news
ஆன்மிகம்
அருளடையாளங்கள் ஓர் உளவியல் ஆன்மிகப் பார்வை
அறிமுகம்

கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமாகவும், அதன் சாரமாகவும் இருப்பவை அருளடையாளங்கள் (திருவருள் சாதனங்கள்). எல்லாவிதமான கிறிஸ்தவக் கொண்டாட்டங்களின் மையமாக இருப்பதும் அருளடையாளக் கொண்டாட்டங்களே! இன்றைய சூழலில் பல வேளைகளில் நிகழும் அருளடையாளக் கொண்டாட்டங்கள் (திருப்பலி, திருமுழுக்கு, முதல் நற்கருணை, உறுதிப்பூசுதல், திருமணம், குருத்துவம் முதலியவை) சடங்காச்சாரமாகவும், ஆடம்பர நோக்கத்துடனும், தனிமனித மற்றும் குழுக்களின் பெருமைக்காகவும் கொண்டாடப்படுகின்றன. அருளடையாளக் கொண்டாட்டங்களின் எண்ணிக்கையும், அருள்பணியாளர்களின் எண்ணிக்கையும் அவசியமில்லாமல் அதிகரிக்கப்படுகின்றன. இது கிறிஸ்தவ ஆன்மிக வாழ்வின் பெரும் ஆபத்தான அணுகுமுறை என்பது முற்றிலும் உண்மை. இத்தகைய அணுகுமுறையின் காரணமாக அருளடையாளங்களின் வாழ்வியல் நோக்கமும், அவற்றிற்கும் நம் வாழ்விற்குமான தொடர்பும் மற(றை)க்கப்பட்டு, சடங்காச்சாரப் போக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது நம் ஆன்மிக வாழ்வில் தேக்கத்தையும், ஒட்டுமொத்த வாழ்வில் மேலோட்டத்தன்மையையும் கொண்டு வரவல்லது.

அருளடையாளங்களுக்கும், நம் வாழ்விற்குமான தொடர்பை உளவியல் பின்னணியிலும், ஆன்மிகப் பின்னணியிலும் அணுகும் வண்ணம் மேற்கொள்ளப்படும் முயற்சியே இத்தொடர்! உரையாடலாக எழுதப்படும் இந்தத் தொடர் குறித்த உங்களது மேலான கருத்துகளும் பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன.

1. வாழ்வின் நிறைவைத் தேடி...…

அது ஒரு கத்தோலிக்கக் குடும்பம். குடும்பத் தலைவர் பெயர் அன்புச் செல்வன். ஒரு கல்லூரியில் உளவியல் பேராசிரியர். நல்ல கத்தோலிக்கர். ஞாயிறு திருப்பலிக்குத் தவறாதவர். கத்தோலிக்க மறைப்போதனைகளை உளவியல் பின்னணியில் அணுக முயல்பவர். அவரது மனைவி மார்த்தா. குடும்பத் தலைவி. கத்தோலிக்க மறைப்போதனைகளை ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் கேட்காமல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டவர். முன்னோர்கள் நமக்கு ஒரு காரியத்தைச் சொல்லிக் கொடுத்தார்கள் என்றால், தவறானவற்றையா நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? என்று எண்ணக்கூடிய மரபுப் பெண் அவர். இவர் தினத் திருப்பலியிலோ, நவநாள் செபங்களிலோ கொஞ்சமும் தவறாமல் பங்கெடுக்கக்கூடியவர்.

அண்மையில் இவர்களது குடும்பத்தில் ஒரு பிரச்சினை. பக்தியான இத்தம்பதியினருக்குப் பிறந்த அவர்களது மூத்த மகன் அகஸ்டின் ஒழுங்காகக் கோவிலுக்கு வருவதில்லை. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அவன், அவ்வப்போது ‘கோவிலுக்குப் போவதால் என்ன பயன் உண்டு? நேரம்தான் வீணாகிறது’ என்ற ரீதியில் பேச ஆரம்பித்திருக்கிறான். திறந்த மனமும் தேடலும் கொண்டவன். மதம் உள்பட எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை என்று எண்ணுபவன். கேள்விகள் கேட்டால்தான் சரியானவற்றைக் கண்டுகொள்ள முடியும் என்று நினைப்பவன்.

இவனது தங்கை கிறிஸ்டினா 11-ஆம் வகுப்பு படிப்பவள். தற்போது அவளும் ஆலயச் செயல்பாடுகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. அதிக நேரத்தைப் படிப்பிலும் அலைபேசியிலும் செலவழிக்கிறாள். தாய் இதைக் குறித்துக் கேட்டால், “எனக்கு எது பயனுள்ளதோ, அதில் நேரம் செலவழிக்கிறேன். கோவிலுக்குப் போவதால் என்ன பயன் இருக்கிறது?” என்று எதிர்கேள்வி எழுப்புகிறாள்.

பெற்றோர்கள் இருவரும் தங்களது பிள்ளைகளை நினைத்துக் கொஞ்சம் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கத்தோலிக்க நம்பிக்கையைத் தங்களது பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியாதோ என்ற கேள்வி அவர்களைக் குடைந்தெடுக்க ஆரம்பித்திருக்கிறது. பிள்ளைகளின் ஆன்மிக வாழ்விற்கு எந்த முறையில் வழிகாட்டுவது என்று தெரியாத குழப்பம் அவர்களை வருத்தியது.

