news-details
சிறப்புக்கட்டுரை
யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்துகள் எதற்கு?

முற்போக்கு இந்தியப் பெண் முகங்களில் ஒருவரும், ‘புக்கர்பரிசு பெற்ற முதல் இந்திய எழுத்தாளருமான சூசன்னா அருந்ததி ராய், “யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்துகளால் என்ன பயன்?” என்று வினா எழுப்புகிறார்.

உங்கள் எழுத்துகள் படிக்கிறவர்களுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தவேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக்கூட இருக்கலாம். எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துகள், எழுத்துகளே அல்லஎன்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

எப்போது அன்றாடப் பேச்சில்கூட இயல்பாக ஓர் எழுத்தாளன், சிந்தனையாளன் உள்ளே வருகிறானோ... அப்போதே அவன் உண்மையான பாதிப்பை நிகழ்த்தியிருக்கிறான் என்று பொருள்என்கிறார் அமெரிக்கக் கவிஞர் தாமஸ் எலியட். அக்காலத்தில் குடும்பப் பாச உறவுக் கடிதங்களுக்குக் குடும்பங்களின் மகிழ்ச்சியிலும் கவலையிலும் உணர்வுப்பூர்வமான பெரும் பங்கிருந்தது. இதயப் பரிமாற்றங்களுக்குக் காதல் கடிதங்கள் துணைசெய்தன. பணம் பெற்றுக்கொண்ட பின்பு கிழிக்கப்படும் மணியார்டர் அட்டையில் எழுதப்பட்ட வரிகளும் மகிழ்ச்சியளித்தன. காலப் போக்கில் கடிதம் எழுதுவது காலாவதியான பின்பு கடிதங்கள் பழைய நினைவுகளாகிவிட்டன.

எழுத்து என்பது என்ன?

எழுத்து என்பது உயிரைப் பிரசவிப்பது போன்றது. தனக்கு ஒரு கருத்து தோன்றியது என்றால், உண்மையான எழுத்தாளன் மக்களுக்குப் புரியும்படி எளிய நடையில் கொண்டுசேர்த்த பின்னரே அவனுக்கு மனத்தில் உற்சாகம், நிம்மதி பிறக்கும். வாசகர்கள் அக்கருத்தை ஏற்காவிட்டாலும், கூறவேண்டியதைத் தானே சரியாகப் புரிந்துகொண்டு கூறினாலே நிறைவு கிடைக்கும். கூற வந்ததைப் பேச்சுவழக்கில் அல்லாமல், அதிநவீன வார்த்தைகளால் மனத்தில் தோன்றும் உணர்வுகளை விளக்கமாக, தெளிவாக, வலுவான முறையில் எழுத்துகளில் கூறமுடியும். நல்ல எழுத்து, தொடர்பு நிலைக்கான எரிசக்தியாகச் செயலாற்றுகிறது, தொடர்புகள் சமூகக் கட்டமைப்பு உருவாவதில் பெரும் பங்காற்றுகிறது.

