news
சிறப்புக்கட்டுரை
வாரம் ஒரு குறள் – 07

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது (குறள் 7)

குறள் விளக்கம்

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவருக்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சிந்தனை

வண்டி ஓட அச்சாணிவேண்டும். வண்டி அச்சாணியைச் சார்ந்தே இயங்குகின்றது. யாராயிருந்தாலும் ஒருவர் மற்றவரைச் சார்ந்துதான் வாழ வேண்டும். உதாரணமாக, குழந்தைகள் பெற்றோரையும், பெற்றோர் குழந்தைகளையும் சார்ந்தே வாழ்கின்றனர். ஒருவருடைய தயவோ, உதவியோ மற்றவருக்கு அவசியம் தேவை.

கடவுளுக்கு ஒப்பாரும் இல்லை; மிக்காரும் இல்லை. அதாவது அவருக்குச் சமமானவரும் அவரைவிட உயர்ந்தவரும் இல்லை. மனிதரைச் சார்ந்து வாழ்வதைவிட உயர்வான கடவுளைச் சார்ந்து வாழ்வது சாலச்சிறந்தது.

மூன்று நாடுகளுக்கு இடையே பெரும் பகை. கடவுள் அந்த மூன்று நாடுகளின் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசினார்.

உங்கள் பிரச்சினை என்ன?” என்றார்.

முதல் நாட்டுப் பிரதிநிதி, இரண்டாம் நாட்டுப் பிரதிநிதியைச் சுட்டிக்காட்டி, “இவருடைய நாட்டை முழுமையாக அழித்துவிடுங்கள்; என் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றார்.

இரண்டாம் நாட்டுப் பிரதிநிதி கடவுளிடம், “முதல் நாட்டின் வரைபடம் உலக வரைபடத்தில் இல்லாமல் செய்துவிடுங்கள் என்றார். மூன்றாம் நாட்டுப் பிரதிநிதியோ, “முதல் இருவரின் வேண்டுதல்களை நிறைவேற்றினால் என் ஆசை தானாக நிறைவேறிவிடும் என்றார்.

இதைக் கேட்ட கடவுள் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்.

ஒருவர் மற்றவரைச் சார்ந்துதான் வாழ வேண்டும். ஒரு தெருவில் ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்துதான் வாழவேண்டும். ஒரு மாநிலம் பக்கத்து மாநிலத்துடன் தொடர்பில் இருந்துதான் ஆக வேண்டும்.  அதுபோல் ஒரு நாடும் அண்டை நாடுகளுடன் சார்புடன் வாழவேண்டும். ஒருவரை அழித்து மற்றவர் நன்றாக வாழ முடியாது.

மனிதச்சார்பு வாழ்க்கையே இவ்வளவு நன்மைகளை ஏற்படுத்தும்போது, கடவுளைச் சார்ந்து வாழும் வாழ்வு அதிக நற்பயன்களை விளைவிக்க வல்லது. உயர்நெறியாம் இறைவனுடன் இணைந்து வாழும் போது மனக்கவலைகள் அற்று நல்வாழ்வு வாழ முடியும்.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்று அழைக்கிறார் ‘இருக்கின்றவராய் இருக்கின்றவர் நானே என்ற நம் கடவுள். ‘நானே இருக்கின்றவர் என்று முக்காலத்திற்கும் நம்மோடு வாழ்ந்து வருகின்றார். அவரோடு இணைந்து வாழ்ந்தால் மனக்கவலைகள் நீங்கும். நம் கவலைகளையும் சுமைகளையும் ஆண்டவரிடம் இறக்கி வைப்போம்: நிம்மதியாய் வாழ்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
தகவல்களின் பெருக்கம் கவனத்தின் வறுமை

நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் தகவல் என்பது முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதிகத் தகவல் இருந்தால், அதிக அறிவு; அதிக அறிவு இருந்தால், சிறந்த முடிவுகள் என்ற நம்பிக்கை பொதுவாக நிலவுகிறது. ஆனால், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஹெர்பர்ட் . சைமன் இந்தக் கருத்தை ஆழமாக மறுபரிசீலனை செய்தார். அவர் கூறிய புகழ்பெற்ற வரி: “தகவல்களின் பெருக்கம், மனிதக் கவனத்தின் வறுமையை உருவாக்குகிறது  (A wealth of information creates a poverty of attention). இக்கருத்து இன்று வெறும் கோட்பாடு அல்ல; இது நவீன மனித வாழ்க்கையின் உண்மையான அனுபவமாக மாறியுள்ளது.

இன்றைய உலகம் தகவல் பற்றாக்குறையைக் கொண்டதல்ல; மாறாக, தகவல் மிகை நிலையைக் கொண்டது. இணையம், ஸ்மார்ட் போன்கள், மேகக் கணினி (cloud systems), சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாகத் தகவல் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகளவில் மிகப்பெரிய அளவில் தரவு உருவாகிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தகவல் இன்று விலையுயர்ந்த பொருள் அல்ல; மிகக் குறைந்த செலவில் அல்லது இலவசமாகவே கிடைக்கும் வளமாக மாறியுள்ளது.

இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மேலும் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. இன்று ஆயிரக்கணக்கான AI கருவிகள் - மொழி மாதிரிகள், வடிவமைப்புக் கருவிகள், பகுப்பாய்வு அமைப்புகள், தானியங்கிச் செயலிகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. இதனுடன் கோடிக்கணக்கான செயலிகள் மற்றும் இணையதளங்கள் மனிதனின் கவனத்தைத் தொடர்ந்து ஈர்க்க முயல்கின்றன. தகவல் இனி நாம் தேடுவதல்ல; அது நம்மைத் தேடிவரும் ஒரு தொடர்ச்சியான ஓட்டமாக மாறியுள்ளது.

ஆனால், இந்தத் தகவல் பெருக்கம் ஓர் ஆழமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அது மனிதக் கவனத்தின் சிதைவு. தகவலைப் போலல்ல; கவனம் என்பது வரையறுக்கப்பட்டதும் நுணுக்கமானதும் ஆகும். அதை முடிவற்ற அளவிற்கு விரிவாக்க முடியாது. இயந்திரங்கள் அளவற்றத் தரவை உருவாக்க முடியும்; ஆனால், மனித மனம் அனைத்தையும் ஒரேநேரத்தில் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாது.

கவனம் என்பது அறிவின் அடித்தளம் மட்டுமல்ல; அது சிந்தனையின் உயிராகும். தொடர்ச்சியான கவனம் இல்லாமல் கற்றல் துண்டிக்கப்படுகிறது, சிந்தனை ஆழம் இழக்கிறது, முடிவெடுக்கும் திறன் மேற்பரப்பாக மாறுகிறது. கவனம் சிதறும்போது அறிவு அதிகரித்ததாகத் தோன்றினாலும், உண்மையான புரிதல் குறைகிறது.