இத்தகைய சூழ்நிலையில்தான் அருள்பணியாளர் தாமஸ் வீடு சந்திக்க வந்தார். அவர்களின் பங்குத்தந்தை அவர்! அண்மையில்தான் மாற்றலாகி இந்தப் பங்கிற்கு வந்திருக்கிறார். அவரிடம் சற்று நேரம் பேசிய பின்பு, மார்த்தா தன் வீட்டுச் சூழலை அவருக்கு எடுத்துச் சொன்னார். அருள்பணியாளர் தாமஸ் கத்தோலிக்கப் போதனைகளைக் கடமையாகக் கடைப்பிடிக்கக் கூடாது; மாறாக, அவை அனுபவமாக மாற்றப்பட வேண்டும், மாற்றப்பட முடியும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றவர். ஆழமான ஆன்மிகத் தேடல் கொண்டவர். இதோ உரையாடல் ஆரம்பிக்கிறது:

அன்புச் செல்வன்: “தந்தையே, என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஏற்ற பொருளாதார வளத்தை என்னால் முடிந்த அளவிற்கு அமைத்துக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அவர்களது கல்விக்கும் ஒரு சரியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்கின்ற உணர்வு என்னிடம் உண்டு. ஆனால், அவர்களது ஆன்மிக வாழ்வைப் பொறுத்த அளவில்தான் தற்போது நானும், என் மனைவியும் குழப்பத்தை அனுபவித்து வருகிறோம். அவர்களது ஆன்மிக வாழ்விற்கு ஏற்ற அடித்தளத்தை அமைத்துக் கொடுக்காமல் போய்விடுவோமோ என்கின்ற அச்சம் எங்களிடம் தற்போது தோன்றியிருக்கிறது.”

மார்த்தா: “தந்தையே, எங்களது மகனுக்கும் மகளுக்கும் கொஞ்சம் நல்லா புத்தி சொல்லுங்களேன்! ஆலயத்திற்கு வருவது என்றாலே இருவருக்கும் வேப்பங்காயாகக் கசக்கிறது.”

அருள்பணி: “உங்களது பிள்ளைகளுக்கு அதிகமாகத் தேவைப்படுவது புத்திமதி அல்ல; மாறாக, சரியான புரிதல் என்று எண்ணுகின்றேன்.”

அகஸ்டின்: “தந்தையே, என் அம்மா சொல்வது உண்மைதான்! ஆலயத்திற்கு வருவது பெரிய கடினமான காரியமாக இருக்கிறது. இவ்வாறு வருவதில் என்ன பயன் இருக்கிறது என்று என் மனம் அடிக்கடி கேட்கிறது.”

அருள்பணி: “அகஸ்டின், உன்னைப் பொறுத்த அளவில் நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவழித்தல் என்பது என்ன?”

அகஸ்டின்: “எனக்கு எது மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுக்குமோ, அதில் நேரத்தைச் செலவிடுவதே நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவழிப்பதாகும். உதாரணமாக, நண்பர்களோடு ஜாலியாக ஊர் சுற்றினால் அதில் ஒருவிதமான மகிழ்ச்சி கிடைக்கிறது. படிப்பதற்கும், அறிவைச் சேகரிப்பதற்கும் என் நேரத்தைச் செலவழித்தால், அது தற்போது என் அறிவு விரிவடைவதற்கும், பிற்காலத்தில் பணமும் புகழும் பெறுவதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே, கல்வியில் நேரம் செலவழிப்பது எனக்குத் திருப்தியைத் தருகிறது. மாலை வேளையில் என் நண்பர்களோடு விளையாடுகிறேன். எனக்கு அது நல்ல பொழுதுபோக்காகவும், உடல்நலனைப் பெருக்குவதாகவும் அமைகிறது. ஆனால், ஆலயத்திற்கு வருவதால் அத்தகைய எந்த விளைவும் ஏற்படுவதாக எனக்குத் தோன்றவில்லை, தந்தையே!”

கிறிஸ்டினா: “எனக்கு மொபைலில் விதவிதமான வீடியோக்கள் பார்ப்பதும், என் ஸ்டேட்டஸைப் பலரும் பார்ப்பதை இரசிப்பதும் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.”

மார்த்தா: “பாருங்க பாதர், எவ்வளவு துணிச்சலோடு இந்த இரண்டு பேரும் ‘கோவிலுக்கு வருவதனால எந்தப் பயனும் இல்லை’ன்னு உங்ககிட்டே சொல்றாங்க. இந்த அளவுக்குச் சுதந்திரம் கொடுத்து வளர்த்தது எங்க தப்பு!”

அருள்பணி: “மார்த்தா, ஆன்மிகம் என்பது திணிக்கப்படுவதல்ல, அது உணரப்படுவது. நமக்குக் கொடுக்கப்பட்ட சில வழிமுறைகளை அவர்கள் மீது திணிப்பது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். அவர்களது கேள்விகளுக்கு நாம் எல்லாருமே சேர்ந்து பதில் தேடுவதே அவர்களுக்கும் உதவியாயிருக்கும், நம்மையும் வளர்த்தெடுக்கும்.”

மார்த்தா: “சரிங்க பாதர், நீங்க அவங்ககிட்ட என்ன பேசினாலும் சரி, எப்படிப் பேசினாலும் சரி, கோவிலுக்கு மட்டும் வரவச்சிருங்க. எனக்கு அது போதும்.”

