news
ஆன்மிகம்
புறம் நோக்கிய மனம் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 14)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச் செல்வன்:தந்தையே, நன்மை-தீமை அறிகின்ற மரமாகிய மனம் ஒரு பக்கம் நம் வாழ்விற்கு நல்லதைச் செய்தாலும், மற்றொரு பக்கம் சில பிரச்சினைகளை உருவாக்குகிறது என்பதைக் கூறினீர்கள். அதற்கு விளக்கம் அளிக்க முடியுமா?”

அருள்பணி:மனம் எவ்வாறு நம் வாழ்விற்குள் பிரச்சினையைக் கொண்டு வருகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமெனில், நம் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். மனித மனம் இரண்டு திசைகளில் இயங்குகின்றது. ஒன்று, புறம் நோக்கி இயங்குகின்றது; மற்றொன்று, அகம் நோக்கி இயங்குகின்றது. வழக்கமாக விழித்திருக்கும் நிலையில் மனம் புறம் நோக்கி இயங்குகின்றது. மனம் புறம் நோக்கி இயங்குவது நாம் உயிர் வாழ்வதற்கும் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வதற்கும் அவசியமானதாக இருக்கின்றது. அறிவைச் சேகரித்தல், உழைத்தல், புதியனவற்றை உருவாக்குதல், வாழ்வில் முன்னேறுதல் ஆகியன மனம் புறம் நோக்கி இயங்குவதாலேயே நடைபெறுகிறது.”

அன்புச் செல்வன்: இவையெல்லாம் வாழ்விற்கு அவசியமானவைதானே?”

அருள்பணி: நிச்சயமாக! எனினும், புறம் நோக்கிய மனம் சில நன்மைகளை விளைவித்தாலும், சில தகாத விளைவுகளுக்கான காரணமாகவும் ஆகிவிடுகிறது. இந்தத் தகாத விளைவுகளுக்கான முக்கியமான காரணம், மனம் தனது மகிழ்ச்சியைப் புறம் நோக்கிய இயக்கத்தில் கண்டுகொள்ள முனைவதே! அதாவது, வாழ்வாதாரத்திற்காகவும், உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றைச் சேகரிப்பதற்காகவும் புறம் நோக்கி இயங்க ஆரம்பிக்கும் மனம், காலப்போக்கில் தனது மகிழ்ச்சியையும் புறத்தே தேட ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய தேடலின் காரணமாகவே பல்வேறு விதமான தீமைகள் மனித வாழ்விற்குள் குடியேற ஆரம்பிக்கின்றன. முக்கியமாக, மூன்று காரியங்களைச் சுட்டிக்காட்டலாம். அவை ) தன்னிலிருந்தே அந்நியப்படல், ) இருமைத்தன்மை, ) ஒப்பீடும் அதோடு இணைந்த மதிப்பீடும்!”

கிறிஸ்டினா:ஒவ்வொன்றாக விளக்குங்கள் தந்தையே!”

அருள்பணி:முதலாவதாக, புறம் நோக்கிய மனம் எப்பொழுதுமே புற உலகிலே சஞ்சரிப்பதன் காரணமாக, நம்மிலிருந்தும் நமக்குள் இருக்கும் கடவுளிடமிருந்து நாம் அந்நியப்படக் காரணமாக இருக்கின்றது (self-alienation). கடவுள் நம்முடன் இருந்தாலும், நாம் அவரை உணர முடியாததற்கான காரணம், நம் மனம் நம்மில் இல்லாமல் இருப்பதே! அது எங்கெங்கோ இருந்து, எதையெதையோ செய்து கொண்டிருக்கின்றது. நமக்குள்ளே கடவுள் இருந்தாலும், இந்த மனமோ வீடு தங்காமல் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. மனத்தின் இத்தகைய அவலநிலையை நம்மில் பலர் அறியாமல், நம் வாழ்வின் பிரச்சினைக்கான வேர் எங்கோ இருக்கின்றது என்று எண்ணி விழிப்புணர்வற்ற நிலையில் நம் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கின்றோம்.”

அகஸ்டின்:இருமைத்தன்மை என்றால் என்ன தந்தையே?”

அருள்பணி: இருமைத்தன்மை (duality) என்பது உலகின் அடிப்படைத்தன்மைகளில் ஒன்று! இந்த உலகத்தின் ஓட்டம்இருமைஎன்பதன் மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இரவு-பகல், வெம்மை-குளிர், மேலே-கீழே, இருள்-ஒளி, பொருண்மை-வெறுமை (matter-vacuum), அகம்-புறம், உள்ளே-வெளியே போன்ற இருமையே உலகின் அடிப்படைத்தன்மை. மேற்கூறப்பட்டவை வெளிப்படையாகப் பார்க்கப்படும்போது ஒன்றுக்கொன்று எதிரானவை போன்று தோன்றினாலும், அவற்றின் கலப்பில்தான் இந்தப் பூமியின் ஓட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. இத்தகைய இருமையை உணருகின்ற சக்தி மனித மனத்திற்கு உண்டு.”

அன்புச் செல்வன்: தந்தையே, எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது. இளைஞன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அவ்வழியே வந்த பெரியவர்தம்பி, எத்தனை ஆடுகள் மேய்க்கின்றாய்?’ என்று கேட்க, இளைஞன், ‘பெரியவரே! என்னிடம் கறுப்பு ஆடுகளும் இருக்கின்றன, வெள்ளை ஆடுகளும் இருக்கின்றன. நீங்கள் எந்த ஆட்டின் எண்ணிக்கையை கேட்கிறீர்கள்?’ என்று பதில் கேள்விக் கேட்டான். பெரியவர்கறுப்பு ஆடுகளின் எண்ணிக்கை என்ன?’ என்று கேட்டார். ‘25’ என்று பதில் வந்தது. ‘வெள்ளை ஆடுகளின் எண்ணிக்கை?’ என்ற அவரது கேள்விக்கும் ‘25’ என்ற பதிலே வந்தது. இருவருக்குமிடையேயான உரையாடல் தொடர்ந்தது. ‘உன்னிடம் உள்ள ஆடுகளுக்கு உணவாக என்ன கொடுக்கிறாய்?’ என்று கேட்ட பெரியவரிடம், இளைஞன், ‘எந்த ஆட்டைக் குறித்துக் கேட்கிறீர்கள்? கறுப்பு ஆட்டையா? அல்லது வெள்ளை ஆட்டையா?’ என்று கேட்டான். பெரியவர், ‘கறுப்பு ஆடுகளுக்கு என்ன தருகிறாய்?’ என்று கேட்க, இளைஞன், ‘கருவேலமரக் காய்கள்என்றான். பெரியவர், ‘வெள்ளை ஆடுகளுக்கு?’ என்று கேட்க, அதற்கும்கருவேலமரக் காய்கள்என்று பதில் தந்தான். பெரியவர் இலேசாக எரிச்சல் அடைந்தார். எனினும் எரிச்சலை அடக்கிக்கொண்டுஉன்னிடம் உள்ள ஆடுகள் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் தருகின்றன?’ என்று கேட்டார். ‘எந்த ஆட்டைக் கேட்கிறீர்கள்? கறுப்பு ஆட்டையா? அல்லது வெள்ளை ஆட்டையா?’ என்று கேட்க, பெரியவரும்கறுப்பு ஆடுகள் எவ்வளவு பால் தருகின்றன?’ என்று கேட்க, ‘அரைப்படி பால்என்று பதில் வந்தது. ‘அப்படியானால் வெள்ளையாடுகள்?’ என்ற கேள்விக்குஅதுவும் அரைப்படி பால்தான்என்றான் இளைஞன்.

பெரியவர் எரிச்சலின் உச்சத்திற்குச் சென்றார். ‘உனக்குப் புத்தி பேதலித்து விட்டதா? ஏன் கறுப்பு ஆடுகள், வெள்ளை ஆடுகள் என ஒவ்வொரு முறையும் பிரித்துப் பிரித்துப் பேசுகிறாய்?’ என்று கோபத்துடன் கேட்டார். இளைஞன் கொஞ்சமும் பதற்றப்படாமல்தயவுசெய்து கோபப்படாதீர்கள். நான் அவ்வாறு கூறியதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதோ இந்தக் கறுப்பு ஆடுகளெல்லாம் இருக்கின்றன அல்லவா? இவையனைத்தும் எனக்குச் சொந்தமானவைஎன்று சொல்ல, பெரியவர் ஆர்வமுடன் அப்படியா! அப்படியென்றால் வெள்ளை ஆடுகள் யாருக்குச் சொந்தம்?’ என்று கேட்க, இளைஞனோ கொஞ்சமும் உணர்ச்சிவசப்படாமல்அவையும் எனக்குத்தான் சொந்தம்என்றானாம். இதுதான் மனித சிந்தனை!

