“எனக்கு அந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவே யில்லை. யாரும் இல்லாத இடத்தில் நான் ஏன் தனியா இருக்கணும்? அதான் பெட்டியைத் தூக்கிட்டு வீட்ட விட்டு வந்துட்டேன்.”
திருச்சி இரயில்வே ஸ்டேசனில் தன் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த யாரோ ஓர் இளம் பெண்ணிடம் தன் துயரக் கதையைக் கூறிக்கொண்டிருந்தாள் அறுபத்தைந்து வயதான பார்வதி பாட்டி.
ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த அந்த இளம்பெண் படிப்பதை விட்டுவிட்டு, பாட்டி கூறிக்கொண்டிருந்த கதையில் மூழ்கிப் போனாள்.
“புள்ளைங்க எல்லாம் சென்னையில செட்டிலாயிட்டானுங்க. என்னையும் வீட்ட வித்துட்டு அங்க வந்திடுங்கன்னு சொல்லுறானுங்க. நான் இத்தனை வருசம் வாழ்ந்த வீட்ட விட்டுப்புட்டு ஊரு பெயரு தெரியாத அந்த இடத்துக்கு எப்படிப் போவேன்? என் பெயருல இருக்கிறதே அந்த வீடு மட்டும்தான்; அதை எப்படி விப்பேன்?” என்று தன் வேதனைக் கதையைப் பச்சரிசியில் புள்ளிக்கோலம் போடுவதுபோலத் தெளிவாகத் தொடர்புபடுத்தி சொல்லி முடித்தாள்.
பாட்டி கூறிய கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்குப் பாட்டியை அவள் பிள்ளைகள் யாருக்கும் பிடிக்கவில்லையென்றும், பாட்டியின் சொத்தை அபகரிக்கவே பிள்ளைகள் திட்டம் போடுகிறார்கள் என்பதும் புரிந்தது.
“சரி பாட்டி, வீட்ட விட்டு வந்திட்டீங்க. இப்போ எங்கே போகப் போறீங்க?” என்று கேட்டவுடனேயே ‘ஓ’வென்று கதறி அழுதாள் பார்வதி பாட்டி.
“ஏன் பாட்டி அழுவுறீங்க? நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?” என்று பதற்றத்தில் கேட்டாள் அந்த இளம்பெண்.
கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு அப்படியே முகத்தில் கொஞ்சம் சிரிப்பைக் கொண்டுவர முயற்சித்தாள் பார்வதி பாட்டி. தன் முகத்தை முந்தானையால் துடைக்கும் போது அவள் கண்ணீர்த் துளிகளோடு கொஞ்சம் சோகமும் முந்தானையோடு ஒட்டிக்கொண்டது என்றே தோன்றியது.
என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை; திடீரென்று இருக்கையிலிருந்து எழுந்த பார்வதி பாட்டி, “நான் வீட்டுக்கு உடனே போகணும், என் பூனை இலட்சுமணனைத் தெரியாம என் ரூம்லேயே பூட்டிக்கிட்டு வந்திட்டேனு நினைக்கிறேன். அவன் என்ன சாப்பிட்டானோ தெரியலை. புள்ள என்ன பாடுபட்டிட்டிருக்கோ தெரியலை...” எனத் தன் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டாள் பார்வதி பாட்டி.
பாட்டியின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்குப் பாட்டி சென்ற பிறகும் பாட்டியின் கதை, நாரை பறந்துபோன பிறகும் மரக் கிளைகள் ஆடிக்கொண்டிருப்பதுபோல, உள்ளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
‘பூனையைக் கூட பிரிந்து செல்ல மனமில்லாத பார்வதி பாட்டி வாழ்கின்ற காலத்தில் என் கணவனையும் பிள்ளைகளையும் பிரிந்து வந்திருக்கிறேனே?’ என்று ஒரு நிமிடம் எண்ணிப்பார்த்தாள் அந்த இளம்பெண்.
அவள் பயணம் செய்ய வேண்டிய கொல்கத்தா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் மெதுவாக நடைபாதையை விட்டு சென்று கொண்டிருந்தது. ஆனால், அந்த இளம்பெண் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
மனித உறவுகளும், அறிவியல் தொழிற்நுட்பப் படிப்புகளும் ஒன்றுபோல்தான். அவை மாறிக்கொண்டே இருப்பவை. அந்த மாறுதல்களுக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ளவில்லையென்றால், நாம் இருக்கின்ற இடத்திலிருந்தே மாற்றப்படுவோம்.
தொழில்நுட்பம் நம் வேலையை எடுக்கப் போவதில்லை; மாறாக, தொழில்நுட்பம் தெரிந்தவர்கள், தொழில்நுட்பம் தெரியாதவர்களின் வேலையை எடுக்கப்போகின்றார்கள் என்பதுதான் உண்மை.
எனவே, வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு உலகில் நாம் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும்.
உலகில் மருத்துவம், தொழில்நுட்பம், கணிதம், இராணுவம், பாதுகாப்பு, ஊடகம், கல்வி, வேளாண்மை, மேலாண்மை என்று எல்லாத் துறைகளிலும் ஏ.ஐ.யினுடைய பயன்பாடு அதிகரித்திருக்கின்றது. ஏ.ஐ.யின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதற்கான வேலைவாய்ப்பும் பெருகியிருக்கிறது எனலாம்.
ஏ.ஐ. துறையில் என்ன படிக்கலாம்? எங்குப் படிக்கலாம்? என்பதை இங்குக் காண்போம்.
1. MBA / PG Diploma in AI & Business Analytics (ஏ.ஐ. பிசினஸ் அனலிட்டிக்ஸில் எம்.பி.ஏ. / பி.ஜி. பட்டயப் படிப்பு)
பிசினஸ் மேனேஜ்மென்ட் மற்றும் காமர்ஸ் பின்னணியில் வருகிறவர்கள் இப்படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். ஐஐடி (IIT), ஐஐஎம் (IIM) போன்ற கல்வி நிறுவனங்களில் இதைப் பயிலலாம்.
2.
MCA / M.Tech in AI and Machine Learning (ஏ.ஐ. மற்றும் மெஷின் லேர்னிங்கில் எம்.சி.ஏ. / எம்.டெக்.):
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி மற்றும் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இதைப் பயிலலாம்.
