள் என்னைச் சந்தித்தீர்கள்” (மத்
25:36). திரு அவை துன்புறுவோரின் அருகில் மண்டியிடும்போது, தனது உண்மையான அழைப்பை நிறைவேற்றுகிறது என்று திருத்தந்தை லியோ நினைவூட்டுகிறார்.
உலக
நோயுற்றோர் நாள் நம்மை ஆழமான இரக்கம், சேவை மற்றும் ஒற்றுமைக்கு அழைக்கிறது. நோயுற்றோரின் மாண்பை இறைவனின் பிள்ளைகளாக மதித்து, அவர்களைப் பிரார்த்தனை, பராமரிப்பு மற்றும் கனிவுடன் அணுக அழைக்கிறது. இறைவாக்கினர் எசேக்கியேல் கூறுகிறார்: “காணாமல் போனதை நான் தேடுவேன்; வழிதவறியதைத் திரும்ப அழைத்து வருவேன்; காயமடைந்ததைக் கட்டுப்போடுவேன்; பலவீனமானதை வலுப்படுத்துவேன்” (எசே
34:15-16). கிறிஸ்துவையும்
நல்ல சமாரியரையும்போல் நாமும் குணமளிப்பு, நம்பிக்கை மற்றும் அன்பின் கருவிகளாக மாறுவோமாக!
தமிழ்நாட்டு அரசியல் என்பது, அறம் சார்ந்த அரசியல். மனிதம் பேணும், மானிடம் காக்கும் மாண்புமிகு அரசியல். எளியோருக்கு ஏற்றம் தரும் சமூக நீதி அரசியல். பொது அமைதி பேணும் மக்கள் அரசியல். இன்று ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. பரிவாரங்கள் அணிந்துள்ள முகமூடிகளால் அதிர்ச்சி அளிக்கிறது. வெறுப்பு அரசியலை விதைக்கிறது. புதுப்புதுப் புனைவுகளை நிகழ்கால அரசியல் என்கிறது.
தனிநபர்
வழிபாட்டைக் கதாநாயக மாயப்பிம்பத்தை முன்னிறுத்திய இவர்களின் வாக்கு அரசியல் நடக்கிறது. முதல்வர் பதவிக்காக எந்தத் தாழ்நிலைக்கும் இறங்குகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலின் வருங்காலம், வருத்தம் அளிப்பதாக உள்ளது. ‘தான்’ என்ற கதாநாயகப் பிம்பத்தின் கட்டுமானம் ‘இரசிக வெறி’ என்ற வாக்கு அரசியலை முன்னெடுக்கிறது. அடிப்படை அறமற்ற அரசியல் நடக்கிறது.
“எந்த ஓர் அரசியல் கட்சித் தலைவரும், தன் தொண்டர்களும் அப்பாவிப் பொதுமக்கள் இறப்பதை எப்பொழுதும் விரும்பமாட்டார்கள்” என்ற
தமிழ்நாட்டு முதல்வரின் கருத்து ஏற்கத்தக்கது. நடிகர் அஜித் கூறுகிறார்: “நான் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை; கரூர் கூட்ட நெரிசல் நிகழ்விற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல; நம் அனைவருக்கும் ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு; கூட்டம் திரட்டுவதை, அதைப் பெரிய விசயமாக்குவதை நிறுத்தவேண்டும்.”
கரூர்
நிகழ்விற்கும், நடிகர் அஜித் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும், அவர் தன் பொதுப்புத்தியின் அடிப்படையில் ஒரு நேர்காணலில் தார்மீகப் பொறுப்பு ஏற்கிறார். நடிகை ஸ்ருதிஹாசன் காட்டமாக ஆணி அடித்தாற்போல் பேசுகிறார்: “கோமாளி போல் நடந்துகொண்டதற்காகக் கோமாளியைக் குறை சொல்லாதீங்க, சர்க்கசுக்குப் போன உங்க மேலதான் தப்பு.” இவரையும் மிஞ்சிய நடிகை ஓவியாவின் சமூக ஊடகப் பதிவுகள் நடிகரின் இரசிகர்களைக் கன்னத்தில் அறைந்தார்போல் இருந்தது.
