பூமிப்பந்தில் பூச்சரம் சுற்றியதுபோல், படர்ந்து கிடக்கும் தமிழரெல்லாம் ஒற்றைப்புள்ளியில் ஒன்றிணைந்து கொண்டாடும் உறவுத் திருவிழா தைப்பொங்கல். சார்ந்திருக்கும் சமயம், சேர்ந்திருக்கும் சமூகம் மற்றும் வாழ்ந்துவரும் வட்டாரம் எனும் வரையறைகளைக் கடந்து, தமிழ் எனும் தனிப்பெரும் அடையாளத்தால் தொப்புள் கொடி உறவில் இதயம் பொங்கி மகிழ்ந்திருக்கும் மங்கலத் திருவிழா பொங்கல் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
மறதிக்குப்
பெயர்பெற்ற தமிழினம், மறவாமல் கொண்டிருக்கும் உயர் பண்பு நன்றிமறவாமை. தன்னை வாழவைக்கும் இயற்கைக்கும், இணைந்து இயங்கும் விலங்குகளுக்கும் நன்றிகூறும் தருணமாகப் பொங்கல் பண்டிகையைத் தமிழினம் தகவமைத்துக் கொண்டுள்ளது. அறுவடை முடிந்த கையோடு அதற்குக் காரணமானவர்களை நன்றியோடு நினைவுகூரும் நற்பண்பின் செயல்வடிவமாக, பொங்கல் விழா குதூகலத்தோடு கொண்டாடப்படுகிறது.
போகியிலே
பழையனவற்றைக் களைந்து, செங்கரும்பும் இளமஞ்சளும் கைகோர்த்து, பச்சரிசியுடன் சர்க்கரை கலந்து, சூரியன் முன்னிலையில் நெருப்புச் சுவாலைகளின் அனல் கரங்களால் புதுப்பானையில் பொங்கி வழிய பொங்கலிட்டு, மறு நாள் கால்நடைகளைக் குளிப்பாட்டி கொம்புகளில் மைதீட்டி அலங்கரித்து, கழுத்தில் பூச்சூடி அவைகளையும் தன் இணைப்பணியாளர்களாய் கௌரவித்து, நிறைவாக மானிட முகங்களைத் தரிசித்து, நலம் விசாரித்து, உறவுகளைப் பகிர்ந்திட முகத்திற்கு முகமாய் காணும் திருநாளாய் பொங்கல் விழா நான்கு நாள்களாய் நடைபெறுகிறது.
வருடந்தோறும்
தமிழர் வாழ்வில் விளக்கேற்ற வந்துபோகும் வசந்த விழாவான பொங்கலையும், அதன் பொருளையும் நடந்து வந்த வரலாற்று வழிகளை இளைய தலைமுறைக்கு விளக்கிக் கூறுவதைத் தமிழினம் தவிர்த்தே வருகிறது. விடுமுறை கிடைக்கிறது என்கிற மேலிடும் மகிழ்ச்சியோடு தமிழரின் மரபுவிழா குறிக்கப்பட்டு வருகிறது. வான் புகழ் கொண்ட தமிழரின் வரலாற்றுக் கொண்டாட்டத்தை இன்றைய தலைமுறை பள்ளிக்கு விடுமுறை, புத்தாடைகள், தொலைக்காட்சியில் புதிய திரைப்படம், சுவையான சமையல், வெளியூர் சுற்றுலா என்கிற சுழற்சிக்குள்ளே சுருண்டுவிடுகிறது. வேர்களை விலக்கிவிட்டு, கிளைகளில் மட்டுமே தோரணம் கட்டித் தொங்க விடுகிற இளைய தலைமுறையினர் பொங்கலின் பொருளினை உணர்ந்து பானையில் பொங்கலிட வேண்டும்; அங்ஙனமே பொருளுணர்ந்த தமிழினம் பொங்கி எழுந்திட வேண்டும்.
‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழர்குடி’ எனும்
உன்னதத்தைக் கொண்ட தமிழினம், வெறும் பழம்பெருமை பேசிப் பேசியே பாழாய் போய்க் கொண்டிருக்கிறது. தமிழினம் திட்டமிட்டு அதிகார வர்க்கத்தால் வஞ்சிக்கப்படுகிறது. தமிழின விரோதிகளும் துரோகிகளும் தமிழருக்குப் பாடை கட்டுவதிலே திரைமறைவு வேலைகளைத் திறம்படச் செய்து வருகிறார்கள். வேர்களை விலக்கிவிட்டு மரங்கள் தங்கள் கிளைகளுக்குத் தோரணம் கட்டுவதால் வாழ்ந்து விடமுடியாது. வேரில் வெந்நீரைப் பாய்ச்சுவதும், கிளைகளுக்கு வர்ணம் பூசுவதுமாய் சில தமிழினப் பகைவர்கள் தமிழின கற்பக விருட்சத்தை அழித்துவிட ஆலாபனை செய்துவருகிற அபாயத்தை, தமிழ்த் தலைமுறைகள் அறியாமலே அழிந்து வருகின்றன. இந்நிலையில், விழாவோடு முடித்துக்கொள்ளாமல் தமிழும் தமிழரும் விழாமல் பார்த்துக்கொள்வது தமிழ் மறவர்களின் தற்காலக் கடமையாகும்.
தனக்கெனத்
தன்னிகரற்றத் தன்மைகளைக் கொண்டு தனித்தியங்கும் உயர்தனிச் செம்மொழி எனும் உன்னதத்தைக் கொண்ட தமிழின் ஆண்டு களுக்குச் சமஸ்கிருதத்திலே பெயர்கள் சூட்டி கேவலப்படுத்தும் பழக்கம் வேறு எந்த மொழிகளிலும் இருக்கமுடியாது. அதுவும் புராணங்களின் புனைவுகளிலிருந்து பிழிந்தெடுத்த கற்பனைக் கதைகளிலிருந்து இந்த விச வேர் முளைக்கிறது. நாரத முனிக்கும் பெண் வேடம் பூண்டிருந்த கண்ணனுக்கும் பிறந்த பிள்ளைகள் அறுபது பேராம்! அவர்களின் பெயர்கள் தமிழரின் ஆண்டுகளுக்குச் சூட்டப்பட்டிருக்கின்றன.
சீரிளமைத்
திறம் வியக்கும் அன்னைத் தமிழை ஆரிய அழுக்கு பற்றிக்கொண்டதால் தமிழரின் ஆண்டுக்கு அந்நியர்களின் புராணப் புனுகுகளைக் கடனாக வாங்கி வைத்திருக்கும் இழிவை இந்த இளைய தலைமுறை அறிந்திருக்கவேண்டும். தான் பெற்றெடுத்த குழந்தைக்கு வழிப்போக்கன் பெயர் சூட்டுவதும் அதுவும் அடுத்த வீட்டுக்காரனைத் தகப்பனாக முதலெழுத்தில் குறிப்பதும் எத்தகைய அவமானம் என்று மானத்தை உயிரினும் மேலாய் போற்றுகிற தமிழ்க்குடிகள் உணரவேண்டும்.
‘தை பிறந்தால் வழி
பிறக்கும்’ என்பது
தமிழர் கண்ட வாழ்வியல் நடைமுறை. மரபுகளையும் பண்டையத் தமிழர் இலக்கியத் தரவுகளையும் கொண்டு ஆராய்ந்தால் தமிழராண்டின் தலைமாதம் தை என்பது புலனாகும்.
தமிழ் மாமேதைகள் மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. மற்றும்
பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட தமிழின அறிஞர்கள் இதனை அறுதியிட்டு உறுதி செய்திருக்கின்றனர்.
தமிழரையும்
தமிழ்நாட்டையும் வஞ்சிப்பதையே நோக்கமாகக் கொண்டு ஒன்றிய அரசுகள் இயங்குவதை வரலாற்றில் பார்த்து வருகிறோம். தமிழரின் வீர விளையாட்டாகவும் காளை இனத்தின் வீரியத்தை வலுப்படுத்தவும் நெடுங்காலமாய் நடத்தப்பட்டு வரும் மஞ்சு விரட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை முடக்க சதிசெய்தனர். தமிழினத்தின் ஒருமித்த தன்னெழுச்சிப் போராட்டமாகிய மெரினா புரட்சியால் தமிழினப் பகைவர்களின் சதி உடைக்கப்பட்டது. தமிழர் மண்ணில் வாடிவாசல்கள் திறக்கப்பட்டன.
தமிழ்நாட்டின்
வளர்ச்சியை வடநாட்டவர்கள் பொதுவாகப் பொறுத்துக்கொள்வதில்லை. இந்திய ஒன்றியம் பல தேசிய இனங்களின்
கூட்டமைப்பு. இங்கே ஒரே தேசியம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எனும் போலியான ஒற்றைக் கருத்தியல் நடைமுறைக்கு ஒத்துவராது. தமிழரின் தாய்நாடாம் தமிழ்நாட்டிலும் இன்னும் பிற நாடுகளில் தேசிய மொழியாகவும் கொண்டாடப்படுகிற செந்தமிழை முடக்கும் நோக்கில், இந்திய ஒன்றிய மொழிகளில் ஒன்றான இந்தி மொழியை தமிழர்மீது திணிப்பதும், இந்தியை இந்திய ஒன்றியத்தின் ஒரே தேசிய மொழி எனப் பிழையாகப் பிதற்றி, போலியாகக் கட்டமைப்பதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
வானொலி
உள்ளிட்ட ஊடகங்களிலும், தொடர் வண்டி போன்ற போக்குவரத்துகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழரின் வரிப்பணம் கலந்தே இருக்கிறது. ஆனால், இங்கெல்லாம் தமிழருக்குப் புரியாத அந்நிய மொழியான இந்தியே வலிந்து திணிக்கப்படுகிறது. தமிழர் தமிழரோடு உரையாட தாய்மொழி தமிழும், உலகோடு உரையாட ஆங்கிலமும் இருக்கும்போது இடைச்செருகலாக இந்தி அறியாத தமிழர்கள்மீது இந்தியைத் திணிப்பது மனித உரிமை மீறலாகும்.
தமிழை
எங்கெல்லாம் ஒழிக்க முடியுமோ அங்கெல்லாம் ஒழிப்பதற்கு அனைத்து அதிகார ஆயுதங்களையும் களத்தில் இறக்கிவிட்டு, மேடைதோறும் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சரும், மற்ற வடநாட்டு அமைச்சர்களும் தப்புத்தப்பாய்த் தமிழைப் பேசி தமிழ் ஆர்வலர்களாய் தங்களைக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். கோழியைப் பிடித்து குழம்பு வைக்க முயலுகிறவனும், கோழியின் மொழியிலே அதனைக் கூப்பிடுகிறான்; கொலைகாரன் தனது மொழியைப் பேசுகிறானே என்று கோழி பெருமை பாராட்டிக் கொண்டால், குழம்பில் மிதப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை.