3. B.Sc / B.Tech in AI and Data Science (ஏ.ஐ. மற்றும் டேட்டா சயின்ஸில் பி.எஸ்.சி. / பி.டெக்.):
டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், அமெட் பல்கலைக்கழகம், புனித சேவியர் கல்லூரி மற்றும் என்ஐடி போன்ற இடங்களில் இதைப் பயிலலாம்.
4. A.I. Bootcamps (ஏ.ஐ. பூட்கேம்ப்கள்):
ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாம்பே போன்றவற்றில் குறுகியகாலப் படிப்பாக இவை உள்ளன. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் தங்கள் திறனை மேம்படுத்த இது உதவும்.
5.
Online AI Certification Programs (ஏ.ஐ. சான்றிதழ் படிப்புகள்):
உடாசிட்டி (Udacity), சுயம் பிளஸ் (Swayam Plus), கோர்ஸ்செரா (Coursera) போன்ற தளங்களில் இத்தகைய குறுகிய காலச் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. தொடக்க நிலையில் இருப்பவர்கள் ஏ.ஐ. பற்றிய அடிப்படை அறிவைப் பெற இத்தகைய இணையதளப் படிப்புகளைப் படிக்கலாம்.
‘ஏ.ஐ. தெரியாதவர்கள், ஏ.ஐ. தெரிந்தவர்களிடம் தங்கள் வேலையை இழப்பார்கள்’ என்று கூறப்படுகிறது. எனவே, பெருகிவரும் ஏ.ஐ. தொடர்பான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு இளையோர் தங்களையே தகுதியானவர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
சிறுவயதில் திருவிழாக் கதைகளை பெற்றோர், உற்றார் கூற உற்றுக் கேட்போம். அதில் பிள்ளை பிடிப்பவர்கள் பற்றிய சுவையான தகவல்கள் உள்ளடக்கமாக இருக்கும். பிள்ளை பிடிப்பவர்கள் நம்மைப் போலவே இருப்பார்கள்; தனியே குழந்தைகளைக் கண்டால் சிரித்துப் பேசி தின்பண்டம் தருவார்கள். தின்பண்டமான அந்த மிட்டாய் அல்லது பிஸ்கெட்டில் மயக்க மருந்து தடவி இருக்குமாம். அதை உட்கொண்ட சிறுவர் அல்லது சிறுமியர் மயங்கி அவர்கள் பின் நடப்பர்களாம். மயக்கம் தெளியும் போது பிள்ளை பிடிப்பவன் அவர்களை நீண்ட தொலைவு அழைத்துச் சென்று விடுவானாம். சில புத்திசாலிக் குழந்தைகள் தப்பி வந்த கதைகளும் உள்ளன.
2026 தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தல் திருவிழாவிலும் பிள்ளை பிடிப்பவன் வந்தான். முதலில் பிள்ளைகளை மயக்கிப் பிடித்தான். பிள்ளைகள் வழி பெற்றோரைப் பிடித்தான். அப்பாவிப் பெற்றோரை வைத்து நாட்டையே பிடித்தான்.
ஒரு
கிராமத்தில் சிலை அபிசேகம் செய்ய பால் தேவைப்பட்டது. கோவில் நிர்வாகம் அறிவிப்புச் செய்தது. ஒரு தனி அறையில் பால் சேகரிக்கும் அண்டா வைக்கப்பட்டிருக்கும். அது மூடியுள்ள அண்டா. அதிலுள்ள ஒரு சிறு துவாரம் வழி மக்கள் பால் ஊற்றவேண்டும். மக்கள் வரிசையாக அறைக்குள் சென்று பால் ஊற்றினர். கோவில் நிர்வாகத்தினர் அண்டாவைத் திறந்து பார்த்தனர். அதில் பால் இல்லை. முழுவதும் தண்ணீர் இருந்தது. ‘எல்லாரும் பால் ஊற்றுவார்கள், நாம் அதில் தண்ணீர் ஊற்றினால் யாருக்குத் தெரியப்போகிறது?’ எனக் கிராம மக்கள் அனைவருமே தண்ணீரையே ஊற்றி விட்டார்கள்.
தேர்தல்
களம் 15% வாக்கு, மூன்றாமிடம்
என்ற கணிப்புகளால் நகர்ந்தது. களத்தை மாற்ற வேண்டும். இணைய வழி மறைமுகமாகப் பத்து ஆண்டுகளாகச் செய்த பிரச்சாரத்தை நேரடியாகவே செய்தனர். தேர்தல் களத்தில் சிறுவர்களைத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அது வேட்பாளரின் தகுதி இழப்பிற்கு உள்ளாக்குகிற குற்றம் என்கிறது சட்டம். வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரக் கடைசி நேரத்தில் ‘அழுது, அடம்பிடித்து எனக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்’ என்ற
மூளைச்சலவை வெளியானது.
வெற்றிக்குப் பின்னும் நன்றி என்பதும் தேர்தல் விதிகளை மீறிய செயல்.
பாசக்காரத்
தாத்தா-பாட்டிகள், பெற்றோர் ‘தோற்கப் போகிறதே... நம் ஓர் ஓட்டு என்ன செய்து விடப் போகிறது?’ எனப் பாசம் காட்டினர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அண்டாவில் பால் ஊற்றிய கதையாக மாறிவிட்டது.
ஒரு
கட்சிக் கொள்கை, கட்சிக் கட்டமைப்பு, மக்கள் சந்திப்பு, மக்களுக்கான போராட்டங்கள், அடிப்படைக் கோட்பாடு,
பிரச்சாரம், வேட்பாளர் தகுதி, அறிமுகம் இல்லாமல் ஸ்மார்ட் போன் வழியே வெற்றிபெற முடியுமா? முடியும் என்பதாக, தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வழி அறியலாம்.
வாருங்கள்...
தமிழ்நாடு தேர்தல் வெற்றி யின் பத்து ஆண்டுகால திரைமறைவு இணையப் பணிகளைக் காண்போம்; இந்தக் குற்றக் குழுக்களின் இரகசிய வழித்தடம் (Route mofia) குறித்து ஆய்வோம். இணையக் குற்றவாளிகள் முதலில் தங்களது குறி எந்த வயதினர் என முடிவு செய்கிறார்கள்.
முதலில் அவர்களின் விருப்பம் அறிந்துகொள்கிறார்கள்.