கரூர்
நிகழ்களுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய நடிகரின் கட்சி, தமிழ்நாடு அரசு மற்றும் அப்பகுதி செல்வாக்கு மிக்க மேனாள் அமைச்சரின் மீது பழியைப் போடுகிறது. இறப்பு வீடுகளுக்குச் செல்லாமல், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறைமீது
பழி போடுகிறது. சமூக ஊடகங்களில், பொது வெளிகளில், தன் உட்கட்சிக் கூட்டங்களில் இது குறித்து வைக்கிற குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் வழி நடிகரின் கட்சி பரிகாரம் தேட விரும்புவதில்லை. தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாட்டு முதல்வருக்கும் சவால் விடுகிறார்கள்.
ஒரு
காலத்தில் ‘இதயம் பேசுகிறது’
என்ற வார இதழில் மணியன் என்ற பத்திரிகையாளர் ஆசிரியராக இருந்தார். மேனாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின்
நெருங்கிய நண்பராகவும் இவர் திகழ்ந்தார். உலகம் முழுவதும் சுற்றி பயணக் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதில் வல்லவர். அவர் எனக்குப் பரிசாகத் தான் எழுதிய இலங்கைப் பயணங்கள் குறித்த புத்தகத்தைப் பரிசளித்தார். அந்நூலில், ‘இலங்கையின் தந்தை பெரியார்’
எனப் போற்றப்படும் பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர் ‘இதயம் பேசுகிறது’
மணியனிடம், “தமிழர்கள் ஆட்டு மந்தைக் கூட்டம்; ஏன்? எதற்கு? எப்படி? என ஆராயாமல் ஒருவர்
செய்வதை மரபாகக் கடைப்பிடிக்கிறார்கள்” என்றார்.
மணியன் காரணம் கேட்டார். டாக்டர் கோவூர் சொல்கிறார்: “ஒருமுறை விடைபெற்றுச் சென்ற கப்பல் கேப்டன் ஒருவர் சிறு படகில் ஏறினார். என்ன நினைத்தாரோ... படகில் இருந்து இறங்கி வந்து என் கரத்தில் முத்தமிட்டு விடைபெற்றார். உடனே படகில் இருந்த தமிழர்கள் அனைவரும் கரைக்கு வந்து என் கரத்தை முத்தமிட்டுச் சென்றார்கள்... இதுதான் தமிழர்கள்”
என்றார்.
நாம்
அகராதியைப் புரட்டிப்
பார்த்தோம். ஒருவர் சொல்வதைக் கேட்டு, அது குறித்துச் சிந்திக்காமல் ‘ஆம்’ என்று தலையாட்டும் கூட்டத்திற்கு ஆட்டு மந்தைக் கூட்டம் என்பது வழக்காயிற்று. ஆட்டு மந்தை வயலில் கிடக்கும். ஒன்று எழும்பிவிட்டால், ‘எங்கே போகிறது? ஏன் போகிறது? என்ன நடக்கிறது?’ என விளைவுகளை ஆராயாமல்,
தெரியாமல், முதல் ஆட்டைத் தொடர்ந்து மந்தை முழுவதும் போய்விடும்.
இவர்கள்
போராட்டங்களை, ஊர்வலங்களை, பொதுக்கூட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை, தேர்தல் பிரச்சாரங்களை, தெருமுனைப் பிரச்சாரங்களை, திண்ணைப் பிரச்சாரங்களை, பாசறைக் கூட்டங்களைக் கண்டோர் இல்லை. இவர்கள் சிறைச்சாலைகளின் திசை தெரியாதவர்கள். பொது வாழ்க்கையின் சிலுவைகளையும் தியாகங்களையும் அறியாதோர். திரையரங்குகளை மட்டுமே கண்டவர்கள்.
