முதன்மை ஆசிரியர் அன்புத்தந்தை இராஜசேகரன் அவர்களே,
வணக்கம்!
‘செய்தியைத் திரட்டுவதிலும் பரப்புவதிலும் ஒழுக்க நெறிகளையும் தனிமனிதரின் முறையான உரிமைகளையும் மாண்பையும் நுணுக்கமாகக் காக்கவேண்டும்’ என்று
(அச்சு) ஊடகத்தின் பணி நெறியை 2-ஆம் வத்திக்கான் சங்கம் வரையறுத்துத் தந்துள்ளது (சமூகத் தொடர்புக் கருவிகள்: எண்- 5). இந்தப் பின்னணியில்...
• ‘கூர்முனைப் புரட்சியால்
சீர்மிகு உலகமைப்போம்’ என்ற
இலட்சிய வேட்கையுடன் தொடங்கப்பட்ட ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழ் ஆகஸ்டு 15-ஆம் நாள் ஓராண்டை நிறைவு செய்கிறது.
• 5 இலட்சம் வாசகர்களை
முதல் ஆண்டிலேயே இவ்விதழ் கடந்துள்ளது என்பது ஓர் இமாலய வளர்ச்சி! 4 அல்லது 5 பக்கங்கள்தான். எனினும், இதழின் கட்டமைப்பு ஆச்சரியமளிக்கிறது.
• திருத்தந்தையின் பணிகள், பகிர்வுகள், மடல்கள், வத்திக்கான் வழிகாட்டுதல்கள், உலக, தேசிய, மாநிலத் திரு அவைச் செய்திகள், முக்கிய
சமூக, அரசியல்
நிகழ்வுகள், அவை பற்றிய நடுநிலைத் தவறா கிறித்தவ நோக்கிலான அலசல்கள், ஆய்வுகள், காலத்திற்கேற்ற இறையியலாக்கச் சிந்தனைகள், முக்கியமான நீதிமன்றத் தீர்ப்புகளின் சுருக்கமான பதிவுகள், அவ்வப்போது, வேலைவாய்ப்புக்கான
தகவல்கள்... இவற்றினூடே பொருத்தமான புகைப்படங்கள்... அனைத்தும் சிறப்பு!
• முக்கியச் செய்திகளின் ஆழ, அகலங்களைத் தேவையான அளவு வடிகட்டி, அவற்றின் சுருக்கத்தை வீரியம் குறையாமல் இரு வரிச் செய்திகளாகத் தருவது அழகோ அழகு! (அதிலும் உலகம், இந்தியா, தமிழ்நாடு என்ற ‘பாத்திக் கட்டுதல்’
வேறு).
• முதல் பக்கத்தின் இடப்புறம் ‘உள்ளே’ என்ற பகுதி முன்னோட்டமாக இடம்பெற்றுள்ள செய்திகளுக்கு முகமன் கூறுவது தனி அழகு!
• இதழின் வடிவமைப்பு (Lay-out) பார்வைக்கு
இதமாக உள்ளது என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
• இதழில் இடம்பெறும் ஒவ்வொரு தலைப்பும், அதன் அடுத்த வரியில் பயன்படுத்தப்படும் சிறிய
வடிவிலான (Small Font) தலைப்பின்
தொடர்ச்சியும் வாசிப்புக்கு வளம் சேர்ப்பவை!
• ‘எதிர்நோக்கு ஏமாற்றம்
தராது’, ‘நான்
உன்னை அன்பு செய்கிறேன்’, ‘மகத்தான
மானுடம்’ போன்ற
திருத்தந்தையரின் அண்மைக்கால மடல்களின் விழுமியங்களைத் தாங்கிய தலையங்கங்கள் இறையாட்சிப் பணிக்கான புதிய திசைகளை அடையாளம் காட்டுகின்றன.
• அடர்த்தி மிக்க செய்தியைக் கூட அதன் பொருளைச் சிதைத்துவிடாமல், மிகவும் எளிமையாக வடிவமைக்கும் கலை உங்களுக்குச் சிறப்பாக வசப்பட்டுள்ளது.
• இதழ் முழுவதும் துலங்கி விரியும் தூய தமிழின் நறுமணத்தில் பூரித்துப்போகிறேன். வடமொழிக் கலப்பு சிறிதளவும் இல்லை. சில தமிழ் சொற்களைப் புதிதாகக் கற்றுக்கொண்டேன் என்பது என்னளவில் உண்மை.
• ‘பாலியம்’ (Pallium) என்பதை ‘திரு நேரியல்’ என்றும், ‘பரிபாலகர்’
(apostolic
administrator) என்பதை ‘திருத்தூதரக நிர்வாகி’
என்றும் மிகவும் பொருத்தமாகத் தமிழ் மாற்றம் செய்திருக்கிறீர்கள்.
நிறைவாக...
• அதிகாலை 5.00 மணியளவிலேயே மின்னஞ்சல் நாளிதழை வெளியிடும் அதிசயம் நாள் தவறாமல் சரியாக எப்படி நடக்கிறது?
• உங்களின் துணை ஆசிரியர்கள் அருள்தந்தை ஞான சேகரன், அருள்தந்தை பிரின்ஸ், ஆசிரியர் குழுவினர், உடன் ஊழியர்களின் கடின உழைப்பையும், தகைசால் அர்ப்பணிப்பையும் கண்முன் காண்கிறேன். நித்திரையைத் தொலைத்தவர்களுக்கே இத்தனையும் சாத்தியம்.
• ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியிலும் உணர்வையும் சிந்தனையையும் இடைவிடாமல் ஒருமுகப்படுத்தும் கடுந்தவம் இது. ஒரு வாக்கியத்தில் சொல்வதென்றால், மின்னஞ்சல் நாளிதழைப் பெற்றெடுக்கும் பிரசவ வேதனையை நாள்தோறும் அனுபவிக்கும் அதிசயத் தாய் நீங்கள்!