ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்!
கடவுள் விண்ணகத்தில் நம் கண்களுக்குத் தோன்றாத வகையில் தங்கிவிடவில்லை; மாறாக, மண்ணகத்தில் மனிதராக இறங்கி வந்துள்ளார். கிறிஸ்துமஸ் - இறைவனின் நெருக்கத்தைக் கொண்டாடவும், அவரது உண்மையான அன்பைக் கண்டுகொள்ளவும் அழைப்பு விடுக்கும் விழா! ஆண்டவரின் நெருக்கமும் அவரது அன்பும் மகிழ்ச்சியும் அமைதியும் உங்கள் உள்ளங்கள், இல்லங்கள், உறவுகள் அனைத்திலும் நிறைந்திருக்க வேண்டுகிறேன்.
கிறிஸ்து
பிறப்பு விழா - மகிழ்ச்சியின் விழா; நம்பிக்கையின் விழா; கடவுளின் பேரன்பை உணர்த்தும் விழா. மனுக்குலத்தின்மீது இறைவன் கொண்ட அன்பின் மேன்மையால் விளைந்த அற்புதமான வரலாறு!
இந்த
நள்ளிரவு வேளையில், “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்” (எசா
9:6) என்ற எசாயா இறைவாக்கினரின் சொற்கள் இன்று நம் உள்ளத்தை நிரப்புகின்றன. பிறப்பு எப்போதும் நம்பிக்கையின் ஊற்றாக, எதிர்காலத்தின் வாக்குறுதியாகத் திகழ்கிறது. ஒரு குழந்தையின் பிறப்பு விவரிக்க முடியாத ஒரு மகிழ்வை நமக்குத் தருகிறது. ஒரு குழந்தை பிறப்பதால் கிடைக்கும் மகிழ்வு, பெற்றுக்கொள்ளும் அனைத்திலும் மிகப்பெரிய ஒன்றாக அமைகிறது.
குளிர்
நிறைந்த இவ்விரவில், ஒளிர்விடும் சிறு விளக்குப்போல் இறைமகன் பிறந்துள்ளார். இயேசு எனும் இக்குழந்தை நம்மோடு உரையாடும் வண்ணம் மனுவுரு எடுத்துள்ளார். கடவுள் தமக்குத்தாமே பேசிக்கொள்ள விரும்புவதில்லை; ஏனெனில், தந்தை, மகன் மற்றும் தூய ஆவியாராக இருக்கின்ற கடவுளே உரையாடல்தான். எனவே, மனித உடலெடுத்த இறைவார்த்தையாம் இயேசுவின் பிறப்பால் கடவுளே நம்மோடு உரையாடுவதற்கான பாதையைக் காட்டியுள்ளார். அவரின் பிறப்பால் நாம் அனைவருமே கடவுளை ‘நம் தந்தை’ என்றழைக்கிறோம்; அவருடன் பேசுகிறோம். எனவே, நாம் அனைவரும் சகோதரர்கள், சகோதரிகள் என்பது கடவுள் வழங்கும் செய்தி. நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நாம் ஒருவர் மற்றவரை மதித்துச் செவிமடுக்கும் உடன் பிறந்த உணர்வை வளர்க்கும் நேரமாக இந்த இரவு நேரம் அமையட்டும்.
முதலாவது,
“ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்” (எசா
9:6) என்ற செய்தி அவர் நம்மை அன்பு கூருகிறார் என்பதைக் காட்டுகிறது. இறைவன் நம்மை அருளின் குழந்தைகளாக, இறைவனின் பிள்ளைகளாக மாற்றுவதற்கு, அவரே இறங்கி வருகிறார். இது ஒரு வியத்தகு கொடை! “கடவுள் நம்முடன் இருக்கிறார்” (மத்
1:23) என்ற உறுதியை நமக்கு வழங்குகிறார். நமக்கென இறைவன் தம் சொந்த மகனையே தந்துள்ளார். வார்த்தையாம் இறைவன், வார்த்தைகளற்ற ஒரு குழந்தையாகத் தம் வாழ்வையே நமக்கு வழங்க வந்துள்ளார்.
கிறிஸ்துவின்
பிறப்பு எந்த ஒரு துயரையும், துணிவுடன் கடந்து செல்லும் ஆற்றலை நமக்குத் தருகிறது. ஆனால், நாம் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வற்ற செயல்களையும், நம் சகோதர சகோதரிகளுக்கு எதிராகச் செய்யும் அநீதிகளையும் பார்க்கும்போது, இறைவன் நம்மை உயர்வாக மதித்து இத்தகைய கொடையை அளிப்பதற்கு நாம் தகுதியுடையவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது. அமைதியான, வன்முறையற்ற உலகை உருவாக்குவதில் நாம் தோற்றுப்போனோம். திருவிவிலியத்தை வாழ்வாக்கத் தவறிவிட்டோம். பசப்பு வார்த்தைகளால் பிறரை ஏமாற்றிவிட்டோம். கடவுளின் விருப்பத்திற்கு எதிராக எதிர் திசையில் சென்றுகொண்டிருக்கிறோம். நம் வாழ்வின் ஆதாரமாகிய இறைவனை அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நிறையப் பேசுகிறோம்; அதேவேளை நன்மைத்தனம் குறித்து அறியாதவராகச் செயல்படுகிறோம். ஆதிக்கமும் சுரண்டலும் வன்முறையும் பன்மடங்கு பெருகியுள்ளன. வாழ்வின் அடிப்படைகளை நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. “அனைவரையும் அன்பு செய்வாயாக”
(மாற் 12:31) எனும் இயேசுவின் உயர்ந்த நெறியைப்பற்றி அறிந்த பிறகும் கடைப்பிடிக்கத் தடுமாறுகிறோம். ஒருவரையொருவர் அன்பு செய்வதற்குப் பதிலாக வெறுக்கிறோம், பகையை வளர்க்கிறோம்.
கடவுள்
நமக்கு உயரிய ஓர் இடத்தைக் கொடுத்திருக்கிறார். ஏனெனில், அவரின் அன்பு அத்தகையது. நம்மை அன்புகூருவதன் வழியாக, நம் உள்மனக் காயங்களைக் குணப்படுத்தவும், நம்மை மீட்கவும் செய்கிறார். “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்” எனும்
செய்தி இறைவன் நம்மை அன்புகூருகிறார் என்பதையும், நாமும் மற்றவரை அன்புகூர வேண்டும் என்பதையும் கற்றுத்தருகின்றது.
இரண்டாவது,
“ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்” என்ற
செய்தி, அக்குழந்தை எவ்விடத்தில் பிறந்துள்ளார் என்ற கேள்வியை எழுப்புகிறது. அவர் அரசர்களின் மாளிகையில் பிறக்கும் தகுதியுடைய ஒரு குழந்தை. ஆனால், மாடடைத் தொழுவத்தில், இருள் சூழ்ந்த ஓர் இடத்தில் பிறக்க வேண்டிய காரணம் என்ன? ஏழ்மை, எளிமை, தனிமை, துன்பம், ஒதுக்கப்பட்ட நிலை, ஒடுக்கப்பட்ட நிலை இவற்றில்தான் ஏழையாகப் பிறந்த இயேசுவைக் காணமுடிகிறது. அவர் நம் ஏழ்மையான, எளிய நிலைகளில் இறங்கி வந்து, நம்மை எவ்வளவு தூரம் அன்புகூருகிறார் என்பதைக் காட்ட, அவரும் எளிய வகையில் பிறப்பெடுத்தார். எனவே, ஆடம்பரம் இல்லாத எளிமையான ஓரிடத்தில் மட்டுமே இறைவனைக் காண முடியும் என்பதுதான் நமக்குத் தரும் மற்றுமொரு செய்தி. கடவுள் எப்போதும் நம்மிடம் நெருக்கமாக வரவும், நம் இதயங்களைத் தொடவும், நம்மை மீட்கவும் அவர் சிறிய வழியையே தேர்ந்து கொள்கிறார்.
கடவுளின்
இந்த வெளிப்பாட்டை நாம் புரிந்துகொள்ள மறுக்கிறோம். இவ்வாறு கடவுள் தம்மை வெளிப்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்வதில் தோற்றுப்போகிறோம். இவ்வுலகின் பார்வையில் கடவுள் தம்மை எளியவராக வெளிப்படுத்தினார். நாமோ இன்னமும் அவரைப் பிரமாண்டமான பெரிய காரியங்களில், ஆடம்பர விளக்கு அலங்காரங்களில் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறோம். பகைமை என்ற கத்தியால் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டவர்கள் இறைவனை எப்போதும் தரிசிக்க முடியாது. இறைவன் பணிவிடை புரிபவராக நம் நடுவிலே மனிதராகப் பிறக்கிறார் (லூக் 22:27). நாமோ, பணிவிடை ஏற்பவராக இருக்கிறோம். அவர் பதவியையும் புகழையும் தேடவில்லை. நாமோ பதவியையும் புகழையும் மட்டுமே தேடுகிறோம். எனவே, எளிமையை ஏற்றுக்கொள்வதற்கான அருளைக் கேட்போம். ஏழ்மை நிலையில் பிறந்த இயேசுவை ஏற்றுக்கொள்வது என்பது அவரைப்போல ஏழ்மை நிலையிலும் ஆதரவற்ற நிலையிலும் இருக்கும் அனைவரையும் அரவணைத்துக்கொள்வதாகும்.
மூன்றாவது,
“ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்” என்ற
செய்தி, நமக்காகத் தரப்பட்டுள்ள இந்த ஆண் மகவு ஏன் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்”
(லூக் 2:12) என இடையர்களிடம் வானதூதர்
சொல்வதைக் காண்கிறோம். ‘அப்பத்தின் இல்லம்’ என்று பொருள்படும் பெத்லகேமில், ஒரு தீவனத் தொட்டியில் இறைவன் பிறக்கிறார். மனிதர் வாழ்வதற்கு உணவு தேவை என்பதை உணர்ந்த இறைவன், “இதோ நான் உங்கள் உணவாக உள்ளேன்”
(யோவா 6:35) என்று சொல்வதுபோல், இயேசுவின் பிறப்பு அமைகிறது. இந்நேரத்தில் பசியால் வாடும் அனைவரையும் குறிப்பாக, சிறார்களை நினைத்துப் பார்ப்போம்.
“இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்”
(மத் 26:26) என்று தம் பிறப்பு முதல் சொன்னவர் இயேசு. சேர்த்து வைப்பதில் வாழ்வு அடங்குவதில்லை; மாறாக, பகிர்வதிலும், தருவதிலுமே அது அடங்கியுள்ளது என்பதை பெத்லகேமில் பிறந்த இக்குழந்தை நம்மிடம் சொல்கிறது.
இந்தக்
கிறிஸ்து பிறப்பு விழாவில், ஒன்றுமில்லாதவர்களுடன் நான் என்னையே அப்பமாகப் பகிர்ந்துகொள்கிறேனா? என்ற கேள்விகளைக் கேட்டுப் பார்ப்போம். வலுவற்றோர், நோயுற்றோர், கைவிடப்பட்டோர், வயது முதிர்ந்தோர், விளிம்புநிலையில் இருப்போர், தனிமையில் வாழ்வோர், கைதிகள், வேலை இழந்தோர், பொருளாதார நெருக்கடியில் துன்புறுவோர், புலம்பெயர்ந்தோர், புதுமை பாலினத்தோர் ஆகியோர் நம் இல்லக் கதவுகளை வந்து தட்டும்போது அவர்களை மறவாதிருப்போம்.
நிறைவாக,
“ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்” என்ற
செய்தி சொல்வது: அவர் நம்மைக் காக்க வந்துள்ளார்! இந்த இரவிலே தம்மையே ஒரு கொடையாக, எவ்வித நிபந்தனையுமின்றி வழங்குகிறார்.
இயேசு என்ற கொடையை நாம் வரவேற்று, அவரைப்போல் நாமும் ஒரு கொடையாக மாறுவோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வேதனையில் வெந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் நடுவே, இறைவன், ‘இம்மானுவேலாக’ வாழ
பிறந்ததைப்போல், இன்றும், வேதனையில் இருப்போர் நடுவில் அவர் மீண்டும் பிறக்க மன்றாடுவோம்.
“எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி”
(லூக் 2:10) என இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல,
அதே மகிழ்ச்சியைக் கடவுள் நமக்கும் இன்று தருவாராக! “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்” (எசா
9:2) என்று எசாயா குறிப்பிடுவதுபோல, நம் உள்ளங்களும் இல்லங்களும் கிறிஸ்து எனும் பேரொளியால் நிரப்பப்பட வேண்டுவோம். நாம் வாழ்கின்ற இடங்களில், குடும்பங்களில் ஒரு சிறிய புன்னகையாகக் கிறிஸ்துவின் ஒளியை வழங்குவோம். கடவுளின் அன்பால் ஆழமாக இயக்கப்பட நம்மையே அனுமதிப்போம். ஒவ்வொரு நாளும் நாம் ஆற்றுகின்ற சாதாரண செயல்கள் வழியாக, நம் வாழ்வை மிகச் சிறந்த படைப்பாக மாற்றுவோம்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ்
வாழ்த்துகள்!
வாழ்வளிக்கும் சந்திப்புகள்: உரையாட... உறவாட... உடனிருக்க
வரலாற்றில் எத்தனையோ சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன; நிகழ்கின்றன. நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பு, சாதனையாளர்களுடனான சந்திப்பு, பேரிடர் காலச் சந்திப்பு என ஏராளமான சந்திப்புகள் நிகழ்கின்றன. இயற்கையும்கூட சந்தித்துக்கொள்கின்றது. மழை பூமியைச் சந்திக்கின்றது; சூரிய ஒளியை மரங்கள் சந்தித்துக்கொள்கின்றன. சில சந்திப்புகள் நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம்; சில சந்திப்புகள் வருத்தங்களை உருவாக்கலாம். வாழ்க்கையில் ‘மற்றுமொருமுறை இவரைச் சந்திக்க மாட்டேனா?’ என ஏங்குபவர்கள் உண்டு. ‘இனி என்னுடைய வாழ்க்கையில் இவரைச் சந்திக்கவே கூடாது’ என்று எண்ணுபவர்களும் உண்டு.
நாம்
பயணம் மேற்கொள்ளும்போது பலரைச் சந்திக்கிறோம். குறிப்பாக, அருகில் அமர்ந்து பயணம் செய்பவர்களோடு அறிமுகமாகி உரையாடுகிறோம். அதுவும் நீண்ட நெடிய பயணம் என்றால், நாம் மிகவும் அவர்களோடு ஒன்றித்துப்போய் விடுகிறோம். அப்போது நம்மிடம் இருக்கின்ற உணவினையும் உணர்வுகளையும் இன்ப-துன்ப நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்கின்றோம். இத்தகைய உறவாடல்கள் நமக்குள் புதிய உறவுகளை ஏற்படுத்துகின்றன. பழைய உறவுகளை ஆழப்படுத்துகின்றன.
“நான் மட்டும் அவரைச் சந்தித்திருக்காவிட்டால், நான் இந்த உயர்ந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது”,
“அவருடனான சந்திப்புதான் என் வாழ்வையே மாற்றி அமைத்தது”
என்றெல்லாம் நாம்
சொல்லக் கேட்டிருக்கிறோம். பல நேரங்களில் நாமே
சொல்லியிருக்கலாம். நாம் மேற்கொள்ளும் சந்திப்புகள் நம் வாழ்வை மாற்றுகின்றன; வளமான சந்திப்புகள் வாழ்வைக் கொடுக்கின்றன.
திருவருகைக்
காலத்தின் நான்காம் ஞாயிறு வாசகங்கள் அனைத்தும் ‘இறை-மனிதச் சந்திப்பு’
எனும் உன்னதமான சிந்தனையை நமக்கு வழங்குகின்றன. பழைய ஏற்பாட்டுக் காலம் தொடங்கி, புதிய ஏற்பாட்டுக் காலம் வரை மீட்பு வரலாற்றில், வியத்தகு முறையில் இறைவன் மனிதனைச் சந்தித்ததைப் பார்க்கிறோம்.
மீட்பின்
தொடக்கமாக, கடவுள்-நோவா சந்திப்பு; அதனைத் தொடர்ந்து நமது முதுபெரும் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களுடனான கடவுளின் சந்திப்பு; இஸ்ரயேல் மக்களை விடுவிப்பவராக முழுப் பொறுப்பேற்றுக் கொண்ட மோசேவுடனான கடவுளின் சந்திப்பு; இஸ்ரயேல் மக்கள் வேற்று நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்குத் தமது மீட்புச் செய்தியைக் கொடுப்பதற்காக எசாயா, எரேமியா, எசேக்கியேல், ஆமோஸ், செப்பனியா, யோவேல், யோனா, மீக்கா ஆகியோருடனான இறைவனின் சந்திப்பு ஆகியவை வரலாற்றுச் சிறப்புமிக்க இறை-மனிதச் சந்திப்புகளாகும்.
புதிய
ஏற்பாட்டிலும் இறை-மனிதச் சந்திப்புகள் பல நிகழ்ந்துள்ளன. இறைவன்
தமது மீட்புத் திட்டத்திற்காக அன்னை மரியாவை முதலில் சந்திக்கிறார். தொடர்ந்து மரியாவின் கணவரும் இயேசுவின் தந்தையுமான யோசேப்பைச் சந்திக்கிறார். மக்களின் மீட்புக்காக மன்றாடிக் கொண்டிருந்த செக்கரியாவைக் கடவுள் சந்திக்கிறார். மனுக்குலத்தை மீட்க மனுவுருவான இயேசு தமது பணிவாழ்வைத் தொடங்கும்போது, முதன்முதலாகத் திரு முழுக்கு யோவானைச் சந்திக்கிறார். இயேசு மகதலா மரியா, மத்தேயு, சக்கேயு எனப் பலரையும் சந்திக்கிறார். இந்த இறை-மனிதச் சந்திப்புகளிலெல்லாம் ‘உரையாடல் - உறவாடல் - உடனிருத்தல்’ என்ற
மூன்று முக்கியச் சிந்தனைகள் உள்ளடங்கியுள்ளன. இவற்றை ‘மெசியா காலப் பண்புகள்’
எனலாம்.
இன்றைய
முதல் வாசகத்தில், பாபிலோனிய மன்னர் நெபுகத்நேசர் எருசலேமை முற்றுகையிட்டபோது, யூதாவை ஆட்சி புரிந்தவர்களால் தங்கள் நகரைக் காப்பாற்ற முடியவில்லை. எனவே, சிறிய இடமாகிய பெத்லகேமிலிருந்து தோன்றும் அரசரால் மட்டும்தான் தம் மக்களைக் காப்பாற்ற முடியும் என இறைவாக்கினர் மீக்கா
முன்னறிவிக்கிறார். மீக்கா முன்னறிவிக்கும் இந்த அரசர்தான் மெசியாவாகிய இயேசு. மீக்கா முன்னறிவித்தபடி பெத்லகேமில் மெசியா பிறப்பார் (லூக் 2:4-7); இவர் என்றும் அரசாள்வார். எனவே, ‘மெசியாவின் பிறப்பு மனுக்குலத்துடனான ஒரு சந்திப்பு. இந்தச் சந்திப்பில் மெசியா சிதறுண்ட அனைவரையும் ஒன்று சேர்ப்பார்; அச்சமில்லாத வாழ்வையும் அமைதியையும் அருள்வார். அவரே அவர்களை மேய்ப்பார்; வலிமையோடு மக்களைத் தேடிவந்து காப்பாற்றுவார்’ என்பதை
உறுதிபடக் கூறுகிறார்.
