ஆசிரியர்கள் ஆணிவேர்கள்! வேலை செய்வது வெளியில் தெரியாவிட்டாலும், மாணவர் இனம் பூக்களாய் மலர்வதும், பூமியில் கனிவதும் ஆசிரியர்களால்தான்.
ஆசிரியர்கள்
மெழுகுவர்த்திகள்! உருகி உருகி உருக்குலைந்து போவதை உலகம் உணராவிட்டாலும் மனிதர்கள் ஒளிர்வதும் மடமையிருள் அகல்வதும் ஆசிரியர்களால்தான்.
ஆசிரியர்கள்
ஏணிகள்! இளைய சமுதாயத்தை இமயத்தில் ஏற்றி வைப்பதும், இனிய சமுதாயம் படைக்க கருவியாய் அவர்களை ஆக்கி வைப்பதும் ஆசிரியர்கள்தாம்.
ஆசிரியர்கள்
தோணிகள்! மூளையின்
செயல்கள் மூழ்கிவிடாமல், அறிவின்
பயணத்தை அக்கரைக்குக் கொண்டு சேர்க்கிற அரும்பணியை ஆசிரியர்கள் மட்டும் செய்யாதிருப்பின், சர்க்கரை வாழ்வைச் சந்திக்க முடியுமா இச்சமூகம்?
ஒழுக்கநெறி
வளர்க்கும் விளக்கவுரை ஆசிரியர்கள்! ஆளுமைத்திறன் வழங்கும் தோழமைக் கரம் ஆசிரியர்கள்! மாணவர்
இதய மேடைகளில் மகத்தான அன்புணர்வைச் சுரக்கச் செய்யும் உதய கீதங்கள் ஆசிரியர்கள்! மென்மையான உணர்வுகளை மலர்ப்பிக்கும் உண்மையான
உழவர்களும் கூட ஆசிரியர்கள்தாம்.
செய்கின்ற
சேவையைத் தொய்வின்றிச் செய்வதால்தான் தெய்வங்களுக்கு முன்னுள்ள இடத்தை ஆசிரியர்களுக்குக் கொடுத்து ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என வரிசைப்படுத்தினர் முன்னோர். ஒரு
கண்ணில் கண்டிப்பு; மறு கண்ணில் கற்கண்டின் இனிப்பு. உளியின் உரசல்களைத் தாங்கிக்கொள்ள முடிகிற சிக்கிமுக்கிக் கற்களால் மட்டுமே சீர்மிகுந்த சிலைகளாக உருமாற முடியும்.
கண்டிப்பு
என்னும் கடிவாளங்கள் போட ஆசிரியர்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்காவிட்டால், கண்டிப்பாகப்
பண்பின் அடையாளங்கள் கல்வி நிலையங்களிலிருந்து காணாமலே போய்விடும். அரசு சிந்திக்கவேண்டும்.
யானைக்குப்
பலம் தும்பிக்கை; மாணவர்க்குப் பலம் ஆசிரியர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கை. எழுதுகோல் பிடிக்கக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வல்லவன். ஏழையின் அளவுகோல் தெரிந்து மாணவர்களிடம் அன்பு காட்டும் ஆசிரியர் நல்லவன். தாய்மடி இழந்த குழந்தைகளையெல்லாம் தாங்கும் மடி ஆசிரியர்கள்தானே!
அம்மா
என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு; ஆசிரியர்கள் மட்டுமே இரண்டும்! ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பது வாழும் முறைக்கு அலங்காரம்; சாதி, மத, பேதம் என்பனவெல்லாம் சமுதாயத்தைச் சீரழிக்கும் அலங்கோலம். சின்னப் பிள்ளைகள் அணிந்துவரும் சீருடைகள் மட்டுமே சமத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் அடையாளம். அமர் அக்பர் அந்தோணி மூவரையும் அருகருகே அமர்த்தி அழகு பார்ப்பவை வகுப்பறைகள்தானே!