நீங்கள் கூறுவதுபோல எதையும் பிரித்துப் பிரித்துப் பார்ப்பது. நான்-நீ, என்னுடையது-உன்னுடையது, படித்தவன்-படிக்காதவன், கறுப்பர்-வெள்ளையர் என்று பிரித்துப் பார்க்கும் தன்மையுடையது மனம்!”

அருள்பணி:இவ்வாறு இருமையாக இருப்பனவற்றை மனித மனம் ஒப்பிட்டு பிடித்தது-பிடிக்காதது, நல்லது-கெட்டது, உயர்ந்தது-தாழ்ந்தது, இன்பமானது-துன்பமானது, அழகானது-அசிங்கமானது, தேவையானது-தேவையற்றது, கடினமானது-எளிதானது என்று தரம் பிரித்து முத்திரை குத்துகிறது. இத்தகைய தரம் பிரித்தல் மனித மனம் செய்கின்ற வேலை! உலகத்தில் நல்லது என்றோ கெட்டது என்றோ, உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ, இன்பமானது என்றோ துன்பமானது என்றோ, அழகானது என்றோ அசிங்கமானது என்றோ, எந்தப் பிரிவினைகளும் கிடையாது. கடவுள் ஆறு நாள்களாக உலகைப் படைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டும் திருவிவிலியத்தின் முதல் பிரிவில், ‘கடவுள் அது நல்லது என்று கண்டார்என்ற வார்த்தைகள் ஆறு முறை வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது, கடவுள் படைக்கப்பட்ட படைப்பில் தாழ்ந்தது, துன்பமானது, கடினமானது, கெட்டது, தேவையற்றது, அசிங்கமானது என்று ஏதுமில்லை. எனினும், மனித மனம் தனது இருமைத்தன்மையின் காரணமாகப் படைப்பையும் வாழ்க்கை நிகழ்வுகளையும் இவ்வாறு தரம் பிரிக்கிறது.”

அன்புச் செல்வன்: அதாவது, உலகத்தில் இயல்பாக இருக்கும் இருமையை மனித மனம் தரம் பிரித்து, அதை உயர்ந்தது-தாழ்ந்தது, இன்பம்-துன்பம் என்ற ரீதியில் மதிப்பீடு செய்கிறது. எதன் அடிப்படையில் நம் மனம் இத்தகைய மதிப்பீட்டைச் செய்கிறது தந்தையே!”

அருள்பணி:நம்மை மையமாக வைத்துதான்! அதாவது, மனிதர்களாகிய நமது நலத்தையும் சுகத்தையும் மையமாக வைத்துதான் நம் மனம் எல்லாவற்றையும் பிரிக்கிறது. மனம் இவ்வாறு செயல்படுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. இவ்வாறு தரம் பிரித்தால்தான், நாம் நமக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து நம்மை வளர்த்துக்கொள்ள முடியும், நம் வாழ்வை உயர்த்திக் கொள்ள முடியும். எனவே, இத்தகைய பாகுபாடும் தரம் பிரித்தலும் நம் வாழ்வாதாரத்திற்கு மிகவும் அவசியமானவையாக இருக்கின்றன. எனினும், மனித மனம் இவ்வாறு சுற்றியுள்ளவற்றைத் தரம் பிரிக்கும்போது, ஒருசில பிரச்சினைகள் உருவாகின்றன. தமிழ் ஆன்மிக மரபாகிய சைவ சித்தாந்தத்தின்படி ஒரு மனிதரின் வாழ்வு மகிழ்ச்சியற்றதாவும் நிறைவற்றதாகவும் இருப்பதற்குக் காரணம் ஆணவம், கன்மம் (வெறுப்பு), மாயை என்ற மூன்று காரணிகளே! இவைமும்மலங்கள்என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்றுமே நம் மனம் சுற்றியுள்ளவற்றை இரண்டாகப் பிரித்துத் தரம் பிரிப்பதன் காரணமாக நம்மில் நிகழ்பவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றைக் குறித்து அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கலாம்.” 

(தொடரும்)

news
ஆன்மிகம்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 14

13. வார்த்தை மனுவுருவான மறையுண்மையில் நிறைவேறும் எசாயாவின் இறைவாக்கு (எசா 7:14). (Isaiah’s prophecy fulfilled in incarnation)

1. பழைய ஏற்பாட்டில் மரியாவைப் பற்றிச் சிந்திக்கையில், இரண்டாம் வத்திக்கான் சங்கமானது (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 55) மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றும் தொடக்கக் காலக் கிறித்தவர்களின் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்த இறைவாக்கினர் எசாயாவின் ஏட்டைச் சுட்டிக்காட்டுகிறது: “இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள்இம்மானுவேல்என்று பெயரிடுவார் (எசா 7:14).

கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது, “அவர் கருத்தரித்திருப்பது தூய ஆவியாரின் வல்லமையால்தான்என்று கூறி மரியாவை அவரின் மனைவியாக ஏற்றுக்கொள்வதற்கு யோசேப்புவை அழைத்த வானதூதரின் வார்த்தைகளில் அந்த இறைவாக்குக்கு நற்செய்தியாளர் மத்தேயு கிறித்தியல் மற்றும் மரியியல் அர்த்தத்தைக் கொடுக்கின்றார். உண்மையில், “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால்கடவுள் நம்முடன் இருக்கிறார்என்பது பொருள் (மத் 1: 22-23) என்பதையும் அவர் சேர்த்துக் கூறுகின்றார்.

2. எபிரேய திருவிவிலிய மூலத்தில் இந்த இறைவாக்கானது இம்மானுவேலின் கன்னியிடமிருந்தான பிறப்புப் பற்றித் தெளிவாக முன்னறிவிக்கவில்லை. உண்மையில் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றalmahஎன்ற எபிரேயச் சொல்லானதுஒரு கன்னி (virgin) என்ற பொருளில் இல்லாமல், வெறுமனே ஓர் இளம் பெண்ணைத்தான் குறிக்கின்றது. மேலும், யூத மரபானதுஎன்றென்றைக்கும் கன்னிஎன்ற கருத்தை (idea of perpetual virginity) ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் கன்னித்தாய்மை (idea of virginal motherhood) என்ற கருத்தையும் அந்தக் கலாச்சாரம் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை.

ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தைத் தருவார்

எவ்வாறாயினும் கிரேக்க மரபில்almahஎன்ற இந்த எபிரேயச் சொல்லானதுparthenosஅதாவது  ‘virgin’  என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெறுமனே ஒரு மொழிபெயர்ப்பு பண்புக் கூறாகவே எண்ணத் தோன்றுகின்ற இந்நிகழ்வில், மெசியாவின் வியக்கத்தக்க பிறப்பைப் புரிந்துகொள்வதற்கு நம்மைத் தயாரிப்பதற்காக எசாயாவின் வார்த்தைகளுக்குத் தூய ஆவியாரினால் வழங்கப்பட்டதொரு வியக்கத்தக்க  விளக்கமளிக்கின்ற நிகழ்வாகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். உண்மையில், ‘கன்னிஎன்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பானது, வழக்கத்துக்கு மாறானதொரு கருத்தரித்தலின் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதன் வழியாக, எசாயாவின் நூலானது கன்னி கருத்தரித்தலின் அறிவிப்பிற்குத் தயாரிக்கின்றது; அதனை ஒரு தெய்வீக அடையாளமாகக் காட்டுகின்றது. இக்காலத்தில் ஓர் இளம்பெண் தன் கணவனுடன் இணைந்த பிறகு ஒரு மகனைக் கருத்தரிப்பது என்பது வழக்கத்துக்கு மாறான ஒன்றல்ல; இருப்பினும், எசாயாவின் இறைவாக்கானது கணவனைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லைஅப்படியானால், இவ்வகையான முன்வரைவானது பின்னர் கிரேக்க மூலத்தில் கொடுக்கப்பட்ட பொருள் விளக்கத்தைப் (interpretation) பரிந்துரைத்தது.

