news
சிறப்புக்கட்டுரை
ஒன்றும் ஒன்றும் மூன்று

அரசியல் என்பது, அதிகாரத்தை நோக்கிய பயணம். தேர்தல் என்பது, ஆட்சி அதிகாரமேற்றும்  படிக்கட்டுகள். வாக்குகள் என்பது எண்ணிக்கை சேர்ந்த விளையாட்டு. சில நேரங்களில் வேகமாகப் படி ஏறியவர்கள் உண்டு. பல நேரங்களில் சறுக்கி விழுவோரையும் கொண்டதே தேர்தல் அரசியல். அரிதினும் அரிதாக நினையாதவை நடக்கும் அதிசயங்களும் நிகழ்வதுண்டு. தேர்தல்களில் ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல; மூன்று!

2026-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்காளர் பட்டியல், சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொண்டபின் நடைபெற்ற தேர்தலாகும். 2025, அக்டோபர் 27 அன்று தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள். 2026, பிப்ரவரி 23-இல் சிறப்புத் திருத்தத்தில் 97.37 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். இது  விழுக்காட்டு அடிப்படையில் 11.55% இது இந்திய அளவில் அதிகபட்ச நீக்கம் எனத் தெரிகிறது. இதில் 27.53 இலட்சம் பேர் உரிமைகோரி மனு கொடுத்தனர். அதில் 4.23 இலட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. புதிய வாக்காளர் சேர்க்கையில் 18, 19 வயதினர் 12.51  இலட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். பிப்ரவரி 2023 இறுதிப் பட்டியல்படி தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் இருந்தார்கள்.

தேர்தல் திருவிழா நடந்தது. 35 விழுக்காடு வாக்குகள் பெற்று .வெ.. வெற்றி பெற்றது. தமிழ் நாட்டில் 108 தொகுதிகளில் முதலிடம். இரண்டாமிட வாக்கு வித்தியாசம் ஐந்து ஆயிரத்திற்குள் இருந்தது. ஐந்து ஆயிரத்திற்குள் 61 தொகுதிகளும், இரண்டு ஆயிரத்திற்குள் 27 தொகுதிகளும், ஆயிரத்திற்குகீழ் 15 தொகுதிகளும், 500-க்கு கீழ் ஒரு தொகுதியும் அமைந்தது. ஓர் ஓட்டு வித்தியாசத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முடிவு மாறியது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான (தொகுதி எண் 185) தபால் வாக்கு, திருப்பத்தூர் தொகுதி (தொகுதி எண் 50) திருப்பத்தூருக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி தொகுதி எண் பார்த்துத் தவறுதலாக வந்த வாக்கை நிராகரித்தார். தேர்தல் நடைமுறைகள் முடிந்தவுடன், தேர்தல் நடத்தும் அதிகாரியின் பணியும் முடிவுபெறும். ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்ற தி.மு..வின் மேனாள் அமைச்சர் பெரிய கருப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். வெற்றி பெற்ற வேட்பாளர் சட்டமன்றத் தீர்மானங்களில் வாக்கு அளிக்க இடைக்காலத் தடையுடன் தீர்ப்பு வந்தது.

வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்ததுடன், தேர்தல் முறையீட்டு மனு மட்டுமே செய்ய இயலும்; இடையிட்டு ஆணை கோரும் மனு செய்ய முடியாது எனத் தீர்ப்பு எழுதப்பட்டது. மேலுமாக, அரசு ஊழியர்கள் .வெ..வுக்கு மொத்தமாக வாக்களித்து விட்டார்கள் என்ற தகவலும் வழக்கம் போல்ரூட் மாபியாவால்பரப்பப்பட்டன. தற்போது தபால் வாக்குகள் தேர்தல் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்களது வாக்குகள் மட்டுமல்ல, 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து, வீட்டிலேயே வாக்கு அளிக்கும் வாக்குகளும் தபால் வாக்குகளில் உள்ளடக்கம். இவ்வாக்குகளில் தமிழ்நாடு அளவில் தி.மு.. 163 தொகுதிகளில்  47% பெற்றது. .தி.மு.. 46 தொகுதிகளில் 30%.வெ.. 25 தொகுதிகளில் 12% பெற்றது என்பதை அரசியல் விமர்சகர்கள் அறிவர். இது குறித்த முழு விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட மறுக்கிறது. ‘உள்ளாட்சிஎன்ற பத்திரிகை தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு தொகுதியாக ஆராய்ந்து இவ்முடிவுகளை வழங்கியுள்ளது.

