news-details
ஆன்மிகம்
தோமா கால் பதித்த தேசம் – 06

சிறிது காலம் கழித்து அரசன் வீரன் ஒருவனை அனுப்பி தோமாவிடம், “அரண்மனை கட்டும் பணி எந்த நிலையில் இருக்கிறது?” என்பது குறித்து விசாரித்து வரக் கூறினான். தோமா அவனிடம்அரண்மனைக்கான பெரும் பகுதி வேலைகள் முடிந்துவிட்டன. இன்னும் மேற்கூரை அமைக்க வேண்டியதுதான் பாக்கிஎன்று கூறி அனுப்பினார். மனம் மகிழ்ந்த அரசன் மேலும் நிறைய பணத்தைக் கொடுத்தனுப்பினான். ஏழைகளுக்கு உதவ இறைவன் கொடுத்த வாய்ப்பாக இதனைக் கருதிய தோமா, இறைவனுக்கு நன்றி கூறினார். அப்பணத்தை எடுத்துக்கொண்ட தோமா, மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கினார்.

ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் ஆகியோரைச் சந்தித்து உதவிகள் செய்யலானார். மேலும், அவர்களிடம் இறைவன்தாமே அந்த மக்களுக்கு உதவிகள் வழங்குகிறார் என்பதையும் அறிவுறுத்தினார்இயேசு பற்றிய தோமாவின் போதனைகளால் ஏராளமான மக்கள் கிறித்தவச் சமயத்தைத் தழுவினர்.

அரண்மனைப் பணி முடிவடைவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. மன்னன் கொண்டோபரஸ் தோமாவைச் சந்தித்து இரண்டு ஆண்டுகள் ஆகவிருந்தது. தோமா கட்டிய அரண்மனையைக் காண அவன் தலைநகருக்கு ஆவலோடு புறப்பட்டு வந்தான். தன் வீரர்களை அனுப்பி அரண்மனை எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்து வரக் கூறினான். அதற்குள் அரசன் வருகையை அறிந்த அவன் நண்பர்கள் சிலர் அரசனை அணுகி, “அந்த ஏமாற்றுக்காரன் உம்மை மோசம் செய்து விட்டான்எனக் கூறவும் கொண்டோபஸ் அதிர்ச்சியடைந்தான்.

ஆம் அரசே, நீர் எதிர்பார்த்ததுபோல் அரண்மனை கட்டும் பணி எதுவும் அங்கே நடைபெறவில்லை. உங்களுக்கு அவன் வாக்களித்தபடி அரண்மனை கட்டவுமில்லைஎன்றனர் நண்பர்கள்.  “இது உண்மையா? அந்த மனிதன் இப்பொழுது எங்கேநான் கொடுத்த பணத்தை என்ன செய்தான்? இத்தனை காலமாக இங்கே என்ன செய்து கொண்டிருந்தான்? என் பணத்தில் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறானா?” எனக் கோபத்தோடு அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினான்.

நீர் நினைப்பதுபோல் உம்முடைய பணத்தில் அந்த மனிதன் இன்பமாக வாழவில்லை; மாறாக, ஊர் ஊராகச் சென்று ஏழை மக்களுக்கு உங்கள் பணத்தில் உதவிகள் செய்கிறான். எளிமையான மனிதனாக அடிக்கடி உபவாசம் இருக்கிறான். வெயில் காலம், குளிர் காலம் இரண்டிலும் ஒரே உடைதான் உடுத்துகிறான். ரொட்டி மற்றும் உப்பு மட்டுமே உண்கிறான். மற்றவர்களிடமிருந்து ஒருபோதும் பணம் வாங்கியதில்லை. தன்னிடமிருக்கும் பணத்தைப் போகிற வழியிலெல்லாம் ஏழை மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கிறான். இதைவிட முக்கிய விசயம், அவன் ஊர் ஊராகச் சென்று ஒரு புதுக் கடவுளைப் பற்றிப் போதிக்கிறான். நோயாளிகளைக் குணப்படுத்துவதும், பேய்களை ஓட்டுவதுமாகப் புதுமைகள் செய்வதால், மக்கள் அவனைத் தேடிச் செல்கின்றனர். அவனைப் பார்த்தால் மந்திரவாதிபோல் தெரியவில்லை. அவன், தான் போதிக்கும் கடவுளின் முக்கியச் சீடனாக இருப்பான் போலிருக்கிறதுஎன்றனர் அரசனின் நண்பர்கள்.