இரண்டு மாநாடுகளையும், நான்கு சனிக்கிழமை பிரச்சாரங்களையும் அரசியல் என நம்புபவர்கள். பொது
ஒழுங்கு, பொது நாகரிகம் அறியாதவர்கள். தங்களின் கதாநாயகனின் திரை பிம்பத்தை உண்மையென நம்புபவர்கள். இலகான் கட்டிய குதிரைகளாக நடிகர் பின்பு ஓடுபவர்கள்.
இக்கட்சியின்
இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர் முதல்வரை ஒருமையில் சாடுகிறார். ‘புரட்சி வெடிக்கும்’ என்கிறார்.
தங்கள் இரசிகர்கள், ‘தமிழ் நாட்டைப் பற்ற வைப்பார்கள்’ என
அரசிற்குப் பயம் காட்டுகிறார். இதைவிட மோசமாக, ‘எங்களுக்குக் காவல்துறை குறித்து எந்தப் பயமும் இல்லை’ எனப் பொது அமைதிக்குக் குந்தகம் உருவாக்குகிறார். பொதுமக்கள் கேட்கிறார்கள்: ‘மக்கா, கரூர் சம்பவங்களுக்குப் பின், ஒரு மாதம் எங்கே ஓடி ஒளிந்தீர்கள்?’ என்பதே. மேலும், ஜென்ஷி போராட்டம், வங்க தேசம், இலங்கை, நேபாளம் போல தமிழ்நாட்டிலும் வெடிக்கும் என்றார்.
தேச
பக்தி குறித்து மூச்சுக்கு முன்னூறு முறை இந்திய மக்களுக்குப் போதிக்கும் பா.ச.க.
இந்திய இறையாண்மை குறித்தப் பேச்சிற்குக் கள்ள மௌனம் காக்கிறது. தமிழ்நாடு அரசு, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கிறது. புவிசார் அரசியல் அடிப்படை அறியா மந்தபுத்தி உள்ளோர், அதன் முடிவு சூர்யாவின் ‘ஆயுத எழுத்து’ படம் போல இருக்கும் என்கிறார்கள். இவர்களது கதாநாயகர்கள் ஒரு திரைப்படத்தில் கூட புரட்சி செய்யவில்லை என்பதே நிதர்சனம். இதுபோன்ற வட தமிழ்நாட்டில் பொறுப்பற்ற,
ஒரு சாதிக் கட்சித் தலைவரின் பேச்சால் ஆயிரக்கணக்கான பாட்டாளி இளைஞர்கள் வழக்கு வாங்கி வாழ்விழந்தனர். ஆனால், அதன் தலைவர் இன்று கோடிகளில் புரள்கிறார், சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்.
கரூர்
நிகழ்வுகளுக்குப் பின்பான தமிழ்நாட்டு அரசியலின் நிலைத்தன்மை என்பது கேள்விக் குறியாகி உள்ளது. குழம்பிய குட்டையில் ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க.
அகலக் கால்வைத்து மீன் பிடிக்கிறது. புதுக்கட்சி வழக்கு பயத்தில், பா.ச.க.-விடம் அடிபணிய வேண்டியது என்பது காலத்தின் கட்டாயம்.
மாற்றம்
என்ற வேடத்தில் வரும். பா.ச.க.
முகமூடி அணியாதவர்களையும் அடையாளம் காண்பது தமிழ்நாட்டு வாக்காளர்களின் கடமையும் பொறுப்புமாகும்.
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இன்று வெகுவாகப் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் சொல் கடப்பாரை!
கடப்பாரை
எனும் கவசத்தால் (ஆயுதத்தால்) திராவிடத்தை உடைத்துவிடப் போவதாகச் செந்தமிழன் முழங்கியுள்ளார். இவர் உடைத்துவிடக் கருவியாகக் கொள்ளும் கடப்பாரை எனும் கருவி ‘பார்ப்பனியம்’ என்பதைப்
புரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த அறைகூவலை ஒரு வெற்று முழக்கமாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனும் ஆதங்கத்தின் விளைவே இக்கட்டுரை.