சங்கம்
வைத்து தமிழை வளர்த்த இம்மண்ணில் ‘காசி தமிழ்ச்சங்கம்’ என்னும்
தமிழுக்குத் தொடர்பில்லாத அமைப்பை மக்களின் வரிப்பணத்தில் அமைப்பதும், அதற்கு தமிழுக்கே தொடர்பில்லாதவர்களை வைத்துக் குடமுழுக்கு நடத்துவதும் தமிழுக்கும் தமிழருக்கும் இழைக்கும் அவமானமாகும். செத்துப்போன சமஸ்கிருதத்தைத் தமிழரின் தலையில் கட்டுவதை மானமிகு தமிழன்னையின் பிள்ளைகள் தலையைக் கொடுத்தாவது தடுத்து நிறுத்துவார்கள். கனகவிசயனின் தலையில் கல்லைச் சுமக்க வைத்து, இமய உச்சியில் சிலையெழுப்பிக் கொடியை நட்ட தமிழ் மரபின் தலைமுறைகள் இந்தக் கொடுமைகள் கண்டு கொதிக்காமல் இருப்பது வியப்பாய் இருக்கிறது.
தமிழுக்கு
எதிரான எல்லா நடவடிக்கைகளிலும் ஒன்றிய அரசுகள் ஈடுபட்டு வருவது வரலாற்றை அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள். தமிழ்நாட்டின் மக்கள்நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகள் போட அனைத்து முயற்சிகளிலும் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், இந்திக்கும் இந்துத்துவ அடிப்படைவாதத்திற்கும் முட்டுக் கொடுக்கிறது. தமிழர்களுக்குத் தரவேண்டிய கல்வி நிதியைத் தராமல், புதிய கல்விக் கொள்கை எனும் அறிவியலுக்கு முரணான புராணப் புனைவுகளையும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடத்தனத்தையும் திணிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவும், டிஜிட்டல் உபகரணங்களும் அறிவுசார் உலகை வழிநடத்தும்போது புராணங்களையும் கற்பனைக் காப்பியங்களையும் கல்விக் கருவூலமாகப் போதிக்கிறார்கள். பகுத்தறிவுப் பூமியான தமிழ் மண்ணில் மூடத்தனங்களை மூலதனங்களாகக் கொண்டு மக்களிடையே பிற்போக்குத்தனத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
அமெரிக்காவின்
ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்து உலகிற்குத் தந்தனர்; ஆனால், புல்புல் பறவையில் ஆகாயத்தில் மனிதர்கள் பறந்ததாக மக்களின் காதில் பூ சுற்றுவதையும், பொய்களை
விதைப்பதையும் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார்கள். வரலாறுகளைத் திரித்து, கோவில்களை இடித்து, மசூதிகளையும் கிறித்தவ ஆலயங்களையும் அமைத்தார்கள் என்று வதந்திகளைப் பரப்பி அமைதித் தோட்டமான தமிழ் மண்ணில் மதக் கலவரங்களுக்கு வித்திடுகிறார்கள். தமிழ் மண்ணை ஒருகாலமும் ஆளமுடியாது என்பதால், புறவாசல் வழியே அரசியல் முகவர்களை ஆளுநர்களாய் அனுப்பி மக்களாட்சிக்கு விரோதமாய் மன்னராட்சி நடத்துகின்றனர்.
‘பெற்றோரைச் சுற்றிவருவது பூமியைச் சுற்றுவதற்குச் சமம்’ எனப் புரட்சியான வேதம் கூறிய தமிழ்க் கடவுள் முருகனை வைத்து அரசியல் செய்து, அதிகாரத்தைப் பிடிக்க குறுக்கு வழியில் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் கும்பலை, தன்மானம் கொண்ட தமிழினம் அடையாளம் காணவேண்டும். தமிழரின் இரத்தத்தை எண்ணெய் ஆக்கி, அதிலே குன்றத்து தீபம் ஏற்றி மகிழ்வு காணும் மனநிலை கொண்டவர் அல்லர் முருகப்பெருமான். தமிழரின் வாழ்வில் தீபம் ஏற்றுவதைப் பற்றி சிந்தியாமல் மசூதிக்கு அருகில் உள்ள எல்லைக் கல்லில் தீபம் ஏற்றி அரசியல் இலாபம் தேடும் மதவெறிக் கும்பலுக்குத் தமிழர்கள் இரையாகி விடக்கூடாது.
ஆட்சியில்
இருந்த பாண்டியன் தவறிழைத்ததால், மதுரையை எரித்த வீரத்தமிழச்சி கண்ணகி மரபில் வந்த தமிழ் வேங்கைகள், கடவுளின் பெயர் சொல்லி தமிழரிடையே பிளவுகளையும் மதவெறிகளையும் ஏற்படுத்தும் விஷமத்தனத்தை வேரோடுப் பிடுங்கி நெருப்பில் வீசவேண்டும். இன்று தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி, மக்கள் நலத்திட்டங்களைப் பின்னுக்குத்தள்ளி மதவெறியூட்டி அதிகாரப் பசியைத் தீர்த்துக்கொள்ள ஆட்சியாளர்கள் முயல்வதும், அதற்குப் புனிதமிக்க நீதித்துறையில் புகுந்துள்ள மதவெறி ஓநாய்கள் ஒத்தாசை புரிவதையும் தமிழ்மக்கள் வேடிக்கை பார்க்கக்கூடாது. வடவர்களின் சூழ்ச்சி எந்த வடிவில் வந்தாலும், தன்மானம் கொண்ட தமிழ்த்தாயின் பிள்ளைகள் அதனைப் பிடுங்கி எறிய போர்க்குணத்தோடு புறப்பட்டு வரவேண்டும்.
பொங்கலுக்கு
முன்னே பழையனவற்றையும் அவசியமற்றதையும் கழிவுகளையும் நெருப்பிலிட்டு எரித்துப் போகி கொண்டாடும் தமிழினம், தமிழருக்கு எதிரான இந்தித் திணிப்பு, இந்துத்துவத்
திணிப்பு, புராணங்களைப் புகுத்துதல், அறிவுக்கு எதிரான மூடத்தனங்களைப் பரப்புதல் என்று நீளும் குப்பைகளைப் பகுத்தறிவுத் தீயில் எரித்துவிட்டு பொங்கலிட புறப்பட வேண்டும்.
தமிழினமே!
இனியும் நீ பொறுத்தது போதும்.
பொங்கல் திருநாளில் தமிழரின் பானைகள் பொங்குவதுபோல, ஒட்டுமொத்தத் தமிழினமும் இத்தமிழர் விரோதப் போக்குகளுக்கு எதிராகப் பொங்கி எழவேண்டும்.
எங்கள் வாழ்வும்
எங்கள்
வளமும்
மங்காத தமிழ்
என்று
சங்கே
முழங்கு!
கடந்த பத்து தினங்களில் நமது பிரதமர் இரண்டு முறை ‘மெக்காலே’ தந்த கல்வித் திட்டத்தைப் பற்றி பேசியிருக்கிறார். முதலில் அவர் பேசியது டெல்லியில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஏற்பாடு செய்த இராம்நாத் கோயங்கா நினைவேந்தல் உரை. இது பல முக்கியப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட ஓர் அரங்கக் கூட்டம். மற்றொரு கூட்டம் அயோத்தி இராமர் கோவில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததைக் குறிப்பிடும் வகையில், அதன் கோபுரத்தில் காவிக் கொடியினை ஏற்றி வைத்துவிட்டு, பிரதமர் நிகழ்த்திய எழுச்சியுரை. இரண்டுமே பாரதிய சனதா கட்சியினுடைய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய கருத்தியல் அடிப்படைகளை விளக்கும் உரைகள் என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முதல்
உரை ஒரு சமூக நிகழ்ச்சியில் ஆற்றிய உரை. அடுத்த உரை ஓர் ஆன்மிக நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்டது. சமூக நிகழ்ச்சியில் உரையாற்றுகின்ற போதும், ஆன்மிக நிகழ்வில் பேசுகின்ற போதும் பிரதமர் அவர்கள் மெக்காலே பிரபுவைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் அறிமுகம் செய்த கல்வித் திட்டமும், அதனால் இந்திய மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதையும், அப்படி அடிமைப்பட்டுக் கிடக்கின்ற இந்திய மக்களை விடுதலைப்படுத்துகின்ற நாள்கள் வந்து விட்டதாகவும் பேசியிருக்கிறார்.
இதைப்
பேசிய பிரதமர் உடனடியாக 21-வது நூற்றாண்டிலே இந்தியா சாதிக்கவேண்டிய சாதனைகளைப் பற்றிப் பேசுகிறார். உலக அளவில், தொழில்நுட்ப அளவில் பல்வேறு தளங்களில், அறிவியல் களங்களில் இந்தியா அடைய வேண்டிய முன்னேற்றங்கள் - உலகளாவிய அளவில் அது பெறவேண்டிய அங்கீகாரம், உலகளாவிய அறிவியல் வேட்கையில் நம் மாணவர்கள், இளைஞர்கள் சாதிக்க வேண்டிய சாதனைகள் இவற்றைப் பற்றியெல்லாம் உரையாற்றுகின்ற போது அந்த இடத்திற்கு வருவதற்கான சூழ்நிலையினை இன்றைய இந்தியச் சமூகம் எப்படிப் பெற்றது என்பதை மறந்துவிட்டு பிரதமர் இவ்வாறு பேசுகிறாரா? என்கிற ஓர் ஐயம் எனக்குள்ளே எழுந்தது.
இந்தியா
முழுமையும் ‘புல்லட் ட்ரெயின்’
ஓட வேண்டும், விண்வெளி முழுவதும் இந்தியச் சேட்டிலைட்கள் நிலைநிறுத்தப்படவேண்டும், நாடெங்கிலும் தொழிற்சாலைகளில் கம்ப்யூட்டர் சிப்புகளைத் தயார் செய்யவேண்டும், உலகில் எங்கெல்லாம் புதிய கண்டுபிடிப்புகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அவை எல்லாம் இந்தியக் கண்டுபிடிப்புகளாகவே இருக்கவேண்டும் என்று நம்முடைய பிரதமர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய கனவுகளை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. இத்தகைய அறிவியல்-தொழில்நுட்ப முன்னேற்றம் எப்படி இந்தியாவுக்கு வசப்படும்? அல்லது வசப்பட முடியும்? என்று பார்க்கின்றபோது, இந்த அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிப்படையான காரணம் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் வாய்த்த ஆங்கில அறிவு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். பொதுவாக, இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் பற்றிப் பேசுகின்றவர்கள், அதனுடைய ஏற்றுமதி வளர்ச்சியைப் பற்றியும் பேசுகின்றவர்கள் அதற்கு அடிப்படையான காரணம் இன்றைய இந்திய நாட்டு இளைஞர்களுக்குக் கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பதிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இருக்கின்ற ஆழ்ந்த அறிவும் புலமையும்தான் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். அத்தகைய ஒரு நிலையை இன்று இந்திய இளைஞர்களுக்கு எது தந்தது என்று கூறினால், மெக்காலே அறிமுகப்படுத்திய ஆங்கில வழிக்கல்வி என்பதைப் பிரதமரும் பா.ச.க.வினரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதற்கு என்ன காரணம் என்பது நமக்குப் புரிகிறது.
