அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி
நீந்தல் அரிது (குறள் 8)
குறள் விளக்கம்:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், பிறர் யாரும் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
சிந்தனை:
அறக்கடலாகிய இறைவனின் தாள் பணிந்தவர்கள் மட்டுமே இன்பமும் பொருளும் அடைய முடியும் என்கிறார் வள்ளுவர். துன்பம், கவலைகள் இடைமறித்தாலும், அதிலும் இறைத் துணையால் உறுதிபெற்று, அதிலிருந்து மீண்டு எழுந்து, இன்பமும் பொருளும் பெற்று நிறைவாக வாழ்வர்.
தாமஸ்
ஆல்வா எடிசன் ஆய்வகத்தில் தீ விபத்து ஒன்று
ஏற்பட்டது. விபத்து ஏற்பட வாய்ப்பில்லாத அளவுக்கு அவர் அந்த ஆய்வகத்தை அமைத்திருந்தார். அதை மிகவும் குறைவான தொகைக்குத்தான் காப்பீடு செய்திருந்தார். இரண்டு மில்லியன் டாலர் அளவுக்கு அவருடைய சொத்துகளும், அவருடைய பல ஆய்வுக் குறிப்புகளும்,
பல்வேறு நிலையிலிருந்த ஆராய்ச்சிப் பொருள்களும் நெருப்புக்கு இரையாயின. ஆனால், எடிசன் மிகவும் அமைதியாக அதைக் கவனித்துக் கொண்டிருப்பதை அவருடைய மகன் சார்லஸ் பார்த்துக் கொண்டிருந்தான். “மகனே
சார்லஸ், உன் அம்மா எங்கே? அவளையும் அழைத்து வா. அவள் இதுபோன்ற ஒரு காட்சியை வாழ்நாளில் இன்னொரு முறை பார்க்க முடியாது”
என்றாராம்.
அடுத்த
நாள் அந்த அழிவுகளையெல்லாம் முழுமையாகப் பார்வையிட்ட எடிசன், “இந்த விபத்தினால் ஒரு பெரிய நன்மை உண்டு. நம்முடைய தவறுகளையும் அது அழித்துவிட்டது. நாம் புதிதாக மறுபடியும் ஆரம்பிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்” என்றார்.
இந்த விபத்து நடந்த மூன்றே வாரங்களில் அவர் ஃபோனோ கிராஃப்-ஐக் கண்டுபிடித்தார். ஆத்திகரான எடிசன் அழிவைப் பார்த்து சோர்ந்து போகவில்லை. இறைவனுக்கு அந்த நேரத்திலும் நன்றி கூறினார். இழப்புகள் நம் தவறுகளை அழித்துவிடுகின்றன. புதிய தொடக்கத்தை ஏறெடுக்க வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன என்று நம்பினார். அதனால்தான் ஆய்வக விபத்து நடந்த மூன்றே வாரங்களில் அவரால் புதிய கண்டுபிடிப்பை உருவாக்க முடிந்தது.
“எனக்கு துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே: அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக் கொண்டேன்”
(திபா 119:71).
இறை
நம்பிக்கையாளர், சோதனைகள் கடவுளிடமிருந்து வருகிறது என்றே கருதுகிறார். அத்துன்பத்தை கடவுள் தனக்கு அனுமதித்ததற்கு ஒரு காரணம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அதனைக் கடந்துவர உத்வேகமும் பெறுகிறார். அவரது முயற்சியில் இறைவனும் அவருக்கு முழுமையாகத் துணை நிற்கிறார்.
இறைவனின்
துணையோடு துன்பமாகிய பிறவிப் பெருங்கடலைக் கடந்தவர் எத்தகைய துன்பக் கடலையும் துணிவோடு எளிதில் கடப்பர். நிலையான இன்பம் பெற, இறைவன் தாள்பணிவோம்.