பார்ப்பனியம்
என்பது வெறும் சாதியக் குறியீடு அல்ல; அது ஒரு சித்தாந்தம், வலுவான சித்தாந்தம். வர்ண அடிப்படையிலான வலுவான படிநிலை அமைப்பை எப்படியேனும் கட்டிக்காக்க உறுதி பூணும் சித்தாந்தம். பார்ப்பனியத்தின்மீது கட்டப் பட்ட இந்துத்துவமே இதன் மறுவடிவம். இந்துத் துவம் என்பதும், பார்ப்பனிய மேலாண்மை என்பதும் இக்கொள்கைகளின் அடிப்படையில் உருவாகவிருக்கும் இந்து இராஷ்டிரமும் வேறு வேறல்ல; ‘இந்துத்துவா’ என்று
சொல்லை உருவாக்கிய வீரசவார்க்கர் (1923) யாரை இந்து என்றழைக்கிறார்? ‘இந்து’ அடையாளம்
என்பது வெறும் நம்பிக்கையில் அல்ல! ஆனால், இது ஒரு கலாச்சாரம், உள்ளுணர்வு (Belonging).
இந்தியாவில்
வாழ்வோருக்கு இப்பூமி பித்ரு
பூமி (Father Land) மட்டுமல்லாது, புண்ணிய பூமியாகும் (Holy land).
இப்பூமியில் கிறித்தவருக்கும் இசுலாமியருக்கும் இடமில்லை. அவர்களின் புண்ணியத் தலங்கள் இங்கு இல்லை. இங்கு வாழும் அனைத்துச் சாதியினரும் இந்துகளே. சவார்க்கர் தீண்டாமையை எதிர்த்த போதும், சாதி அமைப்பில் சீர்திருத்தம் செய்ய விரும்பினாரே தவிர, ஒழிக்க (To Destroy) விரும்பவில்லை.
சாதிய அமைப்பு ஒரு வேலைப்பிரிவு என்பதால், இந்து மதத்திலிருந்து இப்பிரிவை வேரறுக்க முடியாது என்றே நம்பினார். இப்பிரிவு இயல்பானது, இயற்கையானது, ஒற்றுமையை வளர்ப்பது என்று நம்பினார்.
சவார்க்கருக்குப்
பின் இந்துத்துவத்தைத் தூக்கிப்பிடித்த எம்.எஸ். கோல்வால்க்கர் (1939) ‘நாம் அல்லது நமது தேசம் பற்றிய விளக்கம்’
(We or our
nationhood defined) என்ற நூலிலும், ‘Bunch of thoughts’ என்ற
நூலிலும், வர்ணப்பிரிவு பாராட்டப் பெற வேண்டுவது எனவும், இது இறைவன் ஆசியால் உருவாக்கப்பட்டது எனவும் (Divinly Ordained) எழுதுகிறார்.
அம்பேத்கர் மற்றும் பொதுவுடைமையாளர்கள் இவ்வமைப்பைச் சாடுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறார். கோல்வால்க்கர் “சாதியப் படிநிலை, மக்களின் ஒடுக்கும் வடிவமல்ல; இதுதான் பிரபஞ்சத்தின் முறையான ஒழுங்கு”
(order) என்பார் (ஆனந்த் டெலும்டே, Outlook.
Dec.2025).