தபால் வாக்குகளைப் போலவே கட்டுத்தொகை (Deposit) குறித்த முடிவுகள் .தி.மு..வை அதிர்ச்சிக்குத் தள்ளியுள்ளது. 19 தொகுதிகளில் .தி.மு..வும், பா... 2 தொகுதிகளிலும், பா... 5 தொகுதிகளிலும், ..மு.. 6 தொகுதிகளிலும், ‘நாம் தமிழர்போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற இயலவில்லை. அனைத்து வேட்பாளர்களும் கட்டுத்தொகைகளை இழந்தார்கள். தி.மு.. கூட்டணி மற்றும் .வெ.. எல்லாத் தொகுதிகளிலும் கட்டுத்தொகை பெற்று சாதனை புரிந்தன.

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் புள்ளி விவரங்கள் பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் முன்னிறுத்துகின்றன. தமிழ்நாட்டில் அதிகமான 79 வேட்பாளர்கள் போட்டியிட்ட கரூர் தொகுதியில் .வெ..வுக்கும் தி.மு..வுக்கும் பெருந்துயரச் சம்பவத்திற்கான நீதி கிடைக்கவில்லை. கரூர் மக்கள் .தி.மு..-விற்கு  வாக்களித்து விட்டார்கள்.

தமிழ்நாட்டில் தாமரை 33 தொகுதிகளில் மலர முயற்சித்து, தனிநபர் செல்வாக்கால் ஒற்றைத் தாமரையாகப் பூத்தது. மோடியின் ஏழுமுறை வருகையும், ஆறு மாநில பா... முதல்வர்களின் பிரச்சாரமும் வீணாயிற்றுபுதிதாகத் தொடங்கப்பட்ட .வெ..விடம் 2001 சட்டமன்றத் தேர்தல் ஒப்பீட்டின்படி தி.மு.. 14% வாக்குகளை இழந்துள்ளது. .தி.மு.வாக்குகளில் 12.5%, ‘நாம் தமிழர் 3% வாக்குகளும் இழந்து, அவை .வெ..வுக்குத் திசைமாறியது. .வெ.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, திருப்பூர் மாவட்டங்களில்  பெரும் வெற்றிக் கொடி நாட்டியது.

தமிழ்ச் சமூகத்தில் பின்தங்கிய எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மக்களுக்காக 46 தொகுதிகள் தனித் தொகுதிகளாக உள்ளன. இவை தவிர நான்கு பொதுத் தொகுதிகளில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆக, மொத்தம் 50 தொகுதிகளில் கட்சி வாரியாக .வெ.. 28 தொகுதிகளிலும், .தி.மு.. 11 தொகுதிகளிலும், தி.மு.. 7 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓர் இடத்திலும்மார்க்சிய  பொதுவுடைமைக் கட்சி ஒரு தொகுதியிலும் வாகை சூடினார்கள்.

2026, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்கு மதச்சார்பற்றக் கூட்டணிக்கு என்ற போக்கு மாறியுள்ள உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இருப்பினும், 2021-2026 பேரவையில் இருந்த சிறுபான்மையோர் 15 என்ற எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கிறித்தவர்கள் 15 பேர் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சிவாரியாக .வெ..வில் பத்து பேரும், தி.மு.. வில் 3 பேரும், .தி.மு..வில்  ஒருவரும், காங்கிரஸ் கட்சியில் மூவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இசுலாமியர்பேர் சட்டப் பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். கட்சிவாரியாக .வெ..வில்  மூன்று பேரும், தி.மு..வில் மூன்று பேரும், இந்திய யூனியன் முசுலிம் லீக்கில் இருவரும், காங்கிரஸ் கட்சியில் ஒருவரும் என்பதும் சிறுபான்மையோர் பங்கேற்பாகும்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பு, மந்திரி சபை  அமைப்பு என்ற  காலத்தில் வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற பிரச்சினை பூதாகரமாய் கிளம்பியது. அவர்கள் போட்ட ரீல்ஸ், அதிரடி வெறுப்பு பேச்சுகள், சென்னை மற்றும் திருச்சி விமான நிலையக் குடியேற்றப் பிரிவு அதிகாரிகளால் முடித்து வைக்கப்பட்டது. கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, இந்தோனேசியா நாட்டை சார்ந்த 30 வெளிநாட்டுக் குடிமக்கள் இந்தியாவில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்  வாக்களித்த குற்றத்திற்காக வழக்கில் மாட்டினார். அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பயணங்கள் முடிவு பெற்றன. வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றபின் வாக்களிக்கக் கூடாது, இந்திய அரசின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை மீறல் தண்டனைக்குரிய குற்றமாகப் பதிவானது. அவர்களின் விரல்களில் தேர்தலின் போது வைக்கப்பட்டமையே அடிப்படை முதல் ஆதாரமானது.