பொங்கி வந்த சினத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட அரசன், தன் வீரர்களிடம் தோமாவை எங்கிருந்தாலும் அழைத்து வரக் கட்டளையிட்டான். தோமா வந்ததும், “நான் கேட்டுக் கொண்டபடி அரண்மனை கட்டப்பட்டு விட்டதா?” என்று அவரிடம் கேள்வி எழுப்பினான். “ஆம்என்றார் தோமா. ஒரு கணம் அரசன் குழம்பிப் போனான். இல்லாத ஒன்றை இந்த மனிதர் எந்த எண்ணத்தோடு உண்டு என்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை.

அரண்மனையை இப்போது நான் பார்க்க முடியுமா?” எனக் கேட்ட அரசனிடம், “இப்போது முடியாதுஎன்றார் தோமா. அரசனுக்குக் குழப்பம் மேலும் அதிகரித்தது. இந்த மனிதர் எந்தத் தைரியத்தில் இப்படிப் பொய் சொல்கிறார்என்று நினைத்தவனாய் தொடர்ந்து, “சரி, எப்போதுதான் நான் பார்ப்பது?” என்ற கேள்விக்கு தோமா கூறிய பதில் அரசனை கடுங்கோபம் அடையச் செய்தது.

நீங்கள் உயிரோடு இருக்கும்வரை அரண்மனையைக் காண முடியாது. நீங்கள் இறந்த பின்னரே அதைக் காண முடியும்என்று தோமாவின் பதில் அளவுக்கதிகமான சினத்தை ஏற்படுத்த, தோமாவை உயிரோடு தோல் உரித்துக் கொன்று போட முடிவு செய்தான் கொண்டோபரஸ்.

சினம் தலைக்கேறிய அரசன் தன் வீரர்களிடம் தோமாவைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அவ்வாறே வீரர்கள் தோமாவைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயல்கையில், “சற்றுப் பொறுங்கள்எனக் கூற, தாமதித்த வீரர்களிடம்இந்த மனிதனை அயல்நாட்டிலிருந்து அழைத்து வந்தானே வணிகன் ஹப்பான், அவனையும் சிறையில் அடையுங்கள்; இருவருக்குமே ஒருசேர பாடம் புகட்டுகிறேன்என்றான் அரசன்.

அரசன் கட்டளைப்படியே ஹப்பானும் சிறைக்குள் தள்ளப்பட, அஞ்சி நடுங்கிய அவனிடம் தோமா, “பயப்படாதே, இயேசு கிறிஸ்துவை நம்பு; எந்தத் தீங்கும் நேராதுஎன்று தைரியமூட்டினார்.

தோமாவும் ஹப்பானும் சிறையில் அடைக்கப்பட்ட அன்றிரவு அரசன் கொண்டோபரஸ்,      வெகு நாள்களாக நோயுற்றுப் படுக்கையில் கிடக்கும் தன் தம்பி காத் என்பவனைக் காணச் சென்று அவனுக்கு ஆறுதலும் தைரியமும் கூறிக் கொண்டிருந்தான். தன் அண்ணனிடம் சிரமப்பட்டுப் பேசிக் கொண்டிருந்த காத், திடீரென தன் பேச்சை நிறுத்தினான். கண்மூடிக் கிடந்த தன் தம்பியை அரசன் எழுப்பிப் பார்க்கையில், அவன் மூச்சு நின்று போயிருந்தது. தன் கண்ணெதிரேயே தன் தம்பியின் உயிர் பிரிந்து போனதைக் கண்ட அரசன் பயத்திற்குள்ளானான். அப்போது அவன் அடைந்த வேதனை அளவில்லாமல் போனது.

