அண்மையில் 20 கத்தோலிக்கக் குடும்பங்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் பெரும்பாலும் கட்டட வேலை, 100 நாள் வேலை மற்றும் விவசாயக் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் தினம் ரூ. 300 முதல் ரூ. 500 வரை சம்பாதிக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் கல்வி, மருத்துவம், குடும்ப நிகழ்ச்சிகள், கிராமத் திருவிழாக்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடன் வாங்கி, மாதம் ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை திருப்பிச் செலுத்துகின்றனர்.
ஆண்கள்
தினம் ரூ. 700 முதல் ரூ. 1,000 வரை சம்பாதித்தாலும், பெரும்பாலோர் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் ரூ. 150 முதல் ரூ. 200 வரை மதுவுக்குச் செலவிடுகின்றனர். மேலும், திருமணம், மரணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை மதுவிற்குச் செலவாகிறது. இளைஞர்களும் வாரந்தோறும் மதுவை அருந்துவது வருத்தத்திற்குரியது.
தமிழகத்தில்
‘டாஸ்மாக்’ கடைகள்
மற்றும் கள்ளச்சாராயம் சமூக வாழ்வில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. குடும்பப் பிளவுகள், மகளிர்-குழந்தையர் துயரங்கள், உடல் நலப் பிரச்சினைகள், இளம் வயது மரணங்கள், வறுமை, கடன்சுமை, வன்முறை ஆகியவை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கிராமப்புறக் கத்தோலிக்க விழாக்கள் மற்றும் இறுதிச் சடங்குகளிலும் மதுவின் தவறான பயன்பாடு அதிகரித்துள்ளது.
பல
கத்தோலிக்கச் சமூக சேவை மையங்கள் மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்புப் பணி செய்து வருகின்றன. அவர்களின் பணி பாராட்டத்தக்கது. இருந்தாலும், திரு அவையின் சமூகப் பொறுப்பாக மதுவிலக்குப் பிரச்சினையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது அவசியமாகிறது.
கத்தோலிக்கத்
திரு அவை அரசியல் சார்புடையதல்ல; ஆனால், கடந்த காலங்களில் சமூக அவலங்களைக் கண்டித்தும், மக்களின் நலனுக்காக ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தும் வந்துள்ளது. 2018-19-ஆம் ஆண்டுகளில் ஆயர் பேரவை இயற்கைவளச் சுரண்டல், விவசாயிகள் பிரச்சினைகள், ஸ்டெர்லைட், சாதிக்கொலைகள் போன்ற பல சமூகச் சிக்கல்களைத்
தொடர்ந்து வலியுறுத்தியது.
2021 சட்டமன்றத் தேர்தலில்
ஆயர் பேரவையின் அரசியல் வழிகாட்டல் ஆட்சி மாற்றத்திற்குப் பங்காற்றியது. அதன் பலனாக, தற்போதைய அரசு சிறுபான்மை நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், மதுக் கடைகள் குறைக்கப்படும், படிப்படியாக மூடப்படும் என்ற வாக்குறுதி மட்டும் நிறைவேறவில்லை.
தமிழகத்தில் மதுவிலக்கு
- மீள்பார்வை
1948: சென்னை
மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அறிவிக்கப்பட்டது; 50 ஆண்டுகள் தொடர்ந்தது.
1981: எம்.ஜி.ஆர். அரசு
மதுவிற்பனையை மீண்டும் அனுமதித்தது.
1983: டாஸ்மாக்
நிறுவப்பட்டது.
1989: மலிவு
விலை மதுவை அறிமுகப்படுத்திய கருணாநிதி அரசுக்குப் பின்னர் ஜெயலலிதா அதை இரத்து செய்தார்.
2003: சில்லறை
விற்பனை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, டாஸ்மாக் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
இன்று,
4,829 டாஸ்மாக் சில்லறைக் கடைகள், 2,919 பார்கள் இயங்குகின்றன. அதன் வருவாய்...
2003-04: ரூ. 3,694 கோடி
2010-11: ரூ. 14,965 கோடி
2015-16: ரூ. 25,845 கோடி
2019-20: ரூ. 33,133 கோடி
2022-23: ரூ. 44,121 கோடி
2023-24: ரூ. 45,856 கோடி
2024-25: ரூ. 8,344 கோடி
இவ்வாறு
வருவாய் அதிகரித்தாலும், அதனுடன் சமூகச் செலவுகளும் (மருத்துவம், கல்வி பாதிப்பு, குடும்ப நலன்) உயர்ந்து வருகின்றன.
அண்மைக்காலங்களில்
கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்துள்ளன. 2023 ஜூன் - விழுப்புரம், செங்கல்பட்டு: 22 பேர் உயிரிழப்பு. 2024 ஜூன் - கள்ளக்குறிச்சி: 65 பேர் உயிரிழப்பு, 150 பேர் சிகிச்சை. கடந்த
ஐந்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை மதுவிலக்கின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
கணவன்-மனைவி தகராறு, குடும்ப வன்முறை, பெண்களின் உழைப்புப் பணம் மதுவுக்குச் செல்வது, இளம் விதவைகள், குழந்தைகளின் கல்வி பாதிப்பு, சிறுவர் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு, கர்ப்பிணி
மகளிர் மற்றும் குழந்தையரின் உடல் நலப் பிரச்சினைகள் என சமூகம் சிதைந்து
போகின்றது.
தமிழ்நாடு
திரு அவை இதனை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும். முதல்வரிடம் பூரண மதுவிலக்கு தொடர்பான மனுவை நாம் வழங்கவேண்டும். ஆலயங்கள், கல்வி நிறுவனங்கள், மகளிர் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாம் நடத்தவேண்டும். மது விடுதலை மையங்கள், கைம்பெண்-குழந்தையருக்குப் பொருளாதார ஆதரவை நாம் வழங்கவேண்டும்.
அடுத்தத்
தேர்தலில் பூரண மதுவிலக்கு உறுதி செய்யும் அரசையே கத்தோலிக்க மக்கள் ஆதரிப்போம் என்று வெளிப்படையாக நாம் கூறவேண்டும்.
திருவிவிலியப்
பார்வையில்
“மது மனிதனைக் கேலி செய்கிறது; கள்ளம் இரக்கமற்றவன்” (நீமொ
20:1). “உங்கள் உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம்”
(1கொரி 6:19). ஆகவே,
மனித உடலும் குடும்பமும் மதுவிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்; திரு அவை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, “உண்மையை அறிந்தால் அது உங்களை விடுதலை செய்யும்”
(யோவா 8:32) என்ற வாக்குறுதியின் அடிப்படையில் சமூக விடுதலைக்குப் போராடவேண்டும்.
மதுவிற்பனையும்
கள்ளச்சாராயமும் வறுமையை அதிகரிக்கும் சமூகக் கொலைகள் ஆகும். தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமெனில், பூரண மதுவிலக்குத் தவிர்க்க முடியாதது.