மாடியின்
குழந்தையும், சேரியின் பிள்ளையும் கூடி உறவாடி ஓடும் மைதானம் பள்ளிக்கூடங்கள் தவிர வேறென்ன? எனவே,
ஆசிரியர்கள் என்பவர்கள் ஒருமைப்பாட்டின் கொடியை ஏந்தி வரும் தூதுவர்கள். வேற்றுமை இருள் அகற்ற வேர்வை சிந்தும் தூயவர்கள்.
‘எதிர்கால இந்தியா வகுப்பறையில் இருக்கிறது’ என்றது
கோத்தாரி கமிஷன். தேசப்பற்றும் தெய்வப் பற்றும் பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் பால்சோறு. தேசப்பற்றை ஊட்டி வளர்க்கிறது தேசிய மாணவர் படை. நல்ல
பல சேவைகளைச் செய்ய ஊக்குவிக்கிறது நாட்டு நலப்பணித் திட்டம். சுற்றுச்சூழல் தரும் சுகவாழ்விற்குப் பாதை அமைத்துத் தருகிறது பசுமை இயக்கம். வஞ்சம் தீர்க்கும் மனிதர்களைக் கூட நெஞ்சில் ஏற்கும் உள்ளம் தருகிறது சிறுவர் செஞ்சிலுவைச் சங்கம். இப்படி இயக்கங்களை வழி நடத்தும் என்ஜின்களே ஆசிரியர்கள். இந்தியாவை வலுப்படுத்தும் இரும்பு மனிதர்களும் அவர்கள்தாம்.
உடுக்கை
இழந்தவன் கைக்கும், படிப்பை மறந்தவன் வாழ்க்கைக்கும் அதிக வித்தியாசமில்லை. ஒருவகையில் ஆசிரியர்கள் மனிதர்களின் மானம் காக்கப் போராடும் மன்னர் பரம்பரைகள்.
மாணவர்
எதைக் கற்கிறார் என்பது முக்கியமல்ல; எப்படிக் கற்கிறார் என்பதுதான் முக்கியம் என்கிறார் முற்போக்குக் கல்வியை முன்மொழிந்த ஜான் டூபே.
சாக்பீஸ்
கோடு - அது மாணவர்கள் தங்கள் கனவு வாழ்வைக் கண்டுபிடிக்க ஆசிரியர்கள் அமைத்துக் கொடுக்கும் ரோடு! அது வெறும் கோடல்ல; வெளிச்சக்கீற்று. அக்கீற்றை அறவொளியாய் உண்டுதானே
மகசூல் செய்கிறது மாணவ நாற்று! புத்தகங்களை ஆசிரியர்கள், பூமிக்கு அறிவின் ஆயுதங்களாக அறிமுகப்படுத்தியிராவிட்டால்
நூற்றாண்டுகால நூல்கள் கூட நூலாம்படையிடம் சிக்கிச் சிதைந்து போயிருக்குமே!
வகுப்பறையும்
வாத்தியார்களும் வேறு பணி செய்திருந்தால், அணாவுக்கும் பேனாவுக்கும் இங்கே வேலை இல்லாமல் போயிருக்கும். ஆண்டு விழா மேடைகளில் அரிதாரம் பூசாமல், ஆளான ஹீரோக்கள் அரிது அரிது. உடற்கல்வி
ஆசிரியர் உரம் போட்ட காரணமே விளையாட்டு வீரனுக்கு விருது.
தமிழ்
வளர்த்தது சங்கப் பலகை. கல்வி வளர்ப்பது கரும்பலகை. ஆகவே தலைமைப்புலவன் நக்கீரனும்,
தரணி புகழும் நல்லாசிரியனும் போற்றப்படவேண்டிய பொக்கிஷங்கள்தானே!
சிற்பிக்கும்
கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அதிக வேறுபாடில்லை. மரத்தைச் செதுக்கி மயக்கும் சிலை வடிப்போர் ஆசாரிகள். மனிதர்களை உருக்கி மாணிக்கங்களாய்ச் சமைப்போர் ஆசிரியர்கள்.
