கிறிஸ்து பிறப்பு விழா என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வரலாற்றில் நடந்தேறிய ஓர் அழகான நிகழ்வினை நினைவுகூரும் கொண்டாட்டமாக மாறிவிடக்கூடாது. அது இறைமகன் இயேசு விருப்பத்துடனும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் அக்கறையுடனும் இவ்வுலகில் ஏழ்மையில் வாழ்வோரின், நொறுக்கப்படுவோரின், வெறுக்கப்படுவோரின், ஒடுக்கப்படுவோரின், மென்மையானவர்களின், பலம் இழந்தவர்களின் வாழ்வில் பங்கெடுக்க எடுத்த நிலைப்பாட்டின் கொண்டாட்டம்! உடனிருப்பின் கொண்டாட்டம்! இயேசு மனுவுடல் ஏற்ற மறைபொருளை, தூரத்தில் நின்றுகொண்டு அதனை வியந்து பார்க்கவேண்டிய இறைவனின் செயலாக நாம் கடந்து செல்லக்கூடாது. மாறாக, அவரது மனுவுடல் ஏற்பினை நாமே நமது அன்றாட வாழ்வில் வாழ்ந்திட, நமக்கு வழங்கப்பட்டுள்ள சவால் மிகுந்த அழைப்பாக ஏற்கவேண்டும், அதனை வாழ்ந்திடவேண்டும்.
கிறிஸ்துமஸ்
கொண்டாட்டத்தில் இறைவன் பிறந்த மாட்டுத்தொழுவத்தை நாம் அழகுபடுத்தி, ஒளிமயமாக்கி, மிகுந்த வண்ணங்கள் நிறைந்த இடமாக மாற்றி, அதன்மீது வழக்கமாக நமது கண்களைப் பதியவைப்போம். அவற்றைக் கடந்து மாட்டுத்தொழுவம் போன்று ஏழ்மையை, துன்பத்தை, புறக்கணிப்பை அன்றாட கசப்பான நிகழ்வாக-நிதர்சனமாகச் சந்திக்கும் மனிதர்கள்மீது நமது கண்கள் பதியட்டும்.
மனுவுடல் ஏற்பில்-ஏழ்மையே
இறைவெளிப்பாடு
பெத்லகேமில்
பிறந்த பாலன் இயேசுவிற்கு வசதியும், கவர்ச்சியான கண்கவர் பொருள்களும், சிறந்த மெத்தையும், சிறப்பு அரியணையும், சிவப்புக் கம்பள வரவேற்பும் வழங்கப்படவில்லை. சமுதாயம் புறக்கணித்த இயேசுவின் மனுவுடல் ஏற்பில் அவர் தேர்ந்துகொண்ட
இடமும், அப்பிறப்பினைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளும் அவரது தாழ்ச்சியின் வெளிப்பாடுகள். மனுவுடல் ஏற்பின் தாழ்ச்சி என்பது அன்று நடந்திட ஒரு சாதாரண சம்பவம் அல்ல; மாறாக, அதுவே இயேசுவின் நிலைப்பாடு. மனுவுடல் ஏற்பில் அவரின் ஏழ்மையும் தாழ்ச்சியும் இறைமையின் வெளிப்பாடுகள். அங்குதான், அம்மனநிலையில்தான் இறைவன் தம்மை வெளிப்படுத்துகின்றார்.
மனிதகுலத்தின்
துன்பத்தை
- தமது
ஏழ்மையில்
பகிர்ந்த
இயேசு
அகிலத்தையும்,
அதில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவன் ஒரு சிறிய, பலவீனமான, ஏழ்மையான குழந்தையாக இக்கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நம்மிடம் வருகின்றார். திருத்தந்தை 14-ஆம் லியோ தனது முதல் திருத்தூது ஊக்கவுரையான ‘நான் உன்னை அன்பு செய்தேன்’
என்னும் ஆவணத்தில் “நமது மனித இயல்பின் வரம்புகளையும் பலவீனங்களையும் பகிர்ந்துகொள்ளவே இயேசுவைச் சிறிய குழந்தையாகக் காண்போம். அவரே சிலுவையில் நமது வறுமையையும் இறப்பையும் பகிர்ந்துகொண்டார்” எனக்
குறிப்பிடுகிறார்.
இயேசுவின்
மனுவுடல் ஏற்றல் என்பது சமூகத்தில் பலம் இழந்து நிற்பவர்கள், உரிமையும் மாண்பும் மறுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் சார்பாக அவர் இருக்கின்றார். அவர்களுக்காகவே மாபெரும் நற்செய்தியாகப் பிறந்திருக்கின்றார். அவர்களின் இருளைப் போக்கும் பேரொளியாக உதிக்கின்றார் (பிலி 2:6-9) என்பதை உணர்த்துகின்றது. உடனிருக்கும் இயேசுவின் இத்தகைய நிலைப்பாட்டினைத் தியானிக்காமல் நம்மால் அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட இயலாது.
கிறிஸ்துமஸ்
மகிழ்ச்சியை ‘நான்’,
‘எனது’ என்னும்
சிறிய வட்டத்தில் குறுக்கிவிட முடியாது. இயேசுவின் பிறப்பினைக் கண்டு நான் மட்டும் மகிழ்வது அல்ல; அவர் நேசித்து, உடனிருக்க விரும்பும் மக்களுடன் நாமும் உடன் பயணிக்க வேண்டும்.
ஆண்டில்
சில திருவிழா நாள்களில், யூபிலிக் கொண்டாட்டங்களில் மட்டும் இத்தகைய மனிதர்களுக்கு உதவிட திரு அவை நம்மை அழைக்கவில்லை; மாறாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முடிவுகளிலும் இத்தகையோருடன் உடனிருக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.
உடனிருப்பது
- உணர்வுநிலை
அல்ல;
வாழ்வு
முறை
இயேசு
மனிதராகப் பிறந்து, நம்மிடத்தில் வாழ்ந்தார். இயேசுவின் உடனிருப்பு என்பது உணர்வுநிலை அல்ல; அது வாழ்வுமுறை. உணர்வு நிலையாக இருந்தால் காலச்சூழலுக்கு ஏற்ப மங்கிவிடும், மறைந்துவிடும்.
உடனிருத்தல்
என்பது கடைநிலை மனிதருக்கு ஒருசில நேரங்களில் உதவுவது மட்டுமல்ல; மாறாக, சமூகமாகச் சிந்தித்து, சமூகமாக இத்தகையோருக்காகச் செயல்படுவது (திருத்தந்தை பிரான்சிஸ், ‘அனைவரும் உடன்பிறந்தோர்’, 116). “நமது
அன்றாடச் செயல்பாடுகளில், அலுவல்களில் அதிக முனைப்போடு ஈடுபடுத்திக்கொண்டு, எனது இத்தகைய பொறுப்புகளால், பணிகளால், வாழ்வு முறையால் ஏழைகள்மீது கவனம் செலுத்தவும், அவர்கள் அருகில் இருக்கவும் என்னால் இயலவில்லை என ஒருபொழுதும் நாம்
கூறக்கூடாது” (திருத்தந்தை
பிரான்சிஸ், ‘மகிழ்ச்சியின் நற்செய்தி’
201). இதுவே கிறிஸ்து பிறப்பின் அழைப்பு!
