news
சிறப்புக்கட்டுரை
உருவாக்கப்பெறும் சங்கப் பரிவாரக் கிளை: அண்ணாமலை எனும் முகமூடி

இந்தியச் சனநாயகக் குடியரசின் பிரதம அமைச்சராக, பண்டிதர் நேருவைக் காட்டிலும் அதிகக் காலம் பதவிப் பெருமை பெற்றவராக மோடி புகழப் பெறுகின்ற காலம் இது. இம்மோடியின் இரு கரங்களாக உன்னதப் பணியாற்றி வருபவர் நம் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மேற்கண்ட இருபெரும் அருந்தலைவர்களின் ஆசிபெற்று அல்லது அனுமதி பெற்று, மேற்கண்ட இருவரும் சார்ந்த அல்லது இவ்விருவரையும் ஆட்சியில் அமர்த்திய பாரதிய சனதா கட்சியிலிருந்து தமிழ்நாட்டின் மேனாள் பாரதிய சனதா கட்சித் தலைவர் மேற்படி கட்சியிலிருந்து விலகியுள்ளாராம்! இதுவரை கேள்விக்குட்படுத்தாமல் இவரைத் தாங்கிய கட்சியிலிருந்துதலைவர்களின் அனுமதியோடுவெளியே வந்திருக்கிறாராம்!

இப்போக்கு வரலாற்றில் கேள்விப்படாத ஒன்றில்லையா? இவர் வருகைக்குப்பின்தான் தமிழ்நாட்டில் பாரதிய சனதா பெரிய வளர்ச்சி கண்டதாம்! வெறும் மூன்று விழுக்காட்டில் நின்றிருந்த பாரதிய சனதாவைப் 11 விழுக்காட்டிற்கு உயர்த்திக்காட்டினாராம்! தமிழ்நாட்டு இளைஞர் கூட்டம் பா...வைப் பின் தொடர இவரே காரணமாம்! இவர் மேற்கொண்டஎன் மண், எம் மக்கள்நடைபயணத்தால் தமிழ்நாடே அதிர்ந்ததாம்! பா... புத்துயிர்ப்பு பெற்றிருந்ததாகவும் பாராட்டுகின்றனர். இத்தனை சிறப்பிற்கும் பெருமைக்கும் உரிய இவரைப் பா... உதறவில்லை; பா... இவரைக் கழட்டிவிடவும் இல்லை.

இத்தகைய அர்ப்பண உணர்வுமிக்க ஓர் இளந் தலைவரைப் பா... வெளியே அனுப்பாதபோது, பா... எனும் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பின்மீது, அதன் செயல்பாட்டின்மீது இக்கட்சியின் அடிப்படைக் கொள்கையான இந்துத்துவாமீது, மாறாத காதலும் பக்தியும் கொண்டிருந்த இந்த இளம் காவல்துறை அதிகாரி ஏன் வெளியே வருகிறார்? பாரதிய சனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கொண்டிருக்கும் எந்தக் கொள்கையையும் எப்போதும் விமர்சிக்கக்கூடத் திராணியற்ற இம்மனிதர், ‘பாரதிய சனதாவிலிருந்து வெளியேறுகிறேன்என்று அறிவிக்கிறார்.

பாரதிய சனதாவிலிருந்து அண்ணாமலை விலகியது குறித்து நமக்கு வேதனை எதுவுமில்லை. பாரதிய சனதா எனும் ஒரு கட்சி, வலுவான மதவாதச் சித்தாந்தத்தைக் கொண்டது என்பதும், இந்திய வர்ணச் சமூகக் கட்டமைப்பை எப்படியும் காக்கவேண்டிய உறுதியெடுத்த கட்சி என்பதும், இந்தியா விடுதலை பெற்றபோது இந்திய தேசியத் தலைவர்கள் ஒன்றுகூடி ஏற்றுக்கொண்டு அறிவித்த சனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை, இறையாண்மை எனும் மகோன்னதங்களை அண்ணாமலை உதறி வந்ததாகச் சொல்லப்பெறும் பாரதிய சனதா ஏற்காமல்; ஆனால், சனநாயகம் தந்த தேர்தல்வழி மதப் பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற்று, மதப்பெரும்பான்மைவாதம் (Majority) எனும் தீய கருத்தியல் கொண்டு ஆட்சிக் கட்டிலை அலங்கரித்து வரும் பா...வின் உண்மை முகத்தை I.P.S. பட்டம் பெற்ற அண்ணாமலை தெரியாமல் இருந்திருக்கிறார் என்று எவராவது கூறினால் நம்பிடலாமா? இது மிகப்பெரிய பொய்யல்லவா!

இவர் பாரதிய சனதாவிலிருந்து விலகினாரா?

அண்ணாமலை பாரதிய சனதாவிலிருந்து விலகிவிட்டாரா? பா...விலிருந்து விலகியதாகக் கூறப்படுவது ஒரு நாடகமே என்பதே உண்மையானால், இந்நாடகத்தின் உள்ளடக்கம்தான் என்ன?

நடந்து முடிந்த தேர்தல் பரப்புரையின்போது, .தி.மு.. கூட்டணியின் ஒரு சிறிய கூட்டுக் கட்சியான பா...வுக்குப் பரப்புரை மேற்கொண்ட போது, கட்சியின் உயர் பதவி எதுவும் வகிக்காத நிலையிலும், தமிழ்நாடு எங்கும் ஹெலிகாப்டரில் பயணம் செய்து பரப்புரை மேற்கொள்ளும் வாய்ப்பு இவருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக்கூடாது.

தமிழ்நாட்டு ஊடகங்கள் அதிர்ந்து போயுள்ளதுபோல் பெரிய நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. மகாத்மாவின் மரணம், பண்டிதர் நேருவின் மறைவு இந்திய அரசியலில் ஏற்படுத்தி விடாத வெற்றிடம்போல், பெருந்தலைவர் காமராசரும், தந்தை பெரியாரும் மறைந்தபோது தமிழ்நாட்டு அரசியல் வானில் உருவாகாத வெறுமை போலல்லாமல், இன்று ஏதோ காரணம் பற்றி அரசுப் பதவி துறந்து, தமிழ்நாட்டு அரசியல் களம் புகுந்துபிரஸ் மீட்செய்துவந்த ஒரு முதிர்ச்சியற்ற இளைஞர், மக்களால் எப்போதுமே நிராகரிக்க வேண்டிய ஒரு கட்சியிலிருந்து, தான் நேசிக்கும் தலைவர்களின் அனுமதியோடு வெளியே வந்த ஒரு புனைச் செய்தியை தமிழ்நாட்டில் புகுத்தி, இச்செய்தியின் மூலம் தமிழ்நாடே அதிர்ந்துபோனதுபோல ஒரு பொய்யானப் பாவனையைக் கட்டமைக்கின்ற கபடத்தையும் பார்த்து வருகிறோம்.