2026, தேர்தல் புள்ளி விவரங்களை ஆராயும் போது தேர்தல் ஆணையம் தபால் வாக்குகள், வேட்பாளரின் மதம் சார்ந்த விவரங்கள், கல்வித்தகுதிகள், சொத்து விவரங்கள், குற்றப் பின்னணிகள் என்பதில் தேர்தல் ஆணைய  விவரங்கள், தரவுகள் வெளிப்படையாக இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த ஐயப்பாடுகளுக்கும் உரிய பதில்கள் இல்லைமுடிவில் நம் நாட்டில் தேர்தல்கள் நியாயமாக நடக்கின்றனவா? என்ற அச்சமே எழுகிறது.

news
சிறப்புக்கட்டுரை
“வாசிப்பை நேசிப்போம்” – திருத்தந்தை

புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி திருத்தந்தை லியோ அவர்கள் மிக  அருமையான கருத்துகளை முன்வைத்துள்ளார்.

புத்தகங்கள் சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றன; டிஜிட்டல் யுகத்தில் நல்ல வாசிப்பே ஆழ்ந்த சிந்தனை, ஆய்வு மனப்பான்மை, விமர்சனப் பார்வை ஆகியவற்றை மேம்படுத்தும். நல்ல புத்தக வாசிப்பு அறிவை வளர்ப்பதோடு, ஒருதலைப்பட்சக் கருத்துகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. குறுகிய மனநிலையிலிருந்து விடுபட வாசிப்பு ஒரு மாமருந்து.

புத்தகங்கள் மற்றவர்களை, சமூகத்தைச் சந்திப்பதற்கான களமாக அமைகின்றன. எண்ணங்களும் கருத்துகளும் அனுபவங்களும்  பகிரப்படுவதன் மூலம் வாசகர்கள் நூல் ஆசிரியருடனும், நூலாசிரியர் வாசகர்களுடனும் கருத்துப் பரிமாற்றம் செய்கிறார்கள்.

திருத்தந்தை பிரான்சிஸ் கூறியது போல, புத்தக வாசிப்பால் சந்திப்பு கலாச்சாரம் மேம்படும். புத்தகங்கள் மக்களிடையே பாலங்களை உருவாக்கவும், உரையாடலை ஊக்குவிக்கவும், புரிந்துணர்வை விரிவுபடுத்தவும் உதவும்.

புத்தகங்கள் நற்செய்தி அறிவிப்பதற்கான ஒரு வழியாகவும் இருக்கிறது. ஆன்மிக எழுத்துகள், நம்பிக்கை தரும் சிந்தனைகள், புனிதர்களின் வரலாறுகள் மனித இதயத்தை ஆழமாகத் தொடக்கூடியவை.

எனவே, நற்செய்திப் பணியில் ஈடுபட்டிருப்போர் சிறந்த புத்தக வாசிப்பாளர்களாக இருக்கவேண்டும்.

புத்தகம், நூலகம், வாசிப்புக் கலாச்சாரம் போன்றவற்றிற்கு நம் குடும்பங்களில், பங்கில், கல்வி நிறுவனங்களில் எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

ஆகவே,

வாசிப்பை நேசிப்போம்,

வாசிப்பால் உயர்வோம்.”

news
சிறப்புக்கட்டுரை
அவசரமா? அரைத் தூக்கமா? (இளமை ஒரு சவால்! – 03)

நண்பரின் அமைதியான, அழகான குடும்பம். ஒரு பையன், ஒரு பெண். எப்போதும் புன்சிரிப்பு மாறாத அந்தப் பெண் குழந்தையின் முகத்தை இன்றளவும் மறக்க முடியவில்லை. கல்லூரிப் படிப்பு முடிந்த கையோடு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். மளமளவென்று பதவி உயர்வும் பெற்றிருந்தார். லக்னோவுக்கு மாற்றல் வந்தது.

வாரம் முழுமையும் கடும் வேலை. சனி, ஞாயிறு வந்தவுடன் ஊர்சுற்றல். புது மனைவியும் அவருடைய சுறுசுறுப்புக்கு ஈடு கொடுத்து வாழப் பழகிக்கொண்டார். எல்லாம் ஒரே ஒரு வருடம்தான். ஒரு வார விடுமுறைக்கு டேராடூன் போனார்கள். விடுமுறை முடிந்து இரவோடு இரவாக மலையிலிருந்து காரில் கீழே இறங்கினார்கள். கார் விபத்துக்கு உள்ளானது. பக்கத்திலிருந்த மனைவியை - அந்தப் புன்னகைப் பூவைப் பறிகொடுத்தார். காரை ஓட்டி வந்த அவர் பலத்த காயங்களோடு உயிர் தப்பினார். ஓர் இனிய குடும்பம் இடையிலேயே சிதைந்துபோனது.