ஏழைகளே இயேசுவைத்
தாங்கி
நிற்கிறார்கள்
ஏழைகளே
கிறிஸ்துவைத் தாங்கி நிற்பவர்கள். அவர்களே நமக்குக் கிறிஸ்துவை வெளிப்படுத்துபவர்கள். அவர்களின் துன்பமான வாழ்வின் சூழலிலும் வெளிப்படும் இறைநம்பிக்கை, எதிர்நோக்கு, மனவுறுதி, விடாமுயற்சி... இவைகளெல்லாம் நமக்கு அவர்கள் கற்பிக்கும் பாடங்கள். எனவே, ஏழைகளே நமது கிறிஸ்துமஸ் ஆசான்கள்.
“ஏழைகளில் நாம் கிறிஸ்துவைக் காண, கண்டுபிடித்து, அவர் கரம்பற்ற அழைக்கப்பட்டுள்ளோம். நம் இறைவன் அவர்கள் வழியாக வெளிப்படுத்தும் மறைபொருளை, ஞானத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நமது குரல்கள் அவர்களுக்காக ஒலிக்க வேண்டும். அவர்களை நண்பனாக்கி, அவர்களின் குரலுக்குச் செவிமடுத்து, இறைவன் அவர்கள் வழியாக உரையாடுவதை உணரவேண்டும். அது ஒருவரின் தனிவிருப்பச் செயல்பாடு அல்ல; மாறாக, இதுவே நற்செய்தியின் மையம்”
(திருத்தந்தை பிரான்சிஸ், மகிழ்ச்சியின் நற்செய்தி).
“இயேசுவின் மனுவுடல் ஏற்பு - ஒரு மென்மைப் புரட்சிக்கு, ஒரு மௌனப் புரட்சிக்கு வித்திட்டது” (திருத்தந்தை
பிரான்சிஸ், ‘மகிழ்ச்சியின் நற்செய்தி’
88). அவரது மனுவுடல் ஏற்பு, அவரது
மென்மையின் வெளிப்பாடு. ஆனால், அது பலவீனம் அல்ல; அது துணிவின் வெளிப்பாடு. இயேசுவின் மனுவுடல் ஏற்பு ஒரு துணிவான முடிவு. அவரே இன்னும் பலமிழந்த எளியவர்கள், புறம்பே தள்ளப்படுபவர்கள் மத்தியில் அவர்களின் வாழ்வினை மாற்றிட மென்மையான குழந்தையாகப் பிறக்கின்றார். அவர்கள் மத்தியில் பிறக்கும் இயேசுவைக் காண்பதுதான் உண்மையான கிறிஸ்துமஸ்.
கிறிஸ்துமஸ் காலத்தின்
சில
கேள்விகள்
கிறிஸ்துமஸ்
காலத்தில் இயேசுவின் முன்பாக நாம் குனிந்து முழந்தாளிட்டு பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவோம்.
• நான் பாலன் இயேசுவை அழகான, ஆடம்பரமான, வசதியான இடங்களில் மட்டும் தேடுகின்றேனா? அல்லது துன்பப்படுவோரின் முகங்களில், இருப்பிடங்களில் தேடுகின்றேனா?
• என் பங்கில், நகரில், கிராமத்தில், அருகாமையில், வாழ்விடங்களில் மறக்கப்பட்டவர்கள் யார், யார்? நான் அவர்களிடம் சென்று உரையாடி, மனுவுடல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
• என் கிறிஸ்துமஸ் பகிர்வும், வெளிப்படுத்தும் அக்கறையும் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக மட்டும் உள்ளனவா? அல்லது அவர்கள் மீதான ஆழமான அன்பாக, நிலைப்பாடாக மாறுகின்றதா?
இறுதியாக...
கிறிஸ்துமஸ்
விழாவின் ஆன்மாவிற்குள் சென்று அதனைக் கொண்டாடிட அன்னை மரியாவுடனும் யோசேப்புடனும் உடன் நடந்து, மேய்ப்பர்களின் அருகில் நாமும் முழந்தாளிட்டு, கைவிடப்பட்டோரின், புறக்கணிக்கப்பட்டோரின் நம்பிக்கையாக, எதிர்நோக்காக, விடிவெள்ளியாக மனுவுடல் ஏற்கும் இயேசுவைக் கண்டு, அவரைத் தாங்கிக்கொள்வோம். இயேசு தம்மை வெளிப்படுத்த விரும்பும் இடத்தில் அவரைத் தேடுவோம்! கண்டு கொள்வோம்!
அனைவருக்கும்
கிறிஸ்துமஸ்
நல்வாழ்த்துகள்!
புனித யூஜின் டி மாசனெட் துறவற சபையின் (SDM) இரண்டாவது பொதுப்பேரவைக் கூட்டம் கடந்த அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய நாள்களில் சென்னை, புனித தோமையார் மலையில் அமைந்துள்ள DMI தேசிய மையத்தில் நடைபெற்றது.
சபையின்
நிறுவுநர் நினைவில் வாழும் மதிப்புமிகு பேரருள்பணி. ஜெரார்டு பிரான்சிஸ் OMI அவர்களின்
நினைவுகளுடன் தொடங்கிய இக்கூட்டத்தில், பேரவைக்கான ஆன்மிகத் தயாரிப்பை அருள்பணி. ஜெரி சே.ச. வழிநடத்தினார்.
அவருடைய உரையாடலும், ஆன்மிகச் சிந்தனைகளும் சபை உறுப்பினர்கள் தூய ஆவியாரின் தூண்டுதலுக்குத் திறந்த மனநிலையுடன் தங்களையே அர்ப்பணிக்க உதவியாக அமைந்திருந்தன.
இப்பேரவையை
ஒருங்கிணைத்து வழிநடத்துவதற்காக, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரும், இச்சபையின் திரு அவைசார் ஆலோசகருமான ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள், செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி. அருள்ராஜ் மற்றும் மறைமாவட்ட நிதி மற்றும் சொத்துகளின் கண்காணிப்பிற்கான திருத்தூது நிர்வாகி அருள்பணி. டேவிட் குமார் OMI ஆகிய இருவரையும் நியமித்தார். இவர்களின் வழிகாட்டுதலுடன் பேரவை அமர்வுகள் சகோதரத்துவ உணர்வு, தியானம், இறைவேண்டல் மற்றும் உரையாடல் வழியாகச் சபையின் நோக்கத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தின. ஆழமான இறைவேண்டல் மற்றும் தூய ஆவியானவரின் வழிகாட்டுதலின்படி இந்தப் பேரவை சபையின் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது.