பா...வின் புதிய நாடகம்

அண்ணாமலை பா...வைத் துறக்கவில்லை; அண்ணாமலை விலகினார் என்பது போன்ற நாடகத்தைச் சாதுரியமாக அரங்கேற்றி வருகிறது பா... அண்ணாமலை புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கப்போவதாக அறிவித்த நொடியில் இலட்சக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இன்றைய கணக்குப்படி பதினேழு இலட்சமாம்! அண்ணாமலை எனும் இளைய அரசியல் தலைவர், இத்தனை எண்ணிக்கையில் ஈர்க்கப்படுகிறார் என்பது உண்மையாயின் இது போற்றுதற்குரியது என்பதில் மறுப்பில்லை. அண்ணாமலை கட்சியிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படும் நிலையில், ‘ஏன் வெளியேறினார்?’ என்பதற்கான காரணம் கூறவில்லை; ஏன் என்ற காரணத்தையும் கூறவில்லை என்பது மட்டுமல்லாமல், தான் உருவாக்கவிருக்கும் இயக்கத்தின் நோக்கம் அல்லது இலக்கு என்ன என்பது பற்றியும் எதுவும் கூறவில்லை.

இயக்கத்தின் பெயரை அறிவித்த அண்ணாமலை, இயக்கத் தோழர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கப்போவதாகவும் அறிவிக்கிறார். மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கொள்கை வழி இயக்கம் அமைவதாகக் கூறுகிறார்.

அப்துல் கலாம் நல்ல மனிதர்; சிறந்த அறிவியல் அறிஞர். அண்ணாமலை, தான் தெரிவுசெய்த இளையோருக்கு அளிக்கவிருக்கும் அரசியல் பயற்சியில் கலாம் அவர்களின் கொள்கை இடம்பெற வேண்டுமே?

அப்துல் கலாமின் அரசியல் நிலைப்பாடு என்ன? கலாம் என்ன அரசியல் பேசினார்? நல்ல மனிதராகிய கலாம், சமூகத்தில் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டு வரும் இசுலாமியர் பக்கம் இருந்ததே இல்லை. தனக்குக் கிடைத்த பதவி மூலம், தன்னைப் பழுதுபடாமல் பார்த்துக்கொண்டார். இந்துத்துவ அரசியலாருக்கு எப்போதுமே நியாயப்படுத்தும் சில முகமூடிகள் தேவைப்படும். இம்முகங்களில் தலித் ஒருவர் குடியரசுத் தலைவராக்கப்படுவார்; இவரைப் போல், ஒரு பழங்குடியினர் ஒருவர் அல்லது ஓர் இசுலாமியர் ஒருவர் முகமூடிகளாகக் காட்டப்பெறுவார். கலாம் அவர்களை இரண்டாம் முறையாக முன் மொழிந்தபோது, காங்கிரஸ் மறுத்த நிலையில் இந்துத்துவர்கள் கலாமை ஆதரிக்க மறுத்தமையை அரசியலாக்கியது. ஒரு கலாமை ஆதரித்து இசுலாமிய ஆதரவு நிலை எடுத்தது போலக் காட்டிக் கொண்ட இந்துத்துவர்களின் போலி அரசியலை அனைவரும் அறிவர். கலாமின் கொள்கைகளைத் தூக்கிச் சுமப்பதாகக் காட்டிக் கொள்ளும் நாடகத்தைப் புரிந்துகொள்வோம்.

ஒன்றியத்தை ஆளும் கட்சிகள் மாநில மொழியைப் புரிந்து கொள்வதில்லையென்ற ஒரு சொற்றொடர் மூலம் இவர் காட்ட விரும்புவது என்ன? தமிழ்நாடு பேசிய திராவிடத்தை, திராவிடம் பேசிய தமிழ்த் தேசியம், மாநிலச் சுயாட்சி, தமிழ்ப் பாரம்பரியம் ஆகியவை இவரின் அரசியல் பேச்சுகளில் (Discourse) என்றுமே இடம்பெற்றதில்லைகோவையை மையமாகக் கொண்டு இவர் ஆற்றிய சிறுபான்மை வெறுப்பரசியலை வரலாறு மறக்குமா? கோவையில்சிலிண்டர் வெடிப்புஎன்ற பெயரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின்போது எவ்வளவு ஆக்ரோஷமாக நடந்துகொண்டார் என்பதை யார் மறக்க இயலும்?

எப்படி மறக்க முடியும்?

தமிழ்நாட்டுக் கிறித்தவர் மட்டுமல்லாமல், மனித உரிமைகள்மீது அக்கறை கொண்ட எவராலும் மறக்க இயலாத நிகழ்வொன்றை இங்கு நினைவுபடுத்துதல் இவரை யாரென்று காட்ட துணை போகலாம். கும்பகோணம் மறைமாவட்டத்தின் மிக்கேல்பட்டி கிராமத்து கத்தோலிக்கப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லாவண்யாவின் மரணத்திற்குக் கட்டாய மதமாற்றமே காரணம் என்று எழுப்பப்பட்ட பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியவர் இந்த அண்ணாமலை. பொய்வழக்குத் தொடுத்து சிறைவைக்கப்பட்ட அருள்சகோதரி அனுபவித்த கொடுமைகள் பல. கபடமாய், மதமாற்ற நெருக்குதலால் ஏற்பட்ட மரணமே என்று பொய்யுரைத்து, இவ்வழக்கை சி.பி.. விசாரிக்கவேண்டும் என்று வற்புறுத்தியவர் இவர். மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தந்தவிசனப்படும் விந்தை தீர்ப்பும் (நீதியரசர் சந்துரு) இப்பிரச்சினையுள் அடக்கம்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீவிரமாக விசாரித்து, லாவண்யா மரணத்தில் மதமாற்றம் காரணமில்லை என்ற தீர்ப்பு தரப்பட்டு பல மாதங்களாகியும், அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கோரவில்லை.

அண்ணாமலை எனும் காவல்துறை உயர் அதிகாரி பா...வின் உறுப்பினராகும் முன்னே அதன் விசுவாசியாகிவிட்டார் என்பதே உண்மை. இன்று புதிதாக உருவெடுத்துள்ள .வெ.. எனும் சக்தியை அண்ணாமலை போன்ற ஒருவரால் எதிர்கொள்வது சாத்தியமாகலாம் என்ற கனவும் இருக்கலாம். பாரதிய சனதாவின் தேர்தல் வலு நொறுங்கிப்போயிருந்தாலும், ஏற்கெனவே விதைக்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியல் இன்னும் நீர்த்துப் போகாத நிலையில், புதிய பெயரோடு தமிழ்நாட்டு மக்களைக் கவர்ந்திழுக்க உருவாக்கப்படும் (Manufacture) அணியே அண்ணாமலையின் தலைமையில் உருவாகும் புதிய அணி.

இம்மாதிரியாகப் புதுவடிவங்களில் புதுப்பெயரோடு அணிகளைத் திரட்டுவது ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்புக்குப் புதியதல்ல; தமிழ்நாட்டு மண்ணிற்கென உருவாக்கப்பட்ட இந்து முன்னணியும், அதன் பின்பு இந்து மக்கள் கட்சியும் இதற்குச் சில எடுத்துக்காட்டுகள்.

மதவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றுக்கணக்கிலான கிளை அமைப்புகள் நாடு முழுவதும் தம் கருத்தியல் வீச்சு மூலம் இந்திய ஒழுங்கமைவைச் சிதைத்து வருகின்ற நிலையில் மோடி, அமித்ஷா ஆசியோடு அண்ணாமலை தொடங்க இருப்பது மற்றுமொரு சங்கப் பரிவார அமைப்பே! பா...வின் மற்றோர் அரசியல் அணியே!

news
சிறப்புக்கட்டுரை
மனத்தில் ஓர் ஏக்கம்!

இரவு 2.15 மணி.…

மருத்துவமனை வழித்தடங்கள் மெதுவான வெளிச்சத்தில் அமைதியாக நின்றுகொண்டிருந்தன. பகலில் மக்கள் கூட்டத்தால் நிரம்பிய அந்த இடம், இப்போது ஓர் ஆலயத்தைப் போல அமைதியாக இருந்தது.

ஆனால், அந்த அமைதிக்குள் எத்தனை கதைகள்?… எத்தனை பயங்கள்? எத்தனை கண்ணீர்கள்? ICU வாசலுக்கு வெளியே ஒரு வயதான நபர் அமர்ந்திருந்தார். கையில் பழைய செபமாலை. உதடுகள் மெதுவாக நகர்கின்றன. ‘அன்னை மரியே!… என் மகனை மட்டும் காப்பாத்திடு!’

அவருக்கு அருகில் இருந்த நாற்காலியில் பாதி குடிக்கப்பட்ட தேநீர் குளிர்ந்துவிட்டது. ஆனால், அவரது கண்கள் மட்டும் ICU கதவிலிருந்தே நகரவில்லை. அந்த நேரத்தில் அவருக்குப் பணம் நினைவில் இல்லை; பதவி நினைவில் இல்லை; உலகம் நினைவில் இல்லை; ஒரே ஒரு விசயம் மட்டுமே மனத்தில் இருந்தது: ‘என் குழந்தை உயிருடன் திரும்பிவர வேண்டும்.’

மருத்துவமனையின் இரவுகள் மனிதர்களை மாற்றிவிடுகின்றன. பகலில் தன்னம்பிக்கையோடு பேசும் மனிதர்கள்கூட, இரவில் இறைவனின் முன் உடைந்துபோகிறார்கள். ஏனெனில், அங்கேதான் மனிதனுக்குப் புரிகிறது... உயிர் என்பது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லையென்று

ஓர் அறையில் புதிதாகப் பிறந்த குழந்தையின் அழுகை கேட்கிறது. அதேநேரத்தில் மற்றோர் அறையில், ஒரு குடும்பம் தங்களின் அன்பான ஒருவரின் இறுதிமூச்சை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஒரே கட்டடத்திற்குள் பிறப்பும்மரணமும்,… நம்பிக்கையும்பயமும், கண்ணீரும்அற்புதமும்!… அதுதான் மருத்துவமனை! ஒரு செவிலியர் அமைதியாக நோயாளியின் போர்வையைச் சரிசெய்கிறார். பலமணி நேர கடமையால் கண்கள் சிவந்திருந்தாலும், அவர் சிரிக்க முயற்சிக்கிறார். “அம்மா,… கொஞ்சம் தண்ணீர் குடிங்க,… எல்லாம் சரியாகிடும்.”

இந்த வார்த்தைகள் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், சில நேரங்களில் இந்த ஓர் அக்கறைதான் ஒரு நோயாளிக்கு உயிர் வாழும் தைரியமாக மாறிவிடுகிறது.

மருத்துவமனை என்பது வெறும் சிகிச்சை அளிக்கும் இடமல்ல; அது மனித அகந்தை உடையும் இடம்; அங்கே பணக்காரர் தனியாக அழுகிறார்; ஏழை அமைதியாகச் செபிக்கிறார்; படித்தவர் பதறுகிறார்; படிக்காதவர்இறைவன் இருக்கிறார்என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்; அங்கே எல்லாரும் ஒரே மாதிரி.

ICU வாசலுக்கு வெளியே சில நேரங்களில் அனைத்து மதங்களும் ஒன்றாக நிற்கின்றன. ஒருவர் செபமாலை உருட்டுகிறார். மற்றொருவர் குர்ஆன் வசனங்களை வாசிக்கிறார். மற்றொருவர் அமைதியாகக் கைகளைக் கூப்பி நிற்கிறார். ஆனால், எல்லாருடைய செபமும்இறைவாஇன்னும் கொஞ்ச நாள் இவர்கள் வாழ அருள்தாரும்என்று ஒரே வானத்தை நோக்கித்தான் செல்கிறது

மருத்துவமனையின் இரவு நேரங்களில் பல உண்மைகள் கற்றுக்கொள்ளப்படுகின்றன. வாழ்க்கை மிகவும் குறுகியது. அன்பை வெளிப்படுத்தத் தாமதிக்கக்கூடாது. மன்னிப்பதை நாளைக்குத் தள்ளிவைக்கக்கூடாது.

நான் இருக்கேன்என்ற வார்த்தை கூட ஒருவருக்கு உயிர் வாழக் காரணமாக மாறலாம். சில நேரங்களில் மருத்துவமனைப் படுக்கைகளில் படுத்திருப்பவர்கள் மருந்தைவிட அதிகமாக எதிர்பார்ப்பது ஓர் அன்பான குரலைத்தான்: ‘பயப்படாதீங்க,… நான் உங்களோட இருக்கேன்.’

இன்று மருத்துவமனையின் ஓர் அறையில் யாரோ ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கலாம். யாரோ ஒருவர் கண்ணீர் மல்கச் செபித்துக் கொண்டிருக்கலாம். யாரோ ஒருவர் அதிசயத்திற்காகக் காத்திருக்கலாம். ஆனால், அந்த இரவின் ஆழ்ந்த அமைதிக்குள் கூடஇறைவன் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறார். ஒரு செவிலியரின் கரங்களில்,… ஒரு மருத்துவரின் முயற்சியில்,… ஒரு தாயின் கண்ணீரில்,… ஓர் அருள்சகோதரியின் செபத்தில்... ஆம், மருத்துவமனையின் இரவு என்பது மனித சக்தி முடிவடையும் நேரமல்ல; இறைவனின் கருணை தொடங்கும் நேரம். அதனால்தான் அந்த இரவு அமைதிக்குள் கூட  ஒரு பெரிய செபம் தொடர்ந்து உயர்கிறது: ‘இறைவா,… இந்த உயிரை மட்டும் காப்பாற்றிவிடு.’

மருத்துவமனையின் இரவு அமைதியாகத் தோன்றலாம்; ஆனால், அந்த அமைதிக்குள் ஆயிரம் செபங்கள் வானத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன.