வாய்ப்புக்
கிடைக்கின்ற போதெல்லாம் மெக்காலேவையும், அவர் தந்த வாழ்க்கைக் கல்வியையும், அவர் அறிமுகப்படுத்திய ஆங்கிலத்தையும் வசைபாடுவதையும், குறை கூறுவதையுமே வழக்கமாகக் கொண்டிருக்கின்ற பிரதமரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், அதனால் இந்தியச் சமூகம் தன்னுடைய பழம்பெருமைகளை இழந்துவிட்டதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இவர்கள்
கூறுகின்ற அந்தப் பழம் பெருமை என்ன? மெக்காலே அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வியால் இந்தியச் சமூகம் இழந்தது என்ன? என்பதைப் பற்றிய ஒரு விளக்கத்தைப் பிரதமரும் பா.ச.க.வும், ஆர்.எஸ்.எஸ்.-சும் நாட்டு மக்களுக்குக் கூறவேண்டும்!
மெக்காலே
இந்திய நாட்டிற்குள்ளே வருகின்ற போது, இந்தியாவினுடைய சமூகச் சூழலை பாரதியார் மிக அருமையாகப் பாடுவார்.
‘ஆற்றினில் பெண்களை எறிவதும்,
இரதத்து
உருளையில்
பாலரை
உயிருடன் மாய்த்ததும்,
பெண்டிரைக்
கணவர்தம்
பிணத்துடன்
எரித்ததும் எனப் பல தீமைகள்.’
இவ்வாறு
பாரதியார் நம் சமூகத்தின் தீமைகளை வரிசைப்படுத்தினார். ஆங்கிலேயர் வருகைக்கு முந்தைய இந்தியச் சமூகம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
சாதிப்
பிரிவுகள் கூறி நித்தமும் சண்டைகள் நடத்தியவர்கள் யார்? கல்வி கற்கும் உரிமைக்கு உரியவராய் ஒரு சாதியினர் மட்டும் இருந்தனரே... அது எப்படி? பெரும்பான்மையான மக்களுக்குக் கல்வி கற்கும் உரிமை தரப்பட்டு இருந்ததா? பெண் கல்வியினுடைய நிலை என்ன? இந்திய மக்களினுடைய வேளாண்மைத் தொழில், வியாபாரம், இவற்றில் விஞ்ஞான அணுகுமுறைகள் இருந்தனவா? பெண்களுக்குரிய சமூக மதிப்பீடுகள் என்ன? ஒதுக்கப்பட்ட சாதி என்பதற்கான சமூக அடையாளங்கள் என்ன? தண்டனைக்குரிய குற்றங்கள் என்ன? நீதிமுறைகள் என்ன? இவை பற்றி எல்லாம் தெரிந்துகொண்டால்தான் மெக்காலேயின் கல்வித் திட்டம் இந்தச் சமூகத்திற்குத் தந்த மாற்றத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
கிழக்கிந்தியக்
கம்பெனி ஆண்டொன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய்களை இந்தியாவிலே கல்வி நிலையங்களுக்கு மானியமாக வழங்கியதாகக் கணக்கு எழுதி வைத்திருந்தது. இந்தக் கணக்கை ஆராய்ந்த பிரிட்டிஷ் பாராளுமன்றம், அதனுடைய பயன்பாட்டின் உண்மைநிலையை அறிவதற்காக அனுப்பப்பட்ட குழுவின் தலைவராகத்தான் மெக்காலே அவர்கள் இந்தியாவிற்கு வந்தார். அவர் வருகின்றபோது இந்தியா முழுவதும் கல்விச் சாலைகள் என்று அடையாளப்பட்டு இருந்த அமைப்புகளைக் கண்ட அவர் மனம் உள்ளபடியே வருந்தியது. அங்கே தரப்பட்டது வாழ்க்கைக் கல்வி அல்ல என்பதை அவர் உணர்ந்துகொண்டார். ஒருபுறம் வேத பாடசாலைகள்; அங்கே சமஸ்கிருதத்தில் வேதபாடங்கள் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டது. அந்த மாணவர்கள் அனைவரும் சமூகத்தின் ஒரு சாதியைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். மற்றொருபுறம் அரபி பாடசாலைகள்- மதரசாக்கள். அங்கே அரபி மொழியிலே இசுலாமிய மார்க்கக் கல்வி மட்டுமே வழங்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி கொடுத்த கல்வி மானியம் வேதபாடசாலைகளுக்கும் மதரசாக்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டது. இவற்றைத் தவிர வேறு யாருக்காவது கல்வி கற்கவேண்டும் என்கிற விழைவு இருந்தால், அதற்கான வசதியும் வாய்ப்பும் அவர்களுக்கு இருந்தால் தங்கள் வீடுகளிலே திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடத்தி, தங்களுடைய பிள்ளைகளை எழுதப் படிக்க வைத்தார்களே தவிர, சமூகம் தழுவிய ஒரு கல்வி ஏற்பாடு அன்றைக்கு இல்லை.
மெக்காலே
இதைப் பார்த்தவுடனே, இந்தக் கல்வியால் சாமானிய மக்களுடைய வாழ்க்கைத் தரம் எந்த விதத்திலும் உயராது என்ற முடிவுக்கு வந்தவராய், வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு கல்விமுறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரையை கவர்னர் ஜெனரலுக்குப் பரிந்துரைத்து, அவரின் ஒப்புதலைப் பெற்று அந்த வாழ்க்கைக் கல்விமுறையை அறிமுகப்படுத்தியதுதான் மெக்காலே இந்த நாட்டிற்குச் செய்த மிகப்பெரிய சேவை.
மெக்காலே
அவர்கள் இந்தியாவிற்கு வருகின்றபோது இங்கிலாந்தில் தொழில்புரட்சி நடந்து கொண்டிருந்த காலம். அங்கே உருவான தொழிற்சாலைகள் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்து குவித்தன. உபரியாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை உலகம் முழுவதும் கொண்டு சந்தைப்படுத்துவதற்கான சூழ்நிலை வந்தபோது, ‘இந்தியா ஒரு பெரும் சந்தை’ என்று அடையாளம் கண்டு கொண்டார்கள். அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் வேண்டும் என்று நினைத்தார்கள். அந்தத் தொழில்நுட்பங்களை இங்கே கொண்டுவந்து, அதன் மூலமாக இங்கே பொருள்களை உற்பத்தி செய்கின்றபோது அந்தத் தொழில்நுட்பத்தை உணர்ந்து செயல்படுத்தக்கூடிய திறன்பெற்ற தொழிலாளர்கள், அதைச் சிறப்பாகச் செய்யக்கூடிய கைவினைஞர்கள் தேவை என்று அவர்கள் உணர்ந்தார்கள். அவற்றைக் கற்றுக் கொடுப்பதற்கான கல்விதான் அன்று அவர்களுக்குத் தேவைப்பட்டது.
“கிழக்கிந்தியக்
கம்பெனிக்கும், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும் தேவைப்படுகின்ற குமஸ்தாக்களையும் கணக்கர்களையும் உருவாக்கப்படுவதற்காகவே தயாரிக்கப்பட்டது மெக்காலே கல்வி முறை. அது இந்தியாவினுடைய ஆன்மாவை அழித்துவிட்டது. இந்தியாவினுடைய கலாச்சாரத் தொன்மையை அழித்துவிட்டது. அதனுடைய பண்பாட்டு அடையாளங்களைச் சிதைத்துவிட்டது” என்றெல்லாம்
குற்றம் சாட்டுகின்றவர்கள், அந்தப் பண்பாட்டு அடையாளங்கள் என்னென்ன? அந்தக் கலாச்சாரச் சிதைவுகள் என்னென்ன? என்பதை வரிசைப்படுத்தவேண்டும். பாலிய விவாகத்தில் இருந்து, விதவைகள் மறுமணம் மறுக்கப்பட்டதுவரை கணவர் இறந்தவுடனே அவர்களுடன் உடன்கட்டை ஏறவேண்டும் என்கிற நிர்ப்பந்தமும், பெண்களுக்குக் கல்வியே தேவையில்லை என்கிற சூழ்நிலையும், சமூகத்தின் மேல்தட்டு மக்களாகிய ஆதிக்கச் சாதியினர் மட்டுமே கல்வி கற்கமுடியும் என்ற சமூகச் சூழலும்தான் அவர்கள் கூறுகின்ற பண்பாட்டு அடையாளங்கள்!
மெக்காலேயினுடைய
கல்வித்திட்டம் வந்த பிறகுதான் சாமானிய மக்கள், அடித்தட்டு மக்கள், இன்னும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட - பழங்குடி மற்றும் பட்டியலின மக்கள் கல்வி கற்கக்கூடிய வாய்ப்பினை முதன்முறையாகப் பெற்றனர். மெக்காலேயினுடைய கல்வித்திட்டம் நாட்டிலே அறிமுகப்படுத்தப்பட்டதன் வழியாகக் கல்வியைப் பெற்றுக்கொண்டவர்கள்தான் பல குடும்பங்களில் முதன்
முதலாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக உருவானார்கள். அப்படி உருவானவர்கள்தான் தொழிற்சாலைகளில் வேலை பார்த்தார்கள். அரசு அலுவலகங்களில் வேலை பார்த்தார்கள். ஆசிரியர்களாகப் பணியாற்றினார்கள். தங்களது மக்களையும் கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றி, இன்று அதன் தொடர்ச்சியாக உலக அளவிலே உலகம் போற்றும் விஞ்ஞானிகளாக, ஆராய்ச்சியாளர்களாக இந்தியர்கள் மாறி இருக்கிறார்கள் என்று கூறினால் மிகையாகாது.
நமது
பிரதமர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நாட்டின் இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணமாக காங்கிரசையும், தேசத்தின் முதல் பிரதமர் நேரு அவர்களையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. பா.ச.க.வின் மதத்தை முன்னிலைப்படுத்தும் அரசியல், வட இந்தியாவில் வேர்
பிடித்ததைப் போல, தெற்கே செல்லுபடியாகவில்லை என்பதற்குக் காரணம், தென் மாநிலங்களில் பரவலாகியிருந்த கல்வியும், ஆங்கிலத்தில் படிக்கும் ஆர்வமும்தான் என்பது பா.ச.க.வின் கருத்து.
‘சனநாயகம், சமூகநீதி, சோசலிசம், மதச்சார்பின்மை போன்ற நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் ஐரோப்பியச் சிந்தனைகள்’ என்று
ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தின் பிதாமகர் கோல்வால்கர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தில் பாரத மண்ணின் சாயலே இல்லை என்றும், அது முழுக்க முழுக்க நேரு, அம்பேத்கர் போன்ற ஐரோப்பியக் கலாச்சார ஆதரவாளர்களால் பாரதத்தின் பண்பாட்டு மரபைச் சிதைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆவணம் என்பதனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக அறிவித்தது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய முக்கியத் தலைவர்களும், சுதந்திர இந்தியாவைக் கட்டியெழுப்பிய பல முக்கிய அறிஞர்களும்
இங்கிலாந்தில் படித்தவர்களாக இருந்ததால் அவர்களை ‘மெக்காலேயின் கால்வருடிகள்’ என்று
ஏளனம் செய்தவர்கள்தாம் நமது பிரதமரின் முன்னோர்கள்.