தமிழ்நாடு
கத்தோலிக்கத் திரு அவை, தன் வரலாற்றுச் சமூகப் பங்கினைப் போலவே, இன்றும் மதுவிலக்குப் பிரச்சினையை முன்னெடுத்து, மக்களின் உயிர், குடும்பநலம், எதிர்காலத் தலைமுறை பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். இதுவே, நம் கிறித்தவச் சாட்சியம்; காலத்தின் அவசியமும் கூட.
தமிழ்ச் சமூக மரபுப்படி தனிநபர் வழிபாடு இல்லை. இனக் குழுக்களின் மரபார்ந்த வழிபாடு இயற்கை வழிபாடாகும். மனிதன் எதையெதைத் தன் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையோ அதை வழிபட்டான். சூரியன், சந்திரன், காற்று, நீர், நிலம் என்பதைப் ‘பஞ்சபூதம்’ என்றான். நதிக்கரை நாகரிகத்தின் படிநிலையாக விவசாயம், இரும்பை உருக்குதல், வளைத்தல், இரும்புப் பொருள்கள் செய்தல் எனத் தொழில் சார்ந்த சமூகக் குழுக்கள் உருவாகின.
மனிதன்,
தான் கண்ட புதியவைகளில் வியந்தான். அதில் ஒரு பகுதியாக, தன்னிடம் இல்லாத சிறந்த
திறன் கொண்ட மனிதர்களைப் போற்றினான். குழு தலைவன், அரசன் என ஆராதித்தான். இதனால்
தனிநபர் வழிபாடு உருவானது.
தமிழ்நாடு
அரசியலையும், திரைத் துறையையும் பிரித்துப் பார்க்க இயலாது. 1953-இல் தி.மு.க.-வின் அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர். 1969 வரை
தி.மு.க.வில் நின்றார்.
தன் திரைப்பாடல்களில், வசனங்களில், காட்சிகளில் தி.மு.க.
கொடியைக் காட்டுவது, உதயசூரியன் சின்னம் வைப்பதுமாக இரசிகர்களின் திரை மோகத்தை, தி.மு.க.வுக்கு மடை மாற்றினார். தன் இரசிகர்களை அரசியல்மயமாக்கினர் அண்ணா, கருணாநிதி, முரசொலி மாறன் உட்பட்ட திரைக் கதாசிரியர்கள். எம்.ஜி.ஆரின் திரைக்
கவர்ச்சியைத் தி.மு.க.வுக்காக மிகச் சரியாகப் பயன்படுத்தினர். எம்.ஜி.ஆர். சட்டமன்ற
உறுப்பினராகவும், தி.மு.க.
கட்சிப் பொருளாளராகவும் உயர்ந்தார். தன் சினிமா பிம்பத்தை இரசிகர் மன்றங்கள் வழி ஒருங்கிணைத்தார். வள்ளல் தன்மை என்ற புகழிற்காகத் தன் பெரும் வருவாயைக் கரைத்தார்.
அன்றைய
முதல்வர் கருணாநிதிக்கும், எம்.ஜி. ஆர். அவர்களுக்கும் ஏற்பட்ட தன் முனைப்பால் (ஈகோ) எம்.ஜி.ஆர். அவர்களைத்
தி.மு.க.வில்
இருந்து நீக்கும் முடிவு வந்தது. எம்.ஜி.ஆர். - கலைஞர்
எதிர்ப்பு, தி.மு.க.
எதிர்ப்பு என்ற அடிப்படையில் அ.தி.மு.க. என்ற கட்சியை
ஆரம்பித்தார். இன்றுவரை அ.தி.மு.க. அதே நிலைப்பாட்டில்
உறுதியாக நிற்கிறது.
எம்.ஜி.ஆர். அவர்கள்
இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் பொதுக் கூட்டங்களில் பேசி பொதுமக்களைச் சந்திக்கிறார். ஊடக வெளிச்சம் இல்லாத அக்காலத்தில், பெரிய
பொட்டல் காடுகளைத் தூய்மை
செய்து பொதுக்கூட்டங்கள் நடந்தன. திருப்பூரில் அப்படிப் பொதுக் கூட்டம் நடந்த இடத்திற்கு ‘எம்.ஜி.ஆர். காடு
என இன்றுவரை அழைக்கப்படுகிறது. இதன் நீட்சியாக வி.ஆர். ஜானகி,
ஜெ. ஜெயலலிதா எனத் தொடர்ந்தது. தி.மு.க.வும் தன் பங்கிற்கு மு.க. முத்து,
மு.க. ஸ்டாலின், உதயநிதி
எனத் தன் குடும்ப நபர்களைத் திரைத் துறையில் இறக்கியது; அது தோல்வியில் முடிந்தது என்பதே சரியானதாகும்.
காலச்சக்கரம்
சுழல்கிறது. தனது நான்கு திரைப்படங்கள் நன்கு ஓடிய பின், அடுத்த ‘தமிழ்நாட்டு முதல்வர் நான்’ எனத் தமிழ்த் திரைக் கதாநாயகன் கற்பனைக் கோட்டை கட்டுகிறார். தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத தேசியக் கட்சிகள் பின்புலமாக நிற்கிறார்கள். ஊடகம் மற்றும் மின்னணு காலத்தில் மக்களைக் கவர அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயம் வந்தது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு வியூக வகுப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஆலோசனை கூறுகிறார்கள்.
அவ்வாறே,
ஒரு நடிகரும் கட்சி ஆரம்பித்தார். அவர் தன் கட்சியின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஒரு வியூக வகுப்பாளரை வைத்தார். உடை முதல் எல்லா முடிவுகளையும் அவரே எடுத்தார். அவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் வியூக வகுப்பாளரிடம் பல விசயங்களைப் படி
எடுத்தார். முழு காபி அடித்தார்.
திராவிடம்,
தமிழ் தேசியம் இரண்டிலும் கட்- பேஸ்ட் செய்து கட்சிக்கொள்கை, கொள்கைத் தலைவர், அரசியல் எதிரி, கொள்கை எதிரி என முழங்கத் தொடங்கினார்.
அவர்கள்
கட்சி நிகழ்ச்சிகளை நிகழ்வு மேலாண்மை முறையில் சடங்காக நடத்தினர். தலைவர் வெளியே வராமல், தலைவரின் அலுவலகத்தில் அனைத்தும் நடந்தன. பாதிக்கப்பட்ட மக்களும் அங்கே அழைத்துச் செல்லப்பட்டு, தலைவரின் தரிசனம் தரப்பட்டது.