அருள்பணி: “அகஸ்டின், மகிழ்ச்சியைத் தரும் செயல்களையே மனம் நாடுவதாகவும், அத்தகைய செயல்கள் எதுவும் ஆலயச் செயல்பாடுகளில் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கூறினாய். மகிழ்ச்சியைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். மகிழ்ச்சியைப் பற்றிப் பேசும்போது இரண்டு காரியங்களை நாம் நம் மனத்தில் வைத்திருப்பது அவசியம்.”

அகஸ்டின்: “அவை எவை தந்தையே?”

அருள்பணி: “அடுத்த வாரம் தொடர்ந்து பேசலாமே!”

(தொடரும்)
news
ஆன்மிகம்
இறைவேண்டலின் பரிமாணங்கள் - 19 (பாடலால் இறைவேண்டல்!)
“ஒருமுறை பாடுவது, இருமுறை செபிப்பதற்குச் சமம்” என்னும் புனித அகுஸ்தினாரின் பொன்மொழியை நாம் நன்கறிவோம். இருப்பினும், நமது கத்தோலிக்க வழிபாடுகளிலும், நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப இறைவேண்டல்களிலும் பாடலுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பதே வருத்தமான எதார்த்தம்.

உண்மையில் பாடல் பற்றிய நமது புரிதலே தவறானதோ என்றே சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது. பெந்தகோஸ்தே சபைகளிலும், தென்னிந்தியத் திரு அவை போன்ற வரலாற்றுச் சபைகளிலும் பாடல் மிகுந்த அழுத்தம் பெறுகிறது. அவர்களுக்குப் பாடல் என்பதே வழிபாடுதான், ஆராதனைதான். எனவே, அவர்கள் சலிக்காமல் பாடுகிறார்கள், ஆர்வம், ஆர்ப்பரிப்போடு பாடுகிறார்கள்.

அவர்களுடன் நமது கத்தோலிக்க வழிபாட்டுப் பாடல்களை ஒப்பிட்டுப் பாருங்கள். திருப்பலியில் நாம் பயன்படுத்தும் வருகைப் பாடல், காணிக்கைப் பாடல், திருவிருந்துப் பாடல் போன்றவை நற்கருணைக் கொண்டாட்டத்தின் உடன் நிகழ்வாகச் சேர்க்கப்படுகிறதே தவிர, தம்மிலே அவைகளுக்குத் தனித்துவ முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

இந்த மனநிலை நம்மை விட்டு மாறி, நமது வழிபாடுகளிலும், தனி, குடும்ப இறைவேண்டல்களிலும் பாடல் சிறப்பிடம் பெறவேண்டும்.

பாடலின் சிறப்புகள் பல. அவற்றுள் ஒன்று பாடும்போது நமது உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், மன வலிமை அனைத்தும் ஒன்று சேர்கின்றன. பாடல் இறைவேண்டலை நம் ஆளுமையின் அனைத்துத் தளங்களிலிருந்தும் வெளிப்படுத்துகிறது. எனவேதான், ஒருமுறை பாடுவது, இருமுறை இறைவேண்டல் செய்வதற்கு இணையானது.

பாடலின் சிறப்புகளைத் திருவிவிலியத்தின் பல பக்கங்களிலும் பார்க்கிறோம்.

1. செங்கடலைக் கடந்தவுடன் மோசேயும், இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடியதே (விப 15:1) திருவிவிலியத்தின் முதல் பாடல். “ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன். ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றி பெற்றார்” என்பதே அந்த முதல் பாடல்.

2. தெபோராவின் வெற்றிப் பாடல் காலத்தால் மிகவும் தொன்மையானது. “எழுந்திடு, தெபோரா எழுந்திடு! பாடல் ஒன்று பாடு” (நீத 5:1) என்பது அப்பாடலின் தொடக்கம்.

3. பாடகர் குழுவை உருவாக்கிய பெருமை தாவீது அரசரையே சாரும். “ஆண்டவருக்கு நன்றிப் பாடல்களைப் பாடும் பொறுப்பை ஆசாபுக்கும் அவர் உறவின் முறையினருக்கும் முதன்முதலாக அளித்தார்” (1குறி 16:7).

4. திருப்பாடல்கள் நூலில் பாடல் பாடும் அழைப்பு பலமுறை வருகின்றது. “புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்” (திபா 33:3) என்பது அவற்றுள் ஒன்று.

5. “என் கடவுளுக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்” (யூதி 16:1-13) என்று யூதித்து பாடிய பாடல் புகழ்பெற்றது. மேலும், இறைவாக்கினர் அபக்கூக்கு (3:1), தோபித்து, தோபியா (தோபி 12:22), சாத்ராக்கு, மேசாக்கு, அபேத்நெகோ (தானி (இ) 1:1),  யூதாவும், அவரது படைவீரர்களும் (1மக் 4:24) பாடல் பாடி ஆண்டவரைப் போற்றியதைப் பழைய ஏற்பாடு பதிவு செய்துள்ளது.

6. புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் இயேசுவும் பாடினார் என்பதை “அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்” (மத் 26:30) என்னும் வரிகள் சுட்டுகின்றன.