மெக்காலே
உருவாக்கிய அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று நமது பிரதமர் கூறுவது, பா.ச.க.வின் இந்துத்துவக் கருத்தியலை ஒட்டுமொத்த இந்தியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் நாம் புரிந்துகொள்கிறோம்.
அரசு
நிகழ்ச்சியாக இருந்தாலும், ஆன்மிக நிகழ்வுகளாக இருந்தாலும் அரசியல் பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் நமது பிரதமர் கூறிய கருத்துகள் வரலாற்றுப் பிழைகளாக இருப்பதால், அதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு வரலாறு அறிந்தவர்களுக்கு உண்டு. அதனைச் செய்யத் தவறினால் வளரும் தலைமுறை புனையப்பட்ட கதைகளை வரலாறு என நம்பி வீழும்.
“தாமஸ் பாபிங்டன் மெக்காலே இந்தியச் சமூகத்தின் பண்பாட்டைச் சிதைத்த வில்லன்” என்று நமது பிரதமர் குற்றம்சாட்டுவது நியாயமா? என்பதை இந்தியச் சமூகத்தின் முடிவுக்கே விட்டுவிடலாம்!
(தொடரும்)
எண்பதுகளின் தொடக்கத்தில் குமரி மாவட்டத்தின் மண்டைக்காட்டில் சங்கப் பரிவாரங்களின் திட்டமிட்ட சூழ்ச்சியால் இந்து முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியல் பரப்புரைகள், தொடர்ந்த வகுப்புவாதக் கலவரங்கள், தொடர்ந்து அறுவடை செய்யப்பட்ட வகுப்புவாத அரசியல் குமரி மாவட்டத்தைக் குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட வகுப்புவாத அரசியலின் மிகப்பெரிய அறுவடை குமரியில்தான் தொடங்கியது.
திராவிட
மண்ணின் திருவிதாங்கோட்டு தொகுதிதான் தமிழ்நாட்டின் முதல் இந்து முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர். இதே தொகுதி மீண்டும் ஒருமுறை பாரதிய சனதாவின் வேலாயுதத்தை உறுப்பினராகத் தெரிவுசெய்யும் ‘பெருமை’யைத் தந்தது. இன்று சங்கப் பரிவாரங்களின் உண்மையான விளை நிலமாக குமரித் தொகுதி நம்பப்படுகிறது. இருமுறை ஒன்றிய அரசின் அமைச்சர் பதவியை வகிக்கும் வாய்ப்பு குமரியின் பொன். இராதாகிருஷ்ணன் பெற்றமைக்கான காரணம் என்ன? இன்றும் மதச்சார்பற்றக் கட்சிகளுக்குப் பெரும் சவாலைத் தரும் மாவட்டமாக குமரியே உள்ளது. நாகர்கோவில் தொகுதி இன்று பாரதிய சனதா வசமே உள்ளது.
குமரி
மக்கள் தமிழ்நாட்டில் அதிக கல்வி அறிவு பெற்றவர்கள். குமரியின் மக்கள்தொகையில் ஐம்பது விழுக்காட்டினருக்கும் மேல் கிறித்தவ மறையைச் சார்ந்தவர்கள். நாடார் குலத்தைச் சார்ந்தோர் பகுதி; குறிப்பிட்ட எண்ணிக்கையில் கணிசமானோர் மீனவர்கள். இவர்கள் அனைவரும் கத்தோலிக்க மறையைச் சார்ந்தோர். கடலன்னையின் தயவில் வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கும் இம்மக்கள், தாம் சேகரித்த கடல்வளத்தை உள்நாட்டு மக்களோடு கொண்ட வாணிபம் தரும் வருவாயில் வாழ்பவரே.
குமரி
மாவட்டத்தைக் குறிவைத்த சங்கப் பரிவாரங்கள், சமயங்களால் வேறுபட்ட மக்களாயினும், சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்த இம்மக்களிடையே பிரிவினையை வளர்க்கத் திட்டமிட்டு அதில் வெற்றியும் கண்டன. குமரி மாவட்டத்தின் பெரும்பான்மை நாடார் குலமக்கள் இந்து-கிறித்தவர் என்ற பிரிவினையுடையவராயினும், சாதி ரீதியாக ஒருமனப்பட்டிருந்தனர். ‘குமரியின் தந்தை’ எனப் போற்றப்படும் மார்ஷல் நேசமணி அவர்கள் ஒரு கிறித்தவராயினும், இந்து மதம் சார்ந்த நாடார் எவரும் இவரைக் கிறித்தவராகக் கருதி பேதம் காட்டவில்லை. இவர் மரணம் அடைவதுவரை நாகர்கோவில் தொகுதியின் முடிசூடா மன்னராகவே திகழ்ந்தார்.
1967-ஆம் ஆண்டு
நடந்த தேர்தலில், தான் பிறந்த விருதுநகரில் தோற்றுப்போன பெருந்தலைவர் காமராசர், 1969-இல் மார்ஷல் நேசமணி உயிரிழந்த நிலையில் அவரின் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முன்வந்தார். தலைவர் காமராசருக்கு எதிராக உள்ளூரில் செல்வாக்குப் பெற்ற கிறித்தவ மறைசார்ந்த மருத்துவர் ஒருவர் நிறுத்தப்பட்டார். இதுவரை கிறித்தவராம் மார்ஷல் நேசமணியை ஆதரித்த மக்கள், மத வேறுபாடு காட்டாமல்
வேறு மாவட்டத்தைச் சார்ந்த, வேறு மதம் சார்ந்த காமராசரைச் சமயப் பேதமின்றி, இருவேறு சமயம் சார்ந்த நாடார் குலமக்கள் ஒருங்கிணைந்து மிகப் பெரிய வெற்றியைத் தந்தனர்.
நச்சு விளைத்த
விதை
குமரி
மக்கள் மத வேறு பாடுகளை
மறந்து, சமூக ரீதியாக ஒன்றுபட்டிருந்த நிலையில் வகுப்புவாத நச்சு மெல்ல மெல்ல ஏற்றப்பட்டதன் விளைவு, இன்று மத அடையாளமே தேர்தல்
வெற்றியை நிர்ணயிக்கும் கருவியாய் மாறிப்போனது. இருபெரும் சமய அடையாளங்களை முன்வைத்தே தேர்தல் நடத்தப்படுகிறது. கட்சி ரீதியாக வேறுபட்டு, கட்சியின் அடிப்படையில் வாக்களிப்பதைவிட்டு, இன்று குமரி மக்கள் மதரீதியாக வேறுபட்டு வாக்களிக்கின்றனர். கிறித்தவர்களைக் கிறித்தவர்களாகவும், இந்துகளை இந்துகளாகவும் அணிதிரட்டி வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கின்ற நிலை.
தென்
திருவாங்கூர் பகுதியாம் இன்றைய குமரி மாவட்டம் தமிழ்ப்பேசும் பகுதியானதால், தமிழ்நாடு காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்து, குமரி மக்கள் சாதி, மத, ரீதியாகப் பிரிந்திருந்தாலும் குமரி மக்கள் ஒருங்கிணைந்து நின்று போராடி தாய்த் தமிழகத்தோடு 1956-இல் இணைந்தனர். ஒன்றுபட்ட போராட்டத்தில் நிறைய இழப்புகளைச் சந்தித்தாலும், பல உயிர்களை இழந்த
பின்னும் பிளவுபடாமல் ஒருங்கிணைந்து வெற்றி பெற்றனர். ஒன்றுபட்ட தனித்த இயல்புடைய இச்சமூகம் வகுப்புவாத நச்சின் ஊடுருவலால் சிதைந்துபோனது.
ஒரே நாளில்
அல்ல...
வகுப்புவாதம்
மதத்தை மையப்படுத்தி வளர்க்கப்பட்டாலும், இதன் நோக்கம் அரசியலே. ‘Politics playing
politics’
என்பார் வகுப்புவாத அரசியலை ஆய்வுசெய்த பேராசிரியர். “இவ்வகுப்புவாதக் கருத்தியல் ஒரேநாளில் உருவாக்கப்படுவதும் அல்ல; தாய் மடியில் படுத்துக்கொண்டு மெல்ல மெல்ல பாலை உறிஞ்சும் பச்சிளம் சிசுவைப்போல், வகுப்புவாத நச்சு மக்களிடம் பலவகை யுக்திகளால் ஊட்டப்படுகிறது. இதனை நச்சு (Toxis) என்பதை
அறியா மக்கள், இந்நச்சோடு வாழப் பழகிக் கொள்கின்றனர்” என்பார்
மேனாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்.
குமரி மாவட்ட அரசியலை இன்று மதரீதியான பிளவே தீர்மானிக்கிறது. மதரீதியாக
மக்களைப் பிளவுபடுத்தி வகுப்புவாத அரசியலை முன்னெடுத்த சங்கப் பரிவாரங்கள் இன்று குமரி மாவட்ட மக்களிடையே பகையையும் நம்பிக்கையின்மையையும் வளர்த்து வருகிறது.
மேலே
கூறப்பட்டது போன்று, இப்போக்கு ஒரே நாளில் உருவானதல்ல; குமரிக் கடலில் நிறுவப்பட்ட விவேகானந்தர் மண்டபம், தொடர்ந்து அமைக்கப்பட்ட விவேகானந்தர்புரம், குமரி மாவட்டக் கிறித்தவர் பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகள் முதலில் நடந்தேறின. கிறித்தவர்களின் ‘கட்டாய’ மதமாற்றம், ஆலயங்களில் ஒலிப்பெருக்கி ஏற்படுத்தும் சத்தம் குறிப்பாக, ஆண்டுதோறும் நடைபெறும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் திருவிழாவின்போது, அண்டை கடற்கரைவாழ் முக்குவர் இன இளைஞர்கள் இந்துப்
பெண்களை அவமானப்படுத்தியதாகக் கூறப்பட்ட பொய்யுரைகள், தொடர்ந்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட கலவரத்தில் எட்டு மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கொடூரம்!
வகுப்புவாதக்
கருத்தியலை விதைக்கத் தொடங்கி பொய்க்கதைகள், கன்னியாகுமரி மாவட்டத்தை ‘கன்னிமேரி’
மாவட்டமாக மாற்றுவதற்கான கிறித்தவர்களின் சூழ்ச்சி - இப்படியான பொய்ப்பரப்புரைகள் - திடீரென மாவட்டம் முழுவதும் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்து எழுச்சி மாநாடுகள் - குமரி மாவட்டத்தின் இந்து மத உயர்சாதி ஆதிக்கம்
எல்லாம் திட்டமிட்டு மிகச்சீராக, நேர்த்தியோடு திட்டமிட்ட முயற்சிகளின் விளைவே இன்றைய குமரி மண்ணில் வகுப்புவாத அரசியலின் வெற்றி.
இந்து
மதம் நியாயப்படுத்திய வர்ணக் கோட்பாட்டை எதிர்த்து நின்ற அய்யாவழி வைகுண்டர் தோன்றி புரட்சி செய்ததும் இங்குதான்.