ஆசிரியப்
பணி குறைப்பணியுமல்ல, அரைப் பணியுமல்ல, அறப்பணி!
ஆகவே ஆலயப்பணிக்குத் தங்களை அர்ப்பணிப்போரை விடவும், ஆசிரியப் பணிக்குத் தங்களை அர்ப்பணம் செய்யும் ஆசிரியர்கள்தான் உண்மையான அறங்காவலர்கள்.
அரியாசனங்களும்
அறியாச்சனங்களும் சொந்தக் காலில் நிற்கும் திறனை நினைவில் கொண்டது ஆசிரியர்களால்தான். சட்டம் பேசுவோரும், சட்டசபையில் பேசுவோரும் பள்ளிக்கூடங்களில் பயிற்சி பெற்றிராவிட்டால் ஒலிப்பெருக்கி முன் நின்று ஓலம்தான் விட்டுக் கொண்டிருப்பர்.
எலிக்கறி
உண்ணும் ஏழையின் பிள்ளையும், வழிப்பறி
செய்து கொண்டு வாழ்ந்தவன் குழந்தையும், கணிப்பொறி இயக்கும் காலம் கனிந்துள்ளதென்றால் அதற்குக் காரணம் ஆசிரியர்கள்தானே!
ஸ்கூல்
படிப்பைச் சுத்தமாய் மறந்திருந்தால், ஸ்கேல் பிடிக்கும் அழகை அறிந்திருப்பானா அந்தப் பொறியாளன்? நாட்டின்
முதல் குடிமகனானாலும், மூத்த குடிமகனானாலும் கலைமகனாம் ஆசிரியர்கள் கல்வி போதித்திராவிட்டால் காணாமலே போயிருப்பரே! ஆசிரியர்கள் மட்டும் உபதேசம் உரைத்திராவிட்டால், உலகில்
ஒரு தேசமும் உருப்பட்டே இருக்காது. குருத்துவம் மருத்துவம் இவைகளின் எழுச்சிக்கு அடிப்படைக் காரணம் ஆசிரியர்களின் நிபுணத்துவம். ஆகவே ஆசிரியர்கள்தாம் மண்ணுலகின் மகத்துவம்.
படிப்பறிவு
கொள்ளாமல் பகுத்தறிவு ஏது? ஓர் அரிஸ்டாட்டில் இல்லாமல் அலெக்சாண்டர் யாரு? இயேசுவும் அல்லாவும் கிருஷ்ணரும் புத்தரும் நல்லொழுக்க வாழ்விற்கு நற்செய்தி போதித்ததால் அவர்களும் தெய்வங்கள் வடிவில் வாழ்ந்த ஆசிரியர்களே!
குடியரசுத்தலைவர்
அளவுக்கு உயர்ந்த டாக்டர் கலாம், ஒவ்வொரு மேடையிலும் தனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கே முதலில் வைக்கிறார் சலாம்! பிஞ்சு வயதில் பின் பெஞ்சில் அமர்த்தி, பென்சில் வரையக் கற்றுக்கொடுத்த நினைவுகளிலிருந்து நீங்க முடியாமல்தான் மற்றவர்கள் கூட மறந்தவர்களாகிறார்கள். ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களின் நெஞ்சில் நிறைந்தவர்களாகிறார்கள்.
ஆசிரியர்கள்
ஏணிகள்தாம். ஓய்விற்குப்பின் ஏங்கிப்போய்க் கிடக்கிறதே அந்த ஏணிகள்! ஆசிரியர்கள் தோணிகள்தாம். கடைசிக் காலங்களில் கண்ணீர்க் கூடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறதே அந்தத் தோணிகள். பெற்ற பிள்ளைகள் கைகழுவலாம்; கற்றப் பிள்ளைகள் கைவிடலாமா? முன்வந்து, முகம் பார்த்து, மேனாள் மாணவனெல்லாம் ஒருமுறை தன் குரல் காட்டிச் சென்றால், கண்மூடும் முன்னே களிப்படைய மாட்டானாடா உன் ஆசிரியன்!