news-details
ஆன்மிகம்
கிறிஸ்து தமது பணியைப் பகிர்ந்துகொள்ளப் பெண்களை அழைக்கின்றார்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 41)

1. மெசியாவின் மீட்புப் பணியில் மரியாவின் பங்கு பற்றி அறிவிக்கும் வயது முதிர்ந்த சிமியோனின் வார்த்தைகள், மீட்பின் மறையுண்மையில் பெண்ணின் பங்கை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. உண்மையில் மரியா ஒரு தனிப்பட்ட நபர் மட்டுமல்ல; இயேசுவின் பாடுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஆவியில் கடவுளின் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கும் மீட்பரின் பக்கத்தில் துணையாக நிற்கின்ற ஒரு புதுமைப் பெண்ணாக, ‘சீயோனின் மகள்இருக்கின்றார். இந்த உண்மையானது மரியாவின் இதயத்தை ஏழு அம்புகள் குத்திக் கிழிக்கின்ற வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கின்ற புகழ்பெற்ற ஓவியத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது: இந்த ஓவியமானது சீயோனின் மகளோடும் திரு அவையோடும்  அடையாளப்படுத்தப்படுகின்ற ஒரு தாய்க்கும், மனுவுருவான வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் துயரமிக்க முடிவிற்கும் இடையேயானதோர் ஆழமான தொடர்பைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

கடவுளிடமிருந்து கொடையாக அவர் பெற்றுக்கொண்டவரை, அவரின் மீட்புப் பணிக்காக அர்ப்பணிப்பதன் வழியாகத் திரும்பவும் அவரிடமே கொடுப்பதற்காக மரியாவும் இந்தப் பணிக்காகத் தன்னையே அர்ப்பணிக்கின்றார். இந்தச் செயலானது இயல்பிலேயே உள்ளதொரு தாய்மைப் பாசத்தின் கனியான ஆத்மார்த்தமானதொரு பகிர்தலாக மட்டும் இல்லாமல், கிறிஸ்துவின் மீட்புப் பணிக்கான புதுமைப் பெண்ணின் ஒப்புதலையும் வெளிப்படுத்துகின்றது.

இயேசுவின் துன்பத்தில் மரியாவும் பங்குகொள்வார்!

2. இவை அனைத்தும் நிகழும், “இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும் (லூக் 2:35) என்ற வார்த்தைகளில் இயேசுவினுடைய அர்ப்பணத்தின் மற்றும் மரியாவினுடைய துன்பத்தின் நோக்கத்தை சிமியோன் சுட்டிக்காட்டுகின்றார். அவரின் தாயையும் அவரது துன்பத்தில் ஈடுபடுத்துகின்றஎதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கின்ற (லூக் 2:34) இயேசு, அவரது இந்த நிலைப்பாட்டில் ஆண்களையும் பெண்களையும் முக்கியமானதொரு முடிவை எடுக்க அழைத்து அவர்களை வழிநடத்துகிறார். உண்மையில்அவர் இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கிறார் (லூக் 2:34).

இவ்வாறு, மீட்புப் பணியின் பொருட்டு இந்த முரண்பாட்டில் அவரது இறைமகனோடு இணைக்கப்பட்டு இருக்கின்றார். உண்மையிலேயே கிறிஸ்துவை மறுப்பவர்களுக்கு அழிவின் ஆபத்தானது நிச்சயம். ஆனால், பலரது உயிர்ப்பானது மீட்பின் அற்புதமானதொரு பலனாக இருக்கின்றது. இந்த அறிவிப்பு மட்டுமே  அர்ப்பணத்தின் கனியானது யாருக்கெல்லாம்  ஏற்கெனவே சாட்சியம் கூறுகின்றதோ, அவரது இதயங்களில் மிகப்பெரியதொரு நம்பிக்கையைத் தூண்டுகின்றது

சடங்கு சம்பந்தமானதோர் அர்ப்பணத்திற்கு முன்பு இத்தகைய மீட்பின் எதிர்பார்ப்புகளை நோக்கி தூய கன்னியின் கவனத்தைத் திருப்புவதன் வழியாக, மனுக்குலத்தின் மீட்பிற்கான அவரது பங்களிப்பாகவே இந்தச் செயலை அவர் செய்கின்றார் என்பதை மரியாவுக்குச் சிமியோன் அறிவுறுத்துவதாகத் தோன்றுகின்றது. உண்மையில், அவர் சூசையிடமோ அல்லது சூசையைப் பற்றி மரியாவிடமோ பேசவில்லை; அவரின் வார்த்தைகள் அவரது மகனின் முடிவோடு அவர் தொடர்புபடுத்துகின்ற மரியாவுக்கு  மட்டுமே கூறப்பட்ட வார்த்தைகளாக இருக்கின்றன.