இந்த இளைஞர் மட்டுமல்ல, இன்று பல பெற்றோர், பிள்ளைகளும் இன்று மிகவேகக் குணத்தோடு (Hyper active) வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிறக்குமுன் பள்ளியில் இடம், வேகமாக வளர்வதற்காக உணவுத் திணிப்பு, படித்து முடிக்குமுன் செல்போன், ஸ்கூட்டர், பைக், சம்பாதிக்கும் முன் செலவு. கடன் தொல்லை. பொறுமையில்லாத, நிதானமில்லாத, விட்டுக்கொடுக்க மனமில்லாத நிலையில் காதல், குடும்ப வாழ்க்கை. நினைத்துப் பார்க்கும் முன் விவாகரத்து. பள்ளிப்பருவத்திலேயே இனக் கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாதபோதே காதல், கல்யாணமாகாத தாய், தனிமையில் குழந்தையோடு தவிக்கும் மனைவி. வேகம் வேகமாகப் பணம் தேடும் அவசரம். கடன், ஊழல், ஏமாற்று வேலைகள், பின்னால் வம்புகள்! 

நாம் மேலே பார்த்ததைப் போல அவசரக்காரர்கள் தங்களை மட்டும் கெடுத்துக்கொள்வதில்லை; தங்களைச் சுற்றி தங்களைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள், பிள்ளை, நண்பர்கள் என்று எல்லாரையும் அவதிக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். ஒரு வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிப்படை நல்ல சிந்தனையும் ஆக்கப்பூர்வமான செயல்களும்தான். சிந்தித்துச் செயல்படவேண்டும்; செயல்பாட்டின் விளைவை மதிப்பிடவேண்டும்.

இன்று நம்மிடையே சிந்திக்கவும் மறுத்து, செயல்படவும் மறுத்து, அரைத் தூக்கத்தில் வாழ்பவர்கள் ஏராளமாக உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். இனிப்பும் கொழுப்பும் நிறைந்த உணவு; தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் நிரந்தரத் தவம்; அப்போதும் அரைத் தூக்கம். இல்லாவிட்டால் செல்போன் உரையாடல். விடியலை ஒரு நாளும் பார்த்திராத காலை தூக்கம். இதன் விளைவு? தொடரும் பசி, மிகை எடை, இளமையில் சர்க்கரை நோய், இதய நோய், கால் வலி, கை வலி... அமெரிக்காவில் தலையான சுகாதாரச் சிக்கலே மிகை எடை சார்ந்த சிக்கல்தான் என்கிறார்கள். நம்மைச் சுற்றியும் மிகை எடை இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் பஞ்சம் ஒன்றுமில்லை. நம்மிடம் செயல் வேகம் இருக்கிறது. இளமை வேகம் சக்தி வாய்ந்தது. எதையும் சாதிக்க வல்லதுதான். ஆனால், இந்தச் செயல்வேகம் காட்டாறாக மாறிப்போனால் பயனில்லை. அது சிந்தனை அணைக்கட்டில் அடங்கி நின்று நிதானித்துச் செயல்படவேண்டும்.

இளையோரின் அதிவேகச் செயல்பாடுகள் பற்றி ஏராளமான உளவியல், நரம்பியல், மூளையியல் சார்ந்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பிறவியிலேயே இந்தக் குறைபாட்டுடன் சிலர் வந்து சேரக்கூடும். அவர்களைச் சிறு வயதிலேயே சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். இவர்களுக்கு உளவியல், நரம்பியல் சார்ந்த மருத்துவ வசதிகள் நிறையவே கிடைக்கின்றன. ஆனால், நம்மில் பெரும்பாலோர் சமூகச் சூழலில் இருந்துதான் இந்த அவசரப் பயணத்தைக் கற்றுக்கொள்கிறோம். நிதானச் சிந்தனை, நிதானச் செயல், நிதான மதிப்பீடு, செலவு, சேமிப்பு, நல்லுறவு. நம்மால் இந்தப் பழக்கத்தை நிச்சயம் வளர்த்துக்கொள்ள முடியும். சவால்தான்... சந்திப்போம், வெற்றி பெறுவோம்! இன்றைய உலகம் அவசர கதியில் அவதிப்படுகிறது. அதன் அசுர வேகத்தில் சிக்கிக்கொள்ளாமல் நாம் ஒவ்வொரு நாளும் நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுவோம்.