3. எசாயாவின் இறைவாக்கானது (எசா 7:14); அதன் உண்மையான சூழலில் அண்டை நாட்டு மன்னர்களின் படையெடுப்பினால் அச்சுறுத்தப்பட்டு, அசீரியாவிடமிருந்து தனது மற்றும் தனது நாட்டின் பாதுகாப்பைத் தேடிய ஆகாசு மன்னனின் நம்பிக்கை குறைவிற்கானதோர் இறைப்பதிலாக இருந்தது. அவனது நம்பிக்கையைக் கடவுளில் மட்டுமே வைக்கவும், அசீரியர்களின் அபாயகரமான  தலையீட்டை மறுக்கவும் அவனை அறிவுறுத்தி, கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைப்பதற்கு  கடவுள் சார்பாக எசாயா இறைவாக்கினர் அவனைப் பின்வரும் வார்த்தைகளால் அழைக்கிறார்: “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்.” மனிதனின் உதவியில் அவனது விடுதலையைத் தேடுவதற்கு விரும்பி அந்த அரசர்  கடவுளிடம் ஓர் அடையாளத்தைக் கேட்க மறுக்கின்றபொழுது, இறைவாக்கினர் நன்கு அறியப்பட்ட இந்த முன்னறிவிப்பைச் செய்கிறார்: “தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? ஏன் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவள்இம்மானுவேல்என்று பெயரிடுவார் (எசா 7:14).

இம்மானுவேலின் அடையாளமானகடவுள் நம்மோடுஎன்ற அறிவிப்பு, வரலாற்றில் கடவுளின் உடனிருத்தலின் வாக்குறுதியைக் குறிக்கிறது. இது வார்த்தை மனுவுருவாதலின் மறைபொருளிற்கு முழு அர்த்தம் பெறவிருக்கின்ற நிகழ்வு வழியாக அதன் முழு அர்த்தத்தைக் காணும்.

4. இம்மானுவேலின் அற்புதமான பிறப்பின் அறிவிப்பில், கருத்தரித்துக் குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் அறிகுறியானது, அவளது மகனில் நடந்தே தீர வேண்டியதோடு, தாயையும் தொடர்புபடுத்தும் நோக்கத்தைக் காட்டுகிறதுஒரு மாதிரி அரசைக் கட்டியெழுப்புவதற்காக, அதாவது மெசியாவின் அரசை (messianic kingdom) ஓர் அரசர் குறித்து வைக்கப்படுகிறார். மேலும், பெண்ணின் பங்கை எடுத்துக்காட்டும் சிறப்புமிக்க இறைத் திட்டத்திற்கானதொரு பார்வையையும் இது வழங்குகிறது.

உண்மையில் அந்த அடையாளமானது குழந்தையை மட்டுமல்ல; மாறாக, பின்னாளில் அந்தப் பிறப்பில் வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கை நிறைந்த நிகழ்வாகிய வியக்கத்தக்க அந்தக் கருத்தரிப்பானது, தாயின் மிக முக்கியமானதொரு பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

இம்மானுவேல் பற்றிய முன்னறிப்பானது, சாமுவேல் இரண்டாவது புத்தகத்தில் நாம் வாசிக்கின்றவாறு, தாவீது அரசருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் பின்புலத்திலும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இங்கு அரசரிடம்  அவரின் சந்ததிகளுக்கான கடவுளின் இரக்கத்தை  இறைவாக்கினர் நாத்தான் பின்வரும் வார்த்தைகளில் உறுதியளிக்கிறார்: “எனது பெயருக்காகக் கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான் (2சாமு 7:13-14).

தாவீது குடும்பத்திலிருந்து கடவுளின் மகனைப் பிறக்கச் செய்ததன் வழியாக, அதன் முழுமையான மற்றும் உண்மையான அர்த்தத்தைத் தர புதிய ஏற்பாட்டில் கடவுள் தாவீதின் வழிமரபிடம்  ஒரு தந்தைக்குரிய பங்கை ஆற்றுவதற்கு விரும்புகிறார் (ஒப்பிடுக. உரோ 1:3).

5. இதே எசாயா இறைவாக்கினர் மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றுமோர் ஏட்டில், வழக்கத்திற்கு மாறான இம்மானுவேலினுடைய பிறப்பின் இயல்பை உறுதி செய்கின்றார். இதோ அவரின் வார்த்தைகள்: “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும் (எசா 9:6). இவ்வாறாக, இறைவாக்கினர் இந்தக் குழந்தைக்கு வழங்கப்பட்டிருந்த வெவ்வேறு பெயர்களில், அந்தக் குழந்தையின் அரசருக்குரிய பணிகளைப் பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றார்: ஞானம், வலிமை, தந்தைக்குரிய அன்பு மற்றும் சமாதானம் செய்தல். இங்குத் தாயானவள் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், மெசியாவின் அரசில் மக்கள் நம்பக்கூடிய அனைத்தையும் கொண்டுவரக்கூடிய மகனை உயர்த்தியிருப்பதென்பது அவரைக் கருத்தரித்துப் பெற்றெடுத்த பெண்ணிலும் பிரதிபலிக்கப்படுகின்றது.

6. இறைவாக்கினர் மீக்காவின் நன்கு அறியப்பட்டதோர் இறைவாக்கும் இம்மானுவேலின் பிறப்பை மறைமுகமாகக் குறிப்பிடுகின்றது. இறைவாக்கினர் மீக்கா இவ்வாறு கூறுகிறார்: “நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச்சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக்காலமாய் உள்ளதாகும் (மீக் 5:2-3). இந்த வார்த்தைகள் மகிழ்ச்சி மற்றும் மீட்பைக் கொண்டு வருகின்ற வியக்கத்தக்க நிகழ்வு வழியாக நினைவுகூரப்படுகின்ற மற்றும் பெருமைப்படுத்தப்படுகின்ற அந்தத் தாயில், மரியாவின் பங்கை மறுபடியும் கோடிட்டுக் காட்டிமெசியா பற்றிய நம்பிக்கை நிறைந்ததொரு பிறப்பின் எதிர்பார்ப்பை மீண்டும் எதிரொலிக்கின்றன.

முன்னறிவிப்பானது கன்னித்தாய்மையின் வெளிப்பாட்டிற்குத் தயாரிக்கின்றது

7. மரியாவின் கன்னித்தாய்மையானது  பொதுவாக ஏழை எளியவர்களுக்கான கடவுளின் தயவினால் ஏற்படுத்தப்பட்டது (ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 55).

அவர்களின் முழு நம்பிக்கையையும் ஆண்டவரிடத்தில் வைக்கக்கூடிய அவர்களது மனநிலையினால், அவர்கள் மரியாவின்  கன்னிமையின் ஆழமான அர்த்தத்தை முன்கூட்டியே அறிந்திருந்தனர். மனிதத் தாய்மையின் மகத்துவத்தை நிராகரித்து, அவர் அவரின் சொந்த வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வளத்தையும்  கடவுளிடமிருந்து எதிர்நோக்கியிருந்தார்.

ஆகையால், பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டில் மட்டுமே முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட கன்னித் தாய்மையின் முறையானதோர் அறிவிப்பைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், இறைவாக்கினர் எசாயாவின் முன்னறிவிப்பு (எசா 7:14) இந்த  மறையுண்மைக்கான வெளிப்பாட்டிற்குத் தயாரிக்கின்றது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழியாக்கத்திலும் இவ்வாறே கட்டமைக்கப்படுகின்றது. இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட முன்னறிவிப்பை மேற்கோள்காட்டி, மரியாவின் கன்னிக் கருவறையில் (in Mary’s virginal womb) இயேசுவின் கரு உருவானதன் வழியாக அதன் முழுமையான நிறைவேற்றத்தை மத்தேயு நற்செய்தியானது எடுத்துரைக்கின்றது.

மூலம்: John Paul II, Isaiah’s prophecy fulfilled in incarnation, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 7 February 1996, p. 11.

news
ஆன்மிகம்
மரியா காட்சி அனுபவங்கள்: திரு அவையின் புதிய விதிமுறைகள் (5 புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்)

சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களுக்குதடை இல்லைஎன்ற சான்று வழங்க ஒப்புதல் கேட்டு மறைமாவட்ட ஆயர்கள் நம்பிக்கை கோட்பாட்டுப் பேராயத்திற்கு அனுப்புகின்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பதில்கள் அனுப்பப்படுகின்றன. மேற்கண்ட புதிய விதிமுறைகளைப் பயன்படுத்தி நம்பிக்கை கோட்பாட்டுப் பேராய முதல்வர் கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் அண்மைக்காலமாக ஆயர்களுக்கு அனுப்பியுள்ள சில பதில் கடிதங்களின் சுருக்கத்தைக் கீழே பார்க்கலாம்.