பார்ப்பனியத்தின்
உள்ளடக்கம் என்னவென்பதைத் தமிழர் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டமே அறியும். இந்தியாவிலும் ஏன் தமிழ்நாட்டிலும் தோன்றிய பக்த இயக்கம், பெரியார் தலைமையில் உருவான சுயமரியாதை இயக்கம், இக்காலகட்டத்தில் அம்பேத்கர் தலைமையில் உருவான தலித் இயக்கம் என்பனவெல்லாம் ஒரு வகையில் கவனித்தால் சாதி எதிர்ப்பு இயக்கங்களே. மானுடரின் மாண்பையும் உரிமைகளையும் காக்கும் வகையில் திடமான சித்தாந்தத் தெளிவோடு உருவாகி, இந்தியச் சமூக அமைப்பில் பெரிய மாற்றத்தை உருவாக்கி வந்த இவ்வெதிர்ப்பு இயக்கங்களுக்கு எதிராகத் தோன்றியதுதான் இந்துகளை மதரீதியாக ஒருங்கிணைக்கும் போர்வையில் ‘இந்து’ என்ற பேரடையாளத்திற்குள் ஒருங்கிணைக்கும் சூழ்ச்சியில் சாதிய அடையாளத்தைக் கட்டிக்காத்து வருவதுதான் இந்துத்துவம்.
இந்துத்துவ
இயக்கத்தின் மூலவர்களான சவார்க்கர், கோல்வால்க்கர் தொடங்கி இன்றைய மோகன் பகவத் வரை தேசியம் என்ற பெயரில், இந்தியாவின் பன்மைக் கலாச்சாரப் பண்பை அழித்து, கலாச்சாரத் தேசியம் என்ற பெயரில் இந்து தேசத்தைக் கட்டமைத்து, இந்தியாவின் தேசிய இனங்களின் தனித்துவத்தை மறுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் வெகு வேகமாக நடந்து வருகையில், நமது ஊரில் தமிழ்த் தேசியத்தை வீதியெங்கும் முழங்கிய ஒருவர், தமிழ்த் தேசியத்தின் மாற்று அடையாளமாகத் திகழும் திராவிடச் சிந்தனையை - திராவிடக் கருத்தியலை ஆரியக் கடப்பாரை கொண்டு தகர்க்கப் போகிறாரா?
இந்துத்துவச்
சக்திகள், சனாதனிகள் வர்ண பேதம் உருவாக்கும் கெட்டியான படிநிலை அமைப்பைப் புனிதமாகக் கருதுகின்றனர்; சமனற்றச் சமூக அமைப்பைத் தேசியமாகக் கட்டமைக்கின்றனர்; அவ்வப்போது முன்னெடுக்கும் மக்களை உள்ளடக்கிய திட்டங்களால், சனரஞ்சக வாக்குறுதிகளால் ஓரங்கட்டப்பட்ட மக்களை மீண்டும் ஓரங்கட்டுவதோடு, ஒடுக்கப்பெறும் மக்கள் தாம் அடிமையானோம் என்பதை மறக்கச் செய்கின்றனர்” (Outlook டிசம்பர் 2025).
காந்தியும்,
அவரின் காங்கிரஸ் இயக்கமும் முன்னெடுத்த இந்திய தேசியம் எனும் பேரமைப்பு, மாநிலங்களின் தனித்துவம் உணர்ந்து மொழிவாரி மாநிலங்களை உருவாக்கினாலும், மத்திய-மாநில அரசுகளுக்கான தனித்த அதிகாரங்களையும், பொதுவான அதிகாரங்களை வகுத்தாலும், மத்திய- மாநில அரசுகளிடையே உரசல்கள் இருந்தன. இவ்வுரசல்களால் ‘திராவிட நாடு’ என்ற முழக்கமும் எழத்தான் செய்தது.
இன்றைய
இந்துத்துவ அரசு முன்வைக்கும் ‘ஒரே’என்ற ஒற்றை முழக்கத்தின் உள்ளடக்கம் என்ன? ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல்!’ - இம்முழக்கத்தின் உள்ளடக்கம் இவர்களின் காதுகளில் எட்டாமற்போன மாயமென்ன?
உண்மையான
தேசியம், உள்ளடக்குவதை (Inclusion) ஒதுக்காது!