மனிதர்களின் கைகள் சோர்ந்துபோகும் இடத்தில், இறைவனின் கரங்கள் இன்னும் வேலை செய்துகொண்டே இருக்கின்றன. ஏனெனில், சில இரவுகள் மருந்துகளால் அல்ல; கருணையால் விடிகின்றன.

news
சிறப்புக்கட்டுரை
குறளும் வாழ்வும் – 06 (வாரம் ஒரு குறள்)

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார் (குறள் 6)

குறள் விளக்கம்: ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலைபெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

சிந்தனை: அறிவியல் வெளிநோக்கியது: ஆன்மிகம் உள்நோக்கியது. புறப்பார்வையை அகற்றி அகப்பயணம் செய்தால் ஒழுக்க நெறியில் நீண்ட நாள் வாழமுடியும். ஐம்பொறிகளும் உலக இன்பங்களை உள்ளத்திற்குள் கொண்டு வருபவை. கண்களை மூடி, தனக்குள் பிரயாணம் செய்து ஆன்ம வாழ்வை மனிதன் நோக்கவேண்டும்.

கலீல் கிப்ரானுடைய இந்தக் கதை ஆழமானது: ஒரு நகரத்தில் நாய் ஒன்று இருந்தது. அது திடீரென்று மெய்ஞானமடைந்தது. மற்ற நாய்களிடம், “குரைப்பதை நிறுத்துங்கள்; தேவையில்லாமல் குரைப்பதாலேயே நம் ஆற்றலில் பெரும்பகுதி வீணாகிவிடுகிறது என்று போதனை செய்தது.

ஆனால், குரைப்பதை நிறுத்துவது நாய்களுக்குக் கடினமாக இருந்தது. அவை அந்த அறிவுரை வழங்கிய நாயிடம் விளக்கமளித்தன: “நீங்கள் ஒரு மாபெரும் நாய். நீங்கள் சொல்வது எல்லாம் மெய்தான். ஆனால், நாய்கள் எங்களால் மௌனமாகத் தியானம் செய்ய முடிவதில்லை என்றன.

தன்னைப் போல் சாதாரண நாய்களால் செய்ய இயலவில்லை என்பது அறிவுஜீவி நாய்க்கு மகிழ்வைத் தந்தது. சில நாள்களுக்குப் பின், பிற நாய்கள் முடிவெடுத்தபடி ஒருநாள் குரைக்காமல் இருந்தன. அறிவு ஜீவி நாய்க்கோ எந்த நாயும் குரைக்காமல் இருப்பது ஆச்சரியம் அளித்தது. பின் ஓர் இருண்ட மூலைக்குச் சென்று குரைக்க ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து எல்லா நாய்களும் குரைக்க ஆரம்பித்தன. அறிவுஜீவி நாய் மீண்டும் போதிக்க ஆரம்பித்தது.

இக்கதையில் தவறான எண்ணத்தோடு அறிவு ஜீவி நாய் மற்ற நாய்களுக்கு வழிகாட்டுகிறது. குரைப்பது என்ற பொறியை அடக்கி, ஆற்றலைப் பெருக்கு என்ற அறிவுஜீவி நாய் போதித்த போதனை சரியானது. ஆனால், அப்போதனையைப் பிற நாய்கள் கடைப்பிடிப்பதை அது விரும்பவில்லை. தங்கள் பலவீனத்தைக் கட்டுப்படுத்தி அவை முயற்சிகள் மேற்கொள்வதையும் அது விரும்பவில்லை.

மாற்கு நற்செய்தி இயல் 9 இறைவார்த்தைகள் 42 முதல் 47-இல் இறைமகன் இயேசு, “என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி கடலில் தள்ளி விடுவதே அவர்களுக்கு நல்லது. உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணுடையவராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது என்கின்றார். நமது நல்வாழ்வுக்கு இடறலாய் இருக்கும் பொறிகளை இறைமகன் இங்கு வரிசைப்படுத்துகின்றார். கை, கால், கண் என அங்க அவயங்களை வரிசைப்படுத்திவிட்டு, அவை இல்லாதிருப்பதே நலம் என்கிறார். அகப் பயணத்தில் ஆர்வம் காட்டி வாழ்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
‘முதல் மரியாதை’ தந்தவருக்கு இறுதி மரியாதை (‘கலைத்தாயின் தலைமகன்’ இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு!)

என் இனிய தமிழ் மக்களேஎன்ற கரகரப்பான குரலுக்குச் சொந்தக்காரர்; தன் இனிய தமிழ் மக்களை இறக்கும் வரை உயிராகவே எண்ணியவர்; தான் படைத்த ஒவ்வொரு கலைப்படைப்பையும் நேர்மையாக நேசித்தவர்; தன் படைப்புகளால் சாதிய ஆதிக்க வர்க்கத்தைத் துணிவோடு கன்னத்தில் அறைந்தவர்; மிகைப்படுத்தப்பட்ட, நம் பகத்தன்மையற்ற சினிமாக் கலைப்படைப்பை எதார்த்த கலைப்படைப்பாக மாற்றிக்காட்டிய மாபெரும் இயக்குநர்!

அதுவரை சினிமாவில் ஒரு பகுதியாக இருந்த வெளிப்புறப் படப்பிடிப்புகளை 1977-இல், தான் முதல் முறையாக இயக்கியபதினாறு வயதினிலேதிரைப்படத்தில் முழுமையாக வெளிப்புறப் படப்பிடிப்பாக மாற்றிக்காட்டி சினிமா சரித்திரத்தையே புரட்டிப்போட்டவர். அதாவது, தமிழ் சினிமாவின் கேமராக்களை ஸ்டுடியோக்களின் செயற்கையான நான்கு சுவர்களுக்குள் இருந்து விடுவித்து, கிராமத்து நெல் வயல்களுக்கும், புழுதி பறக்கும் ஒற்றையடிப் பாதைகளுக்கும், தமிழ் மண்ணின் நிஜமான மனிதர்களிடமும் கொண்டு சென்றஇயக்குநர் இமயம்பாரதிராஜா தனது 84-வது அகவையில் (ஜூன் 10, 2026) காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் இம்மண் வாசனையிலிருந்து விடைபெற்றுக் கொண்டார். ஒரு பெரும் சகாப்தம் நிறைவுற்றிருக்கிறது.

கிராமத்து வாழ்வியலின் காவியங்கள்

செட்டுகளுக்குள், செயற்கை விளக்குகளுக்குள் முடங்கிக்கிடந்த திரையுலகிற்கு உண்மையான கிராமத்து வெயிலையும், மனிதர்களின் வேர்வையையும், வெள்ளந்தி வாழ்க்கையையும் அப்படியே திரையில் கடத்தியவர். மயில், சப்பாணி, பரட்டை என அவர் வடித்த கதாபாத்திரங்கள் தமிழர்களின் கூட்டு மனச்சான்றில் அழியாச் சுவடுகளாகப் பதிந்தன. கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோரின் திரை வாழ்வில் இப்படம் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வணிகப் படங்களும் கிராமத்து மண்வாசனையோடு மாபெரும் வெற்றியைப் பெறமுடியும் என்ற புதிய இலக்கணத்தை அவர் தமிழ் சினிமாவிற்கு வழங்கினார்.