எழுத்துகளின் பயன்பாடுகளாக வெளிப்படுத்த, விளக்கிட, ஆய்வு செய்திட, கற்றுக்கொள்ள, மகிழ்விக்க, தெரிவிக்க, விவரிக்க, விவாதிக்க, வலியுறுத்த, மதிப்பீடு செய்ய, பிரச்சினைக்குத் தீர்வு காண, சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடத்த என பல்வேறு வகைகளில் உதவுகின்றன.   எழுத்துகள் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கின்றன; சிந்தனைகள் நாகரிகத்திற்கு வடிவம் கொடுப்பதுடன், அதன் கூறுகளில் ஒன்றான கலாச்சாரம் எழுத்து ஊடகத்தால் உறுதித்தன்மை அடைகிறது. சமூகங்கள் மற்றும் அவற்றின் பண்பாட்டுக்கான அடையாளத்திற்கு எழுத்தாற்றல் பெரும் உதவி புரிகிறது. எழுத்துகள் வாசிப்பவரை அதன் நடையில், விவரிக்கும் போக்கில், கருத்தாழத்தில் தொந்தரவு செய்யவேண்டும். அதிகப் பிழைகள் கொண்ட எழுத்துகள் வாசகர்களைத் தொடர்ந்து படிக்கவிடாமல் ஆர்வம் குறைத்து தொந்தரவு செய்கின்றன. எழுத்தாளர்கள் முதலில் பிழையின்றி எழுதத் தெரிந்திருக்கவேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது இலக்கியத் தமிழ் அல்ல; பிழையில்லாத் தமிழே. ‘எழுத்துகள் புனிதமானவை, மதிக்கத் தகுதியுள்ளவை. சரியான எழுத்துகள் சரியான முறையில் எழுதப்பட்டால், அவை உலகை சற்றேனும் உந்தித்தள்ளும் சக்தி வாய்ந்தவைஎன்கிறார் ஆங்கில நாடக ஆசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான டாம் ஸ்டாப்பர்ட்.

தொந்தரவு செய்வதற்கான தகுதிகள்

ஒரு நல்ல எழுத்தாளனின் எழுத்துகள் நிச்சயம் வாசிப்பவர் மனத்தை சிறிதேனும் அசைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். உங்களை ஓர் எழுத்தாளர் என்று நீங்கள் கருதினால், எழுதுவது உங்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கக்கூடாது, அது உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். தினமும் உணவு போல, தினமும் எழுதவேண்டும். தினமும் எழுதுவதன் மூலமே எழுத்தாளனுக்குரிய தன்னம்பிக்கை உருவாகும். தினமும் எழுத எழுதத்தான் எழுத்துகள் மெருகேறும்.

எழுத்து என்பதை உடல் பயிற்சியோடு ஒப்பிட்டால் புத்தகங்கள் படிப்பதுதான் அதற்கான ஊட் டத்தையும் ஆற்றலையும் தரும் உணவு. உணவு உண்ணாமல் ஓடினால் என்னவாகும்? எழுத்தாற்றலுக்கு அடிப்படையான புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும். மேலோட்டமாக அல்லாமல், கருத்துகளை உள்வாங்கிப் படிப்பதன் மூலம் நம் மனத்தில் இருக்கும் கருத்துகளை எழுத்துகளில் பதிவு செய்யமுடியும். அதிக வாசிப்பின் மூலம் பல்வேறு எழுத்தாளர்களையும், அவர்களது நடை, அவர்களின் கதாபாத்திரங்களின் உருவாக்கம், பல்வேறு சமூக வாழ்க்கைச் சூழல்கள் போன்ற பல்வேறு விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். வித்தியாசமாக, சுவாரஸ்யமாக எழுதவும் அறிய முடியும்.

எழுதும் படைப்புகள் சொந்தப் படைப்பாக, பயனுள்ள படைப்பாக இருக்கும்போது, மக்கள் நாம் எழுதுவதை விரும்பிப் படிக்கத் தொடங்குவார்கள். தொடர்ந்து எழுதும்போது உங்கள் எழுத்துகளை எல்லாருக்கும் பிடித்துவிடும். ஒருவரைத் தாக்கும் நோக்கிலோ, சாதகமாகவோ எழுதாமல் நியாயமான, உண்மையான படைப்புகளைக் கொடுக்கும்போது மக்களுக்கும் அது பயனளிக்கும். நிறைய நேரமும் உழைப்பும் செலவிடாமல் சிறந்த படைப்புகளை ஓர் எழுத்தாளனால் தர இயலாது.

புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டீபன் கிங், “எல்லா இடங்களிலும் படியுங்கள்; ஒரு குறிப்பிட்ட இடத்தில் எழுதுங்கள்என்கிறார். எழுதுவதற்காகத் தினமும் நேரம் ஒதுக்கிய அவர், தான் எழுதுவதற்காகத் தனது வீட்டில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட மேசையில் எப்பொழுதும் எழுதுவதை வழக்கமாக்கியிருந்தார்.