இந்துத்துவ அரசு முன்வைக்கும் ஒற்றை முழக்கத்தை இவர்கள் எந்தக் கடப்பாரையால் வீழ்த்தப் போகிறார்கள்? ‘ஒற்றை’ எனும் முழக்கம் வெறும் எண்ணல்ல; ஒற்றை எதேச்சதிக்காரத்தின் வடிவம். ‘ஒன்று’ என்பதும், ‘ஒற்றை’ என்பதும் மற்றொன்றின் இருப்பை மறுப்பதால், இப்போக்கினில் சனநாயகம் இல்லை. சனநாயகம் மறுக்கப்படும்போது, தேசிய இனங்களின் உண்மைத்தன்மையான ‘தனித்துவம்’ மற்றும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும்.
தேசங்களின்
நாடாம் இந்தியாவில் தேசிய இனங்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதோடு, நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைக்கும் எதிரான குற்றமாகக் கருதப்பட்டு, கடுமையான தண்டனைக்கு ஆளாகும் நிலையும் உருவாகும். அதுவும் இன்றைய மதவாத அடிப்படையிலான அரசு மதரீதியான விமர்சனங்களைக்கூட தேச விரோதக் கருத்தாக எடுத்துக்கொண்டு தேச விரோத (Sedition) வழக்கும்
தொடுத்துச் சிறைக்கும் அனுப்பி வைப்பதைப் பார்க்கிறோம்.
தமிழ்த்
தேசியமும், இந்து தேசியமும் இணைந்து செல்லமுடியாது. இந்தியச் சமூகம், பன்மைச் சமூகம் என்று ஏற்றுக்கொண்டு, பன்மைத்துவம் காக்கப் போராடுவதுகூட
பிரிவினைவாதமாகக் கருதப்படும் சூழல் கண்முன்னே வெட்ட வெளிச்சமாகத் தெரிகையில், கடப்பாரை கொண்டு திராவிடத்தை உடைக்க நினைக்கும் இவர்கள் உணர வேண்டிய பாடமிது.
தமிழ்த்
தேசியம் பேசும் இவர்களும், இந்து தேசியம் பேசும் இந்துத்துவர்களும் எங்கேயாவது கருத்தியல் ரீதியாக மோதுவதைப் பார்க்க முடிகிறதா? பரந்துபட்ட இந்தியாவில் இந்து தேசியம் அல்லது கலாச்சாரத் தேசியம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கலாச்சாரத் தேசியம், பன்முகச் சமூக அமைப்புள் தேசிய இனங்களின் இருப்பை அழிக்க முனையும் என்ற உண்மையை இவர்கள் எங்கேயாவது எடுத்துரைத்ததுண்டா? கலாச்சாரத் தேசியம் என்ற செயலில் முன்னெடுக்கப்படும் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறிப்பாக, இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருத மொழிக்கு அளிக்கப்படும் முன்னுரிமை, தமிழ்நாட்டில் நடைபெறும் அகழ்வாராய்வு உண்மைகளை மதிக்காமை, மதச்சிறுபான்மையின்மீது காட்டப்பெறும் பகை, அவர்களின் நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், காஷ்மீர் மக்களின் சுயாதீன உரிமைகளைத் தொடர்ந்து மீறிவருதல் என்பனவெல்லாம் இவர்கள் கண்களுக்குப் பிரச்சினையாகவில்லையே!