காலத்தால் அழியாத திரைக்காவியங்கள்

16 வயதினிலேபடத்திற்குப் பிறகு அவர் தொட்ட உயரங்கள் அனைத்தும் இமயத்தின் சிகரங்கள். ‘கிழக்கே போகும் இரயில், ‘புதிய வார்ப்புகள், ‘மண்வாசனை, ‘கிழக்குச் சீமையிலே, ‘சிகப்பு ரோஜாக்கள், ‘ஒரு கைதியின் டைரி, ‘வேதம் புதிது,  ‘கருத்தம்மாஉள்ளிட்ட பல திரைப்படங்கள் காலத்தால் அழியாத திரைக்காவியங்களாகத் திகழ்கின்றன.

அவரது திரைப்பயணத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்த கூட்டணி தமிழ்த் திரையுலகின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. இவர்களின் பாடல்கள் கிராமங்களின் ஆன்மாவாக இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. பின்னர் இசைப்புயல் .ஆர். ரஹ்மானுடன் இணைந்துகிழக்குச் சீமையிலே, ‘கருத்தம்மாபோன்ற மறக்க முடியாத இசைக் காவியங்களையும் வழங்கினார்.

புதிய ஆளுமைகளை உருவாக்கிய பட்டறை

கோடம்பாக்கத்தில் பாரதிராஜாவின்மனோஜ் கிரியேஷன்ஸ்என்பது ஒரு புகழ்பெற்ற சினிமாப் பல்கலைக்கழகம். பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா போன்ற ஆகச்சிறந்த இயக்குநர்களையும், ராதிகா, கார்த்திக், ராதா, ரேவதி, நெப்போலியன், சுகன்யா, ரஞ்சிதா போன்ற எண்ணற்ற நட்சத்திரங்களையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே  சாரும். புதிய திறமைகளைத் தேடிக் கண்டறிந்து வளர்ப்பதில் இவர் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்.

இந்தியத் திரையுலகிற்குப் பாரதிராஜா ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 2004-இல் அவருக்குப்பத்மஸ்ரீவிருது வழங்கிச் சிறப்பித்தது. வெவ்வேறு பிரிவுகளில் 6 தேசிய விருதுகளையும், தமிழ்நாடு அரசின்கலைமாமணிவிருதுடன் 6 முறை மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ளார். எனினும், தமிழ் நெஞ்சங்கள் அவருக்குச் சூட்டியஇயக்குநர் இமயம்என்ற பட்டமே ஆகச்சிறந்த மகுடமாகும்.

கேமராவுக்குப் பின்னால் இருந்து முன்னால் வரை...

நடிகன் ஆவதற்காகவே சென்னை வந்தவர், மாபெரும் இயக்குநரானார். ஆயினும், பின்னாளில் காலம் அவருடைய நடிப்புக் கனவையும் அவரது கடைசிக்காலத்தில் அவருக்குக் கொடுத்ததுதான் விந்தையிலும் விந்தை!

ஒரு சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, தேர்ந்த குணச்சித்திர நடிகராகவும் பாரதிராஜா  தனது திறமையை வெளிப்படுத்தினார். ‘ஆயுத எழுத்துபடத்தில் மிரட்டலான அரசியல்வாதியாகவும், ‘பாண்டிய நாடு, ‘குரங்கு பொம்மை, ‘நம்ம வீட்டுப் பிள்ளை, ‘ஈஸ்வரன், ‘திருச்சிற்றம்பலம், ‘மகாராஜாமற்றும் 2025-இல் வெளியானநிறம் மாறும் உலகில்போன்ற படங்களில் அவர் வெளிப்படுத்திய முதிர்ச்சியான நடிப்பு, காலத்தால் அழியாதது.

முதல் மரியாதைதந்தவருக்கு இறுதி மரியாதை!

இயக்குநர் இமயத்தின் மறைவுச் செய்தி தமிழ் உலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் அவரது இல்லத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்ச் சினிமா உலகிற்குப் பாரதிராஜா ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். திரையுலகில்முதல் மரியாதைஎன்ற உன்னதக் காவியத்தைத் தந்த பெருங்கலைஞனுக்கு தமிழ்நாடு அரசு தனதுஇறுதி மரியாதையைஅரசு மரியாதையாகச் செலுத்தி மதிப்பளிக்கிறது

பாரதிராஜா என்ற மாபெரும் கலைஞனின் உடல் நம்மை விட்டுப் பிரிந்திருக்கலாம்; ஆனால், கேமராவின் வழியே அவர் பதித்துச் சென்ற மண்வாசனையும், தமிழர்களின் வாழ்வியலும், தமிழ் சினிமாவின் வரலாறாக என்றென்றும் நிலைத்திருக்கும். அவர் விட்டுச் சென்ற கலையின் சுவடுகள் காலமுள்ளவரை எதிரொலித்துக் கொண்டே இருக்கும்!

உலகளாவிய தமிழ் மக்களிடம் நீங்காத இடம்பிடித்த மாபெரும் இயக்குநர் பாரதிராஜா இன்று இல்லாமல் போனார்ஆனால், அவர் படைத்த அத்தனை படைப்புகளின் சாயல் இல்லாமல் தமிழ் திரைப்பட உலகம் இனி  வாழ முடியாது என்பதே  எழுதப்பட்ட உண்மை!

84 வயதினிலே அலைகள் ஓய்ந்ததேகடலோரக் கவிதையேகிழக்கே போகும் இரயிலில் சென்று வா! நீ உருவாக்கிய வேதம் என்றும் புதிதே!    

news
சிறப்புக்கட்டுரை
அப்பா ஓர் அருளடையாளம் (ஜூன் 21: உலக தந்தையர் தினம்)

அங்கீகாரம் பெறாத அப்பாவின் அன்பு?

தாயின் தியாகம் பேசப்படுகிறது, பாராட்டப்படுகிறது, அங்கீகரிக்கப்படுகிறது; பிரதிபலன் கிடைத்து விடுகிறது. ஆனால், பெரும்பாலும் தந்தையின் தியாகம், தாய்க்கு நிகராய் அங்கீகரிக்கப்படுவதில்லைஉலகில் தன் மனைவியின் வயிற்றில் கரு உதயமான நாள் முதற்கொண்டு, ஒரு தந்தை தனது மனத்தில் தனது வாரிசை சுகமாகச் சுமக்க ஆரம்பிக்கிறார்; கருவுற்ற தன் மனைவியையும் சேர்த்துச் சுமக்கிறார்.

தந்தை தன் அன்பை, தியாகத்தை வெளிப்படையாகச் சொல்வதில்லை. தேய்ந்த செருப்பும், தைத்த உடையும், காப்புக்காய்த்த கரங்களும், குழிகளோடு காணப்படும் கன்னங்களும் அங்கீகாரம் பெறாத நம் தந்தையின் தியாகத்தின் அடையாளங்கள்.