இரண்டாவது
பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நிர்வாகம்:
• பேரருள்பணி. அந்தோனி
அடிமை
பிரான்சிஸ், SDM - சபை
தலைவர்
•
பேரருள்பணி. மரிய
இராபர்ட்
செபாஸ்டின்,
SDM - முதன்மை அருள்பணியாளர்
• அருள்பணி. ஆன்ட்ரூ
கஸ்பார்,
SDM - பொது ஆலோசகர்
• அருள்பணி. ஸ்டீபன்
குழந்தைசாமி,
SDM
- பொது ஆலோசகர்
• அருள்பணி. கிரண்குமார்
பட்டு,
SDM - பொது ஆலோசகர்
புதிதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மேனாள் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு நிறைந்த பணிக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ள பணியை மிகுந்த நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் ஊக்கத்துடனும் செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்தனர். சிறப்பாக நடைபெற்ற இந்தப் பொது அமர்வு, தங்கள் சபை நிறுவுநரான பேரருள்பணி. ஜெரார்டு பிரான்சிஸ் OMI அவர்களின்
அர்ப்பணிப்பையும், அவரின் எதிர்கால முன்னுரிமைகளையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
பேரருள்பணி. அந்தோனி
அடிமை
பிரான்சிஸ், SDM, சபை
தலைவர்,
புனித
யூஜின்
டி
மாசனெட்
துறவற
சபை
தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவரின் கிறிஸ்துமஸ் செய்தி
நமது
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பல்வேறு மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களினாலும், பளிச்சிடும் அலங்காரங்களாலும், விற்பனை சார்ந்த நுகர்வுகளாலும் தனது அடிப்படைத்தன்மையை இழக்கும் அபாயத்தில் இருக்கும் இக்காலத்தில், திருத்தந்தை லியோ அவர்கள் அண்மையில் வெளியிட்ட திருத்தூதருக்குரிய ஊக்கவுரையான ‘திலெக்சிட் தே’ கிறிஸ்து பிறப்புத் திருநாளின் அர்த்தத்தைத் தெளிவூட்டுகிறது.
கிறிஸ்துமஸ்
என்பது வசதியாக வாழ்பவர்களுக்கான அமைதியான இரவு அல்ல; அது ஒரு தீவனத்தொட்டியிலிருந்து முழங்கும் புரட்சிகர அறிவிப்பு. ஏழைகள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் துன்புறுத்தப்படுபவர்கள்மீது
கடவுள் கொண்ட அற்புதமான அன்பின் சாட்சியம். கொண்டாட்டத்திலிருந்து ஒன்றிப்பிற்கும், வழிபாட்டிலிருந்து சாட்சியத்திற்கும் நம்மை அழைக்கும் அழைப்பாக அது விளங்குகிறது. முதலில், இச்செய்தி நமக்கு நினைவூட்டுவது, கிறிஸ்துமஸ் நிகழ்வின் மையத்தில் இறைவன் ஏழைகளைத் தேர்ந்தெடுத்ததன் சிறப்பினைக் கொண்டாடுவது. அதிகாரமும் பெருமையும் கொண்ட சத்தத்தால் நிரம்பிய உலகில், எல்லாம் வல்லவரான இறைவன் தமது வருகையைப் பிலாத்துவின் அரண்மனையிலும், எருசலேம் கோவிலின் முற்றங்களிலும் அறிவிக்கவில்லை; மாறாக, மனித வடிவத்தை ஏற்று, தம்மைத் தாழ்த்திக்கொண்டு, தீவனத்தொட்டியில் படுத்திருக்கும் ஒரு குழந்தையின் எளிய நிலையையே அவர் தேர்ந்தெடுத்தார் (பிலி 2:7). ‘திலெக்சிட் தே’ இந்த அதிசய உண்மையைத் திடமாக உறுதிப்படுத்தி, “ஏழைகளின்மீது கூர்ந்த கருணை காட்டப்படுவதிலேயே தேவனின் இரக்கமிக்க அன்பு வெளிப்படுகிறது” என்று
கூறுகிறது.
மேலும்,
ஏழைகள் நம்முடைய இரக்கப்பணியைப் பெறுபவர்கள் மட்டுமல்லர்; அவர்கள் இறைவார்த்தையைத் தாங்குபவர்களும் ஆவர் என்பதை ‘திலெக்சிட் தே’ வலியுறுத்துகிறது. இந்த ஆவணம் அவர்களை ‘நற்செய்தி அறிவிக்கும் ஆசிரியர்கள்’ (எண்
79) என அழைக்கிறது. ஒதுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளை அவர்கள் தங்கள் பண்பாட்டை வடிவமைக்கத் தகுதியான உள்ளடக்கமானவர்கள் என நாம் அறிந்துகொள்ளவேண்டும்
(எண் 100). துன்பங்களில் வழிநடத்தப்பட்ட அவர்களின் அனுபவங்கள் ‘மற்றவர்கள் காணாத மேலான ஞானத்தை’ அவர்களுக்கு அளிக்கிறது (எண் 102). இந்த அன்றாட உறுதிமொழியும், கடினச் சூழ்நிலைகளில் இறைவனைத் தேடும் நிலையும், அவர்களின் பற்றும் அவர்களை உண்மையான ‘நற்செய்தி பரப்புபவர்கள்’ ஆக்குகிறது.
பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளத்துடன் வந்த ஞானிகள், திருக்குடும்பத்தின் வறுமையிலே தமது உண்மையான செல்வத்தைக் கண்டதுபோல, ஆலயத் தொன்மையான போதனைகள் கூறுவதைப் போலவே ஏழைகளிடம் சமுதாயத்திற்குக் கற்பிக்க வேண்டியவை இருப்பதை உணர்கிறோம். முழுமையாக மனிதப் பிரிவினை சார்ந்திருந்த குழந்தை இயேசுவே இந்த முதல் ஆசிரியர். பலவீனத்தில் இறைவனின் வல்லமை வெளிப்படுவதை வெளிப்படுத்துபவர். பெத்லகேம் காட்சியே நமது மனத்தை அசைக்கிறது; அதிகாரத்திற்கு முன் அல்ல; அன்பால் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வறுமையின் ஞானத்திற்கு முன் நம்மைத் தாழ்த்த அழைக்கிறது.
கிறிஸ்துமஸ்
காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய அன்புச்செயலும் தீவனத்தொட்டியின் முன் வைக்கப்பட்ட காணிக்கைகளின் தொடர்ச்சியே. ஆகவே, நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடிவாக அல்ல; ஆரம்பமாகக் காணும்படி இந்த மடல் நம்மை அழைக்கிறது. இறைவன் மனிதரான மறையுண்மையை, ஒருவர் மற்றவர் மீதுள்ள அன்பின் மூலம் எதிரொலிக்குமாறு உற்சாகப்படுத்துகிறது. இந்தக் கிறிஸ்துமஸில் ‘திலெக்சிட் தே’ தீவனத்தொட்டியை நமது கைகளில் ஒப்படைக்கிறது. அது ஓர் அலங்காரம் அல்ல; நம்பிக்கையின் மாறாத அளவுகோல். இங்கே நாம் வசதியானோருக்கான தாலாட்டுகள் கேட்பது இல்லை; ஏழைகளுடன் நிற்க வேண்டிய இறைவனின் முழக்கத்தையே கேட்கிறோம். இந்த எளிய மாட்டுத்தொழுவத்தில் சமுதாயத்திற்கு இறைவார்த்தையைக் கற்பிக்கும் தகுதியைப் பெற்றவர்களையும், அதனை உலகனைத்திற்கும் பரப்புபவர்களையும் கண்டடைகிறோம். இங்கு கிறிஸ்துமஸ் ஒரு செயற்பாட்டு வினையாகிறது. உலகில் இயங்கும் கிறிஸ்துவைக் காண அழைக்கிறது. நம் கிறிஸ்துமஸ் கீதங்களில் பாடப்படும் அன்பு, ஆடையின்றி இருப்போரை உடுத்துவிக்கவும், பசித்திருப்போருக்கு உணவு கொடுக்கவும், புலம் பெயர்ந்தோரை வரவேற்கவும் வேண்டும்; ஏனெனில், அவர்களிலே ஒரு காலத்தில் வீடற்றிருந்த குழந்தையாகிய கிறிஸ்துவையே நாம் வரவேற்கிறோம் என்பதை உலகிற்கு மெல்ல உரைக்கிறது ‘திலெக்சிட் தே.’