news
சிறப்புக்கட்டுரை
குறளும் வாழ்வும் (வாரம் ஒரு குறள் – 03)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார் (குறள் 3)

குறள் விளக்கம்

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

சிந்தனை

ஒரு சிறு மெழுகுதிரியை இரவில் எடுத்துக்கொண்டு ஒருவர் படிக்கட்டில் ஏறிச் செல்லும்போது, “எங்கே என்னை எடுத்துச் செல்கிறாய்?” என்று மெழுகுதிரி கேட்டது. பதிலாக “வீட்டின் மேற்தளத்திற்கு என்னோடு வா; கப்பல்கள் துறைமுகத்தை அடைய வழி காண்பிக்கப் போகிறேன் என்றார் அவர்.  “என் ஒளி மிகச்சிறியது. கப்பல்களைப் பார்க்க முடியாதே என்றது திரி.

அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆறுதல் கூறி, ஒளி பிரதிபலிக்கும் கண்ணாடி முன் மெழுகுதிரியை வைத்தார். அதன் ஒளியோ கடலில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒளிவிட்டுக் கொண்டிருந்தது.

நாம் இறைவனின் மெழுகுதிரிகள். இறைவனோடு இணைந்து அவர் விரும்பும் வகையில் பிரகாசிப்பதே நமது பணி.

இறைவன் எப்பொழுதும் நம் உள்ளமாகிய மலரில் பிரசன்னமாக இருக்கிறார். அவரின் அடி பணிந்து வாழ்பவர்கள் எந்தக் குறைவுமின்றி நிறைமகிழ்வுடன் இவ்வுலகில் பிரகாசித்து வாழ்வர்.

நான் திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள்; ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்; என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது (யோவா 15:5).

இறைவனை நம் உள்ளத்தில் இருத்தி, அவரோடு இணைந்த வாழ்வு வாழவேண்டும். இறைவனைப் பிரிந்து வாழ்ந்தால் நாம் வேரற்ற கிளையாகத் துண்டிக்கப்படுவோம்.

எப்படி இறைவனாகிய கண்ணாடியில் பட்டு ஒளி பிரகாசிக்கிறதோ அல்லது செடியோடு இணைந்த திராட்சைக் கொடி செழித்து வளர்கிறதோ அதுபோல் இறையுறவில் வளமான மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

இதனையே நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், “ஒன்றோடொன்று தொடர்புடைய அயலார், ஆண்டவர், இயற்கை என அடிப்படையான மூன்று உறவுகளில் வேரூன்றி நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது மனித வாழ்வு என்று ‘புகழனைத்தும் உமதே என்னும் சுற்று மடலில் எண்-66-இல் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனை இதயத்தில் வைத்து, அருகில் இருப்போருடன் அன்பைப் பொழிந்து, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழவேண்டும் என்று கூறுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகவே, இறைவனோடு இணைந்திருப்போம்; இன்பமாக வாழ்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
Ai-யின் இரு உலகங்கள் (உலகம் உன் கையில்! – 23)

.. நாம் செய்யும் வேலைகளுக்குப் பதிலாக அமையுமா? அல்லது மனிதர் எதிர்கொள்ளும் சிக்கலைத் தீர்க்குமா? என்பது தொடரும் வாதப் பொருளாகவே இருப்பதைப் பார்க்கிறோம்.

கி.மு. 5-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ், “எழுத்துமுறை மனித நினைவாற்றலைப் பாதிக்கும்என்றார். அதாவது, எழுத்துமுறை முன்னேற்றத்தின் அடையாளம் என்ற கருத்தை முன்னிறுத்தவில்லை.

ஈராயிரம் ஆண்டுகளுக்குப்பின் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற விஞ்ஞானி மின்விளக்கு, திரைப்படக் கருவிகளை உருவாக்கினார் என்பதை அறிவோம். இவர் திரைப்படங்கள் பாடப்புத்தகங்களுக்கு மாற்றாக அமையுமென்றும், மனித அறிவைப் புகட்ட சினிமா உதவும் என்றார். இவ்வாறான கருத்துகள் இவர்களின் படைப்புகள் பழையவற்றை மாற்றியமைக்குமா? அல்லது புதிய திறன், தகவல்-செய்தி பரவலுக்கு உதவுமா? என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. அதே நிலைதான் இன்று .. தொழில்நுட்ப உலகிலும் நிலவுகிறது.