எழுதும் சூழ்நிலையை அறிவது  மட்டுமல்ல; ஒரு நல்ல எழுத்தாளனுக்குத் தன் எழுத்தில் எது சிறந்தது? எது தரமற்றது? என்று பிரித்தறியவும் முடியும். அவ்வாறு பிரித்தறிந்து தரமான எழுத்துகளை மட்டுமே மக்கள் முன் வைப்பர். ஒரு படைப்பாளி மிகப் பரவலாக அறியப்பட்டு, படைப்பு மீதான பல கோணங்கள் சிந்தனையில் வெளிப்பட்டு, அந்த வெளிப்பாடுகள் மேற்கோள்களாகக் காட்டப்படும் போது, வாசிப்பவர் சிந்தனையிலும் அவை தாக்கத்தை உருவாக்குகின்றன

எவ்வாறு தொந்தரவு கொடுப்பது?

உங்கள் இதயத்தின் சுவாச மூச்சுகளால் காகிதத்தை நிரப்புங்கள்என்றார் பிரபல ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். ஒரு படைப்பை உருவாக்கும்போது தன் எண்ண அலைகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து எழுத வேண்டுமே தவிர, இது எல்லாராலும் பாராட்டப்பட வேண்டிய படைப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதக்கூடாது. அவ்வாறு செய்தால் எண்ண ஓட்டங்களின் விளைவுகள் எழுத்தோட்டத்திற்குத் தடங்கல் ஆகிவிடும். இந்த நிலையில் மற்றவர் கருத்திற்கும் முக்கியத்துவம் தந்து தவறுகளைத் திருத்திக்கொண்டால், ஒரு நல்ல எழுத்தாளராகச் சமூகத்தில் உங்கள் படைப்பு சிலரையாவது தொந்தரவு செய்தே தீரும்.

உங்கள் படைப்புகள் கதையாக, கட்டுரையாக, கவிதையாக, நாவலாக, நாடகமாக என எதுவாக இருந்தாலும், அந்தப் படைப்புக்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அதனை எடுத்தியம்பும் விதத்தில் ஆழம் இருக்கவேண்டும். வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் வடிவமைக்கப்பட வேண்டும். படைப்பின் ஆரம்பத்திலோ முடிவிலோ அன்றி, இடைப்பட்ட இடங்களிலோ மனத்தில் மெல்லிய நெருடலை ஏற்படுத்தவேண்டும். ஒரு படைப்பை வாசிக்கையில் வாழ்வின் சுயஒப்பீடு, ஓர் ஏக்கம், ஓர் எதிர்பார்ப்பு, தார்மீகக் கோபம் என ஏதாவது ஒருவகையில் மனத்தைத் தொந்தரவு செய்ய வேண்டும். சிரிக்க வைப்பது நோக்கமென்றால், அதுவும் நகைச்சுவையாகத் தொந்தரவு செய்யும்.

சமூகப் பார்வையோடு எழுதும்போது சமூக அவலங்கள் வாசிப்பவர் மனத்தில் மானசீகமாகக் கோபத்தை ஏற்படுத்தும். அதற்காக நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் குறித்து தன்னை மேம்படுத்திக்கொள்வது ((Update)) அவசியமான ஒன்றாகும். குடும்ப வாழ்வின் மெல்லிய மற்றும் கடினத்தனமான உணர்வுகள், தீண்டாமை, பாலியல் வன்கொடுமைகள், வரதட்சணை, பெண்ணடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் முதலான உள்ளடக்கங்கள் குறித்து நாம் படித்தது, பார்த்தது, கேட்டது யாவற்றையும் எழுத்தில் வடிக்கும்போது, வாசகர்கள் மனங்களை  உலுக்கும். கதையென்றால், கதாபாத்திரங்களுக்குள் உள்ள முரண், வித்தியாசமான கதைக் கண்ணோட்டம், அழகான எழுத்து நடை உணர்வுகளைத் தூண்டவும், மர்மத்தை உருவாக்கி அதனை அறியும் ஆர்வத்தை அதிகரிக்கவும் செய்யவேண்டும்.

