இன்று நாம் தூய்மைமிகு மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இப்பெருவிழா தந்தை, மகன், தூய ஆவியார் எனும் மூவொரு கடவுளின் தெய்வீக அன்பையும் ஒன்றிப்பையும் உறவையும் உணர்த்துகிறது.
நாம்
ஒவ்வொருவரும் குழந்தையாக இருந்தபோது அம்மா, அப்பா என்ற உறவுகளுக்கு அடுத்தபடியாக அறிமுகமானவர்
மூவொரு கடவுளே! குழந்தையாக நாம் பிறந்ததும், நம்மைக் காண வந்த ஒவ்வொருவரும் நமது நெற்றியில்
சிலுவை அடையாளம் வரைந்து, நமக்கு ஆசியளித்தனர். ‘தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால்,
ஆமென்’ என்ற இந்த எளிய செபமும், அதனுடன் இணைந்து
கூறும் ‘அர்ச்சிஸ்ட்ட சிலுவை அடையாளத்தினாலே...’ எனும் அடையாளச் செயலுமே நமது பெற்றோர்
நமக்குக் கற்றுக்கொடுத்த முதல் செபம். நாம் தட்டுத் தடுமாறி நடைபயின்றபோது திருமுழுக்கின்
வழியாகவே மூவொரு கடவுளின் பெயரைச் சொல்லி அருள்பணியாளர் நம்மைத் திரு அவைக்கு வரவேற்றார்.
நமது வாழ்வின் ஊற்றும் உச்சமுமாக இருக்கின்ற திருப்பலியில் அருள்பணியாளர், ‘தந்தை,
மகன், தூய ஆவியாரின் பெயராலே!’ என்று தொடங்கி, அதே மூவொரு கடவுள் பெயரால் வாழ்த்துக்
கூறி இறுதியில், அதே பெயராலே இறைமக்களுக்கு ஆசி வழங்கித் திருப்பலிக் கொண்டாட்டத்தை
நிறைவு செய்கின்றார். இவ்வாறு நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் மூவொரு கடவுளின் உறவிலிருந்து
நாம் பிரிக்கப்பட முடியாதவர்களாகவே இருக்கின்றோம்.
தந்தை,
மகன், தூய ஆவியார் ஆகிய மூவரும் ஆள்தன்மையில் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே கடவுளாகச்
செயல்படுகிறார்கள். படைத்தல், மீட்டல், காத்தல் ஆகிய முப்பெரும் செயல்கள் இவர்களிடத்தில்
காணப்படுகின்றன. இவ்வுலகை மீட்கும் செயலில் மூவொரு கடவுள் ஈடுபட்டதைப் புனித இஞ்ஞாசியார்
தனது ஆன்மிகப் பயிற்சி நூலின் தொடக்கத்திலேயே ‘மூவொரு கடவுள் இவ்வுலகை மீட்க விரும்பும்போது,
தம்மிலிருந்து தமது மகனாக இயேசுவை அனுப்புகிறார். தமது இரத்தத்தால் இவ்வுலகை மீட்ட
இயேசுவைத் தொடர்ந்து தந்தையிடமிருந்து புறப்பட்டு வருபவர்தான் துணையாளராம் தூய ஆவியார்’ என்றே குறிப்பிடுகின்றார்.
‘மூவொரு
கடவுள்’ என்பது இன்றுவரை ஒரு மறைபொருளாகவே இருக்கின்றது.
ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார். மூவருமே ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை,
ஒரே இறையியல்பு இருப்பதால் ஒன்றிப்பு நிலவுகிறது. இந்த மறையுண்மையை நமது அறிவுகொண்டு
புரிந்துகொள்ள முடியாது. புனித அகுஸ்தினாரும்கூட இந்த மறைபொருளைப் புரிந்துகொள்ள முடியாமல்
தடுமாறினார். பல நேரங்களில் இந்த மூவொரு கடவுள் கருத்தியலைப் படிக்காதவர்களைக் காட்டிலும்,
படித்தவர்களே புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். காரணம், படித்தவர்களிடம் இருப்பது
‘அறிவுத் தேடல்’; படிக்காதவர்களிடம் இருப்பது ‘நம்பிக்கைத்
தேடல்.’ “கடவுள் தம்மை நூல்கள் வழியாக அவ்வளவாக அறிவிப்பதில்லை; ஆனால், வாழ்வின் சான்று
வழியாக அறிவிக்கிறார்” (மே 26, 2024) என்று திருத்தந்தை பிரான்சிஸ்
கூறியதையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.
நம்மை
மீட்பதற்காகவே மூன்று ஆள்களும் ஒரே கடவுளாய் இணைந்திருக்கிறார்கள் என்று இறைநம்பிக்கையில்
ஏற்றுக்கொள்வதுதான் நமது ஞானத்தின் வெளிப்பாடாக அமைகிறது. இதைத்தான் இன்றைய முதல் வாசகம்
நமக்கு எடுத்துரைக்கிறது. ஞானத்தின் தொன்மை குறித்து விவரிக்கப்படும் இவ்வாசகத்தில்,
ஞானத்திற்கு ஆளுமை கொடுத்து விவரிக்கிறார் ஆசிரியர். இறைவனே ஞானமாக வெளிப்படுகிறார்.
ஞானமானது கடவுளின் மகனின் சாயல். ஞானம் கிறிஸ்துவிற்கு ஒப்பிடப்படுகிறது. ஞானம் கடவுளின்
சிந்தனையிலிருந்து வருகிறபடியால் அதனை மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளான மகனாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஞானம் தொல் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது. அதாவது உலகம் தோன்றுவதற்கு முன்னரே
ஞானம் இருக்கிறது (8:23). மலைகள், குன்றுகள், சமவெளிகள், மணல்கள், வானம், கடல், மேகம்,
நீர்த்திரள், நீர் ஊற்றுகள் என அனைத்தையும்விட மிகத் தொன்மையானது ஞானம் (8:25-29).
உண்மைக் கட வுளை உணர்த்த விரும்பும் ஆசிரியர், ‘ஞானம் மனிதர்களோடு இருப்பதில் மகிழ்ச்சி
கொள்கிறது’ என்கிறார். அவரே நம் வாழ்வில் என்றும்
பிரசன்னமாக இருக்கிறார்; அவர் நமது இதயத்தின் ஆழத்திலும் ஆன்மாவிலும் வாழ்கிறார்; அவர்
நம்மைத் தனியாக விட்டுவிடமாட்டார்; அவரை நமது வாழ்விலிருந்து யாரும் எடுத்துவிட முடியாது
எனும் அழகான சில உண்மைகளை நமக்கு கற்றுத்தருகிறார்.
தாமாக
இருப்பவர், தனித்திருப்பவர், கண்டிப்புள்ளவர், காணமுடியாத தூரத்தில் உள்ளவர், ‘கடவுள்’ எனப் பெயரிட்டு அழைக்க முடியாதவர் என்றெல்லாம் இஸ்ரயேல்
மக்களுக்கு அறிமுகமான கடவுளை தந்தை, மகன், தூய ஆவியார் என்ற கூட்டுக்குடும்பமாக நமக்கு
அறிமுகம் செய்தவர் இயேசு. அவர் கடவுளை ‘தந்தையாக’ உணர்ந்தார்;
தந்தை-மகன் உறவை அவர் ஒவ்வொரு நாளும் அனுபவித்தார்; ‘தந்தை’ என்று கடவுளை உளமார அழைத்து, தம் பாசப் பிணைப்பை வெளிப்படுத்தினார்.
ஆகவே, மூவொரு கடவுளே நம் முதல் உறவினர்; நம் உடன் பயணிக்கும் நண்பர் என்பதை இயேசு நமக்கு
உணர்த்தியுள்ளார். இவ்விதம் நமக்கு அறிமுகமான கடவுள் நமக்குக் கற்றுத்தரும் பாடம்
‘கடவுள் - உறவின் ஊற்று’ என்பதே.
இந்த
உலகம் என்பது ஓர் அழகான குடும்பம். உலகம் என்ற குடும்பம் உறுதியாக அமைய வேண்டும் என்றால்,
நமது ஒவ்வொரு குடும்பத்திலும் பாசமும் பரிவும் மன்னிக்கும் தன்மையும் மேலோங்கியிருக்க
வேண்டும். மூவொரு கடவுள் தம்மிலே அன்புற்று வாழ்வது போன்று, நாமும் நம் குடும்பங்களில்
அன்புடன் வாழ வேண்டும். உறவில் வாழ்வது ஒன்றே இயேசு அறிமுகம் செய்துவைத்த மூவொரு கடவுளின்
இலக்கணம். உறவே இறைவனின் உயிர்நாடி! கடவுள் என்னும் அச்சில் உருவாக்கப்பட்ட நாம், நம்முடைய
உறவுகளில் ‘நாமும் - கடவுளும் - பிறரும்’ இணைந்த குடும்பமாக வாழ முயற்சிக்கவேண்டும்.
“கடவுள் ஒருவரே, அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என ஒரு குடும்பமாக உறவில் ஒன்றிணைந்திருக்கிறார்” (மே 26, 2024) எனும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
கூற்று உண்மையானதே. நம் இறைவன் உறவுகளின் ஊற்றாக இருப்பதால், நாமும் உறவுகளுக்கு முதன்மையான
இடம் தரவேண்டும் என்பதே இப்பெருவிழா நமக்குக் கற்றுத்தரும் அழகான பாடம்.
