news-details
சிறப்புக்கட்டுரை
இளைஞனே! எங்கே உனது ஆற்றல்?

மனிதன் தொடக்கத்தில் சமூகமாகச் சேர்ந்து வாழத் தொடங்கியபொழுது நாகரிகம் வளர்ச்சி அடைந்தது என்பது  அனைவரும் அறிந்ததே. அந்த வளர்ச்சி ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் வழியாக அதாவது, தேவையைக் குறித்து அல்லது அவர்களின் அவசியத்தை உணர்ந்து வாழ்ந்ததன் வழியாக மனிதனின் பண்பு நலன்களும் அங்கே வளர்ச்சி அடைகிறது. இவ்வாறாக மனிதனின் வாழ்வில் தொழில்நுட்பமும் புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

தமிழ்ச்சமூகம் தோற்றமும் இயக்கமும்

தமிழ் மண்ணில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதர்கள் வாழ்ந்தது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சிறப்பாக, அண்மையில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடியில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலேயே செழிப்பான பெருநகர நாகரிகம் மற்றும் தமிழ்-பிராமி எழுத்துமுறை இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சங்க காலம் தொடங்கி, அயல் நாட்டவரின் வருகை மற்றும் சுதந்திரப் போராட்டம் என அனைத்துக் காலகட்டங்களிலும் தமிழ் மக்களும் மிகத் திறமையாகச் செயல்பட்டவர்கள், சிறப்பாகப் பேசப்பட்டவர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஏன், இன்றளவும் தமிழ்நாடு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது என்பதும் பெருமைக்குரியதே!

இளம்பருவத்தினரின் ஆற்றலும் பங்களிப்பும்

இளைஞர்கள் மறுக்க முடியாத, மறைக்க முடியாத மிகப்பெரிய சக்தி என்பதை நாம் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறோம்; அதைப் பல நேரங்களில் கண்டும் வியந்திருக்கிறோம். மறைந்த மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், கேரள மாநிலத்தில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிக் கொண்டிருந்தபோது, மாணவன் ஒருவன் இவ்வாறாக அவரைக் கேட்கிறான்: “இந்தியாவினுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன?” அதற்கு அப்துல் கலாம் இவ்வாறாகப் பதில் கூறினார்: “நீங்கள்தான்.” அதாவது ஆறு கோடி இளைஞர்தான் இந்தியாவின் பலம் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் வரலாற்றில் மொழி, இனம், நிலம், சமூகநீதி மற்றும் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் உலக அளவில் கவனம் ஈர்த்தவை. சுதந்திரப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம், ஈழத்தமிழர்களின் வாழ்விற்கான போராட்டம், தமிழ் சமூகத்தின் போர்க்குணத்தையும், உரிமைக்கான சமரசமற்றக் குரலையும் வெளிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியப் போராட்டங்கள் ஆகும். சிறப்பாக, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் (2017) தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒற்றுமையும் உறுதியும் ஒன்றிய-மாநில அரசுகளைச் சட்டத்திருத்தம் கொண்டு வரச்செய்து, ஜல்லிக்கட்டு தடையை வெற்றிகரமாக நீக்க வைத்தது

திசைமாறும் இளைய சமுதாயம்

இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒரு பகுதி, சமூக வலைதளங்களின் (Reels) மாய உலகத்தில் தங்களது விலைமதிப்பற்ற நேரத்தை வீணடித்து, எண்மத் தொழில்நுட்ப (Digital) அடிமைத்தனத்திற்கு ஆளாகி வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய போதைப்பொருள் பழக்கம் அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை அச்சுறுத்துவதோடு, குற்றச்செயல்களிலும் தள்ளுகிறது. மேலும், ஆழமான அரசியல் மற்றும் சமூகப் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல், மேலோட்டமான தகவல்களை நம்பி திசைதிருப்பப்படும் இவர்கள், சினிமா மற்றும் அரசியல் நடிகர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி, தங்களது உண்மை வாழ்க்கையை அழித்தும் தொலைத்தும் வருகிறார்கள் என்பது பெரும் கவலைக்குரியது.

மாறிவரும் தமிழ்நாட்டு இளையோரின் சவாலான மறுபக்கத்தைப் போல, மறுபுறம் தலைநகர் டெல்லியில் வடமாநில இளைஞரும், மாணவரும் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகளுக்கு (NEET & National Education Policies) எதிராகத் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். முறையான கல்வி உரிமை, வினாத்தாள் கசிவுகளுக்கு நீதி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் தீவிரமான கேள்விகளுடன், ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வீதிகளில் அவர்கள் நடத்தும் இந்தப் போராட்டங்கள் நாட்டின் கல்விச் சீர்திருத்தத்திற்கான வலுவான குரலாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

கொண்டாட்டங்களும் கொண்டாடும் முகங்களும்

போதைக் கலாச்சாரம், ரீல்ஸ் மாயை மற்றும் குருட்டுத்தனமான நடிகர் வழிபாடுகள் என இன்றைய தமிழ்நாட்டு இளையோரின் வாழ்வு திசைமாறிச் சென்றாலும், போராடும் மரபும், உரிமை மீட்பின் வரலாறும் கொண்ட தமிழினத்தின் இரத்தம் ஒருபோதும் உறையாது. ஜல்லிக்கட்டுக்காகவும், இந்தித் திணிப்பிற்கு எதிராகவும், ஈழத்தமிழர் உரிமைக்காகவும் தன்னிச்சையாக விழித்தெழுந்து ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த அதே வீரமிகு இளையோர் இருக்க, இன்று வடமாநில மாணவர்கள்நீட்போன்ற கல்வி உரிமைக்காக நாடாளுமன்ற வீதிகளில் அனல் பறக்கப் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நாம் எங்கே இருக்கிறோம்?

கொண்டாட்டங்களும் கொண்டாடும் முகங்களும் எப்போதுமே நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போவதில்லை; மாறாக, நம் கைகளில் ஏந்தும் புத்தகங்களும், சிந்திக்கத் தொடங்கும் விழிப்புணர்வுமிக்க கேள்விகளுமே மாற்றத்தை உருவாக்கும். எனவே, சுயநல வணிகக் கருத்துகளுக்கும், மாய உலகப் பிம்பங்களுக்கும் அடிபணிந்து வீணாகும் விலைமதிப்பற்ற இளமையை, இனியாவது தடுத்து நிறுத்துவோம். நம் இனத்தின் உரிமைக்காகவும், கல்வி நலனுக்காகவும் மீண்டும் அந்த அர்த்தமுள்ள போராட்டக் களத்திற்குத் திரும்புவோம்.

இனிமேல் கைப்பேசித் திரைகளில் மூழ்கிக் கிடக்காமல், மெய்நிகர் உலகக் கொண்டாட்டங்களை அறவே விலக்குவோம்; போதைப் பழக்கத்திற்கும் போலிப் பிம்பங்களுக்கும் விடை கொடுத்துவிட்டு, சுயசிந்தனையையும் புத்தக வாசிப்பையும் நமது ஆயுதங்களாக மாற்றுவோம். நம்மை நாமே சுயஆய்வு செய்துகொண்டு, தனிநபர் புகழ்ச்சிகளைத் தாண்டி சமூக நலனுக்காகவும், கல்வி உரிமைக்காகவும் குரல் கொடுப்போம். அடிமைத்தனத்தின் அடையாளங்களை உடைத்தெறிந்து, அறிவுப்பூர்வமான பாதையில் புதிய வரலாறு எழுத இன்றே உறுதியேற்போம்.