இன்றைய டிஜிட்டல் அமைப்புகள் இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துகின்றன. சமூக ஊடகங்கள், செய்திச் செயலிகள், பொழுதுபோக்குத் தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பரிந்துரை அமைப்புகள் அனைத்தும் மனிதக் கவனத்தை ஈர்க்கும் போட்டியில் உள்ளன. இவை அனைத்தும்கவனப் பொருளாதாரம் (Attention Economy) என்ற புதிய அமைப்பின் பகுதிகளாகச் செயல்படுகின்றன. இங்கு வெற்றியின் அளவுகோல் உண்மை அல்லது ஆழம் அல்ல; ஈர்ப்பு மற்றும் ஈடுபாடு ஆகும்.

இதன் விளைவாக மனித வாழ்க்கை தொடர்ந்து சிதறி வருகிறது. ஒருவர் ஒரே நேரத்தில் பல செயலிகளை மாற்றிப் பயன்படுத்துகிறார். ஒரு பணியில் முழுமையாக ஈடுபடுவதற்குப் பதிலாக, கவனம் இடையறாது மாறுகிறது. இது செயல்திறனை உயர்த்துவது போலத் தோன்றினாலும், உண்மையில் ஆழமான சிந்தனைத் திறனைக் குறைக்கிறது.

இந்த நிலை செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மேலும் அதிகரிக்கிறது. இன்று AI கருவிகள் உடனடிப் பதில்கள், சுருக்கங்கள் மற்றும் சிந்தனைகளை வழங்குகின்றன. இது வசதியானதாக இருந்தாலும், மனிதன் சிந்தனை செயல்முறையில் ஆழமாக ஈடுபடுவதைக் குறைக்கும் அபாயம் உள்ளது. பதில்கள் எளிதாகக் கிடைக்கும்போது, சிந்தனை கடினமான செயலாகக் கருதப்படத் தொடங்குகிறது.

இதனால் ஒரு முக்கியமான உண்மை தெளிவாகிறது; கிடைக்கும் எல்லாத் தகவல்களும் கவனத்திற்கு உரியவை அல்ல. எதைத் தேர்வு செய்கிறோம் என்பதோடு, எதை விலக்குகிறோம் என்பதும் சம முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் திறனே இன்றைய காலத்தின் மிக முக்கியமான அறிவுசார் திறனாகும்.

ஒரு பழமொழி இதைத் தெளிவாக விளக்குகிறது: ‘இரண்டு முயல்களை ஒரே நேரத்தில் துரத்தினால், இரண்டையும் பிடிக்க இயலாது.’ இது மனிதக் கவனத்தின் அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறது. கவனம் சிதறும்போது எந்த முயற்சியும் முழுமையடையாது. ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியே வெற்றியை உருவாக்கும்.

இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் ஒரு முக்கியமான உண்மையை உணரவேண்டும். உயர்வை நோக்கிச் செல்லும் அனைவரும் தங்கள் இலக்குகளைத் தெளிவாக வரையறுக்கவேண்டும். அந்த இலக்குகளுக்கான வழிமுறைகள் மற்றும் செயல்முறைகளும் தெளிவாக இருக்கவேண்டும். இலக்கு தெளிவாக இருந்தால் மட்டுமே கவனம் சரியான திசையில் செல்லும். கவனம் தெளிவாக இருந்தால் மட்டுமே ஒருவர் தன் துறையில் முன்னேறி, வெற்றியடைய முடியும். இல்லையெனில், முயற்சி பல திசைகளில் சிதறி, எதிர்பார்த்த பலனைத் தராது.

கல்வி நிறுவனங்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப மாறவேண்டும். தகவல் அணுகலை மட்டும் கற்பிப்பதற்குப் பதிலாக, கவனத்தை நிர்வகிக்கும் திறனையும் கற்பிக்கவேண்டும். ஆழமான வாசிப்பு, விமர்சனச் சிந்தனை மற்றும் தொடர்ச்சியான கவனம் ஆகியவை இன்றைய கல்வியின் அடிப்படைத் திறன்களாக இருக்கவேண்டும்.

தனிநபர் வாழ்க்கையிலும் கவனம் ஒரு வரையறுக்கப்பட்ட வளம் என்பதை உணரவேண்டும். ஒவ்வொரு கவனச் சிதறலும் சிந்தனையின் ஆழத்தைக் குறைக்கும் ஓர்அறிவுசார் செலவுஆகும். எனவே, கவனத்தைப் பாதுகாப்பது என்பது சுய ஒழுக்கத்தின் முக்கிய வெளிப்பாடாகும்.

முடிவாக, ஹெர்பர்ட் . சைமனின் கருத்து இன்று பொருளாதாரக் கோட்பாட்டைத் தாண்டி ஒரு நாகரிக எச்சரிக்கையாக மாறியுள்ளது. தகவல் பெருகியுள்ளது; தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது; செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையில் ஆழமாக நுழைந்துள்ளது. ஆனால், மனிதக் கவனம் இன்னும் வரையறுக்கப்பட்டதும் நுணுக்கமானதும் ஆகும்.

இன்றைய காலத்தின் உண்மையான சவால் அதிக தகவலைப் பெறுவது அல்ல; அதிக குழப்பத்துக்குள் ஆழமான சிந்தனையைக் காக்கும் திறனாகும். எதிர்காலம் அதிகத் தகவல்களை உட்கொள்பவர்களுக்கு அல்ல; மாறாக, தெளிவான நோக்கம், கட்டுப்படுத்தப்பட்ட கவனம் மற்றும் ஆழமான சிந்தனையைப் பாதுகாப்பவர்களுக்கே சொந்தமாகும்.

news
சிறப்புக்கட்டுரை
நம்மை வசப்படுத்தும் எண்ண வகைகள் (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 06)

வகை வகையான உணவுகள் சாப்பிட நமக்கு ஆசை அதிகம். வகை வகையான எண்ணங்களை அதே ஆர்வத்தோடு அணுக முடியுமா? முடியாது. எண்ணங்களின் வகைகள், அவை ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம். ஒருசில உணவுகள் ஒரு சிலருக்கு எப்படி ஒவ்வாதோ அதேபோல, எனது எண்ணங்கள் பிறருக்கு ஒவ்வாமல் போகும்.

மனிதனின் எண்ணங்களால்தான் அவனது உணர்வுகள், செயல்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் தரம் நிலைநிறுத்தப்படுகிறது. மனத்தில் தோன்றும் ஒவ்வோர் எண்ணமும் நல்லதோ, கெட்டதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எண்ணங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, நம் வளர்ச்சிக்குத் தேவையான எண்ணங்களை வளர்ப்பது மிகவும் அவசியம்.

ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப்பெரிய ஆற்றல் அவனுடைய எண்ணங்கள்தான். நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படைக் காரணம் நமது எண்ணங்கள்தான். நாம் இன்று இருப்பதற்குக் காரணம், நேற்று நாம் நினைத்த எண்ணங்களே. இப்படி வரையறை இல்லாமல் வகை வகையாக எண்ணங்களின் அவசியம், அது தரும் தாக்கம் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

எண்ணங்களை நாம் கவனமுடன் கையாண்டால் அதன் பலன் அதிகம். இல்லையென்றால் பின்விளைவுகள் நம்மைப் புரட்டியெடுக்கும். அறிவியல் தரவுகளின் அடிப்படையில் ஒரு நாளைக்கு நமக்குள் 50,000 முதல் 70,000 எண்ணங்கள் வந்து போகும் எனக் கூறப்படுகிறது. அதை ஒரு மணி நேரத்திற்கு என்று பார்த்தால், சுமார் 300 முதல் 3,000 எண்ணங்கள் வரை இருக்கலாம். தூக்கம், உணவு மற்றும் இன்னும் சிலவற்றைத் தாண்டி, ஒரு நாளைக்கு 16,500 எண்ணங்கள் நம் மனத்தில் தோன்றுகின்றன. இவை நாம் மனத்தில் எப்பவோ பதுக்கித் தேக்கி வைத்ததன் வெளியீடுதாம்

இப்படித் தோன்றும் எண்ணங்கள் பல வகைகளில் அடங்கும். அவற்றை நாம் நான்கு மிகப்பெரிய எண்ண வகைக்குள் அடக்கிவிடலாம்.

அவை:

1. நேர்மறை எண்ணங்கள் (Positive Thoughts)

2. எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts)

3. பகுத்தறிவு எண்ணங்கள் (Critical Thoughts)

4. தேவையற்ற எண்ணங்கள் (Waste and Unwanted Thoughts).

1. நேர்மறை எண்ணங்கள் (Positive Thoughts)

செயல்கள் மீதான ஆர்வம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நல்ல எதிர்பார்ப்புகளை உருவாக்கும் எண்ணங்கள் நேர்மறை எண்ணங்கள் ஆகும். தன்னம்பிக்கையை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைத்து, சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ள உதவுகின்றன. நல்ல உறவுகளை உருவாக்கி, வாழ்க்கையில் முன்னேற முழு ஊக்கத்தை இந்த நேர்மறை எண்ணங்கள் தருகின்றன. எல்லா நேரமும் நேர்மறை எண்ணங்களால் மட்டுமே ஒருவர் நிறைந்து இருக்க முடியாது. ஆனால், பெரும்பாலான தருணங்களில் இப்படி இருப்பது நல்லது.

2. எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts)

பயம், தோல்வி, சந்தேகம், விரக்தி, பெருங்கோபம் போன்றவற்றை மையமாகக் கொண்ட எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள். உணர்ச்சி சார்ந்த எண்ணங்கள், பயம் சார்ந்த எண்ணங்கள் (Fear-Based Thoughts) இதில் அதிகம் அடங்கும். இது மன அழுத்தம் மற்றும் கவலையை அதிகரித்து தன்னம்பிக்கையைக் குறைக்கும். முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும்; உறவுகளில் விரிசல் ஏற்படும்; உடல் நலத்திலும் பாதிப்பு ஏற்படும்.

கோபம், துக்கம், கண்டுகொள்ளப்படாத அன்பு, பயம் போன்ற உணர்வுகளால் உருவாகும் எண்ணங்கள் இவை. இதனால் உருவாகும் கட்டுப்பாடற்ற உணர்ச்சிகள் தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும். மனநிலையையும் நடத்தையையும் பாதிக்கும். தயக்கம் மற்றும் தள்ளிப்போடும் பழக்கம் உருவாகும். தன்னம்பிக்கை குறையும். நல்ல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். மன அமைதி பாதிக்கப்படும். ஆனால், அளவான பயம் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் செயல்பட உதவும்.

3. பகுத்தறிவு எண்ணங்கள் (Critical Thoughts)

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாமல், உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து சிந்திப்பது பகுத்தறிவு எண்ணங்களாகும். இது நமக்கான சரியான முடிவுகளை எடுக்க உதவும். தவறான நம்பிக்கைகளைத் தவிர்த்து, தலைமைத்துவத் திறனை வளர்த்து, பொறுப்பான செயல்பாட்டை உருவாக்கும். புதிய சிந்தனைகள், புதுமையான அணுகுமுறைகள் மற்றும் கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் எண்ணங்களாக இவை அறியப்படுகிறது. இவை நமக்குள் நன்றாக இருக்கும்போது, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகள் உருவாகும். பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வுகள் கிடைக்கும். தனித்துவமான சிந்தனை வளர்ச்சி அடையும்.

4. தேவையற்ற எண்ணங்கள் (Waste and Unwanted Thoughts)

பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்து, சிக்கலுக்கான தீர்வுகளைத் தேடும் எண்ணங்களை ஆக்கப்பூர்வமாக அணுகாமல், பழைய நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் அசைபோட்டு அசைபோட்டு, நேரத்தையும் மனத்தையும் பாழ்படுத்துவதுதான் இவ்வகை எண்ணங்கள். செயல்திறன் குறைந்து, புதிய வாய்ப்புகள் எதையும் சிந்திக்காமல் வெறுமனே வாழ்க்கையைக் கழிப்பதுதான் இதன் நோக்கமாகும். இந்த எண்ண வகையில் நாம் மிகவும் தீவிர கவனம் செலுத்தவேண்டும். ஏனென்றால், நம்மை நாள் முழுக்க ஏதோ வேலை செய்த உணர்விலேயே இவ்வகை எண்ணங்கள் வைத்திருக்கும். ஆக்கப்பூர்வமான எந்த முடிவும் இதில் இருக்காது. ஒரு கட்டத்தில் நம்மையே முழுவதும் வெறுக்கும் நிலைக்குத் தள்ளி, விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க வைத்துவிடும்.

நாம் எல்லா எண்ணங்களையும் கட்டுப்படுத்த முடியாது. சூழல் மற்றும் நம் மனநிலை சார்ந்து அது மாறுபடும். ஆனால், எந்த எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய முடியும். அதை வளர்த்தெடுப்பதன் மூலம் நம் வாழ்க்கையையும் வளர்த்தெடுக்க முடியும். ‘எனக்கு ஏன் இது நடந்தது?’ என்று கேட்பதற்குப் பதிலாக, ‘இதை எப்படிச் சரிசெய்வது?’ என்று எண்ணுவதன் மூலம் நமது எண்ணங்கள் சீர்செய்யப்படும்.

எப்படி ஒரு சிற்பி கல்லில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கியதும் அழகுமிகு சிற்பம் கிடைக்கிறதோ அதுபோல, நம் மனத்தில் குப்பையெனத் தேங்கிக்கிடக்கும் தேவையற்ற எண்ணங்களை முதலில் தூக்கிப்போட்டு, அந்த வெற்றிடத்தை நல்ல எண்ணங்கள் மூலம் நிரப்பி, நல்வாழ்வைத் தேர்ந்தெடுப்போம்.

நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், நல்ல பழக்கங்கள், நல்ல குணநலன்கள், நல்ல வாழ்க்கை... இவ்வரிசையை அடிக்கடி நினைவில் கொள்வோம்.

உலகம் மாறுகிறதோ இல்லையோ,

உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள்;

உங்கள் உலகமே மாறும்.’

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
ஏமாந்தோரும்... ஏமாற்றப்பட்டோரும்!

இந்தியாவில் இன்னும் மக்களாட்சி உயிரோடு (Survival) இருப்பதற்கான காரணம் என்ன? இந்தியர் சனநாயகவாதிகள் (Democratic) என்பதால் அல்ல; மக்களாட்சி என்பது அதிகாரத்தைப் பெறுவதற்கான மிகப்பெரிய ஆயுதம் என்பதனை அறிந்து கொண்டதாயே!”

மக்களாட்சி இந்தியாவைத் தத்தெடுக்கவில்லை (adopt); மாறாக, இந்தியர்தாம் மக்களாட்சியைக் கபளீகரம் செய்து  கொண்டார்கள். காரணம் என்ன? ஏற்கெனவே கட்டிக்காக்கப் பெற்றுவரும்இந்தியச் சமூக அமைப்பில் சிதைவுவந்துவிடக் கூடாது என்பதாலேயே

இந்தியா ஏற்றுக்கொண்ட மக்களாட்சி முறையில் இப்படி உள்ளடங்கிய ஓர் அரசியல் இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?

மக்களாட்சி முறை நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட முறை இல்லையாம்! மக்களாட்சியை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறோம். இந்தியச் சமூகம் மிகக் கவனமாகக் கட்டிக்காத்து வரும் வலுவான படிநிலை அமைப்பிற்கும் (Hierarchy) நாம் ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படும்  மக்களாட்சிக்கும் எங்கேயாவது ஏதாவது பொருத்தப்பாடு உள்ளதா?

சனநாயகம் அல்லது மக்களாட்சி அது உருவாக்கிய குடிமக்களை ஏமாற்றுமா? ஏமாற்றும் வஞ்சனை இதன் உள்ளடக்கமாக இருக்க முடியுமா? மக்களாட்சி முறை அரசமைப்பு முறைகள் கண்ட அமைப்புகளுள் மிகக் குறுகிய தீமைகளைக் கொண்டது. எனவேதான், தீவிர மதவாதிகளும், மக்களாட்சித் தத்துவத்தை நம்பாத பாசிஸ்டுகளும் உலகப் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ள கார்ப்பரேட்டுகளும் மக்களாட்சியைப் போற்றுகின்றனர், ஊக்குவிக்கின்றனர். மக்களாட்சியின் மகத்துவம் சமத்துவத்தில் உள்ளது. குடிமக்களின் தெரிவுசெய்யும் அதிகாரத்தில் உள்ளது. இம்முறைமையால் குடிமக்களே அதிகாரம் (empower) பெறுகின்றனர்.

மக்களாட்சியை ஊக்கவிக்கவே தம் பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறி வரும் அதிகார சக்திகள், மக்களாட்சித் தத்துவத்தை எப்படி நம்பும்? அடிப்படை நம்பிக்கையே இல்லாத ஒரு பொருளாதார, அரசியல் அமைப்பு மக்கள் அதிகாரத்தைக் கட்டமைக்கும் ஒரு மக்களாட்சி தத்துவத்தை அல்லது கருத்தியலை எப்படி வளர்க்க இயலும்?

எப்படிச் சாத்தியம்?

இந்திய அரசியல் வரலாற்றில் 2014- மிகப்பெரிய மாற்றத்தைக் கொணர்ந்த ஆண்டுஇந்தியக் குடிமக்களாகிய நாம்என்ற முழக்கத்தோடு அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் முகப்புரை கேள்விக்குள்ளாக்கப்பட்ட நாள். இந்தியத் தேசியத் தலைவர்கள் மிகப்பெரிய கனவுகளோடு இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், அதற்கான முகப்புரையையும் உருவாக்கிய நாள். இக்கனவு இன்று என்னவாயிற்று? அறிவிக்கப்பட்ட சனநாயகக் குடியரசும், அக்குடியரசின் அடிப்படைவாதமான சமத்துவமும், சமத்துவம் காக்கத் துணை நின்ற இறையாண்மையும் கேவலமாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டதோடு, இன்று அறிவிக்கப்பட்ட கொள்கையின் எந்தச் சுவடும் இல்லாமல், மக்களாட்சி சமயச்சார்பின்மை, சமத்துவம் என்ற சொற்களை அகற்றாமலே, இச்சொற்களைத் தாங்கி நிற்கும் மதிப்பீடுகளை உருத்தெரியாமல் அழிக்கக் கங்கணம் கட்டி நிற்கும் ஆற்றலை, ஓர் அழிவு ஆற்றலை, இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டது எப்படி?

மக்களாட்சியின் மேன்மைமிகு குணங்களை இந்தியா தத்தெடுத்திருந்தால் (adopt) இச்சோகம் நிகழ்ந்திருக்குமா? மக்களாட்சியின் தேர்தல் சனநாயகம் குடிமக்களின் தெரிவுசெய்யும் உரிமையைத் தந்தது என்பதனால், சனநாயகம் மிக உயரிய பண்பின் அடையாளமாக இருக்க, அப்பண்பு எதனையும்  அகவயப்படுத்தாமல், வெறும் வடிவத்தை மட்டும் அதிகாரத்தைத் தக்கவைக்கும் நோக்கில் பயன்படுத்தியமையால் விளைந்த தீமை இது.

இந்தியாவில் சனநாயகக் குடியரசின் வீழ்ச்சியை எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னும் சனநாயகத்தின் வெற்றியை நாம் கொண்டாட முடியவில்லையே... ஏன்? நவீன சனநாயக முறை நம் மக்களுக்குப் புதியதாக இருந்தாலும், இச்சனநாயகம் அதன் முக்கிய மதிப்பீடுகளாக முன்வைக்கும் நீதி, சமத்துவம், சகோதரத்துவம் என்பன நம் நாட்டின் தொன்மையான இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் உள்ளடக்கமாக இருந்தன என்பதனை மறுக்க முடியுமா? திருவள்ளுவர் தரும் அறக்கோட்பாடுகள் பல வெறும் பள்ளிப் பாடங்களாகிப் போயின. சாதியம் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பித்து, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தியிருந்த காலகட்டத்திலும் கூடபிறப்பொக்கும்என்று கூறிய திருவள்ளுவன் குரல் இன்றுவரை அனைவரையும் தீண்டவில்லையே! அறவாழ்விற்கும் சமகாலச் சனநாயக வழிமுறைக்கும் தொடர்பு இல்லாதது போன்று ஒரு சூழல் உருவாக்கப்பட்டது எப்படி?

