தென்னிந்தியத் திரு அவையின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பாரிஸ் மறைபரப்புச் சபையின் பங்கு அளப்பரியது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத நிலையிலும் MEP அருள்பணியாளர்களின் அரிய முயற்சியால், தியாகத்தினால் உருவானதுதான் இம்மறைப்பணித்தளம். ஊடகங்களின் தாக்கம் பெரிதளவு இல்லாத சூழலிலும் அவற்றின் வழியாக ஒரு பெரும் தாக்கத்தை இம்மண்ணில் உருவாக்கியவர்கள் இவர்கள். காட்சி ஊடகத்தின் வழி நற்செய்தியைப் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்ற பெருமை இவர்களையே சாரும்.
1951-ஆம் ஆண்டு
திண்டிவனம் நடுநிலையத்தின் மேலாளராகப் பொறுப்பேற்றார் அருள்திரு. பெக்கர். இவரின் ஆர்வத்தைக் கண்ட அன்றைய பேராயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் 1957-இல் மறைக்கல்வியில் சிறப்புப் பயிற்சி பெற்றுவர பெல்ஜியத்திற்கு அனுப்பப்பட்டார். பயிற்சி முடித்து வந்த அருள்திரு. பெக்கர், பேராயரிடம் ஏழு முன் மொழிவுகளைச் சமர்ப்பித்தார். அவற்றில் ஒன்றுதான் பொதுமக்கள் தொடர்புக்கான நவீன ஊடகங்களைப் பயன்படுத்தி நற்செய்திக் கல்விப்பணி நிலையம் ஒன்றை நிறுவுதல். அவ்வாறு 1960-இல் திண்டிவனத்தில் உருவானதுதான் தமிழ்நாடு
ஒலி-ஒளி கல்வி நிலையம். இதன் வழியாக மறைப்பணி, உலகியல் கல்வி, தொழில்வளம், சமுதாய நலம், உழவு, பண்பாடு ஆகியவற்றை விளக்கும் திரைப்படங்கள், ஒளிப்பட வில்லைகள் (Flim Slides), ஒலிப்பதிவு
நாடாக்கள் ஆகியவற்றைத் தயாரித்து, அதன் வழியாக மக்களின் அறியாமையை நீக்க முனைந்தனர்.
அருள்திரு. எட்மெண்ட்
பெக்கர்
MEP
இருபதாம்
நூற்றாண்டின் நற்செய்தி அறிவிப்புப் பணியில், கலை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை மிக ஆழமாக உணர்ந்த ஓர் இறைவாக்கினர் அருள்திரு. எட்மண்ட் பெக்கர் ஆவார். பிரான்ஸ் நாட்டின் மெட்ஸ் (Metz) நகரில்
1921-ஆம் ஆண்டு பிறந்து, 1947-இல் குருவாக அருள்பொழிவு பெற்ற இவர், பாரிஸ் மறைபரப்புச் சபையின் (Missions Etrangeres de
Paris) வழியாக
இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். 1948 முதல்
1968 வரை புதுச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்டத்தில் இவர் ஆற்றிய பணிகள் இந்தியத் திரு அவையின் தகவல் தொடர்பு வரலாற்றில் ஒரு பொற்காலமாகும்.
நற்செய்தி அறிவிப்பும்,
ஊடகப்
புரட்சியும்
(Mobile
Mission)
அருள்திரு.
பெக்கர் புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்டத்திற்கு வந்த காலகட்டத்தில், கிராமப்புற மக்களுக்கு நற்செய்தியையும் கல்வியையும் கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. திண்டிவனத்தில் புகழ்பெற்ற மறைக்கல்விப் பள்ளியை (Catechist School), அருள்திரு
ஆன்ரூ காரோஃப் (Fr. Andru Carof) அவர்களுடன்
இணைந்து வழிநடத்திய இவர், திண்டிவனத்தை மையமாகக் கொண்டு புதிய ஊடகப் புரட்சியைத் தொடங்கினார். அதுதான் நடமாடும் மறைபரப்புப்பணி.
அருள்திரு.
தாமஸ் காவன் டஃபி அவர்களால் தொடங்கப்பட்ட இப்பள்ளியை, பெக்கர் ஒரு நவீன ஊடகப் பயிற்சி மையமாக மாற்றினார். தந்தை பெக்கரின் பணியின் மற்றோர் அம்சம் என்னவென்றால், இவரும், இவரது குழுவும் மறைக்கல்வி முறைகளைக் காட்சி - கேள்வி ஊடகங்களுக்கு ஏற்பப் புதுப்பித்தனர். அதற்குத் தேவையான புத்தகங்களைத் தயாரித்து திருவிவிலிய மற்றும் வழிபாட்டுப் போதனைகளை ஊக்குவிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினர். மறைக்கல்வி, திருவிவிலியம் மற்றும் வழிபாடு ஆகிய மூன்றும் இவரது சிந்தனையில் ஒன்றாகவே இருந்தன.