குமரி
மாவட்ட மக்களில் ஒரு பிரிவைச் சார்ந்த பெண்கள் மார்பை மறைக்கும் வகையில் நிலவிய கொடுஞ்சட்டத்தை எதிர்த்து நிற்கவும் வெற்றி பெறவும் கிறித்தவம் துணை நின்றது என்ற வரலாற்றை எங்கும் மறந்துவிடக்கூடாது.
திருப்பரங்குன்றத்தில்
நடப்பது
என்ன?
குமரி
மாவட்டத்தை வகுப்புவாதிகளின் அரசியல் ஆதிக்கக்களமாக மாற்றுவதற்கு என்னென்ன முயற்சிகள் செய்யப்பட்டனவோ, அதே முயற்சிகள் இங்கும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆளும் தி.மு.க.
அரசு இந்துகளுக்கு எதிரான அரசு, இந்துகளின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் அரசு என்ற பொய்ப்பிரச்சாரம். இதே பொய் முழக்கத்தை இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் முருகன் எழுப்புவதுதான் விந்தையிலும் விந்தை.
குமரியில்
மக்களை ஒன்றுபட்ட சாதியினரை மத அடிப்படையில் பிளவுபடுத்தலில்
வெற்றி கண்ட மதவாதிகள், தேசிய அளவில் இந்துகளை மத அடிப்படையில்
ஓர்மைப்படுத்த
(polarize) மதச்சிறுபான்மையினரை குறிப்பாக, இசுலாமியரை இந்நாட்டின் அந்நியராகவும் எதிரிகளாகவும் கட்டமைத்து வருவதை நாமறிவோம். மதுரையின் திருப்பரங்குன்றத்தை தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கவும், மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கவும் எடுக்கப்பட்ட முயற்சியே இன்றைய நிலை.
மண்டைக்காட்டு
கலவரத்திற்குப் பின் அரசால் அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன் அறிக்கை, குமரி மாவட்டத்தில் நடைபெறுவதாகக் கூறப்பட்ட மதமாற்ற நடவடிக்கையைச் சாடினாலும், ஆர்.எஸ். எஸ். அமைப்பு முன்னெடுக்கும் கலாச்சாரம் திராவிட மண்ணிற்கு எதிரானது என்றும் விமர்சித்திருந்தார். குமரி மாவட்டத்தின் கடலோர மக்களின் அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவர்களுக்கெனத் தனித்தொகுதியை ஒதுக்க வேண்டுமெனவும் பரிந்துரைத்தார். இப்பரிந்துரையை அரசும் கண்டுகொள்ளவில்லை, திரு அவையும் மறந்து போயிற்று.
குமரி
மாவட்டம் எரிந்த காலகட்டம் வேறு; இன்றைய காலகட்டம் வேறு. அன்று வகுப்புவாதக் கருத்தியல் நாடு முழுவதும் பரவாநிலை; இன்று தமிழ்நாடும், தமிழ்நாடு தாண்டியும் வகுப்புவாத அரசியல் இந்தியாவின் ஆளும் கருத்தியலாக ஏற்கப்பட்ட நிலை. அயோத்தியை இன்றைய மதவாதிகள் கையில் எடுத்திருந்தபோது, இந்தியருள் பலர் இன்றைக்கு உருவாகியுள்ள நிலை உருவாகும் என்று நம்பவில்லை.
1991-ஆம் ஆண்டின்
வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டவிதிகளையும் மீறி, 400 ஆண்டுகால மசூதி இடிக்கப்பட்டு, இராமருக்கான பெரிய கோவிலும் எழுந்தது அண்மை வரலாறு. இராமருக்கான கோவில் ஒரேநாளில் உருவாகவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவில் உருவாக்கப்பட்டது. இராமசென்ம பூமியில் எழுப்பப் பெற ஒரு நீதியரசரின் தீர்ப்பு காரணமாயிற்று. அதே இரஞ்சன் கோகாய் சரியான ‘சன்மானம்’
பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர், கோகாய் போன்று ஒரு தீர்ப்பெழுதுகிறார்.
மிக்கேல்பட்டி
பள்ளியில் நடைபெற்ற நிகழ்வை மிக்கேல்பட்டி என்ற பெயரே சான்றளிப்பதாகக் கூறி வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தவர் இவர்தான் -திருப்பரங்குன்றத்தின்
இன்றைய நாயகர். மிக்கேல்பட்டி வழக்கில் இவர் அளித்த தீர்ப்பை மேனாள் நீதியரசர் சந்துரு, “விசனம் அளிக்கும் விந்தை” என வர்ணித்ததை நினைவில்
கொள்வோம்.
திருப்பரங்குன்றம்
என்ற முருகப் பெருமானின் படை வீட்டைச் சிக்கந்தர் வழிபாடு தீட்டாக்கி விட்டதாம். அயோத்திக்கு ஓர் இராமர், குமரிக்குக் கிறித்தவம், திருப்பரங்குன்றத்திற்கு சிக்கந்தர்.
சிக்கந்தர்
மூலம் இசுலாமியர் மீது அவதூறு பரப்ப, மதப்பெரும்பான்மையைத் தேர்தல் நெருங்கும் வேளை ஓர்மைப்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. எளிமையான இறைநம்பிக்கையுடைய எளிய நம்பிக்கையில் விஷத்தை விதைத்து வரும் போக்கு தொடர்கிறது.
தமிழ்நாடு
பாரதிய சனதா வெற்றி நெருங்குவதாக மகிழ்வதில் நியாயம் உண்டு. தமிழ்நாடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், ‘அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்’
எனவும், ‘இவ்வரசு மக்களிடம் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கியுள்ளது’ எனவும்,
‘நீதியரசரின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்’
எனவும் அறிக்கை அளித்துள்ளமை தேர்தல் அரசியலில் எவருக்கும் வியப்பைத் தராது என்பது உண்மை.
பாசிசம்
அண்டை வாசலில் நிற்கிறது. மதச்சார்பற்றக் கட்சிகள், மதச்சார்பற்றச் சமூக இயக்கங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், இவைகளோடு தமிழ்நாடு திரு அவையும் என்ன செய்யப்போகின்றன? மௌனித்தல் நம் நிலைப்பாடாக இருத்தல் மாபெரும் குற்றமே.
“இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பது ஒரு குற்றம் (Crime); கொலைக்குள்ளாவது
குற்றம்; கொல்லப்படுதல் குற்றம்; ஏழையராக இருப்பது ஒரு குற்றம். ஏழையருக்காக நிலைப்பாடு எடுத்தால் அரசின் பார்வையில் குற்றம்”
- அருந்ததிராய் நூல்; அசாதி (Azadi) பக்.
13).
அன்றாடம் ஆலய மணியின் ஓசையைக் கேட்க வேண்டும்; அனுதினமும் திருப்பலியில் பங்கேற்று இறைவனின் திருவுடலாம் திவ்விய நற்கருணையை உட்கொள்ள வேண்டும் என்பதில் வெகு ஆர்வம் கொண்டு மதராசில் தாங்கள் வசித்த எறையூரை விட்டு, கீழச்சேரிக்கு இடம்பெயர்ந்த கைம்பெண் தாதிபத்ரி ஞானம்மாவுக்கு அவர் எதிர்பார்த்தபடியே கீழச்சேரியில் அதற்கான வாய்ப்பு அமைந்திருந்ததால் ஆன்மிகக் காரியங்களில் நிறைவு கண்டார்.
ஆலய
மணியோசை கேட்கும் தூரத்தில் குடியிருந்த அவரைச் சில காலங்களில் மற்றொரு மணியோசை பாதிக்கத்
தொடங்கியது. தினந்தோறும் கேட்கும் ஓசைதான் அது என்றாலும், காலைதோறும் அவர் கண்கள் கண்ட காட்சி அவர் மனத்தை வருத்தியது. ஒருபக்கம், ஆண் பிள்ளைகள் புத்தகப் பைகளைத் தம் தோள்களில் மாட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் நோக்கிச் சிட்டாய்ப் பறக்க, மற்றொரு பக்கம் அழுக்குப் படிந்த ஆடைகளோடு இளம்சிறுமிகள் வயல் வேலைக்குச் சென்ற காட்சி இதயத்தை இன்னலுக்குள்ளாக்கியது. ஆம், அவர் மனத்தை பாதித்தது பள்ளிக்கூட மணியின் ஓசைதான்.
தாட்டிபத்ரி
ஞானம்மாவின் தந்தை இராயண்ணா தான் பிறந்த ஊரான ஆந்திர மாநிலத்துப் பிரங்கிபுரத்தில் ஆலய வேதியராகப் பணியாற்றியவர். ஞானம்மாவுக்கு வாய்த்த கணவர் இன்னையாவும் ஒரு வேதியர். அதே பிரங்கிபுரத்தைச் சார்ந்தவர். குருத்துவப் பயிற்சி இல்லத்தில் சேர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்று வேதியர் பள்ளியில் கற்பிக்கும் திறன் கொண்டவர். தன் சொந்த ஊராம் ஆந்திராவிலுள்ள பிரங்கிபுரத்தில் குருக்களுக்கும் இறைமக்களுக்கும் பாலமாக இருந்து பணியாற்றிய இன்னையா, மறைபரப்புப் பணிக்கென பாண்டிச்சேரி சென்று அங்கு பணிசெய்த பிரெஞ்சு குருக்களுக்கு தெலுங்கு மொழியைக் கற்பிப்பதிலும், பிரெஞ்சு, ஆங்கிலம், இலத்தீன் ஆகிய மொழிகளில் இருந்த செபங்கள், நூல்களை தெலுங்கில் மொழிபெயர்ப்பதிலும் ஈடுபட்டார். மீண்டும் பிரங்கி புரத்துக்குத் திரும்பிய இன்னையா அங்கே ஞானம்மாவை மணமுடித்தார்.
இல்லற
வாழ்வின் சான்றாக அவர்களுக்கு ஐந்து ஆண்மக்கள் பிறந்தனர். தன்னுடைய ஆன்மிகப் பற்றாலும் திறமையாலும் எல்லாரின் மனம் கவர்ந்த இன்னையாவைப் பிரங்கிபுரம் பங்குக்குருவும் மதித்து நேசித்தார். அக்குருவானவர் மதராசிலுள்ள அப்போஸ்தலிக்க முதன்மைக்குருவாக இருந்த அருள்தந்தை ஜான்பென்னலி என்பவரைப் பணியின் நிமித்தம் சந்திக்க வரும்போதெல்லாம் இன்னையாவையும் உடன் அழைத்துக்கொண்டு மதராஸ் வருவார்.
இப்படி
1858-ஆம் ஆண்டில் ஒரு நாள் இருவரும் மதராசுக்குப் பயணித்த போதுதான் வழியில் ரேணிகுண்டாவில் காலரா நோயினால் பாதிக்கப்பட்டு இன்னையா இறந்துபோனார். பதினைந்து
வயதில் மணம் முடித்த ஞானம்மா, தன் முப்பத்தியேழாவது வயதில் கைம்பெண்ணானார்.