1) தென் இத்தாலி நாட்டில் லோகிரி-ஜெரச்சே (Lori-Gerace) மறைமாவட்ட ஆயருக்கு அனுப்பியுள்ள 2024, ஜூலை 5 தேதியிட்டதடை இல்லைகடிதம். கலாபரியாவில் உள்ள சாந்தா தொமினிக்கா தி பிளாகானிக்கா (Santa Domenica di Placanica) என்ற இடத்தில் கொசிமோ பிரகோமெனி (Cosimo Fragomeni) என்ற 18 வயது விவசாயி பெற்ற மலை மாதா (Modonna dello Scogolio) காட்சி அனுபவங்கள்;

2) ஸ்பெயினில் மெரிதா-படஜோஸ் (Merida -Badajoz) உயர் மறைமாவட்ட ஆயருக்கு 2024, ஆகஸ்டு 22 தேதியிட்டதடை இல்லைகடிதம். சந்தவிலா என்ற இடத்தில் மார்சலினா பரோசொ எக்ஸ் போசித்தோ (Marcelina Baroso Exposito) மற்றும் ஆப்ரா பிரிஜிதொ பிளான்கோ (Modonna dello Scoglio) ஆகியோர் வியாகுல அன்னையிடம் தனித்தனியாகப் பெற்ற காட்சி அனுபவங்கள்.

3) பிரான்சின் பூர்ஜெ (Bourges) உயர் மறைமாவட்ட ஆயருக்கு 2024, ஆகஸ்டு  22 தேதியிட்டதடை இல்லைகடிதம். பெல் லெவுசின் (Pellevoisin) திருத்தலத்தில் எஸ்தெல் பகுட்டே (Estelle Faguette) இரக்கத்தின் அன்னையிடம் பெற்ற காட்சி அனுபவங்கள்;

4) வட இத்தாலியின் பிரெஷா (Brescia) மறைமாவட்ட ஆயர் பியர் அந்தோணியோ திரெமொலதா (Pierantonio Tremolada) அவர்களுக்கு 2024, ஜூலை 8 தேதியிட்டதடை இல்லைகடிதம். போந்த நெல்லெ தி மோந்திகியாரி (Fontanelle di Montichiari) என்ற இடத்தில் பியரினா ஜில்லி (Pierina Gilli) என்பவர் இரகசிய ரோசா அன்னையிடம் (Our Lady of Mystical Rose) பெற்ற காட்சி அனுபவங்கள் மற்றும் செய்திகள்;

5) ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள அனைத்து நாடுகளின் அன்னையிடம் (Our Lady of all Nations) ஈடா பியர்டெமென் (Ida Peerdeman) 1945-இல் பெற்ற காட்சி அனுபவங்களைப் பற்றி 2024, ஜூலை 11 தேதியிட்ட அறிவிப்புக் கடிதம். சாட்டியுரைக்கப்பட்ட நிகழ்வுகள் இயல் நிலை கடந்ததல்ல (non-supernatural) என்று 1974-இல் திருத்தந்தை ஆறாம் பவுல் வழங்கி இரகசியமாக வைக்கப்பட்டிருந்த தீர்ப்பு இப்பொழுது இக்கடிதத்தின் வழியாகப் பகிரங்கமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது;

6) புவர்த்தோ ரிக்கோவில் (Puerto Rico) ககுவாஸ் (Caguas) மறைமாவட்ட ஆயர் எசுபியோ ரமோஸ் மொராலெஸ் (Eusebio Ramos Morales) அவர்களுக்கு எழுதியுள்ள 2024, ஆகஸ்டு 1 தேதியிட்ட கடிதம். 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எலெனிட்டா தெ ஜீசஸ் (Elenita de Jesus) என்ற பெண் அன்னை மரியாவிடம் மிகுந்த பற்றுக் கொண்டவராகவும், மேய்ப்புப் பணியில் அக்கறையுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகவும், கார்மெல் மலையில் மரியன்னைக்கு ஒரு திருத்தலம் கட்டியதாகவும், பின்னர் ஆண்டவர் கிறிஸ்துவோடும், அன்னை மரியாவோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இந்த நிகழ்வுகளில் இயல்நிலை கடந்த இயல்பு எதுவும் இல்லை (Constat de non-supernaturalitate) என்றும், இலெனிட்டா கன்னிமரி அன்னை அல்லள் என்றும் இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

6. வேளாங்கண்ணி திருத்தலம்

இந்தியாவின் வேளாங்கண்ணியில் மரியாவின் அன்புஎன்று தலைப்பிட்டு 2024 ஆகஸ்டு 01 தேதியிட்ட கடிதம் ஒன்றைக் கர்தினால் விக்டர் மானுவல் பெர்னாண்டஸ் தஞ்சை மறைமாவட்ட ஆயருக்கு அனுப்பியுள்ளார் (The Diocese of Thanjavur New Lette,  Sep. 2024, பக். 4-5). மேற்கூறப்பட்ட புதிய விதிமுறைகளைப் பின்பற்றிப் பதில்கள் அனுப்பப்பட்டு வருவதுபோல், வேளாங்கண்ணியில் நடந்ததாகச் சாட்டியுரைக்கப்படும் இயல்நிலை கடந்த காட்சி அனுபவங்களுக்குதடை இல்லைஎன்ற ஒப்புதல் இக்கடிதத்தில் வழங்கப்பட்டுள்ளதாகச் சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது (.கா: catholic herald eo./Vatican-approves-devotion-to-India’s -16th century-vailankanni-marian-shrine). ஆனால், அப்படி ஓர் ஒப்புதல் கொடுப்பதற்காக இக்கடிதம் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக, இத்திருத்தலத்தில் பல நூற்றாண்டுகளாகத் தூய ஆவியாரின் செயல்பாட்டால் விளையும் பல ஆன்மிகக் கனிகளைக் குறிப்பிட்டு, ‘அனைவரின் அன்னையாகஇயேசு நமக்கு விட்டுச்செல்ல விரும்பிய மரியாவின் கனிவும் உடனிருப்பும் வெளிப்படுகின்றன என்றும், “திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, இந்த இறைநம்பிக்கை திருத்தலத்தின் ஆன்மிக அழகை எண்ணியும், செப்டம்பர் மாத விழாக் கொண்டாட்டங்களைக் கருதியும் அனைத்துத் திருப்பயணிகளுக்கும் இறையாசிர் வழங்குவதாகவும்இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் காணப்படும் மற்றொரு கூற்று கூர்ந்த மதியோடு ஆராய்தற்குரியது. இத்திருத்தலத்திற்குச் செல்லும் கிறித்தவ மற்றும் கிறித்தவரல்லாத பல திருப்பயணிகள் மரியாவின் கரங்களில் இயேசுவைத் தேடி, தங்கள் வேதனையையும் நம்பிக்கையையும் அவரது அன்னையின் இதயத்திடம் ஒப்படைக்கிறார்கள் என்றும், இதைப் பல சமயங்களின் ஒத்திசைவு அல்லது கலவை என்று கருதக்கூடாது என்றும் இக்கடித்தில் கூறப்பட்டுள்ளது (This should not be considered as a form of syncretism or mixing of religions). ஆனால், பெண் தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுள்ள இந்து சமயத்தாரும், இந்து சமயத்திலிருந்து மாறிய கிறித்தவர் பலரும் மரியாவைப் பெண் தெய்வமாகப் பாவித்து வணங்கி வருவதை எளிதில் மறுக்க இயலாது (Ancy Donal Modonnaï ‘Velankanni: Where Catholic Faith Blends with Hindu Rituals’, in The Hindu, 19 August 2022). இன்னும் குறிப்பாக, தமிழ்நாடு மீனவர்கள் கடல் தெய்வத்தை நம்புவதாகவும், அத்தெய்வம்கடல் அன்னைஎன்று அழைக்கப்படுவதாகவும், அந்தக் கடலன்னை தற்பொழுது கன்னி மேரியாகி விட்டார் என்றும் ஓர் ஆய்வில் கூறப்படுகிறது (நிவேதிதா லூயிஸ், அறியப்படாத கிறித்தவம்).

இந்த நம்பிக்கை. “கடவுள் ஒருவரே, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் (இயேசு கிறிஸ்து) ஒருவரே (1திமொ 3:5-6) போன்ற திருவிவிலியப் போதனைகளுக்கு முரண்பாடாகத் தோன்றினாலும், திருப்பயணிகள் வேளாங்கண்ணி அன்னையைத் தெய்வமாகப் பாவித்து வணங்குவதும் போற்றுவதும், வேண்டுவதும் அதற்கான தங்களுக்கே உரிய சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதும் நிதர்சனமாக நடக்கிறது.

1671-ஆம் ஆண்டு போர்த்துக்கீசிய வணிகர்களை நடுக்கடலில் வீசிய புயலிலிருந்து காப்பாற்றியதும், அதற்கு முன்னர் நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக்கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவனை நடமாட வைத்ததும் அன்னையின் கனிவு நிறைந்த ஆற்றலினால் என்பது சாட்டியுரைக்கப்படும் இந்நிகழ்வுகளின் மூலக்கதைப் புனைவுகளில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (S.R. Santos, The Shrine Basilica of Our lady of Health, Vailankanni, Thanjavu, Don Bosco Press, 12th Revised and Enlarged Edition, 1983).

