இந்திய அரசியலில் என்ன நடக்கிறது? கரப்பான் பூச்சிக் கூட்டம் கேள்வி கேட்கிறது. ‘மீம்ஸ்’ வழி நையாண்டி செய்கிறது. சமூக ஊடகங்களில் நான்கு இலட்சம் பதிவுகளையும், இரண்டு கோடி பின் தொடர்பாளர்களையும் கொண்ட இந்த இளைஞர் கூட்டம் யார், எப்படி, எங்கு இருக்கிறார்கள்?
காகிதத்தில்
செய்யப்பட்ட கரப்பான்பூச்சி உடையணிந்து போராட்டங்களை நடத்துகிறார்கள். தூய்மைப் பணி செய்கிறார்கள். விழிப்புணர்வுத்
துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் தருகிறார்கள். அரசைக் கேலி செய்து ‘மீம்ஸ்’ போட்டுக்
கேலியாய் சிரிக்கிறார்கள்.
யார் இந்த
விவரமான
புதிய
கோமாளிகள்?
2026, மே 15 அன்று
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த், தொழில் முறை பட்டங்கள் குறித்துப் பகிரங்க விசாரணையின் போது வர்ணிக்கிறார்: “எந்த வேலையும் இல்லாத இளைஞர்கள் கரப்பான்பூச்சிகள் போன்றவர்கள்.” அடுத்த நாள் இந்திய இளைஞர்களின் அறச்சீற்றமாக ‘கரப்பான்பூச்சி ஜனதா
தளம்’ எனும்
நையாண்டி அரசியல் இயக்கம் உருப்பெறுகிறது.
தினமும்
அரசைக் கேலி செய்து ஆயிரக்கணக்கான பதிவுகள் சமூக ஊடகங்களில் இந்திய இளைஞர்களால் பதியப்படுகின்றன. மே 21 அன்று கரப்பான்பூச்சிகளின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதளம் அரசால் முடக்கப்படுகிறது. அன்றே ‘கரப்பான்பூச்சி திரும்பிவிட்டது’ என்ற தலைப்பில் புதிய கணக்கில் பதிவுகள் பகிரப்படுகின்றன. சி.ஜே.பி. நிறுவுநர்
அபிஜித் திப்கே, “நீங்கள் எங்கள் சமூக ஊடகக் கணக்குகளை நீக்கலாம்; ஆனால், எங்களை நீக்க முடியாது”
எனச் சவால் விடுகிறார்.
23 மே
அன்று மீண்டும் கரப்பான்பூச்சி இணையம் முடக்கப்படுகிறது. வேறு கணக்கு என ஆட்டம் நடந்துகொண்டே
இருக்கிறது. இந்நிலையில்
சி.பி.எஸ்.சி.
தேர்வு விடைத்தாள் திருத்தம், ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு, ஓ.எஸ்.எம்.
விவகாரம், கல்வித்துறை தொழில்நுட்பக் கோளாறுகள் என தேசத்தின் கல்வி
குறித்த நம்பிக்கை இழப்பு கரப்பான்பூச்சிகளைக் கொதிநிலைக்குத் தள்ளுகிறது.
25 மே
அன்று கரப்பான்பூச்சி கட்சியினர் “ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்” என்று
இணைய வழி மனுக்களை முன்னெடுத்தனர். இந்நிலையில், செயல்பாடுகளுக்கு உதவாது என முடிவெடுத்து
ஜூன் 6 அன்று புதுதில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் எனக் களம் இறங்கினர்.
புதுதில்லியில்
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இன்றைய கல்விமுறை குறித்துக் கவலைகொள்ளும் பெற்றோர் என 2000 பேர் கூடினர். போராட்டம் எட்டு மணி நேரம் அமைதியாக நடந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புப் போராட்டத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சிகளைச் செய்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சி.ஜே.பி.
போராட்டத்தின்போது அண்ணி ராஸா மற்றும் சி.ஜே.பி.
தலைவர்கள்மீது ஆர்.எஸ்.எஸ். தாக்குதல் நடத்தியது எனக் கூறப்படுகிறது. புதுதில்லி காவல்துறை இரு குழுக்களிடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க ஆறு பேர் கைது என்றது. சி.ஜே.பி.
“புதுதில்லி போராட்டம் எங்கள் வருங்காலப் போராட்டங்களுக்கு ஒரு முன்னோட்டம்” (Trailer) என வர்ணித்தது.