ஞானம்மாவின்
மூன்று பிள்ளைகள் மதராசிலும் செங்கல்பட்டிலும் குருத்துவப் பயிற்சியில் இணைய, அவர்களைச் சந்திப்பதின் பொருட்டு அடிக்கடி ஆந்திராவிலிருந்து மதராசுக்கு வர, ஒவ்வொரு முறையும் இருபது தினங்கள் பயணிக்க வேண்டியதில் இருந்த சிரமம், பணக்கஷ்டங்கள் ஆகியவற்றால் அருள்தந்தை ஜான் பென்னலியின் அறிவுரைப்படி 1859-ஆம் ஆண்டு தன் இரு மகன்களோடு மதராசுக்கு இருபத்தைந்து மைல் தொலைவிலுள்ள எறையூர் கிராமத்தில் குடியேறினார். மற்ற இரு பிள்ளைகளும்கூட குருமடத்தில் இணைந்தனர்.
பிரங்கிபுரத்தில்
தினமும் திருப்பலி கண்டுபழக்கப்பட்ட ஞானம்மா, எறையூரில் அன்றாடத் திருப்பலி இல்லாமையாலும், மற்ற அருள்சாதனக் கொண்டாட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போனதாலும் கீழச்சேரிக்கு வந்து குடியேறினார். இங்கே விரும்பியபடியே ஆலயத்தின் திருப்பீடம் கண்ணுக்குத் தெரியும் தூரத்திலும், ஆலய மணியோசை வெகு அருகே கேட்கும் தொலைவிலும் வசித்து வந்த ஞானம்மாவை தொந்தரவுக்குள்ளாக்கியது அமல அன்னை பிரான்சிஸ்கன் சபை துறவியர் நடத்திய ஆண் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடத்தின் மணியோசை.
முன்னேற்றம்
என்பதே வாழ்வில் இல்லாத அந்தக் கிராமத்துப் பெண் பிள்ளைகள் குறித்துக் கவலைப்படத் தொடங்கினார். கடவுளின் படைப்பான பெண் பிள்ளைகளுக்குள்ள வேதனைகள் நீங்கி வாழ்வில் தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்க கல்வியறிவு அவசியம் என்பதைத் தீர்மானித்தார். பெண் பிள்ளைகளும் படிப்பறிவு பெறவேண்டும் என்ற ஆதங்கம் உள்ளத்துள் நெருப்பாகக் கனன்றுக் கொண்டிருந்தது. இந்த நெருப்பிலிருந்து பெண் பிள்ளைகளின் வாழ்வில் ஒளியேற்றத் தூண்டுகோலாக விளங்கியது பிரான்சிஸ்கன் சபை துறவியர் நடத்திய ஆரம்பப் பள்ளிக்கூடம்தான்.
தன்னுடைய
தொடர் செபங்களிலும் தியானங்களிலும் இறைவேண்டுதல் புரிந்தார். பெண் கல்வி என்ற அவருடைய கனவு நனவாக பொருள் பலமும், மனித பலமும் தேவைப்பட்டது. ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையோடு அடுத்தக் காரியத்தில் இறங்கினார்.
முதல்
வேலையாக தன் சொந்த ஊரான பிரங்கிபுரம் சென்றவர், அங்கே சில நாள்கள் தங்கி தன் சொத்துகளை விற்றுப் பணம் திரட்டினார். பணத்தோடு கீழச்சேரி திரும்பியவர், ஆலயத்திற்கு அருகாமையிலேயே நிலம் வாங்கினார். அமல அன்னை பிரான்சிஸ்கன் சபைத் துறவியர் உதவியுடன் ஆந்திராவிலுள்ள கிறித்தவ மையங்களுக்கெல்லாம் சென்று நிதி திரட்டினார். தன் நிலபுலன்களையெல்லாம் விற்று அவர் வாங்கிப் போட்ட நிலத்தில் 03-05-1863 அன்று புனித கிளாரம்மாள் பெண்கள் ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது.
‘பெண்களுக்குக் கல்வியா? பெண்களுக்குப் பள்ளிக்கூடமா?’ என்று அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் கேள்விகள் எழும்பின. தடைகளைப் பொருட்படுத்தாத ஞானம்மாவின் நல்லொழுக்கத்தை, ஆன்மிக வாழ்வை, நல்ல உள்ளத்தை உணர்ந்திருந்த மக்கள் தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளைப் படிக்க அனுப்பி வைத்தனர். அக்கம்பக்கத்திலுள்ள ஊர்களிலெல்லாம் இந்தச் செய்தி பரவிற்று. சுற்று வட்டாரக் கிராமங்களிலுள்ள பெண் குழந்தைகளும் அப்பள்ளியில் வந்துசேர, அவர்கள் தங்கிப் படிக்க விடுதியொன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
பெண்
கல்விக்காகப் பாடுபட்டபோதும் அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது சமுதாயத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது. ‘வீட்டில் அடைந்து கிடக்க வேண்டிய பெண்ணுக்குப் படிப்பா?’ என்று முணுமுணுத்த ஆண்கள், தங்கள் பெண் பிள்ளைகளை வகுப்பறையிலிருந்து இழுத்துச் சென்றனர். கிராமத்துப் பெரியவர்கள் ஞானம்மாவை ஊரைவிட்டே விரட்டவும் திட்டமிட்டனர். வயதானவர்களையும் பிள்ளைகளையும் தவிர அவ்வூரில் ஞானம்மாவுக்கு ஒத்துழைப்பு என்பது கிடைக்கவில்லை. தனித்துப்போன தன்னுடைய நிலை, பிள்ளைகளுக்கு உணவு மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய நிலை, தனக்குப் பின் யார் இந்த முயற்சியை முன்னெடுத்து நடத்துவது? என்ற கேள்வி... இந்த முயற்சிக்கான கடினமான பயணங்கள் எல்லாம் அவருக்கு மன உளைச்சலைக் கொடுக்க
உடல் நலம் கெட்டது. இவையெல்லாம் குறித்து இறைவனிடம் விடாப்பிடியாக வேண்டினார்.
சில
காலங்களில் நிலைமை மாற்றம் காணலாயிற்று. பள்ளிகளில் பிள்ளைகள் எண்ணிக்கை பெருகிற்று. அங்கே பயின்ற பெண் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல, ஆன்மிகத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க அந்தக் கிராமமே வாயடைத்துப் போனது
அப்பள்ளியில்
கல்வி பயின்ற குண்டப்பு மரியம்மா, இல்லூர் ஆகத்தம்மா, அருளம்மா என்ற மூன்று மாணவியர், ஞானம்மாவை தங்கள் வாழ்வின் முன்மாதிரியாகக் கொண்டிருந்தாலும், அதில் ஆகத்தம்மா, அருளம்மா இருவரும் துறவு நிலை ஏற்று அவருடைய கல்விப்பணியை தொடர்ந்து ஆற்ற முன்வந்தனர். நிம்மதிப்
பெரு மூச்சுவிட்டார் ஞானம்மா. பங்குத்தந்தை ஆரோக்கிய நாதரிடம் கலந்தாலோசித்து, அவர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கீழச்சேரியில் புனித அன்னாள் சபை துவக்கப்பட்டது. அப்புதிய துறவற சபையில் அருளம்மா, ஆகத்தம்மா இருவரையும் துறவுநிலைக்குத் தயார் செய்தார். பெல்லாரியிலுள்ள பெங்களூர் புனித அன்னாள் சபையில் சேர்ந்து இருவரும் பயிற்சி பெற்றனர். கீழச்சேரியில் புனித அன்னாள் சபை துவக்கப்பட்டு, அப்பள்ளிக்கூடம் சபையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு புனித அன்னாள் ஆரம்பப் பள்ளிக்கூடமாகப் பெயர் மாற்றம் பெற்றது. பயிற்சி முடித்துத் திரும்பிய அருள்சகோதரிகள் இருவரும் ஞானம்மாவோடு பள்ளியின் பராமரிப்பில் பங்கேற்றனர்.
இடைவிடாத
உழைப்பு, இருபது ஆண்டு கால ஆஸ்துமா நோயின் பாதிப்பு, அடிக்கடி நீண்ட பயணங்கள்... எல்லாம் ஞானம்மாவைப் படுத்த படுக்கையாக்கின. கீழச்சேரியில் தான் முன்நின்று துவக்கிய புனித அன்னாள் சபை வளர்ச்சி கண்டு மகிழ்ந்தவராய், தன் இறுதிப்படுக்கையில், பெண் பிள்ளைகளின் கல்விக்காகப் பாடுபடுவது குறித்து சபையின் சகோதரிகளுக்கு அறிவுரை வழங்கிய ஞானம்மா, நோயில்பூசுதல் பெற்றவராய் 21.12.1874 அன்று இறைவனில் சங்கமித்தார்.
அனுதினமும்
ஆலய மணியின் ஓசையைக் கேட்டுக்கொண்டே உயிர்வாழ ஆசித்த ஞானம்மா என்கிற ஓர் எளிய விதவைப் பெண்மணியின் செவிகளில் ஒலித்த ஆண் பிள்ளைகளுக்கான ஆரம்பப் பள்ளிக்கூட
மணியின் ஓசை, தொலைநோக்குப் பார்வையோடு பெண்களுக்கும் கல்வியில் சம உரிமை என வரலாற்றையே
புரட்டிப்போட்டு ஒரு
யுகப்புரட்சிக்கு வித்திட வைத்தது.
கீழச்சேரியிலுள்ள
தூய இருதய ஆண்டவர் ஆலய மணியோசை இறைப்பெருமையை ஒலித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அன்னை ஞானம்மா ஆரம்பித்து வைத்த புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளிக்கூட
மணியின் ஓசை இறைஊழியர் ஞானம்மாவின் பெயரைத்தான் இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
“என்ன சேசு சித்தப்பா, இரயில்வே ஸ்டேசனுல பாக்க முடியுது? எங்க தூரமா?”
கோட்டாறு
இரயில்வே ஸ்டேசனின் பிளாட்பார இருக்கையில் அமர்ந்திருந்த சேசையாவிடம் அக்கறையோடு கேட்டான் ஸ்டீபன்.
“அதுதான் உனக்குத் தெரியுமே, அந்த வழிப்பாதை பிரச்சினை. கோர்ட் கேஸ் எப்போ முடியுமுணு தெரியலை. அதுக்கப்பாட்டுக்கு இழுத்தடிச்சிக் கிட்டிருக்கு. அதான் திடீர்னு சென்னை கோர்ட்டுக்கு நம்ம வக்கீல் வரச்சொன்னாரு” என்று
தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டார் அவர்.
“ஆனாலும் உங்க பெரியப்பா பையனுக்கு வீம்பு அதிகம்தான் சித்தப்பா. வயசான காலத்துல கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போனாதான் என்னவாம்? வழிப்பாதைதானே கேட்கிறீங்க. அவர் வீட்டையா கேட்டீங்க?”
“அத விடு சவத்த.
நீ எங்க போற?” என்று ஸ்டீபனை அதைப்பற்றிப் பேசவிடாமல் செய்தார் சேசையா.
“இல்ல, என் மவா ஆறு மணி வண்டியில லீவுக்காக வர்றா. அதான் கூட்டிட்டுப்போக வந்தேன். அதோ, ட்ரெயின் வந்திடுச்சு. சரி, நீங்க போயிட்டு வாங்க” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றான் ஸ்டீபன்.