7. அன்னை மரியாவும் பாடினார் என்பதை லூக்கா நற்செய்தியின் ‘மரியாவின் பாடல்’ (லூக் 1:46) என்னும் தலைப்பு எண்பிக்கிறது. இயேசு பிறந்தபோது இடையர்களும் (லூக் 2:20)  பாடினர்.

8. பவுலடியாரும் சீலாவும் சிறையில் நள்ளிரவில் புகழ்ப்பா பாடினர், அதைக் கைதிகள் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த இறைபுகழ்ச்சியால் நில நடுக்கம் ஏற்பட்டு, அனைவரது விலங்குகளும் கழன்று விழுந்தன (திப 16:25-27).

எனவேதான், தொடக்கக் காலக் கிறிஸ்தவர்களுக்கும் பாடல் பாடுவது இறைவழிபாட்டின் முகாமையான கூறுகளுள் ஒன்றாக இருந்தது. இதனை “உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்” (எபே 5:19) என்னும் பவுலடியாரின் அறிவுரையிலிருந்து அறிகிறோம். “திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்” (கொலோ 3:16) என்று கொலோசையருக்கும் அவர் எழுதியுள்ளார்.

அவ்வாறே, திருத்தூதர் யாக்கோபும் “உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்” (யாக் 5:13) என்று அறிவுறுத்துகிறார்.

பாடுவதன் இரண்டு சிறப்புகளைத் திருவிவிலியம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது

1. பாடல் கடவுளின் விருப்பம். “கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்” (எபே 1:12) என்று சொல்லி நம்மை வியக்க வைக்கிறார் தூய பவுலடியார்.

2. பாடல் ஒரு விண்ணகச் செயல்பாடு. விண்ணகத்தின் செயல்பாடுகளைக் காட்சியாகச் சித்தரிக்கும் திருவெளிப்பாடு நூல் விண்ணகத்தில் உள்ள அனைவரும் எப்போதும் பாடல்கள் பாடி ஆண்டவரைப் போற்றிக் கொண்டிருப்பதைப் பல இடங்களில் காட்டுகிறது.  விண்ணகத்தின் நான்கு உயிர்கள் (திவெ 4:8), இருபத்து நான்கு மூப்பர்கள் (திவெ 5:9, 19:4), கோடிக்கணக்கான வானதூதர்கள் (திவெ 5:12), எல்லா நாட்டையும் சேர்ந்த பெருந்திரளான மக்கள் (7:10), தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் (திவெ 14:3), ஏழு வானதூதர்கள் (திவெ 15:1) ஆகியோர் பாடல்கள் பாடி இறைவனைப் போற்றுவதை நாம் வாசிக்கிறோம்.

பாடுவதால் நுரையீரல் வலிமையடைகிறது, இரத்த ஓட்டம் மேம்படுகிறது, முகத்தசைகள் வலுப்பெறுகின்றன, மன அழுத்தம் குறைகிறது... எனப் பட்டியலிட்டு, பாடுவது நம் உடல் நலனுக்கும் நல்லது என்கின்றனர் உடல் நல வல்லுநர்கள்.

எனவே, எப்போதும் நாம் பாடல் பாடி ஆண்டவரைப் போற்றுவோமாக!
news
ஆன்மிகம்
உறவாடும் இறைவன்!
‘இறைவெளிப்பாடு’ என்ற இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் கோட்பாட்டு ஏடு ‘தேய் வெர்பும்’ (‘கடவுளின் வார்த்தை’) என்ற இலத்தீன் வார்த்தைகளோடு தொடங்குவதால், அதுவே அந்த ஏட்டுக்குத் தலைப்பாயிற்று. தமிழில் அது ‘இறைவெளிப்பாடு’ என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வேடு இறைவார்த்தை பற்றியது என்பது தெளிவு. 

இங்கு நாம் இரண்டு கருத்துகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்:

1. கடவுளின் வார்த்தையானது ‘இறைவெளிப்பாடு’ என்ற பரந்த தளத்தில் வைத்து விளக்கப்படுவது சிறப்பு. 2. நிலைவாழ்வின் நற்செய்தியை உலகம் முழுவதற்கும் பறைசாற்றுவதே திருச்சங்கத்தின் அருள்பணி (Pastoral Ministry) சார்ந்த நோக்கம் என்பதை 1யோவா 1:2-3 வசனங்களை  மேற்கோள்காட்டி இவ்வேடு எடுத்துரைக்கிறது (‘இறைவெளிப்பாடு’ எண், 1).  இறைவார்த்தைக்கு முதலில் தான் மனமுவந்து செவிசாய்த்து, அதை அறிவிப்பதே திரு அவையின் அணுகுமுறை என்பதை முன்னுரையிலேயே தெளிவாக்குகிறது எனில், இறைவார்த்தை பற்றி எழும் கேள்விகளுக்கு ஆராய்ச்சிப்பூர்வமான பதில் தருவது இவ்வேட்டின் நோக்கம் அல்ல; அருள்பணி கண்ணோட்டத்தில் இறைவார்த்தை பற்றிய கோட்பாட்டை விளக்குவதே அதன் நோக்கம். 

கண்ணோட்டம் புதிது!