மொத்தத்தில், ஓர் எழுத்தாளனின் எண்ணங்கள், உணர்வுகள், சிந்தனைகள், நம்பிக்கைகள் ஆகியன குறிப்பிடத்தக்க தாக்கத்தை மக்களுக்கு ஏற்படும் வகையில் கற்பனை வளமோ, வாசிப்பு ஞானமோ அவனுக்குள் பெருகியிருக்கவேண்டும்.

தொந்தரவின் விளைவுகள்

வாளைவிட பேனா வலிமையானதுஎன்ற சொற்றொடரை 1839-ஆம் ஆண்டில் எழுத்தாளர் எட்வர்ட் புல்வர்லிட்டன் முதன்முதலாகக் கூறினார். வாளால் பயத்தைக் காட்ட முடியும்; எழுத்தால் இதயங்களை வெல்ல முடியும். வன்முறையைவிட சிந்தனையும் எழுத்தும் மக்கள்மீது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். வாளின் சக்தி தோல்வி, தியாகம், இழப்புடன் முடிவடைகிறது. ஆனால், பேனா ஆன்மாவுக்கு உந்துதல், உத்வேகம், வளர்ச்சியைக் கொண்டு வருகிறது.

எழுத்து என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் அல்ல; உலகை ஊக்குவிக்கவும், வற்புறுத்தவும் மாற்றவும் கூடிய ஒரு சக்தி வாய்ந்த கருவி. சிறந்த எழுத்தாளர்கள் புரட்சிகளைத் தூண்டுவதற்கும், சமூக விதிமுறைகளுக்குச் சவால் விடுவதற்கும், தனிப்பட்ட மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் தங்கள் எழுத்துகளைப் பயன்படுத்தினர்.

1963-இல் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் எழுதியலெட்டர் ஃப்ரம் பர்மிங்காம் ஜெயில்என்ற கடிதம் அமெரிக்காவின்  சிவில் உரிமைகள் சட்டத்திற்கான ஆதரவை மக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்து அந்நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. 19-ஆம் நூற்றாண்டில் கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் தேசிய அடையாளத்தின் கருப்பொருளைத் தொட்டு விடுதலை உணர்வைத் தூண்டின. காந்தியின் எழுத்துகள் ஆங்கிலேயருக்கு எதிரான வன்முறையற்ற எதிர்ப்பிற்காக வாதிட்டன. இந்திய எழுத்தாளர்கள் பலரும் சுதந்திரத்திற்கான அடித்தளத்தை அமைக்க உதவினார்கள்.

யூத இனப் படுகொலையின்போது தலைமறைவாக இருந்த ஆன் ஃப்ராங்க் என்ற யூதப்பெண் எழுதிய நாள்குறிப்பு, 1945-இல் அவர் இறந்தபிறகு ஹிட்லர் அடக்குமுறையின் இருண்ட அத்தியாயத்தை உலகுக்கு வெளிச்சமிட்டது. 1845-இல் ஃபிரடெரிக் டக்லஸ் எழுதிய ஒரு புத்தகம் அடிமைத்தனத்தின் கொடூரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒழிக்க கருவியாகச் செயல்பட்டது. கென்யாவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் வங்காரி மத்தாய், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து பல புத்தகங்கள் எழுதினார். அவை ஆப்பிரிக்காவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மாற்றங்கள் கொண்டு வர உதவின. 2012-இல் தாலிபான்களின் கொலைத் தாக்குதலுக்குத் தப்பிய மலாலா யூசுப் சாய் எழுதியநான் மலாலாஎன்ற நூல் 40-க்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பெண்கள் கல்வி பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், மேலும் பலரை இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கத் தூண்டியது. இவை போன்று புரட்சிகரமான மாற்றங்கள் எழுத்துகளால் நிகழ்ந்தன