அதற்கேற்பப் பதிவுகளை உருவாக்குகிறார்கள். அவர்களை அடிமைப்படுத்துகிறார்கள்.
முதலில்
இவர்களைப் பழக்க ரஜினி, அஜித், சூர்யா என்ற நடிகர்களை எதிரிகளாக்கி இணையத்தில் யுத்தம் பழக்கினர். 30,000 வாட்ஸ்அப் குழுக்கள் இப்பணியைச் செவ்வனே செய்தனர். தினம் 150 பதிவுகள் வழி திசை நடத்தப்பட்டார்கள். இவர்களுக்குச் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கமோ, தொலைக்காட்சி செய்திகள் பார்க்கும் பழக்கமோ இல்லை என்பதும் கண்கூடு. இக்கட்சியின் நிர்வாகி ஒருவர் எங்கள் பகுதியில் எமக்குத் தெரிந்தவராக உள்ளார். அவருக்கு அவரது வாட்ஸ்அப் குழுவில் வந்த ஒரு செய்தியைக் காட்டினார். அது எடப்பாடி தொகுதியில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு திருத்தம் செய்யப்பட்டு, நடிகர் கட்சி மற்றும் மாற்று வேட்பாளரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற படப்பதிவு இருந்தது. இவர்களது முழுப்
பிரச்சாரமே இதே இரகமாக, உண்மைக்குப் புறம்பாகக் கட்டமைக்கப்பட்டது என்பது உண்மையானதே.
இவர்கள்
அமைச்சர்கள் முதல் பத்து பேரில் மூவர் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிப் பட்டறையில் பொய்ப் பிரச்சாரத்தில் மூழ்கிக் கிடந்தவர்கள் என்பதை நாடறியும். 2020, செப்டம்பர் 14-இல் உ.பி.யில்
ஹத்ரஸ் கிராமத்தில் தலித் பெண் ஒருவர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்தது. அப்பெண்ணின் நாக்கு அறுபட்டு, முழுமையாகப் பேச முடியாமல் பாதி நாக்கு அறுந்த நிலையில் ஒருவர் பேட்டி எடுத்து வெளியிட்டார்.
பேட்டியில்
அவரது முகம் முழுவதுமாகக் காட்டப்பட்டது. அந்த வீடியோவைத் தங்களுக்குச் சாதகமாக வெட்டி ஒட்டி இருந்தார்கள். “அந்தப் பெண் நன்றாகப் பேசுகிறார். நாக்கு அறுபடவில்லை, வன்புணர்வும் நடக்கவில்லை” என்று
டுவிட்டரில் பேசியவர் இன்றைய தமிழ்நாடு அமைச்சர். 20 ஆண்டுகளாக பா.ச.க.
பொய்ப்பிரச்சாரக் குழுத் தலைவர். மற்றோர் அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ். எஸ். கொள்கைப் பற்றை
வெளிப்படுத்திப் பேசுகிறார். அவரும் அமைச்சர். மூன்றாவது அமைச்சர். அவர் பா.ச.க.வின்
தேர்தல் வியூக உண்மைக்குப் புறம்பான புள்ளி விவரக் குழு பொறுப்பாளர்.
அரசியலை
அரசியலாக அணுகாத மாபியா கூட்டம் 6 மையங்கள் வழி 4000-க்கும் மேற்பட்ட இணைய பொய்க்கணக்குகளை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான இன்ப்ளூயன்சர்கள் எனக் கூலிக்கு மாரடிக்கும் கும்பலைக் களத்தில்
இறக்கிவிட்டார்கள். ஐந்து மாத காலம் ஏழு கோடித் தமிழர்களைக் குறிவைத்த சார்ட் வீடியோக்களை உருவாக்கினார்கள். பத்து இலட்சம் பார்வையாளர்கள் (மில்லியன்) எனக் குறிவைக்கப்பட்டு, உண்மைக்குப் புறம்பான
தகவல்கள் பதியப்பட்டன.
நமது
குழந்தைகள் கையிலிருந்து ஆண்ட்ராய்டு அலைப்பேசி வழி அவர்களது உணர்வுகள், விருப்பம், பயம், பரிதாபம் சென்டினல் டூல் (Sentinel Tool)
வழி படம் பிடிக்கப்பட்டது. அவர்களை ஒருதலைச்சார்பு பிணைப்பால் (Parasocial attachment) கதாநாயகப் பிம்பத்தை மோசடியாகக் குழந்தைகள் மனத்தில் விதைத்தனர். மூளைச்சலவை செய்தனர். ஒவ்வொரு குழந்தைகளின் மனத்திலும் பயத்தைத் திட்டமிட்டு உருவாக்கினர்.
அந்தப் பயத்தின் வழி வீடுகளில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
உலகில்
எல்லாமே தங்கள் கதாநாயகப் பிம்பத்திற்கு எதிராக நடக்கிறது. அப்படி ஏதாவது நடந்தால், நாம் நம் உயிரைக் கொடுத்து நம் அண்ணனைக் காப்போம் என்று குழந்தைகளின் மனநிலையை மாற்றிவிட்டனர்.
இந்த மாபியா கூட்டத்தின் இணைய ஏமாற்று வேலை (Psychological operation)
உண்மையான தேர்தல் முடிவுகளை மாற்றியுள்ளது. கதாநாயகப் பிம்பம் கொண்டு அமைக்கப்பட்ட தூண்டில் முள் காட்சிகள் தேர்தல் களத்தை மாற்றியுள்ளது. பிள்ளை பிடிப்பவனின் படக்காட்சிகளைக் கட்டமைத்த
புராணக் கதைகளில் வரும் மாயக் குதிரை (Trojan horse) இணைய மென்பொருள் குழந்தைகளைப் போதை ஏற்றியது, தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் மாறியது. தமிழ்நாடு அரசியல் மரபார்ந்த தன் அடிப்படை அருகதையை இழந்துவிட்டது.
