“உங்கள் இதயம் மகிழ்ச்சியடையும்; அந்த மகிழ்ச்சியை உங்களிடமிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்கள்” (யோவா 16:22).
பேருந்து
நிறுத்தத்தில் ஒரு சாதாரண காலைப் பொழுது. வெயில் இன்னும் முழுமையாக எழவில்லை; காற்றில் இரவின் குளிர்ச்சி இன்னும் மிச்சமிருக்கிறது. பேருந்துக்காகக் காத்திருக்கும் பத்துப் பேர். ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு கைப்பேசி. ஒவ்வொரு முகத்திலும் ஒரு திரையின் நீல ஒளி. யாரும் யாரையும் பார்க்கவில்லை, யாரும் பேசவில்லை.
அந்த
மௌனத்தில் ஒரு வினோதமான தனிமை நிழலாடியது. பத்துப் பேர் அருகருகே நின்றும், பத்துத் தீவுகளாய்ப் பிரிந்து நின்ற தனிமை. அந்த நேரத்தில் ஓரமாய் நின்றிருந்த ஒரு தெரு நாயுடன் சிறு குழந்தை ஒன்று மட்டும் விளையாடிக் கொண்டிருந்தது. அதன் கலகலப்பான சிரிப்பு மட்டும் அந்த மௌனமான இடத்தை ஒரு நொடி உயிர்ப்பித்தது. அந்தக் காட்சி மனத்தில் ஒரு கேள்வியை விதைத்தது: ‘நாம் எப்போது சிரிக்க மறந்தோம்?’
இழந்துபோன மாலை
நேரங்கள்
ஒரு
காலத்தில் வீடுகளின் வாசற்படியில் மாலை நேரங்கள் கழிந்தன. அண்டை வீட்டார் வந்தால் ஒரு தேநீர், இரண்டு சிரிப்புகள், சில நிமிட உரையாடல்... அவ்வளவுதான், வாழ்க்கையை இலகுவாக்கியது. இன்று வீடுகள் பெரிதாகிவிட்டன. அறைகள் அதிகமாகிவிட்டன. ஆனால், அந்த அறைகளுக்குள் ஒலிக்கும் உரையாடல்கள் மட்டும் குறைந்துவிட்டன.
நண்பர்கள்
பட்டியலில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்; ஆனால், மனம் திறந்து பேச ஒருவரைத் தேடி நாம் இன்னும் அலைகிறோம். சமூக வலைத்தளங்களில் சிரிக்கும் புகைப்படங்கள் நிறையவே உள்ளன. ஆனால், உண்மையிலேயே இதயத்திலிருந்து பிறந்த சிரிப்புகள் எத்தனை? திருவள்ளுவர் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார்:
‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக
நட்பது நட்பு’
(குறள் 786)
முகம்
மட்டும் சிரிப்பது நட்பு அல்ல; நெஞ்சம் சிரிக்கும்போதுதான் அது உண்மையான நட்பு. சிரிப்புக்கும் இதே நியதி பொருந்தும். உதடு மட்டும் வளையும் சிரிப்பு அல்ல; உள்ளம் நிறையும் சிரிப்புதான் உண்மையானது.
சிரிப்பு
என்பது உதட்டின் அசைவு மட்டுமல்ல; அது உள்ளத்தின் அமைதியின் வெளிப்பாடு. மனத்தில் சுமைகள் அதிகரிக்கும்போது, சிரிப்பு மெதுவாக நம்மை விட்டு விலகுகிறது, காற்றில் மெல்ல அணையும் ஒரு விளக்கைப் போல.
வேலைப்பளு,
பொருளாதாரப் போராட் டம், குடும்பப் பொறுப்புகள், எதிர்கால அச்சம் இவை எல்லாம் நம் முகத்தில் காணாத சுருக்கங்களை உருவாக்குகின்றன. சில நேரங்களில் நாம் வாழ்வதைவிட, வாழ்க்கையைச் சமாளிப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறோம்.
இயேசு காட்டிய
மகிழ்ச்சி
இயேசுவின்
வாழ்வைத் திரும்பிப் பாருங்கள்... அவர் துன்பங்களை மறுக்கவில்லை. கண்ணீர் சிந்தினார் (யோவா 11:35). சிலுவையையும் சுமந்தார்; ஆனாலும், அவர் சந்தித்த ஒவ்வொருவரிடமும் நம்பிக்கையை விதைத்தார்; கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்துபோன நேரத்திலும், அவர் அந்த விருந்தின் மகிழ்ச்சியைக் காப்பாற்றினார் (யோவா 2:1-11). சிறு பிள்ளைகள் தம்மை நெருங்குவதைத் தடுத்த சீடர்களைத் திருத்தி, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள்” என்று அன்புடன் அழைத்தார். சோர்ந்து, சுமை தாங்காதவர்களிடம், “சுமை சுமப்போரே, எல்லோரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று அழைத்தார் (மத் 11:28). இயேசுவின் அருகில் இருந்தவர்கள் பயத்துடன் அல்ல; நம்பிக்கையுடன் திரும்பிச் சென்றார்கள். அவருடைய இருப்பே ஒரு மகிழ்ச்சியைப் பரப்பியது - வார்த்தைகளால் அல்ல, இருப்பால்!