எனவே, மரியாவின் கரங்களில் இருக்கும் இயேசுவைத் தேடித் திருப்பயணிகள் செல்கிறார்கள் என்பதும், அவர்களது தேவைகள் அனைத்தையும் தமது அன்னையின் பரிந்துரையால் இயேசு நிறைவேற்றித் தருகிறார் என்பதும், அவர்களது பக்தியைபல மதங்களின் ஒருவித ஒத்திசைவு அல்லது கலவை என்று கருதப்படக் கூடாதுஎன்பதும் வலிந்து கூறப்படுவதாகவே தோன்றுகிறது.

(தொடரும்)

news
ஆன்மிகம்
அடுத்த திருத்தந்தை யார்? (கண்டனையோ... கேட்டனையோ... 34)

12 ஆண்டுகள் ஆட்சி செய்து, திரு அவையின் சிந்தனையிலும் அக்கறையிலும் உத்தரவாதமான மாற்றங்களை ஏற்படுத்திய, வரலாற்றின் முதல் இலத்தீன்-அமெரிக்கத் திருத்தந்தை பிரான்சிஸ் இறந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது எல்லார் மனத்திலும் இருக்கின்ற கேள்வி: ‘அடுத்த போப் யார்?’ இன்னும் சில நாள்களில் அதற்கு விடை கிடைத்துவிடும். Hopefully !

சிலகான்க்ளேவ்கள்ரொம்ப நாள்கள் நடந்திருக்கின்றன. வரலாற்றின் மிக நீண்ட கான்க்ளேவ் 1268-ஆம் ஆண்டு நடந்தது. கால அளவு: 2 வருடம், 9 மாதங்கள்ஊர்க்காரர்கள் கான்க்ளேவ் நடந்த மாளிகையின் கதவுகளை அடைத்து, உணவு வழங்கலைக் குறைத்து, மேல் கூரையை அங்கங்கே பிரித்துவிட்டு... இப்படிப் பல   வகைகளில் கர்தினால்களைத் துன்புறுத்திய பின்புதான் ஒரு வழியாக அவர்கள் சமரசமாகி, திருத்தந்தை பத்தாம் கிரகோரியைத் தேர்ந்தெடுத்தார்களாம்இப்போது அதுபோல நடக்க வாய்ப்பில்லை.

சமீபத்திய இரண்டு கான்க்ளேவ்களும் 24 மணி நேரங்களில் முடிந்துவிட்டன. 16-ஆம் பெனடிக்டின் தேர்வுக்கு நான்கு சுற்று ஓட்டுகளும், பிரான்சிசுக்கு 5 சுற்றுகளுமே தேவைப்பட்டன. இந்தக் கான்க்ளேவில் 138 கர்தினால்கள் பங்கேற்பார்கள். அவர்களில், 110 பேர் திருத்தந்தை பிரான்சிசால் நியமிக்கப்பட்டவர்கள். ஏறக்குறைய 80 %. பிரான்சிஸின் சிந்தனையை ஒத்த ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறார்கள். ஆனால், எதுவும் நிச்சயம் இல்லை.

இத்தாலி நாட்டில் ஒரு பழமொழி உண்டு. ‘The one who enters the conclave as a Pope leaves it as a Cardinal.’ ‘நான்தான் திருத்தந்தைஎன்ற நம்பிக்கையில் கான்க்ளேவுக்குள் நுழையும் ஒருவர் கர்தினாலாகத்தான் திரும்பி வருவார். முன்னணிப் பத்திரிகைகள் வெளியிடும் ஆருடங்கள் பல கான்க்ளேவ்களில் பொய்த்துப் போயிருக்கின்றன. கடந்த கான்க்ளேவ் அதற்குச் சிறந்த உதாரணம். 2013-ஆம் ஆண்டு பெனடிக்டின் பதவி விலகலுக்குப் பின் நடந்த தேர்வின்போது, ஒரு பத்திரிகை கூடஹோர்கேவின் பெயரைக் கூறவில்லை.

Papabileஎன்ற இத்தாலியன் வார்த்தைக்குPope-ableஅல்லதுPope-worthyஎன்று அர்த்தம். பிரான்சிசுக்கு அடுத்து திருத்தந்தையாகத் தகுதி படைத்தவர் என்று நிபுணர்களும், பத்திரிகைகளும் முன்மொழிகிற பல papabile கர்தினால்களில் ஐவரைப் பற்றிய குறிப்புகள் நம் வாழ்வுவாசகர்களுக்காக இங்கே... இவர்களில் ஒருவர் அடுத்தத் திருத்தந்தை  ஆக லாம் அல்லதுமற்றொரு பிரான்சிஸ்ஆச்சர்யம் கூட நிகழலாம்!

கர்தினால் பியத்ரோ பரோலின்

இத்தாலி  நாட்டுக்காரர். வயது 70. பிரான்சிஸின் 12 ஆண்டு கால ஆட்சி முழுவதும் அவருடைய Secretary of State - ஆகப் பணியாற்றியவர். வத்திக்கானில் இந்தப் பதவியின் அதிகாரங்கள் விரிவானவை. திரு அவை அதிகார ஏணியில் இரண்டாவது மிகப்பெரிய பொறுப்பு இது. Second-in-command. ‘துணை போப்என்றும் கூறலாம். வத்திக்கான் நகரின் பிரதமர் இவரே. ‘Roman Curiaஎனப்படும் வத்திக்கானின் மைய நிர்வாக இயந்திரத்தை ஒருங்கிணைப்பதும், திருத்தந்தையின் ஆவணங்கள், சந்திப்புகள், செய்திக்குறிப்புகள் ஆகியவற்றை முறைப்படுத்துவதும் இவருடைய அலுவலகமே. உலக நாடுகளுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான தூதரக உறவுகளுக்கு இவரே பொறுப்பு. திருத்தந்தையின் முதன்மை ஆலோசகர்! பரோலின் அதிர்ந்து பேசாதவர். ‘டிப்ளமேட்டுக்குரியவிலகல் தன்மை கொண்ட நிர்வாகி. நடுநிலைவாதியாக (centrist) கர்தினால்கள் மத்தியில் அறியப்படுபவர். உலகளாவியத் திரு அவை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர்ஆயர்கள் நியமனம் குறித்து சீனாவிற்கும் வத்திக்கானுக்கும் இடையில் 2018-ஆம் ஆண்டு கையொப்பமான  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தின் சூத்திரதாரி பரோலின்தான்!

அருள்பணியாளராகப் பட்டம் பெற்று, மூன்று ஆண்டுகளில் Diplomatic Service-இல் இணைந்த பரோலினுக்கு மேய்ப்புப் பணி அனுபவம் எதுவும் இல்லாதது ஒரு குறை. பல மொழிகள் பேசும் வித்தகர்ஒரு பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்து, அயர்லாந்து பாராளுமன்றம் சட்டம் இயற்றியபோது அதைமானுடத்தின் தோல்வி (Defeat of humanity)” என்று வர்ணித்தார். கடந்த 40 வருடங்களில் இத்தாலியிலிருந்து யாரும் திருத்தந்தையாகவில்லை. இந்த முறை அது மாறலாம்.    

கர்தினால் லூயிஸ் டாக்லே

பிலிப்பைன்ஸ் நாட்டவர். வயது 67. ஏழைகள், ஓரங்களில் வாழ்வோர், அகதிகள் மீது தனிப்பட்ட கரிசனை கொண்டவர். ‘ஆசியாவின் பிரான்சிஸ்என்று குறிப்பிடப்படுபவர். மணிலாவின் முன்னாள் பேராயர். பெரும்பாலும் மேய்ப்புப் பணிச் சூழலிலேயே இருந்தவரை 2019-ஆம் ஆண்டு பிரான்சிஸ் உரோமுக்குக் கொண்டு வந்துமறைபரப்புப் பேராயத்தின் தலைவராக நியமித்தார். இதுவே கர்தினால் டாக்லேவின் முதல் மைய நிர்வாகப் பணி. டாக்லேவுக்குக் கொஞ்சமாவது வத்திக்கான் அனுபவம் வேண்டும் என்பதற்காகவே, பிரான்சிஸ் இதைச் செய்தார் என்று கூறுவோர் உண்டு. பிலிப்பைன்சில் மக்கள் இவரைchitoஎன்று பாசமாக அழைக்கிறார்கள். நம் ஊரில்செல்லம்என்று கூறுவதுபோல! ஒரு பெரிய கத்தோலிக்க நாட்டின் செல்லம் இவர். கருக்கலைப்புக்கு எதிரானவர். 2013-இன் கான்க்ளேவின்போதே டாக்லே திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து தற்போது ஐந்து கர்தினால்கள் இருக்கிறார்கள். இதில் டாக்லேவிற்கு வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். டாக்லே தேர்ந்தெடுக்கப்பட்டால், இவர் ஆசியாவின் முதல் திருத்தந்தையாக இருப்பார்.