அனைவருக்கும்
ஆசிர் நிறைந்த கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துகளையும், அருள் மிகுந்த 2026-ஆம் ஆண்டின் இறையாசிரையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மனிதத் தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகும் போக்கில், விஞ்ஞானம் (Science) மனிதனைத் தன் திசைக்கே அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
விஞ்ஞானம்
ஆட்சியாளர்களுக்குத் தேவையான தகவல்களையும் கருவிகளையும் புதிய அணுகுமுறைகளையும் வழங்கி ஆட்சி அமைப்பிற்கு உதவுவது மட்டுமன்றி, ஆட்சியாளர்கள் தகுந்த கொள்கைகளை உருவாக்கவும் முடிவுகளை எடுக்கவும் முக்கியக் கருவியாக விளங்குகிறது.
புதிய
தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், புதிய தொழில்களை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகின்றன. சமுதாயமும் சுற்றுச்சூழலும் (Society and environment)
ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து செயல்படுவதையும், விஞ்ஞானம் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவதையும், இம்மாற்றங்கள் பொருளாதாரத்தில் பிரதிபலிப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
இன்று
உலக மக்கள் அனைவரும் ஒரே தரமான வாழ்க்கையைப் பெறாவிட்டாலும், பெரும்பாலானோர் விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களை அனுபவித்து வருகின்றனர் என்பது உண்மை. விஞ்ஞானமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தானாக வளரவில்லை.
நாம் வாழும் பூமியின் இயற்கை வளங்களையும் செல்வங்களையும் முதலீடாக வைத்து அல்லது சில சமயங்களில் அவற்றைச் சிதைத்தும்தான் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. இதற்கு நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் காலநிலைமாற்றமே ஒரு சிறந்த சான்று. புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகவும், அதிகாரத்தில் இருந்தோர் அறிந்தோ அறியாமலோ பின்பற்றிய முறையின் விளைவுகள் என்பதை மறுக்கமுடியுமா?
ஒரு
காலத்திலிருந்த மன்னராட்சி (Monarchy) முடிந்து,
இப்போது பெரும்பாலும் உலகளவில் குடியரசு (Democracy) முறையே
நடைமுறையில் உள்ளது. இதனை எவ்வகையில் நாடுகள் செயல்படுத்தி வருகின்றன என்பது ஒருபுறமிருக்க, விஞ்ஞான வளர்ச்சி அரசியலை மாற்றி வருகின்றதைக் காணமுடிகிறது.
நாம்
வாழும் உலகம் கடந்த 100 ஆண்டுகளில் மிகச் சிறியதாகிவிட்டதுபோல் தெரிவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்ட தொலைத்தொடர்பு (Communication), ஊடகம்
(Media), வான்வழிப்
பயணம் (Air travel)
எனலாம்.
சென்ற
நூற்றாண்டின் கடைசியில் (1980), ஏ.ஐ. உருவெடுத்தாலும்
அடுத்த பத்து ஆண்டுகளில் இறங்குமுகத்தைக் கண்டது. ஆனால், இந்த நூற்றாண்டின் (2000) தொடக்கத்தில் புதிய திறனுடன் ஏ.ஐ. தொழில்நுட்பம்
இன்று உலகளவிலும், நாடுகளின் ஆட்சி அமைப்பிலும், அரசியல் தேவைகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆட்சிப்பீடத்தைப்
பிடிக்க அரசமைப்புகள் எவ்வித உத்திகளையும் கையாளத் தயாராகிவிட்ட நிலையில், இன்றைய வியத்தகு விஞ்ஞான சாதனங்களும் அமைப்புகளும் பழம் நழுவி பாலில் விழுந்தாற்போலக் கிடைத்திருக்கின்றன.
சமூக ஊடகங்கள்
(Social media)
பொதுவாக
ஊடகங்களும், ஏ.ஐ. தொழில்நுட்பமும்
இணைந்து செயல்படுவதைக் காண்கிறோம். இன்ஸ்டாகிராம், டுவிட்டர், முகநூல், ரெடிட், டிக்டாக் (Instagram, Twitter, Facebook, Reddit, Tik Tok, YouTube, Linked in)
என்று பல சமூக வலையமைப்புகள்!
தவிர அரசு, தனியார் சார்ந்த தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தித்தளங்கள் இவையனைத்தும் செய்தியைப் பகிர்வதும், ஒளிபரப்புவதும் நடைமுறையில் உள்ளன. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் சமூக ஊடக வலையமைப்புகள், தளங்களைத் தங்கள் அரசியல் தேவைக்குப் பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதன் மூலம் குடிமக்கள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் குறித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும், குறுகிய காலத்தில் ஏராளமான மக்களைத் தொடர்பு கொள்ளவும், மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், பொது கருத்துகளை உருவாக்கவும் முடிகிறது.
இவ்வாறு
ஊடகங்கள் ஆட்சியமைப்பில் முக்கியப் பங்காற்றும் (Participation) பெரும் சக்திகளாக உருவெடுத்துவிட்டன. சில தொலைக்காட்சிச் சேனல்களை (Channels), அரசியல்
கட்சிகளும், தனிமனிதரும் தங்களுக்கென்று சொந்தமாக வைத்திருப்பது நடைமுறையாகிவிட்டது. அரசியல் தேவைக்காகச் செய்திகளை அவர்களாகவே தயாரித்து ஒளிபரப்புவதும், அதில் பிறர் தலையிடமுடியாத நிலையும் இன்றுள்ளது.
வலிமையான
சில அரசியல் கட்சிகள், பல தொலைக்காட்சிச் சேனல்களை
வசப்படுத்தி அரசியல் செய்திகளைத் தங்கள் கட்சிக்குச் சாதகமாக ஒளிபரப்புவதை மக்களும் பார்த்துப் பழகிக்கொண்டனர்.
தேர்தல்
யூகங்கள், முன்கணிப்புகள் என்று கூறி சில ஊடகங்கள் கட்சிகளுக்குச் சாதகமாகப் புள்ளி விவரங்களைச் செய்திகளாக ஒளிபரப்புவது அன்றாட நிகழ்வாகிவிட்டதற்குக் காரணம் தொழில்நுட்பமா? கட்சிகளா? அல்லது கண்டும் காணாமலிருக்கும் பொதுமக்களா? என்ற வினாவிற்குப் பதில் இல்லாத நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய
சமூக ஊடகங்கள் ‘போலியில் போலி’
(Deep Fake) என்னும்
கடலில் மூழ்கிவிடும் சூழலில், அரசியல் களத்தில் இத்தொழில்நுட்பம் ஒருபுறம் கவரும்படியான செய்திகள்; மறுபுறம் ஜோடித்த உண்மையற்றவைகளைப் (Misinformation) பரப்ப உதவுகின்றன. இதன் விளைவாக, குடியரசுக் கட்டமைப்பில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் குழப்பநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஓர்
ஆராய்ச்சியாளர், இன்றைய ஏ.ஐ. தொழில்நுட்ப சமூக ஊடகத்தை அணு தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகிறார். எவ்வாறு அணு தொழில்நுட்பம் மின்சக்தி உற்பத்திக்கு நன்மைபயக்கும் அதே வேளையில், அணு ஆயுத உற்பத்தியால் மனிதகுலத்திற்கே ஆபத்தாகவும் அமைந்திருக்கிறதோ, அதேபோன்று ஏ.ஐ.-க்கும்
இரட்டை வேடம் தரித்து அதில் ஆதாயம் தேடப்படுகிறதோ? என்ற கேள்வி எழுவதாகக் கூறுகிறார்.