நாம்
வாழும் இன்றைய உலகில், நம் உறவுகள் மிக அதிகமாகவே பழுதடைந்திருப்பதை மறுக்க இயலாது.
முகநூல், வாட்ஸ் ஆப், ஆண்ட்ராய்டு, ஏ.ஐ. காலம் வந்ததும் மனிதரின் உறவுகளும், வாட்ஸ்
ஆப் மயமாக மாறிவிட்டன. முன்கடந்து போவோரின் முகம் தெரியவில்லை. பின்நின்று சிரிப்போரின்
எண்ணம் புரியவில்லை. தலைதாழ்ந்தே எங்கும் பயணம். மனைவியும், கணவரும் வீட்டுக்குள்ளே
கைப்பேசியில் உரையாடல். உண்மையான, ஆழமான, எதார்த்தமான குடும்ப உறவுகளும், நட்பும் மெல்ல
மெல்ல தூரமாகச் செல்வதை உணர முடிகின்றது. பெற்றோர்மீது, அதுவும் வயதான பெற்றோர்மீது,
சுற்றத்தார்மீது நாம் கொண்டுள்ள உறவை மீண்டும் அலசிப்பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை
மீண்டும் சரிசெய்ய இந்த நாள் நம்மை அழைக்கிறது.
எனவே,
நம் குடும்ப உறவுகளுக்கு மிகச்சிறந்த மாதிரி மூவொரு கடவுளின் உறவு. “எல்லாரும் ஒன்றாய்
இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும்
ஒன்றாய் இருப்பார்களாக!” என்றே இயேசு இறைத்தந்தையிடம் வேண்டுதல் செய்கின்றார் (யோவா
17:21). “ஆவியானவர் தமது சொந்த அதிகாரத்தால் பேசுவதில்லை; ஆனால், அவர் தாம் கேட்பதையே
பேசுகிறார். வரப்போகிறவற்றை அவர் உங்களுக்கு அறிவிப்பார்” என
இயேசு அவர் பற்றி விளக்குகிறார் (16:13). எல்லாவற்றிற்கும் தொடக்கமும், எல்லாவற்றையும்
கொண்டிருப்பவருமான இறைத்தந்தை தமக்கென எதையும் கொண்டிராமல், எல்லாவற்றையும் தம் மகனிடம்
கொடுக்கிறார். ஆகவேதான், “தந்தையுடையவை யாவும் என்னுடையவையே” (யோவா 16:15) என்று இயேசுவால் கூறமுடிந்தது. தூய ஆவியாரும்
இயேசுவோடு மிக நெருக்கமாக இருந்து அவரை வழிநடத்தியதை இயேசுவின் வாழ்வு முழுவதிலும்
காண இயலும்.
ஆகவே,
மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் எப்படி வாழ்கிறோம்? நாம் பேசும்போது
நம்மைப்பற்றியும், நாம் ஆற்றும் செயல்களைப்பற்றியும் மட்டுமே பேசுகிறோம். நாம் முற்றிலும்
தூய ஆவியானவரின் செயலிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறோம்? நம்மிடம் இருப்பனவற்றை
அடிப்படை வசதிகளின்றி இருப்பவர்களோடு பகிர்ந்துகொள்ள இந்த விழா நம்மை அழைக்கிறது. மூவொரு
கடவுள் மற்றவருக்காக வாழ்கின்ற கடவுள். அவர் நம்மையும் மற்றவருக்காக வாழுமாறு தூண்டுகிறார்.
நாம் ஒருவர் மற்றவரின்றி ஒருபோதும் இருக்க முடியாது என்பதையும் அவர் நமக்குக் கற்பிக்கின்றார்.
ஆகவே,
நாம் தீவுகள் அல்ல; இவ்வுலகில் மற்றவரின் தேவைகளுக்குத் திறந்த மனதாய் இருந்து, அவர்களுக்கு
உதவிடவும் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக மூவொரு கடவுளைப்போல உறவுடன் வாழவும் வேண்டிய
வரத்தை மூவொரு கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும் என்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
1992-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில் நிகழ்ந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக அளவில் தங்கப்பதக்கம் பெற்றிருந்த பிரித்தானிய வீரர் டெரெக் ரெட்மண்ட் பங்கெடுத்தார். தன் ஓட்டத்தைத் துவக்கிய சில விநாடிகளிலே அவரது வலதுகால் தசைநாரில் உருவான பிரச்சினையால் அவர் கீழே விழுந்தார். ஒருசில விநாடிகளில் மீண்டும் எழுந்து, வலது காலை நொண்டியபடியே ஓட்டத்தைத் தொடர்ந்தார். அவ்வேளையில், பார்வையாளர்கள் பகுதியிலிருந்து டெரெக்கின் தந்தை ஜிம் ரெட்மண்ட் பாதுகாப்பு வீரர்களைத் தாண்டி ஓடிவந்து, மகனைத் தாங்கியபடியே உடன் ஓடினார். “டெரெக், இதை நீ ஓடவேண்டும் என்று கட்டாயமில்லை” என்று தந்தை கூற, மகனோ கண்ணீர் மல்க, “அப்பா நான் இதை எப்படியாவது ஓடி முடிக்க விரும்புகிறேன்” என்று கூறியதும், “சரி வா, நாம் சேர்ந்து ஓடுவோம்” என்று கூறி மகனைத் தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு ஓடினார். இறுதி ஒருசில மீட்டர் தூரத்தை டெரெக் தனியே ஓடி முடிக்கும்படி தந்தையும் அனுப்பி வைத்தார்.
வாழ்வெனும்
ஓட்டத்தில் பிரச்சினைகளால் நாம் வீழும்போது, ‘நம்மைத் தூக்கி நிறுத்த யாரும் இல்லையே!’ என்று அங்கலாய்க்கும்போது, அனைத்திலும் நம்பிக்கையை இழந்து நிர்க்கதியாக நிற்கும்போது அவமதிப்பு, வெறுப்பு, புறக்கணிப்பு என எத்தனையோ வலிகளைத்
தாங்கிக்கொண்டு வாழ்க்கையின் மீதான பற்றினை இழக்கும்போது நமக்குத் தோள்கொடுத்து, நமது ஓட்டத்தைத் தொடரவும், அதனை நிறைவு செய்யவும் தந்தையால் அனுப்பப்பட்ட துணையாளர் ஒருவர் இருக்கிறார். அவரே நம் தூய ஆவியார்!
இயேசுவின்
உயிர்ப்பு, அவரின் விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை எனும் இந்த மூன்று விழாக்களும்தான் நமது கிறித்தவ நம்பிக்கையின் அடித்தளமான பேருண்மைகளை வெளிப்படுத்தும் விழாக்கள். இன்று நாம் உலக விழாக்கள் கொண்டாடும்போது, எதற்காக விழாக்களைக் கொண்டாடுகிறோம் என்பதைவிட, விழாக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதிலேதான் அதிகக் கவனம் செலுத்துகிறோம். ஒரு விழாவுக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த விழா முக்கியத்துவம் பெறுகிறது; வெளி உலகிற்குத் தெரியவருகிறது. இன்று பகட்டும் பிரமிப்பும் பிரம்மாண்டமுமே விழாக்களின் உயிர்நாடி. ஆனால், இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரங்களும் ஆடம்பரமுமின்றி அமைதியாக நிகழ்ந்த விழாக்கள்தான் இயேசுவின் உயிர்ப்பும், அவரின் விண்ணேற்றமும், தூய ஆவியாரின் வருகையும். இந்த விழாக்கள் ஒருநாள் கேளிக்கையாக அல்லது எரிச்சலூட்டும் உலகக் கொண்டாட்டங்களில் வரிசையில் அமையாமல், நமக்குள் மாற்றங்களை உருவாக்கும் விழாக்களாக, வாழ்நாளெல்லாம் நம்முடன் தங்கிப் புதுப்புது படிப்பினைகளைக் கற்றுத்தரும் விழாக்களாக இருக்கின்றன.
இன்று
நாம் கொண்டாடும் தூய ஆவியாரின் பெருவிழா எனும் ‘பெந்தக்கோஸ்து விழா’ சீடர்களின் வாழ்விலே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாள் சீடர்களின் அச்சம் தோற்கடிக்கப்பட்டு வீரம் வெற்றி கொண்ட நாள்; சீடர்களின் மூடிய கதவுகள் நற்செய்தி அறிவிப்புக்கெனத் திறக்கப்பட்ட நாள்; சீடர்களின் சந்தேகங்கள் அன்பு நிரம்பிய நம்பிக்கையினால் விரட்டப்பட்ட நாள். இது அறுவடையின் நாள்! ஆம், நற்செய்தி அறிவிப்பின் வழியாக மக்களைத் திரு அவைக்கு அறுவடை செய்யும் நாள். தமது மீட்புப்பணியை வெற்றிகரமாக முடித்த இயேசு கிறிஸ்து மாட்சிமையுடன் விண்ணோக்கிச் சென்று தாம் ஏற்கெனவே வாக்களித்தபடி இறை ஆற்றலாம் தூய ஆவியாரை நமக்கு அனுப்பிய நாள். இன்றே திரு அவை பிறந்த நாள்!