கர்தினால் ஃப்ரிடோலின் பேசுங்கு

காங்கோ நாட்டுக்காரர். வயது 65. திருத்தந்தை பிரான்சிஸ் உருவாக்கிய உயர்மட்டக் கர்தினால்கள் ஆலோசகர் குழுவில் (Council of Cardinals) உறுப்பினராக இருந்த ஒரே ஆப்பிரிக்கக் கர்தினால் இவரே.  ‘கின்ஷாஎன்ற மறைமாவட்டத்தின் பேராயராகக் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவர் நாட்டில் கிறித்தவர்களை ஒடுக்கும் அரசின் வன்முறைச் செயல்களுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுப்பவர். மக்கள் பிரபலம். பிரான்சிஸ் இவரை 2019-ஆம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தினார். திரு அவையின் படிப்பினைகளைப் பொறுத்தமட்டில் பேசுங்கு ஒரு பழமைவாதி. ஒருபாலின இணையர்களுக்கு முறைசாரா ஆசிர்வாதம் கொடுக்கலாம் என்று வத்திக்கான் அறிவுரை வழங்கியபோது, ‘Fiducia Supplicans -ஆவணத்திற்கு எதிராக ஆப்பிரிக்கா மற்றும் மட காஸ்கர் ஆயர்கள் பேரவையைத் திரட்டி, வத்திக்கானுக்குக் கடிதம் எழுதினார். 2023-ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், “ஆப்பிரிக்காவே திரு அவையின் எதிர்காலம்என்று கூறினார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஏறக்குறைய 1500 வருடங்களுக்குப் பிறகு திருத்தந்தையாகும் முதல் ஆப்பிரிக்கராகக் கர்தினால் பேசுங்கு இருப்பார்.

கர்தினால் பீட்டர் எர்தோ

அங்கேரி நாட்டவர். வயது 65. அறிவாளி! திரு அவைச் சட்டத்தில் வல்லுநர். 25-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஏழு மொழிகள் தெரியும். கொள்கை அடிப்படையில், திருத்தந்தை பிரான்சிசுக்கு அப்படியே எதிர் துருவம். பிரான்சிஸ் கிழக்கு என்றால், எர்தோ மேற்கு. எல்லாக் கதவுகளையும் திறக்க ஆசைப்பட்ட பிரான்சிஸின் தாராளவாத பாப்பிறை ஆட்சிக்கு ஒரு மாற்று அரசியலைக் கொண்டுவர விரும்பும் கர்தினால்களின் தேர்வு எர்தோவாக இருக்கும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் நாட்டம் உள்ளவர். பல விசயங்களில் பிரான்சிசோடு முரண்பட்டிருக்கிறார். உதாரணமாக, அகதிகள் வரவேற்கப்பட வேண்டும், அவர்கள் அனுசரணையோடு நடத்தப்பட வேண்டும் என்று பிரான்சிஸ் வளர்ந்த நாடுகளை வேண்டிக் கொண்டிருந்த காலத்தில், எர்தோவரைமுறையில்லாமல் அகதிகளை அனுமதிப்பது ஆள் கடத்தலுக்குச் சமம்என்றார்.

Neo-evangelizationஎன்று கூறப்படும் புதிய  நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஆர்வமுள்ளவர்ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வது, விவாகரத்துப் பெற்றவர்கள் திருப்பலியில் நன்மை வாங்குவது போன்ற விசயங்களில் சம்மதம் இல்லாதவர். பிரான்சிஸின் முற்போக்குப் பாப்பிறையை விரும்பாத வலதுசாரிப் பிரிவினர் எர்தோவைப் பூரணமாக ஆதரிப்பார்கள்.

கர்தினால் மத்தேயோ சூப்பி

இத்தாலி நாட்டுக்காரர். வயது 69. உரோமில் பிறந்து வளர்ந்தவர். தற்போது பொலோனா மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி வருகிறார். திருத்தந்தை பிரான்சிஸின்alter-egoஎன்று கூறலாம். பத்திரிகைகள் இவரைItalian Bergoglioஎன்றுதான் அழைக்கின்றன. முற்போக்குச் சிந்தனையாளர். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரான்சிஸின் மரபைத் தொடர்வார் என்று நம்பலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருத்தந்தை பிரான்சிஸ், சூப்பியை உக்ரைன் நாட்டிற்கு வத்திக்கானின் அமைதியின் தூதராக அனுப்பி வைத்தார்சூப்பிக்கு வெற்று ஆடம்பரத்தில் ஆர்வமில்லை. பல நேரங்களில், தன் மறைமாவட்டத்தில் சைக்கிளில்தான் பயணம் செய்கிறார். பெட்ரோல் செலவு மிச்சம். ஆளும் நரம்பு மாதிரி, ஆரோக்கியமாக இருக்கிறார். மறைமாவட்டத்தில் யாரும் இவரைஆயர்என்று அழைப்பதில்லை. எல்லாருக்கும் இவர்Father Matteoதான்! ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மேல் சிறப்பு அன்பு கொண்டவர். அகதிகளுக்குப் பணி செய்வதிலும், தன்பாலின ஈர்ப்பாளர்களை வரவேற்பதிலும்  இவருக்குத் தயக்கம் இல்லை. பிரான்சிஸ் விரும்பியopen church’ - எல்லாருக்குமான திரு அவைதான் இவரது கனவும்.

இந்த ஐவருள் ஒருவர் அடுத்த திருத்தந்தை ஆகலாம். அல்லது இந்தப் பட்டியலில் இல்லாத, ஏன் எந்தப் பட்டியலிலும் இல்லாத, யாருமே நினைத்து பார்த்திராத  ஒருவர் கூட திருத்தந்தை ஆகலாம்

வாக்குச் சீட்டுகளில் கர்தினால்கள் யார் பெயரை எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை; கடவுள் யார் பெயரை எழுதி வைத்திருக்கிறார் என்பதே முக்கியம்!

யோசித்து எழுதுங்க ஆண்டவரே!!!

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

news
ஆன்மிகம்
இறையழைத்தல்: கடவுள் நம் இதயத்தில் விதைக்கும் விலைமதிப்பற்ற கொடை! (உலக இறையழைத்தல் நாள் 11.05.2025)

மே மாதம் 11-ஆம் நாளை, 62-வது உலக இறையழைத்தலுக்காக இறைவேண்டல் செய்யும் ஒரு நாளாகக் கொண்டாடுகின்றோம். மார்ச் 19-ஆம் நாள் மறைந்த திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், “இறையழைத்தல் என்பது கடவுள் நம் இதயத்தில் விதைக்கும் ஒரு விலைமதிப்பற்ற கொடைஎன்றும், “நம்மையே இழந்து அன்பு மற்றும் சேவையின் பயணத்தைத் தொடங்குவதற்கான ஓர் அழைப்புஎன்றும் கூறியுள்ளார். திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியின் முக்கியக் கருத்துகளைக் காண்போம்.

இளைஞர்களின் அச்சம்

எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் இளைஞர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, நெருக்கடியான சூழல்கள், மதிப்பீடுகளற்ற சமூகம், அநியாயமாக நடத்தப்படும் எளிய மக்கள், சுயநலச் சமூகம், நம்பிக்கையைக் கெடுக்கும் போர்கள் எல்லாம் இளைய சமூகத்தைப் பாதிக்கின்ற காரணிகள். இருப்பினும், இறைவனின் அன்புக்குரியவர்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ அழைக்கப்படுகிறார்கள் என்றும், போராட்டங்கள் இருந்தபோதிலும் இளைஞர்களுடன் கடவுள் இருக்கிறார்; அவர்களை அன்பு கூர்கிறார் என்றும் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார் திருத்தந்தை.

இறையுறவில் இன்பம் கண்ட இளம் புனிதர்கள்

திருநிலையினர் இளையோருக்கு முன்மாதிரியாக அவர்களோடு தோள் கொடுத்துப் பயணிக்க முன்வர வேண்டும். இளமை என்பது வாழ்வின் இடைப்பட்ட காலம் அல்ல; மாறாக, ‘கடவுளின் இப்போதுஎன்பதை இளைஞர்கள் மனத்தில் கொள்ள வேண்டும். இளம் புனிதர்களான புனித லீமாரோஸ், புனித டோமினிக் சாவியோ, புனித குழந்தை இயேசுவின் தெரசா, புனித வியாகுல அன்னையின் கபிரியேல், அருளாளர் கார்லோ அகுட்டீஸ், அருளாளர் பியர் சார்ஜ் பிரசாத் போன்ற இளைய புனிதர்கள் உயிர்த்த இறைவனோடு உள்ள உறவில் உண்மை மகிழ்ச்சியைக் காண்பதற்கு இந்த அழைத்தலே உதவியாக இருந்தது.