எமது
நீலகிரி மாவட்ட நண்பர்
ஒருவர் கூறுகிறார்: “என் குழந்தைகள் இன்ஸ்டா பார்க்கிற அளவிற்கு எங்கள் செல்போன்
டவர்கள் வேலை செய்வதில்லை. ஆகவே, எங்கள் மாவட்டத்தில் எங்கும் ஆளும் கட்சி வெற்றிபெறவில்லை.” ஆம்,
நாமும் தேடிப் பார்த்தோம்... ஏற்காடு, வால்பாறை மற்றும் கொடைக்கானலிலும் ஆளும் கட்சி வெற்றி பெறவில்லை. நம் குழந்தைகளின் மனநிலை மாறி இருக்கிறது. அவர்கள் அலைப்பேசிக்கு அடிமையாக வாழ்கிறார்கள். அவர்கள் எதைப் பார்க்கிறார்கள்? என்பதைக் கண்காணிக்க வேண்டிய
கடமை நம்மைச் சார்ந்ததே. அதைக்
கட்டுப்படுத்த வேண்டிய தார்மிகப் பொறுப்பும் நமக்கு உள்ளது.
‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி
யாங்கண்ட தில் (குறள் 1071)
“மக்களைப் போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்தும் யாம் கண்டதில்லை” - மு.
வரதராசனார் உரை.
கயமை
மிக்க குணம் கொண்டோருக்கு என்று தனி அடையாளம் எதுவும் இல்லை. நாம் நாளும் சந்திக்கும் மனிதருக்குரிய உருவ ஒப்புமையே இவர்தம் அடையாளமாகும். கயமை எனும் தீக்குணம் உடையோருக்குத் தனி அடையாளமோ, உருவமோ இல்லாமையாதலால் மக்களில் நல்லவர் பலர் ஏமாந்தும் போகின்றனர், ஏமாற்றவும் படுகின்றனர்.
இவர்களில்
சிலர் அல்லது பலர் மக்களை ஆளும் தகுதியைப் பெற்று, ஆள்வோர் ஆகிவிடின், ஆளப்பெறும் மக்கள் நிலை என்னவாகும்? இவர்கள் தலைமை ஏற்கும் அரசின் போக்கில் ஒழுக்கம் (Morality) மற்றும்
அறம் (Ethics) பெறும்
இடம் என்ன? அறமற்ற அரசியல் கண்டு கவலையுற வேண்டிய அறக்காவலர்களாகிய குடிமக்களுள் பலரே ‘அரசியலில் இதுவெல்லாம் சாதாரணமப்பா’ என்று
நகைச்சுவையாகப் பேசி நகர்ந்து போகின்றனர்.
எது
சாதாரணம்? நூறு கோடி மக்களின் வாழ்விற்கு மக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, அனைத்து அறவழியும் துறந்து, வாக்கு எனும் அனுமதி பெற்று, நியாயமாக ஆட்சிக்கு வந்தோமென்று காட்டிக் கொண்டு செய்யும் அடாவடிகள் அனைத்தும் அரசியல் சாதாரணங்களாகிவிட்டமையை நாம் சந்தித்து வருகிறோமே! தொழில்நுட்பப் பெருவளர்ச்சியில் அனைத்துமே நம் சமையல் அறைகளையும், படுக்கை அறைகளையும் எட்டிவிட்ட நிலையிலும், அனைத்துச் செய்திகளையும் விமர்சனப்பூர்வமாகப் பார்க்கின்ற அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்ட நிலையிலும், அனைத்து ஒழுக்க மீறல்களையும், அறம் அழிந்த இழிசெயல்களையும் சாதாரணமென்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை என்னவென்று கூறுவது? ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்று
குழந்தைப் பருவ வகுப்புகளில் பாடமாகக் கற்ற நம் சமூகம், சாதாரணத்தை எப்படி ஏற்றுக்கொள்கிறது?
தமிழ்நாடு
ஒரு தேர்தலைச் சந்தித்து, புதிய மாநில அரசையும் கண்டுள்ளது. புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்குமுன் வீழ்த்தப்பட்ட தி.மு.க.
எனும் கட்சியை ‘தீய சக்தி’ என்று வாய் கூசாது வசை பாடியது. இக்கட்சி ‘கண்டுகொள்ளவில்லை’ என்ற
சாட்டப்பட்ட தேசியக் கட்சியையும், அதனோடு பொருந்தாக் கூட்டணி வைத்துக் கொண்ட ஒரு திராவிடக் கட்சியும் இவர் பெயர் சொல்லி அடையாளப்படுத்தவே இல்லையே!
கட்சியளவில்
பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லாதபோது, தீய சக்தியோடு அணி சேர்ந்த கட்சிகளைத் துணைக்கு அழைத்தபோது, சாதாரணமாகிப் போனது எது? மதச்சார்பற்றக் கூட்டணி அமைத்து, கூட்டு சேர்ந்த கட்சிகளின் உழைப்பினால் பெற்ற வெற்றியின் வீரம் காயுமுன்னே, கூட்டணிக் கட்சியின் தலைமைக்கு நன்றிகூட சொல்லாமல், விரைவாகக் கூடி தீர்மானம் ஒன்றினை எடுத்து த.வெ.க.
கட்சிக்கு ஆதரவு கொடுத்த தேசியக் கட்சியின் செயல் மக்களுக்குத் தரும் செய்தி என்ன?
அரசியல்
யுக்தியுள் ஒரு நேர்மையும் அறக்கோட்பாடும் வேண்டாமா? இக்கூட்டணியில் இடம்பெறும் ஏனைய மதச்சார்பற்றக் கட்சிகள் ஒரு கொள்கை நோக்கில் எடுத்த முடிவை நாம் பாராட்டவேண்டும். புதிய ஆளும் கட்சியின் பலவீனத்தை ஆதாயமாக்கி, வழக்கம் போல் கபளிகரம் செய்வதில் பெரு வல்லமை பெற்ற இந்திய மதப் பெரும்பான்மைவாதக் கட்சி ஏற்படுத்திய அச்ச உணர்வும் இதற்குக் காரணமாயிருக்கலாம். எப்படியோ, எங்கோ ஓரிடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகளும் நடப்பதுண்டு.
‘நாசி’யின் ஹிட்லரின் பாணியில் இந்திய அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரசியலின்
உள்ளடக்கமே ஒதுக்கலும் (நஒஉடரளiடிn), ஒடுக்கலுமே (exclusion). ஒன்றிய அரசின் அனைத்து ஆளும் முறைகளிலும் (Governance) இப்போக்கை
மிக வெளிப்படையாகவே பார்க்க முடியும். அண்மையில் மாநிலத் தேர்தல்களில் இப்பெரும்பான்மைவாத அரசு ஒழுக்கம், அரச நீதிக்கு மாறாக தேர்தல் ஆணையத்தைக் கையகப்படுத்தி, பொய்யான வெற்றி பெற்றதைப் பார்க்க முடிந்தது.