யோவான்
நற்செய்தியாளர் மட்டுமே தூய ஆவியாரின் வருகை, இயல்பு, பணிகள் பற்றி நான்கு இடங்களில் பேசுகிறார் (14:16-17,
25;15:26; 16:7-15). இன்றைய
நற்செய்திப் பகுதியில், இயேசு விரைவில் தங்களைவிட்டுச் சென்றுவிடுவார் எனப் பெரிதும் கலக்கமுற்ற சீடர்களை இயேசு திக்கற்றவர்களாக விடவில்லை (14:18); மாறாக, இயேசுவின்மீது சீடர்கள் அன்புகொண்டு, அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்குக் கொடையாகத் தூய ஆவியாரை அருளுகிறார் (14:15). அவர் அவர்களோடு தொடர்ந்து இருப்பார், செயல்படுவார், தந்தை அனுப்பும் துணையாளர் மூலம் இயேசு சீடரோடு இருப்பார் (14:16), அவர் அவர்களிடம் திரும்பி வருவார் (14:18), அவரது பணியைத் தொடரச் செய்ய தந்தை மற்றொரு துணையாளரை அனுப்புவார் (14:16), அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் (14:26) என உறுதியளிக்கிறார்.
துணையாளரும்
தூய ஆவியாரும் ஒருவரா? அல்லது இருவேறு நபர்களா? என்னும் கேள்வி நமக்கு எழலாம். அவர்கள் இருவேறு நபர்கள் அல்லர்; மாறாக ‘துணையாளர்’,
‘தூய ஆவியார்’ என்பவை ஒருவரின் இரு பெயர்களே எனத் துணிந்து கூறமுடியும். இருவருமே புதிய ஏற்பாட்டில் ஆள்தன்மை கொண்டவர்களாகக் காட்டப்படுகின்றனர். துணையாளருக்கும் தூய ஆவியாருக்கும் இடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது. துணையாளர் உண்மையை வெளிப்படுத்துபவர் (15:16);
தூய ஆவியாரே உண்மை. இருவருமே சான்று பகர்கின்றனர். துணையாளர் சீடர் வழியாகச் சான்று பகர்கிறார். தூய ஆவி சீடர்கள்மீது இறங்கி வந்து அவர்கள் சான்று பகர ஆற்றல் அளிக்கிறார் (திப 2:1-41). துணையாளரும் தூய ஆவியும் சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றனர்
(14:26; 16:13). எனவே,
தூய ஆவியே துணையாளர். இதனையே யோவான் இவ்வாறு கூறுகின்றார்: “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்”
(15:26).
இயேசு
கூறிய துணையாளராம் தூய ஆவியாரின் செயல்பாடுகள் மேலானவை. அவருடைய பணிகள் பன்முகத்தன்மை கொண்டவை. ‘பராக்கிலீத்தோஸ்’ என்ற
கிரேக்க மூலச்சொல்லின் பொருளான ‘துணையாளர்’
என்ற சொல் நான்கு வகைகளில் பொருள்படுகின்றன. அவை: 1. வாதிடுபவர், 2. பரிந்துபேசுபவர், 3. ஆறுதல் அளிப்பவர், 4. ஊக்கம் ஊட்டுபவர். சீடர்களின் வாழ்விலே செயல்பட்ட துணையாளராம் தூய ஆவியார் எவ்வாறு நமது வாழ்வில் செயலாற்றுகிறார் என்பதைச் சிந்தித்து, இன்றைய நாள் சிந்தனையை நிறைவு செய்யலாம்.
பல்வேறு
தவறான குற்றச்சாட்டுகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்ட சீடர்கள் தங்களது நற்செய்திப் பணியில் தூய ஆவியாரின் துணைகொண்டே பேசினர் (மத் 10:20; திப 6:10). இன்றைய முதல் வாசகத்தில், துணையாளராம் தூய ஆவியார் ‘நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள்’ அடையாளத்தில்
‘ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்து’
(திப 2:1-3) வெவ்வேறு மொழிகளில் பேசுவதற்கான ஆற்றலை வழங்குவதைப் பார்க்கிறோம். எனவே, நாம் நற்செய்திப் பணியின் பொருட்டு துன்ப துயரங்களைச் சந்திக்கும் வேளைகளில், நமது வலுவின்மையால் நம்பிக்கையை இழக்கும் நிலையில் நமக்காகப் பரிந்துபேசுபவராக, வாதிடுபவராக, நமக்குப் பதிலாகப் பேசுபவராகத் தூய ஆவியார் செயல்படுகிறார் (1யோவா 2:1). எனவே, திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவது போல “நாம் எப்போதும் தனியாக இருப்பதில்லை. தூய ஆவியார் எப்போதும் நம்மில் விழித்திருக்கிறார்; நம்மைப் பாதுகாக்கிறார்.”
உதவியளிப்பவரும்
வழிகாட்டுபவரும் உடன் வருபவருமான தூய ஆவியார் ஆறுதலும் மனத்திடமும் தந்து ஊக்கமூட்டுகிறார் (உரோ 12:8; எபி 31:22; திப 13:15). தூய மரிய மேக்தலின் தே பாசி எனும்
புனிதர் குறிப்பிடுவதுபோல, “தூய ஆவியார் உண்மையின் ஆவியார்; புனிதர்களின் வெகுமதி; ஆன்மாக்களின் தேற்றரவாளர்; இருளில் ஒளிரும் சுடரானவர்; ஏழைகளின் செல்வம்.” தூய ஆவியானவரே திரு அவையின் ஆன்மா. அவரே திரு அவையின் உள்ளிருந்து ஊக்குவிப்பவர். திரு அவையின் ஆன்மாவாய் இருக்கும் அவர் ஒவ்வொரு கிறித்தவரின் உள்ளத்திலும் குடிகொள்கிறார். எனவே, நம்முள் உறையும் தூய ஆவியாரின் வழி நடத்துதலை ஒவ்வொரு நாள் வாழ்விலும் உணரும் வரத்தை நாம் கேட்கவேண்டும். திருத்தந்தை
பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நமது இதயங்களைத் திறந்து, தூய ஆவியாரின் செயல்பாடுகளை அனுமதிப்பதன் மூலமே இறைவனின் புதிய கட்டளையை நாம் புரிந்துகொள்ள முடியும்.”
தூய
ஆவியார் நம் வழிகாட்டியாக, துணையாளராகக் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஆகவே, அவருக்குச் செவிமடுத்தல் அவசியம். அருளடையாளங்கள் வழியாகத் தூய ஆவியாரே நமது
உள்ளத்தைத் தூய்மை செய்பவராக, துணை வருபவராக, உறுதிப்படுத்துபவராக, அன்பில் இணைப்பவராக, பணியில் திடப்படுத்துபவராக, நோயில் நற்சுகம் தருபவராக, உணவூட்டித் திடன் அளிப்பவராக நமது வாழ்வில் செயலாற்றுகிறார்.
இன்று
நாம் கொண்டாடும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா நமக்குக் கற்றுத்தரும் முக்கியப் பாடம் இதுதான்... ‘இறைவன் வானிலிருந்து இறங்கி வந்து சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடுபவர் அல்லர்; மாறாக, அவர் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள படைப்பு அனைத்திற்கும் உயிர் வழங்கும் மூச்சாக எப்போதும் நம்முள் உறைந்திருக்கும் (1கொரி 3:16) இறைவன், துணையாளர் என்பது இப்பெருவிழா பறைசாற்றும் பேருண்மை.
அமெரிக்காவைச் சார்ந்த உலகப் புகழ்பெற்ற நற்செய்தியாளர் பில்லி கிரஹாம் அவர்களின் உரைகளைத் தொடர்ந்து கேட்டு வந்த ஓர் இல்லத்தலைவி ஒருநாள் கிரஹாம் அவர்களுக்குக் கடிதம் ஒன்று எழுதினார். அக்கடிதத்தில் “அன்புப் போதகரே, நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் என்னை அழைக்கிறார் என்பதை உணர்கிறேன். ஆனால், எனக்குப் பன்னிரு குழந்தைகள் உள்ளனர். அதுவே, எனக்குத் தடையாக இருக்கிறது” என்று எழுதியிருந்தார். அக்கடிதத்திற்குக் கிரஹாம், “அன்பு அம்மா! நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் விடுக்கும் அழைப்பை நீங்கள் உணர்ந்துள்ளதைக் கேட்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதைவிட எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், உங்கள் நற்செய்திப் போதனைகளைத் தொடங்குவதற்குக் கடவுள் ஏற்கெனவே உங்கள் வீட்டிற்குள் ஒரு சபையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்பதே!” என்று பதில் அனுப்பினார்.
இன்று
நாம் ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்த விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருள் இயேசு தம் சீடர்களுக்கு வழங்கிய இறுதி அன்புக் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குச் சாட்சியாகவும் நீட்சியாகவும் மாறுவதுதான்.
இன்றைய
நாளில் லூக்கா நற்செய்தி ஆண்டவரின் விண்ணேற்றத்தை விவரிக்கிறது. இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்னர் தம் சீடர்களிடம் “பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’
என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும்”
(லூக் 24:47) என்ற கட்டளையை வழங்குகிறார். மத்தேயு நற்செய்தியில் “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள்” (மத்
28:19) என்றும், மாற்கு நற்செய்தியில் “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்
16:15) என்றும் கட்டளை கொடுக்கிறார். இவை அனைத்தும் இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்னர் வழங்கிய இறுதிக் கட்டளைகள். இந்தக் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குச் சாட்சியாக வாழ (திப 1:8) அழைக்கும் இயேசு, அப்பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான தமது இறையுதவியையும், தமது நீங்கா உடனிருப்பு தூய ஆவியார் வழியாகவும் கிடைப்பதாக (லூக் 24:49) உறுதியளிக்கிறார்.