தலைவரின்
உரைகள் வெளி ஆதார முறையில் (அவுட் சோர்சிங்) பெறப்பட்டது. தலைவர் உரையை ஏற்ற-இறக்கங்களுடன் பேசப் பயிற்சி, மனப்பாடப் பயிற்சி நடந்தது. அவரது பேச்சு தின மலரின் திண்ணைப் பிரச்சாரமாக, பொத்தாம் பொதுவில் இருந்தது; வாரிசு அரசியல், ஊழல், சட்டம்-ஒழுங்கு சரி இல்லை, போதைப்பழக்கம், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற எல்லைக்குள் அடங்கியது. கடைசியில், மூன்று நிமிடப் பேச்சிற்கே தள்ளாட வேண்டிய நிலை நடிகருக்கு வந்தது. அவரது உள்ளடக்கம் இல்லாத, சமூக, தமிழ்நாட்டுப் பிரச்சினை அறியாத அவரது மொழியில் செயல்திட்டம் (புராஜெக்ட்) தோல்வியில் முடிந்தது. அவர் தமிழ்நாடு, தமிழ் சமூகப் பிரச்சினைகளை அறிய வேண்டும். அவருக்கு அரசியல் வியூக வகுப்பாளர் புகட்டிய, “மக்களைக் கவர்வதில் நீங்கள் எம்.ஜி.ஆர்.; கட்சி
நடத்துவதில் நீங்கள் ஜெயலலிதா’
என்ற பால பாடமே மனத்தில் பதிந்துகிடக்கிறது.
நடிகருக்குக்
கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது. அது கட்டுப்படாத கூட்டம். தங்கள் தலைவர் திரைப் படத்தில் காட்டிய சாகசங்களைத் தலைவர் முன் செய்து காட்டுகிற விடலைக் கூட்டம். தலைவர் முகம் காண வேண்டும், தலைவரோடு, தலைவர் பிரச்சார வண்டியோடு ‘செல்பி’ எடுக்க வேண்டும் என்ற திரை மோகம் தவிர வேறு எதுவுமில்லை.
இவர்களை
அரசியல்மயப்படுத்த வேண்டும் என்கிற குரல்கள் உள்ளன. இவர்கள் தங்கள் கையில் உள்ள கைப்பேசியில் சமூகநீதி, மொழிப் பிரச்சினை, மாநில சுயாட்சி, காவேரி, முல்லை பெரியாறு, கச்சத்தீவு என அடித்தால் பதில்
வரும். அவர்கள் தலைவருக்கே, இது குறித்த தெளிவு இல்லாத போது, இதை இரசிகர்களிடம் எதிர்பார்ப்பது தவறானது. தலைவருக்கும் தொண்டர்களுக்கும் ஒரே திரைப்பாடலில் முதலமைச்சராக
மாறும் கனவு மட்டுமே உள்ளது. அதற்கான செயல்திட்டம் இல்லை.
பிரச்சினைகளைப்
பற்றிப் பேசுகிற நடிகர் எங்கேயாவது தீர்வைக் கூறினாரா? ‘இல்லை’ என்பதே நடப்பு. கூட்டத்திற்கு வரும் இரசிகர்களைக் கேட்டால், ஒரே பதில் ‘தமிழ்நாட்டில் அரசியல், ஆட்சி மாற்றம் வரட்டுமே; மாற்றத்தை மட்டுமே வேண்டுகிறோம்’ என்பதே.
அந்த மாற்றம் குறித்த விவரங்கள் தலைவரிடமோ, இரண்டாம் கட்டத் தலைவர்களிடமோ, தொண்டர்களிடமோ இல்லை.
ஏனெனில், அவர்களிடம் அது குறித்த அடிப்படைத் தெளிவு இல்லை.
தலைவரோ
தான் வெளியே வந்து, எம்.ஜி.ஆர். போல
தன் முகத்தைக் காட்டினால் ஓட்டு விழும்; ஜெயலலிதா போல தான் ஒன்று, தன் கட்சியில் எல்லாரும் பூஜ்யம் என்ற மனநிலையில் உள்ளார். எல்லாக் கதாநாயக நடிகர்களைப் போல, மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் தானே உயர்ந்தவன் எனக் கருதுதல், விமர்சனங்களை ஏற்காமல், சுற்றியுள்ள எல்லாரும், தன்னை உச்சி முகர்ந்து பாராட்டுகளைத் தரவேண்டும் என்ற மனநிலையில் வாழ்கிறார். இதன் விளைவு கரூர் துயரச் சம்பவங்களின்போது இக்கட்சித் தலைவருக்கு, தலைமைப் பண்பு இல்லை. ‘என்னய்யா கட்சி இது?’ என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெளுத்து வாங்கிவிட்டனர்.
எங்கள்
கிராமங்களில் சொலவடை ஒன்று உண்டு: ‘சிறுவர் விட்ட வெள்ளாமை விளையுமாம், வீடு வந்து சேராதாம்.’ இது அந்த நடிகரின் கட்சிக்கும் பொருந்திப் போகிறது.
இவர்கள்
மண் குதிரைகள். அவர் மாய மான். மாய மானை ஆர்.எஸ்.எஸ்.-இன் வலையில் அமுக்கி விட்டது என்பதே பரிதாபத் தகவல்.
இந்தக்
கட்சிக்கு தமிழ்நாட்டின் பெரும் ஆர். எஸ்.எஸ். கார்ப்பரேட் கம்பெனி பணத்தை வாரி இறைக்கிறது என்பது கூடுதல் செய்தி. தமிழ்நாடு வாக்காளர்கள் 2026 தேர்தலில் விழித்தெழ வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
ஒடுக்கப்பட்ட யூத மக்களின் துயர் கண்டு இறங்கி வந்து விடுதலை அளித்த இறைவன், விடுதலைப் பயண நூலில் (3:7-10) தம்மை ஒடுக்கப்பட்டோரின் கடவுள் என வெளிப்படுத்துகிறார். மீட்பின் வரலாற்றில் தொடர்ந்து விளிம்பு நிலை மக்களுக்கு விலங்கொடித்து விடுதலை அளித்துக்கொண்டே இருக்கிறார். உலகில் உள்ள அடிமைப்படுத்தப்பட்ட இனங்கள் விடுதலை அடைந்து கொண்டுள்ளன.
இந்தியாவில்
தலித் கிறித்தவர் மூன்று நிலைகளிலும் ஒடுக்கப்படுகின்றனர். இந்துவாக இருந்தபோது சாதியத் தீண்டாமையினாலும், கிறித்தவச் சமூகத்திற்குள் காட்டப்படும் வேறுபாடுகளினாலும் பாதிப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசினாலும் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இறையாட்சியின் மதிப்பீடுகளின் அடிப்படையில் சமத்துவம், நீதி நிறைந்த சமுதாயம் அமைக்க தலித் மக்கள் விடுதலை பெற வேண்டும். தலித் மக்களின் விடுதலையில்தான் இறையாட்சி விடியும்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர்
இந்தியச் சமூகம்
சாதிய அமைப்பின்மீது கட்டப்பட்ட சமூகம். இச்சாதியம் சமயம் கடந்து எங்கும் பரவியுள்ளது. இந்திய வரலாற்றில் வர்ணத்திலிருந்து வளர்ந்த சாதியம் கி.மு. 1500-ஆம்
ஆண்டிற்குப்பின் ஆரியர்களால் புகுத்தப்பட்டது. அவர்கள் தலைமையைத் தக்க வைக்க இந்தப் பொய்யான படிநிலை சாதியமைப்புக் கடவுளின் படைப்பு என்று கூறப்பட்டது. வேத நூல்கள் அதைப் புனிதம் ஆக்கியது. சாதி அமைப்பைத் ‘தர்மம்’ என்று ரிக் வேதம் அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது (X90.12). இந்த
நான்கு வர்ண (Chatur Varba) அமைப்புகளுக்குள்ளும்
வராத மக்களைச் ‘சாதிக்குப் புறம்பானவர்கள்’ என்று
தள்ளிவைத்தனர். மனுதர்மச் சட்டம் மண்ணின் மைந்தர்களை அடிமைகள் (தாசர்கள்), பஞ்சமர்கள் (ஐந்தாவது பிரிவினர்), சாதிக்குப் புறம்பானவர்கள், சண்டாளர்கள் என்று பெயரிட்டது. மண்ணின் மைந்தர்களின் மனித உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டனர்.