திரிதெந்தின் மற்றும் முதலாம் வத்திக்கான் திருச்சங்கங்களின் வழி நின்றாலும், இறைவெளிப்பாடு பற்றிய விளக்கத்தில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் பெரிதும் மாறுபடுகிறது. இறைவெளிப்பாட்டின் கருப்பொருள் நம்பிக்கையாளர் நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சில கோட்பாடுகள் அல்ல; அடிப்படையில் அது கடவுளுக்கும் மனிதருக்குமிடையே நிகழும் உறவுப் பரிமாற்றம். அது கடவுளையும், கிறிஸ்துவில் அரங்கேறிய மீட்புத் திட்டத்தையும் பற்றியது (எபே 1:9).

அளவுகடந்த ஞானமும் நன்மைத்தனமும் கொண்ட கடவுள் தம்மையே நமக்கு வெளிப்படுத்துகிறார். வார்த்தை மனுவுருவான தம் மகன் கிறிஸ்து வழியாக தூய ஆவியாரில் மனிதர் அனைவரும் தம்மை வந்தடைய வேண்டும், தம் இறை இயல்பில் பங்குபெற வேண்டும் என்பதே வானகத் தந்தையின் பேராவல் (எபே 2:18; 2பேது 1:4). தம் பேரன்பின் மிகுதியால் மனிதரை தம் நண்பர்களென்று உறவு கொண்டாடுகின்றார் (விப 33:11; யோவா 15:14-15). மனிதரோடு நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள விழைகிறார் இறைவன்; நம்மோடு குடிகொள்கிறார் (பாரூக் 3:38; யோவா 1:14). மூவொரு கடவுளின் நட்புறவில் நாம் திளைக்க வேண்டும் என்பதே இறைத்திருவுளம் (‘இறைவெளிப்பாடு’ எண் 2).  அதனால்தான் திருவிவிலியம் ‘கடவுள் மனிதருக்கு எழுதிய காதல் கடிதம்’ என்பார் புனித ஜான் கிறிசோஸ்தம்.

பொது இறைவெளிப்பாடு இனி இல்லை!

கடவுளால் படைக்கப்பட்ட படைப்பனைத்தும் கடவுளின் ஞானத்திற்கும் பேரன்புக்கும் சான்றாக உள்ளன. படைப்பு முழுவதுமே இறைவனின் வெளிப்பாட்டுத்தளமாக அமைந்துள்ளன. எனவே, இயற்கையைப் பார்த்து, பகுத்தறிவைப் பயன்படுத்திப் படைத்தவரை நம்மால் அறிந்துகொள்ள முடியும் (உரோ 1:20; ‘இறைவெளிப்பாடு’ எண் 3,6).

கடவுளை வெளிப்படுத்தும் புத்தகமாக இயற்கையை வர்ணிக்கிறார் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் (வெர்பும் தோமினி, எண் 7). வார்த்தையானவரின் வித்துகள் பிற நாட்டு மரபுகளிலும், சமய மரபுகளிலும் மறைந்திருக்கின்றன (‘திருச்சபையின் நற்செய்திப் பணி’ எண் 11) என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதும் இங்கு நம் கவனத்தை ஈர்க்கிறது. மேலும், மனித அறிவுக்கு எட்டாத இறைச்செல்வங்களையும் கடவுள் மனிதரோடு பகிர்ந்துகொள்கிறார் (‘இறைவெளிப்பாடு’ எண் 6).

படைப்பின் தொடக்கத்திலிருந்தே மனிதருக்குத் தம்மை வெளிப்படுத்திய இறைவன் பாவத்தினால் மனிதன் வீழ்ந்தபோதும் அவனை மீட்டெடுக்கத் திருவுளம் கொண்டார். ஆபிரகாம், மோசே, இறைவாக்கினர்கள் வழியாக இஸ்ரயேல் மக்களைத் தேர்ந்தெடுத்து வெளிப்பாட்டின் நிறைவான தம் மகனின் வருகைக்கு அவர்களைத் தயாரித்தார் (‘இறைவெளிப்பாடு’ எண். 3). தமது உடனிருப்பு, போதனை, வல்ல செயல்கள், பாடுகள், இறப்பு-உயிர்ப்பாலும், இறுதியாக, தூய ஆவியாரை அனுப்பியதாலும் இயேசு இறைவெளிப்பாட்டைத் தம்மிலே நிறைவு செய்தார்.  கிறிஸ்துதாம் இறைவெளிப்பாட்டின் நிறைவு. புதிய, இறுதியான உடன்படிக்கை அவரில் நிறைவேறிவிட்டது (எபி 1:1-3; ‘இறைவெளிப்பாடு’ எண் 4). வேறு எந்தப் பொதுவான வெளிப்பாட்டுக்கும் நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இறைவெளிப்பாட்டிற்கு நமது பதில்?

மனிதரோடு உரையாடி, உறவாடித் தம்மை வெளிப்படுத்தும் இறைவனுக்கு, நாம் தரக்கூடிய மிகச்சிறந்த பதில் அவரில் நம்பிக்கைக் கொண்டு அவருக்குக் கீழ்ப்படிவதே (உரோ 16:26; காண்: உரோ 1:5; 2கொரி 10:5-6). முழு அறிவோடும்  விருப்பத்தோடும் கடவுளுக்குப் பணிந்து, நம்பிக்கையில் நம்மை முழுவதும் அவருக்குக் கொடுக்க இறைவெளிப்பாடு அழைக்கிறது.