அப்பாவின் அன்பு ஒரு மறைபொருள்

தன் குடும்பத்தின் தேவைகளுக்காக அனுதினமும் தன் உடலால் காயப்பட்டு, தாயைப் போலவே தியாகம் செய்பவர். தன் குடும்பத்திற்கு ஏற்படும் கஷ்டங்கள், சிலுவைகள், சவால்கள், அவமானங்கள் போன்றவற்றை முன்னணியில் இருந்து சந்திக்கும் ஒப்பற்றத் தலைவனாகத் திகழ்கிறார். தாயின் தியாகத்திற்குக் குழந்தைகள் தரும் அங்கீகாரத்தையும் பாராட்டையும் சேர்த்து இரசிக்கும் பெருந்தன்மையுள்ள தியாகத் தலைவனாய் திகழ்கிறார். அங்கீகரிக்கப்படாத மறைந்த நிலையில், உண்மையான தன்னலமற்ற பிரதிபலன் எதிர்பார்க்காத தியாக அன்பை வாழ்ந்து காட்டுவதே தந்தையின் அன்பாகும்.

ஏன் வாழ்வில் தந்தையின் அன்பு மறை பொருளாகவே அமைகிறது? அதாவது மறைந்த ஒன்றாக, மறைக்கப்பட்டப் பொருளாக உள்ளது.  

அப்பாவின் அன்பு அதிர்வுகளால் ஆனது                                                                                

தந்தையின் அன்பு, ஆமையின் பாதுகாப்பைப் போன்றது. ஆமை முட்டைகளைக் கரைகளில் புதைத்துவிட்டுக் கடலுக்குச் சென்றுவிடுகிறது. ஆனால், அதன் எண்ணமெல்லாம் அந்த முட்டைகளைப் பற்றிதான் என்று இன்றைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆமைகள் தங்களது முட்டைகளுக்கு ஆபத்து வந்தவுடன், உடனே வந்து அவற்றை எதிர்கொள்கின்றன.

அப்பாவின் ஆதரவும் அன்பும் பாதுகாப்பும் அதிர்வுகளாலும் ஆனது என்று இன்றைய உளவியல் உணர்த்துகிறது. என் அப்பாவின் அன்பை அவர் உயிருடன் இருந்தபோது உணர்ந்திட, அனுபவித்திட, வெளிப்படுத்திட என்னால் முடியவில்லை; தெரியவும் இல்லைஏன், அப்பா உயிருடன் இருந்தபோது அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுச் சென்ற காரியங்களில், அவர் உடனிருந்து பயணிப்பதாக உணர்ந்தேன். அவர் இறந்தபின் எங்கும் வியாபித்து, நான் செய்திடும் செயல்களில் அன்பு அதிர்வுகளால் என்னோடு பயணிக்கும் ஓர் அருளடையாளமாகவே இருக்கிறார்.

மனமாற்றத்திற்கு வித்திட்ட அப்பாவின் அன்பு அதிர்வுகள்

தன்னைப் பிரிந்து சென்ற ஊதாரி மகன் வரவை எதிர்பார்த்து, அன்பு அதிர்வுகளோடு காத்திருந்த தந்தையாக இயேசு இறைவனின் அதிர்வுகளாலான அன்பைக் காட்டுகிறார். தொலைவில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார் (லூக் 15:20). அவன் மனமாற்றத்திற்கு அப்பாவின் அதிர்வுகளான, அவன் வரவை எதிர்பார்க்கும் அன்பே, ஊதாரி மகனின் மனமாற்ற வாழ்விற்கு வழிவகுக்க முக்கியக் காரணமாக இருந்தது என்பது உளவியல் காட்டும் உண்மை. கடவுளைஅப்பாஎன்று ஆளுமை உறவு பாராட்டுவது, கிறித்தவ இறையியலின் அடிப்படையும் ஆணிவேருமாய் இருக்கிறது

அப்பாவின் அன்பு ஆளுமை சார்ந்ததுதந்தையின் ஆளுமை நிச்சயமாகத் தன் குழந்தைகளைப் பாதிக்கும் என்பது ஆன்மிக - உளவியல் உண்மையாகும். “தந்தையர் புளித்த திராட்சைப் பழங்களைத் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம் (எரோ 31: 29) என்ற இறைவாக்கின்படி தந்தையர் வாழ்ந்துகாட்டிய நற்பண்புகளும் தீய பழக்கங்களும் குழந்தைகளைப் பாதிக்கும். “முக்கியமானவர்களை அப்படியே பின்பற்றுதல் (imitating the significant or significant others) என்ற கொள்கையை ஆல்பர்ட் பண்டுரா என்ற உளவியலாளர் அழுத்தம் திருத்தமாக விவரிக்கிறார்.

குழந்தைகள் தங்களது தந்தையைப் போலவே, மாதிரி ஆளுமையைப் பெற்றுவிடுகிறார்கள். தந்தையின் மறுபிம்பமாகப் பிறப்பெடுக்கிறார்கள்இவ்வுண்மையை, “நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார் (யோவா 14: 11) என்ற இயேசுவின் வாக்கு மெய்ப்பிக்கிறது. ‘மகன் தந்தையின் பெயரைக் காப்பாற்றுகிறான்என்ற பழமொழி தந்தையின் ஆளுமையைப் பெற்று அவரைப் போல் வாழ்ந்து, அவரது பெயரை நிலைநாட்டுவதையே நம் காலச்சார உண்மை சுட்டிக்காட்டுகிறது. கடவுளின் அன்பு மனுவுருவாகித் தசை வடிவில் கண் காணக்கூடிய ஆளுமைத் தெய்வமே தந்தையாகும்.                   

நம் அப்பா ஓர் அருளடையாளம்

தேய்ந்த செருப்பும், கிழிந்த உடையும், காப்புக் காய்த்த கரங்களும் குழிகள் நிறைந்த கன்னங்களோடும் என் தந்தையைக் காணும்போது, ஏழ்மை வார்த்தைப்பாடு எடுக்காத ஓர் இல்லறத் துறவி என்றே நினைப்பேன். தனக்குக் கிடைத்த சிறிது பூர்விக நிலத்தையும் எனக்காக விற்ற நம் அப்பா ஓர் அருளடையாளம்.

அவர் உழைத்து அலுத்து வரும் நேரத்தில் கூட, அன்புக்காக ஏங்கும் குழந்தைகளிடம் நேரம் செலவழித்து, அவர்களை அரவணைத்துப் பாதுகாக்கும் போதுநம் அப்பா ஓர் அருளடையாளம்.

நான் தவறுசெய்து அவமானத்தில் திளைத்து, மனமாற்றத்திற்காக ஏங்கும்போது மன்னித்து ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் நம் அப்பா ஓர் அருளடையாளமாகிறார்.

அற்ப ஆசைகளை விட்டுவிட்டு, விழுமியங்களின்படி முன்மாதிரியாய் வாழ்ந்துகாட்டிய நம் அப்பா ஓர் அருளடையாளம்.