இன்றைய
நற்செய்தியில், இறைத்திட்டத்திற்குத் திறந்த உள்ளத்தோடும் தாழ்ச்சியோடும் தன்னை ஒப்புக்கொடுத்த, உருவிலா இறைவனைக் கருவில் தாங்கிய அன்னை மரியாவும் ஆண்டவரின் வருகைக்கு மக்களைத் தயார் செய்த திருமுழுக்கு யோவனைத் தன் திருவயிற்றில் தாங்கிய எலிசபெத்தும் சந்திக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. அன்னை மரியாவும் எலிசபெத்தும் சந்தித்துக் கொண்ட சந்திப்பு ஒரு சாதாரண சந்திப்பு அல்ல; இது இரு நம்பிக்கையாளர்களின் சந்திப்பு. இயற்கைக்கு அப்பாற்பட்டு நடந்த இறைவனின் வெளிப்பாட்டை ஒருவரையொருவர் பகிர்ந்துகொண்ட சந்திப்பு. இரண்டு காலங்களின் சந்திப்பு. பழைய ஏற்பாட்டின் நிறைவாகக் கருதப்படுகின்ற திருமுழுக்கு யோவானும், புதிய ஏற்பாட்டின் தொடக்கமாகக் கருதப்படுகின்ற மீட்பர் இயேசுவும் பிறப்பதற்கு முன்னரே ஒருவரையொருவர் சந்திக்கின்ற இறை-மனிதச் சந்திப்பு. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிகழும் எந்தச் சந்திப்புகளும் இயல்பாக நடப்பவை அல்ல; மாறாக, அவை இறைவன் எடுத்த முயற்சியால் விளைந்தவை. ஆகவே, இறைச் சந்திப்பு எப்போதும் இறைவனிடமிருந்தே தொடங்குகின்றது என்பதை நினைவில் கொள்ளலாம்.
நற்செய்தியின்
இரகசியத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளவும் யூதா மலைநாட்டிலிருந்த எலிசபெத்தின் ஊராகிய அயின்கரீமுக்கு விரைந்து செல்கிறார் மரியா. இப்பயணம் அவ்வளவு எளிதான பயணம் அல்ல; வலிகளும் சவால்களும் நிறைந்த பயணம். பொதுவாக வலிகள் நிறைந்த பயணங்கள் எதிர்கால மகிழ்வைக் கொடுக்கக் கூடியவையாகவே இருக்கும். சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு விட்டு வேலையின் காரணமாக வெளி நாட்டுக்குச் செல்பவர்களின் பயணம் வலி நிறைந்ததாகவே இருந்தாலும் அப்பயணத்தில் எதிர்கால மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மரியா வசிக்கும் நாசரேத் ஊருக்கும், எலிசபெத் இருக்கும் யூதேய மலைநாட்டிலுள்ள ஊருக்குமான தொலைவு 81 மைல், அதாவது, சுமார் 130 கி.மீ. தூரம்
இருந்தாலும், அந்தத் தூரத்தை அடைவதற்கு மரியா கழுதையின்மேல்தான் பயணம் செய்கிறார். இந்தத் தொலைவைக் கடப்பதற்குக் குறைந்தது மூன்று நாள்களாவது ஆகியிருக்க வேண்டும். அன்னை மரியா கருவுற்ற சில நாள்களிலேயே இந்தப் பயணம் நிகழ்கிறது. இறைவனின் துணையை மட்டுமே நம்பி மரியா இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் இப்பயணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மரியா நாசரேத்தூரிலிருந்து அயின்கரீமுக்குச் சென்றதே முதல் நற்கருணை பயணம்” என்கிறார்.
மரியா-எலிசபெத் சந்திப்பில் வெளிப்படும் மெசியா காலப் பண்புகள் என்னென்ன? முதலாவதாக, அன்னை மரியா, வானதூதரின் செய்தியைப் பெற்றவுடனே, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல்,
தன் உறவினர் எலிசபெத் தேவையில் இருக்கிறார் என்பதை அறிந்து தனது அன்பையும் ஆதரவையும் கொடுப்பதற்காக, விரைந்துசென்று உதவுகிறார். இச்செயல், மரியா ஏற்கனவே தன் கருவில் வளரும் இறைமகனின் சீடராக மாறிவிட்டார் என்பதைக் காண்பிப்பதாக உள்ளது. பிறர் தேவையைத் தன் உள்ளத்தில் தனதாக உணர்வது அன்னை மரியாவுக்கே உரிய தனித்துவமான பண்பு. கானாவூர் திருமண நிகழ்வில் அன்னை மரியாவின் இதே பண்பை நம்மால் கண்டுகொள்ள முடியும். இதனையே திருத்தந்தை பிரான்சிஸ், “ஒருவரின் கண்களை உற்று நோக்கவில்லையெனில் அவர்களின் தேவைகளை நம்மால் உணர்ந்துகொள்ள முடியாது”
என்கிறார் (வத்திக்கான், 19.12.2021).
இரண்டாவதாக,
தன் மனத்திலும் வயிற்றிலும் சுமந்த மகிழ்வை, உற்சாகத்தை, வியப்பை, அச்சத்தைக் கருவுற்றிருக்கும் தன் உறவினரான எலிசபெத்துடன் பகிர்ந்துகொள்ள ஆவல் கொண்ட மரியாவை எலிசபெத் இன்முகத்தோடும் நன்றி உணர்வோடும் “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்”
என வாழ்த்துவதும் பாராட்டுவதும் மெசியா காலத்து மற்றொரு பண்பு. பிறரை வாழ்த்தும்போது, ஆசிர்வதிக்கும்போது நாமும் வாழ்த்தப்பெறுகிறோம், ஆசிர்பெறுகிறோம்.
மூன்றாவதாக,
அன்னை மரியாவின் இந்தச் சந்திப்பு, இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் தனியாவோ அல்லது தனிமையாகவோ அல்ல; மாறாக, ஒருவர் மற்றவருடன் இணக்கமாக இணைந்திருக்கும் நிலையில் வாழ்கிறோம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. நம் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “மற்றவர்களின் தேவை குறித்து ஒரு சமுதாயம் கண்டுகொள்ளாமல் செல்லும்போது, புறக்கணிப்பு எனும் கலாச்சாரத்திற்குள் நுழைகிறது”
(கிறிஸ்துமஸ் சிறப்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வழங்கிய உரை, 20.12.2021). எனவே, நாமும் தனிமையில் வாழ்வோருக்கும் வயது முதிர்ந்தோருக்கும் நமது உடனிருப்பை வழங்கவேண்டும் என்பது மற்றுமொரு மெசியா காலப்பண்பாகும்.
நிறைவாக,
இளம்பெண் மரியா, எலிசபெத்துக்குப் பணிகள் ஆற்றியபோது அதற்கு ஈடாக, வயது முதிர்ந்த பெண்ணான எலிசபெத்திடமிருந்து அனுபவங்களையும், ஆலோசனைகளையும், ஆன்மிக வழிகாட்டல்களையும் கொடைகளாகப் பெற்றுக்கொள்வது, நாம் பிறருக்குச் செய்யும் ஒவ்வொரு சிறு உதவிக்கும் மறு உதவியைப் பெறுவோம் என்பதை உணர்த்துகிறது. எனவே, இச்சந்திப்பு நமக்குத் தரும் நற்பாடமான, பிறரன்பை மனத்தில் கொண்டு, தேவையில் இருக்கும் நம் சகோதரர் சகோதரிகளை இந்தக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மையமாக வைத்து செயல்பட முன்வருவோம். நமக்கென்று ஆயிரம் கவலைகள் இருந்தாலும், நம் பிறரன்புப் பணிகளை இன்முகத்துடன் ஆற்றுவோம். ஏனெனில் உரையாட, உறவாட, உடனிருக்க இரக்கம், நெருக்கம் மற்றும் கனிவு நிரம்பியிருக்கும் குழந்தை இயேசு எப்போதும் நம் அருகில் உள்ளார்.
அவரில் மகிழ... அயலாரை மகிழ்விக்க...
திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறை ‘Gaudete Sunday’ அதாவது ‘மகிழும் ஞாயிறு’ என்று கொண்டாடுகிறோம். ‘மெசியாவின் வருகைக்காக விழிப்போடு காத்திருப்போம்’, ‘நம் உள்ளங்களைப் பண்படுத்துவோம்’ என்று கடந்த இரு வாரங்களாய் திரு வருகைக்கால ஞாயிறு சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டோம். இன்று மகிழ்ச்சி என்பது என்ன? எவ்வாறு மகிழ்கிறோம்? எப்படி மகிழ்வைப் பகிர்ந்து கொள்கிறோம்? போன்ற கேள்விகளுக்கு விடைகள் தேடுவோம்.
‘மகிழ்ச்சி என்பது எது?’ எனக் கேட்டால், ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கூறுவர். மகிழ்ச்சிக்கான வரையறை என்பது, ஒவ்வொரு மனிதனின் தேவையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது.
மகிழ்ச்சி, மனிதராகப் பிறந்த அனைவருக்கும் பொதுவான ஓர் உணர்வு. மகிழ்ச்சியை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான் இருக்கிறது. மகிழ்ச்சியைப் பெறும் நோக்கத்துடன் செய்யும் எல்லாச் செயல்களும் மகிழ்ச்சியைத் தந்துவிடாது. பிறருக்குத் தீமை நேரிடக் கூடாது என்ற விழிப்புடன் செய்யும் செயல்களே மகிழ்ச்சியை அளிக்கும். ஒரு மனிதனின் மகிழ்ச்சி என்பது அவரை மட்டுமல்ல, அவரைச் சுற்றி உள்ளவர்களின் மனநிலையையும் மாற்றி, வாழ்க்கையை இனிமையாக்கும்.