வங்க
மாநிலத் தேர்தலில் ‘ஊடுருவலாளர்களை ஒழிப்போம்’
(Infiltrators) என்ற
முழக்கத்தை முன்வைத்து
திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையைப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தீவிரமாக முன்னெடுத்து, அதில் வெற்றியும் கண்டனர். இந்நாட்டில் பிறந்து, குடிமக்களாக மாறிப்போன இசுலாமியரை ‘ஊடுருவலாளர்’ என்று
கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துதல் அறவழி அரசியலா?
கொள்கை
ரீதியாக எதிரியாக முத்திரை குத்தப்பட்ட வங்கத்தில் பொதுவுடைமை இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில், கோல்வால்க்கரால் மற்றோர் உள்நாட்டு எதிர்சக்திகளுள் ஒன்றாகப் பார்க்கப்பட்ட இசுலாம், இம்மதம் சார்ந்த இசுலாமியர், இவர்களைத் தேச வரைபடத்திலிருந்தே அகற்றிவிடும் நோக்கில் வாக்குரிமை சிறப்புச் சீர்திருத்தச் சட்டம் (SIR) என்ற
பெயரில் கொணரப்பட்ட ஒரு புது ஆயுதம் மூலம் அகற்றப்பட்டனர்.
நியாயமான
வாக்காளர் பலரைத் திட்டமிட்டு நீக்கிவிட்டு நடத்தப்படும் தேர்தலை, இத்தகைய அரசியலை நடத்துவோரை எப்படி அழைப்பது? அசாம் மாநிலத்தில் ‘மியாக்களை ஒழிப்போம்’
என்ற அசிங்கமான முழக்கத்தில் உள்ளடங்குவோர் யார் தெரியுமா? என்.ஆர்.சி. என்ற பெயரில் குடியுரிமை மறுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக எவ்விதத்
தீர்வுமின்றி அரசமைத்த முகாம்களில் அடைபட்டுக் கிடப்போர் யார்? குடும்பங்கள் சிதைக்கப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்வோர் யார் தெரியுமா?
தேர்தல்
களத்தில் வாக்குகளைத் திருடுதல் ஒரு
பக்கம்; மற்றொரு பக்கம் அந்நியர் அல்லது ஊடுருவலாளர் என்ற பொய்யான குற்றச்சாட்டில் அவமதித்தல். ‘குடியரசு’
என்ற பெருமையை வைத்துக்கொண்டு, குடியரசின் காவலராகிய குடிமக்களின் ஒரு
பகுதியினரை அவமானப்படுத்துவது கடுமையான மனித உரிமை மீறல் இல்லையா?
மனித
உரிமைகள் காக்கப்பெறாத சமூகத்தில் சனநாயகம் மிளிராது. சனநாயகமும் மனித உரிமைகளும் இணைந்தேதான் பயணிக்க முடியும். மனித உரிமைகள் இயல்பானவை (Inherent). இவ்வியல்பான,
இயற்கையான உரிமைகளைக் காக்கும் உத்தரவாதத்தில்தான் சனநாயக அரசு இயங்க முடியும்.
வாழும்
சுதந்திரம், சுயமரியாதை, சமத்துவம் என்பன வெறும் வெற்றுச் சொற்கள் அல்ல; அவை மானுடரின் உள்ளார்ந்த உரிமைகள். இந்த உரிமைகள் பறிக்க முடியாதவை, பிரிக்கவும் முடியாதவை. மனித உரிமைகளுள் முக்கிய உள்ளீடுகளான இவை பறிக்கப்படுகின்ற போதெல்லாம் அல்லது மீறப்படுகின்ற போதெல்லாம்
(Violation), மீறலுக்குள்ளாகின்ற
நபர் அல்லது குழு அவமானப்படுத்தப்படுகின்றது.
சமத்துவ
உரிமை பெற்ற மானுடம் அல்லது குடிமக்கள் சாதி, மதம், இனம், மொழி எனும் அடையாளங்களின் பெயரால் பாகுபடுத்தப்படுகின்றபோது மனிதம் மீறப்படுகின்றது. மனிதநேயம் கேள்விக்குள்ளாகிற அரசியல் நோக்கில் மனித உரிமைகள் மீறப்படுகின்றபோது அரசியல் அறம் வீழ்ந்துபோகிறது.
அரசியல்
அற வீழ்ச்சியென்பது, ஆளும் வர்க்கத்தால் நாளும் மீறப்படுகின்ற உரிமைகளின் வெளிப்பாடுகளே. இந்தியா ஒரு வர்ணச் சமூகம் மட்டுமல்ல, வர்க்கச் சமூகமும் கூட. வர்க்கம், வர்ணம் இரண்டும் சேர்ந்து மனித உரிமை மீறல்களை நிகழ்த்துகின்றபோது, அது அமைப்பு ரீதியான மீறலாகிறது.
இந்த
அமைப்பு ரீதியான மீறல்களை நம் நாட்டில் ‘பாரம்பரியம்’ என்ற
பெயரிலும், ‘பண்பாடு’ என்ற பெயரிலும், தற்போது இந்துத்துவர்கள் மொழி மற்றும் தேசியத்தின் அடிப்படையிலும் மீறுகின்றனர். தேசியம் இன ரீதியாகக் கட்டமைக்கப்படுகையில்
அல்லது மதப் பெரும்பான்மையில் கேள்வி கேட்போர் தேசத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்படுகின்றனர்.
தேசப்பாதுகாப்பு என்ற பெயரில்
ஆளும் வர்க்கத்தால் இயற்றப்படும் கறுப்புச்
சட்டங்கள் அறவழிப்பட்டதல்ல.
இந்திய
அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதச்சிறுபான்மையினராம் இசுலாமியரைப் பாகுபடுத்தும் ஒரு சட்டம். ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தோரை வெளிப்படையாக ஆதரிக்கும் ஓர் அரசாயினும் அல்லது தனிநபராயினும் இச்செயல் கயமைத்தனத்திற்குள் அடங்காதா?