வாழ்க்கையின் சூறாவளியில் சிக்கிக் குடும்பமே பாதிக்கப்பட்டு, வழியிழந்து நிற்கிறபோது, கடனை வாங்கி, தான் அவமானப்பட்டு நம்பிக்கையூட்டி, வழி நடத்தித் தியாகத் தலைவனாகும்போது நம் அப்பா ஓர் அருளடையாளம்.

தன் குழந்தைகள் வாழ்வின் இலட்சியத்தை அடைந்திடப் போராடித் தவிக்கும்போது, தனது வேலைப் பளுவால் உடனிருக்காவிட்டாலும், தொலைவிலிருந்து அன்பின் அதிர்வுகளை அனுப்பும்  நம் அப்பா ஓர் அருளடையாளம்.

வாழ்ந்த போதும், மரித்த பின்னும் பிள்ளைகளுக்காக இறைவனிடம் பரிந்துபேசி, இறைவரங்களைப் பெற்றுத் தரும் நம் அப்பா ஓர் அருளடையாளம்.

குழந்தைகள் வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கி, செய்வது அறியாது திகைத்து நிற்கிறபோது, அவர்களை ஆற்றுப்படுத்தி வழிநடத்தும் நம் அப்பா ஓர் அருளடையாளம்.

அனுதினமும் இறைவார்த்தையை வாசித்து, குடும்ப செபத்தைத் தலைமை ஏற்று நடத்தும் நம் அப்பா ஓர் அருளடையாளம்.

news
சிறப்புக்கட்டுரை
சிதறிக்கிடக்கும் சிற்பங்கள் (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 02)

அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்வுக்கு விருந்தினராகச் சென்றபோது, அக்கல்லூரியில் சாதனை படைத்த மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். மனம் மகிழ்ந்தேன். அதேவேளையில், சாதனை படைக்கவேண்டிய போதிய ஆற்றலும் வாய்ப்பும் இருந்தும், அதை வேண்டுமென்றே ஒதுக்கி வாழ்க்கையை வீணாக்கும் மாணவர்களைப் பற்றிக் கூறியபோது, மனம் வருந்தியது. இதை மையப்படுத்தி எழுதிக் கொஞ்சம் மன ஆறுதல் அடைவோம் என எழுதுகிறேன்.

சிதறிக் கிடக்கும் சிற்பங்களைப் பார்க்கும்போது, அது முதலில் ஓர் எதிர்மறை எண்ணத்தை உண்டாக்கலாம். ஆனால், அவை சிதறிப் போனதற்கான காரணங்களை அறிந்துகொண்டால், அந்தச் சிதறல்கள்கூட ஒரு கற்றல் வாய்ப்பை நமக்குத் தரும்.

நமது வாழ்க்கையும் ஒரு சிற்பத்தைப் போன்றதே. சிற்பி தனது பணியைத் தொடங்கும்போது, அவர் முன் இருக்கும் கல் வடிவமற்றது, கனமானது, சாதாரணமானது. ஆனால், பொறுமை, திறமை, தெளிவு மற்றும் கற்பனைத்திறன் கொண்டு அவர் அதைச் செதுக்கிச் செதுக்கி, இறுதியில் ஓர் அழகிய சிற்பமாக மாற்றுகிறார். அந்தச் சிற்பம் பலராலும் பாராட்டப்படுகிறது. அதன் அழகும், அது தரும் ஈர்ப்பும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், நமது வாழ்க்கையும் நமது கைகளிலேயே உருவாகிறது. சரியான திட்டமிடல், நேர்மை, ஒழுக்கம், சிந்தனைத் தெளிவு ஆகியவற்றோடு வாழ்ந்தால், நம்முடைய வாழ்க்கை பிறருக்குப் பாராட்டத்தக்க சிற்பமாக மாறும். எப்படி ஒரு சிறந்த சிற்பம் அனைவரையும் ஈர்க்கிறதோ, அதேபோல் ஒரு சிறந்த வாழ்க்கையும் எல்லாராலும் விரும்பப்படும்.

சில நேரங்களில், சிற்பியின் ஒரு தவறான அசைவால், கவனச் சிதறலால் சிற்பம் அது அடையவேண்டிய முழுமையை அடையாமல் கெட்டுப்போகிறது. அதைப் போலவே நாமும் சுயநல ஆசைகள், கோபம், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் ஆகியவற்றால் தவறுகளைச் செய்கிறோம். அப்பொழுது நம் வாழ்க்கை எனும் சிற்பத்தில் சில கீறல்கள் விழுகிறது. அந்தக் கீறல்களைச் சீர்செய்வது கடினம். சில முயற்சிகளின் மூலம் சரிசெய்ய முற்படலாம்; ஆனால், பல நேரங்களில் அழிக்க முடியாதத் தழும்பாக நிரந்தரமாகவே நிற்கும். இருப்பினும், சிதறிக்கிடக்கும் சிற்பங்களைப் போல நம் வாழ்க்கையிலும் ஏற்பட்ட சிதறல்கள் நம்மைத் தடுக்கும் ஒன்றாக அல்ல; கற்றுத்தரும் ஒன்றாக இருக்கமுடியும். அவற்றின்மூலம் நாம் எச்சரிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்கிறோம். அதனால், சிதறல்கள் எதிர்மறை அல்ல; மாறாக, வாழ்க்கையின் பாடங்களாகவே அதை அமைத்துக்கொள்ளவேண்டும்.

சிதறிக் கிடக்கும் சிற்பங்களைப் பார்க்கும்போது பெரும் மனவேதனையைத் தருகிறது. ஒரு காலத்தில் அழகின் உச்சமாய் விளங்கிய ஒன்றைச் சிதைவுற்ற நிலையில் பார்க்கும்போது, உடைந்து கிடக்கும் சிதறல்களைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். ஆனால், அந்தச் சிதைவின் உள்பொருளை நுண்ணறிவோடு ஆராய்ந்தால், அது வெறும் அழி வல்ல; ஏதோ ஒரு நசுக்கப்பட்ட குரலின் வெளிப்பாடாகத் தோன்றும். ‘அழகு என்றும் நிலைத்திருக் காது; ஆனால், அதன் பயணம், அதன் பாடம் நிலைத்திருக்கும்எனக் கூறுவதுபோல இருக்கும்.

இருப்பினும், சிதைவடைந்த சிற்பங்கள்கூட ஒரு புதுக் கண்ணோட்டத்தை நமக்குக் கற்றுத் தருகின்றன. ஆதலால், சிதறிக் கிடக்கும் சிற்பங்கள் எதிர்மறையின் அடையாளமல்ல; அவை வாழ்வின் பயணத்தில் தவறுகளும் காயங்களும் கற்றல்களும் ஒன்றிணைந்து, நம்மை முழுமைப்படுத்தும் ஓர் உவமை.