(தொடரும்)
அது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட பகுதி. வானுயர வீடுகள் இல்லையென்றாலும், இரண்டு மூன்று மாடிகளில் வீடுகள் அட்டைப் பெட்டிகளைப்போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு கதையைக் கூறும் வகையில் கவித்துவமாகக் காட்சியளித்தன.
துள்ளியோடும்
மான்குட்டியைப்போல பாவாடைச் சட்டையோடு ஏழு வயது ஜாஸ்பின் குதூகலமாக அந்த ‘அமேஃயீங்’
அப்பார்ட்மெண்ட்
தெருக்களில் தினமும் ஓடித்திரிவாள். ஜாஸ்பினுடைய பெற்றோர் அந்த அப்பார்ட்மெண்ட்காரர்களின் துணிகளுக்கு இஸ்திரிப் போட்டுத் தருபவர்கள். தினமும் வீட்டிலிருந்து குடும்பத்தோடு தங்கள் மூன்று சக்கர சைக்கிளில் வந்துவிடுவார்கள். அந்த மூன்று சக்கர சைக்கிள் இஸ்திரிப் போடுவதற்காகவே நடுவில் பலகை அடிக்கப்பட்டுப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருந்தது.
ஜாஸ்பினும்,
அவளுடைய தாயும் பின்பக்கமாக அமர்ந்துகொள்ள, அந்த மூன்று சக்கர சைக்கிளை அவளுடைய தந்தை, ஒரு தேரை இழுத்து வருவதைப்போல இழுத்து வருவார். அந்தச் சைக்கிள் ஓட்டிச்செல்வதற்கு ஏற்றதாக இல்லை. ‘அமேஃயீங்’
அப்பார்ட்மெண்ட்
தெருக்களில் செல்வதற்கு ஜாஸ்பினுக்கு ஆர்வமாக இருக்கும். தினமும் வருகிறபோதும் போகிறபோதும், அத்தெருவில் ஓடியாடி விளையாடுகிறபோதும், இஸ்திரி போடப்பட்ட துணிகளை வீடுகளுக்குச் சென்று கொடுத்துவரப் போகிறபோதும் அந்த வீடுகள் அவளுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தும்.
மஞ்சள்
பெயிண்ட் அடித்த வீட்டிற்கு ‘மஞ்சணத்தி’
என்று பெயர் வைத்தாள். வெள்ளை நிற வீட்டிற்கு ‘வெளுப்பி.’ வீட்டின் முன்பாகக் கொடிகள் படர்ந்திருந்த வீட்டின் பெயர் ‘பூங்கொடி’.
இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் அவள் பெயர் வைத்திருந்தாள். சில வீட்டுச் சன்னல்கள் அவளைப் பார்த்துக் கண்ணடிக்கும்; வீட்டு மாடியில் காய்ந்துகொண்டிருக்கும் துணிகள் அவளைப் பார்த்துக் கையசைத்து அழைக்கும். சிலசமயம் அந்த வீடுகளோடு அவள் பேசுவதும் உண்டு. அந்த அப்பார்ட்மெண்ட் தெருக்களில் அவளைத் தெரியாத யாரும் இல்லை, எந்த வீடும் இல்லை.
ஒருநாள்
காலை ‘அமேஃயீங்’
அப்பார்ட்மெண்ட்
எதிர்புறம் இருந்த குடிசை வீடுகளை இடித்துப் போட புல்டோசர் வண்டி ஒன்று வந்து நின்றது. அந்தச் சேரிப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் எல்லாரும் தங்கள் தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதனர். சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். அவர்களுள் ஜாஸ்பினும் ஒருவர்.
அதிகாரிகள்
பின்வாங்குவதாக இல்லை. ‘நீங்க இருக்கிறது புறம்போக்கு நிலம்; பிரச்சினை பண்ணாமல் உடனே காலி செய்யுங்கள்’ என்று
அதிகாரி ஒருவர் ஒலிப்பெருக்கியில் கூறிக் கொண்டிருந்தார்.
‘எங்க வீடுகளை இடித்தால் நாங்கள் எங்கே சாமி போவோம்?’ என்று மூதாட்டி ஒருத்தி அதிகாரி ஒருவரிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு சத்தம் போல, வந்திருந்த அதிகாரிகளுக்கு அங்கிருந்த யார் சொல்லும் கேட்கவில்லை.
வீடுகள்
அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டன. குழந்தைகள் கட்டிய கடற்கரை மாளிகையை ஏதோ பெருத்த கால்கள் மிதித்துச் செல்வதைப் போல, அந்தப் புல்டோசர் இயந்திரம் அந்த ஏழைக் குடில்களை இடித்துப்போட்டுச் சென்றது. மழைக்காலத்தில் முட்டைகளையும் தானியங்களையும் சுமந்து தப்பிச்செல்லும் எறும்புகளைப்போல, ஒவ்வொருவரும் அவரவர் வீட்டின் எச்சங்களைச் சுமந்து கொண்டு புறம்போக்கு நிலம் தேடிச்சென்றனர்.
சில
நாள்கள் கழித்து, ‘அமேஃயீங்’
அப்பார்ட்மெண்டிற்கு
வழக்கம்போல ஜாஸ்பினும் அவளுடைய குடும்பமும் மூன்று சக்கர சைக்கிளில் வந்தனர். எப்போதும் துள்ளித்திரியும் ஜாஸ்பின் அன்று பெரும் கவலையில் இருந்தாள். எல்லாரிடமும், ‘இனி நாங்கள் இங்கு வரமாட்டோம்; வேறு இடத்திற்குச் சென்றுவிட்டோம்’ என்று
கூறவும், ‘அமேஃயீங்’
அப்பார்ட்மெண்டிலிருந்து
பெறவேண்டிய பாக்கி ரூபாயைப் பெற்றுக்கொள்ள வந்திருப்பதாகவும் அந்தக் குடும்பம் கூறியது.
அங்குக்
குடியிருந்தவர்களில் யாரும் அவர்களைப் பார்த்து, ‘இங்கேயே கொஞ்ச நாள் தங்கிக்கொள்ளுங்கள்; உங்களுக்குச் சிறு இடத்தை ஏற்பாடு செய்து தருகிறோம்’
என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. பணத்தைக் கூட யாரும் கூடுதலாகக் கொடுக்கவில்லை.