சனநாயகம் சனநாயக் காப்பாளரின் (Democrats) இருப்பில்தான் உயிர்பெறும். நாம் இன்று பேசும் சனநாயகத்தின் உயிர்ப்பற்றத் தன்மைக்குச் சனநாயகர்கள் (Democrats) இல்லாமையே காரணம். நம் நாட்டின் ஆட்சி முறைக்கு (Governance) சனநாயக முறை பயன்படலாம். சனநாயகத்தை மக்களின் வாழ்வறமாக மாற்றுவதற்கு (Way of life) இது போதாது - கிருஷ்ணகுமார் (NCERT-யின் மேனாள் இயக்குநர் - செமினார். செப். 1999).

ஆட்சி அதிகாரத்தை எப்படியேனும் கைப்பற்றவும், கைப்பற்றப் பெற்ற அதிகாரம் மூலம் ஆட்சியை நடத்தவும் சனநாயகம் பயன்படுத்தப்படுமானால் அது சனநாயகமே இல்லை என்பார் மேற்கண்ட கல்வியாளர்.

இந்திய அரசமைப்பின் காவலராகக் கருதப்பெறும் அம்பேத்கர் அவர்கள் சனநாயகப் பாதுகாப்பிற்கான அரசமைப்புச் சட்டத்தைத் தந்த பின்பும், அவர் இந்தியச் சனநாயகத்தைமேனா மினுக்கி (Top dressing) என்றே வர்ணித்தார். சட்டங்களையும் நுணுக்கமான சட்டவிதிகளையும் மூன்றாண்டுகள் முந்நூறு நபர்களோடு அமர்ந்து உரையாடி உருவாக்கிய அம்பேத்கர் ஜோடனை இல்லாத சனநாயகம் உருவாக்குதலில் வெற்றி பெற்றதாகக் கருதவில்லை. அரசமைப்புச் சட்டம் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், இச்சட்டங்களைச் சட்டத்தின் உள்ளடக்கத்தைக் கையாள்வோரின் நாணயத்திலும் நேர்மையிலும்தான் இதன் வெற்றியிருக்கிறது என்பர்.

இந்தியாவிற்குச் சனநாயகம் என்பது மக்களின் ஏக்கத்தில் விளைந்த ஒன்றல்ல என்பர். முடியரசின் வன்மத்திலிருந்து விடுதலை பெற மக்கள் எழுப்பிய குரலுக்கான விடையாகச் சனநாயகம் உருப்பெறவில்லை. இந்தியச் சமூக அமைப்பு மாறவேண்டும் என்ற முழக்கம் சனநாயகத்திற்கான முழக்கத்துடன் எழவில்லை. பிரெஞ்சு தேசத்தில் எழுந்த மாபெரும் புரட்சியின்போது, அப்புரட்சியில் தம்மைக் கரைத்துக் கொண்ட மக்கள் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் எனும் ஒப்பரிய விழுமியங்களை வாழ்வாக்கக் குரல் கொடுத்தனர். பிரெஞ்சுப் புரட்சி வெற்றி பெற்றபோது இம்முழக்கங்களும் உயிர்பெற்றன.

இந்தியாவில் அறிமுகமான சனநாயகம் வெறும் வடிவம் (Design). உள்ளடக்கத்தில் எழவேண்டிய மதிப்புகள் எவையும் சுதந்திரத்தின் தேசிய முழக்கத்தில் இடம்பெறவில்லை. இந்தியச் சனநாயகத் தேடலுக்கும், சனநாயக அரசமைப்பிற்கும் இம்மதிப்பீடுகள் அடிப்படைக் கீதமாக இடம் பெறவில்லை, “இந்தியாவின் சனநாயகம் மேலிருந்து நடப்பட்ட (Impranted from above) ஒன்று. இந்திய மண்ணில் இதற்கான இடம் இன்னும் உருவாகவில்லை. இந்தியாவில் சனநாயகத்திற்கான ஒரு மனோநிலை (trauperament) உருவாகாமலேயே நாம் சனநாயகத்தைப் பயின்று (Practice)) வருவது ஓர் அதிசயமே (Miracle) என்பார் ரஜினி கோத்தாரி.

இந்திய விடுதலைக்குப் பின் பெற்ற சுதந்திரம் சனநாயகத்தை, சனநாயகக் குடியரசைத் தந்ததாக ஆனந்தப்பள்ளு பாட முனைந்தோம். விடுதலை பெற்ற இந்தியா இப்படித்தான் இருக்கும் என்று  எண்ணியிருந்த ஒரு குடியரசு, இந்துத்துவக் குடியரசாக மாறும் என்று கனவு கண்டோமா? குடிமக்களாகிய நாம் ஏற்கெனவே வர்க்கம், வர்ணம் என்று பிளவுபட்டிருக்கும் நிலையில், மதவாதக் கருத்தியலின் தீவிர வளர்ச்சியில் மதரீதியாகப் பிளவுபடுத்தப்படுவோம் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறோமா? இந்தியச் சுதந்திரப் போரின் வெற்றி, சுதந்திரத்திற்குமுன் அல்லது பின் என்று இந்தியாவை அடையாளம் காட்டிய நிலையில், சுதந்திரம் பெற்ற இந்தியாவை அயோத்திக்குமுன் அயோத்திக்குப்பின் (நன்றி: சசித்தரூர் -the battle of belonging) என்று வகைப்படுத்தப்பெறும் ஒரு கேவலமான நிலை உருவாகும் என்ற கனவு கண்டோமா?

ஆம், குடிமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்? ஆம், குடிமக்கள் ஏமாந்து போயினர். அன்னை இந்திரா, ஓர் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்தபோது, சனநாயகம் காக்கக் குரல் கொடுத்தோருள் இன்றைய ஆட்சியாளரும்  உண்டு. சிறை சென்றோரும் இவர்களும் உண்டு. சனநாயகம் காக்கவெனப் போராடிய பலருள் இவர்களும் உண்டெனினும், இன்று நடப்பது என்ன? இந்தியாவின்  அவசர நிலைப் பிரகடனத்தின் ஐம்பதாம் ஆண்டினை நினைவுகூரும் பிரதமர் மோடி, இந்தியச் சனநாயகத்தின் வலுவான உள்ளடக்கமே அவசர நிலை உருவாக்கிய எதேச்சதிகாரம் போக்கை உடைக்க உதவியது என்கிறார் இன்றைய ஆட்சி அமைப்பு அவசர நிலையைக் காட்டிலும் செழுமையானது. இந்தியா 1950-இல் ஏற்றுக்கொண்ட சனநாயகம் சரியானதாக இருந்திருந்தும் சனநாயகத்திற்கு முற்றிலும் முரணான ஆட்சி உருவாகியிருக்குமா?