தன் தம்பிமேல் அளவு கடந்த பாசம் கொண்ட அரசன் தங்கள் வழக்கப்படி மூன்று நாள்கள் துக்கம் கடைப்பிடித்து நான்காம் நாள் அவனை அடக்கம் செய்ய பெரிய கல்லறை ஏற்பாடு செய்து கொண்டிருந்தான். பாத்தியா தேசமே சோகத்தில் ஆழ்ந்திருக்க, இளவரசன் காத் இறந்த நான்காம் நாள் அவனுடைய உடல் சுத்தம் செய்யப்பட்டு, புத்தாடை உடுத்தப்பட்டு, இறுதிப் பயணத்திற்குத் தயாரான நிலையில், அவன் மீண்டும் உயிர்ப்பெற்றெழுந்து அமர்ந்ததைக் கண்ட மக்களில் பலர் அச்சத்தால் அந்த இடத்தை விட்டு ஓடிப்போனார்கள். அதிசயித்துப் போய் நின்ற மக்களிடையே ஆச்சரியத்தால் அரசன் கொண்டோபரஸ் வாயடைத்துப் போயிருந்தான். இறப்பின் எல்லையைத் தொட்டு மீண்டும் வந்த காத், தன் அரசன் சகோதரனிடம் தனக்கு நேர்ந்தது பற்றி விளக்க, அரசனும் அதைக் கேட்கலானான்.

நான் இறந்த பிறகு வானதூதர்கள் என்னை விண்ணகத்திற்குக் கொண்டு சென்று, அங்கே பொன்னாலும் வெள்ளியாலும், விலையுயர்ந்த கற்களாலும் கட்டப்பட்ட மிக நேர்த்தியான அரண்மனை ஒன்றைக் காண்பித்தார்கள். நான் அந்த அரண்மனையைப் பார்த்து வியந்து நிற்கையில், அவர்கள் என்னிடம்இது தோமாவால் உன் சகோதரனுக்காகக் கட்டப்பட்ட அரண்மனைஎன்றனர்.” அவன் கூறிக்கொண்டே போகையில் இடைமறித்த அரசன், “என்ன சொல்கிறாய்? விண்ணகத்தில் எனக்கான அரண்மனையா? தோமா கட்டியதா?” என்று வினா எழுப்பியவனுக்கு மூளையில் பொறி தட்டியது போலிருந்தது. தான் கேட்டபோது அரண்மனையைக் கட்டி முடிந்து விட்டதாகவும், தான் உயிரோடு இருக்கும்வரை அதனைக் காண முடியாது, இறந்த பின்னரே காணமுடியும் என தோமா கூறியது இதைத்தானோ? என்று யோசிக்கலானான்ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல், “பிறகு என்ன நடந்தது?” என்று தன் தம்பியிடம் வினவினான்.

காத் தொடர்ந்தான்... “இந்த அரண்மனையில் நான் வாழ்வதற்கு ஓர் அறையை ஒதுக்கிக் கொடுங்கள் என்று வேண்டிக்கொண்டேன். ‘அது இயலாதுஎன்று வானதூதர்கள் மறுத்துவிட்டனர்என்றான்.

இதைக் கேட்ட அரசன், “ஏன் முடியாது என்று கூறினார்கள்? காரணம் ஏதாவது கூறினார்களா?” எனக் கேள்வி எழுப்பினான். உடனே காத், “ஆம் கூறினார்கள். இப்போதைக்கு உன் சகோதரன் இந்த அரண்மனையை உரிமை கொண்டாடத் தகுதியற்றவராக இருக்கிறார். நீர் வேண்டுமானால் நேரில் சென்று உன் சகோதரரைச் சந்தித்து அவருக்கு ஏற்பட்டுள்ள பொருள் இழப்பை ஈடு செய்துவிட்டு அவரின் அனுமதி பெற்று வாரும், உண்மையில் நீர் உயிர் பிழைக்க வைக்க நாங்கள் கடவுளிடம் வேண்டுகிறோம் என்று கூறி என்னை உயிர் பிழைக்கவும் வைத்துவிட்டனர். கடவுளின் மனிதர் தோமா உனக்காகக் கட்டிய அரண்மனை உமக்கே சேரவேண்டும். உனக்காக அழகிய அரண்மனையைத் தயார் செய்து வைத்திருக்கும் தோமாவை நீர் சிறையில் அடைத்திருக்கிறீரே...” என்று சொல்லி முடித்தவன், அரசனின் அனுமதியையும் எதிர்பாராமல் தோமா அடைபட்டிருக்கும் சிறைச்சாலையை நோக்கி ஓடினான்.

(தொடரும்)