இறைகுரலுக்குப் பற்றி எரியும் இதயம்

இயேசு பேசும்போது எம்மாவு சீடர்களின் இதயம் பற்றி எரிந்ததைப்போல நம் இதயமும் பற்றி எரிய வேண்டும். அந்த இறைகுரல் நம்மை மீண்டும் மீண்டும் அர்ப்பண வாழ்வுக்குத் தூண்டுகிறது. அழைப்பும் எதிர்நோக்கும் மனித மகிழ்வுக்கு ஒன்றையொன்று துணைபுரிகின்றன. ஒவ்வோர் இறையழைப்பும், அது பொதுநிலையினராக இருந்தாலும், திருநிலைப்படுத்தப்பட்ட அருள்பணியாளராக இருந்தாலும், துறவு வாழ்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டவராக இருந்தாலும், அது நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. மேலும், இறையழைப்பு என்பது மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும், பொதுநன்மைக்குப் பங்களிப்பதற்கும் ஒரு வழியாக அமைந்துள்ளது. ஒவ்வோர் அழைத்தலும் எதிர்நோக்கினால் தூண்டப்படுகின்றது. எதிர்நோக்கு என்பது வெறுமனே மனிதரின் நேர்மறைச் சிந்தனை மட்டுமல்ல, இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதும் கூட. நற்செய்திக்கு உண்மையாக இருப்பதன் மூலம் அழைப்பு முதிர்ச்சி பெறுகிறது.

தேர்ந்து தெளிதல்

இளைஞர்கள் தங்கள் இறையழைத்தலை இறைவேண்டல், அமைதி மற்றும் நற்சிந்தனைகள் வழியாகத் தெளிந்து தேர்ந்து, கடவுள் தங்களை வழிநடத்துகிறார் என்பதை நம்ப வேண்டும்; இளையோர் அனைவரும் எதிர்நோக்கு ஏமாற்றம் தராது என்கிற வார்த்தையைக் கவனத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அழைத்தலைக் கண்டுபிடிப்பது என்பது தேர்ந்து தெளிதல் பயணத்தில்தான் கிடைக்கிறது. இளைஞர்களின் இறையழைத்தல் பயணங்களில் பொறுமையுடனும் ஞானத்துடனும் அவர்களை ஆதரிக்கவும், திரு அவையும் குறிப்பாக, வயது முதிர்ந்த உறுப்பினர்களும் அருள்பணியாளர்களும் முன்வர வேண்டும்.

இன்றியமையாத அமைதி

நின்று நிதானமாக இதயத்தின் குரலுக்குச் செவிமடுத்து, ‘இறைகுரல் என்ன?’ எனக் கேட்க வேண்டும். இறைவேண்டலில் அமைதி என்பது இன்றியமையாதது. இறைகுரலுக்கு எப்படிச் செவிசாய்ப்பது? மனச்சாட்சியுடன் பதில் அளிப்பது? போன்றவை அமைதியில் அரங்கேறுகிறது. அமைதியான தியானம் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நம்மை உணர வைக்கிறது.

விளிம்பு நிலை மக்களுக்குச் செவிசாய்க்கும் அழைத்தல்

வாழ்வு என்பது ஒரு கொடை. விளிம்பு நிலை மக்கள் நடுவில் பணியாற்றவே இந்தக் கொடை. இறைகுரலுக்குச் செவிசாய்க்கிறவர்கள் காயப்பட்ட, ஒதுக்கப்பட்ட, கைவிடப்பட்ட நம் சகோதர- சகோதரிகளுக்குச் செவிகளைத் திறந்து வைப்பார்கள். கிறிஸ்துவின் உடனிருப்பை வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ள நாம் ஒளியையும் ஆறுதலையும்  இருள் படர்ந்த மக்களுக்கு அளிக்கிறோம்.

உப்பாக, புளிக்காரமாக வாழ அழைப்பு

பொதுநிலையினர் உலகின் உப்பாக, புளிக்காரமாகத் தங்கள் அர்ப்பண வாழ்வை அழைப்பு வழியாக ஆழப்படுத்த வேண்டும். அருள்பணியாளர்கள், இறையழைத்தல் இயக்குநர்கள், ஆன்மிக இயக்குநர்கள் இளைஞர்களுடன் இணைந்து பயணித்து எதிர்நோக்கு, பொறுமை, நம்பிக்கையைக் கற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். இறைவனின் உடனிருப்பைத் தங்களின் வழிகாட்டுதலால் காட்ட வேண்டும். அழைத்தலுக்கான அவசரத்தை அனைத்து வகைகளிலும் உணர வேண்டும்.

ஆம்என்பதே இறையழைத்தலின் பதில்

இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் எதிர்நோக்குக்கும்ஆம்என்று திறம்படச் சொல்லக் கூடிய அருள்பணியாளர்கள், துறவியர், மறைபரப்புப் பணியாளர்கள், தம்பதியர் திரு அவைக்குத் தேவைப்படுகிறார்கள். இதயத்தில் சேமித்து வைக்கும் புதையல் அல்ல இந்த அழைத்தல்; மாறாக, சமூகத்தில் இது வளர்ந்து வலிமையாகி நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கை வளர்ப்பதாகும். இறைகுரலுக்குப் பதிலளிப்பது என்பது சகோதர-சகோதரிகளின் இறைவேண்டலிலும் ஆதரவிலும் அடங்கி இருக்கிறது.

தளராத நமது இறைவேண்டல்

அழைத்தலை அதிகரிப்பது உயிரோட்டமான பலன் தரும் திரு அவையை வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. கிறிஸ்துவைப் பின்பற்றுவது ஒன்றே மகிழ்வின் அடிப்படை. கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, எதிர்நோக்கின்  சாட்சிகளாக இருக்க, திரு அவையில் புதிய இறையழைத்தல்களுக்காக அறுவடையின் ஆண்டவரைத் தளராது நாம் மன்றாடுவோம். நற்செய்தியின் வழியில் தொடர்ந்து எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிப்போம்.

news
ஆன்மிகம்
புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

திருத்தந்தையின் அடக்கத்திற்குப் பின் திரு அவையின் பேதுரு தலைமைப் பீடம் வெற்றிடமாகக் கருதப்படும். புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்படும்வரை உள்ள காலம்வெற்றிடக் காலம் (Sede Vacante)  என்று அழைக்கப்படும் (திச 335). இக்காலத்தில் யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது. உதாரணமாக, உலகில் உள்ள மறைமாவட்டங்களில் ஆயர்களை நியமனம் செய்ய முடியாது. வத்திக்கான் செயலகங்கள் பணிபுரிந்தாலும், திருத்தந்தையின் ஒப்புதலுக்காக, கையெழுத்துக்காக வத்திக்கான் செயலகங்கள் காத்துக்கிடக்கும்.

திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவையினை இலத்தீன் மொழியில்கான்கிளேவ் (Conclave) என்று அழைப்பர். ‘இன்ம் இப்ஹஸ்ங்என்ற இலத்தீன் சொற்களிலிருந்து பிறந்த இச்சொல்சாவியுடன்என்ற பொருளை உள்ளடக்கியது. திரு அவையை வழிநடத்தவிருக்கும் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக ஓட்டுரிமை உடைய கர்தினால்கள் அனைவரும் வத்திக்கானின் ஓர் அறையில் ஒன்றுகூடி இத்தேர்தலை நடத்துவர். திருத்தந்தை தூய ஆறாம் பவுல், 1970-ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆணையில் கான்கிளேவில் கலந்துகொள்ளும் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 120 ஆகவும், இவர்கள் 80 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற வரைமுறையை நிர்ணயித்தார். பூட்டிய அறைக்குள் இத்தேர்தல் நடைபெறுவதால் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவைக்குcum claveஅதாவதுconclaveஎன்ற பெயர் வந்தது.