‘பத்து ஆண்டுகள் இந்த அப்பார்ட்மெண்டில் உள்ளவர்களுக்குத் துணி இஸ்திரி பண்ணிக் கொடுத்தும் கொஞ்சம்கூட இவர்களுக்கு நன்றியுணர்வு இல்லையே’ என்று அவளுக்குத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொரு வீடும் ஜாஸ்பினுடன் ஏதோ பேச முயற்சித்தன. ஆனால், அவளுக்கு இப்போதெல்லாம் அந்த வீடுகளையும், வீட்டில் உள்ளவர்களையும் பிடிக்கவே இல்லை. அவற்றையெல்லாம் வில்லன்கள் போலவே பார்த்தாள். ‘வெளுப்பி’
கைகொட்டிச் சிரிப்பதைப் போலிருந்தது. ‘மஞ்சணத்தி’
நக்கலடிப்பதைப்
போலிருந்தது. ‘பூங்கொடி’
ஏளனச் சைகை காட்டினாள் என்றே அவளுக்குத் தோன்றியது. ‘இஸ்திரிப்பெட்டி ஒன்றைக் கொண்டு இந்தப் பூமியையே சமப்படுத்திவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று எண்ணிக்கொண்டாள். சைக்கிளின் பின்புறத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டே அந்த ‘அமேஃயீங்’
அப்பார்ட்மெண்ட்
வீடுகளை ஏக்கத்தோடு பார்த்தவாறே கடந்து சென்றாள் ஜாஸ்பின்.
ஜாஸ்பினைப்போல
சமத்துவத்திற்காகவும்
சமூக நீதிக்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் ஏங்கக்கூடிய ஏராளமான சிறுமிகள் இவ்வுலகில் உள்ளனர். அதிலும் குறிப்பாக, இணையப் பாதுகாப்பு பற்றித் தொடர்ந்து பேசிவருகின்ற அமெரிக்காவைச் சார்ந்த தேஜஸ்வியைப் பற்றிக் கூறலாம். சைபர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை தேஜஸ்வி தொடர்ந்து வழங்கி வருவதால் ‘டைம்’
(Time) பத்திரிகை
அச்சிறுமியின் புகைப்படத்தை 2025, செப்டம்பர் மாத இதழின் அட்டைப்படத்தில் வெளியிட்டுக் கௌரவித்தது.
ஒருமுறை
தேஜஸ்வியின் தாத்தாவிற்கு ஈமெயில் ஒன்று அவளுடைய மாமாவிடமிருந்து வந்திருந்தது. அதில், ‘ஏற்கெனவே எனக்குக் கொடுக்கவேண்டிய இரண்டாயிரம் டாலர் பணத்தை உடனடியாகக் கொடுக்கவேண்டும்’ என்று
குறிப்பிட்டிருந்தது.
எண்பத்தைந்து வயதான தேஜஸ்வியின் தாத்தாவும், ஏதாவது அவசரத் தேவையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அவசரம் அவசரமாக இரண்டாயிரம் டாலர் பணத்தை ஏற்பாடு செய்தார். பணத்தைத் தயார் செய்துவிட்டு அந்த ஈமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக்கணக்கிற்கு அனுப்புவதற்கு முன்பாக தன் மகனிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிடலாமே என்று எண்ணி தேஜஸ்வியின் அப்பாவிற்குத் தொலைப்பேசி செய்திருக்கிறார். இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ என்று நினைத்த தேஜஸ்வி அவளுடைய தாத்தாவிடம் பணம் அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டு, தன் மாமாவிற்குக் ‘கால்’ செய்து பேசும்போது அவர், ‘அப்படிப் பணம் கேட்கவே இல்லை; சில நாள்களுக்கு முன்பாக என் ஈமெயிலை யாரோ ‘ஹேக்’ செய்துவிட்டார்கள்’ என்று
கூறியிருக்கிறார். கடைசியாக இது சைபர் கிரிமினல்களின் வேலை என்பது உறுதியானது.
இந்த
நிகழ்விற்குப் பிறகு தேஜஸ்வி இதனைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொள்கிறாள்.
அதில், ‘குறிப்பாக 2024-ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 8,60,000 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன’ என்றும்,
அதில் பெரும்பான்மையான குற்றங்கள் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களைக் குறிவைத்தே நடைபெறுவதாகத் தன் ஆய்வில் தேஜஸ்வி அறிந்துகொண்டாள்.
‘இருளைப் பழிப்பதைவிட, ஒளியேற்றுவது மேல்’ என்ற கூற்றிற்கேற்ப, தேஜஸ்வி ‘qield Seniors’ என்னும்
இணையத்தளம் மூலம் பெரியவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை நடத்தினாள். தேஜஸ்வியுடைய இந்த முயற்சி சைபர் குற்றங்களிலிருந்து பலரைக் காப்பாற்றியதோடு, பலருக்கும் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
பெரியவர்களிடமிருந்து
சிறியவர்கள் கற்றுக்கொள்கின்ற சூழல் மாறி, சிறியவர்களிடமிருந்து பெரியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.
வேளாண் நிலப்பகுதிகளில் உழவர்கள் நிலத்தை உழுதிடவும், நிலங்களுக்கு உரம் வேண்டியும் ஆடு மாடுகளை வைத்திருப்பது உண்டு. நஞ்சை நிலப்பகுதிகளில் வாழ்வோர் சிலவேளை திடீரென கழுகுப் பறவைகள் கூட்டமாகப் பறந்து வருதலைக் காண முடியும். கழுகுக் கூட்டத்தைக் காணும் ஊர் மக்கள் உடனே ஒரு முடிவுக்கு வருவர். அது என்ன முடிவு? ஊரில் யார் வீட்டிலோ மாடு ஒன்று செத்துப் போயுள்ளது என்ற ஏகோபித்த முடிவு. கழுகுகளின் வருகைக்கு மாடொன்றின் சாவுதான் காரணமாகும். மாடொன்றின் சாவு நிகழாவிடத்தில், கழுகுகளின் வரவு இல்லை என்பதே உண்மை. மாட்டின் சாவை அதன் நுகர்வு சக்தியால் உணரும் கழுகுகள், இதுவரை எங்கே குடியிருந்தனவென்று யாருக்கும் தெரியாது.
நவீன கழுகுகள்
புல்வாமாவில்
என்ன நடந்தது என்பது பற்றிப் பேசுவதை நாம் நிறுத்திக்கொண்டோம். இந்திய இராணுவத்தினர் நாற்பதிற்கும் மேற்பட்டோர் இராணுவ வாகனத்தில் பயணப்பட்டபோது, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலால் அநியாயமாகக் கொல்லப்பட்ட செய்தியையும், அத்தாக்குதலில் நடத்தப்பட்ட கொலைப்பாதகம் இன்றைய ஒன்றிய அரசினை ஆளும் கட்சியின் மற்றொரு வெற்றிக்கு வழிகோலியது என்பதையும் நாம் அறிவோம். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எளிதாகப் பலியானமைக்கு இராணுவத்தினரின் தவறான பாதுகாப்பு நடவடிக்கையே காரணம் என்று உண்மை பேசிய ‘மாலிக்’ எனும் பெயர்கொண்ட அன்றைய ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்னவானார்? எதிர்க்கட்சிகள் கூட கவலைப்படவில்லையே!