நெற்றியில்
திருநீற்றுத் பொட்டணிந்து முப்பாட்டன் முருகன் புகழ் பாடும் இவர்கள், பெரும்பான்மை மத உணர்வைக் கருவியாக்கி
அரசியல் ஆதாயம் தேடும் பெரும்பான்மை மதவாதிகளின்
கொள்கைக்கு ஆதரவாகக் களமாடுகிறார்கள் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டில்
பேசப்படும் திராவிடம் ஓர் அடையாளமே தவிர, வேறு இல்லை. இன்று வளர்ந்து நிற்கும் பார்ப்பனிய இந்துத்துவ மாடலுக்கு எதிராக மாற்றுக்கருத்தியல் கொள்ளவேண்டிய சூழலில் திராவிடத்தை முன்வைக்கிறோம். திராவிடம் ஏற்றுக்கொண்ட கருத்தியல், தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதல்ல; திராவிடச் சித்தாந்தம் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. வடவராகிய ஆரிய ஊடுருவலும், மேல்சாதி
ஆதிக்கமும், சாதி ரீதியான பாகுபாடும் நிறைந்து நின்ற சமூக அமைப்பில் ‘திராவிடம்’
என்ற கடப்பாரை தேவைப்பட்டது. தந்தை பெரியாரும் நீதிக்கட்சியும் திராவிட இயக்கமும் இன்றைய தி.மு.க.
அரசும் ஆரிய மேலாண்மையை உடைத்தெறிய தேவைப்பட்ட கடப்பாரை அதற்கான வேலையைச் செவ்வனே செய்தது.
கடப்பாரை
எனும் கவசம் கொண்டு நாம் வீழ்த்த வேண்டுவது இன்றைய ஆளும் வர்க்கக் கருத்தியல் என்பதாக இருக்க, ‘திராவிடம்’
என்ற ஒரு சொல்லை, அச்சொல்லை எப்போதும் தாங்கியே செயல்படும் திராவிட மாடல் அரசினை ‘தீய சக்தி’ என்று வாய் கூசாமல் நாளும் புலம்பும் கட்சிகள் அனைத்தையும் சனநாயகம், சமத்துவம், சமயச்சார்பின்மை கடப்பாரைகளால் அடித்து நொறுக்கவேண்டிய காலத்தில் சமூக நீதியை, சுயமரியாதையை, பெண் விடுதலையை, மாநில சுயாட்சிக் கோட்பாட்டை உள்ளடக்கமாகக் கொண்ட திராவிடத்தை உடைத்து, உடையுண்ட கற்கள்மீது எதைக் கட்டப் போகிறார்கள்?
மக்களை
குறிப்பாக, மதச் சிறுபான்மையினரை நாட்டின் எதிரிகளாக, அந்நியராகச் சித்தரித்து அவர்கள்மீது ஏவப்பெறும் வன்முறைகளை இவர்கள் பார்க்கவில்லை.
‘சனாதனத்தை ஒழிப்போம்’
என்று பேசிய ஒற்றை வார்த்தையால் வெகுண்டுபோன சனாதனக் காவலர்கள், தமிழ்நாடே இந்துகளுக்கு எதிரானது என்று வட மாநிலங்களில் பரப்புரை
செய்தபோது இவர்கள் எங்கே போனார்கள்?
ஒன்றிய
அரசின் புதிய தொழிலாளர் பற்றிய சட்டங்கள், தொழிலாளர் நலம் பாதிக்கப்படும் என்று நாடே கேள்வி எழுப்பி வருகையில், மக்களின்
வேலைக்கான 100 நாள் வேலைத்திட்டம் பறிக்கப்பட்டபோது, இத்திட்டத்தில் இடம்பெற்ற காந்தியின் பெயர் களவாடப்பட்டபோது கடப்பாறைகளைக் காணோமே!
கால்டுவெல்
மதம் பரப்ப வந்த ஒரு பாதிரி என்றும், அவர் முன்னிறுத்திய திராவிடம் பொய்யானது என்றும் பேசும் இவர்கள், ‘கால்டுவெல், போப் வேறு வேறானவர்கள்’ என்ற
வேறுபாடு கூட தெரியாத நிலையை என்னவென்று சொல்வது?
சங்கப்
பரிவாரங்கள், திராவிடம் பற்றிப் பேசிய கால்டுவெல்லை எங்கு வைத்துள்ளதோ, அதே இடத்தில் இவரும் வைப்பதில் வியப்பு எதுவும் இல்லையே!