இயேசுவின்
நற்செய்திப் பணி உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்; உலக மக்கள் அனைவரும் நற்செய்தியைப் பெறவேண்டும்; நற்செய்திப்பணி நில வரையறையும் கால வரையறையும் கடந்து ஆற்றப்பட வேண்டும். இதற்காகவே இயேசு சீடர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமது பணியை முடித்துக் கொண்ட இயேசு, இனி சீடர்களின் வழியாக அப்பணி தொடரவேண்டும் என்று விரும்பி அதை ஒரு கட்டளையாகவே அவர்களுக்கு வழங்கினார். இயேசு பணித்தவாறே சீடர்களும் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றினர்.
இன்று,
இயேசுவின் நற்செய்தி அறிவித்தலை யார் அறிவிப்பது? எப்படி அறிவிப்பது? எங்கு அறிவிப்பது?
முதலில்,
நற்செய்திப் பணியை யார் அறிவிப்பது? ‘நற்செய்தியைப் பறைசாற்றுதல்’ என்பது
இயேசுவின் பணி தொடர்வதற்கான அடிப்படைக் கூற்று. நற்செய்தி ஒரு வித்து! நற்செய்தியின் மையம் இயேசு! நற்செய்திப் பணியைத் தொடங்கியவரும் இயேசு! அதைத் தொடர்ந்து வழிநடத்துபவரும் இயேசு! இயேசு எனும் நற்செய்தி உலகில் எத்திசையிலும் ஊன்றப்பட வேண்டும். அனைவரையும் இயேசுவின் சீடராக்க வேண்டும். இதற்காகவே திருத்தூதர்கள் அனுப்பப்பட்டனர். ‘சீடராக்குதல்’, ‘நற்செய்தியைப்
பறைசாற்றுதல்’ என்ற
சொற்களைக் கேட்டதும், இவற்றை ஆற்ற வேண்டியவர்கள் ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் என்ற குறுகலான எண்ணம் எழக்கூடும். ‘போதிப்பவர்களே போதகர்கள்’
என்பது கூற்று! இயேசுவின் இறுதிக் கட்டளைகளைப் பெற்றவர்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரண தொழிலாளிகள். இவர்களும் மக்களுமே முதலில் நற்செய்தியை அறிவித்தவர்கள். எனவே, நற்செய்தி அறிவித்தல் என்பது அருள்பணியாளர்கள், துறவியருக்கான பணி என்பதையும் கடந்து, திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்துகிறது இயேசுவின் விண்ணேற்ற விழா.
இரண்டாவது,
நற்செய்தியை எப்படி அறிவிப்பது? நற்செய்தி அனைத்து மக்களுக்கும் அனைத்துச் சூழல்களிலும் வாழ்வால் அறிவிக்கப்பட வேண்டும். புனித ஜான் மரிய வியான்னி “கிறித்தவர்கள் என்பவர்கள் ஆலயத்தில் கைகளைக் குவித்துக் கடவுளை ஆராதிப்பவர்களாகவும் ஆலயத்தை விட்டுச் செல்கையில் கைகளை அகல விரித்து அன்புப்பணி புரிபவர்களாகவும் உள்ளனர்” என்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ், “கிறித்தவர்கள் தங்கள் வார்த்தைகளைவிட வாழ்வால் கிறிஸ்துவைப் பறைசாற்ற வேண்டும்”
என அடிக்கடிக் கூறுவார். ஆகவே, வார்த்தை வடிவில் பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்தி அறிவிப்புப் பணி, இன்னும் நீடித்த, ஆழமான தாக்கங்களை உருவாக்கும். நம்பிக்கையைத் தருவது, எல்லாத் தீமைகளிலிருந்தும் விலகி இருப்பது, தீமைக்கு நன்மையுடன் பதிலளிப்பது, துயருறும் மக்களுடன் நெருங்கிப் பழகுவது - இவையே நற்செய்தி அறிவிப்பின் வாழ்வியல் கூறுகள். வாழ்வே கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதாக இருந்தால் அதுவே சிறந்த நற்செய்தி அறிவிப்பு. வார்த்தையால் நற்செய்தி அறிவிப்பது என்பது மிக எளிது. ஆனால், வாழ்வால் நற்செய்தியை அறிவிப்பது என்பது கடினமான பணி! நற்செய்தி அறிவிப்பதில் திருத்தூதர் பவுல் கூறுவதுபோல, “இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை” (2கொரி
4:8) என்பதில்தான் நிறைவான மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்கும்.
மூன்றாவது,
நற்செய்திப் பணியை எங்கு அறிவிப்பது? நற்செய்தியைப் பறைசாற்றுவதும், சீடர்களை உருவாக்குவதும் உலகெங்கும் நிகழவேண்டிய ஒரு பணி என்றாலும், அதன் தொடக்கம் அவரவர் வாழும் இடங்களில் தொடங்க வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு உணர்த்துகிறது. லூக்கா நற்செய்தியாளர் தனது நற்செய்தி மற்றும் திருத்தூதர் பணிகள் நூல்களில் இயேசுவின் விண்ணேற்றம் எருசலேம் அருகில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். நற்செய்தியாளர் மத்தேயு மற்றும் மாற்கு இந்நிகழ்வு கலிலேயாவில் நிகழ்ந்ததென்று குறிப்பிடுகின்றனர். இயேசு வாழ்ந்த காலத்தில் யூதேயா, சமாரியா, கலிலேயா ஆகிய மூன்று முக்கியப் பகுதிகள் இருந்தன. இவற்றில் எருசலேம் கோவிலை மையமாகக் கொண்டிருந்த நகரம் யூதேயா. இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளுக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட வேண்டும் என்கிறார். மேலும், இயேசு தம் நற்செய்தியை அறிவிக்க, இறையாட்சியை அறிமுகப்படுத்த சீடர்களைத் தேர்ந்தெடுத்த கலிலேயப் (மத் 4:12-17) பகுதியில் இயேசு சீடர்களை மீண்டும் அழைத்து, அங்கிருந்து அவர்களது நற்செய்திப் பணி தொடங்க வேண்டும் என்று பணிப்பது, முதலில் நற்செய்தியைப் பறைசாற்றுதல் அவரவர் வாழும் சூழல்களில், இல்லங்களில் தொடங்க வேண்டும் என்பதை இயேசு நமக்கு நினைவுறுத்துகிறார்.
இன்று
‘நற்செய்தியைப் பறைசாற்றுதல்’ என்பது
ஒரு கண்காட்சியாக, விளம்பரமாக மாறிப்போனது. இதனால் நன்மைகள் விளைந்ததைவிட, பிரச்சினைகளே அதிகம் விளைந்துள்ளன. 1960-இல் ஜோசப் பெய்லி என்னும் அமெரிக்க எழுத்தாளர், மனிதத் தொடர்பின்றி அறிவிக்கப்படும் நற்செய்தியால் எந்தப் பயனுமில்லை என்பதை ‘The Gospel Blimp’ அதாவது ‘நற்செய்தி வானூர்தி’
என்ற நூலில் ஓர் உவமை வழியாக விளக்கிக் கூறுகிறார். நற்செய்தியைத் தங்கள் ஊரில், பிரம்மாண்டமாக அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கிறித்தவக் குழுவினர், Blimp எனப்படும்
வானூர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதிலிருந்து திருவிவிலிய வாசகங்கள் அடங்கிய சிறு சிறு நூல்களைச் சிவப்பு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து ஊரெங்கும் போட்டனர். வானிலிருந்து விழுந்த அந்தப் பைகள், ஏறத்தாழ குண்டுகள்போல் ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் விழுந்தன. மேலும், அதே வானூர்தியிலிருந்து நற்செய்திப் பாடல்கள் மிகச் சத்தமாக ஊரெங்கும் ஒலிக்கப்பட்டதைக் கேட்டு மக்கள் தங்கள் காதுகளை மூடிக்கொண்டனர். அதேவேளையில், அந்த இரைச்சலால் பெரிதும் கலவரமடைந்த நாய்கள் ஊரெங்கும் ஊளையிட ஆரம்பித்தன. திருவிவிலிய ஆர்வலர்கள் விரும்பியதற்கு முற்றிலும் எதிராக, மக்கள் அந்த ‘விவிலியத் தாக்குதலை’
வெறுத்தனர். நேரடியான மனிதத் தொடர்பு இன்றி, தொடர்புக்கருவிகளை மட்டும் நம்பி பறைசாற்றப்படும் நற்செய்தி மக்களை இறைவனிடமிருந்தும் நற்செய்தியிடமிருந்தும் தூரமாக்கும் என்பதை ஜோசப் பெய்லி இந்த உவமை வழியே கூறுகிறார்.
நிறைவாக,
இயேசுவை மையப்படுத்தாமல், அவரது நற்செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நற்செய்தியைத் தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமைகொண்டு போதிக்கும் போதனையோ அல்லது பயன்படுத்துகின்ற விளம்பர வழிகளோ இச்சமூகத்தில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை உணர்ந்துகொள்வோம். நமது திருத்தந்தை பதினான்காம் லியோ தனது முதல் ‘ஊருக்கும் உலகுக்கும்’ எனும்
உரையில் குறிப்பிட்டதுபோல, “நாம் கிறிஸ்துவின் சீடர்கள்; மனிதகுலம், கடவுளையும் அவரது அன்பையும் அடைய உதவும் பாலமாக நாம் ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து முன்னேறுவதும் உரையாடல், சந்திப்பு வழியாகப் பாலங்களைக் கட்டுவதும் எப்போதும் அமைதியுடன் ஒரே மக்களாக இருக்க ஒருவருக்கொருவர் உதவுவதுமே நற்செய்தி அறிவிப்பு.”
