ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 15-ஆம் நாள் இந்தியர்களாகிய நாம் இருபெரும் ‘விடுதலை’…… விழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடி இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறோம். முதலாவதாக, அகில உலகத் திரு அவையுடன் இணைந்து, புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு (முழுமையான விடுதலை) விழாவைக் கொண்டாடுகிறோம். இது நமது அன்னை, தான் பெற்ற விண்ணகத்தின் முன் சுவையை அவரது பிள்ளைகளாகிய நாமும் அவரைப்போல அனைத்துத் தீமைகள், பாவங்களில் இருந்தும் விடுதலை அடைந்து, அவரோடு நிறைவாழ்வைப் பெற்றுக்கொள்ள, அன்றைய திருப்பலியில் இறையருள் வேண்டி செபிக்கிறோம். இரண்டாவதாக, மீண்டும் அதே ஆகஸ்டு 15-ஆம் நாள் நமது நாட்டின் சுதந்திர தின விழாவைக் கொண்டாடி, நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க, தங்களையே தியாகம் செய்த நமது நாட்டு தந்தை மகாத்மா காந்தி, நமது நாட்டை சமத்துவம், சகோதரத்துவம், சமயச்சார்பின்மை நாடாகச் செதுக்கிய சிற்பி ஜவஹர்லால் நேரு, கர்மவீரர் காமராசர் போன்றவர்களின் மகத்தான சேவைகளை எண்ணிப் பார்த்து நன்றி கூறவும், அவர்கள் காட்டிய வழியில் நாமும் பயணித்து, நவீன இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுக்கிறோம்.
சுதந்திரம்
அடைந்து இந்நாள்வரை நமது நாட்டின் வரலாற்றைப் பறவைப் பார்வை கொண்டு பார்த்தோமென்றால் பொருளாதாரம், கல்வி, தொழில் நுட்பம், ‘டிஜிட்டல்’
புரட்சி, அறிவியல், விண்வெளி, விவசாயம் ஆகிய துறைகளில் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளையில், சற்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், நாம் சனாதனம், சாதியம், பெண்ணடிமைத்தனம், பார்ப்பனியம், மதவாத அரசியல்வாதிகளின் அடிமைகளாகவும், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் தீய உறவுகளுக்கு (toxic
relationship) அடிமைகளாக உள்ளோம் என்பது நிதர்சனமான உண்மை.
நள்ளிரவில்
சுதந்திரம் பெற்றதால் நாம் மேற்கூறியவைகளுக்கு அடிமைகளாகக் கட்டுண்டு கிடக்கின்றோமோ? என்று சொல்லத் தோன்றுகிறது. இவைகளில் ஒருசில முக்கியமான அடிமைத்தனங்களை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு, அவைகளைக் களைந்து, நாம் கனவு காணும் சமத்துவம், சகோதரத்துவம், மதச் சார்பின்மை கொண்ட இலட்சிய சுதந்திர நாட்டைப் படைக்க முடியும்.
சாதிய-சமய
அடிமைத்தனம்
“நாம் சாதியாலும் மதத்தாலும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்” என்று
தந்தை பெரியார் பல்வேறு சமயங்களில் பதிவு செய்துள்ளார். டாக்டர் அம்பேத்கர்
ஒரு படி மேலே சென்று, “சாதி சமுதாயத்தை அழிக்கிறது; சமயமோ அதை நியாயப்படுத்துகிறது”…… என்று
சாடுகிறார். இவ்வாறாக சாதி, சமயம் இரண்டும் இணைபிரியாத இரு தீய சக்திகள், தடைக்கற்களாக இருந்து நாட்டின் முன்னேற்றப் பாதைகளில் மாபெரும் இடையூறாக உள்ளன.