கடவுள்மீது நாம் கொள்ளும் நம்பிக்கையே அவருடைய கொடைதான். தூய ஆவியார் நம் இதயத்தையும் மனத்தையும் திறந்து, நம்முள் செயலாற்றி,  வெளிப்படுத்தப்படும் மறையுண்மைகளை ஏற்று நம்பச்செய்கிறார். இறைவெளிப்பாட்டை ஆழமாகப் புரிந்துகொள்ளத் தேவையான நம்பிக்கையை அதே ஆவியார் முழுமை பெறச்செய்கிறார்.
news
ஆன்மிகம்
தெய்வீகத் தடங்கள் - 10 (விடாமுயற்சிக்கு ஓர் அழைப்பு!)
மிகக் கடுமையான நரம்புத்தொகுதி சேதங்கள், மோட்டார் சைக்கிள் விபத்துகளினாலேயே  ஏற்படுகின்றன. கடுமையான விபத்துகளினால் மேற்கை செயலிழந்து போகும்; அது வேலையும் செய்யாது; அதற்கு உணர்வும் இருக்காது. நரம்புகளை ஒட்டுதல், நரம்புகளை மாற்றும் சிகிச்சை, தசையை மாற்றுதல் முதலிய அறுவை சிகிச்சைகள், கை மீண்டும் வேலை செய்ய உதவலாம். மீள்கட்டமைப்பு நுண்அறுவை சிகிச்சை (reconstructive microsurgery) என்று இதற்குப் பெயர். தோல், தசை, தசை நார்கள், நரம்பு,  எலும்பு ஆகியவை தொடர்பான சிக்கலான சேதங்களுக்குத் தரப்படும் அறுவை சிகிச்சைக்கு இது பொதுவான பெயர்.

இந்த முறையில் அறுவை சிகிச்சை வல்லுநர் நோயாளியின் உடலிலுள்ள தசை, எலும்பு அல்லது திசுவை எடுத்து, செயலிழந்த பகுதியைச் செயல் பெறச் செய்யவும், கை அல்லது காலை சீராக்கவும் பயன்படுத்துவார். இது சிக்கல் நிறைந்த செயல்முறை. மாற்றி அமைக்கப்படும் திசுக்களில் மிக நுண்ணிய இரத்தக் குழாய்கள் மீண்டும் நுண்ணிய முறையில் ஒட்டவைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை புதிய இடத்தில் உயிரோடு செயல்பட முடியும்.

2014, பிப்ரவரி 21 முதல், 2019 ஏப்ரல் 11 வரை எனக்குப் பத்து அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு சிகிச்சைக்கும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் பிடித்தது. கடைசி அறுவை சிகிச்சை முக்கியமானது. இதற்குப் பதிமூன்று மணி நேரம் ஆயிற்று. வலது கை மணிக்கட்டு இப்போது முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. விரல்களுக்கு உணர்வு வந்தவுடன் அது விடுவிக்கப்படும். விரைவில் ஒரு சிறு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இப்போதைக்குத் தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

முந்தைய அறுவை சிகிச்சைகளின்போது வலது தோள்பட்டை, மேல் கை, கீழ்க்கை ஆகியவற்றில் உலோகத் தகடுகள் வைக்கப்பட்டன. வலது முழங்காலில் கரையக்கூடிய திருகாணி வைத்துச் சரிசெய்யப்பட்டது. காலில் சுண்டுவிரல் வெட்டி எடுக்கப்பட்ட பிறகு, வலது பாதம் சரியாயிற்று.  இந்தச் சிகிச்சைக்காக இடது தொடையிலிருந்து தசைகளும் தோலும் எடுக்கப்பட்டன. இரத்தக் குழாய்கள் கால் கண்டைத் தசையிலிருந்து எடுக்கப்பட்டன.  இவை எல்லாம் எனது வலக்கை தேறுவதற்கு உதவின. ஆனால், வலி! நரம்புநோய் வலி எப்படி இருந்தது? ஏன் ஏற்பட்டது?

கழுத்திற்குக் கீழுள்ள நரம்பு மண்டலம் சேதமடையும்போது வலி ஏற்படுவது இயற்கை என்று கங்கா மருத்துவமனை மருத்துவர்கள் கூறினார்கள். இப்படிப்பட்ட நோய்களில் நரம்பியல் வலியாகவே அது இருக்கும். மேலும், இந்த வலி சாதாரண சிகிச்சைகளுக்குக் கட்டுப்படாது. அதாவது, வலி போகும் மருந்துகள், மயக்க மருந்துகள், ஸ்டீராய்டுகள் இங்கே வேலை செய்யாது. இந்த நரம்பியல் வலிதான் (neuropathic  pain) எனக்கு ஏற்பட்டது; இன்னும் இருக்கிறது. மேலும், நான் பல வாரங்கள் ஒரே நிலையில் படுத்திருக்க வேண்டியிருந்தது. படுக்கையில் இடப் பக்கமோ, வலப்பக்கமோ புரண்டு படுக்க முடியாது. இது பெரிய நலிவு; அதோடு வலது முழங்காலிலும், வலது பாதத்திலும் ஏற்பட்ட வலி என்னை நசுக்கிப் போட்டது. பல பகல்களிலும் இரவுகளிலும் வலி தாங்க முடியாமல் விழித்தே இருப்பேன்.

வலியை மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள். நல்ல வலி, கெட்ட வலி, மோசமான கொடூரமான வலி. எரிச்சல் அல்லது நலிவு காரணமாக ஏற்படுவது நல்ல வலி. ‘வலி இல்லாமல் இலாபம் இல்லை’ என்ற சொற்றொடருக்கு அடிப்படையானது. இந்த வலி சிறிது நேரமே இருக்கும். வலிக்கான காரணம் போனவுடன் வலியும் போய்விடும்.