‘மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பவர் இறைவனே.’ அவரே மகிழ்ச்சியைத் தருகிறார். “கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியானவர்கள். உண்மையான மகிழ்ச்சி என்பது நாம் இயேசுவோடு கொண்டுள்ள உறவில் கிடைக்கிறது” என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
எருசலேம்
மக்கள் யாவே தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி வாழவில்லை; பிற தெய்வங்களை நாடினர்; சிலை வழிபாடு செய்து மகிழ்ந்தனர் (செப் 1:4); இறுமாப்பு உடையவர்களாக மாறினர்; தங்கள் இதயங்களில் ஆண்டவரைப் புறக்கணித்தனர்; ஆண்டவர் பலமுறை இஸ்ரயேல் மக்களை எச்சரித்தும் அவர்கள் ஆண்டவருடைய குரலினைக் கேட்கவில்லை. ஆண்டவர் எந்த அளவுக்கு அவர்களைத் தண்டித்தாரோ, அந்த அளவுக்கு அவர்கள் அதிகமாகப் பாவங்கள் செய்ய ஆவல் கொண்டனர். கடவுளின் கனிந்த அன்பைப் புறக்கணித்துப் பாவச் சேற்றில் மூழ்கியதால், எருசலேம் மக்கள் அந்நிய நாடுகளுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். பிற சமய மக்களைப்போல் பாவிகளாகி விட்டதால் கடவுளால் தண்டிக்கப்பட்டனர். எருசலேம் மக்கள் பாவங்கள் செய்தாலும் ஆண்டவர் அவர்களைக் கைவிடவில்லை. கடவுள் அவர்கள் நடுவில்தான்
இருந்தார் (செப் 3:15). தங்களின் பாவ நிலையை உணர்ந்து, ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை வைத்த ‘இஸ்ரயேலின் எஞ்சியோரை’
தம்முடன் மகிழ்ந்து பாட அழைக்கிறார் ஆண்டவர். இதுவே இன்றைய முதல் வாசகத்தின் பின்னணியாக அமைந்துள்ளது.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், மகிழ்ச்சி நிறைவாழ்வுக்கான வழியைப் பவுல் காட்டுகிறார். பவுல் உரோமைச் சிறையில் பல்வேறு துன்பங்களை அடைந்து வந்தபொழுது, “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்” (பிலி
4:4) என்று ஆண்டவர் இயேசுவின் உறவில் பிலிப்பியர் நிலைத்து நிற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.
ஒருவரால் எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ந்திருக்க முடியும்; ஏனெனில், மகிழ்ச்சி என்பது ஒருவர் வாழும் சூழலிலிருந்து வருவதைக் காட்டிலும், அது அவரது மனநிலையிலிருந்து உருவாகிறது என்ற உயர்ந்த பாடத்தை அவர் நமக்குச் சொல்லித் தருகிறார். கனிந்த உள்ளம், கவலை கொள்ளாமை, நன்றியுடன்கூடிய இறைவேண்டல் முதலானவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்கிறார். “இயேசுவைச் சந்திக்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அவர் தரும் மகிழ்ச்சி எந்நாளும் குடிகொண்டிருக்கும்” என்கிறார்
திருத்தந்தை.
இன்றைய
நற்செய்திப் பகுதியில், “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” (லூக்
3:4) என்ற திருமுழுக்கு யோவானின் அழைப்பைக் கேட்ட கூட்டத்தினர் அவரிடம் “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” (3:10) என்று கேட்பதாக நற்செய்தி தொடங்குகிறது. மக்கள் கூட்டத்தினர், வரிதண்டுவோர், படைவீரர் ஆகிய மூன்று நிலையினரும் யோவானிடம் முன்வைக்கும் கேள்விகளுக்கு அவரவர் வாழ்க்கை நிலைக்கேற்ப யோவான் பதில் அளிக்கிறார்.
முதலாவதாக,
யோவான் மக்களுக்குக் கூறிய பதிலில், ‘இரண்டு அங்கிகளை உடையவர்களும்’, அளவுக்கு
மிகுதியாய் ‘உணவு வைத்திருப்பவர்களும்’ பகிர்ந்துகொள்ளுங்கள்
(லூக் 3:11) என்கிறார். காரணம், பகிராத்தன்மையாலே யூதேயாவின் எளிய மக்கள் வறுமையில் வாடினர். செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகிக் கொண்டே போனார்கள். எனவே, சமூகத்தில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் போராடும் ஏழை மக்களோடு பகிர்ந்து வாழ்வதே இறைவனைச் சந்திப்பதற்கான முதல் வழி எனவும், பகிரும்போதுதான் இறைவனின் ஆசிரைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் யோவான் கற்றுத் தருகிறார். “நம் தேவைக்கு அதிகமாகச் சேமித்து வைக்கும் உணவு ஏழைகள் வாயிலிருந்து பிடுங்கப்பட்டது; அவை அவர்கள் இரத்தத்திலிருந்து உறிஞ்சப்பட்டது” எனக்
கூறுகிறார் புனித யோவான் கிறிஸ்சோஸ்தம்.
இரண்டாவதாக,
யோவான் வரி தண்டுவோருக்குக் கூறிய அறிவுரையில், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” (3:12) என்கிறார்.
பாலஸ்தீனத்தில் மக்களை அழுத்தும் பெரும் சுமையாக இருந்தது வரி. மக்கள் வாழ வழி இல்லாதபோதும் கோவிலுக்கும் அரசுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு ஏழைகள் தள்ளப்பட்டனர். மேலும், வரிதண்டுவோருக்குச் செலுத்தவேண்டிய அதிகப்படியான இலஞ்சம், வரி செலுத்த இயலாத மக்களிடம் அரசு பிடுங்கிக்கொண்ட நிலங்களால் அடிமைகளாகவும் அகதிகளாகவும் மாறிய ஏழை மக்களின் அவல நிலையின் பின்னணியில் யோவானின் பதில் அமைகிறது.
மூன்றாவதாக,
படைவீரர் கேட்ட கேள்விக்கு, “யார் மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள்” (3:13) என்கிறார்
யோவான். உரோமைப் பேரரசில் வாழ்ந்த யூத மக்கள் பலர் தங்கள் விடுதலைக்காக அரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது, அவர்கள்மீது பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். இந்நிலையில்தான் யோவான் இந்த அழைப்பைப் படைவீரருக்கு விடுக்கிறார். சுருங்கக்கூறின், ஒருவர் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில் அ) பகிர்ந்துகொள், ஆ)
பணம் பறிக்காதே, இ) பகையை வளர்க்காதே
- இவையே யோவான் வழங்கும் போதனைகளாகும்.
ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் திருமுழுக்கு யோவான் கூறிய இந்த அறிவுரைகளைத் தழுவி, ஒரு நபர் அல்லது ஒரு நாடு மகிழ்ச்சியாக வாழ்வதற்குச் சில பட்டியலை வரையறுத்துள்ளது ஐ.நா. சபை.
மகிழ்ச்சியாக வாழ்வது ‘மனித உரிமைகளில் ஒன்று’ எனக் கூறும் ஐ.நா. சபை,
நீடித்த நிலையான மகிழ்ச்சி என்பது ‘சமூகத்தில் நம் உறவுகளிலிருந்தும் ஈடுபாட்டிலிருந்தும் பிறக்கிறது’ என
வலியுறுத்திச் சொல்கிறது. சமூகப் பாதுகாப்பு, வருமானம், நலவாழ்வு, சுதந்திரம், தாராள மனப்பான்மை, ஊழல் இல்லாமை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மகிழ்ச்சிப் பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா எந்த இடத்தில் வருகிறது என அறிவதற்கு நமக்கு
ஆர்வம் எழலாம். 136 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 126-வது இடத்தில் உள்ளது. அதாவது உலகிலேயே மிகக் குறைவான மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.
ஒவ்வொரு
நாட்டிலிருந்தும் ஒன்று முதல் மூவாயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கேள்விகளில் ஒன்று, ‘கடந்த ஒரு மாதத்தில் ஏதாவது தொண்டு நிறுவனத்திற்கு உதவி செய்தீர்களா?’ என்பதுதான். வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கும் ஒருவரே மற்றவர்களுக்கு உதவவும், தானம் செய்யவும் முன்வருவார். “உண்மையான மகிழ்ச்சி, நாம் வைத்திருக்கும் பொருள்களில் அல்ல; மாறாக, அவற்றைக் கொடுப்பதில்தான் பிறக்கிறது” என்கிறார்
திருத்தந்தை. உவகைப் பொங்க கொடுப்பவர்கள் தாங்களும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கிறார்கள். கடவுள் தம்மை முழுவதுமாக இம்மனுக்குலத்திற்குக் கொடுத்தார். இந்தக் கொடுத்தலில்தான் அவர் மகிழ்ச்சியும் அடைந்தார். கிறிஸ்துமஸ்கூட இதுதானே! கடவுள் தம்மையே நமக்காகக் கொடுத்தார்.
“மண்ணுலகின் நலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானவை. அதாவது, தமது உடைமைகள் தமக்கு மட்டுமன்றி, பிறருக்கும் பயன்படுவதற்காகவே உள்ளன எனக் கொள்ளவேண்டும்” என
எடுத்துரைக்கின்றன வத்திக்கான் சங்க ஏடுகள் (இன்றைய உலகில் திருச்சபை, எண் 69).
அன்பானவர்களே!
வாழ்வின் அடிப்படை உண்மைகள் மிக மிக எளிமையானவை. அவற்றைப் பெரிய தத்துவங்களில் தேட வேண்டாம். பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல வேண்டாம். நாம் பாலர் பள்ளியில் படித்த பாடங்களையே நினைவூட்டுகிறேன். “யாரையும் ஏமாற்றாமல் விளையாடு; எவரையும் அடிக்காதே; பிறர் பொருள்மீது ஆசைப்படாதே; அடுத்தவரைக் காயப்படுத்தாதே; இருப்பதை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்து கொடு; உணவை வீணாக்காதே; தவறு செய்தால் மன்னிப்புக் கேள்; உயிர்களைக் கொல்லாதே.” இவைதானே நாம் பாலர் பள்ளியில் படித்த பாடங்கள்!