இன்றைய உலகம்

21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ..-யின் பிரிவான கற்கும் இயந்திரத் (Machine learning) தொழில்நுட்பம், நிரலாற்றல் (programming) இல்லாமலே தரவுகள் அடிப்படையில் கற்று மேம்படுத்திக்கொள்ளும் திறனைத் தந்தது. ஜியாஃப்ரே ஹிண்டன் என்பவரின் நரம்புவலை இயந்திரச் சிந்தனை (Deep learning) தொழில்நுட்பம் இயந்திரத் திறனை மேலும் உயர்த்தியது. இதன்மூலம் பிம்பங்களை  (images recognition) அறிதல், பேச்சைப் புரிந்துகொள்ளுதல்  (speech recognition) போன்ற திறனுடன் .. துரிதமாக மக்களிடம் சென்றடைந்தது

இத்தகைய .. சார்ந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள்மேல் கட்டப்படும் இன்றைய பொருளாதாரம் சமநிலையில் இல்லை என்ற பார்வையும் உள்ளது. ஏற்றத்தாழ்வு நிறைந்த  சூழலில் உலகம் இன்று ..யோடு பயணிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சமுதாயம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறதா? என்பது ஒருபுறமிருக்க, ..-யின் வளர்ச்சி நாடுகளுக்கிடையே நிலவும் வேறுபாடுகளின் இடைவெளியை மேலும் அதிகரிப்பதாகவும் உணரப்படுகிறது. குறிப்பாக, ஆசியா, கிழக்குத் தீவு நாடுகளின் பொருளாதாரச் சமநிலையின்மை, அண்டை மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் ஈடு கொடுக்க இயலாமை என்பவை எவ்விதத்தில் .. தொழில்நுட்பம் அனைவருக்குமானதாக (inclusive) இருக்கும் என்றும் சிந்திக்க வைக்கிறது.

இன்றைய ..யின் வளர்ச்சி முற்றிலும் இயந்திரத்தைச் சார்ந்தே இருப்பதை அறிவோம். ..-க்குத் தேவையான வன்பொருள் முதல் அதன் இயக்கம்வரை அனைத்தும் மின்சாரத்தையே நம்பி உள்ளது. .. எவ்வளவு வரவேற்கப்படுகிறதோ அல்லது வளர்கிறதோ அதே விகிதத்தில் மின்சாரத் தேவையும் உயர்ந்துகொண்டே போகும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. இந்நிலையில் 2030 ஆண்டுக்குள் .. சார்ந்த தரவு மையங்களின் மின் தேவை மூன்று மடங்கு அதிகரிக்குமென்றும், இதற்கேற்ப தயார்படுத்த இயலாத நிலத்தடி எரிபொருளையே நம்பியிருக்கும் நாடுகள் ..யின் பயனைப் பெறுவதில் திண்டாடும் நிலை ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது. நாளுக்கு நாள் மின்சார உற்பத்திக்கும் - தேவைக்கும் உள்ள இடைவெளியை நம் அன்றாட மின் பயன்பாட்டின் கட்டண உயர்விலிருந்தே அறிந்துகொள்கிறோம்.

ஏறக்குறைய 25% ஆசிய-பசிபிக் கடல் நாடுகள் இன்று இணையதளத் தொழில்நுட்பத்தை அடையாமலிருப்பதும், ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்துவதில் பெண் வர்க்கத்தினர் குறைந்த விகிதத்திலிருப்பதும், டிஜிட்டல் தொழில்நுட்பம் கணிசமான அளவில் சமுதாயத்தில் அனைவரையும் சென்றடையவில்லை என்பதாகக் கருதப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, சில  நாடுகள் மின் உற்பத்தியை அதிகரிக்க தங்கள் உள்நாட்டுக் கட்டமைப்பை வேகமாக  உருவாக்குவதும், சில நாடுகள் இதில் முற்றிலும் பின்தங்கியிருப்பதும், .. சார்ந்த பொருளாதாரப் பயன்கள் பின்தங்கிய பிரிவினரிடம் சென்றடையாமல் போகும் என்றும் கூறப்படுகிறது.

..யின் எதிர்காலம்

..யின் எதிர்காலம் மிகவும் ஆர்வமும் நம்பிக்கையூட்டுவதாவும் உள்ளது என்றாலும், ஒவ்வொரு நாளும் .. புதிய வடிவமெடுப்பதும், .ஜி.. (Artificial General Intelligence) என்ற அடுத்தகட்ட நிலையை நோக்கி நகர்வதும் விஞ்ஞானிகள் மற்றும் தத்துவ ஞானிகளிடையே கவலையையும் விவாதத்தையும் எழுப்பியுள்ளது. ஏனென்றால், இயந்திரம் மனிதத்திறனை மிஞ்சிய நிலையில் (.ஜி..) அதற்கான கட்டுப்பாடு, பாதுகாப்பு நெறிமுறை பற்றியும், இதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்தும் கேள்விகள் எழுகின்றன.