பிணந்தின்னி
பாசிசக் கழுகுகளுக்கு விலைமதிக்கவியலா உயிர்கள் கிடைத்தன; கழுகுகள் உண்டு ஏப்பம்விட்டன; பசிதீர்ந்த கழுகுகள் வேறொரு பிணத்திற்குக் காத்துக்கிடந்தபோது கிடைத்ததுதான் ‘பெகல்காம்’
எனும் பிணக்காடு. பெகல்காமில் கிடைத்தது நல்ல வேட்டை. கொலையுண்டோர் 26 பேரும் ஆண்களாயிருக்க, அரசியல் ஆதாயம் காண விரும்பிய மதவாதப் பாசிச கழுகுகளுக்கு அது நல்வாய்ப்பாக அமைந்தது. கொல்லப்பட்ட ஆண்களின் மனைவியர் ‘சிந்தூர்’
(பொட்டு) இழந்து வெறும் நெற்றியாயினர். சாவிலும் ஆதாயம் தேடும் இந்தப் பிரிவினைவாத அரசியல் கழுகுகளுக்கு நல்ல வேட்டை. தீவிரவாதிகள் தாக்குதலில் அழிக்கப்பட்ட ‘சிந்தூர்’
என்னும் பொட்டு இவர்களின் இரையாயிற்று. தாக்குதலை மேற்கொண்ட பாகிஸ்தான் கழுகுகளை வீழ்த்த இந்திய அரசின் விமானங்களே கருவியாயிற்று. கழுகுகளின் வாழ்வில் எங்கோ இறந்து கிடக்கும் மாட்டுப் பிணத்தை மட்டுமே தேடி அலைந்து உண்ணுவதைப் பார்க்கிறோம். ஆனால், நமது வாழ்வில், பிணமாக்கப்பட்டவர்களின் சடலமே மற்றோர் அரசியல் வெற்றிக்குப் பாதை அமைக்கவும் அதன் நிமித்தம் மேலும் பல கொலைகளை நிகழ்த்தவும்
வாழும் பாசிஸ்டுகள் தயாராக உள்ளனர்.
இந்நிகழ்வில்
காணும் வேடிக்கை என்னவென்றால், மற்றொரு நாட்டின் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கும், பலியானோரின் அவல மரணத்திற்கும் பாகிஸ்தானின் ஊடுருவலைக் காரணமாக்கியது இந்திய ஒன்றிய அரசியலாகும். குறிப்பாக, உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டிய உள்துறை அமைச்சர் அதற்குப் பொறுப்பேற்கவில்லையே? ஏன்?
26 பேர்
கொலை செய்யப்பட்டு வீசி எறியப்பட்டனர். அது அரசியல் இலாபக்கணக்கானது. பிணந்தின்னிக் கழுகுகளுக்கு நல்ல வேட்டை! பிணத்தின் மீதான கோரத்தைக் கேள்வி கேட்க ஆளில்லை. ‘சிந்தூர் ஆப்ரேஷன்’
எனும் பெயரில் வேட்டையாடிய கழுகுகள் தேசப்பற்றாளராயினர். கற்பனைகூட செய்யமுடியாத அளவிற்கு அந்நியக் கழுகுகள் தண்டிக்கப்பட்டதாக நமதூர் பாசிசத் தலைவர்கள் புளகாங்கிதம் அடைகின்றனர்.
மேற்கண்ட
இரண்டு நிகழ்வுகளுமே பிணந்தின்னிக் கழுகுகளுக்கு நல்ல விருந்தாயின. மேலும், மற்றொரு புல்வாமா கிட்டாதா? பெகல்காம் நிகழாதா? என்று ஏங்கும் பிணந்தேடும் கழுகுகளுக்கு அடுத்து இரையாகப்போவது யார்? அந்த இரையின் மீது நடத்தப்படும் அரசியலை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்?
அண்மையில்
இந்தியத் தலைநகரின் மையப் பகுதியில் கார் ஒன்று வெடித்துச் சிதறுகிறது. வழக்கமாகக் குண்டுவெடிப்புகள், தீவிரவாதத் தாக்குதல்கள் என்பன போன்ற நடவடிக்கைகளின் மொத்தப்பழியும் இசுலாமியத் தோழர்கள் மீதுதானே விழும்! டெல்லி குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். இசுலாமியப் பல்கலைக்கழகம் தீவிரவாத வலையுள் சிக்கவைக்கப்பட்டுள்ளது; மீண்டும் கழுகுகளுக்குக் கொண்டாட்டமே!
ஏற்கெனவே
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட (அதாவது செத்துப்போன) இசுலாமியப் பிணங்கள் அரசியல் சூது செய்வோர்க்கு இரையாகி உள்ளன.
இம்மாதிரியான
கோரநிகழ்வுகள் ஆளும் கட்சியினருக்கு, அக்கட்சியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிய அமைச்சர்களுக்கு அதிர்ச்சியைத் தருவதில்லை; பேரானந்தத்தையே அளிக்கின்றன. அவை கழுகுகளுக்குக் கிடைத்த பெருந்தீனி!
வேண்டாதோரைக்
கைகாட்டிவிட்டு கையை மடக்கிக்கொள்ளும் ஆட்சியாளர்களின் வன்மம் கேள்விக்குள்ளாகும் வேளை, மக்களுக்குப் பதில் கூறவேண்டிய அரசின் பொறுப்பாளர்கள் பதவியைத் துறக்கவில்லையே! கண்டிக்கும் எதிர்க்கட்சிகளோ அரசின் பொறுப்பாளர்களைப் பொறுப்பேற்றுப் பதவி துறக்கக் கட்டாயப்படுத்தவில்லை. ஏன்?
நாட்டில்
நடைபெறுகின்ற தீவிரவாதத் தாக்குதல்கள் அனைத்தும் ஒரு மதம் சார்ந்த தீவிரவாதிகளாலேயே திட்டமிட்டு நடத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தும் ஆட்சியாளர்கள் இந்தியப் பாதுகாப்பிற்கு நேரிட்ட தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டாமா? தாக்குதல்களில் பலியான மாடுகள் செத்துப் போயின; பிணங்களைச் சுவைப்பதுதான் தங்கள் வேலை என்று இவர்கள் கூறாமல் கூறுகிறார்களோ?
மதக்கலவரங்கள்,
படுகொலைகள், பதற்றங்கள்... எல்லாம் அரசியல் இலாபத்திற்கும் மதரீதியான ஒருங்கிணைப்பிற்கும் (Polarise) பயன்படும்
அரசியல் களங்களாக மாறிவருவதை நன்குணர்ந்த மதவாத அரசியல் வணிகர்கள் மிக நேர்த்தியாகவே இத்தொழிலைச் செய்கிறார்கள்.