தேசிய
அளவிலான இளைஞர்களின் எழுச்சியைத் தலைநகர் தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. மூன்று தேசிய ஊடகங்கள் மட்டுமே செய்திகளைப் பதிவு செய்தன. சமூக ஊடக வழி இந்திய இளைஞர்களைக் கரப்பான்பூச்சி இயக்கம் கவர்ந்துள்ளது என்பதே நிதர்சனம்.
கரப்பான்பூச்சி
அமைப்பு தன் அமைப்பில் இளைஞர்கள் சேர விதிகளை வகுத்துள்ளது. முதலில் இளையோர் வேலைவெட்டியில்லாமல், சோம்பேறியாக
இருக்கவேண்டும். தொடர்ந்து அலைப்பேசியில் ஆன்லைனில் இருக்கவேண்டும் (குறைந்தது 11 மணி நேரம்). எதற்கெடுத்தாலும் புலம்ப வேண்டும்; ஆனால், இங்கு சாதி, மத, ஆண் - பெண் பேதமில்லை என்கிறது. தன்
இணையதளத்தில் ‘இது வேலையற்றவர்கள் மற்றும் சோம்பேறிகளின் அனைத்துக் கரப்பான்பூச்சிகளின் ஒரு தளம்’ எனத் தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்கிறார்கள்.
ஆனால்,
இவர்களது ‘அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு’ சி.ஜே.பி.-யின்
தேர்தல் அறிக்கையே முதல் அடையாளமாகும். ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களவை
உறுப்பினர்கள் பதவி கோரக்கூடாது; உரிய காரணமின்றி ஒரு
குடிமகனின் வாக்கு நீக்கப்பட்டால் தேர்தல் ஆணையர் ‘உபா’
(upua) சட்டப்படி கண்டிக்கப்பட வேண்டும்; தற்போது உள்ள இடங்களின் அடிப்படையில் பாராளுமன்ற அமைச்சரவைகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கவேண்டும்; அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சமூக ஊடக உரிமங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்; சமூக ஊடகக் கருத்துத் திணிப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் மூடப்படவேண்டும்; அரசியல்வாதிகள் கட்சி மாறினால் 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடைசெய்யவேண்டும்
என்பனவாகும்.
பின்
இணைப்பாக, தகவல் அறியும் சட்டம் 2005 முழுமையாகச் செயல்படுத்தவேண்டும். ‘பி.எம்.கேர்’ நிதிபோல,
எக்காலத்திலும் ‘கரப்பான்பூச்சி கேர்ஸ்’ எனும் நிதியைக் கொண்டு வரக்கூடாது என்ற விதிகளும் ஏற்கப்பட்டன.
கரப்பான்பூச்சிகளின்
அரசியல் நிலைப்பாடு என்பது “எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டோம்; எங்கள் கோட்பாடுகளோடு உடன்படும் அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவோம்” என ஓங்கி அடிக்கிறார்கள்.
“எங்கள் இயக்கம் இந்திய இளைஞர்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார, அரசியல்
பிரச்சினைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கும், போராடத் தூண்டும்”
என்கிறார்கள்.
கரப்பான்பூச்சி
ஜனதா தளத்தை அபிஜித் திப்கே என்பவர் நிறுவுநராக இருந்து இயக்கி வருகிறார். இவர் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் தன்னார்வலராகப் பணிபுரிந்தவர். குறிப்பாக, இளைஞர்களைக்
கவரும் ‘மீம்ஸ்’ அடிப்படையிலான டிஜிட்டல்
உள்ளடக்கத்தில் கைதேர்ந்தவர். புதுதில்லி கல்வித்துறை, தகவல் தொடர்பு ஆலோசகராகவும் பணிபுரிந்தவர். இதன் காரணமாக இவர் கல்வி சார்ந்த பிரச்சினைகளை முன்னெடுப்பதும், ‘மீம்ஸ்’-சில் நெத்தியடி அடிப்பதும் நிகழ்வாகி, புதிய வரலாறாகி நிற்கிறது. சி.ஜே.பி.-க்கு
சதுரங்தாஸ், விஜேதா தாஹியா, அசுகோ ரங்கா என்ற மூவரும் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக நிற்கிறார்கள்.
இந்திய
இளைஞர்களின் நீறு பூத்த கோப நெருப்பைப் பற்றவைத்த தலைமை நீதிபதி சூரியகாந்த், “இன்றைய இளைஞர்கள் வளர்ந்த இந்தியாவின் தூண்கள்” என்று சமாதானம் செய்தார். அரசியல் கட்சித் தலைவர்களோ, “வேலையற்ற இளைஞர்களின் வடிகால்தான் சி.ஜே.பி.-யின் மீம்ஸ் அரசியல்” என முட்டுக் கொடுக்கிறார்கள்.