சேசையா,
தான் வாங்கிப் படித்துக்கொண்டிருந்த பேப்பரைப் பக்கத்தில் மடித்துவைத்துவிட்டுத் திரும்பும்போது, தாசன் அப்பக்கமாக ஒரு தோள் பையை மாட்டிக்கொண்டு வேட்டி அணிந்த கோலியாத்தாகச் சென்றுகொண்டிருந்தார்.
இந்த
தாசன்தான் தன் வழிப்பாதையை சேசையா வளைத்துப்போட்டதாகக் கேஸ் கொடுத்தது. அண்ணன் மகன் என்றாலும், அவர்களுக்கிடையே இரண்டு ஆண்டுகளாக இருந்த பகை மட்டும் தீரவே இல்லை. ஊர்ப்பெரியவர்கள், அருள்பணியாளர்கள் என்று எல்லாரும் நியாயம் பேசிப் பார்த்த பிறகும் இரண்டு குடும்பங்களும் சமாதானம் ஆனப்பாடில்லை. இந்த நிலையில்தான் தாசனும் அதே கேஸ் விசயமாக சென்னைக்குப் போக இரயில்வே ஸ்டேசன் வந்திருக்கிறான்.
கன்னியாகுமரி
எக்ஸ்பிரஸ் சரியாக மாலை 6.20 மணிக்கு நாகர்கோவில் சந்திப்புக்கு அலறிக் கொண்டே வந்தது. இரயிலைக் கண்டவுடன் இரயிலேறக் காத்திருந்த பயணிகள் ஆயிரம் கால் அட்டையை இழுத்துச்செல்ல முயற்சிக்கும் எறும்புகளைப்போல இரயில் வண்டியை மொய்த்தனர்.
சேசையா
தட்கலில் கடைசி நேரத்தில் முன் பதிவு செய்ததினால் அவருக்குப் பெர்த் கிடைக்கவில்லை; ஆர்.ஏ.சி. இருக்கையே
கிடைத்திருந்தது. டி.டி.ஆர்.
கிட்ட பேசி படுக்கைக்கு ஏற்பாடு செய்திடலாம் என்று எண்ணிக்கொண்டார். வண்டி புறப்படும் நேரத்தில் தன் இருக்கைக்கு முன்பாக பழக்கமான முகம் கொண்ட மனிதர் ஒருவர் வந்து தயக்கத்தோடு உட்கார்ந்துகொண்டார். அவர் வேறு யாருமில்லை, தாசன்தான். யார் முகத்தைப் பார்க்கக்கூடாது என்று நினைத்தாரோ, அவர் தன் முன்னிருக்கையில் வந்து அமர்ந்தது பெரும் அசௌகரியத்தை உண்டாக்கியது சேசையாவிற்கு. ஆயினும், டி.டி.ஆர்.
வந்தால் எப்படியாவது வேறு இருக்கை கேட்டுச் சென்றுவிடலாம் என்ற தைரியத்தில் தன் பார்வையைச் சன்னலுக்கு வெளியே பதித்தார்.
தாசனுக்கும்
அதே உணர்வுதான் இருந்திருக்க வேண்டும். இப்படி ஒரு சூழல் வரும் என்று தெரிந்திருந்தால் அவர் பேருந்தில் சென்றிருப்பார்.
இரயில்
கொஞ்ச தூரம் சென்றிருந்த நேரத்திலேயே ‘55, 56 பெயர் சொல்லுங்க’
என்ற டி.டி.ஆர்.
குரல் கேட்டு ‘தாசன்’,
‘சேசையா’ என்று
தங்கள் பெயர்களைக் கூறினர் இருவரும். சேசையாவிற்குக் கொஞ்சம் அதிகமாகவே நரைமுடி வளர்ந்திருந்தது. தாசனுக்கோ வழுக்கைத்தலை. சேசையா பேண்ட்-சர்ட் அணிந்திருந்தார். தாசனோ வேட்டி-சட்டை அணிந்திருந்தார். எல்லாவற்றிலும் வெவ்வேறாகவே இருவரும் காட்சியளித்தனர். எதிலுமே ஒற்றுமையென்று கூறுவதற்கு ஒன்றுமில்லை.
“சார், ஆர்.ஏ.சி. வேறு
இடத்தில் பெர்த் கிடைக்குமா?” என்று கேட்டுவிட்டார் தாசன்.
“எதுனாலும் திருநெல்வேலிக்கு அப்புறம்தான் சார் சொல்ல முடியும்”
என்று கூறிவிட்டுக் கடந்து சென்றார் டி.டி.ஆர்.
தாசனுக்கு
இருப்புகொள்ளவில்லை. திருநெல்வேலி வரை அவர் இருக்கையில் அமர்ந்ததே இல்லை. இங்கும் அங்குமாக அலைந்துகொண்டே இருந்தார். அவர்களின் மன இறுக்கத்தை அவர்கள்
முகம் காட்டிக்கொடுத்தது. டி.டி.ஆர்.
வரும் போது அவர் கூடவே அரசியல்வாதியின் ‘பாடிகார்ட்’ போல
அவரை ஒட்டியே காதில் ஏதோ கேட்டுக்கொண்டே வந்தார்.
“சார்! என்னால ஒண்ணுமே பண்ணமுடியாது. இன்னைக்குப் பெர்த் காலியில்லை. நீங்க அட்ஜெஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்” என்றார்
டி.டி.ஆர்.
தாசன்
இந்தப் பதிலைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.
‘சண்டைக்காரனுடன் இருந்து எப்படிப் பயணிப்பது? அடுத்த ஸ்டாப்பில் இறங்கிப் போய்விடலாமா?’ என்று பல கேள்விகள் சேசையாவையும்
விட்டுவைக்கவில்லை.
அடுத்த
நாள் எப்படியும் கோர்ட்டுக்குப் போக வேண்டும் என்ற கட்டாயம் இருவருக்கும் இருந்ததனால் அவர்கள் எந்த விபரீத முடிவும் எடுக்கவில்லை. கொஞ்ச நேரம் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த தாசன், இரயில் பகல்பொழுதைக் கடந்து இரவுக்குள் பயணிக்கும் நேரத்தில் அவருடைய இருக்கையில் அமர்ந்துகொண்டார். தன் தோள்பையைத் திறந்து கட்டி வந்த சாப்பாட்டுப் பொட்டலத்தை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு ஒரு கைநிறைய மாத்திரைகளையும் விழுங்கிக்கொண்டு அப்படியே கண்ணடைத்து உட்கார்ந்துகொண்டார். சேசையாவிற்கு
அங்கே உட்கார்ந்து சாப்பிட மனம் இடங்கொடுக்காததால் கழிப்பறை பக்கம் நின்றுகொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
இரவு
வேளை... அனைவரும் போர்த்திக் கொண்டு தூங்கச்சென்றனர். தாசனும் சேசையாவும் அருகருகிலேயே சண்டை போட்டுக்கொண்டு முகம் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் கணவன்-மனைவிபோல இருளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். முதுகு வலியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தாசனைப்பார்த்து, “வேணும்னா உங்க காலத் தூக்கி வச்சிக்கோங்க... சௌகரியமா இருக்கும்”
என்று தொடங்கினார் சேசையா.
“பரவாயில்லை” என்று
மட்டும் சொல்லிக் கொண்டு கதவை இழுத்து அடைப்பதுபோல கண்களை மூடியடைத்துக் கொண்டான் தாசன். மிக இலாவகமாக இழுத்துச்செல்லும் இரயில் இன்று என்னவோ கஷ்டப்பட்டே இழுத்து சென்று கொண்டிருந்தது. இன்று அதற்குக் கொஞ்சம் சுமை அதிகம்போல! தூக்கம் யாரையும் விட்டுவைக்கவில்லை. குறட்டை சத்தம் மேளதாளமாகப் பல திசைகளிலிருந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. வீம்பும்-வைராக்கியமும் கேசும்-போலீசும் என்றிருந்த இந்த இருவருக்கும் தூக்கம் கண்ணைக்கட்ட வேறு வழியில்லாமல் அந்த அடிபடுக்கையிலேயே படுத்துக்கொண்டனர்.
வழி
பிரச்சினைக்காகப் பல ஆண்டுகள் அடித்துக்கொண்டவர்கள்
ஒரே படுக்கையில் ஒட்டி உரசிப் படுத்துக்கொண்டு பயணம் செய்தனர். அங்கு இருவருக்கும் போதுமான இடமிருந்தது. தங்களுக்குத் தெரியாமலேயே தூக்க கலக்கத்தில் ஒரே போர்வையில் தங்களைப் போர்த்திக் கொண்டிருந்தனர். கட்டிப்புரள்வதுபோல படுத்துக்கொண்டனர்.
விடியும்போது
சென்னையை அடைந்திருந்தது அந்த இரயில். விடிந்த பிறகு எழுந்து தங்களைத் தயார்படுத்திக்கொண்டனர். கண்விழித்த பிறகு அதே கோபம், அதே விரோதம் இன்னும் அவர்களுக்குள் இருப்பதாகவே காட்டிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துக்கொள்ளவில்லை, பேசிக்கொள்ளவில்லை. இரயில் ஏறும்போது எப்படி இருந்தார்களோ அப்படியே இறங்கிச் சென்றார்கள்.
தேவையில்லாத
கசப்பான நிகழ்வுகள், குடும்ப சண்டை சச்சரவுகள், விரோதங்கள், அகங்காரங்கள் மனிதனை உடலளவிலும் மனதளவிலும் மிகவே அதிகமாகப் பாதிக்கின்றன. வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பச் சூழலில் இத்தகைய மன உளைச்சல்கள் சமூக
ஊடகங்கள் வழியாக அதிகமாகப் பரவுகின்றன என்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இதனை ‘கெடுதிரை உருளல்’
(Doom Scrolling or Doom Surfing) என்கின்றனர் உளவியல்
ஆர்வலர்கள். அளவுக்கு
அதிகமாக மின்னணுத் திரைகளில் நேரத்தைச் செலவழித்து, அவற்றில் எதிர்மறையான செய்திகளைத் தேடிக் கண்டுபிடித்து நுகர்வதை ‘டூம்ஸ்க்ரோலிங்’ அல்லது
டூம்சர்ஃபிங்’ என்கின்றனர்.
2020-களில் ‘கோவிட்
19’ பெருந்தொற்று நேரத்தில் சமூக ஊடகங்களில் அச்சுறுத்தும் போலிச் செய்திகள் அதைக் காண்பவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.
அதேபோன்று அண்மையில் கரூரில் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நாற்பதிற்கும் மேலானவர்கள் இறந்து போனதையடுத்து தொடர்ந்து வந்த செய்திகளும், சமூக ஊடகக் காணொளிகளும் காட்சிகளும், அதில் சொல்லப்பட்ட கருத்துகளும் பலருக்கும் பெரும் பாதிப்பையும் மனப்பிறழ்வையும் ஏற்படுத்தியிருக்கும்.
இத்தகைய
காட்சிகளையும் செய்திகளையும் அதிகமாகத் திரும்பத் திரும்ப நுகரும்போது அது ஒரு மனிதனின் ஆளுமையையும், அன்றாடச் செயல்பாட்டையும் அதிகமாகப் பாதிக்கின்றது. நாம் எதனை அதிகமாக நுகர்கிறோமோ, அதனை மீண்டும் மீண்டும் நம் கண்முன்பாகக் கொண்டு வருவது ‘அல்காரிதத்தின்’ (Algorithm) வேலை.