கடவுள்
ஒரு பச்சிளம் குழந்தையாய் நம் மடியில் வந்து அமர விரும்புகிறார். எளிய வடிவில் நம் மத்தியில் வாழும் இறைவனைச் சந்திக்கத் தயாராவோம். அன்பான வார்த்தை, அமைதி நிறைந்த ஆறுதல், எளிய உடனிருப்பு, பரிவின் பார்வை, கனிந்த பகிர்வு, கரைகாணாக் கருணை... இவையே நம்மை மகிழ்விக்கும்; அயலாரையும் மகிழ்விக்கும்.
பள்ளங்களைப் பண்படுத்தும் பாலைநிலக் குரலாய்!
நம்
உள்ளங்களில் பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காக நம்மையே தயார் செய்யும் காலம் திருவருகைக் காலம். திருவருகைக்கால முதல் ஞாயிறன்று ‘ஆண்டவரின் வருகைக்காய் விழிப்புடன் காத்திருப்போம்’ என்னும்
மையச் சிந்தனையில் சிந்தித்தோம். இரண்டாம் ஞாயிறு நம் உள்ளக் குடிலில் பிறக்கவிருக்கும் மெசியாவின் வருகைக்காக நம் உள்ளங்களின் பள்ளங்களைப் பண்படுத்த நாம் அழைக்கப்படுகின்றோம்.
கிறிஸ்து
பிறப்புப் பெருவிழாவை நாம் கொண்டாடத் தொடங்குவதற்கு முன்னதாகவே வர்த்தக உலகம் அதற்கான தயாரிப்பை முன்னெடுக்கத் தொடங்கிவிடுகிறது. இவ்விழாவை நாம் எவ்விதம் கொண்டாட வேண்டும் என்பதையே இந்த வர்த்தக உலகம்தான் தீர்மானிக்கின்றது. இவை பல எண்ணங்களை நம்மீது
திணிக்க முயன்று, அதில் வெற்றியும் பெறுகின்றது. வர்த்தக உலகம் வைத்திருக்கும் எண்ணங்களுக்குப் பின்னால் சுயநலம் மட்டுமே ஒளிந்திருப்பதை எளிதில் உணரலாம். கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு, பொங்கல் என்று வரிசையாக வரும் திருவிழாக்களுக்கு வர்த்தக உலகமும், விளம்பர உலகமும் வகுத்துள்ள கண்ணிகளில் நாமும் விழுந்துவிடுகிறோம்.
ஒவ்வொரு
விழாவுக்கும் வர்த்தக உலகமும், விளம்பர உலகமும் கண்ணும் கருத்துமாக ஏற்பாடுகள் செய்கின்றன. பட்டாசு முதல் பட்டாடை வரை புதிய புதிய அணுகுமுறைகளைக் கையாள்கின்றன. விளம்பர உலகம் தேவையற்ற பொருள்களையெல்லாம் கவர்ச்சியுடன் விளம்பரம் செய்து நம்மை அவற்றிற்கு அடிமையாக்குகின்றது. தேவைகளைப் பெருக்குவதால் மன அமைதியை இழக்கிறோமே
தவிர, அவற்றால் நிம்மதியை அடைய முடியவில்லை என்பதுதான் உண்மை. வியாபாரிகளும், விளம்பரதாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் நேரத்தில் விழாக்களைக் கொண்டாடும் நாம் ஒரு சிறிய பங்கை நமது திருநாள்களுக்குத் தயாரிக்க ஆர்வம் காட்டினால் உண்மையிலேயே நாம் கொண்டாடும் விழாக்கள் மிகுந்த பொருளுள்ளதாக அமையும்.
இன்றைய
ஞாயிறு நம்மை மெசியாவின் வருகைக்காய் தயார் செய்ய அழைப்பதோடு மட்டுமல்லாது, நம் உள்ளங்களின் பள்ளங்களைப் பண்படுத்தவும் அழைக்கின்றது. இன்றைய நாளில் திருமுழுக்கு யோவானின் போதனைகளைப் பின்பற்றி வாழ அவரையே ஓர் எடுத்துக்காட்டாகத் தருகிறது நம் திரு அவை.
திருமுழுக்கு
யோவான் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்; ‘தனக்குப் பின்வருபவரின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவராய்’ (யோவா
1:27) தாழ்மையின் நிலையை ஏற்றவர்; மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர்; பொதுவாக இருக்க வேண்டிய எருசலேம் கோவிலின் இடம் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், உயர்குடியினர், ஆண்கள், பெண்கள், சிறார், பிற இனத்தவர் என வரையறுக்கப்பட்ட சூழலில், அதை
எதிர்த்து, பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தவர் (லூக் 3:2); யூதத் தலைவர்கள் பகட்டான ஆடை அணிந்து, மறை நூல் வாசகப் பட்டைகளை அகலமாக்கி, குஞ்சங்களைப் பெரிதாக்கியபோது (மத் 23:5) அவற்றை எதிர்த்து, ஒட்டக முடியிலான ஆடை அணிந்து, தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தவர் (மாற் 1:6); கோவிலின் குருக்கள் பலியினால் பாவ மன்னிப்புப் பெற மக்களை வலியுறுத்தியபோது, மனம்மாற மக்களை அழைத்து நீரினால் திருமுழுக்கு அளித்தவர் (1:8); பாலைநிலக் குரலாய் ஏரோதின் அநீதச் செயலை எதிர்த்தவர்; தான் கொலை செய்யப்படப்போவதைப் பற்றித் துளியளவேனும் கவலைகொள்ளாது, கடவுளின் குரலாய் முழங்கியவர்; அரச மாளிகையைக் கண்டித்து இறைவாக்கு உரைத்தவர்; இறையாட்சி மதிப்பீடுகளை அஞ்சா நெஞ்சுடன் போதித்தவர். இவ்வாறு பாலைநிலக் குரலாய்ப் புதிய சமுதாய உருவாக்கத்திற்கான அழைப்பைக் கொடுத்ததினால், “மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிட பெரியவர் எவரும் தோன்றியதில்லை” (மத்
11:11) என இயேசுவால் வியந்து பாராட்டப் பெற்றவர்.
கடவுளின்
வாக்கைப் பெற்று இறைவார்த்தைக்குச் சாட்சியாக வாழ்ந்த திருமுழுக்கு யோவான், இன்றைய நற்செய்தியில் மக்களை மெசியாவின் வருகைக்கான தயாரிப்பாக இரண்டு அழைப்புகளைக் கொடுக்கிறார்.
1) “பாவமன்னிப்புப் பெற
மனம்மாறித் திருழுழுக்குப் பெறுங்கள்”
(3:3); 2) “ஆண்டவருக்காக
வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” (3:4).
ஏறத்தாழ
400 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவாக்கினர்கள் முழங்கிய நற்செய்தி முழக்கத்தையே யோவான் பின்பற்றிப் போதிக்கிறார். அவர்களைப் போன்று வரவிருக்கும் தீர்ப்புப் பற்றியும் அறிவிக்கிறார்; எசாயா 40:3-5 வார்த்தைகளை எடுத்துக்கூறி, ஆண்டவரின் வருகைக்காகவும், அவரது தீர்ப்புக்காகவும் மக்களைத் தயார் செய்கிறார்; ஆண்டவரது தீர்ப்பு நீதியின் அடித்தளத்திலே கட்டப்பட்டது என்பதால் அநீதியும் நேர்மையும் மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த வேண்டும் என்று கற்பிக்கிறார்; அநீத வாழ்விலிருந்து மனம் திரும்பினால்தான் இறைவனின் கோபத்திலிருந்து விடுதலை அடைய முடியும் என்று எடுத்துக்கூறுகிறார் (3:7).
இதற்கு அடிப்படையாக ‘மனமாற்றம் தேவை’ எனப் போதிக்கிறார்.
‘மனமாற்றம்’
என்பது நமது வாழ்வில் மாபெரும் செயல்களை நிகழ்த்திக் காட்டும். கடவுளை நோக்கித் திரும்பி வருதலே மனமாற்றம். இஸ்ரயேல் மக்களின் மனமாற்றம் அவர்களைப் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தது. இத்தகைய வியத்தகு செயல்களை இன்றைய பதிலுரைப்பாடல் மற்றும் முதல் வாசகத்தில் காண்கிறோம்.
இன்றைய
பதிலுரைப்பாடலில் “ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்” (திபா
126) என்று அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர். இது ஒருவகை சீயோன் மலைப் பாடல். இதை ஒரு குழு புலம்பல் பாடலாகவும் காணலாம். பாபிலோனிய நாடு கடத்தலின் பின்புலத்தில் பாடப்பட்ட இத்திருப்பாடலில் ஆசிரியர் தன் குழு அனுபவித்த ஒட்டுமொத்த வலியைப் பதிவு செய்கின்றார். தங்களுடைய நகரம், ஆலயம் என எல்லாம் அழிந்து
தாங்கள் வேற்று நாட்டுக்கு அடிமைகளாக நடத்திச் சென்றதை ஓர் இறப்பு அனுபவமாக, உறக்க அனுபவமாக நினைக்கின்ற ஆசிரியர், ஆண்டவர் தங்களை மீண்டும் தங்களின் சொந்த நாட்டிற்கு அழைத்து வந்ததை ஒரு கனவு போல நினைத்துப் பார்க்கிறார்.
இந்த
நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். பாரூக் 5:1-9) வாசிக்கின்றோம். பாரூக்கு எரேமியா இறைவாக்கினரின் செயலராக இருந்தவர் (எரே 32:36:43:45). பாபிலோனியாவுக்கு இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நாடு கடத்தப்பட்டபோது இவரும் உடன் சென்றவர். பாரூக்கு அடிமைத்தனத்தின் கோரத்தை நேருக்கு நேர் கண்டவர். அவர் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறார். அந்த அழைப்பில், இஸ்ரயேலின் அழிவிற்கு மக்களின் பாவம்தான் காரணம் எனவும், அனைவருக்கும் பாவத்தை விட்டு விலக வேண்டிய தேவையுள்ளதையும் காட்டுகிறார்.