உரிமைகள் மறுக்கப்படுவோர்
ஒடுக்கப்பட்ட
மக்கள் ஒருங்கிணைந்த முன்னேற்றம் பெறுவதற்கு உரிமைகள் அளிக்கப்பட்டன. இந்திய அமைப்புச் சட்டம் 15, 16 இவைகளில் முதல் சட்டத்திருத்தம் கொண்டு வந்து பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இவர்களுக்குச் சிறப்பு உரிமைகளையும் ஒதுக்கீட்டையும் அரசு அளித்தது. அரசியல் சாசனப் பிரிவு 15(4) சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தார் மற்றும் பழங்குடியினர் இவர்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்புச் சட்டங்களை அரசு உருவாக்குவது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் கீழ்க்காணும் உரிமைகளைப் பட்டியலினத்தார் மற்றும் பழங்குடி மக்களுக்குச் சமூகநீதி அடிப்படையில் அரசு அளிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவைகளில் ஒதுக்கீட்டு உரிமையும் சட்டப் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
பட்டியலினத்தவருக்கு
வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும் மதம் மாறிய பட்டியலினக் கிறித்தவர்களுக்கு மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பல அமைப்புகள் தலித்
சம உரிமைக்காகப் போராடி வருகின்றன. இது இந்தியாவெங்கும் ஒடுக்குமுறைக்கு எதிரானப் போராட்டமாகவும் எதிரொலித்து வருகின்றன.
திரு அவையின்
தலித்
விடுதலைத்
திட்டங்கள்
தமிழ்நாடு
தலித் கத்தோலிக்க ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக, தமிழ்நாடு ஆயர் பேரவை 1990-ஆம் ஆண்டு 10 அம்ச செயல்திட்டத்தினை அறிக்கையிட்டது. அதனைத் தொடர்ந்து 2004-இல் தலித் கத்தோலிக்கக் கிறித்தவர்களை அதிகாரப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான எட்டு அம்சத்திட்டம் ஒன்றை அறிவித்தது. ஆனால், முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.
இந்தியக்
கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பட்டியலின கத்தோலிக்கரின் அதிகாரப்படுத்தலுக்கான கொள்கை வரைவை 2016, டிசம்பர் 26-இல் பிரகடனம் செய்தது. இதில் 12 தலைப்புகளில் 56 செயல்திட்டங்களைக் கத்தோலிக்கத் திரு அவையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, திட்டங்களைச் செயல்படுத்தி, தலித் மக்களை அதிகாரப்படுத்த வேண்டும் என்று அறிக்கையிடப்பட்டது. இதன் நோக்கம் அனைவரையும் உள்ளடக்கிய நீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனித மாண்பு நிறைந்த இறையாட்சிச் சமூகத்தை இம்மண்ணில் மலரச் செய்வது ஆகும். எட்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இத்திட்டங்கள் செயலாக்கம் பெறவில்லை. ஆகவே கீழ்க்காணும் தலித் கொள்கை வரைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, தலித் மக்களை அதிகாரப்படுத்த வேண்டும்.
1. தீண்டாமை,
சாதிப் பாகுபாடுகளை ஒழித்து, சமத்துவச் சமுதாயம் உருவாக்குதல்.
2. அரசியல்தளத்தில்
சம உரிமை பெற மக்கள் அமைப்புகளோடு இணைந்து செயல்படுதல்.
3. பங்கேற்பு
அமைப்புகளில் ஆளுமையோடு பங்கேற்று தலைமையேற்கச் செய்தல்.
4. பொதுநிகழ்வுகளில்
தலித் கலை, பண்பாட்டுக் கூறுகளை இடம்பெறச் செய்தல்.
5. உயர்கல்வி,
தொழில்நுட்பக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் கல்வி அளிக்க வேண்டும்.
6. இளைஞர்கள்
நுண்திறன்கள், ஆளுமை வளர்ச்சி, தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, தற்சார்பு ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு நல்ல தலைவர்களாக உருவாகச் செய்தல்.
7. அனைத்து
நிலைகளிலும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான சிறப்புப் பயிற்சி அளித்தல்.
8. பெண்கள்
சமப் பங்கேற்பு, பங்களிப்பு மற்றும் தலைமையேற்க வழிசெய்தல்.
9. திரு
அவை, சமூகம், அரசியல் தளங்களில் தலைமையேற்கத் தொடர் பயிற்சித் திட்டங்கள்.
10. ஒடுக்கப்பட்டோருக்கு
உரிமையளிக்கும் வலுவுள்ள மக்கள் அமைப்புகளை அமைத்தல்.
11. குறைதீர்ப்பு
மையம்.
12. கண்காணிப்புக்குழு.
தலித் விடுதலைக்கு
அரசு
உரிமைகள்
1921-ஆம் ஆண்டிலிருந்து
வகுப்புவாரி ஒதுக்கீட்டு ஆணையின் அடிப்படையில் ‘இந்தியக் கிறித்தவர்’ என்ற
பிரிவில் தொடர்ந்து ஒதுக்கீட்டு உரிமைகளைப் பெற்று வந்தனர். 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 15/4 சாதியின் பெயரால் அனைத்துப் பட்டியல் சாதியினருக்கும் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு உரிமைகளைச் சமயத்தின் பெயரால் தலித் கிறித்தவர்களுக்கு மறுக்கும் 1950 ஜனாதிபதி ஆணை 3-வது பத்தி நீக்கப்பட்டு, சமூக நீதி தலித் கிறித்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
1992 முதற்கொண்டு நீதி
ஞாயிறாகவும், 2007 முதல் தலித் விடுதலை ஞாயிறாகவும் கருத்துடன் கடைப்பிடிக்கப்பட்டது. இப்போராட்டம் சமநீதிக்காக எடுக்கும் நெடும் போராட்டமாக உள்ளது. தேசிய அளவில், அகில இந்திய ஆயர் பேரவை தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழு, மாநில ஆயர்கள் பணிக்குழு, தலித் கிறித்தவ மக்கள் இயக்கங்கள் கடந்த 74 ஆண்டுகளாகப் பேரணி, மாநாடு, உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
மத்திய-மாநிலத் தலைவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இச்சமூக நீதிப் பிரச்சினை அரசியல் ஆக்கப்பட்டு, தலித் கிறித்தவர் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய
அரசு மே, 2007 முதல் 18 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் இரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையான ஜனாதிபதி ஆணை 1950 பத்தி 3 முழுவதையும் நீக்கி SC பட்டியலில்
சேர்க்கப் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். 2004 முதல் 21 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள (WP 180/2004) விசாரணைக்குப்
பா.ச.க. அரசு
உடனே பதில் தர வேண்டும். நீதித்துறை
தலித் கிறித்தவர்களுக்குச் சமூக நீதி வழங்கவேண்டும்.
