news-details
தலையங்கம்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (2026-2027) அரசின் தொலைநோக்குப் பார்வையும் மக்களின் தொலைதூரக் கனவுகளும்!

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு (குறள் 385)

என்றார் ஐயன் வள்ளுவர். அதாவது, பொருள் வரும் வழிகளை உருவாக்குவதும், வந்த பொருளைத் தொகுப்பதும், தொகுத்தவற்றைப் பிறர் கவராமல் காப்பதும், காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவதும் ஆகிய இவற்றில் திறமை மிக்கதே சிறந்த அரசாகும்.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக, தமிழக வெற்றிக் கழக (.வெ..) அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (2026-2027) அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘மாற்றம்என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த ஒரு புதிய அரசு, தாக்கல் செய்யும் முதல் வரவு-செலவுத் திட்டம் என்பதால், இதன் மீதான மக்களின் எதிர்பார்ப்பு மலைபோல் குவிந்திருந்தது.

அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் கோட்பாட்டை மையமாகக் கொண்டு, பத்து தூண்களைக் கொண்டவெற்றித் தமிழகம் - தொலைநோக்குத் திட்டங்கள்என்ற வகையில் இந்த நிதிநிலை அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. 2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் இலக்கும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வள்ளுவன் வகுத்த இலக்கணப்படி, நிதி ஆதாரங்களைப் பெருக்கி, நிதி ஒழுங்கைப் பேணி, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பேராற்றல் இந்தப் பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளதா? அல்லது இது வெறும் வாக்குறுதிகளின் வண்ணப்பூச்சாக அமைந்துள்ளதா? என்ற கூராய்வு மிகவும் அவசியமாகிறது.

‘Gen-Z’ எனும் இளைய தலைமுறையினர், மாணவர்கள் மற்றும் மகளிரை இலக்காகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் .வெ.. அரசின் தொலைநோக்குப் பார்வையை எடுத்தியம்புகின்றன. குறிப்பாக, கல்லூரி மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும், எண்மத் தொழில்நுட்ப இடைவெளியைக் குறைக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளவெற்றி மடிக்கணினித் திட்டம்(ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு) பாராட்டுக்குரியது. அதேபோல, 12 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், 1 இலட்சம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் தொழில்முறைத் திறன் பயிற்சி அளிக்கும்வெற்றித் திறன் பயிற்சித் திட்டம் (ரூ. 150 கோடி) இளையோரின் வேலைவாய்ப்புத் திறனை உயர்த்தும். தொழில்பயிற்சி நிறுவனங்களில் (ITI), செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவுகள் தொடங்குவது காலத்தின் தேவைக்கேற்ற நகர்வாகும்.

அவ்வாறே, தமிழ் வளர்ச்சி, விளையாட்டுத் துறை, மின்சார வாகன விற்பனைக்கான ஊக்கத்தொகை மற்றும் கூவம்-அடையாறு நதிகளை மீட்டெடுக் கும் நீண்டகால உறுதிமொழிகள் ஆகியவை வரவேற்கத்தக்கவை. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம், 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டம், இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் விலையில்லா மின்சாரம் போன்ற அறிவிப்புகள் எளிய மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், கிராமப்புறங்களில் காங்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான அலகுத் தொகையை ரூ. 3.10 இலட்சத்திலிருந்து ரூ. 5 இலட்சமாக உயர்த்தியிருப்பது (ரூ. 3,500 கோடியில் 70,000 வீடுகள்) வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்குப் பெரும் கொடையாகும். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இருந்த காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை நீடித்துள்ளது பாராட்டுக்குரியதே!

மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கூடுதலாக 25 நாள்கள் சேர்த்து 150 நாள்கள் வேலை வழங்கும்வெற்றி 150’ திட்டம் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு 100% மானியத்தில் ஆடுகள் வழங்கும்வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் (ரூ. 110 கோடி) ஆகியவை கிராமப்புறப் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான 1,000 நடமாடும் மருத்துவ மையங்கள் மூத்தோரைப் பேணுதல், சமூகத்தில் மானுட மாண்பினைக் காத்தல் எனும் அறநெறி மதிப்பீட்டின்மீது இவ்வரசு கொண்டுள்ள தொலைநோக்குச் சிந்தனையை வெளிக்காட்டுகிறது.

ஆயினும், அரசியல் ரீதியாகப் பல வாக்குறுதிகளைத்  தந்து அதிகாரத்தைப் பிடித்த இந்த அரசு, நிதி எதார்த்தங்களை எதிர்கொள்ளும்போது தடுமாறுவதையும் இந்த நிதிநிலை அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.