துன்பமும்
வெறுமையும் நம்பிக்கையின்மையும் நிறைந்த எருசலேமிற்கு, பாரூக்கினுடைய ஐந்தாம் அதிகாரம் நம்பிக்கை ஒளியை வீசுகின்றது. அகதியாகப் போன எருசலேம் மகள், அரசியாக முடியுடனும் ஆடம்பர உடைகளுடனும் வருவாள் என்பது எத்துணை அழகு! மகிழ்ச்சி, மாட்சி, ஒளி, நீதி, அமைதி, இரக்கம் இவற்றைத் தருபவர் மனிதரல்லர், கடவுள் என்கிறார் பாரூக்கு. மனமாற்றத்தின் வழியாகவே இஸ்ரயேல் மக்கள் கடவுளின் மாபெரும் செயல்களைக் கண்டுணர முடிந்தது.
இஸ்ரயேல்
மக்கள் நெபுகத்னேசர் மன்னன் காலத்தில் அடிமைப்படுத்தப்பட்டு பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சூழ்நிலையில், கடவுள் இறைவாக்கினர்களை அனுப்பி நம்பிக்கை தரும் விடுதலைச் செய்தியை வழங்குகின்றார். கடவுள் தம் மக்களை விடுவித்து, அவர்களது சொந்த வீடான எருசலேமில் புதுவாழ்வு வாழ அழைத்துச் செல்வார் என்ற எசாயாவின் இறைவாக்கைக் கோடிட்டு, ‘இயேசுவே மெசியா, அவராலே அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். புதுவாழ்வைப் பெறவேண்டுமெனில், நமது உள்ளத்தின் பள்ளங்களைச் சரிசெய்ய வேண்டும்’
என அழைப்பு விடுக்கிறார்.
குறுக்கு
வழியில் நடந்து, குறுகலான சிந்தனைக்கு ஆட்பட்டு, சுயநலங்களான பல்வேறு விருப்பங்களுக்கு உடன்பட்டு, மனித நலன்களை மேம்படுத்தாமல் சுயநலத்தையே மேம்படுத்துகிற கோணலான பாதையை, உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், இரக்கம் போன்ற இறைவனுடைய மதிப்பீடுகளால் சரிசெய்யப்பட வேண்டும். கடவுளின் பாதை நேரானதாகவும் சமமானதாகவும் தடைகள் இல்லாததாகவும் இருக்கவேண்டும் என்பதே கடவுளை உள்ளங்களில் வரவேற்பதற்கான முன்தயாரிப்புகள்.
எனவே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் வேண்டுவதுபோல, அனைத்தையும் உய்த்துணரும் பண்பில் வளர, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்பட இறைவனை நாடுவோம்.
“அக்கறையற்ற நிலையால், இவ்வுலகில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகியுள்ளன” என்பதை
எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அயலவரின் தேவைகளை உணரும்போதுதான், நாம் உருவாக்கியுள்ள பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும்” என்று
கூறுகிறார் (மூவேளைச் செப உரை, 9.12.2018). ஆண்டவர் தம் மக்களைக் கனிவுடன் கண்காணித்து வழிநடத்துவது போல, சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை, எளியவர்களைப் பாதுகாக்கின்றவர்களாக, பராமரிக்கின்றவர்களாக, அவர்களது குரலாக நாம் ஒலிக்க வேண்டும். அன்பற்ற, அக்கறையற்ற வாழ்க்கையால், நம் உள்ளங்களில் ஓட்டைகள் உருவாகியிருந்தால், அவற்றை நிரப்புவதற்கு இந்தத் திருவருகைக்காலம் நல்லதொரு வாய்ப்பாக அமையட்டும்.
இறைவன்
நம்மைத் தேடி வருகிற புனிதக் காலத்தில் நம் வாழ்வைச் சீர்படுத்தி, பாதைகளைச் செம்மையாக்கி, இறைவனைச் சந்திக்கப் புறப்படுவோம். அன்பு, நீதி, தாழ்ச்சி, நம்பிக்கை இவற்றைக் கொண்டு நமது மனத்தைப் பண்படுத்துவோம். உண்மையை எடுத்துரைப்பதில் சிறிதும் தயங்காமல் வாழ்ந்த புனித திருமுழுக்கு யோவானைப் போல வாழ்வோம். இறை அருளோடு இணைந்து வாழ்ந்ததினால் ‘அருள் நிறைந்தவர்’ என
இறைவனால் வாழ்த்துப் பெற்ற அமல உற்பவ அன்னையின் துணை வேண்டி, நம் உள்ளங்களின் பள்ளங்களை இறைவனே பண்படுத்த சிறப்பாக மன்றாடுவோம்.
மீண்டும் வருவார்... விழிப்புடன் காத்திருப்போம்!
இன்று நாம் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். இந்த ஞாயிறு புதிய திருவழிபாட்டு ஆண்டைத் துவக்கி வைக்கிறது. மூன்றாண்டு சுழற்சியில் நிகழும் திருவழிபாட்டு ஆண்டு அட்டவணையின் மூன்றாவது ஆண்டை ஆரம்பிக்கிறோம்.
திருவருகைக்
காலம் அருளின் காலம்! கடவுள் நமக்குச் செய்துள்ள, செய்கின்ற, செய்யவுள்ள வாக்குறுதிகளை நமக்கு நினைவுபடுத்தும் காலம்! நம்பிக்கையை நம் உள்ளங்களில் விதைக்கும் காலம். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நம்மிடையே குடிகொள்ளும் நோக்கத்தில் வானிலிருந்து இறங்கிவந்த இறைவனின் நெருக்கத்தை அதிகமதிகமாக உணரும் காலம்”
(ஞாயிறு மறையுரை, 30.11.2020).
திருவருகைக்
காலம் என்பது இறைமகன் மனிதரிடையே முதல் முறை வந்ததை நினைவுகூரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் தயாரிப்புக் காலம். அவ்வாறே காலத்தின் நிறைவில் நிகழும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்திருக்க உள்ளங்கள் தூண்டப்படும் காலமும் இதுவே. இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது.
‘வழிபாட்டு ஆண்டு மற்றும் நாள்காட்டியின் பொது ஒழுங்கு முறைகள்’ எண்: 39 திருவருகைக் காலத்தின் இரு நோக்கங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது. முதலாவதாக, கிறிஸ்துவின் முதல் வருகையின் நினைவாக ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நம்மைத் தயாரிக்கும் காலமாகவும், இரண்டாவதாக, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நம்பிக்கையோடு எதிர்நோக்கி நம் வாழ்வை மாற்றி அமைத்துக்கொள்ள அருளப்படும் காலமாகவும் திருவருகைக் காலம் அமைகிறது எனக் கூறுகிறது. இவ்வகையில், கிறிஸ்துவின் முதல் வருகையை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களைப் போல், அவரின் இரண்டாம் வருகையைப் புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம் எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும் இருந்து எதிர்நோக்க வேண்டும் என்பதே இக்காலத்தின் மையக்கருத்து.
இன்றைய
வழிபாட்டு வாசகங்கள் இயேசுவின் இரண்டாம் வருகையை மையப்படுத்தியதாக அமைகின்றது. நம் இதயத்துக்கு நெருக்கமானவர்களின் வருகைக்காகக் காத்திருப்பது போன்ற நெகிழ்ச்சியான அனுபவம் ஏதுமில்லை. இயேசு மீண்டும் வருவார் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் மனங்களில் வேரூன்றியுள்ள ஆழமான இறைநம்பிக்கை. நாமும் அதே நம்பிக்கையோடு ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.
“காத்திருப்பது என்பது விழித்திருப்பது; கதவு திறந்து வைத்திருப்பது. காத்திருக்கும் விதையே மரமாகிறது; காத்திருக்கும் காய்தான் கனியாகிறது. வாழ்க்கை மரணத்திற்காகக் காத்திருக்கிறது; மரணம் வாழ்க்கைக்காகக் காத்திருக்கிறது. நாம் எல்லாரும் யாருக்கோ, எதற்கோ காத்திருக்கிறோம். வாழ்க்கை என்பது காத்திருத்தல்தான். எது தேவையோ அதற்காகக் காத்திருக்கிறோம். எதை நாம் உயர்வாக மதிக்கிறோமா, அதற்காகக் காத்திருக்கிறோம். காத்திருத்தல், எதற்காகக் காத்திருக்கிறோமோ அதன் மதிப்பைக் கூட்டுகிறது. காத்திருத்தல் ஒரு தவம். அதற்கு வரம் கிடைக்காமல் போகாது!” - கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகள் இவை.
இன்றைய
முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் கிறிஸ்துவின் வருகைக்காக மக்கள் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்ததை நமக்கு எடுத்தியம்புகின்றன. பாபிலோனியர்கள் எருசலேமைக் கைப்பற்றி 18 மாதங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, கடைசியில் தீயிலிட்டு அழித்ததை எரேமியா இறைவாக்கினர் தன் கண்களால் கண்டார். எருசலேம் நகரமே முற்றிலுமாக அழிந்தது. இந்த அழிவைக் கண்ட மக்கள் அவநம்பிக்கைக் கொண்டனர். இப்படிப்பட்ட அவநம்பிக்கை நிறைந்த சூழலில் இறைவாக்கினர் எரேமியா மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். எசாயா இறைவாக்கினர் வழியாக இறைவன் வழங்கிய வாக்குறுதியை அவர் கட்டாயம் நிறைவேற்றுவார் என்கிறார் (எசா 11:1). ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொண்ட மக்கள் ஒருபோதும் விரக்தி அடைய மாட்டார்கள். ஏனெனில், ஆண்டவர் துன்பங்களிலிருந்து விடுவிப்பார் என்னும் உறுதியான நம்பிக்கையை அவர் அவர்களுக்குக் கொடுக்கிறார்.