வாழ்க்கை என்பதே ஒரு சிற்பம். செதுக்கும் கைகள் நம்மிடமே உள்ளன. வாழ்க்கை எனும் சிற்பம் முழுமை காண்பதும், சிதறுண்டு கிடப்பதும் முழுக்க முழுக்க நம் எண்ணங்களின் அடிப்படையில்தான். ஆராய்ச்சிகளும் நூல்களும் அறிவின் வெளிப்பாடாக அமைகின்றன. அப்படியானால் ஆன்மாவின் வெளிப்பாடு? கலைகள்தான் ஆன்மாவின் வெளிப்பாடு. ஏனென்றால், கலைகள் எப்போதும் மனித உணர்வுகளை நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறைக்குக் கடத்தும் ஒரு செயல். தன் ஆழ்மனத்தில் அடங்கிக்கிடக்கும் மனக்குமுறல்களை மனிதர்களிடம் காட்டினால் வம்பு வந்துவிடும். ஆதலால், அதன் ஆற்றாமையைப் போக்க வடிகாலாகப் பயன்படுவது கலைதான். அப்படிப்பட்ட கலையின் வடிவமான சிற்பங்களை மனிதர்கள் அவர்களின் புதையல்களாகக் கருதி வருகின்றனர்.

அரசு மாறும்போது அல்லது வேறு ஒரு கருத்தாக்கம் கொண்ட கூட்டம் வரும்போது அவர்கள் முதலில் அடித்து நொறுக்குவது இந்தக் கலை வடிவத்தைத்தான். இதுதான் பலநூறு வருடங்களாக அவரவர் கருத்தாக்கத்தை மற்றொரு தலைமுறைக்குக் கடத்தும் ஆற்றல் கொண்டது. இது எதிரிகள் கண்ணை உறுத்தும்; ஆதலால் அவர்கள் பதம் பார்ப்பது கலைச் செல்வத்தைத்தான். ஏனென்றால், கலை என்பது நமது எண்ணங்களின் வெளிப்பாடு.

கலைவடிவம் கொண்ட சிற்பம் உடையும்போது எப்படி நமக்கு மனத்துயர் வருகிறதோ, அதுபோல நம் வாழ்க்கை எனும் சிற்பத்தைப் பிறர் உடைப்பது ஒருபுறம் இருக்கட்டும்; நாமே உடைப்பது எப்படி நியாயமாகும்? எது எப்படியாயினும், நினைவில் கொள்ளவேண்டியது ஒன்றுதான். வாழ்க்கை மிகப் பெரியது; ஒரு தவறு அல்லது ஒரு தடங்கலால் அது முடிவதில்லை. ஒரு கைதேர்ந்த சிற்பி தனது தவறான அசைவிற்காக அவரது கலைப்பணியைக் கைவிடமாட்டார். மாறாக, அவர் அதைப் பொலிவூட்டி, திருத்தி இன்னும் சிறப்பாக்கப் பாடுபடுவார். அதுபோல நாமும் நமது வாழ்க்கையில் பெரிய கனவு, பெரிய நோக்கம் வைத்திருக்கவேண்டும். அந்தப் பார்வையோடு நாம் தற்காலிகச் சிக்கல்களைச் சின்னாபின்னமாக்கி மேன்மையை அடைய முடியும்.

அண்மையில் மனித வாழ்நிலை குறித்த ஓர் ஆய்வைப் படித்தபோது, மனது சற்று வலித்தது. தற்போதைய சூழலில் பலர் தங்களது வாழ்க்கையை வாழாமலே வாழ்ந்து செல்கின்றனர் என்பதுதான். அவரவர் வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவது நம் கையில்தான் உள்ளது. மதிப்புமிகு நமது வாழ்க்கையைப் பெரிய பெரிய கனவுகள் கொண்டு செதுக்கிக்கொள்வதன் மூலம், வாழ்க்கையெனும் சிற்பத்தை நிலைநிறுத்தலாம். கருணை மிகுந்த பார்வையுடனும், தெளிவான கனவுடனும் செதுக்கப்பட்ட வாழ்க்கை நமக்கு மட்டும் அல்ல; நம்மைக் காணும் அனைவருக்கும் ஒரு தூண்டுகோலாக மாறும்.

கலையாற்றல் உள்ளத்தை ஈர்க்கும், கண்ணைக் கவரும். கலைகளின் எண்ணிக்கை 64 என மணிமேகலை கூறுகிறது. மனிதனுடைய மனத்தில் உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு. அந்த அழகுக் கலைகள் ஐந்து வகைப்படும் என்கிறார் மயிலை வேங்கடசாமி. அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக் கலை. இதில் சிற்பக் கலைக்கு அதிமுக்கியம் உண்டு; அதுதான் நம் அனைத்து உணர்வுகளையும் எளிதில் புரியவைக்கும். உலகிலேயே புத்தருக்குத்தான் அதிகமான சிற்பங்கள் உள்ளன. அப்படிப்பட்ட அந்தப் புத்த சிலைகள் சில வரலாற்றுப் புனைவுகளாலும் அரசு மாற்றங்களாலும் சிதைக்கப்பட்டன.

சிற்பங்களில் மனித உணர்வுகளின் பன்முகத்தன்மை வெளிப்படுகிறது. காஜூராஹோவில் காணப்படும் தேவதையின் மெல்லிய புன்னகை, காளியின் கொடிய சாயல், புத்தரின் தியான முக அமைதி... இவை அனைத்தும் சமயச் சின்னங்கள் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் உணர்வுகள் கல்லில் பதியப்பட்ட வடிவங்களே. மனித உணர்வுகள் கண்களுக்குத் தெரியாதவையாய் இருந்தாலும், கலை வழி தொட்டு உணரக்கூடிய வகையில் இருக்கின்றன என்பதற்கு எத்தனையோ சாட்சிகள் உள்ளன.

மனித உணர்வுகளைத் தொடர்புபடுத்திய சிற்பங்கள் தனிமனிதனுக்கும், உலகளாவிய உணர்வுகளுக்கும் இடையில் ஒரு பாலம் அமைக்கிறது. அவை நமது உள்ளுணர்வுகளை உரசி, எண்ணங்களை அலசி நம்மைப் புடமிடுகிறது.

சிற்பங்கள் சிறியவையாகவும் சிதறியவையாகவும் இருக்கலாம்; ஆனால், என்றும் அழியாதவையாகவே நிற்கின்றன. என்ன தடைகள் வந்தாலும், ‘இன்றைய நாளை நான் நன்றாகக் கடத்துவேன்; இதுவே என் கவனம். என் மனத்தின் அமைதிக்கு முதல் மருந்து நானேதான்; நான் மட்டும்தான்; நான் எனது வாழ்க்கையை முழுமையாக விரும்புகிறேன்; என் வாழ்வு மதிப்புமிக்கது; எனக்கு எதிராக யார் வந்தாலும், என்னை நானே திடப்படுத்திக்கொள்வேன்எனும் உறுதியான எண்ண அலைகளோடு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வோம். மௌனமாக நிற்கும் சிலைகள், நம்மை அதிகம் பேசவைக்கின்றன. மௌனம் கலைத்துச் செயலில் இறங்குபவன் அழியாக் கலையாய் போற்றப்படுகிறான். கலைகள் பல கண்டு, நிலைகள் பல அடைவோம்!