கடுமையான முதுகு வலி, புற்றுநோயால் ஏற்படும் வலி எல்லாம் கெட்ட வலி; ஆனால், மேல்கை நரம்புப் பின்னலில் ஏற்படும் வலி கொடூரமான வலியின்கீழ் வரும். மனித உடலில் ஏற்படும் வலியிலேயே இது மிக மோசமானது. இந்த வலி ஏன், எப்படிக் கொடுமையானது என்பதை விளக்குகிறேன்.

நான் அனுபவித்த வலிகள் இவை: திரும்பத் திரும்ப வரும் எரிச்சல், கொட்டுவதுபோல வலி, வீக்கம். கூர்மையாகக் குத்துவது போன்ற வலிகள், எனது கையில் எரியும் உணர்வு, மின் அதிர்ச்சி ஏற்படுவது போல உணர்வு, கிள்ளுதல், துடித்தல், அதிர்வுகளுடன் இடியும் மின்னலும் போன்ற கொந்தளிப்பு, கையை அழுத்துவது போல அல்லது கரும்புச் சாறு பிழியும் எந்திரத்தில் நசுக்கப்படுவது போன்ற வலி.

வலி நோய்க்குறிகள் மனக்கடுப்பையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தின.  பகல் நேரத்தில் வலியின் அளவு ஏறக்குறைய கூடாமலும் குறையாமலும் இருக்கும். ஆனால், இரவில் ஏற்ற இறக்கம் அதிகமாகவே இருக்கும். மற்ற வலி நோய்க்குறிகளைப் போலில்லாமல், வலி கூடுவதும் குறைவதுமாக இருப்பது மன அழுத்தத்தைக் கொடுக்கும். அதோடு தற்கொலை எண்ணங்களையும் தூண்டும்.

என்னைப் போன்ற நோயாளிகளில் 90 விழுக்காட்டினர் மன அழுத்தங்களுக்கும்,  மனநிலை மாற்றங்களுக்கும் ஆளாகிறார்கள் என்றும், அதே எண்ணிக்கையில் தற்கொலைக்கு இடம் கொடுத்துவிடுவார்கள் என்றும் மருத்துவர்கள் என்னை எச்சரித்திருந்தார்கள்.

என்னுடைய சிந்தனையில் எதிர்மறை எண்ணங்கள் இருப்பதை நான் உணரத் தொடங்கினேன். ‘இந்தத் துயரத்திலிருந்து எப்போது விடுவிக்கப்படுவேனோ?’, ‘இப்படி அல்லல்படும் வாழ்க்கை தேவையா?’, ‘போதும், முடித்து விடுவோம்!’

வலிக்கு நான் எதிர்வினையாற்றும்போது இவ்விதமான எண்ணங்கள் வந்தன என்பதை உணர்ந்தேன். எனினும், வலி கூடிக் குறையும் தன்மை உடையது என்பதை நான் உணர்ந்தபோது இந்த எதிர்மறை எண்ணங்கள் நின்றுவிட்டன. எனவே, நேர்மறையான உறுதிப்பாடுகளால் நான் வலுவூட்டப்பட்டேன்.

‘வாழ்க்கை இந்த வலியைக் காட்டிலும் பெரிது’, ‘பொறுமை வெகுமதி தரும்’, ‘கடவுளின் கால அளவில் நான் நலமுடன் இருப்பேன்.’ இவ்வாறு எனது கண்ணோட்டங்கள், சிந்தனை அமைப்புகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் நேர்மறையான உருவாக்கம் ஏற்பட்டது. அது என்னுடைய மன இறுக்கங்களை, அழுத்தங்களைக் குறைத்து என் உயிர் வாழ்க்கையில் நிம்மதி காண உதவின.

மற்றொன்று, இந்த வலிகள் இருப்பதே செல்கள் புதுப்பிறப்பு பெறுகின்றன என்பதற்கு அடையாளம். இதை எழுதும்போதும் வலி தொடர்கிறது, செல்கள் வளர்கின்றன.

(தொடரும்)
news
ஆன்மிகம்
இறைவேண்டலின் பரிமாணங்கள் – 18
இறைவேண்டல் என்பது பன்முகத்தன்மை கொண்டது. அதில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. மனித ஆளுமையின் தளங்களான உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், மனவலிமை ஆகிய அனைத்துக் கூறுகளும் இறைவேண்டலில் இணையும்போதுதான், அது முழுமையானதாக மாறுகிறது. காரணம், இவை அனைத்துமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஒன்று மற்றொன்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இறைவேண்டல் பற்றிய விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். தொடக்கத் திரு அவையினருக்கு “இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்” (1பேது 4:7) என்று பேதுரு அறிவுறுத்தியுள்ளார் என்பது இங்கே நினைவு கூரத்தக்கது.