எந்த ஒரு தொழில்நுட்பமும் மனிதக் கட்டுப்பாட்டிலிருப்பதும், மனித இனத்திற்குப் பயனுள்ளதாய் இருப்பதுமே சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. இதற்கான பதிலை அடுத்து வரும் ஆண்டுகளின் ..யின் நகர்வுகளே தீர்மானிக்கும் என்றே கருதப்படுகிறது.

21 -ஆம் நூற்றாண்டின் கட்டமைப்பு

18 -ஆம் நூற்றாண்டின் தொழில்புரட்சி, நீராவி எஞ்சினையும், இயந்திர உற்பத்தியையும் உலகிற்கு அளித்தது. இதனைப் பயன்படுத்தி 19 -ஆம் நூற்றாண்டில் முன்னேறிய நாடுகளின் தனிமனித வருமானமும், மனித ஆயுள்காலமும் வெகுவாக அதிகரித்தன. இந்த ஓட்டத்தில் பங்குபெற இயலாத நாடுகள் இதன் பயன்களைப் பெறமுடியாமல் போனநிலையை இன்று .. உருவாக்கலாமென்று .நா. சபையின் யு.என்.டி.பி. (UNDP) அறிக்கை எச்சரித்துள்ளது.

எவ்வாறு நம் அன்றாடத் தேவைக்கு மின்சாரம், சாலைவசதி போன்றவை அடிப்படையாக அமைந்துவிட்டனவோ, அதேபோன்று 21-ஆம் நூற்றாண்டின் கட்டமைப்புகளில் ஒன்றாக உருவெடுக்கும் ..-யின் பயன் மக்கள் அனைவருக்கும் பரவலாகக் கிடைப்பது அவசியமும் சமூக நீதியுமாய் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்நூற்றாண்டு புதியதொரு தொழில் எழுச்சி யுகத்தைப் படைக்கவேண்டுமென்றால், அதற்கு .. மட்டும் காரணமாய் அமையாது; அதை நாம் எவ்வாறு சமுதாயத்தில் செயல்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கும்.

news
சிறப்புக்கட்டுரை
ஆரோக்கியமான வாழ்க்கைக்கான மருத்துவர் சீட்டு

மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் தினமும் ஒரு விசித்திரமான காட்சியை நாம் காண்கிறோம். கையில் பழைய மருத்துவக் கோப்புகள், முகத்தில் கவலை, கண்களில் நம்பிக்கை, இதயத்தில் ஒரு மௌனமான வேண்டுதல்.

டாக்டர், நான் நன்றாக ஆகிவிடுவேனா?” இந்த ஒரு கேள்விக்குள் எத்தனை அச்சங்கள் அடங்கியிருக்கின்றன! எத்தனை கனவுகள், எத்தனை பொறுப்புகள்! எத்தனை சொல்லப்படாத வேண்டுதல்கள்!

மருத்துவர் நோயைக் கண்டறிகிறார். சில பரிசோதனைகள், சில அறிவுரைகள். இறுதியில் ஒரு மருத்துவர் சீட்டு. அந்தச் சிறிய வெள்ளைத்தாளில் எழுதப்பட்டிருப்பது வெறும் மருந்துகளின் பெயர்கள் அல்ல; வாழவேண்டும் என்ற மனிதனின் ஆழ்ந்த ஆசைக்கு அளிக்கப்படும் நம்பிக்கையின் பதிலாகும்.

ஆனால், இன்று நம் வாழ்க்கையை நோக்கிப் பார்த்தால், உடலுக்கு மட்டுமல்ல; மனத்திற்கும், உறவுகளுக்கும் ஆன்மாவிற்கும் சிகிச்சை தேவைப்படுவதை உணர்கிறோம். உடல் சோர்வடைவதற்கு முன் மனம் சோர்வடைகிறது. நோய் வருவதற்கு முன் நம்பிக்கை குன்றுகிறது. தூக்கம் வருவதற்கு முன் எண்ணங்கள் துரத்துகின்றன. நண்பர்கள் அதிகரிக்கின்றனர்; ஆனால், நெருக்கம் குறைகிறது. வீடுகள் பெரிதாகின்றன; ஆனால், உரையாடல்கள் சிறிதாகின்றன.

அமைதியைத் தேடும் மனங்களுக்கு, அர்த்தத்தைத் தேடும் இளைய தலைமுறைக்கு, அன்பைத் தேடும் உறவுகளுக்கு, நம்பிக்கையைத் தேடும் மனித இதயங்களுக்கு எழுதப்பட்ட ஒரு வாழ்க்கை மருத்துவர் சீட்டு.