எத்தனை முறைதான் சனநாயகத்தின் பெயரால்  ஏமாந்து போவோம்? ஏமாற்றப்படுவோம்? தமிழக அரசியலில் மாற்றங்களால் ஏமாந்தோமா? ஏமாற்றப்பட்டோமா?

(தொடர்ச்சி அடுத்த இதழில்....)

news
சிறப்புக்கட்டுரை
‘எல் நினோ’ பிடியில் பொருளாதாரம்! (உலகம் உன் கையில்! – 27)

ஆண்டுதோறும் மே மாதம் வந்துவிட்டாலே, அக்னி நட்சத்திர வெயிலோடு சேர்த்து நம் தொலைக்காட்சிப் பெட்டிகளில் வழக்கமாக ஒரு செய்தி ஒலிக்கத் தொடங்கும். அடுத்து வரும் நாள்களில் தமிழ்நாட்டிற்குப் பருவமழை எப்படி இருக்கும்?

வாடிக்கையாகக் கேட்கும் இந்த வானிலை முன்கணிப்புச் செய்திகளுடன், இன்று புதிய பெயரும் அடிபடுவதைக் கேட்கிறோம். அதுதான் - ‘எல் நினோ (El Niño). தற்போது தென்படும் அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, இன்றைய ஆண்டின்எல் நினோமிகக் கடுமையாக இருக்கலாம் என்று .. ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்களில் உலகளாவிய வெப்பநிலை வழக்கமான சராசரி அளவைவிட மிக அதிகமாக இருக்குமென்று உலக வானிலை ஆராய்ச்சி கழகமும் (WMO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

எல் நினோ (El Niño)

எல் நினோஎன்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் அசாதாரணமாக வெப்பமடைவதைக் குறிக்கும் ஓர் உலகளாவிய வானிலை நிகழ்வு. இது உலகெங்கும் வறட்சி, கடுமையான மழைப் பொழிவு மற்றும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும். முற்றிலும் அறிவியல், தரவுகள் (Data) மற்றும் இயற்பியல் (Physics) விதிகளை அடிப்படையாகக் கொண்டது.

எல் நினோகணிப்பு ..-க்கு முன்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு, ‘எல் நினோ (EI Niño) நிகழ்வின் கணிப்பு முற்றிலும் இயற்பியல் விதிகள், கடல்சார் மாற்றங்கள் மற்றும் புள்ளியியல் மாதிரிகளை (Statistical Models) நம்பியே இருந்தது.

பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான மிதவைகள் (Buoys) மூலமும், பின்னர் செயற்கைக்கோள் வழியாகவும் கடலின் வெப்பநிலை மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டது.

கடந்த 50-100 ஆண்டுகளாக எல் நினோவிற்குச் சில மாதங்களுக்கு முன்பு கடலிலும் காற்றிலும் நிழ்ந்த வரலாற்றுப் போக்கை (Historical trends), தற்போதைய சூழ்நிலையோடு ஒப்பிட்டு, புள்ளியியல் முறைப்படி சூப்பர் கணினிகள் மூலமும் கணிக்கப்பட்டதுஎல் நினோ கணிப்பு- ..-க்குப் பின் இன்று கடலில் உள்ள மிதவைகள் (Buoys), செயற்கைக்கோள்கள் (Satellites) மற்றும் வானிலை ரேடார்கள் மூலம் சேகரிக்கப்படும் காற்றின் வேகம், கடல் நீர் வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம் போன்ற கோடிக்கணக்கான தரவுகள் குவிந்து கிடக்கின்றன. மனிதர் இத்தரவுகளைக் கொண்டு எளிதாகக் கணக்கிட முடியாது. இந்நிலையில், சூப்பர் கம்ப்யூட்டர்கள் மற்றும் .. (AI -Machine Learning) தொழில்நுட்பம் அரிய கருவிகளாகக் கிடைத்துள்ளன. நாம் எதிர்கொள்ளும் வானிலை அடுத்து எப்படி மாறும் என்பதை, விஞ்ஞானிகள் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் முன்பாகவே துல்லியமாகக் கணிக்க இந்த .. தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது. இத்தகைய கணிப்புகள் முற்றிலும் தரவுகள் மற்றும் அறிவியல் விதிகளின் அடிப்படையில் அமைந்தவை; இது வெறும் யூகம் அல்ல; விவசாயம், பேரிடர், பொருளாதாரத் திட்டமிடல் என்ற முக்கியத் துறைகளுக்குப் பெரிதும் உதவுகிறது.

2026-2027

இவ்வாண்டில் உருவாகி 2027 வரை நீடிக்கும் எல்நினோவைசூப்பர் எல் நினோஎன்று அழைக்கின்றனர். ஏற்கெனவே பூமி வெப்பமடைந்த நிலையில், இது பருவமழைக்கு ஆதாரமாய் விளங்கும் கடல்நீரை மேலும் சூடாக்கிவிடலாம் என்று அஞ்சப்படுகிறது.

எல் நினோ ஆண்டுகள், பொதுவாக இந்தியாவின் தென்மேற்கு பருவமழையைப் பலவீனப்படுத்தும். இதனால் உள்நாட்டுப் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும். ஆனால், வெப்பச் சலன மழை வழக்கம் போலிருக்கும். இயல்பாகப் பருவகாலத்தில் கடல் நீர் வெப்ப அதிகரிப்பால் வங்காள விரிகுடா கடலில் புயல்கள் உருவாகுவதும், அவை தீவிரமடைந்து  பலத்த மழையைத் தருவதும் இயல்பு. எனவே, எல் நினோ ஆண்டுகளில் தென்மேற்கு மழை குறைவாக, ஆனால், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாகவோ அல்லது சராசரியாகவோ கிடைப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

குறுகிய காலத்தில் அதிகப்படியான மழை கொட்டித் தீர்க்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், மழை பெய்வதைக் தாங்கும் வகையிலும், சேமித்து வைக்க நீர்நிலைகளையும் வடிகால்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. 2015 ஆண்டில் சென்னை நகரைச் சூழ்ந்த அசாதாரண வெள்ளத்திற்குக் காரணம், அவ்வாண்டின் எல் நினோ என்று கூறப்படுகிறது. பருவமழையின் தொடக்கக் காலத்தில் கடுமையான வெயிலும், தாமதமான மழைப்பொழிவும் விவசாயத் திட்டமிடலைப் பாதிப்படையச் செய்யும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன

140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்துள்ளது. இதற்கு ஆதாரமாக விளங்குவது பருவ மழைகள். வருடாந்திரப் பருவமழைப்பொழிவில், தென்மேற்கு பருவமழையின் பங்களிப்பு 75%-85% என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறைந்த மற்றும் காலம் கடந்த பருவமழையினால் உணவு உற்பத்தி பாதிப்படையலாம்; எதிர்பாராதச் சேதங்கள் உருவாகலாம். இவற்றிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு .. துணைநிற்பது விஞ்ஞானம் அளித்த அரிய நன்கொடை எனலாம்.