டெல்லி
கலவரத்தைச் சுட்டிக்காட்டி கைது செய்யப்பட்ட உமர் காயத் ஐந்து வருடமாக விசாரணைக் கைதியாகச் சிறையில் வாடுவதையும், நீதி வழங்கவேண்டிய நீதிமன்றம் நீதி வழங்க மறுத்தலுக்கும் என்ன காரணம்?
அரசியல்
ரீதியாக உருவாகியுள்ள எதேச்சதிகார அரசுகள் அப்பட்டமாக முன்னெடுக்கும் அரசியல் முன்னெடுப்புகள், தந்திரங்கள், மானுடரின் உள்ளார்ந்த மாண்புகளுக்கு எதிராகச் செயல்படும் போது அதன் உள்ளடக்கம் கயமையே. ஒன்றிய
அரசின் ‘வளர்ச்சி’
என்னும் முழக்கம் வெறும் பொய் முழக்கமே! ஒன்றிய அரசு விடாப்பிடியாய் நடைமுறைப்படுத்த முயலும் தொழிலாளர் சட்டங்கள், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தி வந்த உளவுக்கான உரிமையும் வேலைக்கான உரிமையும் பறிக்கப்பட்ட தன்மையுள் அடங்கியிருப்பதும் கயமைத்தனமே.
சமூக-அரசியல் மற்றும் பண்பாட்டுத்தளத்தில் ஒருவர் மற்றொருவர்மீது, ஒரு சமூகம் மற்றுமொரு சமூகம் மீது, ஓர் அரசு தனி மனிதர் அல்லது சமூகத்தின்மீது வன்முறைகளை ஏவுவதும், அவ்வன்முறை கண்டும் காணாதிருப்பதும் கயமைத்தனமே. இக்கயமையை ஆற்றுவோர் எலும்பும் சதையுமுடைய மனிதர்களே. மனித சாயலுடையதே.
எனவேதான்
மக்களைப் போல்வர் கயவர். எச்சரிக்கை!
இன்றைய வேகமான உலகில், இளையோர் பெரும் கனவுகளோடு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகப் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, நகரங்களில் தனியாக வாழத் தொடங்குகிறார்கள். இந்த வாழ்க்கை அவர்களுக்குச் சுதந்திரத்தைத் தந்தாலும், அதனுடன் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும் பெரும் பொறுப்பையும் சேர்த்தே வழங்குகிறது.
சூழலும் மனநிலையும்:
ஒரு மனிதன் வாழும் இடமானது அவனது மனநிலையை மெதுவாக வடிவமைக்கிறது. சுத்தமான சூழல் மனத்தை இலகுவாக்கும்; அதுபோன்று, அலட்சியமான சூழல் மனத்தைச் சுமையாக மாற்றும். இது உடனடியாகத் தெரியாவிட்டாலும், நாளடைவில் ஒருவரது வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கும். இதற்கு ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கைச் சம்பவமே சிறந்த உதாரணம். வேலை நிமித்தமாகத் தனியாக வாழத் தொடங்கிய அவள், ஆரம்பத்தில் சமூக ஊடகங்களிலும் கொண்டாட்டங்களிலும் மூழ்கி இருந்தாள். ‘நேரமில்லை’
என்ற காரணத்தைக் கூறி வீட்டைச் சுத்தம் செய்வதைத் தள்ளிப்போட்டாள். விளைவாக, வீட்டில் குப்பை தேங்கியது போலவே, அவள் மனத்திலும் குழப்பங்களும் பதற்றமும் தேங்கின. ஒரு கட்டத்தில், அது மன அழுத்தமாக மாறுகிறது.
வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என நினைத்த நேரத்தில்
தனது வீட்டைக் கவனித்தாள். அவளுக்கு அப்போது ஒன்று தோன்றுகிறது, ‘இந்த
வீடு எப்படி இருக்கிறதோ, என் மனமும் அப்ப டித்தானே இருக்கிறது!’ என்று. தனது முடிவை ஒதுக்கிவைத்துவிட்டு, துடைப்பத்தை எடுத்து வீட்டில் ஒவ்வொரு மூலையையும் சுத்தம் செய்யத் தொடங்கினாள். அது வெறும் வீடு சுத்தம் செய்வது மட்டுமல்ல; அவள் மனச் சிதைவுகளைச் சீரமைக்கும் முயற்சியாகவும் மாறியது.
இன்றைய இளையோரின்
சவால்கள்:
இன்றைய இளையோர் சுதந்திரத்தை மிகவும் விரும்புகின்றனர். இந்தச் சுதந்திரத் தேடலில், அவர்கள் பல நேரங்களில் பாதுகாப்பின்
எல்லைகளை மீறவும் முயல்கிறார்கள். ஆகையால், அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலுடன் சுதந்திரத்தை வழங்குவது மிக முக்கியமானது. அவர்கள் தாங்களாக முடிவுகளை எடுக்கக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளைப் பெற்றால், அவர்களின் நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு மேம்படும். மேலும், இன்றைய இளையோருக்கு வெளிப்புறச் சவால்களைவிட, உள்ளுக்குள் நடக்கும் போராட்டங்களே அதிகம். மற்றவர்களுடன் ஒப்பிடுதல், சமூக ஊடகங்களின் தாக்கம், தனிமை மற்றும் தன்னம்பிக்கையின்மை போன்றவை மனத்தை மெதுவாக மாசுபடுத்துகின்றன. தூய்மை என்பது தேகத்தைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்ல, அது மனத்தெளிவையும் சார்ந்தது.
மனத்தையும் இதயத்தையும்
சுத்தமாக
வைத்திருக்க சில எளிய
பழக்கங்கள்:
இடத்தைச் சுத்தப்படுத்துதல்:
உங்கள் இருப்பிடத்தைச் சுத்தமாக வைப்பது சுய ஒழுக்கத்தைக் கற்றுத்தரும்.
திரை நேரத்
தணிக்கை:
தினமும் சிறிது நேரம் சமூக ஊடகங்களிலிருந்து விலகிDigital Detox செய்யுங்கள்.
குறிப்பெடுத்தல்:
எண்ணங்களையும் அன்றாடச் சம்பவங்களையும் எழுதும் பழக்கத்தை உருவாக்குங்கள்.
நல்ல சூழல்:
தேவையற்ற ஒப்பீடுகளை நிறுத்திவிட்டு, நல்ல நண்பர்களையும் நேர்மறையான சிந்தனைகளையும் கொண்ட சூழலைத் தேர்வு செய்யுங்கள்.