திரு
அவையில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு, சம உரிமைகளையும் அரசின்
பட்டியலின உரிமைகளையும் தலித் கிறித்தவர் பெறுவதற்கு அனைத்து மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள தலித் கிறித்தவ மக்களுக்கு விடுதலை அளிப்பதே யூபிலி ஆண்டின் சிந்தனையாக அமையவேண்டும். எல்லா நிலைகளிலும் தமிழ்க் கிறித்தவர் விடுதலை அடைந்து, அதிகாரப்படுத்தப்பட்டால் இறையாட்சி விடியல் உண்டாகும்.
தேடலில் மனிதன்!
வெள்ளிக்கு
விளைநிலம் உண்டு; பொன்னிற்குப் புடமிடும் இடமுண்டு. மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது; கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது. மனிதர் இருளுக்கு இறுதி கண்டு எட்டின மட்டும் தோண்டி, இருட்டிலும் சாவின் இருளிலும் கனிமப் பொருளைத் தேடுகின்றனர். மேலே நிலத்தில் உணவு விளைகின்றது; கீழே அது நெருப்புக்குழம்பாய் மாறுகின்றது. ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது? ‘என்னுள் இல்லை’ என உரைக்கும் ஆழ்
கடல், ‘என்னிடம் இல்லை’ என இயம்பும் பெருங்கடல்.
மனிதர் அதன் மதிப்பை உணரார்; இவை யாவும் யோபுவின் இறைவார்த்தைகள்.
நவீன
அறிவியல் மின்னணு உலகில் கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. இளம் வளர் இடைப்பருவச் சிறார்கள் இடை நிற்றல், தொழில் புரியும் காட்சிப் பிம்பங்கள் ஒளிக்கீற்றாக
நம் கண்களுக்குப் புகுந்தாலும் நகரங்களுக்கு இணையாகக் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இந்த எண்ணிக்கையின் உச்சம் எவ்வாறு இருக்கிறது என்றால், மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கத் துடிக்கும் தமிழகக் கனவுகளுக்கு ஒன்றிய அரசின் கல்விச் சட்டம் தவிடுப்பொடியாக்குகிறது. காரணம், குருவியைவிட கூடுகள் அதிகம் காணக்கிடைப்பது போல் தமிழ்நாட்டு மக்கள்தொகைக்கு முரணாக மருத்துவக் கல்லூரிகள் ஏராளம் இருக்கின்றன என்பது ஒன்றிய அரசின் குற்றச்சாட்டாகப் பதிவு செய்யப்படுகிறது.
கல்வியின் நோக்கம்
என்ன?
பல்வேறு
துறைகளில் பன்மடங்கு வளர்ச்சியை இச் சமூகம் கண்டாலும், சமூகத்தில் நிகழும் முரண்பாடான செயல்களினால் ‘அறிவும் ஞானமும் எங்கே?’ என்ற கேள்விதான் எல்லார் மனத்திலும் எழுகின்றது. பெருகிவரும் குற்றங்களில் பெரும்பாலானோர் கல்வி பயின்றவர்கள். ஓடும் மழை நீரில் ஒய்யாரமாகத் தாவித்திரியும் தவளைகள் போல, கல்வியில் தன்னை முதல் தரத்தில் அழகுப்படுத்திக் கொண்டாலும், இளையோர் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தண்டனை பெறுவது கலாச்சாரமாகக் காட்சியளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு, மனிதனின் செயல்பாடில்லா இயந்திரங்கள் இவ்வுலகத்தை ஆட்டிப் படைக்கின்ற வேளையிலே நண்பர் கூட்டத்திலிருந்து வருகின்ற நாளுக்கு ஒரு செய்தியாக ‘தொலைத்தொடர்பு ஊடகங்களைப் பிறர் ஹேக் செய்துவிட்டார்கள்’ என்பதே
ஆகும். அப்படி என்றால் இவர்கள் கல்வி பயிலாதவர்களா? கண்டிப்பாகப் பயின்றவர்கள்.
அறிவுத் தேடலில்
மனிதன்
மனிதன்
பிறந்த தருணத்திலிருந்து அவன் ஒரு தேடல் மயமான விலங்கு. உலகின் வெளிச்சம் அவன் விழிகளில் ஒளிர்ந்தாலும் உள்ளத்தின் இருள் அவனை ஏதோ ஒரு தேடலில் ஈடுபட செய்கிறது. அறிவால் மனிதன் இயந்திரங்களை உருவாக்குகின்றான். ஆனால், அவன் மனிதனாக வாழ்வதற்குச் சற்று தோல்வி அடைந்துவிடுகின்றான். அறிவு என்பது மனிதனின் உள்ளார்ந்த தாகமாக இருக்கின்றது; அது உண்மையைத் தேடிக்கொண்டே
செல்லும் ஒரு பயணமாக அமைகின்றது. மனித சிந்தனையின் உச்சமும் இறை அச்சத்தின் ஆழமும் சந்திக்கும் இடம்தான் அறிவு என்கிறார் புனித அகுஸ்தினார். அறிவு என்பது நீதியின் ஒளி அது இறைவனிடமிருந்து வருகின்ற பரிசு என்று கூறுகின்றார் புனித தாமஸ் அக்குவினாஸ். அறிவும் நம்பிக்கையும் இரண்டு இறக்கைகள் போல அவை மனித ஆன்மாவை உண்மையின் பக்கம் இட்டுச் செல்கின்றன என்கிறார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்.
தமிழ்
இலக்கியம் புறநானூறு ‘நீரினும் நெஞ்சம் நன்கு அறிந்தாரே ஞானிகள்’
- அப்படியென்றால் ஞானம், அறிவு என்பது மனத்தின் தெளிவும் கருணையும் ஆகும் என்கிறது. ஆனால், பயின்றவர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் அறிவுடையோராய் மனத்தில் தெளிவும் மனிதாபிமான கருணையும் கொண்டுள்ளார்களா என்று சிந்திக்கின்ற வேளையிலே குற்றங்கள் நிகழ்ந்து தண்டனை பெறும் அனைவரும் இவை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
ஆகவேதான் பலருடைய கேள்வியாகக் கல்விச்சாலைகள் எதற்காக? அறிவு எங்கே? ஞானம் எங்கே? என்ற கேள்வியை இதயத் துடிப்பாகத் துடித்துக் கொண்டிருக்கிறது.
இதைத்தான்
யோபுவின் வார்த்தைகள் “ஆண்டவருக்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம். தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு” என்கிறது. இதையே திருவள்ளுவரும்
‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல்
அறிவார் தொழில்’
என்று
அழகாகக் கூறுகின்றார். உலகில் நாம் அஞ்ச வேண்டிய செயல்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறியாமையாகும்; அதேவேளையில் அஞ்ச வேண்டிய காரியங்களுக்கு அஞ்சி நடப்பதே அறிவுடையோரின் செயலாகும் என்று கூறுகின்றார்.