முதலாவதாக,
ஒரு மனிதன் கருவறையில் தொடங்கி கல்லறைக்குச் செல்லும் வரை, இவ்விரு அடிமைச் சங்கிலிகளும் அவனைக் கட்டிப் போடுகின்றன. எனவேதான், “அவன் எந்த திசையை நோக்கிச் சென்றாலும், அவன் வாழ்க்கைப் பாதையில், சாதி என்னும் பூதம் குறுக்கே நிற்கும். அப்பூதத்தைக் கொல்லாத வரையில் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார மாற்றத்தையோ கொண்டு வர முடியாது” என்று ‘சாதி ஒழிப்பு’ என்னும் நூலில் அம்பேத்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாவதாக,
இந்தியச் சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழாதிருக்கத் தடுக்கும் வலுவான கட்டமைப்பு மதமாகும். சாதியும் சமயமும் இழுவைக் கம்பிகளாக இருந்து, தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதோடு, முன்னேறிச் செல்லத்துடிக்கும் நம் சமுதாயத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. மேற்கூறிய கருத்துகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான வே. இறையன்பு ஐ.ஏ.எஸ்.
“சாதியின் பெயராலும், சமயத்தின் குறியீடுகளாலும் மானுடம் சுருங்குகிறது; அதன் மகத்துவம் நொறுங்குகிறது” என்கிறார்.
சுருக்கமாக,
சாதியம் ஊடுருவாத இடமே இல்லை. ஒருவரின் பெயருக்குப் பின்னால், அவன் வசிக்கும் இடத்திற்கு, செல்லும் பள்ளிக்கு, சாமி கும்பிடும் புனிதத்தளத்திற்கு, திருமணத்திற்கு, இறுதியாக நீங்காத் துயில்கொள்ளும் கல்லறைகளிலும் சாதியம் புரையோடி உள்ளது. இருப்பினும், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் மற்றும் கல்வியறிவு பெற்ற மக்கள், முற்போக்குச் சிந்தனைவாதிகள் ஏற்படுத்திய விழிப்புணர்வால் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சேலம் மாவட்டம், காவலாண்டியூர் என்னும் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதி மறுப்புத் திருமணங்கள் வழியாகச் சமத்துவமிக்கச் சமுதாயம் உருவாகி உள்ளதாகக் கிடைக்கும் செய்தி, நமக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் கொடுக்கும் நிகழ்வாக அமைகிறது. இதற்கு அப்பாற்பட்டு, சாதி அமைப்புகள் என்பது நமது சாபக்கேடு……
என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, விடுதலை பெறவேண்டும் என்றால், பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒரு நபர், நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல என்ற எண்ணத்துடன் செயல்படவேண்டும். மேல்சாதி என்று சொல்லிக்கொள்ளும் நபர், என்னுடன் வாழும் சகோதர-சகோதரியின் உடலில் உள்ள உயிரும் உணர்வும் எலும்பும் சதையும், அவரது ஆளுமையும் என்னைப் போன்றதே என்ற எண்ணத்துடன் வாழும்போது, இயல்பாக உண்மையான சமூக மாற்றம் ஏற்படும்.
பெண்ணடிமைத்தனம்
திருவிவிலியத்தின்
தொடக்கநூல் மானிட சமத்துவத்தைப் பற்றிக் கூறுகையில், “கடவுள் மானிடரைத் தம் உருவில் ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்”…
(தொநூ 2:27) என்கிறது. ஒரு பெண்ணைத் தாயாகக் கணித்து, அவரது அன்பு, தாய்மைப் பண்புகள், தியாகம், பொறுமை போன்றவைகளை வானளாவப் புகழ்ந்து, சிகரத்தின் உச்சிக்கே கொண்டு சென்று அவரது அருமை பெருமைகளைப் பறைசாற்றுவது நமது சமுதாயம். ஆனால், அவரை நம் குடும்பங்களில், சமுதாயத்தில் நாம் சுயநலத்துடன் பயன்படுத்திக்கொள்ளவும், இரண்டாந்தரக் குடிமகளாக நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். இன்னும் சில இடங்களில் பெண் குழந்தைகள் வேண்டாத விருந்தாளிகளாக, பெண் கருக்கள் கருவறையிலேயே சிதைக்கப்படுகின்றன. பெண் சிசுக்கொலைக்கும் பஞ்சமில்லை.