எனவே,
நற்செய்தியைப் பறைசாற்றலும் சீடர்களின் உருவாக்கமும் முதலில் நம் குடும்பங்களிலிருந்து, நம் தினசரி வாழ்க்கையிலிருந்து தொடங்கட்டும். நமது படிப்பினைகளும் பாதைகளும் நமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வுக்குச் சாட்சியாகவும் நீட்சியாகவும் அமையட்டும்.
போர், பதற்றம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல், காற்று-நீர் மாசுபாடு உள்ளிட்ட பல காரணங்களால் உலகமெங்கும் வாழக்கூடிய அனைத்து நாடுகளுமே கொஞ்சம் கொஞ்சமாக அமைதியைத் தொலைத்துள்ளன. எல்லா மனிதர்களுமே எந்த நெருக்கடியுமற்ற ‘அமைதியான வாழ்வு’ அமைய வேண்டும் என்றே விரும்புகின்றனர். நமது தேடல் எப்போதுமே நீதி மற்றும் அமைதியை நோக்கியே இருக்கிறது. குடும்பங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். நம்மைச் சுற்றிய சமூகம் அமைதியாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். நமது நாடு அமைதியாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். ‘உலக அமைதி’ என்பது ஒவ்வொரு மனிதருக்கான உன்னதத் தேவையாகிறது.
இன்று
ஆண்டின் பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு. அடுத்த ஞாயிறு ஆண்டவரின் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். விரைவில் இயேசு தங்களை விட்டுச் சென்றுவிடுவார் என்ற வேதனையில் இருக்கும் சீடருக்கு இயேசு ஆறுதலும் அமைதியும் கொடுத்து ஊக்கப்படுத்துவதே இன்றைய வாசகங்களின் மையச்செய்தியாக அமைகின்றது.
இன்றைய
நற்செய்தியில் இயேசு தம்மீது அன்பு கொள்பவர் செய்யக்கூடிய செயல்களையும் தூய ஆவியாரின் செயல்பாடுகளையும், தம்முடைய அமைதியைப் பற்றியும் தெளிவூட்டுகிறார். முதலில், இயேசுவை அன்பு செய்யக்கூடியவர்கள் செய்யக்கூடிய செயல்கள் என்பவை தந்தை கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதும், அவருடன் கொண்டிருக்கும் ஆழமான உறவும் என்பதாகும். தாம் தொடர்ந்து இவ்வுலகில் இருக்கப்போவதில்லை என்பதை எடுத்துக்கூறி, தமக்குப் பின்வரும் தூய ஆவியார் சீடரோடு தொடர்ந்து இருப்பார்; தம்மைப் போன்று சீடருக்குக் கற்றுக்கொடுப்பார் (யோவா 14:26); நினைவூட்டுவார்; சான்று பகர்வார் (15:26); முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் (16:13) என்கிறார். இவ்வாறு துணையாளர் (14:17) வழியாகத் தாம் சீடரோடு இருந்து செயல்படுவதாக உறுதி கூறுகிறார்.
இயேசு
அமைதியையே அளிக்க வந்தவர். அவர் பிறப்பின்போதே “உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக”
என வானவர் பாடினர். அவர் பலரை நலப்படுத்தியபோது “அமைதியோடு போ” என்றுதான் கூறினார். அவர் உயிர்பெற்று எழுந்து சீடரைச் சந்திக்கும்போதெல்லாம் “உங்களுக்கு அமைதி உண்டாகுக”
என வாழ்த்தினார். தமது பிரிவின் நேரத்திலும் தம் சீடருக்கு ‘அமைதி’ எனும் கொடையை வழங்குகிறார்.
இயேசு
தரும் அமைதி உண்மையானது; நீதியானது. எனவேதான் “நான் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல” என்கிறார். அமைதி இருவகைப்படும்: ஒன்று, உலகம் தரும் அமைதி; மற்றொன்று, இயேசு தரும் அமைதி. உலகம் தரும் அமைதி என்பது போரும் வன்முறையும் இல்லாத ஒரு நிலை என நினைக்கிறோம். இராணுவத்திற்கும்
போர்க்கருவிகளுக்கும்
பல இலட்சம் கோடி செலவிடுவதால் கிடைப்பதே அமைதி என உலக நாடுகள்
தங்கள் செயல்களை நியாயப்படுத்துகின்றன. சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், உலகம் தரும் அமைதி ஆயுதங்களாலும் அடக்குமுறைகளாலும் கட்டமைக்கப்படுகின்றன. இது ஒரு போலியான, மயான அமைதி! ஆனால், இயேசு தரும் அமைதி உண்மையிலிருந்தும் நீதியிலிருந்தும் பிறப்பது. அது அவரது இதயத்திலிருந்து வெளிப்படுவது.
இயேசு
உணர்த்தும் அமைதி என்பது அரசியல் உறவுகளை வலுப்படுத்துதல், பொருளாதார அறம் காத்தல், சமய-இன-மொழி-நாடு
வேறுபாடுகளைக் களைதல், நேர்மையோடு நடத்தல், ஆதிக்கம் செலுத்தாமை, அன்பைப் போதித்தல், உடன்பிறந்த உறவுடன் வாழ்தல், மாண்பைப் போற்றல், எதிர்மறை உணர்வுகளை நீக்குதல் போன்ற குணநலன்களை வளர்த்துக் கொள்ளல். இவையே அமைதிக்கான அரண்கள். இவை அனைத்தும் நம் உள்ளங்களில் பதிந்து நடைமுறையில் வெளிப்படுமானால் உலகில் அமைதி பூக்கும். அன்பு, உண்மை, நீதி, சகோதரத்துவம் உடைய சமூகம் உருவாகும். வேற்றுமை பாராது அருகில் வாழும் சக மனிதர்களை அன்போடும்
உடன்பிறந்த உணர்வோடும் பழகும்போது அங்கே அமைதி மலரும். இச்சிந்தனைக்கு எடுத்துக்காட்டு இன்றைய முதல் வாசகம்.
முதல்
வாசகம் திரு அவையின் முதலாவது பொதுச்சங்கம் ‘எருசலேம் திருச்சங்கம்’ தோன்றிய
வரலாற்றுத் தேவையைப் பற்றியும் அதில் எடுக்கப்பட்ட முடிவைப் பற்றியும் விவரிக்கிறது (திப 15:1-29). தொடக்க காலத் திரு அவையில் முதலில் இணைந்தவர்களும் அனைத்துத் திருத்தூதர்களும் யூத மதத்திலிருந்து வந்தவர்களாகவோ அல்லது யூதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கக்கூடியவர்களாகவோ
இருந்தனர். தொடக்கத் திரு அவையில் கிறித்தவ நம்பிக்கையைத் தழுவிய யூதரல்லாத பிற இனக் கிறித்தவர்களும் திரு அவையில் இணைந்து கொள்கின்றனர். திரு அவை எருசலேமை விட்டு வெளியில் சென்றபோது, முக்கியமாக அந்தியோக்கியாவிற்கும், அத்துடன் பவுலுடைய மறைபரப்புப் பணியினால் சின்ன ஆசியாவிற்கும் பரவத் தொடங்கியபோது திரு அவையில் இணைந்து கொண்ட யூதரல்லாதவர்கள் இவர்கள்.
இந்த
வேளையில் யூதக் கிறித்தவர்களுக்கும், யூதரல்லாத கிறித்தவர்களுக்கும் மோசேயின் சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பல விவாதங்களும் கருத்து
முரண்பாடுகளும் தோன்றின. யூதக் கிறித்தவர்கள் தங்கள் மோசேயின் சட்டத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய விருத்தசேதனத்தை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வாதிடுகின்றனர். பிற இனக்
கிறித்தவர்கள் மோசே சட்டத்தைக் கடைப்பிடிக்காவிடில் ஒழுக்க விழுமியங்கள் பலமற்றுப் போகும்; யூதக் கிறித்தவர்களின் தனித்தன்மை திரு அவையில் குறைகையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு அவர்கள் நலிந்து விடுவர் என அஞ்சினர். ஏனெனில்,
உரோமை அரசு தன் எல்லைக்குள் யூத மதத்தை ஏற்றுக் கொண்டிருந்தது.
இந்தப்
பிரச்சினை எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது, பேதுரு தான் கொர்னேலியு வீட்டில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு யூதச் சட்டங்கள் அனைவருக்கும் பொருந்தாது என விளக்குகிறார் (திப
10:44-47). பவுலும் பர்னபாவும் தங்களது மறைபரப்புப் பணி அனுபவத்தில், ‘இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கையால்தான் மக்கள் மீட்பு பெறுகிறார்களே அன்றி, அவர்களுடைய செயல்களால் அல்ல’ எனப் பேசுகின்றனர் (கலா 3:24-25). இறுதியாக “நாம் சுமக்க இயலாத சுமையை இச்சீடருடைய கழுத்தில் எப்படி ஏற்ற முடியும்?”(திப 15:10) என்று பேதுருவும், “இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் சுமத்தக் கூடாது”
(15:28) என்று யாக்கோபுவும் திருவிவிலியச் சான்றுகளைச் சுட்டிக்காட்டி, ‘கடவுளுக்கு நாம் ஏற்புடையவராக நம் நம்பிக்கை போதுமானது’
என்று இரண்டு குழுக்களுக்கும் பொதுவான ஒரு முடிவை எடுத்தனர். எல்லாரும் அதை ஏற்றுக்கொண்டனர். இயேசு இறப்பதற்கு முன்னதாகத் தம் சீடருக்கு வாக்களித்ததுபோல, தூய ஆவியார் திருத்தூதர்களோடு இருந்து வழிநடத்தியதையும் கற்றுக்கொடுத்ததையும் அமைதியை ஏற்படுத்தியதையும் இன்றைய முதல் வாசகத்தில் காண முடிகிறது.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், எருசலேம் ஆலயம் உரோமையரால் தரைமட்டமாக்கப்பட்ட பின்னணியில் (கிபி 70) யோவான் கண்ட காட்சியை விவரிக்கும்போது, கடவுளும் ஆட்டுக்குட்டியுமான இயேசுவே கோவில் என்றும், கோவில் இல்லாத குறையை இயேசுவே நிரப்புவார் என்றும், உரோமையரின் படையெடுப்பால் உருவான இருளை அகற்றும் ஒளி இயேசுவே என்றும் தம் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைகிறது யோவான் கண்ட காட்சி.