ஆழ்ந்து
அறிந்து கட்டடமாக இருக்கும் கடினமான பாடங்களைப் படித்துத் தேர்ந்தாலும் வாழ்வில் கட்டுப்பாடுகளும் கடவுள் பயமும் இல்லை என்றால், வாழ்வு அறிவற்றுதான் காணப்படும். இன்று அறிவு காணப்படுகிறது, ஆனால் ஞானம், பகுத்தறியும் திறன் குறைவாகத்தான் காணப்படுகிறது.
ஒரு
மனிதன் தனது வாழ்வின் உண்மையைக் கண்டடைய வேண்டுமெனில் அறிவும் ஞானமும் அவனுக்குத் தேவைப்படுகிறது. உலகில், அறிவுசார் தகவல் மழை பெய்து கொண்டிருக்கிறது; ஆனால், ஞானத்தின் நிலம் காய்ந்து வறட்சி அடைந்திருக்கிறது.
அறிவினால்
கடவுளின் படைப்பை ஆராய்வதை விட்டுவிட்டு கடவுளின் அருளால் அவருக்கு அஞ்சி நமது வாழ்வை உண்மையான பாதையில் சீர்தூக்கிட முற்படுவோம்.
மனைவி, பிள்ளைகளிடம் இப்போதெல்லாம் நான் சிரித்துப் பேசுவதில்லை. தன்னையே மறந்து எப்போதும் சிரித்தபடியே சுற்றித்திரியும் மனநோயாளியைப் பார்க்கும்போது கூட எனக்குப் பொறாமையாக இருக்கிறது. சிறகொடிந்திருந்த பறவையைப்போல ஒரே இடத்திலேயே பல மணிநேரம் அசையாமல் அமர்ந்திருந்தேன்.
என் மனைவி அடிக்கடி ‘ஏன் இப்படி இருக்கீங்க? என்னதான் ஆச்சு?’ என்று பலமுறை கேட்டுவிட்டாள். நான் பரிட்சைக்குப் பதில் தெரியாமல் முழிக்கும் சிறு குழந்தைபோல நின்றுகொண்டிருந்தேன்.
சிறு வயதிலிருந்து பழகிய நண்பன் சந்துரு. சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘எனக்கு ஹார்ட் பிராப்ளம், ஆப்ரேஷன் பண்ணணும்’ என்று வந்து நின்றவனுக்கு ஆபீசில் லோன் போட்டு இரண்டு இலட்சம் ரூபாயை எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுத்திருந்தேன். சில நாள்களுக்குப் பிறகு பிசினஸ் பண்ண பணம் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதால் வேறு வழியில்லாமல் அப்பணத்தைத் திருப்பித் தரும்படி அவனிடம் கேட்டேன். ‘இதோ இன்று தருகிறேன், நாளை தருகிறேன்’ என்று கூறிக்கொண்டே ஆறு மாதங்களாக என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான். இதனால் படியேறி வந்த பிசினஸ் வாய்ப்பு கைநழுவிச் சென்றது.
கோபத்தை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று தெரியவில்லை. அவனிடமும் நேரடியாகச் சென்று கேட்க மனம் விரும்பவில்லை. இனிமேல் அவனிடம் பேசவும் வேண்டாம், அந்தப் பணத்தைக் கேட்கவும் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று மொட்டை போட்டுக்கொண்டு வந்தது என் மனைவி, பிள்ளைகளுக்கு இன்னும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.
ஏமாற்றம் என்பது ஒரு நோய். ஏமாற்றப்பட்டவர்களுக்கே அந்த நோயின் வலி புரியும். நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்று நினைக்கும்போது நிலைகுலைந்து போனேன்.
ஆண்டுகள் பல ஓடின. என்னதான் காலம் புரண்டு படுத்தாலும் மனத்திலே வெறுமையும் வெறுப்புமே மிஞ்சியிருந்தது.
ஒருநாள் ஆபீஸ் கிளம்பலாம் என்று தயாரானபோது, என் நண்பனின் மகன் வீட்டிற்கு வந்திருந்தான். முன்பு பார்த்ததைவிட இப்போது நன்கு வளர்ந்திருந்தான் அவன். ‘எப்படி இருக்கீங்க அங்கிள்?’ என்று நலம் விசாரித்தான். நான் தலையை மட்டும் அசைத்தேன். அவனை உட்காரச் சொல்லிவிட்டு ஒரு டம்ளர் காபி கொடுத்தாள் என் மனைவி. அவனும் அதை மெதுவாகக் குடித்து முடித்துவிட்டு, தன் தோள்பையிலிருந்து சில பணக் கட்டுகளை எடுத்து என்னிடம் கொடுத்தான். நானும் வாங்கிக்கொண்டேன். ‘நான்கு இலட்சம் இருக்கு அங்கிள். லேட்டா கொடுத்ததற்குச் சாரி அங்கிள்’ என்றான். ‘இரண்டு இலட்சம்தானே கொடுத்திருந்தேன், சாரி எல்லாம் எதற்கு?’ என்று கூறுவதற்கு வாயெடுப்பதற்கு முன்பே, ‘சரி அங்கிள், நான் கிளம்புகிறேன்’ என்று சொல்லி வேகவேகமாக வெளியேறினான் சந்துருவின் மகன். ‘சந்துரு எப்படி இருக்கிறான்?’ என்று கேட்பதற்குக்கூட நான் நினைக்கவில்லை. என் உள்ளம் ஏன் இப்படிக் கல்லாய் போனது? நண்பர்கள் தேவையில் இருக்கும்போது உதவுவதே உண்மையான நட்பு என்பது போல, என் நண்பனின் உதவி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்தப் பணம் இருந்ததால் என் மூத்த மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க முடிந்தது.
சந்துருவை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று என் மனைவி அடிக்கடிச் சொல்வாள். நான் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
காலங்கள் உருண்டோடின. என் மகள் படித்து பட்டதாரியானாள். பழைய கோபங்கள் பழைய நோட்டுப் புத்தக எழுத்துகள் போல மங்கிப் போயிருந்தன.
சந்துருவைச் சந்தித்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்து அவனுடைய சொந்த ஊரான வள்ளியூருக்குச் சென்றேன். அங்கிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அவன் குடும்பத்தோடு திருநெல்வேலிக்குக் குடிபெயர்ந்து விட்டான் என்று அறிந்து, அவனைத் தேடி திருநெல்வேலிக்குச் சென்றேன். ஒருவழியாக பல போராட்டங்களுக்கிடையில் சந்துருவின் வீட்டைக் கண்டுபிடித்தேன். அவனிடம் என்ன பேச வேண்டும், எப்படிப் பேசவேண்டும் என்றெல்லாம் பல கேள்விகள் உள்ளத்திலே ஊசலாடிக் கொண்டிருந்தன. அவன் கொடுத்த பணத்திற்காக அவனுக்கு நன்றிசொல்லிடவேண்டும் என்பது மட்டும்தான் மனத்திலே இருந்தது. காலிங்பெல் அடித்தவுடன் யாரோ ஒருவர் கதவைத் திறக்க, முதலில் தெரிந்தது மாலையணிவித்த நிலையில் இருந்த என் நண்பனின் புகைப்படம்தான். சந்துரு இறந்து நான்கு ஆண்டுகள் கழிந்திருந்தன.