உலகளவில் கோதுமை, அரிசி, சோளம், சோயா, கரும்பு என்ற பயிர்கள் 60% மக்களின் ஆதாரக் கலோரி உணவாக (calorie intake) விளங்குவதை அறிவோம். இதில் கோதுமை, சோளம், அரிசி உற்பத்தி எல் நினோவின் வறட்சி, தாமதமான பருவமழை காரணங்களால் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் உலகளாவிய தற்போதைய தானியக் கையிருப்பை வைத்து சமாளித்துவிடலாம் என்கிறது மற்றோர் ஆய்வு. பல அறிக்கைகள் எல் நினோ இவ்வாண்டின் இறுதியில் வேகமெடுக்கலாம் என்கிறது. தற்போது நாம் எதிர்கொண்டு வரும் எல் நினோ நிகழ்வு, 2026-2027 ஆகிய இரண்டு ஆண்டுகளை உள்ளடக்கி, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக அறியப்படுகிறது.

இயற்கையின் மாற்றங்களை மனிதனால் முழுமையாகக் கணிக்க முடியாத நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் இதன் உண்மையான வீரியமும் இயல்பு நிலையும் வெளிப்படத் தொடங்கும். இத்தகைய சூழலில், .. எச்சரிக்கைகளை நாம் தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

news
சிறப்புக்கட்டுரை
அரிசி சோறும் அரசியல் பேசும்! குடும்பப் பின்னணியில் குழந்தைகளுக்கு அரசியல் அறிவை ஊட்டுவது எப்படி?

நாட்டின் குடிமகன் என்பவன் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வாக்குச் சீட்டில் விரல் வைப்பவன் மட்டுமல்ல; தன் நாட்டின் ஒவ்வொரு நகர்வையும் விழிப்புணர்வோடு கவனிப்பவன். ‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாவதூ உம்என்று சிலப்பதிகாரம் பாடிய தமிழ் மண்ணில் இன்றுஅரசியல்என்ற வார்த்தையே ஒரு சாக்கடையாகவும், தீண்டத்தகாத ஒன்றாகவும் சித்தரிக்கப்படுவதுதான் நம் காலத்தின் ஆகப்பெரும் சாபக்கேடு. ‘நமக்கு ஏன் அரசியல் வம்பு? பிள்ளைகளைப் படிக்க வையுங்கள், நல்ல வேலைக்கு அனுப்பப் பாருங்கள்என்று கைகளைக் கழுவிக்கொள்ளும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மனநிலை, ஒரு சுயநலச் சமூகத்தையே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

அரசியல் என்பது ஏதோ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்குச் சென்று, முத்திரை குத்திவிட்டு வரும் வெறும்சடங்குஅல்ல; அது நாம் சுவாசிக்கும் காற்று. நாம் வாங்கும் தீப்பெட்டி முதல் குழந்தைகளின் கல்விவரை அனைத்தையும் தீர்மானிக்கும் அந்த அரசியலை, ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தின் ஆன்மிகச் சூழலிலும், குடும்பப் பின்னணியிலும் வளரும் இக்காலக் குழந்தைகளுக்கு எப்படிப் புகுத்துவது? அதற்கு நாம் எங்கும் தேடிப் போக வேண்டியதில்லை; நம் வீட்டுச் சமையலறையும், சாப்பாட்டு மேசையுமே போதுமானது.

அரிசி சோறும் அரசியல் பேசும்என்று நாம் கூறுவது வெறும் அலங்கார வார்த்தை அல்ல; நம் தட்டில் இருக்கும் ஒவ்வொரு பருக்கைச் சோற்றுக்குப் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கிறது. “சென்ற மாதம் இந்த அரிசி என்ன விலை விற்றது? இந்த மாதம் ஏன் விலை கூடியிருக்கிறது? நெல் விளைவித்த விவசாயிக்குச் சரியான விலை கிடைக்கிறதா? இடைத்தரகர்கள் இலாபம் பார்ப்பது நியாயமா? நாம் ஏன் உணவை வீணாக்கக்கூடாது?” என்று சாப்பாட்டு மேசையில் குழந்தைகளோடு உரையாடலைத் தொடங்குங்கள். அங்கேதான்பொருளாதார அரசியலின்முதல் புள்ளி குழந்தையின் மனத்தில் விதைக்கப்படுகிறது. விலையேற்றமும், விவசாயியின் கண்ணீரும் தற்செயலானது அல்ல; அரசின் கொள்கை முடிவு என்பதைக் குழந்தைகள் அங்கேதான் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள்.

இன்றைய குழந்தைகளுக்கு அரசியல் புகட்டுவது எப்படி என்று நாம் யோசிக்கும்போது, நம் சொந்தக் குடும்பங்களின் வரலாற்றையே நாம் திரும்பிப் பார்க்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நம் கிராமத்துத் திண்ணைகளிலும், பெரிய கூட்டுக்குடும்பங்களின் முற்றங்களிலும் மாலையில் பெரியவர்கள் அமர்ந்துப் பேசும்போது, அங்கே நாட்டின் நிலவரங்களும், சமூகப் பிரச்சினைகளும் இயல்பாக விவாதிக்கப்படும். அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளும், அந்தப் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்தார்கள். யார் நல்லவர்? சமூகத்திற்கு யார் என்ன நன்மை செய்தார்கள்? என்பதை தாத்தா, பாட்டிமார் கதைகளாகக் குழந்தைகளுக்குக் கூறினார்கள். இதனால் அன்று குழந்தைகளுக்குத் தனிப்பாடம் எடுக்காமலேயே சமூக அறிவு தானாகவே இரத்தத்தில் ஊறியது.

இன்றைய கால வரலாறு முற்றிலும் மாறிவிட்டது. கூட்டுக்குடும்பங்கள் மறைந்து, தனிக் குடும்பங்கள் பெருகிவிட்டன. சமையலறை, படுக்கையறை என்று சுவர்களுக்குள் சுருங்கிவிட்ட இன்றைய வீடுகளில், குழந்தைகளின் உலகம் மொபைல் திரைகளுக்குள் முடங்கிவிட்டது. பெற்றோரும், ‘குழந்தைகளுக்கு இதெல்லாம் வேண்டாம், மார்க் வாங்கினால் போதும்என்று சமூகத்திலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தி வளர்க்கிறார்கள். இந்த வரலாற்று மாற்றம்தான், இன்றைக்குக் குழந்தைகளிடம் சமூகப் பொறுப்பு குறைவதற்குக் காரணியாக அமைந்துவிட்டது.