போர்,
வன்முறை, பகைமை, ஆதிக்கம், பேராசை போன்ற குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் மத்தியில், இயேசு தரும் அமைதி என்னென்ன?
அ)
இயேசு தரும் அமைதி என்பது கடவுள்மீது வைத்துள்ள நம்பிக்கையிலிருந்து விளையும் கனி; அதாவது, ஆயிரம் துன்பங்களுக்கு நடுவிலும் இறைவனை மனதார நினைத்து, நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு வாழ்வோரிடம் தங்கும் அமைதி.
ஆ)
இயேசு தரும் அமைதி என்பது எதிர்நோக்கினால் விளையும் அமைதி. அதாவது, மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருப்பதில் கிடைக்கும் அமைதி (தீத் 2:13).
இ)
இயேசு தரும் அமைதி என்பது கடவுளிடமே நம்மையே முழுமையாகச் சரணடைதலில் கிடைக்கும் அமைதி. அன்னை மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்
1:38) என்று கூறியதுபோல!
நிறைவாக,
இயேசு தரும் அமைதி என்பது நல்ல உறவில் பிறக்கும் அமைதி. திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதுபோல, “அனைவரும் உடன்பிறந்த சகோதரர்கள்” என்பதை
உள்ளத்தில் ஏற்று, அனைவரோடும் நல்லுறவை வளர்த்துக்கொள்வதால் மலரும் அமைதி. உயிர்களை நேசிப்பதும், இயற்கையைக் காப்பதும், மனித உரிமைகளை மேம்படுத்தலும், மனித உயிர்களைப் பேணுதலும், ஏழைகளை மதித்தலும், ஏற்றத்தாழ்வுகளைக் களைதலும், சமய சுதந்திரத்தைக் காப்பதும், வன்முறையைத் தவிர்ப்பதுமே இயேசு தரும் அமைதியின் திறவுகோல்கள்!
நியூயார்க் நகரில் கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோரைக் கடுமையான காவலில் வைத்திருக்கும் ‘சிங் சிங்’ சிறை ஒன்று உள்ளது. தற்போது இது ‘ஓசினிங் சிறை’ என்று அழைக்கப்படுகிறது. 1921-ஆம் ஆண்டு லூயிஸ் லோவ்ஸ் என்பவர் அச்சிறையின் கண்காணிப்பாளராக நியமனம் பெற்று அங்குப் பணியேற்கச் சென்றபோது, அவர் மனைவி கேத்தரினிடம் பலரும் கூறிய அறிவுரை ‘எக்காரணம் கொண்டும் அந்தச் சிறைக்குள் செல்லக் கூடாது’ என்பதுதான். ஆனால், கேத்தரினோ தன் கணவர் அங்குச் சென்ற ஒரு மாதத்திற்குள், தன் மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அச்சிறையில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டியைக் காணச்சென்றார். உறவினர்கள் தடுக்க முயன்றபோது அனைவரிடமும் அவர் கூறிய பதில்: “என் கணவரும் நானும் இம்மனிதர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறோம்; பதிலுக்கு அவர்களும் எங்களைப் பாதுகாப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
கைதிகளிடம்
கேத்தரின் தனியே பேச ஆரம்பித்தார். அவர்களில் பார்வைத்திறன் அற்ற ஒருவருக்குப் பிரெய்லி மொழியைக் கற்றுக்கொடுத்தார்; பேசவும் கேட்கவும் முடியாத மற்றொரு கைதிக்குக் சைகை மொழியைக் கற்றுக்கொடுத்து, அவருடன் பல மணி நேரம்
உரையாடிக் கொண்டிருந்தார். கணவன்-மனைவி இருவரும் சிறைக்குப் பொறுப்பேற்று 16 ஆண்டுகள் சென்ற நிலையில், 1937-ஆம் ஆண்டு கேத்தரின் ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். சிறைக்கு வெளியே ஒரு மைல் தூரத்தில் இருந்த கண்காணிப்பாளர் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இச்செய்தியை அறிந்த கைதிகள் அனைவரும் சிறையின் நுழைவாயிலுக்கருகே சோகத்தோடு நின்றுகொண்டிருந்தனர். இறுகிப்போன அவர்களுக்குள் இத்தகையதொரு மாற்றத்தைக் கண்ட உதவிக் கண்காணிப்பாளர் கதவுகளைத் திறந்தார். அனைவரும் கேத்தரினுக்கு இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு ஒருவர் தவறாமல் அனைவரும் மீண்டும் சிறைக்குத் திரும்பினர்.
உயிர்ப்பு
அனுபவம் வார்த்தையால் அறிவிப்பதில் நிறைவு பெறுவதில்லை; மாறாக, ‘இயேசுவைப்போல ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவதில்’ (யோவா
13:34) அடங்கியிருக்கிறது
என்பதைப் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு நமக்கு நினைவூட்டுகிறது. அன்பே எல்லா அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் ஊற்று; பாசத்தை வெளிப்படுத்தி உறவை வளர்க்கும் தூய சக்தி அன்பு! அன்பே ஆரோக்கியத்தின் அடையாளம்; அன்பே வலிமையானது; கல்லும் கரையும் கனிந்த அன்பால்! அன்பு பரந்துபட்ட ஒரு சொல்லாடல். அன்பைப் பற்றிப் பேசாத நாவு இல்லை; எழுதப்படாத ஏடுகள் இல்லை.
இயேசு
தம் சீடரை விட்டுப் பிரிந்து தந்தையிடம் செல்லும் முன்பு அவர் ஆற்றிய பிரியா விடையில் ஒரு பகுதியை இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். தம் பிரியா விடையின் தொடக்கத்திலேயே “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (13:34) என்னும்
அன்புக் கட்டளையை ஒரு புதிய கட்டளையாகக் கொடுக்கிறார். யோவான் நற்செய்தியில் இயேசு கொடுக்கும் வெளிப்படையான ஒரே கட்டளை இதுதான். இயேசு தம் சீடர்களை ‘பிள்ளைகளே’
என அழைத்துத் தம் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தி இந்த அன்பு நிறைவில் தம் அன்புக் கட்டளையைக் கொடுக்கிறார். ‘ஒருவர் காட்டிக்கொடுப்பார்’ (13:21-30), ‘மற்றொருவர்
மறுதலிப்பார்’ (13:36-38) என்று
இயேசுவுக்குத் தெரிந்த போதிலும், உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் இறுதிவரைக்கும் அன்பு செலுத்தினார் (13:1). இறுதி வரை முழுமையாக அன்பு செய்த இயேசு, அந்த முழுமையிலிருந்தே தம் அன்புப் பிள்ளைகளுக்கு அன்புக் கட்டளையைக் கொடுக்கிறார். தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி, அன்புக்கு அவரே முன்மாதிரி ஆகிறார்.
அன்புக்
கட்டளை, திருவிவிலியம் முழுவதும் நிரம்பியுள்ள கட்டளை. அதுவும் அன்புக் கட்டளை பழைய ஏற்பாட்டின் மிக முக்கியமான கட்டளையாக இருந்தது (லேவி 19:18). எனவே, வார்த்தை அளவில் இது புதிய கட்டளை அல்ல; எனினும், இயேசு தாம் கொடுக்கும் அன்புக் கட்டளை ஒரு புதிய கட்டளை (13:34) என எந்த அடிப்படையில்
கூறுகிறார்?
கடவுளை
முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் அன்பு செலுத்த வேண்டும் என்பது யூத சமயத்தின் மிக முக்கியமான கட்டளையாக இருந்தது (இச 6:4-9). இதுவே ஒவ்வொரு யூத வழிபாட்டின் தொடக்கத்திலும் கூறப்பட்டது. ஒவ்வொரு யூதக் குழந்தையும் முதன் முதல் மனப்பாடம் செய்த பகுதியும் இதுவே. இதனையே யூத ரபிகள் எழுதி நெற்றியில் அணிந்து கொண்டனர். வீடுகளின் கதவுகளில் பொருத்தி வைத்தனர். யூதர்களின் முதன்மையான ‘கடவுள் அன்பு’ கட்டளையில் பிறர் அன்புக் கட்டளையைப் புகுத்தியவர் இயேசு. இணைச்சட்டம் 6:5 உடன், லேவியர் 19:18 -ஐயும் சேர்த்து முதன்மையான கட்டளையை உருவாக்குகிறார் இயேசு. இயேசுவுக்கு முன்பு எந்த ஒரு மறைநூல் அறிஞரும் கடவுள் அன்பு - பிறர் அன்புக் கட்டளைகளை இணைத்துப் பேசியதில்லை. இயேசு இந்தக் கட்டளையின் புதுமைக்கூறுகளை விளக்குகிறார்.