நடமாடும் சினிமா
(Mobile
Cinema)
அருள்திரு.
பெக்கர் ஒரு தனிப்பட்ட வாகனத்தை வடிவமைத்து, அதில் படம் ஒளிபரப்பும் கருவிகள் (Projector) மற்றும்
ஒலிபெருக்கிகளை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் தோறும் சென்றார். இரவில் திறந்த வெளிகளில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தமிழ் மொழியில் ஆன்மிக மற்றும் சமூக விழிப்புணர்வுப் படங்களைத் திரையிட்டார். மேலும், திண்டிவனத்தில் புத்தகங்கள், சிறப்பு இதழ்கள், குரல் பதிவு விளக்கங்களுடன் கூடிய ஸ்லைடுகள் மற்றும் பல்வேறு திரைப்படங்களை உள்ளடக்கிய மறைக்கல்வி வள மையத்தை அமைப்பதில்
தந்தை பெக்கர் வெற்றி பெற்றார். இந்தப் பொருள்கள் அனைத்தையும் தென்னிந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களில் உள்ள ‘நடமாடும் மறைப்பணி’
குழுக்கள் கடனாகப் பெற்றுப் பயன்படுத்த முடிந்தது.
இந்திய இறையியலாளர்களின்
வழிகாட்டி
இரண்டாம்
வத்திக்கான் சங்கத்திற்குப் பிந்தைய இந்தியத் திரு அவையின் மிக முக்கியமான இறை யியலாளரான அருள்திரு. D.S. அமலோற்பவதாஸ் அவர்களுக்கு
அருள்திரு. பெக்கர் ஆரம்ப காலத்தில் சிறந்த வழிகாட்டியாக விளங்கியிருக்கிறார். அருள்திரு. பெக்கரின் ஊடகப் பணிகளால் ஈர்க்கப்பட்டே அருள்திரு. அமலோற்பவதாஸ் பிற்காலத்தில் பெங்களூரில் புகழ்பெற்ற NOCLC மையத்தை
நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காட்சி ஊடகப்
பணியின்
முன்னோடி
சாதாரண
மக்களுக்கு எழுத்துகளைவிட, காட்சிகளும் ஒலிகளும் மிக வேகமாகச் சென்றடையும் என்பதை அருள்திரு. பெக்கர் உறுதியாக நம்பினார். வெறும் திரைப்படங்களைக் காண்பிப்பதோடு நின்றுவிடாமல், அவரே சொந்தமாகத் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினார். திண்டிவனத்தில் ஒரு சிறிய திரைப்படக் குழுவை உருவாக்கி, உள்ளூர் இளைஞர்களுக்கும், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கும் புகைப்படக் காட்சி, ஒலியமைப்பு போன்ற தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கினார்.
தன்
வாழ்நாளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்களை அருள் திரு. பெக்கர் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் திருவிவிலியக் கதைகளை மையமாகக் கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இவரது ஊடகப்
பணியின் வெற்றியைப் பார்த்த உலகத் திரு அவை,1968-ஆம் ஆண்டு இவரை மீண்டும் ஐரோப்பாவிற்கு அழைத் தது. அங்கு சர்வதேச கத்தோலிக்கத் திரைப்பட அமைப்பில் (OCIC - International Catholic Office for Cinema) இணைந்து, உலகளாவிய கத்தோலிக்க ஊடகப் பணிகளுக்குத் தலைமை தாங்கினார்.
பாரிஸ் IRFA ஆவணக்காப்பகமும், பெக்கரின்
வரலாற்றுச்
சுவடுகளும்
அருள்திரு.
பெக்கர் 1981-இல் மறைந்தபோதிலும், அவர் விட்டுச் சென்ற ஊடகச் சொத்துகள் இன்றும் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் உள்ள பிரான்ஸ் - ஆசியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IRFA - Institute de Recherche France-Asia) பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அருள்திரு.
பெக்கர் பயன்படுத்திய அரிய 16 சுருள்படங்கள், தமிழ்நாட்டுக் கிராமங்களில் அவர் பதிவு செய்த மக்கள் மற்றும் மண் சார்ந்த வழிபாட்டுப் பாடல்கள் மற்றும் 1950-களின் தமிழ்நாட்டு வாழ்வியலை விவரிக்கும் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் இந்த ஆவணக்காப்பகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அருள்திரு.
எட்மண்ட் பெக்கர் வெறும் ஒரு மறைபரப்பாளர் மட்டுமல்லர்; அவர் ஒரு சிறந்த கலைஞர், தொலைநோக்குச் சிந்தனையாளர் மற்றும் புதுவை - கடலூர் உயர் மறைமாவட்டத்தின் நவீன ஊடகத் தந்தை. இன்று நாம் திரு அவையில் பயன்படுத்தும் நவீன சமூகத் தொடர்பு சாதனங்கள் அனைத்திற்கும், 70 ஆண்டுகளுக்கு முன்பே திண்டிவனம் மண்ணில் விதையிட்டவர் இந்த உன்னத இறைப்பணியாளர்.