மானுடத்திற்கு
எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலையாக வர்ணிக்கப்பட்ட 2002-இன் குசராத் ‘கோத்ரா’ வன்முறையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பிணமாயினர். கொலையுண்டோரைத் தாண்டி வன்முறைக்கு- அவதூறுகளுக்கு-அவமானப்படுத்தப்படலுக்கு ஆளான கொடுமையான நிகழ்வுகள் ஏராளம். குசராத் கொலைகளால் வீசி எறியப்பட்ட பிணங்கள் பலருக்கு அன்று விருந்தாயின. இவ்விருந்து தந்த விளைவு என்ன? 2014, 2019, 2024-களில் நல்ல விளைச்சல்! தொடர்ந்து ‘ஹாட்ரிக்’
வெற்றி! குசராத் நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்டவர் மும்முறை இந்தியப் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அவர் இப்போது வெறும் பௌதீக மனிதரல்லர்; அவர் ஒரு விசுவக் குரு! அவர் ஓர் அவதாரம்! இதுதான் கட்டமைக்கப்பட்ட வெற்றி!
தமிழ்நாட்டுக்
கழுகுகள்
தமிழ்நாட்டு
அரசியல் களம் பல வேடிக்கை நிகழ்வுகளைச்
சந்தித்து வருவதோடு, பல வேடிக்கை மனிதர்களின்
விந்தையான விளையாட்டுகளையும் கண்டுவருகிறது.
விடுதலை
பெற்ற இந்தியா, குடிகளைக் குடிமக்களாக அங்கீகரித்து, குடிமக்களைக் காக்கும் சனநாயக அரசையும், சனநாயகப் பாதுகாப்புக்கென அரசமைப்பு உரிமைச் சட்டத்தையும் தந்தது. சனநாயகம் எனும் நவீன தத்துவத்தையும், சனநாயக விழுமியங்களைக் காக்கும் வகையிலான சனநாயக அரசையும் சனநாயக அரசின் செம்மையான செயல்பாடுகளுக்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில், சனநாயக நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. விடுதலை பெறும் இந்தியாவில் மதப்பெரும்பான்மையினரின் நாடாக- மதம் சார்ந்த நாடாக இந்தியா கட்டமைக்கப்பட வேண்டும் என்ற மதவாதிகளின் கனவுக்கு மாறாக உருவாக்கப்பட்ட இந்திய சனநாயக அரசின் அரசமைப்புச் சட்டத்தை (Constitution) Un Hindu ‘இந்துப்
பண்பு இல்லாதது’
என்று வர்ணித்த கோல்வால்க்கரின் கூற்றை நனவாக்கும் வகையில், ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் இன்றைய மதவாத அரசு தன் கொள்கைகளால் நாளும் சிதைத்து வருவதை நாடறியும்.
சனநாயக
அரசின் அனைத்துக் கொள்கைப் பண்புகளும் மதவாத அரசினால் சிதைக்கப்பட்டு வரும் நிலை அறிந்த இந்திய மதச்சார்பற்ற கட்சிகள், ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி, மதவாதக் கட்சிகளுக்குச் சவால் விடுத்து வரும் காலம் இது. இன்றைய அரசியல் தளத்தில் கருத்தியல் ரீதியான போரின் தேவையை உணர்ந்து மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைவைப் பெரிய நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் சனநாயக சக்திகள் எதிர்நோக்கியிருக்க, தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி, மேனாள் ஆளுங்கட்சி, திராவிடத்தை முன்னோட்டாகக் கொண்ட ஒரு கட்சி மேலே கூறப்பட்ட பாரதிய சனதா கட்சியோடு கூட்டணி வைக்கிறது.
திராவிடம்
ஒரு கருத்தியலின் அடையாளமாயின், இந்துத்துவம் இவ்வடையாளத்தோடு எப்போதும் உடன்படாதது! ஒரு பிற்போக்குக் கொள்கையின் அடையாளம் அது என்பதனை அனைவரும் அறிந்த நிலையிலும், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியைத் தகர்க்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் மதவாதப் பாசிசக் கட்சியோடு டெல்லி வரை பயணித்து உடன்பாடு செய்துகொண்ட மேனாள் முதல்வரை-தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரை தமிழ்நாடு ஆளும் கூட்டணியினர் கேள்விக்குள்ளாக்கியபோது, மேனாள் முதல்வர் எடப்பாடியார் அளித்த பதில்தான் நம்மைச் சிந்திக்க வைத்தது.
“அண்ணா தி.மு.க.
எவரோடு கூட்டுவைக்கலாம் அல்லது கூடாது என்று தீர்மானிக்கும் உரிமையை எவரும் கேள்வி கேட்க முடியாது.” இப்படிக்
கேலியாகப் பதில் கூறிய எடப்பாடியாரின் தோரணை ஆயிரம் கேள்விகளை உள்ளடக்கியது. இந்தியாவில் பா.ச.க.
எதிர்ப்பைக் கொள்கை ரீதியாக முன்னெடுத்துவரும் மாநிலங்களுள் தமிழ்நாடு முதன்மை பெறுவதை அறிவோம். தமிழ்நாட்டை விழுங்குவதன் மூலம் இந்தியாவை முழுமையாக விழுங்கிடத் துடிக்கும் பா.ச.க.வின் போக்கினை எடப்பாடி அறியாதவரா?
இது
கட்சிக் கூட்டு அல்ல; கொள்கையை அடகு வைக்கும் கூட்டு. இப்போக்கு எதேச்சதிகாரத்தின் விளைவு. இக்கூட்டு பொருந்தாக் கூட்டு. எந்தவிதக் குற்றவுணர்வுமின்றி எடப்பாடியார் அளித்த பதிலில், குடிமக்கள் கேலி செய்யப்படுவதோடு விடுதலை பெற்ற இந்தியா, கட்டிக்காக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் பலியாகப் போவதை நாம் காண முடியவில்லையா?
தி.மு.க. ஆட்சி
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியென்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுவதில்லை. தி.மு.க.
அரசு திராவிடக் கொள்கைகளின் மொத்த வடிவம் என்றும் நாம் ஏற்கவேண்டுவதில்லை. ஆனால், ‘வாழ்வா? சாவா?’ என்ற இக்கட்டான சூழலில் எடப்பாடியார் போன்றோரின் சந்தர்ப்பவாதப்போக்கை எதிர்த்தே ஆகவேண்டும். எடப்பாடியார் விரும்பும் ஆட்சி மாற்றம் நிகழுமானால், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எவரும் காப்பாற்ற இயலாது.
எங்கேயாவது
பிணம் விழாதா? பசியாறுவோமா? என்று அலையும் கழுகுகளைவிட, கேவலமாக எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் பரப்புரைகளைக் காணமுடிகிறது.
தமிழ்நாட்டில்
எங்கோ ஒரு மூலையில் எப்போதோ நடக்கும் ஒரு பாலியல் வன்முறை, ஆணவக்கொலை, காவல்நிலையக் கொலை மற்றும் சித்திரவதை நிகழ்வுகளை தமிழ்நாடு முழுவதும் எப்போதும் நடப்பதாகப் பரப்புரை செய்வதும், ‘தி.மு.க.
ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்ற
ஒற்றை முழக்கத்தோடு கழுகு போன்று சுற்றித்திரிவோரின் நோக்கமென்ன?
ஏற்கெனவே
கூறியதுபோல தமிழ்நாட்டில், தி.மு.க.
ஆட்சியில் சீர்செய்யப்பெற வேண்டியன நிறையவே உள்ளன. எங்கேயாவது பிணம் விழாதா? என்று அலைந்து இந்த ஆட்சியை வீழ்த்த எண்ணும் கழுகுகளின் நோக்கைப் புரிந்துகொள்வோம்.