எனவே, ‘டூம்ஸ்க்ரோலிங்’ போன்ற
மனிதனைக் கட்டுப்படுத்தும் அல்லது அவன் மனத்தைப் பாதிக்கும் காரியத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில், அளவிற்கு அதிகமான நேரம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நாம் தவிர்க்கவேண்டும். உடற்பயிற்சிக்கான முக்கியத்துவத்தையும் உணர வேண்டும்.
இணையம்
மற்றும் சமூக ஊடகங்கள் என்னும் கடலலை நம் கால்களை நனைக்க அனுமதிக்கலாமே தவிர, நம்மையே பேரலையாக மூழ்கடிக்க அனுமதிக்கக்கூடாது.
இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஐந்து யூனியன் பிரதேசங்களுக்குச் சட்டமன்றங்கள் இல்லை. 20 மாநிலங்களில் பா.ச.க. ஆள்கிறது. ஒன்பது மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி செய்கிறது. அதில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆள்கிறது. என்.டி.ஏ. மற்றும் ‘இந்தியா’ கூட்டணியில் சேராத மிசோரம் மாநிலத்தில் ‘ஜோரம்’ எனும் மாநிலக்கட்சி ஆள்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் இனக் கலவரங்களின் தொடர்ச்சியாக பா.ச.க. ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்பட்டு இந்திய அரசியல் அமைப்பின் சட்டப் பிரிவு 356-இன்படி குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். திட்டப்படி புதிய அரசியல் அமைப்பை, ஆட்சிமுறையை, ஒரே தேர்தலை, பொதுச்சிவில் சட்டத்தைக் கொண்டுவர பா.ச.க.
ஆளாத மாநில சட்ட சபைகளே பெரும் தடைக்கல். அதன் காரணமாக எல்லா மாநிலங்களிலும் பா.ச.க.
ஆட்சி என்ற ஆட்சிவெறியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உள்ளது. வட இந்தியாவில் நன்கு
கால் ஊன்றிய பா.ச.க.வுக்குத் தென்னிந்தியா பெரும் சவாலாக உள்ளது.
குறிப்பாக, கேரளம் மற்றும் தமிழ்நாடே முக்கியத் தடைக்கல்.
பீகார்
தேர்தல் முடிவுகளுக்குப் பின் பா.ச.க.
தமிழ்நாடு அரசியலில் தனிக்கவனம் செலுத்தும். வலுவான என்.டி.ஏ. கூட்டணியை
உருவாக்கிவிடும். “அமித்ஷா தமிழ்நாடு தேர்தல் களத்தைப் புதிய கூட்டணியால் புரட்டிப் போடுவார்”
என வலதுசாரிகள் ஆருடம் பேசினர். அ.தி.மு.க.வைத் தவிர
எவரும் பா.ச.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கு
நகரவில்லை என்பதே 2026-இன் தமிழ்நாடு தேர்தல் கள எதார்த்தம்.
பீகார்
தேர்தல் முடிந்தவுடன் வாரம் ஒருமுறை அமித்ஷா வருவார், நிர்மலா சீத்தாராமன் வருவார், மோடி வருவார் என அரசியல் விமர்சகர்கள்
அடித்துக் கூறினார்கள். ஆனால், அவர்களுக்குப் புரியாத புதிர் அரசியல், புதிய சமூக
நீதி அரசியல்
தமிழ்நாட்டில் உள்ளது. சாண் ஏறினால் முழம் இறங்குகிற தமிழ் நாடு பா.ச.க
அரசியல், எதற்கும் அசையாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கே ஆட்டம் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் வலுவான என்.டி.ஏ. கூட்டணிக்கான கட்டாயம்
பா.ச.க.வுக்கு
உள்ளது.
2024-பாராளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில்
இருந்த பா.ம.க.
கட்சி குடும்பச் சண்டையில் கதிகலங்கி நிற்கிறது. அன்புமணி ஐயாவும், சௌமியா அன்புமணி அம்மாவும், தனித்தனி பயணங்களில் பாட்டாளிச் சொந்தங்களைச் சந்திக்கிறார்கள். ஆனால், களத்தில் பெரிய ஐயா இராமதாஸ் அவர்களுக்கே செல்வாக்கு என்பது உண்மை.
அம்மா
மக்கள் முன்னேற்ற கழக டி.டி.வி.
தினகரனோ, “துரோகி எடப்பாடி முதல்வர் வேட்பாளர் எனும் இடத்தில், எங்களுக்குக் கூட்டணி இல்லை; நானும் அமித்ஷாவிடம் பேசப்போவதில்லை; அமித்ஷாவும் எங்களிடம் பேசமாட்டார்” என்று
கூட்டணிக் கதவை இழுத்து
மூடிவிட்டார். ஊருக்கு பத்து
பேர் உள்ள கட்சிகளான தமிழ் மாநில காங்கிரசின் ஜி.கே. வாசனும்,
கல்வித்தந்தைகள், புதிய நீதிக்கட்சியின் எ.சி. சண்முகமும்,
ஐ.ஜே.கே. கட்சியின்
பாரிவேந்தரும், பா.ச.க.வை விட்டால் வேறு
வழியே இல்லை எனத் தொடர்கிறார்கள்.
அமித்ஷா,
‘அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம்’ என
அறிவித்தார். புதிதாகத் த.வெ.க.வில் சேர்ந்த செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு என்ற நாடகத்திற்கு கதை, வசனம், இயக்கம் அமித்ஷாவும், ஆடிட்டர் குருமூர்த்தியும் தான் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார். மேனாள் முதல்வர் பன்னீர்செல்வமோ, ‘எந்தப் பதவியும் வேண்டாம்; அ.தி.மு.க.வில் என்னை
அடிமட்டத் தொண்டனாகச் சேர்த்துவிடுங்கள்’ என
அமித்ஷாவிடம் பரிந்துரை விண்ணப்பம் போடுகிறார்.
தமிழ்நாடு
வந்த மோடியை ‘தங்களைக் காணும் பாக்கியம் வேண்டும்’
என்ற பன்னீரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே தமிழ்நாடு முதல்வரை ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்தார். எடப்பாடிக்காக அண்ணாமலையைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து மாற்றிய பா.ச.க.-விடம் பன்னீர்செல்வம் தஞ்சம் புகுவது வீண். அ.தி.மு.க.வைச் சுக்கு
நூறாக உடைத்து, பா.ச.க.
தமிழ்நாட்டில் இரண்டாமிடம் பெறுவதே ஆர்.எஸ்.எஸ். மற்றும் அமித்ஷாவின் செயல்திட்டம். அ.தி.மு.க. 2026-இல் தோல்வி அடைந்தபின் அ.தி.மு.க.வை உடைக்க
இரண்டாம் கட்ட மூத்த தலைவர்களையும் பா.ச.க.
வளைத்துள்ளது.
2024 - பாராளுமன்றத் தேர்தலில்
அ.தி.மு.க
. கூட்டணியில் இருந்த பிரேமலதா விஜயகாந்தின் தே.தி.மு.க. ‘கூட்டணி ஆட்சி’ என்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லாச் சிறு கட்சிகளுக்கும், ‘நடிகர் விஜய்யின் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்ற சிறப்புச் சலுகைப் பிடித்திருக்கிறது. ஆனால், வாக்கு பலம் நிரூபிக்காத விஜய் பக்கம் நகர்வதில் தயக்கம் கொள்கிறார்கள்.
பீகார்
வெற்றிக்குப் பின் நான்கு நாள்கள் கழித்துப் பிரதமர் மோடி பூட்டர்பதி சத்யசாய் பாபாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவிற்காக ஆந்திரா வருகிறார். அதன்பின் கோவையில் தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் ஏற்பாடு செய்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். கோவையில் தடையை மீறி, கறுப்பு பலூனைப் பறக்கவிட்டு மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். மோடி, “விவசாயிகள் துண்டைச் சுழற்றி என்னை வரவேற்றனர்; பீகார் காற்று இங்கும் வீசுகிறது”
என இவ்வளவான, அதிகபட்சமான வார்த்தைகளில் அரசியல் பேசினார். அதேநாளில் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிறைவேற்ற சாத்தியமில்லை என்ற அறிவிப்புகள் ஒன்றிய அரசிடமிருந்து வந்தது.
தமிழ்நாடு மக்கள்
மத்தியில் தொடர்ந்து ஒன்றிய அரசு புறக்கணிக்கப்படுவது குறித்த விவாதம் சூடானது. கோவை, மதுரையைவிடக் குறைவாக மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, இலக்னோ, இந்தூர், போபால் போன்ற நகரங்களுக்கு எந்த அடிப்படையில் மெட்ரோ வழங்கப்பட்டது? என்று தமிழ்நாட்டு மக்கள் கொதித்தனர். ‘வரிப்பகிர்வில் உரிய பங்கீடு தருவதில்லை; தமிழ்நாடு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை; தமிழர் நாகரிகம், தொன்மை குறித்துத்
தடங்கல் செய்வது’ என தமிழ்நாடு மக்கள்
மாநில உரிமைகள் பேசினர்.
வட
இந்தியாவைப் போல ஆர்.எஸ்.எஸ். சாதி ரீதியான வாக்குகளைஒருங்கிணைக்க முயல்கிறது. மறுபுறம், ‘இந்துகளே! ஒன்றிணைவீர்’ என
அவர்களுக்குக் கைவந்த மத அரசியலையும் கையில்
எடுக்கிறது. தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் பலம் பெரும் சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் வெற்றி-தோல்விகளை நிர்ணயிக்கும் 18 முதல் 20 விழுக்காடு வாக்குகளைக் கொண்ட சிறுபான்மை மக்கள் பா.ச.க.
எதிர்ப்பில் ஓரணியாக நிற்கிறார்கள்.
பா.ச.க.வின்
எந்தவிதச் சித்து
விளையாட்டுகளும் பலிக்காதபோது, திருப்பரங்குன்ற தீபம் போன்ற தன் கடைசி மத கலவர ஆயுதத்தை
எடுக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தி.மு.க.
ஆட்சிக் கலைப்பு, ஆளுநர் ஆட்சியில் தேர்தல் என்ற புதிய கலவர வெறியில் தமிழ்நாடு தேர்தல் களத்தை அமைக்க அடிப்படைப் பணிகளைச் செய்கிறார்கள். மதக்கலவரங்கள், ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல; சிறுபான்மையினரின் பாதுகாப்பை உள்ளடக்கியது. தமிழ்நாடு அரசு தன் இரும்புக் கரம் கொண்டு காவி தீவிரவாதிகளை அடக்கவேண்டும். அது 2026 - தேர்தல் நாள்வரை தமிழ்நாடு அரசிற்குப் பெரும் சவால் என்பதில் ஐயமில்லை.
சிறுபான்மைச்
சமூக மக்களான நாம், நம் சனநாயக உரிமையான வாக்குகள் வழி இந்து மத வாத பா.ச.க.வை
தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
அது நம் தார்மீகக் கடமையாகும்.