எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இருவரின் வாழ்வில் நடந்த, அவர்கள் நேரில் சந்தித்த நிகழ்வுகள் இன்றைய இளையோரின் சவால்கள் பற்றி மிகுந்த கவலையோடு என்னைச் சிந்திக்கத் தூண்டின.
பல
ஆண்டுகளுக்கு முன் அடுத்தடுத்து நடந்த கொடுமைகள்:
ஒருவர்
நடுநிலைப்பள்ளி ஆசிரியர். மாணவ- மாணவிகள் ஒன்றாகப் பயிலும் பள்ளி. ஒருநாள் அந்தப் பள்ளியின்
பெண்கள் கழிப்பறையில் சிதைந்த கருவைப் பார்த்து ஆசிரியர்கள் பதறிப் போனார்கள். நடுநிலைப்பள்ளியில்
மாணவ-மாணவி காதல் இந்தக் கொடுமையில் முடிந்து போனது.
மற்றொருவர்
ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்திருந்த மாணவி. அவர் வகுப்பில் மருத்துவப்
பெற்றோரின் ஒரே மகனும் சேர்ந்திருந்தான். ஒரே மாதம்தான் பையன் புதிய பெரிய பைக் கேட்டிருக்கிறான்.
பெற்றோர் தயங்கித் தடுத்திருக்கிறார்கள். தாத்தாவின்
செல்லப்பிள்ளை, அவர் வாங்கிக் கொடுத்துச் சில
நாள்கள்தான். நெரிசல் நிறைந்த கடைத்தெருவில் விபத்து. பையன் சிதைந்து போனான். மாணவ-
மாணவிகளிடம் நல்ல பெயர். அவர்களால் பல வாரங்கள் அந்த நினைவுகளை விட்டு விடுபடவே முடியாமல்
தவித்துப்போனார்கள்.
இதுபோன்ற
செய்திகள் அன்றாடம் ஊடகங்களில் வருகின்றன. ஒருசில நிகழ்வுகள் நம்மைச் சுற்றியும் அன்றாடம்
நடக்கின்றன. நம்மையும் உலுக்கிப்போட்டுவிடுகின்றன. ஆனாலும், இவையெல்லாம் நம் போன்ற பல இளைஞரைச் சிந்திக்கத்
தூண்டுகின்றனவா? நல்வழிப்படுத்துகின்றதா? நாம் இந்த எச்சரிக்கைகளைச் சரியாக எடுத்துக்கொள்கிறோமா?
விழித்துக்கொள்கிறோமா? இல்லை என்றால் ஏன் நம் இளம்பயிர்கள் வளரும்முன் கருகிப் போகின்றன?
விளைந்து கனியும் முன் வெம்பிப்பழுக்கின்றன?
இன்று
பருவப் பயணத்தில் ஆணும்-பெண்ணும் ஒன்றாகப் பழகும் சூழல்கள் ஏராளம். ஒன்றாகப் படிக்கிறோம்,
ஒன்றாகப் பயணிக்கிறோம், ஒரே அலுவலகத்தில் வேலை.
பருவப்
பயணத்தில் இளையோருக்கு ஒருவகைப் பாலினக் கவர்ச்சி ஏற்படுவதும் இயற்கைதான். அதை ஒருவகைக்
கட்டுக்குள் வைத்துக்கொண்டு, நம் வாழ்க்கைக் குறிக்கோளை நோக்கிப் படிப்படியாக மேலேறியாகவேண்டும்.
இங்கே
நாம் சறுக்குவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஊடகங்கள் இன்று நம்மை எக்கச்சக்கமாகத்
திசைதிருப்புகின்றன. ஆபாசப் படங்கள், பாடல்கள், காட்சிகள்.. தொல்லைப் பேசியாக மாறியிருக்கும்
கைப் பேசி. அதில் பரவிவரும் உரையாடல்கள், காட்சிகள். கிட்டத்தட்ட இலவசமாகப் பேசிக்கொள்ளும்
வாய்ப்புகள். மிக எளிதாகக் கிடைக்கும் மது, புகை. போதையை அனுபவிப்பதாக நினைத்து அலைமோதும்
காட்சிகள். இவற்றால் நாம் கல்வியைக் கோட்டை விடுகிறோம்; நல்ல வேலைவாய்ப்புகளைக் கோட்டை
விடுகிறோம்.
அவசரக்
காதல், அவசரக் குழந்தை, இளமையில் தற்கொலை, திருமணம் நடந்தவுடன் விவாகரத்து. பல்வேறு
வகையான வன்முறைகள், பகைமை.
எல்லாமே
மிக மிகச் சிறிய சலனங்களில் இருந்துதான் தொடங்குகின்றன. ஒரே ஒரு சிகரெட், ஒரே ஒரு பெக்,
ஒரே ஒரு புன்னகை, ஒரே ஒரு சந்திப்பு.
சரிவுப்
படிகள் இறங்குவது சுலபம்; ஆனால், கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிவிட்டால் அவ்வளவுதான்.
நல்லவனா? வல்லவனா?
என்னைப்
பொறுத்தவரை முதலில் நாம் நல்லவர்களாக வாழப் பழகவேண்டும். நல்லவர்கள் நட்பையே தேடவேண்டும்.
நல்ல பழக்கங்களையே வளர்த்துக்கொள்ளவேண்டும்.
முதலில்,
ஒழுக்கமும் சுயக்கட்டுப்பாடும் வந்துவிட்டால் அமைதியும் தன்னம்பிக்கையும் நம்மைத் தேடிவரும்.
நம் முயற்சிகள் தெளிவாகவும் திருத்தமாகவும் அமையும்.
வாழ்க்கை
என்பது சிலநொடிச் சலனங்களில் முடிந்து போவதல்ல. அறுபது, எழுபது, எண்பது ஆண்டுகளைத்
தாண்டியும் மகிழ்ச்சியாக நகரக் கூடியது. ஒவ்வொரு பருவத்திலும் ஒரு மகிழ்ச்சியிருக்கிறது.
கற்பது
ஒரு மகிழ்ச்சி. நல்ல பணியைத் தேடிக்கொண்டு சொந்தக்காலில் நிற்பது ஒரு மகிழ்ச்சி. அதற்குப்
பிறகுதான் காதல், திருமணம், குழந்தைகள் என்று அடுத்தடுத்த மகிழ்ச்சி.
இளமையிலேயே
சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வது ஒரு மிகப்பெரிய சவால். நல்ல நட்பு, நல்ல உறவு,
தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை, விழிப்புணர்வு...! இந்த வகைக் கவசங்களைத் தாங்கி இந்தச்
சவாலைச் சந்திப்போம். அடுத்தச் சவால்களைச் சாதிக்க முற்படுவோம்.
வாழ்க்கை
என்பது அறுபது எழுபது ஆண்டுகளையும் தாண்டி இனிமையாக நகரவேண்டிய நெடிய பயணம். பதின்
பருவத்தில் அவசரப்பட்டுப் பிஞ்சில் பழுத்து வெம்பிப் போகமாட்டேன்; கல்வி, தொழில், சேமிப்பு,
காதல், குடும்பம் என்று ஒவ்வொரு பருவத்தின் மகிழ்ச்சிக்காகவும் கட்டுப்பாட்டுடன் காத்திருப்பேன்.