‘காலம் கடந்து சொல்லப்படும் நன்றி, நன்றியற்றதற்குச் சமம்.’
ஒருவன் பிரச்சினையில் இருக்கிறான் என்றால், அவனுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் என்று அனைவரும் உதவிசெய்ய முன்வரவேண்டும். அதுவே அவனுக்குப் பிரச்சினைகளே இல்லை என்றால், அவன் யாரையும் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. அவன், அவனுடைய குடும்பம் என்று சுயநலவாதியாகிவிடுகிறான். குடும்பத்தின் பாசவளையத்திற்குள்ளேயே நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறான்.
சிலர் குடும்பத்தைப் பற்றிக்கூட அக்கறைப்படுவதில்லை. சமூக ஊடகங்கள் வந்த பிறகு சமூக ஊடகங்கள் தருகின்ற போதையில் பலரும் மிதக்கின்றனர். கிணற்றுத்தவளைபோல தான் கண்டதே உலகம் என்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்துவதுபோல சமூக ஊடகங்களில் பல புதுமைகள் புகுத்தப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ASMR (Autonomous Sensory Meridian Response) காணொளிகள்.
இத்தகைய காணொளிகள் பார்வையாளர்களின் புலன்களுக்கு ஒருவிதமான கிளர்ச்சியை ஏற்படுத்துவதோடு, இதமான உணர்வைத் தூண்டியெழுப்புகின்றன. எடுத்துக்காட்டாக முடிவெட்டுவது, புற்களை வெட்டுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, காகிதத்தை மெதுவாகக் கிழிப்பது, பலூன்களில் தண்ணீர் நிரப்பி, அதனை ‘ஸ்லோ மோசனில்’ உடையச் செய்வது.
யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் வரும் இவ்வகை ஏ.எஸ்.எம்.ஆர். காணொளிகள் மன அழுத்தத்தைக் குறைத்து மனத்தை ஆற்றுப்படுத்துகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வகை, காணொளிகள் உடல் முழுவதும் செயல்படும் நரம்பூக்கிகளான (neurohormones) டோபமைன் (மகிழ்ச்சி ஹார்மோன்), ஆக்ஸிடோசின் (காதல் ஹார்மோன்), மற்றும் எண்டோர்பின்கள் (வலி நிவாரணி) ஆகியவைகளை விழித்தெழச்செய்து மனத்தைக் குளிர்விக்கின்றன எனலாம்.
‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது போல அதிகளவில் நுகரப்படும் ஏ.எஸ்.எம்.ஆர். காணொளிகள் பல்வேறு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகளையும் வருவிக்கின்றன. குறிப்பாக, ஏ.எஸ்.எம்.ஆர். காணொளிகள் அதிகளவில் பார்க்கப்படுவதால் தூக்கமின்மை, நேரவிரயம், போதை மயக்கத்தில் திளைத்திருப்பது போன்ற உணர்வு, பதற்றம், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
அமைதியையும் ஆறுதலையும் ஒருவர் மற்றவரின் சிரிப்பில் கண்டு அனுபவிப்பதே உச்சக்கட்ட இன்பம் எனலாம்.
(தொடரும்)
‘நீலத் திமிங்கல சவால்’ எனும் விளையாட்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. இது இணைய வழி விளையாட்டு எனினும், குழந்தைகளின் உயிரோடு ‘கியூரேட்டர்’ விளையாடுவார். இதில் 50 சவால்கள் உள்ளன. 30-49 படிநிலைகளில் உயிரைப் பணயம் வைத்து விளையாடவேண்டும். அது தற்கொலை முடிவைக் கேட்கும் உயிர் விளையாட்டு. ஒவ்வொரு சவால் முடிந்ததும், கியூரேட்டருக்குப் புகைப்படம் அனுப்பவேண்டும். கியூரேட்டர் பதிலுக்கு, பயங்கர இசையை அல்லது திகில் படத்தை அனுப்புவார். மாதிரிக்கு ஒரு படிநிலையைக் காண்போம்.
அதிகாலை
4.20க்கு கியூரேட்டர்
ஒரு படம் அனுப்புவார், ஒரு செய்தியும் அனுப்புவார். அதில் ‘உங்கள் சொந்தக் கைகளை நீளவாக்கில் வெட்டுங்கள்; பின் ஒரு திமிங்கலத்தைக் காகிதத்தில் வரையுங்கள்.’
விளையாடுபவர்
திமிங்கலமாக மாறத் தயாராக இருந்தால் தன் காலில் ‘ஆம்’ என எழுதவேண்டும். இல்லையெனில்,
அவர்கள் தங்களைப் பலமுறை வெட்டிக்கொள்ளவேண்டும். அவர்களை பாலம், கூரை, கிரேன் மீது ஏறிக் குதிக்கச் சொல்வார். இப்படி அப்பாவி பதின் பருவத்தினர் செய்யவேண்டும். அப்படிச் செய்து, அவர்கள் நீலத் திமிங்கலத்தோடு பேசுவார்கள். அவர்கள் நீலத் திமிங்கலமாக மாறும் சவாலில் படிநிலை மாறுவார்கள். இறுதியில் உயிரையும் விடுவார்கள்.
மேலை
நாடுகளில் பெற்றோருக்குத் தன் குழந்தைகளின், இணைய தள உபயோகிப்பில் வழிகாட்
டும் நெறிமுறைகள் உள்ளன. அங்குப் பெற்றோரின் கண்காணிப்பில் பதின் பருவத்தினர் வளர்கின்றனர். நம் நாட்டில் பதின் பருவத்தினர், பள்ளிக் கல்விக்குப் பின் இளையோர், இருபாலரும், யூடியூப், முகநூல், இன்ஸ்ட்டா, எக்ஸ் தளம் (டுவிட்டர்) என இணைய தளங்களில்
மூழ்கிக் கிடக்கின்றனர். வெளியுலக நடப்புத் தெரியாது வாழ்கிறார்கள். எதற்கெடுத்தாலும் ரீல்ஸ், லைக், கமெண்ட், ஷேர் என்பதே அவர்கள் உலகமாய் இருக்கிறது. பெரும்விழாக்களில், சுற்றுலா தளங்களில் இன்புளூயென்சர் என்போர் முக்கிய நபராக வலம் வருகிறார்கள்.
பலமுறை
‘டிரெண்டிங்’ எனப்படும்
செய்திகளை, திரைப்பாடல்களை, திரைப்பட முன்னோட்டங்களைக் கண்டு வியந்து
போயிருக்கிறேன். உலகளாவிய தமிழர்கள் எண்ணிக்கைகளைவிட ‘வியூஸ்’ எனும் பார்வைகளின் எண்ணிக்கை கண்டு அதிர்கிறேன். அது தொழில்நுட்ப, கார்ப்பரேட் எல்லாம் விலையெனும் வியூகம் தெரிந்து நொந்துள்ளேன்.
