news-details
சிறப்புக்கட்டுரை
மகிழ்ச்சியும் மனநிறைவும் (இளமை ஒரு சவால்! – 09)

நாம் வாழ்க்கையில் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்? மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய அடிப்படையான தேவை எது?

வெற்றி! வெற்றி! வெற்றி! இதைத்தான் இன்றைய சந்தைச் சமுதாயம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

போட்டிபோடு, வெற்றி பெறு,

எப்படியாவது வெற்றி பெறு! நன்றாகப் படி, மற்றவர்களைத் தாண்டி முன்னேறு!

பெரிய வேலைக்குப் போ,

நிறைய பணத்தைத் தேடு!

அதன் பிறகு... பெரிய கார் வாங்கு,

பெரிய வீடாகக் கட்டு!

அதன் பிறகு... இன்னும் முன்னேறு,

முன்னேறிக்கொண்டே இரு!

உள்நாட்டில் என்ன சம்பாத்தியம்? வெளிநாட்டுக்குப் போ. அங்கே இன்னும் நிறைய சம்பாதிக்கலாம். இன்னும் அதிகமான வசதிகளைத் தேடிக்கொள்ளலாம்.

அதன்பிறகு... இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நீயே சொந்தமாகத் தொழில் தொடங்கலாம், கல்வி நிலையம் தொடங்கலாம். கல்வி நிலையங்கள் இன்றைக்கெல்லாம் எவ்வளவு பெரிய தொழில் தெரியுமா?

இப்படி வாழ்க்கை என்பதே நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம், எவ்வளவு பணம் வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் மதிப்பிடப்படுகிறது.

பணம், படாடோபம், பெரிய கார், பெரிய கட்டடம்... இவைதாம் வெற்றிகரமான வாழ்க்கை என்று சந்தைச் சமூகம் நமக்குத் திரும்பத் திரும்பக் கற்றுக்கொடுக்கிறது. எனவே, பெரிய மனிதராக வேண்டுமானால் பணம் நிறையவேண்டும் என்கிற குறிக்கோளை நோக்கி ஓடத் தொடங்குகிறோம். முட்டி மோதி முன்னேறப் பார்க்கிறோம். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னேறுகிறோம். மற்றவர்களை ஏமாற்றிக் குறுக்கு வழிகளைக் கையாளவும் நாம் தயங்குவதில்லை. ஏன்? நம் நண்பர்கள், உறவினர்களைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லாமல் போகிறது. பெற்றோரைப் பற்றிச் சிந்திக்க மறந்து போகிறோம். குடும்பத்தோடும் பிள்ளைகளோடும் நேரம் செலவிடக்கூட முடியாமல் போகிறது.

ஓயாத உழைப்பு... ஓயாத போட்டி... நம்மைச் சுற்றி பொறாமை...  சூழ்ச்சி... பகை...! நாம் பலவகைகளில் தனிமைப்பட்டுப் போகிறோம். உயர தனிமை, கவலை, சோர்வு, மன அழுத்தம். இப்படிப் பல சிக்கல்களைச் சந்திக்கின்றோம்.

மிகுந்த உற்சாகத்தோடும் துடிப்போடும் வாழ்க்கையைத் தொடங்கும் பல இளைஞர்களும் இளம்பெண்களும் இன்று இந்தவகை மனச்சோர்விற்குச் சுலபமாகப் பலியாகிப் போகின்றனர்.

வாழ்க்கையில் பணம் தேவைதான்; நம் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ற அடிப்படை வசதிகளும் தேவைதான்; ஆனால், பணமும் வெற்றியும் மட்டும் மகிழ்ச்சியாகிவிட முடியாதுமகிழ்ச்சி என்பது மன நிறைவிலும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் நாம் கொண்டிருக்கும் நல்லுறவிலும்தான் இருக்கிறது.

இளம் வயதில் நாம் நன்றாக உழைக்கவேண்டும்; ஒவ்வொரு நாளும் உழைக்கவேண்டும்; சந்தேகமில்லை. ஆனால், அப்படி உழைப்பதற்குத் தகுந்த முறையில் நம் உடலையும் மனநிலையையும் கவனமாகக் காத்துக்கொள்ளவேண்டும். இதுவும் முக்கியம்.

ஒவ்வொரு நாளும் நல்ல உணவு, கொஞ்சம் உடற்பயிற்சி, கொஞ்சம் வழிபாடு அல்லது தியானம், உறவாடக் கொஞ்சம் நேரம், தினமும் நல்ல ஓய்வு, தூக்கம்...

தேவையற்ற நட்பு, அளவுக்கதிகமான தொலைப்பேசி உரையாடல், புகை, மது, போதை...  இப்படியெல்லாம் நம் உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கக்கூடியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டால் நன்றாக உழைக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்தந்த வேலைகளைச் செய்து முடிக்கலாம்.

தினமும் உழைக்கலாம். நீண்ட நாள்கள் உழைக்கலாம். மற்ற சக நண்பர்களோடு கூட்டாகப் பணிசெய்து முன்னேறவும் நிறைய வாய்ப்பிருக்கிறது. சில வேலைகளில் அவ்வப்போது போட்டி தவிர்க்க முடியாததுதான். அப்போதும் நாம் குறுக்கு வழிகளையோ, தவறான வழிகளையோ தேடிச் செல்வதைத் தவிர்க்கவேண்டும். நேர்மையான பாதையில், நிதானமாக நீண்ட நாள் நம்மால் உழைக்க முடியும். படிப்படியாக மனநிறைவோடு முன்னேறவும் முடியும். நம் குடும்பத்தோடும் பெற்றோருடனும் பிள்ளைகளோடும் தினமும் நேரம் செலவிடவேண்டும். இவர்களோடு நாம் செலவிடுகின்ற நேரங்கள் மகிழ்ச்சியானவை, மனநிறைவு தருபவை.

வெற்றியும் மகிழ்ச்சியும் வாழ்வின் இரண்டு பக்கங்கள். மகிழ்ச்சி இல்லாத வெற்றி அர்த்தமற்றது. வெற்றி இல்லாத மகிழ்ச்சி நிலைத்து நிற்க முடியாதது.

மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தொலைத்துவிட்டு வெற்றியின் உச்சியைத் தொட முயல்வதில் பயனில்லை. கண்களை விற்றுச் சித்திரம் வாங்கி என்ன பயன்? இதை எப்படிப் பார்ப்பது? எப்போது பார்ப்பது?

வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் சமமாக மதிப்பளிப்பேன். என் பணியில் வெற்றி பெற்று முன்னேற முயல்வேன். ஆனால், அதற்காக என் உடல் நலம், மன அமைதி, நல்ல குடும்ப உறவு, நட்பு ஆகியவற்றை விட்டுக்கொடுக்கமாட்டேன்.