எழுத்துலகம் ஆழமான உணர்ச்சிகள், விரிவான சிந்தனைகள், அர்த்தமுள்ள பிரதிபலிப்புகள் நிறைந்தவை என்றாலும், அது வன்முறை மற்றும் சோகத்திற்கும் சாட்சியாக உள்ளது. ஆட்சியாளர்கள், வன்முறையாளர்கள், சனநாயக மற்றும் பாசிச விரோதிகள், சமத்துவ சமூகநீதி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக எழுதப்பட்ட கருத்துத் தொந்தரவுகள் எழுத்தாளர்களைப் பழிவாங்கின. பல ஆண்டுகளாகப் பல பிரபல எழுத்தாளர்கள் அகால மற்றும் கொடூரமான மரணங்களைச் சந்தித்துள்ளனர். எழுத்தாளர்களின் சோக மரணங்கள் உண்மை, நீதி மற்றும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டிற்காகத் தங்கள் இறுதி விலையைச் செலுத்தினர். ஸ்பெயின் நாட்டுக் கவிஞரும் எழுத்தாளருமான ஃபெடரிகோ கார்ஷியா லோர்கா எழுதிய காதல், மரணம், சமூக அநீதி கருப்பொருள் கொண்ட நூல்கள் ஆட்சியாளரைக் கோபப்படுத்தி, 1936-இல் அவரை விசாரணையின்றித் தூக்கிலிட வைத்தன. அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

சால்வடார் நோவோ என்ற மெக்சிகன் எழுத்தாளரின் பல படைப்புகள் மெக்சிகன் அறிவுசார் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தின. 1974-இல் அவர் மரணம் மர்ம மரணமானது. டேனியல் கார்ம்ஸ் என்ற இரஷ்ய எழுத்தாளர் தனது படைப்புகளுக்காக சோவியத் ஆட்சியால் தொடர் துன்புறுத்தலை எதிர்கொண்டார். 1942-இல் அவர் நேரடியாக அல்லாமல் பட்டினி போட்டுக் கொல்லப்பட்டார். நைஜீரிய எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான கென் சரோவிவா தனது எழுத்தாலும் போராட்டத்தாலும் 1995-ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார். 2015-ஆம் ஆண்டில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக எழுதிய, பேசிய எழுத்தாளர் கல்புர்கி தன் வீட்டு வாயிலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதும் நிகழ்ந்தது.

மேற்கூறியவை தங்கள் சொந்த வாழ்க்கையிலும், மற்றவர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எழுத்தைப் பயன்படுத்திய எழுத்தாளர்களுக்கு நேர்ந்த நல்லவை-கெட்டவையே; எனினும், அவர்கள் வரலாற்றுக்குள் வந்து நிற்கிறார்கள். கிரேக்க ஞானி சாக்ரடீஸ் ஒரு வரி கூட எழுதியவர் இல்லையாம்! ஆனால், அவர் பேச்சுகள் ஆட்சிப்பீடத்தை உலுக்கிப் போட்டதோடு, அவர் பகுத்தறிவு உரைகள் பின்னாளில் நூல் வடிவம் பெற்று பேசுபொருளாயின. அவர் நஞ்சுண்டு மரணிக்க வேண்டியிருந்தது.

இயேசு பற்றிய நற்செய்தி நூல்கள் இன்னமும் உலகை ஆண்டு கொண்டிருக்கின்றன. இவை அவரால் எழுதப்பட்டவை அல்ல; எனினும், இயேசு ஒரே ஒருமுறை மண்ணில் எழுதிக் காட்டினார். அந்த எழுத்துகள் அன்றைய யூதர்களை மட்டுமல்லாமல், இன்றைய உலகத்தாரையும் சுயபரிசோதனை செய்வதற்கான உறுத்தலாகவே பார்க்கப்படுகின்றன.