இன்றைய
கல்விமுறை குறித்தும், நுழைவுத் தேர்வுகள் குறித்தும், பெருகிவரும் வேலைவாய்ப்பினைக் குறித்தும் இந்திய இளைஞர்களின் கோபமே கரப்பான்பூச்சி ஜனதா தளத்தின் ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டமாகத் தன்னிச்சையாக வெடித்தது.
ஜூன்
20-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள் புதுதில்லியில் தேசத்தின் போராட்டத்தளமான
ஜந்தர் மந்தரில் குவிந்தனர். ‘நீட்’ தேர்வு
வினாத்தாள் கசிவு, தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படும் உயர் கல்வித் தேர்வு முறைகேடுகள் குறித்துக் குரல் எழுப்பினர். ‘நீட்’ தேர்வு முறைக்கேடால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, ‘நீட்’ உள்பட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் முறைகேடுகளைத் தடுக்க பரந்து விரிந்த, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் எனக் கரப்பான்பூச்சிகள் போராட்டக் களத்தில் ஒன்றுகூடினர். அனைத்துத் தேர்தல் முறைகேடுகளுக்கும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல் வைக்கப்பட்டது.
புதிய
திருப்பமாகச் சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக், மாணவர்களோடு போராட்டக் களத்தில் இணைந்தார். உண்ணா
நிலை எடுத்தார். (26 நாள்கள் தொடர்ந்து உண்ணா நோன்பு, மருத்துவமனையில்
போராட்ட முடிவில்தான் முடிந்தது).
ஜூலை
25 அன்று பாராளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சிகள் நகர்ந்தனர். காவல்துறை அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டது. தடியடி,
கண்ணீர் புகைக்குண்டு வீச்சு என வலிமையான தடுப்புமுறைகள்
நடந்தன. போராடும்
மாணவர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் மாணவர்கள், இளைஞர்கள்
போராட்டக் களத்தில் இறங்கினர்.
போராட்டக்
களத்தில் இருந்த மாணவர்களுக்கு உணவு
‘ஆன்லைன்’ முறையில்
உலகெங்கும் உணர்வுள்ள இந்திய மக்களால் வாரி வழங்கப்பட்டன. ஜந்தர் மந்தரில் மழை பெய்தவுடன் இதே முறையில் மழைக்கோட்டுகள் தரப்பட்டன.
நாடாளுமன்றம்
கூடிய காலம். தடிகளில் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன; காலாவதியான ‘ஆண்சு’ புகைக்குண்டுகள் வீசப்பட்டன; பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கின எதிர்க்கட்சிகள். அந்த நாளை கரப்பான்பூச்சிகளுக்கான ஆதரவு நாளாக எதிர்க்கட்சிகள் கூறின. பா.ச.க.
அரசையும் முடக்கி, மேல்
நடவடிக்கைகளுக்குத் தள்ளின. இறுதியில், பா.ச.க.
அரசு பணிந்தது.
ஜூலை
25 அன்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுகிறார். ஜூலை 26 அன்று 36 நாள்களாக நடந்த கரப்பான்பூச்சிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. தேசியத் தேர்வு முகமையைச் சார்ந்த 42 அதிகாரிகள் பதவி நீக்கம், தேர்வு
முறைக்கேடுகள் குறித்துக் கடுமையான சட்டங்கள் என பா.ச.க. அரசு இறங்கி
வந்தது.
தமிழ்நாடு
கரப்பான்பூச்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாட்டில் இதுபோன்ற நடந்த ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லையென அறிவித்தார். ஆம், ‘நீட்’ தேர்வில் சீர்திருத்தம்வேண்டும் என்பதே கரப்பான்பூச்சிகளின் நிலைப்பாடாகும்.
தமிழ்நாட்டைப்
பொறுத்தவரை அனைத்துத் தரப்பிலும் (மாணவர்கள், அரசியல் கட்சிகள், பெற்றோர்)
‘நீட்’ தேர்வு
கூடாது என்பதாகும். 12 ஆண்டுகளாக உருவாக்கும், தமிழ்நாட்டின் பொதுக் கருத்துக்கு நாளைய நாள்களில் கரப்பான்பூச்சிகளும் வருவார்கள் என்பதைக் காலமே அவர்கள் படும் காயங்களில் அவர்களுக்கு உணர்த்தும். தேசத்தில்
எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதே சரியான நிலைப்பாடாகும். அதற்கே தமிழரின் போராட்டம் என்பதே தேசத்திற்கான நெறிமிக்க வழிகாட்டலாகும்.