இயேசுவின்
அன்புக் கட்டளைப்படி, இயேசு நம்மை அன்பு செய்வதுபோல நாமும் அடுத்திருப்போரை அன்பு செய்ய வேண்டும் (13:34). அதாவது, தம் உயிரையே கொடுக்கும் அளவுக்கு அன்பு செய்ய வேண்டும். சிலுவைச் சாவின் வழி இயேசுவின் அன்பின் அளவு வெளிப்பட்டது. தம் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (15:13) என்பது இயேசுவே கற்றுத் தந்த இலக்கணம். எனவே, இயேசு போதிக்கும் அன்பு வெறும் சொல்லிலும் உணர்விலும் வெளிப்படும் ஒன்று அல்ல; மாறாக, அது செயலில், தியாகத்தில், தம் உயிரையே கையளிக்கும் நிலையில் வெளிப்படுவது. இவ்வாறு இயேசுவின் அன்பின் பொருள், ஆழம் புதிது! இத்தகைய அன்பையே சீடர்களும் கடைப்பிடிக்கப் போவதாக உறுதி கூறுகின்றனர். பேதுரு அனைத்துச் சீடர்களின் பதிலாளாக இயேசு எதிர்பார்க்கும் அன்பின் தன்மையை, உயிர் கொடுக்கும் தன்மையைத் தாமும் கொடுப்பதாகக் கூறுகிறார் (13:37). சீடர்கள் இயேசுவின் இறப்பிற்குப் பிறகு மறுதலித்தும் அச்சமுற்றும் துவண்டு கிடந்த போதிலும் யாவரும் தம் நண்பர் இயேசுவுக்காக உயிரையே கையளித்தனர் என்பது வரலாறு.
இன்றைய
முதல் வாசகம் பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப்பயணத்தின் நிறைவுப் பகுதியாக அமைகிறது. சீடர்களும் இயேசுவைப் பின்பற்றுகின்ற மக்களும் தொழுகைக்கூடத் தலைவர்களால் பல்வேறு எதிர்ப்புகளையும் ஆபத்துகளையும் சந்தித்தபொழுதிலும், பவுல் சீடர்களைச் சந்தித்துத் திடப்படுத்துகிறார். துன்பங்கள் வழியாகவே இறையாட்சியை அடைய முடியும் என்னும் உண்மையை நேரிடையாகவே உரைக்கிறார். சீடர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் ஆபத்துகளை எதிர்கொண்டாலும், அவர்கள் துணிந்து மேற்கொண்ட பணி கிறித்தவத்தின் கதவுகளைப் பிற இனத்தாருக்குத் திறந்துவிட்டது. கிறிஸ்துவைப் பின்தொடர்ந்த சீடர்களும், அவர்கள் காட்டிய வழியைத் தொடர்ந்தவர்களும் துவக்கத்தில் சந்தித்தவை வன்முறையாக, மரண தண்டனையாக இருந்தாலும், இத்தகைய கொடுமைகள் மத்தியிலும் கிறித்தவர்களை வாழவைத்தது அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கைதான்.
திருவெளிப்பாடு
நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய இரண்டாம் வாசகம் நம்பிக்கையில் தோய்த்து எடுக்கப்பட்ட பகுதி. வேதகலாபனை, துன்பங்கள், அச்சுறுத்தல்கள் எனத் துயருற்ற கடவுளின் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைகிறது யோவான் கண்ட காட்சி. உரோமை அரசர் தொமிசியன் காலத்தில் எருசலேம் கோவில் அழிக்கப்பட்டது. கிறித்தவச் சமயத்தை ஏற்றவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். புனித யோவான் பத்மோஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் கிறித்தவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் புனித யோவான் திருவெளிப்பாடு நூலை எழுதினார். கிறித்தவக் குடும்பத்திற்கு நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் “கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது” என்ற உயரிய எண்ணத்தை வழங்குகிறார் யோவான்.
அதிகாரத்தை
நம்பி வாழ்ந்த உரோமை அரசுகள் இன்று இல்லை. ஆனால், அன்பை மட்டுமே நம்பி வாழ்ந்த கிறித்தவம் இன்று உலகெங்கும் பரவியுள்ளது. கிறித்தவ நம்பிக்கையின் ஆணிவேர் அன்பு ஒன்றே. அந்த அன்புதான் முதல் கிறித்தவர்களை அப்பம் பகிர்வதிலும் தங்கள் உடைமைகளைப் பகிர்வதிலும் ஒன்றிணைத்தது.
எனவே,
கிறிஸ்துவில் கடவுள் வெளிப்படுத்தியுள்ள அளவிட முடியாத அன்பை மக்கள் அனைவரும் சுவைக்கும்படியாக நமது வாழ்வு அமைய வேண்டும். இயேசுவைப்போல அளவின்றி இவ்வுலகை அன்பு செய்ய வேண்டும். புனித பெர்னாந்து கூறுவதுபோல, “அளவின்றி அன்பு செய்வதே அன்பின் அளவுகோல்.” இயேசுவின் அன்பு தன்னலமற்றது; அது மன்னிக்கும் அன்பு. இத்தகைய அன்பை நாம் பிறர்மீது காட்டும்போது, நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை இந்த உலகம் அடையாளம்
காணும். அன்பு வளரும் இடங்களில் உண்மையான கிறித்தவமும் நம்பிக்கையும் செழித்து வளரும். உண்மையான அன்பு மட்டுமே எப்பொழுதும் நிலைத்து நிற்கும். புதியதொரு விண்ணகத்தையும், புதியதொரு மண்ணகத்தையும், புதியதொரு மனிதக் குடும்பத்தையும் அன்பின் வழியே உருவாக்க, இயேசு நமக்குத் தரும் புதிய கட்டளையை அணிந்துகொள்வோம்.
உயிர்ப்புக் காலத்தின் 4-ஆம் ஞாயிறை ‘நல்லாயன் ஞாயிறு’ என்றும், ‘இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள்’ என்றும் சிறப்பிக்கின்றோம். நல்லாயராம் இயேசுவை நினைவுகூரும் இன்றைய வாசகங்கள் அவரைப் போன்று பொறுப்புடன் ஆயரின் வழியில் நடக்க நம்மை அழைக்கின்றன.
ஆடுகளும்
ஆயனும் திருவிவிலியத்தில் மிக முக்கிய உருவகங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வந்த இஸ்ரயேல் மக்கள் அத்தொழில் அடிப்படையிலான உருவகங்களைப் பயன்படுத்தி வந்தனர். ஆயர் பணி இஸ்ரயேல் மக்களிடையே மிக முக்கியமான தொழிலாகவும் கலாச்சாரமாகவும் இருந்துள்ளன. ஆடுகள் எப்போதும் மென்மையானதாகவும் ஆயரின் குரலைக் கேட்பவையாகவும் காணப்பட்டன. மந்தையைச் சுற்றி எப்போதும் ஆபத்துகளும் நிறைந்திருந்தன. எனவே, ஓர் ஆயரின் மிக முக்கியமான பணி தம் மந்தையை ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தல், மேய்ச்சல் நிலத்திற்குக் கூட்டிச் செல்லுதல், தண்ணீர் இருக்கும் பகுதியை அடையாளம் காணுதல், நேரிய வழியில் நடத்திச் செல்லுதல், சினையாடுகளைப் பாதுகாத்தல், குட்டி ஆடுகளைத் தூக்கிச் சுமத்தல் போன்றவையாகும்.
இஸ்ரயேல்
மக்களின் வரலாற்றைப் பார்த்தால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது போன்ற மாபெரும் தலைவர்கள் அனைவரும் ஆயர்களாக இருந்திருக்கிறார்கள். தாவீது மந்தை மேய்ப்பவராக இருந்து பின்னர் இஸ்ரயேலின் ஆயராக மாறினார் (2சாமு 7:8). பின்னாளில் இஸ்ரயேல் மக்கள் தம் அரசர்களையும் (1அர 22:17; எரே 10:21; 23:1-2) தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் ஆயராகப் பார்த்தனர். ஓர் ஆயருக்கு இருக்க வேண்டிய பண்புகளைத் தம் அரசர்களில், தலைவர்களில் எதிர்பார்த்தனர். இஸ்ரயேல் சமுதாயத்தில் இத்துணை உயர்ந்த மதிப்புப் பெற்றிருந்த ஆயர்கள் படிப்படியாகத் தங்கள் மதிப்பை இழந்தனர்.
ஆயர்கள்-தலைவர்கள் நல்லவர்களாக இல்லை; அவர்கள் ஆடுகள் மீது கவலையற்ற ஆயர்களாக இருந்தனர். எசேக்கியேல் இறைவாக்கினர் நீதி நேர்மையற்றுச் செயல்பட்ட ஆயர்களான அரசர்கள், மேய்ப்பர்கள், தலைவர்கள் போன்றவர்களின் வீழ்ச்சியைக் குறிப்பிடுகின்றார் (எசே 34:1-10). இந்த ஆயர்கள் மக்களுக்காக வாழாமல், தன்னலம் நிறைந்த அதிகாரத்தோடு மக்களைச் சுரண்டி வாழ்ந்தனர் (34:7-8).