நம் வீட்டுக் குழந்தையிடம் முறையான சமூக விழிப்புணர்வையும், குடும்பப் பின்னணியில் இந்த வரலாற்றுப் புரிதலையும் நாம் புகுத்தத் தவறுவதன் விளைவை இன்றைய இளம்தலைமுறையினரின் சில பொதுவான போக்குகளைக் கொண்டே உணர்ந்துகொள்ள முடியும். நம் முன்னோர் காட்டிய அந்த இயல்பான சமூகச் சிந்தனைகளைத் தாண்டி, வெறும்திரைப்படக் கவர்ச்சிமற்றும் தற்காலிக உணர்ச்சிப்பெருக்கின் காரணமாக மட்டுமே தங்களின் வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு மேலோட்டமான கலாச்சாரம் பெருகி வருகிறது.

சமூகப் பொறுப்போ, தொலைநோக்குப் பார்வையோ, சித்தாந்தத் தெளிவோ இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கக்கூடியபகுத்தறிவுத் திறன்இன்றைய இளைய சமுதாயத்தில் பலரிடம் ஏன் பின்தங்கிப் போகிறது? காரணம், அவர்களின் சிறுவயதில் குடும்பங்கள் அவர்களுக்குச் சரியான வாழ்வியல் கல்வியையும், சமூகப் புரிதலையும் ஊட்டத் தவறியதே ஆகும். திரையில் தோன்றும் மாயப்பிம்பங்களை அப்படியே உண்மை வாழ்விலும் பொருத்திப் பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள், எதிர்காலச் சமுதாயத்தின் போக்கையே மாற்றிவிடக் கூடும் என்பதைப் பெற்றோர் குழந்தைகளுக்கு மென்மையாக உணர்த்த வேண்டிய தருணம் இது.

அரசியல் என்பது பொழுதுபோக்குச் சினிமா அல்ல; அது மக்களின் வாழ்வாதாரப் போராட்டம். “ஒருவர் நல்ல நடிகராகவோ அல்லது பிரபலமானவராகவோ இருப்பதால் மட்டுமே அவர் நல்ல தலைவராக மாறிவிட முடியாது; அதற்குச் சமூகக் கூட்டுப் பொறுப்பும், தியாகமும், சித்தாந்தத் தெளிவும்வேண்டும்என்பதை நாம் குழந்தைகளுக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.

வெறும் தனிநபர் வழிபாட்டு (Hero Worship) அரசியலிலிருந்து, ‘கொள்கை வழிஅரசியலுக்கு நம் குழந்தைகளை மாற்றவேண்டும். ஒரு தலைவரை அவரது திரையுலகக் கவர்ச்சியால் அல்ல; அவரது கொள்கையாலும் செயல்பாட்டாலும் மட்டுமே எடை போடவேண்டும் என்ற அரசியல் முதிர்ச்சியை (Political Maturity) நம் வீட்டுச் சாப்பாட்டு மேசையிலிருந்தே நாம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும்.

குடும்பம் என்பது ஒரு நாட்டின் மிகச்சிறிய வடிவம். ஒரு நாட்டில் சனநாயகம் மலரவேண்டும் என்றால், அது முதலில் குடும்பத்தில் பழகப்பட வேண்டும். வீட்டில் ஒரு பொருளை வாங்கும் போதோ அல்லது ஒரு நல்ல நிகழ்வைத் திட்டமிடும்போதோ, குழந்தைகளையும் அமர வைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்கவேண்டும். ‘இது பெரியவர்கள் விசயம், நீ உள்ளே வராதேஎன்று குழந்தைகளின் குரலை நசுக்குவது, எதிர்காலத்தில் சமூகத்தில் நடக்கும் பேரதிகாரத்தைச் சகித்துக் கொள்ளும் ஓர் அடிமைத் தலைமுறையையே உருவாக்கும். குடும்பத்தில் தங்களுக்குக் கிடைக்கும் கருத்துரிமைதான், நாளை நாட்டின்வாக்குரிமையாகமாறும் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.

நமது கத்தோலிக்கத் திரு அவையின் சமூகப் போதனைகள் (Social Teachings of the Church) குடிமைப் பொறுப்பையும், சமூக நீதியையும் மிக முக்கியக் கடமையாக வலியுறுத்துகின்றன. “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் (மத்தேயு 22:21) என்ற இயேசுவின் வாக்கு, நாம் வாழும் நாட்டின் சட்டங்களுக்கும், அரசியல் கடமைகளுக்கும் நம்பிக்கையாக இருக்கவேண்டும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

அரசியல் என்பது வெறும் கட்சி சார்ந்தது அல்ல; அது நற்பண்புகள் சார்ந்தது. சுயநல அரசியலுக்கும், பொதுநல அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரவேண்டும். ஏழை எளியவர் மீதான அக்கறை, ஒடுக்கப்பட்டோருக்கான நீதி, பிற மதத்தினரை மதிக்கும் பன்முகத்தன்மை ஆகிய நற்பண்புகளை திருவிவிலியப் பின்னணியோடு ஒப்பிட்டுக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கலாம்.

இன்று மொபைல் போன்களிலும், சமூக வலைதளங்களிலும் வன்முறையும், அவதூறுகளும் நிறைந்த போலி அரசியல் செய்திகளே அதிகம் வருகின்றன. இதைப் பார்த்துக் குழந்தைகள் அரசியலின்மீது வெறுப்பு கொள்ளக்கூடாது. மாலையில் குடும்பமாக அமர்ந்து செய்திகளைப் பார்க்கும்போது, நடப்பு நிகழ்வுகளைப் பிள்ளைகளுக்கு எளிய முறையில் விளக்கி, இதில் எது சரி, எது தவறு? இந்தச் செய்தியின் பின்னணி என்ன? என்று அவர்களைக் கேள்வி கேட்க வைக்கவேண்டும். ஒரு செய்தியை அப்படியே நம்பாமல், அதன் உண்மைத்தன்மையை ஆராயும் பகுத்தறிவை வீட்டிலிருந்தே பழக்கவேண்டும்.

இந்தியா என்பது பல்வேறு மொழிகளும் பண்பாடுகளும் கொண்ட ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த அழகான தேசம். இந்தத் தேசத்தின் தூண்களாக மாறப்போகும் இக்காலக் குழந்தைகள், வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மட்டும் வளர்ந்தால் போதாது; சமூகப் பொறுப்புள்ள, விழிப்புணர்வுள்ள குடிமக்களாக வளரவேண்டும்.

அரசியல் என்பது அழுக்கல்ல; அது நம் சமூகத்தைத் தூய்மைப்படுத்தும் உன்னத ஆயுதம் என்பதை நம் வீட்டுக் குழந்தைகளுக்குப் புரிய வைப்போம். அன்று திண்ணைகளில் பழகிய அதே சமூக விழிப்புணர்வை, இன்று நம் வீடுகளில் குழந்தைகளுக்குக் கதைகளாகக் சொல்வோம். குடும்ப அறைகளில் பேசப்படும் ஆரோக்கியமான, வரலாற்றுத் தெளிவுள்ள, கொள்கை சார்ந்த அரசியலே, நாளை நாட்டின் நல்லாட்சியாக எதிரொலிக்கும்!