வாழ்க்கை
கட்டுப்பாட்டில் இல்லாததுபோல் தோன்றும் கடினமான நேரங்களில், அச்சூழலிலிருந்து தப்பிப்பதைத் தவிர்த்துவிட்டு, ஒரு சிறிய இடைவேளை எடுங்கள். சூழலைச் சுத்தம் செய்வதும், செபம் அல்லது தியானம் மூலம் மனத்தை அமைதிப்படுத்துவதும் உள்ளத்தைச் சுத்திகரிக்க உதவும். மேலும், பகுதி நேர வேலை செய்வது, புதிய விளையாட்டுகளை முயற்சிப்பது போன்ற ஆரோக்கியமான செயல்களில் ஈடுபட வேண்டும். இது முழுமையான வளர்ச்சிக்கும் நல்ல பாதையை உருவாக்கும்.
உலகத்தை
மாற்றும் சக்தி கொண்ட இளையோரின் அந்த மாற்றம், வெளியிலிருந்து அல்லாமல் உள்ளிருந்து தொடங்கவேண்டும். ஒரு சுத்தமான இடம், தெளிவான மனம் மற்றும் சமநிலையான வாழ்க்கைமுறை ஆகியவையே உண்மையான வளர்ச்சியின் அடையாளங்களாகும்.
“தூய்மையான உள்ளத்தோர்
பேறுபெற்றோர்...”
(மத்தேயு
5:8).
‘கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள்
தொழாஅர் எனின்’ (குறள்
2)
குறள் விளக்கம்:
தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் எதுவுமில்லை.
சிந்தனை:
கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. ‘நம்பினால் கடவுள்; நம்பாவிடில் வெறும் கல்’ என்ற வார்த்தைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
நாத்திகர் மற்றும் ஆத்திகர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நம்பிக்கையில் மாறுபாடுகள் அமைந்தாலும், ஒருவர் மற்றவருடன் நல்ல நட்பு பாராட்டமுடியும். ஒருவர்
ஒருவரது நம்பிக்கையை மதிக்கவேண்டும்.
அன்றைய
மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவிடம், “நீங்கள் தீவிர கொள்கைப் பிடிப்புமிக்க ஒரு கம்யூனிசவாதி; அன்னை தெரசாவோ ஒரு தீவிர ஆன்மிகவாதி; உங்கள் இருவருக்கும் இடையே எப்படி நட்பு மலர்ந்தது?” என்று கேட்டார்கள். சிரித்துக்கொண்டே ஜோதிபாசு கூறிய பதில்: “நாங்கள் இருவருமே ஏழைகளை நேசிப்பவர்கள் என்பதனால்தான்” என்றார்.
மேலும், “எனது மார்க்சியக் கொள்கைகளைத் தடுமாற வைக்கிறார் அன்னை தெரசா! ஏனெனில், இறைவனின் நன்மைத்தனத்தின்மீது நம்பிக்கை வைக்க அவர் என்னைத் தூண்டுகிறார்” என்று
சதுர்வேதி என்பவர் ஜோதிபாசு கூறியதாக ‘ஏழைகளின் மெசியா’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
‘கடவுள் அன்பாயிருக்கிறார்’ என
அனைத்து மதங்களும் போதிக்கின்றன. அதனால் அன்பைக் கடவுள் எனலாம். எனவே, அன்பினால் உந்தப்பட்டு மனுக்குலத்திற்கு ஆற்றும் பணிகளைப் பிறரன்புச் செயல்கள் என்கிறோம். ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்கிறோம். இதிலிருந்து கடவுள் என்பவர் எட்டாத தொலைவில், காணமுடியாத வகையில் இருப்பவர் அல்லர்; நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் உள்ள நன்மைத்தனத்தின் வடிவமே அவர். கற்றுத் தெளிந்தோரும் பாமரரும் இந்த மறைபொருளை எளிதில் அறிந்துகொள்ள முடியும். நம்பிக்கை கண்கொண்டு மட்டுமே கடவுளை நோக்க முடியும்.
“மாவீரன் அலெக்சாண்டர் மற்றும் மாமன்னர் சார்லிமென் போன்றோர் படைபலத்தால்தான் பேரரசுகளை நிறுவினர்; ஆனால், அளவற்ற தம் அன்பால் ஆட்சிப் பீடம் அமைத்தவர் இயேசு கிறிஸ்து. அவருக்காக இரத்தம் சிந்தவும் இறப்பைத் தழுவவும் இன்றும் பல்லாயிரம் மக்கள் முன்வர உள்ளனர்” என்றார் பிரான்சின் பேரரசன் நெப்போலியன் போனபார்ட் (1769-1821).
“ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்”
என்று நீதிமொழிகள் (1:7) கூறுகிறது. இறையச்சம் தீய செயல்களைத் தவிர்த்து, நல்வாழ்வு வாழ உறுதுணையாயிருக்கும்.
உண்மையான
இறையடியார் பாவத்தில் வெகுநாள் வாழ முடியாது. தீமையைத் தொடர்ந்து செய்ய அவர் மனம் ஒப்பாது. உறுத்திக்கொண்டே இருக்கும். நன்மையே உருவான இறைவனுக்கு உகந்தது எதுவோ, அதுவே அவரில் குடிகொள்ளும். தீமைக்கு அங்கு இடமில்லை. ஒளியாம் இறைவன் அருகில் இருள் நிற்க இயலாது. இத்தகைய மனநிலையைத் தரும் இறையச்சமே ஞானத்தின் தொடக்கம். எனவே, கற்றுத் தேர்ந்த ஞானிகள் தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனில் நம்பிக்கை இல்லாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் பயனில்லை என்கிறார் வள்ளுவர்.
மனிதனுக்கு
உறுதியூட்டும் இறைநம்பிக்கை நல்லது. ஆனால், ஒருவர் தனது இறைநம்பிக்கையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, பிறரது நம்பிக்கையைத் தாழ்வாக நினைப்பது தவறு. நமது சிந்தனையில் கடவுளைச் சிக்கவைப்பது சாத்தியமல்ல. இறைவனைத் தேடித்தேடி அலைபவர்கள் பலர் உள்ளனர். அதில் முக்தியும் கண்டவருண்டு. ‘கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ என்ற கேள்வி எழாத மனித மனமும் உண்டோ? ‘கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்’
என்போரே பலர். நன்மை உருவாக, அன்பின் வடிவாக இறைவனைக் காண்போம்.