கடவுள் நமக்குத் தந்த கொடைகளுள் ஒன்றுதான் மனவலிமை (will power).  உடல்நலம், படிப்பு, உறவுகள், பழக்கவழக்கங்கள் போன்ற நம் வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் நாம் இந்த மனவலிமையைப் பயன்படுத்துகிறோம். மனவலிமையின் உதவியால்தான் நாம் உணவில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறோம், நேர மேலாண்மை செய்கிறோம், தொடங்கிய வேலையைத் தொய்வின்றிச் செய்து முடிக்கிறோம். “மன வலிமை நோயைத் தாங்கிக் கொள்ளும்; மனம் புண்பட்டால் அதைக் குணப்படுத்த யாரால் இயலும்?” (நீமொ 18:14) என்னும் நீதிமொழிகள் நூலின் வரிகள் இந்த அனுபவத்தை எடுத்துரைக்கின்றன.

சில நேரங்களில் மனவலிமை பற்றிய தன்னுணர்வு இன்றியே நாம் அதனைப் பயன்படுத்துகிறோம். ஒரே நோயினால் பாதிக்கப்பட்டிருப்போர் ஒரேவித மருந்துகளை எடுத்தாலும், ஒருசிலர் மற்றவர்களைவிட விரைவில் குணம் பெறுவதற்கு அவர்களின் மனவலிமையும் ஒரு காரணம் என்பதை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மன வலிமையைப் பற்றிய தன்னுணர்வில் வளர்ந்து, அதனை முழு முயற்சியுடன் பயன்படுத்துவோர் அனைவரும் வாழ்வில் வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். அனைவருக்கும் இது கொடையாகத் தரப்பட்டாலும், உடல் வலிமையைப் போலவே, மன வலிமையும் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. உடற்பயிற்சி செய்து நம் உடலை நாம் வலிமைப்படுத்துவது போலவே, பயிற்சியின் வழியாக நம் மனவலிமையையும் வலிமைப்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மன வலிமை பற்றிய பல செய்திகளை நாம் திருவிவிலியத்தில் காண்கிறோம். “கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல; வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்” (2திமொ 1:7) என்னும் பவுலடியாரின் சொற்கள், மன வலிமை ஒரு கடவுளின் கொடை என்பதைப் பறைசாற்றுகிறது.

திருவிவிலியம் காட்டும் மன வலிமையற்ற ஓர் அரசன் சாலமோனின் மகனான ரெகபெயாம். “ரெகபெயாம் மன வலிமையற்ற இளைஞனாய் இருந்தான்” (2குறி 13:7). எனவே, அவனால் எதிரிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை என்று குறிப்பேடு நூலில் எழுதப்பட்டுள்ளது. நேர்மாறாக, மனவலிமை பெற்ற ஓர் இளைஞனாகத் திரு முழுக்கு யோவானைப் புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். “குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்” (லூக் 1:80). பாலை நிலத்தில் வாழ்வதற்கு மனவலிமை தேவையல்லவா!

மனவலிமை என்னும் கொடையை நம் வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் பயன்படுத்த வேண்டும். நம் வாழ்வின் சோதனைகளைப் பற்றிப் பேசும் பவுலடியார், “கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்குமேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார். சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்” (1கொரி 10:13) என்று நம்மை ஊக்கப்படுத்துகிறார்.

இப்போது நாம் இறைவேண்டலுக்கு வருவோம். இறைவேண்டலின்போது நாம் உடல் களைப்பு, மனச் சோர்வு, ஆர்வமின்மை போன்றவற்றை எதிர்கொள்ளும்போதெல்லாம், மனவலிமை என்னும் கொடையைப் பயன்படுத்தி நமது இறைவேண்டலை வெற்றிகரமாக முடிக்கலாம். உடலும், உள்ளமும் சோர்ந்திருந்தாலும், இறைவேண்டல் செய்ய ஆர்வமோ, ஆற்றலோ இல்லாவிட்டாலும், ‘நான் செபிக்க விரும்புகிறேன்’ என்று நம் உள்ளத்தில் சொல்வதே ஓர் இறைவேண்டல்தான். எத்தனையோ புனிதர்கள் தங்கள் செப வாழ்வில் மனவலிமை என்னும் கொடையைப் பயன்படுத்தி இறைவேண்டலில் நிலைத்திருக்கிறார்கள். அத்தகைய வேளைகளில் குறைபாடுள்ள நம் இறைவேண்டல் ஆண்டவரின் பார்வையில் மதிப்பு மிக்கதாயிருக்கும்.

மனவலிமை தூய ஆவியாரின் தன்னடக்கம் என்னும் கனியோடு தொடர்புடையது. அது திரு அவையில் தொண்டாற்றுவதற்கு அவசியமாகத் தேவைப்படுகிறது. எனவேதான், திரு அவைப் பொறுப்பாளர்கள் “விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்” (தீத்து 1:8) என்று வலியுறுத்தினார் பவுலடியார்.

நாம் இறைவேண்டல் செய்யும்போது, அலகை அதனை முறியடிக்க முயல்வதை நாம் உய்த்துணர்ந்துள்ளோம். அத்தகைய வேளைகளில் ஆண்டவர் தந்துள்ள மனவலிமை என்னும் ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும். “நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள். அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமையைப் பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்” (எபே 6:10-11) என்னும் பவுலடியாரின் அறிவுரைக்கேற்ப, மனவலிமை என்னும் படைக்கலனையும் அணிந்துகொண்டு நாம் இறைவேண்டல் செய்வோமாக! மன வலிமை என்னும் கொடையை ஆண்டவரிடமிருந்து வேண்டிப் பெற்றுக் கொள்வோமாக!         

(தொடரும்)