தொடக்கக்கால
கிறித்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்ததை இன்றைய இரண்டாம் வாசகம் பதிவு செய்கிறது. ஆண்டவர் விரைவில் மீண்டும் வருவார் என்றும், அப்போது அவரை நம்புவோர் இறைமாட்சியில் பங்கு பெறுவர் என்றும் பவுல் தெசலோனிக்காவில் போதித்திருந்தார். ஆனால், பலர் இயேசுவின் வருகைக்கு முன்னரே இறந்துவிட்ட நிலையில், இறந்தோரின் நிலை என்ன என்ற கேள்வி அவர்களை வருத்தியது. இதன் தொடர்ச்சியாக, தெசலோனிக்கக் கிறித்தவர்களுக்குக் கிறிஸ்துவின் வருகை குறித்த இரண்டு ஐயப்பாடுகள் எழுந்தன. ஒன்று, கிறிஸ்துவின் வருகைக்குமுன் இறந்தவர்கள் கிறிஸ்து வரும்போது நிலைவாழ்வில் பங்கு பெறுவார்களா? மற்றொன்று, எப்போது கிறிஸ்து வருவார்? இவ்விரு ஐயப்பாடுகளுக்கும் பவுல் விடையளிக்கிறார். கிறிஸ்துவின் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து, அமைதியாக உழைக்கப் பணிக்கிறார். கிறிஸ்து திரும்ப வருதல் எந்த நாளில் நிகழும் எனத் தெரியாததால், அவரது வருகைக்காக எப்போதும் தயாராயிருக்குமாறு வேண்டுகிறார். பவுல், கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ தெசலோனிக்கருக்கு அழைப்பு விடுக்கிறார். ஒவ்வொருவரும் தூயவர்களாக வாழ்வதே கடவுளுடைய திருவுளம் என்று அழுத்தமாகப் பேசுகிறார்.
இன்றைய
நற்செய்தி வாசகத்திலும் இயேசு, மானிட மகனின் வருகையைப் பற்றித் தம் சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார். 2000 ஆண்டுகளாகக் கிறித்தவ வரலாற்றில் ‘இயேசு எப்போது வருவார்?’ என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கின்றது. இயேசு மீண்டும் வருவார் என்பது திண்ணமான உண்மை. ஆனால், அவர் எப்போது வருவார் என்பது தந்தையைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. இயேசு ‘எனக்கும் தெரியாது’
என்றே சொல்கிறார். ஆனால், நம் நடுவில் சில கிறித்தவ சபைகள் இயேசுவின் வருகை அண்மையில் உள்ளது எனவும், இயேசுவின் இரண்டாம் வருகையின் நாளையும் நேரத்தையும் துல்லியமாகத் தாங்கள் அறிந்தது போலவும் போதிப்பதைக் கேட்க முடிகிறது. இயேசு தமது இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசும்போது, பல அடையாளங்களைத் தருகிறாரே
தவிர, அது எந்த ஆண்டு, எந்த மாதம், நாள், நேரம் என்று எந்த அட்டவணையையும் அவர் தரவில்லை. எனவே, இரண்டாம் வருகைக்கு நாள் குறிக்கும் சபைகளின், போதகர்களின் எண்ணங்கள் நற்செய்திக்குப் புறம்பானவை என்பதை எளிய மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மானிட
மகனின் மாட்சிமிகு வருகைக்கு முன் நிகழும் சில அடையாளங்களாக, ‘போலி இறைவாக்கினர்கள் தோன்றி ஏமாற்றுவார்கள்’ (லூக்
21:8), ‘போர்கள் உருவாகும்’
(21:9), ‘நிலநடுக்கங்களும்
பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்’
(21:11), ‘அரசு அதிகாரிகளால் துன்பங்கள் எழும்’
(21:12-19), ‘எருசலேம்
படைகளால் சூழப்பட்டு அழிவிற்குள்ளாகும்’ (21:20-24), ‘உலகிலே
மாற்றங்கள் ஏற்படும்’
(21:25-26) என்றெல்லாம்
இயேசு குறிப்பிடுகிறார். அப்போது மானிட மகன் வல்லமையோடும் மாட்சியோடும் மேகங்கள்மீது வருவார் என்கிறார் (21:27-28).
இவ்வாறு,
உலக முடிவைப்பற்றி இயேசு குறிப்பிடும்போது, அந்நேரத்தில் இயேசு பதுங்கி ஒளியச் சொல்லவில்லை; தப்பித்து, தலைதெறிக்க ஓடச் சொல்லவில்லை; மாறாக, ‘தலைநிமிர்ந்து நில்லுங்கள்’ என்று
கூறுகிறார். நாம் சந்திக்கப்போவது அழிவல்ல; மீட்பு என்பதால், நம்மைத் தலைநிமிர்ந்து நிற்கச் சொல்கிறார். அழிவு என்றால் அலறி அடித்து ஓடத்தான் வேண்டும். மீட்பு என்பதால் கடவுளைச் சந்திக்க நாம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
இயேசுவின்
வருகையை அச்சமின்றி எதிர்கொள்ள இரண்டு அழைப்புகளை இயேசு நமக்குத் தருகிறார்:
1. எச்சரிக்கையாய்
இருங்கள், 2. விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். எச்சரிக்கையாய் இருப்பது குறித்து இயேசு சில அறிவுரைகளைத் தெளிவாகத் தருகிறார். “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து கண்ணியைப்போல் உங்களைச் சிக்கவைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்”
என்று எச்சரிக்கிறார் (21:34). அதாவது, இவ்வுலகின் கவர்ச்சிகள், சோதனைகளுக்கு மயங்கி, நமது வாழ்வின் ஒப்பற்ற செல்வமாம் இயேசுவிடமிருந்து விலகிச் சென்றுவிடாதவாறு கவனமாக இருக்கவேண்டும் என்பது முதல் அறிவுரை.
இரண்டாவது,
இயேசுவின் இரண்டாம் வருகையும், நமது இறப்பும் எப்பொழுது என்று உறுதியாகத் தெரியாததால், “எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” (21:36) என்னும்
அழைப்பை இயேசு தருகிறார். விழிப்பாயிருந்து நாம் நமது அன்றாடக் கடமைகளை அக்கறையோடும் அன்போடும் பொறுப்போடும் செய்ய வேண்டும். இறையாட்சியின் வருகைக்காய் காத்திருக்கும் நாம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலைகளில் நேரத்தைத் தொலைத்துவிடாமல், தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல், கடவுள் விரும்பும் வழியில் நடக்க விழிப்பாயிருந்து மன்றாடுவோம். ‘ஆண்டவராம் இயேசுவே வாரும்’ என்ற சிறிய இறைவேண்டலை மீண்டும், மீண்டும், நமக்குள் எடுத்துரைப்போம்.
நம்
மீட்புக்காக வரவிருக்கும் இறைவனை நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் எதிர்பார்த்துக் காத்திருப்போம். அன்றாட வாழ்வின் சவால்களும், துயர்களும் நம்மை மூழ்கடித்துவிடாமல் இருக்க விழிப்பாயிருந்து வேண்டுவோம். நம்பிக்கையற்ற செய்திகளை மட்டுமே காதிலும் கருத்திலும் வாங்கி, நம் உள்ளங்களைத் தொலைத்து விடாமல், நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை அதிகமாகப் பரப்பிட முயல்வோம். உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கி, ஆண்டவரின் வருகைக்காய் விழிப்புடன் காத்திருப்போம். இந்தக் காத்திருப்பு நமக்கானது! நம் வாழ்வுக்கானது! மீட்புக்கானது!
உண்மையின் அரசரே வருக! நிலையான ஆட்சி தருக!
இன்று
நாம் கிறிஸ்து அரசர் திருநாளைக் கொண்டாடுகிறோம். திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறும் இன்றுதான். கிறிஸ்து அரசர் திருநாளை, திருத்தந்தை 11 -ஆம் பயஸ் அவர்கள் 11-12-1925 அன்று ‘Quas Primas’ என்ற
சுற்றுமடல் வழியாக நிறுவினார். அது அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை கொண்டாட வேண்டுமெனப் பணித்தார். 1960-ஆம் ஆண்டு வழிபாட்டு அட்டவணையைத் திருத்தம் செய்த திருத்தந்தை 23-ஆம் ஜான் இவ்விழாவை முதன்மை விழாவாகத் தரம் உயர்த்தினார். 1969-ஆம் ஆண்டு திருத்தந்தை 6-ஆம் பால் வெளியிட்ட ‘Mottu Proprio’ என்ற
மடலின் வழியாக இந்த விழாவின் பெயரை ‘கிறிஸ்து அனைத்துலகின் அரசர்’ என மாற்றினார். மேலும்,
வழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறு கொண்டாட சில மாற்றங்களை உருவாக்கினார்.
2020 -ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் கிறிஸ்து அரசர் திருநாள் திருப்பலியை வத்திக்கானில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பலியின் இறுதியில், ‘2021 -ஆம் ஆண்டு கிறிஸ்து அரசர் திருநாளோடு உலக இளைஞர் நாளும் இணைத்துச் சிறப்பிக்கப்படும்’ என்று
அறிவித்தார். திருத்தந்தை புனித 2-ஆம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் புனித வாரத்தின் முதல் நாளான குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டு வந்த உலக இளைஞர் நாள், தற்போது கிறிஸ்து அரசர் திருநாளன்று சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. “ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ ஓடுவர்; களைப்படையார்” (காண்.
எசா 40:31) என்பது இந்நாளில் நாம் கொண்டாடும் உலக இளைஞர் நாளின் மையப்பொருளாகும்.
திருத்தந்தை
11 -ஆம் பயஸ் இவ்விழாவை முதன்முதலில் ஏற்படுத்த முக்கியக் காரணம், 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட உலகப் போர்கள், கிறித்தவத் தன்மை விலகி சர்வாதிகார மனநிலைகள் எழுந்தன. பல இடங்களில் கிறித்தவ
நம்பிக்கையாளர்கள் அடக்குமுறையைச் சந்தித்தனர். முதலாம் உலகப் போர் முடிந்தாலும், உலகத்தில் பகைமை, பழிவாங்கும் வெறி அடங்கவில்லை. திரு அவையின் அதிகாரம் கேள்விக்குள்ளானது; கிறித்தவம் கலக்காத ஆட்சி அமைக்கப் பல ஐரோப்பியத் தலைவர்கள்
முனைந்தனர்; கடவுள் அந்நியப்பட்டுப் போனார். இந்த நெருக்கடி நிலையில், திருத்தந்தை 11 -ஆம் பயஸ், இந்தக் கொடுங்கோல் மனம்கொண்ட தலைவர்கள்/அரசர்களுக்கு மாற்று அடையாளமாக, கிறிஸ்துவை அரசராக அறிவித்தார்.