பாரதிதாசன்
பார்வையில் “பெண்ணடிமை தீரும் வரை, மண்ணடிமை தீருமோ?” என்ற வைர வரிகளில், ஒரு நாட்டின் விடுதலை என்பது, ஒரு பெண்ணின் விடுதலையோடு நேரடித் தொடர்பு உண்டு என்கிறார். நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன்னையே தியாகம் செய்த நம் நாட்டுத் தந்தை, “என்று ஒரு பெண் தனியாக நள்ளிரவில் எவ்விதப் பயமும் இன்றி வீதியில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றே இந்த நாட்டில் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது”…என்றார்.
அரசியல்வாதிகளின்
அடிமைகளாக
நாம்
ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து அரசியல் விடுதலை அடைந்து 80-வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடுவதில் பெருமையும் பெருமிதமும் கொள்ளவேண்டிய நிகழ்வு என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. இந்த நன்னாளில் நமக்காகப் பல்லாண்டுகள் சிறையிலிருந்தும், பல்வேறு துன்பங்களையும் மனமார ஏற்றுக்கொண்ட தலைவர்களை நாம் இதயத்தில் வைத்து அவர்களுக்கு இன்று மரியாதை செய்து வருகிறோம். ஆனால், காலம் செல்லச் செல்ல குறிப்பாக, கடந்த 12 ஆண்டுகளாக மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட மதச்சார்பின்மையைச் சிதைத்து, அறிவிக்கப்படாத அவசர நிலையைப்…பயன்படுத்தி இன்று ஒன்றிய அரசை நடத்தும் பா.ச.க.
அரசால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி’ என்ற முழக்கங்களுடன் சனநாயக நாட்டைச் சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பெரும்பான்மையினர் - சிறுபான்மையினர் என்று பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து மக்களிடம் பகையை உண்டாக்குகின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிறித்தவர்களுக்கு எதிராக நடந்து வரும் மதக்கலவரங்கள் இதற்குச் சான்று. உலக நாடுகளெல்லாம் வலம்வரும் இந்நாட்டின் பிரதமருக்கோ அங்குச் செல்ல மனமில்லை; நேரமும் இல்லை!
ஒன்றிய
அரசால் கடந்த ஜூன் 23 அன்று நடைமுறைக்குக் கொண்டு வந்த திருத்தப்பட்ட FCRA மசோதா நிறுவனத் திரு அவைக்கு நேரடியான சவாலாகவும், அதிகமான எதிர்வினைகளையும் உண்டாக்கும் அடக்குமுறையாகவும் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, வெளிநாட்டின் நிதியில் உருவாக்கிய பள்ளி, மருத்துவமனை, நிலம் போன்றவைகளை FCRA இரத்தானால் அரசு கையகப்படுத்தும். அவற்றை நிர்வகிக்க அரசே புதிய அரசு அதிகாரிகளை நியமிக்கும். இதனால் கிறித்தவர்கள் இலவசமாக நடத்தும் கருணை இல்லங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் பெரிதும் பாதிக்கப்படும்.