ஒரு
காலத்தில் அஜித் இரசிகர்கள், விஜய் இரசிகர்களின் சமூக வலைத்தளச் சண்டைகள், தமிழில் இத்தனை கெட்ட வார்த்தைகள் உள்ளனவா? என அறிய வைத்தன. அச்சேற்ற
முடியாத வார்த்தைகள் மின்னணுக்களில் மின்னியது.
குறிப்பாக,
பதிவிடுவோரின் உடல் உறுப்புகளையும், அவரது தாய், சகோதரிகள் குறித்த பதிவுகள்! அவர்களைக் கண்டுபிடித்து, கழுத்தை நெரிக்கலாமா? எனவும் தோன்றியது. முகநூலில் இந்த இரசிகர்கள் முகத்தை, முகவரியை மறைத்துவிட்டுச் செய்கிற அசிங்கம் படுகேவலம்.
சில
நேரங்களில், இவர்களது முகநூல் பதிவுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்தால், பா.ச.க.
அண்ணாமலை போல எதிர்கேள்வி: “உனக்கு ரூபாய் 200 வந்துவிடும்” என்ற
ஒற்றைப் பதிலே இரசிகர் கூட்டங்களின் தாரக மந்திரம். முடியாவிட்டால், தற்கொலைக்குத் தூண்டுகிற அர்ச்சனைகள், தரம் தாழ்ந்த பதிவுகள். இவர்கள் என்றும் வேலைக்குச் செல்லாமல் செய்கிற முழுநேர வேலையே இதுதான்.
அஜித்
இரசிகர்களை விட்டுவிட்டு, ரஜினி இரசிகர்களோடு, தங்கள் அட்டைக்கத்திகளை விஜய் இரசிகர்கள் வீசினர். அதன் நீட்சி கரூரில் வெளிச்சமானது. எத்தனை எத்தனை பேட்டிகள்! கல் வீசப்பட்டது என்றார்கள். வீசிய கற்கள் வானிலே நின்றுவிட்டதா?
என்றால் பதில் இல்லை. கத்திக் குத்து, மயக்க ஸ்பிரே அடிக்கப்பட்டது, கத்தியில் குத்தினார்கள் என எத்தனை பேட்டிகள்...
சமூக வலைத்தளப் பதிவுகளில் மூன்று நாள்கள் உலா வந்தன. முதல்வரே தலையிட்டு, ‘வதந்தியைப் பரப்பக்கூடாது, அவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என்றவுடன்,
மூன்று கைதுகளுக்குப் பின், தங்கள் சமூக வலைத்தளக் கணக்கை இவர்கள் இழுத்து மூடிப் பதுங்கினர்.
25 ஆண்டுகள்
பள்ளியில் பணிபுரிந்தவன் என்ற முறையில் ஆணித்தரமாகக் கூறுகிறேன்: பெற்றோர் தங்கள் செல்லப் பிள்ளைகளின் தவறுகளை நன்கு தெரிந்தும் ஏற்றுக் கொள்வதில்லை. அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடும் குடும்பப் பிள்ளைகளின் கையில் விலையுயர்ந்த ஆன்ட்ராய்டு கைப்பேசிகளைக் காண்கிறேன். இவர்களின் எதிர்காலம் குறித்துக் கவலை கொள்கிறேன். இவர்களது மொழி அறிவு, சமூகத் தொடர்பு, வேலைவாய்ப்பு எதுவுமின்றி கனவுகளில் வாழ்கிறார்கள். வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.
கரூர்
சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களைக் காண்கிறேன். அனைவரும் மிக ஏழைகள் என உணர்ந்து வருந்துகிறேன்.
கூட்ட நெரிசலில் ஓர் இளம்பெண்ணிடம் செய்தியாளர் கேட்கிறார்: “இவ்வளவு சிரமப்பட்டு, பிடித்த நடிகரைப் பார்க்க வேண்டுமா?” எனக் கேட்கிறார்.
அதற்கு அப்பெண், “நான் செத்தாலும் பரவாயில்லை, பிடித்த நடிகரைப் பார்த்துவிட்டுச் சாகிறேன்”
என்கிறார். இப்படிப் பிடிவாதம் பிடித்து உயிரிழந்தோர் ஏராளம்.
நடிகரின்
கட்சியில் நிர்வாகிகளாக உள்ள இளைஞர்களை நான் அறிவேன். எங்கள் தலைமுறையில் தொகுதிதோறும் பூத் கமிட்டி அமைக்கும் வரை வந்து இந்த அரசியல் வேண்டாம் என்ற நடிகரால் தன் தொழில், குடும்பம், வாழ்க்கை என எல்லாம் இழந்து
மரித்த சகோதரர்களைக் கண்டிருக்கிறேன். மீண்டும் அதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதே நமது ஆதங்கம்.
விக்கிரவாண்டி சாராயச்
சாவுகள் அனைவரும் அறிந்ததே. விக்கிரவாண்டியில் 50,000 உறுப்பினர்கள் எங்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள் எனப் பேசினார்கள். விஜய் இரசிகர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார்கள். அந்த இடைத்தேர்தலில் பொதுத்தேர்தல் ஓட்டுகளைவிட, நோட்டாவின் ஓட்டுகள் குறைந்தது என்பதே தமிழ்நாடு அரசியல் வரலாறு.
தனது
கருத்துகளைத் துணிந்து பொதுவெளியில் தந்தை பெரியாருக்குப் பிறகு பேசும் நடிகவேள் எம்.ஆர். ராதா கூறுவார்: “பார்த்தியா, ரசிச்சயா, அதோட கூத்தாடிய விட்டுப் போயிட்டே இரு. அவன் அடுத்தக் கூத்துக்கு ரெடியாயிட்டு இருப்பான். அவன் உலகத்திலே நுழைஞ்சி பார்க்காதே. அது ரொம்ப அசிங்கம். அவனை அரசியலுக்குக் கூப்பிட்டு, அழிஞ்சு போகாதே. நீ அவனுக்குக் காசு
கொடுக்கிறே. அவன் நடிக்கிறான். அவன் உன் வேலைக்காரன். அந்த வேலைக்காரனைத் தலைவன்னு கொண்டாடாதே. அது அசிங்கம், அவமானம்” என்பார்.
சில காலம்
தமிழர்கள் தங்கள் மீட்பரை வெள்ளித்திரையில் தேடுகிறார்கள் என்ற பிரச்சாரம் புதைந்து இருந்தது. அது மீண்டும் உயிர் பெற்றுவிட்டது. 2026 தமிழ்நாடு தேர்தல் குறித்த பல கட்டுரைகளில் கடைசி
வரியாகச் சொன்ன ஆருடம் கரூரில் நிகழ்ந்துவிட்டது.
இவர்கள்
நீலத் திமிங்கல விளையாட்டை இரசிகர்கள் கூட்டமாகச் செய்கிறார்கள். பெற்றோர் தாம் விழித்து, தம் பிள்ளைகளைக் காக்கவேண்டும். மனித உயிர்கள் மகத்தானவை!