உண்மையில் விவரம் தெரிந்த பிள்ளைகள் எத்தனை பேர் தங்கள் பெற்றோருக்குத் தங்களைவிட அதிகம் தெரியும் என்று நினைக்கிறோம்? அவர்களுடைய அறிவையும் அனுபவத்தையும் மதிக்கிறோம்?
“அம்மா, நீ சும்மா இரும்மா.
உனக்கு ஒண்ணும் தெரியாது.”
“அப்பா, இது எனக்கு உடனே வேணும்பா. ஏம்பா இப்படிப் புரியாம பேசுறே?”
இப்படிப்பட்ட
குற்றச்சாட்டுகளை நாம் எத்தனை முறை நம் பெற்றோர்மேல் சுமத்துகிறோம்?
எனக்குத்
தெரியும்... நான் எனக்குப் பிடித்ததைத்தான் சாப்பிடுவேன், பிடித்தபடி உடுத்துவேன், பிடித்தவர்களோடு பழகுவேன்...
ஒரே
பிள்ளை என்று செல்லமாக வளர்க்க முயலும் பெற்றோர்கள் இத்தகைய பிடிவாதப் போக்கைக் குழந்தைகளிடம் வளர்த்துவிடுகிறார்கள். அப்பா கண்டிக்க முயன்றால், அம்மா குறுக்கே வருவார். அம்மா கண்டிக்க முயன்றால், அப்பாவின் குறுக்கீடு, தாத்தா-பாட்டியின் குறுக்கீடு. இதுவா நம் இளைய தலைமுறையை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துகிறது? நிச்சயம் இல்லை!
இளைஞர்களாகிய
நாம் வளரவேண்டும். நிச்சயம் நம் சொந்தக் காலில் நிற்கப் பழகவேண்டும். ஆனால், இது படிப்படியாக நிகழவேண்டும். இந்த வளர்ச்சியில் மூன்று படிநிலைகள்: 1. நாம் பிறக்கும் போது முற்றிலுமாக நம் தாயையும் பெற்றோரையும் சார்ந்திருக்கிறோம். 2. அடுத்த கல்விப் பருவத்தில் நாம் படிப்படியாக நம் சொந்தக் காலில் பெற்றோர், ஆசிரியர், சக நண்பர்களின் துணையோடு
வளரப் பழகுகிறோம். 3. உயிரினங்களிலேயே நமக்குத்தான் மிக நீண்ட 20, 25 ஆண்டுப் பயிற்சிக்காலம் கிடைத்திருக்கிறது. இந்தக் காலம் முழுவதும் நாம் பெற்றோரையும் ஆசிரியரையும்தான் நம்பி இருக்கிறோம். பெற்றோரின் உழைப்பும் அன்பும் அரவணைப்பும்தான் நம் தேவைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் நிறைவு செய்கிறது.
நம்
உணவு, உறைவிடம், வாழ்க்கை, வசதிகளைத் தேடித் தருவது மட்டுமல்ல; நமது உடல் நலம், நல்ல பழக்கங்கள், நல்ல ஒழுக்கம், நல்ல கல்வி ஆகியவற்றைத் தேடித்தருவதும் அவர்களுடைய கடமையாகிறது. பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்காகப் பல கடுமையான தியாகங்களைச்
செய்கிறார்கள். நாம் ஒரு வேலைக்குப் போய்ச் சொந்தமாகச் சம்பாதித்து நம் சொந்தக் காலில் நிற்கும்வரை அவர்கள்தான் நம்மை வளர்க்கிறார்கள்.
நாமே
நம் காலில் நின்று, நம் பெற்றோரையும் நிம்மதிப் பெருமூச்சுவிட வைக்கும்போதுதான் நாம் முழுச்சுதந்திரத்தைப் பெறுகிறோம். நாம் முழுமையாக வளர்க்கப்படும் முதல் பருவத்தில் சிக்கல் எதுவுமில்லை. நம்முடைய தேவைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு பெற்றோர் நிறைவேற்றி வைத்து விடுகிறார்கள்.
நாம்
நாமாகச் சிந்தித்துச் செயல்படப் பழகும்போதுதான் நம் மனப்போராட்டம் தொடங்குகிறது. பதின்பருவங்களில் ஏற்படும் உடல்நிலை மாற்றங்களும் நமக்குள்ளே ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படத் தொடங்குகிறோம். சுயசிந்தனை, நிதானம், சக நண்பர்களையும் மதித்துச்
செயல்படும் பக்குவம் போன்ற வாழ்க்கைப் பண்புகள் உருவாகத் தேவையான அனுபவங்கள் பதின்மப் பருவத்தைத் தாண்டிய பிறகுதான் வந்து சேர்கிறது.
இந்த
மனப்பக்குவம் வந்து சேரும்வரை நாம் பெற்றோரையும் ஆசிரியரையும் மற்ற வழிகாட்டிகளையும் மதித்து, அவர்கள் காட்டும் வழித்தடங்களைப் பற்றிச் சிந்தித்துச் செயல்பட நாம் பழகிக் கொள்ளவேண்டும். இப்படிப் பழகிக்கொள்கிற பிள்ளைகள்தாம் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். இப்படிப் பயிற்றுவிக்கிற பெற்றோர்தாம் தங்கள் முதுமைப் பருவத்தை நிம்மதியாகக் கழிக்கிறார்கள்.
வளர்க்கப்படும்
பருவத்திலிருந்து, சொந்தக் காலூன்றி வளரும் பருவத்தை நோக்கி நகர்கின்ற பயணம் நீண்டது. இருபது ஆண்டுகள் வரை நீண்டு நிற்பது சலனங்களும் சவால்களும் நிறைந்தது. நன்றாக வளர்ந்து நிற்கும்வரை, நாம் வளர்க்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து பயணிப்போம். வெற்றி நிச்சயம்!
‘என் பெற்றோருக்கு
என்மேல்
அக்கறை
உண்டு!
அவர்களால்தான்
நான்
பக்குவமாக
வளர்க்கப்படுகிறேன்.
என்
சொந்தக்
காலில்
நிற்கும்
முழுத்திறமையும்
வரும்வரை
நான்
அவர்களுக்குப்
பணிந்திருப்பேன்.’