குறிப்பாக, ஒரு மாநிலத்தின் அறிவு மூலதனத்தைப் பெருக்கவேண்டிய அரசு, கல்வித் துறைக்கான நிதியைக் குறைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதாவது, 2025-26 ஆம் ஆண்டில் ரூ. 46,767 கோடியாக இருந்த பள்ளிக் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு, நடப்பு பட்ஜெட்டில் ரூ. 44,527 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இடைக்காலப் பட்ஜெட்டில் ரூ. 48,534 கோடி சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். அதே போல, உயர் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டில் ரூ. 8,494 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, தற்போது ரூ. 8,393 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெற்றி மடிக்கணினித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டு, அடிப்படை உள்கட்டமைப்புக்கான நிதியைக் குறைப்பது முரண்பாட்டின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் மாத உதவித்தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் மற்றும் ஆண்டுக்கு 6 இலவசச் சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும்பெண்களுக்கான பேருந்து கட்டணமில்லாப் பயண விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4,000 உதவித்தொகை   குறித்தும் பட்ஜெட்டில் ஒரு வார்த்தைகூட இல்லை என்பதும் பெரும் ஏமாற்றமாகவே பார்க்கப்படுகின்றன. அவ்வாறே, தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்த அறிவிப்போ, பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கை குறித்த அறிவிப்போ இதில் இடம் பெறவில்லை என்பதும் பெரும் கவலையளிக்கிறது.

மேலும், கூர்ந்து கவனிக்கத்தக்க வகையில் இந்த நிதிநிலை அறிக்கையில், நிதி ஒதுக்கீட்டு முரண்பாடும் வெளிப்படுகிறது. அதாவது, ஒன்றிய அரசின் புதிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (வி.பி.ஜி. ராம்ஜி திட்டம்) மாநில அரசு தன் பங்காக ரூ. 5,057 கோடியை ஒன்றிய அரசுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்கி 150 நாள்களாக உயர்த்தும்வெற்றி 150’ திட்டத்திற்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி வெறும் ரூ. 100 கோடி மட்டுமே என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்நிலையில், “தமிழ்நாடு அரசு இதுவரை வாங்கியுள்ள கடன்களை முழுமையாக அடைத்து முடிக்க, இன்றிலிருந்து குறைந்தது 50 ஆண்டுகள் ஆகும்என்ற மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து நிதித்துறைச் செயலர் எம்.. சித்திக்கின் எச்சரிக்கையும், நிதியமைச்சரின் புள்ளிவிவரங்களும் தமிழ்நாட்டின் கடன் மேலாண்மையில் உள்ள ஆபத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. அரசுத் தரப்பில் திறம்பட வரி வருவாயைப் பெருக்காமல், கடனை நம்பியே திட்டங்களைச் செயல்படுத்துவது எதிர்காலச் சந்ததியினரின் தலையில் பேரிடியை இறக்குவதற்குச் சமம். “ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை ரூ. 20 இலட்சம் கோடியாக உயரும்என்ற மேனாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் நிதித்துறை சார்ந்த மதிப்பீடுகள், .வெ.. அரசு நிதி நிர்வாகத்தில் சந்திக்கவிருக்கும் பெரும் சவாலை சுட்டிக்காட்டுகின்றன.

இருப்பினும், அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளில் (Tenders) வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர எடுத்திருக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையே! பிற துறை ஒப்பந்த நிறுவனங்களும் பங்கேற்கலாம் என்ற புதிய முறை, அரசுக்குச் செலவைக் குறைத்தாலும், பணிகளின் தரத்தையும் உறுதியையும் பராமரிப்பதில் அரசு சற்றும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்றே நாம் விரும்புகிறோம்.

இறுதியாக, மாணவர்கள், இளைஞர்கள், மகளிருக்கான புதிய திட்டங்கள் மூலம் அரசு தன்தொலைநோக்குப் பார்வையைநிரூபிக்க முயன்றிருந்தாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததும், கல்வி நிதிக்குறைப்பும், விண்ணை முட்டும் கடன் சுமையும் எளிய மக்களின்தொலை தூரக் கனவுகளைஇன்னும் தூரமாக்கியுள்ளன.

ஆகவே, நிதி ஒழுங்கோடும், மக்கள் நலச் சிந்தனையோடும் நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே இந்தவெற்றித் தமிழகம்உண்மையான வெற்றியைச் சுவைக்கும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்