இயேசுவை
அரசராக எண்ணும் போது, அவர்தம் வாழ்நாளில் தம்மை ஓர் அரசராகக் காட்டிக்கொண்டது இல்லை. பதவியை அவர் வலிந்து கட்டிக்கொண்டதுமில்லை. அரசராகக் கொண்டாடப்பட வேண்டியவர் பிலாத்து முன் தீர்ப்புக்காக ஒரு விசாரணைக் கைதியாக நிற்கிறார். அவர் எப்படி ஓர் அரசராக இருக்க முடியும்? அவர் அரசர் என்றால் அவரது அரசு எத்தகையது? யார் அவருடைய ஆட்சிக்குரிய மக்கள்? அரண்மனையே அடைக்கலம் என வாழ்ந்த அரசர்கள்
மத்தியில் இயேசுவின் ஆட்சி வேறுபட்டிருக்கக் காரணம் என்ன? போன்ற வினாக்கள் நம்முன் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் இந்நாள் விடையளிக்கிறது.
இன்றைய
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் தானியேல் கடவுளின் நிலையான, அழிக்க முடியாத அரசு வானத்தின் மேகங்கள்மீது இறங்கி வருவதையும், ஏனைய கொடுங்கோல் அரசுகளை வெல்வதையும் காண்கிறார். அவர் கண்ட காட்சியில் குறிப்பிடும் தொன்மை வாய்ந்தவர் கடவுளே! அவரே எல்லா அரசுகளுக்கும் அதிகாரம் அளிப்பவர்; தீர்ப்பும் வழங்குபவர். அவர் அருகில் இருப்பவர் இயேசு கிறிஸ்து என விளக்கம் பெறுகிறோம்.
‘கிறிஸ்து’
என்ற கிரேக்கச் சொல்லுக்கும், ‘மெசியா’ என்ற எபிரேயச் சொல்லுக்கும் ‘திருப்பொழிவு செய்யப்பட்டவர்’ என்பது
பொருள். இஸ்ரயேல் வரலாற்றில் அரசர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
எனவே, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர்கள் திருஎண்ணெயால் திருப்பொழிவு செய்யப்படுவது வழக்கம். இங்கே கடவுளே திருப்பொழிவு செய்த புதிய அரசர் இயேசு. அவர் நிறுவிய ஆட்சியே இறையாட்சி. இயேசு நிறுவிய ஆட்சியில் இராணுவம் கிடையாது. எனவே, போர் தொடுப்பது இல்லை. அவர் நிறுவிய ஆட்சிக்கு நிலப்பரப்பு கிடையாது. எனவே, நிலத்தைக் காக்கக் கோட்டைக் கொத்தளங்கள் தேவையில்லை. ‘வரி’ என்ற பெயரில் மக்களைச் சுரண்ட வேண்டிய அவசியமும் இல்லை. யாரையும் அடக்கவோ, ஒடுக்கவோ தேவை இல்லை. மாறாக, மதிப்பீடுகளின் அடிப்படையில் இயேசு கட்டியமைத்த ஆட்சியே இறையாட்சி. அங்கு அதிகாரம் அல்ல; சேவையே முக்கியம். சொத்துகளைக் குவிப்பது அல்ல; தன்னை இழப்பதே மையம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, சமத்துவம், சகோதரத்துவமே தமது கொள்கை என எங்கும் முழங்கினார்.
‘உண்மையை எடுத்துரைப்பதே தமது பணி’ என்று சொல்லி, பணிவிடை பெற வந்த அரசர்கள் மத்தியில் தம்மைப் பணிவிடை புரியும் ஒரு தொண்டனாக அடையாளப்படுத்தி ஏழ்மையின் அரசாட்சியை நிறுவினார்.
இயேசு
நிறுவிய ஆட்சிக்கு இறைவன் ஒருவரே தேவை. அவர் ஒருவரே போதும் என்று சொல்லக் கூடிய மக்களின் மனங்களில்தான் இந்த ஆட்சி அமையும். இயேசுவின் ஆட்சியில் ‘யார் பெரியவர்?’ என்ற கேள்விக்கு இடமில்லை. எல்லாருக்குமே இயேசுவின் ஆட்சியில், அவரது அரியணையில் பங்கு உண்டு. எல்லாரும் சமமே. இங்கே அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை. ‘எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஓர் இனம், எல்லாரும் மன்னர்கள்’
என்று பாரதி கண்ட சமத்துவச் சமூகமே இயேசுவின் இறையாட்சிச் சமூகம்.
இன்றைய
நற்செய்தியில் இயேசுவை ஓர் அரசராகப் புரிந்துகொள்கிறோம். இயேசுவுக்கு எதிரான முக்கியக் குற்றச்சாட்டு அவர் தம்மையே ஓர் அரசராக ஆக்கிக்கொள்கிறார் என்பதுதான். இந்தக் குற்றச்சாட்டு உரோமைப் பேரரசுக்கு எதிரான பெருங்குற்றம், துரோகம் ஆகும். இதுவே அவரது கொலைக்குக் காரணமாக அவரது சிலுவையின்மேல் எழுதி வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. எனவே, இயேசுவின்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உறுதிசெய்யும் நோக்கில்தான் சீசரின் கைப்பொம்மையாக இருக்கும் பிலாத்து இயேசுவிடம், “நீ யூதரின் அரசனா?”
என வினவுகிறார் (லூக் 18:33). பிலாத்து நினைக்கும் முறையிலான அரசர் அல்லர் இயேசு. அவரிடம் ஆயுதங்களும் இல்லை, ஆள்பலமும் இல்லை. அவர் உரோமை அரசுக்குப் போட்டி அரசரும் அல்லர். அவரது ஆட்சி வேறுபட்டது; அவரது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல (18:36). அது இறை உலகு சார்ந்தது. அது அன்பு, நீதி, அமைதி, மகிழ்ச்சி போன்ற இறையாட்சியின் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. அது வாழ்வின் அரசு. இத்தகைய அரசுக்கு இயேசுவே தலைவர். இப்பொருளில் இயேசு ஓர் அரசரே.
“நீ யூதரின் அரசனா?”
என்ற பிலாத்துவின் கேள்விக்கு இயேசு நேரடியாகப் பதில் கொடுக்கவில்லை. தாம் ஓர் அரசர் என்றால் பிலாத்து அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளமாட்டார்; யூதரின் குற்றச்சாட்டு உண்மையென நினைத்துக்கொள்வார். தாம் ஓர் அரசர் இல்லை என்றால், அது தம் அரச நிலையை மறுப்பது போலாகிவிடும். எனவே, எந்த வித நேரடிப் பதிலையும் தராமல், “அரசன் என்று நீர் சொல்லுகிறீர்” (18:37) எனப்
பதிலளித்து, தம் அரசின் தன்மையை விளக்குகிறார் இயேசு. அதாவது உண்மையை நிலைநாட்டி, மக்களுக்கு வாழ்வு வழங்கும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதே தம் பணி என அடித்துக் கூறுகிறார்.
தன்
மனசாட்சியும், மனைவியும் கூறும் உண்மைகளையும் காண மறுத்து, எப்போது தன் பதவி போய்விடுமோ என்ற பயத்தில், அரியணையில் தன்னையே இறுக்கமாக அறைந்துகொண்ட பிலாத்துவைப்போல ஆயிரமாயிரம் தலைவர்களை நாம் அறிவோம். கொள்கை என்ற பெயரில், மதம் என்ற பெயரில், இவ்வுலகில் இவர்கள் விதைப்பதெல்லாம் வெறுப்பும், வேதனையும்தான். சுயநலமற்ற அரசர்களையோ, தலைவர்களையோ காண்பது மிக அரிது.
நிறைவாக,
கிறிஸ்துவை அரசர் என்று கொண்டாடும் நாம், நம்மை அடிமைகளாக்கி, நம்மைச் சுரண்டுவதில் சுகம் கண்டு, பதவி-புகழே நிரந்தரம் என வாழும் தலைவர்களையும்,
தலைவிகளையும் இனங்கண்டு, அவர்களைத் துதிபாடும் மனநிலை நம்மிடமிருந்து களைய உறுதியேற்போம். உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் இணைந்து உழைக்க முன்வருவோம். இவ்வுலகப் புகழையும், மகிமையையும் அதிகாரத்தையும் விரும்பாதது தம் அரசு என்று இயேசு வெளிப்படையாகக் காட்டுவதைக் காணும் நாம், பிறருக்கு ஆற்றும் பணியில் மகிழ்ச்சி காண்போம்.
அமைதி,
சுதந்திரம் மற்றும் வாழ்வின் முழுமையை விரும்பும் நாம் ஒவ்வொருவரும் நம் இதய அரியணையில் இயேசுவை அரசராக அமர வைத்து, உண்மைக்குச் சான்று பகர்ந்து, நீதிக்குக் குரல் கொடுக்கும் கிறிஸ்து அரசரின் ஆட்சிக்குரிய மக்களாக வாழ விண்ணக அரசியாம் அன்னை மரியா நமக்கு உதவி புரியட்டும். சிறப்பாக, இன்று தங்கள் உலக நாளைக் கொண்டாடும் இளைஞர்கள் கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை ஏற்று, எதிர்காலத்தில் நல்ல தலைவர்களாக இவ்வுலகைக் கட்டியெழுப்ப வேண்டும் என அனைத்துலக அரசராம்
கிறிஸ்துவிடம் மன்றாடுவோம்.