news-details
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு (16.08.2026) எசா 56:1,6-7; உரோ 11:13-15;29-32; மத் 15:21-28

திருப்பலி முன்னுரை

எல்லையில்லாத வரங்களையும், அளவில்லாத நலன்களையும் கொடுத்து நம் அனைவரையும் அற்புதமாக வழிநடத்திவரும் இயேசுவின் பெயரால் உங்களைத் திருவழிபாட்டிற்கு மகிழ்வோடு வரவேற்கிறோம்கடுகளவு நம்பிக்கை கடலளவு நன்மை பயக்கும் என்பதை இன்றைய நற்செய்தி நமக்குத் தெரியப்படுத்துகிறது. சில நேரங்களில் நாம் கேட்பது கிடைக்காவிட்டால் நம்பிக்கையில் தளர்ந்துவிடுகின்றோம். கடவுள் நமது தேவையறிந்து தக்க நேரத்தில் தரமானதைத் தருவார் என்ற நம்பிக்கையில் நிலைத்திருக்க அருள் வேண்டுவோம். கானானியப் பெண்ணைப் போன்று விடாமுயற்சியுடன் மண்டியிட்டுஆண்டவரே எனக்கு உதவும்என்று  இயேசுவைசிக்கெனபிடித்துக்கொள்வோம். அவநம்பிக்கை மனநிலையைக் கடந்து, ஆண்டவரிடம் முழுமையாகச் சரணடைவோம்மனத்தில் சந்தேகமின்றி இயேசுவால் அன்றி வேறு எவராலும் குணப்படுத்த முடியாது என்ற கானானியப் பெண்ணின் மனநிலையை நமதாக்குவோம். ‘நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்என்று இயேசு இன்று நம்மைப் பார்த்துக் கூறுகின்றார். நல்லதையே நினைப்போம்; நல்லதையே விதைப்போம்; நல்லதை மட்டுமே நாடுவோம்நொடிப்பொழுதும் கைவிடாது காத்துவரும் இயேசுவிடம் தஞ்சமாவோம். உயிரைக் கொடுத்து திருமறையை வளர்த்த இயேசுவின் சீடர்களிடம்  விளங்கிய ஆழமான நம்பிக்கை நம்மிலும் வளர்ந்திட இணைந்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

கடவுளின் அழைப்பைப் பெற்று உண்மையை நிலைநாட்டி, ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, நேர்மையுடனும், இறைநம்பிக்கையுடனும்  வாழும்போது கடவுளின் உடனிருப்பு நம்மோடு இருக்கும். உள்ளம் என்னும் ஆலயத்தை ஆண்டவர் வாழும் இல்லமாக மாற்றும்போது அவருடைய இரக்கம் நம்மை வழிநடத்தும். அவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது அவர் அனைத்துத் தீங்கினின்றும் காத்திடுவார் என்று கூறி  இறைமதிப்பீடுகளின் வழியில் பயணிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுள் தாம் விடுத்த அழைப்பையும், கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஏனெனில், அவர் இரக்கமும் கனிவும் உடையவர். கடவுளின் அருள்கொடைகளான அன்பு, அமைதி, மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு, நம்பிக்கை இவற்றை நமது வாழ்வில் கடைப்பிடித்து, கடவுளின் ஆசிபெற்ற மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. நம்பிக்கையின் ஆண்டவரே! உம்மீது கொண்ட நம்பிக்கையால் உமக்காகத் தங்களையே அர்ப்பணித்த எம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் அனைவரும் காலத்தின் தேவைக்கேற்ப கருத்துடன் பணிசெய்திடவும், கலக்கமின்றி துணிச்சலோடு நற்செய்தியை அறிவிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உடன் வாழும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் உம்மிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்ட இந்த வாழ்க்கைக்காக நன்றி கூறுகின்றோம். அன்பிலும் பண்பிலும் பகிர்விலும் ஒவ்வொரு நாளும் வளர்ந்திடவும், உம்மீது கொண்ட நம்பிக்கையில் நிலைத்திடவும் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியின் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நோக்கம் அறிந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், அனைத்து வளங்களையும் கொண்ட எம்  நாட்டை வழிநடத்திடவும், மக்கள் என்ற சொத்தைக் காப்பதில் கருத்துடன் செயல்படவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! எங்கள் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் ஒற்றுமையுடன் வாழவும், அன்பியக் கூட்டங்களிலும், திருவழிபாட்டு நிகழ்வுகளிலும் ஆர்வத்தோடு நாங்கள்  பங்கேற்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.