விதிமுறைகள்: திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொதுவான செய்திகள் பின்வரும் திரு அவைச் சட்டங்களில் (திச 333-335; 349-359) காணப்படுகின்றன. இத்திரு அவைச் சட்டங்களைத் தாண்டி, திருத்தந்தை தேர்வு விதிமுறைகள் தனியான சட்டமாக வகுக்கப்பட்டுள்ளன. 1996-இல் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் இயற்றியுள்ளஅகில உலக மந்தையின் ஆயர் (Universi Dominici Gregis) என்ற விதித்தொகுப்புகளே திரு அவையின் வெற்றிடத்தையும் திருத்தந்தையின் தேர்வையும் வழிநடத்துகின்றன. இவற்றின்படி புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும் வரை திரு அவையின் நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்பவர்கார்டினல் கார்மெலெங்கோஎன்ற பொறுப்பில் உள்ள கர்தினால் ஆவர். அவர்தான் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் உலகுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பவர். தற்போதைய கர்தினால் கார்மெலெங்கோவாக (Cardinal Carmerlengo) உள்ளவர் மேதகு கர்தினால் கெவின் ஃபெரல். திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் 80 வயது பூர்த்தியாகக் கூடாது.

திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவை: மே 7 புதன் அன்று மாலையில் சிஸ்டைன் சிற்றாலயத்தில், மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழி வருபவரைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை ஆரம்பிக்கவிருக்கின்றது. இது திரு அவையில் இடம்பெறவிருக்கும் 76-வது கான்கிளேவ் அவையாகும். கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 133 கர்தினால்களும் மே 7, புதன் காலை 7 மணிக்கு வத்திக்கான்Santa Marthaஇல்லத்திற்குச் சென்று கான்கிளேவ் முடியும் வரையில் அங்கேயே தங்கியிருப்பார்கள். புதன் காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் அனைத்துக் கர்தினால்களும் இணைந்து கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே தலைமையில் கான்கிளேவ் அவைக்காகச் செபிக்கும்pro eligendo Romano Pontificeஎன்ற திருப்பலியை நிகழ்த்துவார்கள். பின்னர் அன்று மாலை 4.15 மணிக்கு இந்தக் கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 133 கர்தினால்களும் Santa Martha இல்லத்திலிருந்து Pauline சிற்றாலயத்திற்குச் செல்வர். அங்கு அவர்கள் தியானம் மற்றும் செபத்தில் ஈடுபட்ட பின்னர் Pauline சிற்றாலயத்திலிருந்து Regia அறை வழியாகப் புனிதர்கள் பிரார்த்தனையைப் பாடியபடியே செல்லும் கர்தினால்கள், சிஸ்டைன் சிற்றாலயம் அடைந்தவுடன் Veni Creator என்ற தூய ஆவியாரிடம் வேண்டுதல் செய்யும் பாடலைப் பாடுவர். பின்னர் அவரவர் இருக்கையில் அமர்வர். அவர்களின் இருக்கைகள் ஒவ்வொருவரும் கர்தினாலாக உயர்த்தப்பட்ட ஆண்டின்படி குறிக்கப்பட்டிருக்கும். சிஸ்டைன் சிற்றாலயத்தின் நடுவில் ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் திருவிவிலியத்தின்மீது கைவைத்து 133 கர்தினால்களும் ஒவ்வொருவராக வந்து உறுதிமொழி எடுப்பர்.

இத்தேர்தலில் எந்தப் பொதுநிலை அதிகாரிகளின் தலையீடுக்கும் ஆதரவு கொடுக்க மாட்டேன்; இத்தேர்தல் குறித்தUniversi Dominici Gregisஎன்ற அப்போஸ்தலிக்கச் சட்ட அமைப்பின்படி குறிப்பாக, இரகசியம் காப்பாற்றப்பட வேண்டிய விதி முறைகளின்படி நடந்துகொள்வேன்; யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் அகில உலகத் திரு அவையின் மேய்ப்பராகப் பணியைத் தொடர்வார்; அவர் திருப்பீடத்தின் ஆன்மிக மற்றும் உலகியல் சார்ந்த உரிமைகளையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி ஊக்கத்தோடு பாதுகாப்பார்என்று 133 கர்தினால்களும் உறுதிமொழி எடுப்பார்கள். இந்த உறுதிமொழியைக் காப்பாற்றாதவர்கள் திரு அவையை விட்டு விலக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கெடுப்பு நடக்கும் முறை: கான்கிளேவ் அவையில் கர்தினால்கள் செபம் சொல்லி சிறிது நேரம் அமைதி காப்பர். அதன் பின்னர் கான்கிளேவ் அவையின் மூத்த கர்தினால்வாக்கெடுப்பைத் தொடங்கலாமா?’ எனக் கேட்பார். அனைவரும்சரிஎன்று கூறியதும், முதல் வாக்கெடுப்பு நடைபெறும்ஒவ்வொரு கர்தினால்களிடமும் இரண்டு அல்லது மூன்று வாக்குச்சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். செவ்வக வடிவிலான இந்தச் சீட்டின் மேலேEligo Summum Pontificemஅதாவதுதிருத்தந்தையாக நான் தேர்ந்தெடுப்பவர்என இலத்தீனில் எழுதப்பட்டிருக்கும். அதன் கீழே ஒரு கோடு இருக்கும். அதில் பெயரை எழுதி, வாக்குத்தாளை இரண்டாக மடித்து, அங்குள்ள திருப்பலிப் பீடத்தின்மீது வாக்குகளைச் சேகரிக்க வைக்கப்பட்டிருக்கும் மூன்று கிண்ணங்களில், முதல் பெரிய கிண்ணத்தில் ஒவ்வொருவராக வந்து போடுவர். இரண்டாவது கிண்ணம், உடல் நலமின்றி யாரும் வெளியே இருந்தால் அவர்களிடம் சென்று வாங்கி வரும் வாக்குகளைப் போடுவதற்குரியது. மூன்றாவது கிண்ணம், வாக்குகளைச் சரிபார்த்துப் போடுவதற்குரியது.

வாக்குச்சீட்டு எண்ணும் முறை: வாக்குகள் அனைத்தும் ஊசியின் மூலம் ஒரு நூலில் கோர்த்து ஒரு முடிச்சுப் போட்டு அவை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும். வாக்குகளைச் சரிபார்த்து எண்ணுவதற்கு அங்குள்ள கர்தினால்களே ஒவ்வொரு முறையும் சீட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கப்படுவர். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், மூன்றில் இரண்டு பகுதி வாக்குகளுடன் மேலும் ஒரு வாக்கைப் பெற்றிருக்க வேண்டும். இந்த வரைமுறையானது 1179-ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டரால் கொண்டு வரப்பட்டது.

இத்தேர்தலில் மூன்றில் இரண்டு பகுதி வாக்குகள் முழு எண்மத்தைப் பெறாதபோது, அவற்றோடு ஒரு வாக்கு அதிகமாகப் பெற வேண்டும் என்ற வரைமுறையை 1996-ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள்Universi Dominici Gregisஎன்ற அப்போஸ்தலிக்கச் சட்ட அமைப்பில் வெளியிட்டுள்ளார். அதன்படி திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கவிருக்கும் கர்தினால்கள் 133 பேரில் இரண்டு பங்கு (45+45+1=91) 91 வாக்குகள் தற்போது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்குத் தேவை.

வெண்புகை வெளியிடுவது: திருத்தந்தையின் தேர்தல் நிலவரம் குறித்துப் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்குச் சிஸ்டைன் சிற்றாலயத்தின் மேற்கூரையில் புகைபோக்கி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் கறுப்புப் புகையும், தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் வெண்புகையும் வெளியே வரும். வெண்புகை வெளியே வரும்போது வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் மணிகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். வெண்புகை வெளியே வருவது ஏறக்குறைய 45 நிமிடங்கள் நீடிக்கும். இந்தப் புகை வெளிவருவதற்கு வாக்குச்சீட்டுகளுடன் வேதியப் பொருள்களும் சேர்த்து எரிக்கப்படும். வெண்புகையை வெளியிடும் வழக்கம் 1903-ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதுதேர்தலானது தினமும் காலையில் இரண்டு முறை, மாலையில் இரண்டு முறை என முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறும். அதுவரை புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில், செபம் மற்றும் தியானத்திற்கென ஒருநாள் விடப்படும். பின்னர் அடுத்த நாள் வாக்கெடுப்புத் தொடங்கும். புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை தினமும் பகல் 12 மணியளவிலும், மாலை 7 மணியளவிலும் புகை வெளியிடப்படும்.

திருத்தந்தையைத் தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தல் அரசியல் தேர்தல் போன்றதன்று; தூய ஆவியின் அருளையும் ஆற்றலையும் நிறைவாகப் பெற்று, அந்த ஆவியின் துணையுடன் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கர்தினால்கள் ஒவ்வொருவரும் செயல்பட அவர்களுக்காகச் செபிப்போம். இத்தேர்தலுக்காக உலகெங்கும் தொடர் செபங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், நாமும் நமது செபங்களை ஏறெடுப்போம்.