நோயறிதல்

நோயாளியின் பெயர்: மனிதகுலம்

வயது: நவீன நாகரிகம்

முக்கியக் குறைகள்: மன அழுத்தம், ஒப்பீடு, தனிமை, அவசரம், அன்பு குறைவு

மருத்துவர் சீட்டு

நன்றி உணர்வு: தினமும் காலை ஒரு மாத்திரை. கண் திறந்தவுடன் குறைகளை எண்ணாதீர்கள். கிடைத்தவற்றை எண்ணுங்கள். நன்றியுணர்வு என்பது மனத்தின் எதிர்ப்புச்சக்தியை உயர்த்தும் இயற்கை மருந்து.

அன்பு: அளவில்லாமல் எடுத்துக்கொள்ளலாம்இந்த மருந்திற்குப் பக்கவிளைவுகள் இல்லை. கொடுப்பவரும் குணமடைவார்; பெறுபவரும் மகிழ்வார்.

மன்னிப்பு: காயம் ஏற்பட்ட உடனே மன்னிக்காமல் வைத்திருக்கும் கோபம், மற்றவரைக் காட்டிலும் நம்மையே மெதுவாகக் காயப்படுத்துகிறது.

அமைதி: இரவு உறங்குவதற்கு முன் 15 நிமிடம். சில நேரங்களில் மனத்திற்குத் தேவைப்படும் சிறந்த சிகிச்சை பதில்கள் அல்ல; அமைதியே!

குடும்ப உரையாடல்: தினமும் ஒரு முறை. ஒரே வீட்டில் வாழ்வது உறவல்ல; ஒருவரை ஒருவர் உண்மையாகக் கேட்பதே உறவு.

நடைப்பயிற்சி: தினமும் 30 நிமிடம்: உடல் நகரும்போது சிந்தனைகளும் தெளிவடைகின்றன. சில நேரங்களில் நாம் நடப்பது பாதையில் அல்ல; நம்மை நோக்கியே.

சிரிப்பு: தேவைக்கேற்ப மனிதன் கண்டுபிடித்த மிகச்சிறந்த இயற்கை மருந்துகளில் ஒன்று.

செபம்: ஆயுள் முழுவதும் தொடரவும். மருத்துவம் உடலைத் தொடும்; செபம் உள்ளத்தைத் தொடும். சில காயங்களை மருந்துகள் ஆற்றாது; இறைவனின் உடனிருப்பு ஆற்றும்.

பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள்

பிறரை ஒப்பிட்டு உங்கள் மதிப்பை அளக்காதீர்கள்.

அலைப்பேசித் திரையைக் காட்டிலும் மனித முகங்களை அதிகம் பாருங்கள்.

வெற்றியை மட்டுமல்ல, மன அமைதியையும் தேடுங்கள்.

உடல்நலத்தைப் போலவே மனநலத்தையும் கவனியுங்கள்.

அன்பைச் சேமிக்காமல் பகிருங்கள்.

மீள் பரிசோதனை

ஒவ்வோர் இரவும் உங்களையே கேளுங்கள்:

இன்று யாரையாவது மகிழ்ச்சிப்படுத்தினேனா?

யாருடைய வேதனையையாவது கேட்டேனா?

என் மனத்திற்கு ஓய்வு கொடுத்தேனா?

இறைவனுக்கு நன்றி கூறினேனா?

இறுதிக் குறிப்பு

இந்த மருத்துவர் சீட்டில் எழுதப்பட்ட மருந்துகள் எந்த மருந்தகத்திலும் கிடைக்காது. ஆனால், அவை ஒவ்வொரு மனித இதயத்திலும் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ளன. நன்றி உணர்வைத் திறந்து பயன்படுத்துங்கள். அன்பை அளவின்றிப் பகிருங்கள். மன்னிப்பைத் தாமதிக்காதீர்கள். அமைதியைத் தேடுங்கள்.

இறைவனை நம்புங்கள்; அப்போதுதான் வாழ்க்கை வெறும் நாள்களைத் தள்ளிச்செல்லும் பயணமாக அல்லாமல், குணமடைந்து மலர்ந்து அர்த்தம் பெறும் ஒரு புனிதப் பயணமாக மாறும்.

உடலுக்கு மருந்து தேவைப்படுவதுபோல, வாழ்க்கைக்கும் சில நல்ல பழக்கங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை முறையாக எடுத்துக்கொண்டால், வாழ்க்கையே ஆரோக்கியமாகிவிடும்.