சமூக ஊடக
அடிமைகளாக
இன்றைய
நவீனகாலக் கண்டுபிடிப்புகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. நமது சமுதாயத்தைக் குறிப்பாக, இளைய தலைமுறை இவைகளால் காந்தம்போல் ஈர்க்கப்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகளான AI (செயற்கை
நுண்ணறிவு, Meta AI) போன்ற
உதவி உபகரணங்கள்,
சமூக ஊடக வர்த்தகங்கள் (Social Commerce), மேலும்
பல வளர்ச்சிப் பணிகளும் பயனுள்ளதாக இருப்பதை யாரும் மறுப்பதில்லை. ஆனால், சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாட்டால் மனச்சோர்வு, கவலை, தனிமை, விரக்தி, குடும்ப உறவு சிதைவு ஆகியவைகளுக்கு அடிமைகளாகின்றனர். இன்று குடும்ப உறவைத் துண்டித்துவிட்டு கைப்பேசியில் தனிக்குடித்தனம் நடத்துகின்றனர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மனிதனுக்கு இன்பமளிப்பது மது, மாது போன்றவைகளுக்கு அடிமைகளாகி கற்பனை உலகில் சிறகடித்துப் பறந்து, தங்கள் வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். இச்சூழ்நிலையில், பெற்றோரும், திரு அவைத் தலைவர்களும் சிறந்த வழிகாட்டிகளாக இருந்து, சமூக ஊடகங்களின் பாதுகாவலராக…… புனித
கார்லோ அக்குத்திஸ் போன்ற இளந்தலைமுறையை உருவாக்க முன்னுரிமை அளிக்கவேண்டும்.
தன்நிலை அடிமைகளாக
ஒரு
மனிதனை அடிமையாக்கும் காரணிகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, புறவழி அடிமைத்தனம். இரண்டாவது, அகவழி அடிமைத்தனம். மேலே குறிப்பிட்ட எல்லா வகை புறவழி அடிமைத்தனங்களுக்கும் அப்பாற்பட்டு, நம்மை நாமே நமது உள்ளத்திலிருந்து உண்டாகும் தீய சிந்தனைகள், தீய செயல்கள்... சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், பாவ வாழ்க்கைக்குக் கட்டுண்டவர்களாக நமக்கு நாமே அடிமைகளாக வாழ்கிறோம்.
இந்தச்
சூழ்நிலையில், இன்று நாம் இயேசுவின் தாய் புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு விழாவைக் (முழுமையான விடுதலை) கொண்டாடுகிறோம். நமது கிறித்தவ நம்பிக்கையின்படி மரியா கடவுளின் சித்தத்திற்கு “இதோ, உமது அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்”
(லூக் 1:38) என்று இறைவனின் திட்டத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அதன்பிறகு தன் வாழ்க்கை முழுவதும் இறைவனின் திருமகன் இயேசுவிற்காகவும், அவரது பிள்ளைகளாகிய நமது விடுதலைக்காகவும் அவர் முழுமையாகச் சுதந்திர வாழ்வு வாழ்ந்து விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.
அன்னையின் விடுதலை
விழாவின்
ஒளியில்
நமது
அரசமைப்புப் பிரிவு 19 முதல் 32 வரை நமக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ள பேச்சுரிமை, மதச் சுதந்திரம் மற்றும் சமத்துவ உரிமை உள்ளதா? என்று எண்ணிப்பார்த்து நமது ஒட்டுமொத்த சுதந்திரத்திற்காக அறவழியில் போராடுவது காலத்தின் கட்டாயம். சில நாள்களுக்கு முன்பு, தன்னை எந்த எமனாலும் எப்போதும் அசைக்க முடியாது என்ற இறுமாப்புடன் இருந்த பிரதமர் மோடியை, கரப்பான் பூச்சி…… ஜனதா கட்சி இளைஞர்கள் ஆட்டம்காணச் செய்தனர் என்பது நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றது.
வங்கக்
கவிஞர் தாகூரின் கீதாஞ்சலி 35-இல் கூறுவதுபோல்....
“எங்கே மனம் அச்சமற்று உள்ளதோ
எங்கே
தலை நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே
உண்மை உரைக்கப்படுகிறதோ
எங்கே
மனம் வழி நடத்தப்படுகிறதோ
எம்
தந்தையே, அந்தச் சொர்க்கத்திற்குள்
எம்
தாய்நாட்டை விழித்தெழச்செய்”…
என்ற
சிந்தனைகளை உள்ளத்தில் இருத்திச் செயல்படுவோம்.