தலைவர்களும்
அரசர்களும் தவறியபோது அவர்களைக் கண்டித்த இறைவன், தம்மையே நல்ல ஆயராக இறைவாக்கினர் வழியாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் (எரே 10:21; எசேக் 34:11-31; செக் 10:3; எசா 44:28). தாவீதின் மரபிலிருந்தே நல்ல ஆயர் தோன்றப்போவதாக உறுதி கூறுகிறார் (எசே 34:23-24). அந்த நல்ல ஆயரே வரவிருக்கும் மெசியா (எசா 40:11). இன்றைய நற்செய்தியில் யோவான், ஆண்டவர் இயேசுவை உண்மையான ஆயராகக் காட்டுகிறார்.
நல்லாயன்
என்றதுமே இயேசு ஓர் ஆட்டுக் குட்டியைத் தம் தோள்மீது அல்லது மார்போடு அணைத்துச் சுமந்துசெல்லும் அமைதியான இயேசுவின் உருவம்தான் முதலில் நம் உள்ளங்களில் பதிகின்றது. ‘நல்ல ஆயர்’ என்ற வார்த்தை மிகவும் ஆழமானது. நல்ல ஆயர் தம் ஆடுகளின் பெயர் அறிந்தவராக, அவற்றின்மீது அக்கறை கொண்டவராக, அவற்றை வழிநடத்தப் பாதை தெரிந்தவராக, ஆபத்து காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வல்லவராக, எதிரிகளை எதிர்த்துப் போராடுபவராக, தக்க வேளையில் உணவளிக்கின்றவராகத் தம்மை அடையாளப்படுத்துகின்றார் (யோவா 10:1-15). நல்ல ஆயர் ஆடுகளுக்காக எந்தத் தியாகத்தையும் செய்வார்; ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டுத் தம் உயிரையே கொடுக்க முன் வருவார். இன்றைய நற்செய்தியில் யோவான் இயேசுவைத் தலைசிறந்த, தன்னிகரற்ற ஒரு நல்ல ஆயராகக் காட்டுகிறார்.
முதலாவதாக,
நல்ல ஆயர் என்பவர் தம் ஆடுகளை நன்கு அறிபவராக இருப்பார். இயேசுவே நல்ல ஆயர். அவர் சமுதாயத்தில் அடையாளமிழந்து, ஒடுக்கப்பட்டு, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுடன் தம்மை அடையாளப்படுத்தி, அவர்களின் பெயர்களை நன்கு அறிந்து தம் மந்தையை அழைத்தார் (யோவா 10:3). நல்ல ஆயர் தம் ஆடுகளின் நிலை அறிந்து செயல்பட்டார். நலிவுற்ற ஆடுகளைத் திடப்படுத்தினார்; தளர்வுற்ற ஆடுகளைத் தம் தோள்மீது சுமந்து சென்றார். வீழ்ந்து கிடக்கும் ஆடுகளுக்கு வலுவூட்டினார். காயப்பட்ட ஆடுகளை நலமாக்கினார். ஆடுகளின் தேவைகளை முதன்மையாக்கிச் செயல்பட்டார். இயேசுவே நல்ல ஆயராக இருந்து செயல்படுவதால், ஆடுகளுக்கு யாதொரு குறையுமில்லை (திபா 23). ஆயரான இயேசுவின் திருமுழுக்குப் பெற்ற நாம் அவர் மந்தையைச் சேர்ந்த ஆடுகள். இன்றைய பதிலுரைப் பாடலும், “நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்” என்கிறது. நமது பலவீனத்தையும் இயலாமையையும் தேவைகளையும் நன்கு அறிந்து, நம்மைக் கரிசனையோடு
காக்கும் நல்லாயனாம் இயேசுவின் குரலைக் கேட்டு அவரைப் பின்தொடர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இரண்டாவதாக,
நல்ல ஆயர் என்பவர் தம் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களைப் பாதுகாக்க வல்லவராக இருப்பார். ஆயர் தனது ஆடுகளைத் திருடரிடமிருந்தும் கொள்ளையரிடமிருந்தும் காப்பாற்றுகிறார். ஆடுகளுக்கு ஓநாயாலும், மற்றப் பிற காட்டு விலங்குகளாலும் ஆபத்துகள் ஏற்படுவது போல, மக்களுக்கும் ஆபத்துகளும் அச்சுறுத்தல்களும் ஏற்படும்போது, அவற்றை இனங்கண்டு, அவற்றால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது ஓர் ஆயரின் தலையாயக் கடமை. இப்பணி ஆபத்தானதும் கூட. ஆடுகளைக் காப்பாற்றும் பொருட்டு ஆயருக்கு ஓநாய்களாலும், பிற கொடிய விலங்குகளாலும் ஆபத்து ஏற்படுவதுபோல, தீய சக்திகளும் தலைவரைத் தாக்கலாம்; உயிரையே பறிக்கலாம் (இந்தியாவில் அருள்சகோதரி இராணி மரியா, அருள்பணி. ஸ்டேன் சுவாமி, மறைப்பணியாளர் கிரகாம் ஸ்டெயின்ஸ் போன்றோர் கொல்லப்பட்டதுபோல). இருப்பினும், ஆடுகளுக்காகத் தன்னுயிரையும் கையளிக்க முன்வர வேண்டும். இயேசு நல்ல தலைவர், நல்ல ஆயர். அவர் தம் மக்களின் பொருட்டுத் தம் உயிரையும் கொடுக்கும் அளவிற்கு மக்களை அன்பு செய்தார் (10:12). நல்லாயராம் இயேசு தாம் வாழ்ந்த சமுதாயத்தில் வறியோர், நோயாளிகள், ஒடுக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், சமுதாய விளிம்பிற்குத் தள்ளப்பட்டோர் யாவரும் மனித மாண்போடு, சமத்துவத்தோடு வாழ்ந்திட தம் உயிரையே கையளித்தார் (10:15).
இயேசு
சீடர்களின் காலடிகளைக் கழுவுவதன் மூலம், பிறருக்காகவே பணியாற்றும் தன்னிகரற்ற புதிய தலைமையை, பிறரின் மாண்புநிறை வாழ்விற்காகப் பணியாற்றும் தலைமைத்துவத்தின் புதிய பண்பாட்டைத் தொடங்கி வைத்தார். இயேசுவைப் போன்ற நல்ல ஆயர்களைக் கடவுள் காலத்தின் தேவை உணர்ந்து திரு அவைக்குத் தந்து கொண்டிருப்பதை நினைத்துப் பெருமிதம் கொள்வோம்.
நல்லாயன்
ஞாயிறைக் கொண்டாடும் இந்நாளில் 12 ஆண்டுகள் திரு அவையின் ஒப்பற்ற பணியாளராக, மக்களின் திருத்தந்தையாக, போர் மற்றும் வன்முறையால் துன்புறுபவர்கள், ஏழைகள், வலுவற்றவர்கள், ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து, நல்ல ஆயராகப் பணியாற்றி இறைபதம் அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்க்கையோடு நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.
2013, மார்ச் 19-ஆம்
நாள் புனித யோசேப்பு பெருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரு அவையின் தலைவராகப் பணியேற்ற அவ் வேளையில், பணியேற்புத் திருப்பலிக்கு முன் திறந்த ஒரு வாகனத்தில் அவர் வளாகத்தைச் சுற்றி வந்தபோது, அங்கிருந்த ஒவ்வொருவரையும் கரம் நீட்டி அவரால் தொடமுடியவில்லை. உடனே வாகனத்தை நிறுத்தச் சொல்லி, இறங்கிச் சென்று அங்கிருந்த ஒரு மாற்றுத்திறனாளியை அரவணைத்து, அவர் நெற்றியில் திருத்தந்தை முத்தமிட்டது, அப்போதே மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஓர் இளகிய, மென்மையான மனத்தையும், மக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள விழையும் ஆவலையும் எப்போதும் வெளிப்படுத்தும் திருத்தந்தை, தலைமைப் பணியேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில், “தலைமைத்துவம், ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்ல” என்றும் “தலைவர் அல்லது காவலர் என்பவர் இளகிய, மென்மையான மனம் கொண்டவராக இருக்கத் தயங்கக்கூடாது” என்றும்
தெளிவாக்கினார்.
“ஏழைகளை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” என்று அடிக்கடி வலியுறுத்திய திருத்தந்தை போர், சமூக அநீதிகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உலகளாவிய அலட்சியத்தைக் கடுமையாகக் கண்டித்தும் குரல் எழுப்பியும் நற்செய்தியின் பாதையில் நடந்து, அனைவரும் சகோதரர்-சகோதரிகளாக, ஒருவருக்கொருவர் இணைந்து நடப்பதன் அழகை மீண்டும் கண்டறிய அழைப்பு விடுத்தார். “மக்களைப் போலவே நானும் ஒரு பாவி” என்றும், “மக்களோடு பயணம் செய்யும் ஒரு பயணி” என்றும் கூறி, கடவுளாகிய இயேசுவின் உண்மைச் சீடராக, சிறந்த முன்மாதிரிகையாக, நல்ல ஆயராகத் திகழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மாவை மூவொரு கடவுளின்
எல்லையற்ற இறை இரக்கத்தில் அர்ப்பணித்துச் செபிப்போம்.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற
தலைப்பில் இந்த 2025 யூபிலி ஆண்டினை அர்ப்பணித்த திருத்தந்தை அவர்கள் விதைத்த விதையானது, கிறித்தவர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களின் இதயங்களிலும் இன்று மட்டுமல்லாது, என்றென்றும் தொடர்ந்து முளைக்கும் என்பது திண்ணம்.