தாத்தாவின் புன்னகை
சில
வருடங்களுக்கு முன்பு ஒரு முதியவரைச் சந்தித்தேன். வயது எண்பதைக் கடந்திருந்தது. கைகள் நடுங்கின, கண்கள் மங்கின. உடல்நலம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனாலும், அவர் முகத்தில் எப்போதும் ஒரு மென்மையான புன்னகை தவழ்ந்தது. பொய்யில்லாத, பலவீனமில்லாத, அமைதியான ஒரு சிரிப்பு.
ஆவலுடன்
கேட்டேன்: “தாத்தா, இவ்வளவு வயதிலும் இப்படிச் சிரிப்பதற்குக் காரணம் என்ன?”
அவர்
கண்களை மூடி அமைதியாகச் சொன்னார்: “பிரச்சினைகள் இல்லாததால் அல்ல;… ஒவ்வொரு நாளும் கடவுள் என்னோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதால்தான்.”
இந்த
ஒரு வரி பல புத்தகங்களும் சொல்லாத
ஓர் உண்மையை என் முன் திறந்து வைத்தது.
தவறான இடங்களில்
தேடும்
மகிழ்ச்சி
இன்று
நாம் மகிழ்ச்சியைத் தேடுவது தவறான இடங்களில். புதிய கைப்பேசி வந்தால் மகிழ்ச்சி வரும் என்று நினைக்கிறோம். சம்பளம் உயர்ந்தால் வாழ்க்கை மாறிவிடும் என்று நம்புகிறோம். அனைவரும் நம்மைப் பாராட்டினால் மட்டுமே நிறைவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இவை அனைத்தும் சில நாள்கள் மட்டுமே நீடிக்கும். நிலையான மகிழ்ச்சி பொருள்களில் இல்லை; அது உறவுகளில் உள்ளது. இறைவனோடு இருக்கும் உறவு, குடும்பத்தோடு பகிரும் அன்பு, நண்பர்களோடு பகிரும் நேரம்... இவைதான் மனத்தை உண்மையில் சிரிக்க வைக்கின்றன.
மீண்டும் சிரிக்க
மூன்று
சிறிய
முயற்சிகள்
• தினமும் ஒருவரையாவது புன்னகையுடன் வாழ்த்துங்கள்.
•
ஒரு புன்னகை பல நேரங்களில் ஒரு
செபத்தை விட அதிக ஆறுதலை அளிக்கலாம்.
• குடும்பத்துடன் கைப்பேசி இல்லாத சில நிமிடங்களை உருவாக்குங்கள்.
இந்தச்
சிறு உரையாடல்கள் நாளடைவில் விலைமதிப்பற்ற நினைவுகளாக மாறும். நன்றியுடன் நாளை முடியுங்கள். இன்று நடந்த ஒரு நல்ல விசயத்தை நினைத்து இறைவனுக்கு நன்றி கூறுங்கள். நன்றியுணர்வு உள்ளத்தில் மகிழ்ச்சியை மீண்டும் மலரச் செய்கிறது.
உலகம்
இன்று வேகமாக ஓடுகிறது. ஆனால், அந்த வேகத்தில் நம் சிரிப்பை இழந்துவிடக் கூடாது. பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடைக்காது. ஆனால், பிரச்சினைகளுக்கிடையிலும் புன்னகைக்கக் கற்றுக்கொள்ளும் மனம் கிடைக்கலாம். அது பணத்தால் வாங்க முடியாத பரிசு! அது இறைவன் தரும் அருள்! முகத்தில் தெரியும் புன்னகை சில நொடிகள் மட்டுமே வாழலாம்; ஆனால், இறைவனை நம்பும் இதயத்தில் பிறக்கும் மகிழ்ச்சி, வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.
இறைவா,
எங்கள் முகங்களில்
மீண்டும்
புன்னகையை
மலரச்
செய்யும்.
எங்கள்
இதயங்களில்
நிலைத்த
மகிழ்ச்சியை நிரப்பும்!