3. கால வரிசைப்படி முதன்மை பெறுகின்ற மரியாவின் இந்தச் செயலானது இயேசுவின் முதன்மை நிலையை மங்கச் செய்யவில்லை. மீட்புத் திட்டத்தில் மரியாவின் இந்தப் பங்கை இரண்டாம் வத்திக்கான் சங்கமானதுமீட்பினுடைய மறைத்திட்டத்தை நிறைவேற்றுவதில், அவருடைய மகனின் சேவையில் அவருக்குக் கீழும் அவரோடு இணைந்தும்முழுமையாகத் தன்னையே ஒப்படைத்தார் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 56) என்று விவரிக்கின்றது.

இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வில், மரியா கிறிஸ்துவுக்குக் கீழும் கிறிஸ்துவோடும் மீட்பின் மறைத்திட்டத்திற்காக உதவுகின்றார். உண்மையில் மீட்பில் அவர் முதன்மையான பங்கை வகிக்கின்றார். எனவே, சடங்கு முறை காணிக்கையால் மட்டுமே  அவர் மீட்கப்பட வேண்டும். அவரது ஆன்மாவை ஊடுருவுகின்ற வாளினால்  மரியா அவருடைய மகனின் பலியோடு இணைக்கப்படுகின்றார்.

4. கிறிஸ்துவின் முதன்மை இடமானது ஈடு செய்யப்பட முடியாத பெண்ணின் பங்கைத் தகுதியற்றதெனத் தள்ளாமல், அதற்குத் துணைநின்று சரியானதொன்றைக் கோருகின்றது. அவரது சொந்தப் பலியில் தமது தாயை ஈடுபடுத்துவதன் வழியாக, கிறிஸ்து அந்தப் பலியின் ஆழமானதொரு மனிதநிலை அடிப்படையை வெளிக்கொணரவும், சிலுவையின் குருத்துவப் பலிக்கான முன்னோட்டத்தை நமக்குக் காட்டவும் விரும்புகிறார்.

மீட்புப் பணியில் பெண்ணின் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கான தெய்வீக நோக்கத்தைப் பலியாக ஒப்புக்கொடுக்கின்ற அந்தச் சடங்கில் யோசேப்பு கலந்துகொண்ட போதிலும் சிமியோனின் தீர்க்கத்தரிசனம் மரியாவை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதிலிருந்து காணலாம்.

இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் இந்த நிகழ்வின் முடிவானது, மீட்புத் திட்டத்தில் பெண்ணினுடைய உடனிருப்பின் மதிப்பு மற்றும் அர்த்தத்தை உறுதிப்படுத்துவதாகத் தோன்றுகின்றது. அன்னா என்னும் பெண்ணுடனான சந்திப்பு, பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டிடம் ஒப்படைக்கப்படுவது போன்ற சிறப்புத் தருணங்களை நிறைவு செய்கிறது.

சிமியோனைப்போல, இந்தப் பெண்ணும்  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுள் சிறப்பானதொரு நிலையைப் பெறவில்லை; ஆனால், அவரது வாழ்வானது கடவுளின் பார்வையில் மிகவும் உயர்ந்த மதிப்பைப் பெற்றிருப்பதாகத் தோன்றுகின்றது. ஒருவேளை, அவரின் ஆழ்ந்து ஆராய்ந்து முடிவெடுக்கும் கொடையின் பொருட்டும் தூய ஆவியாரின் தூண்டுதலின்கீழ் அவர் நடத்திய அந்தப் புனித வாழ்வின் பொருட்டும் அநேகப் பேர் அவரிடம் ஆலோசனை பெற்றதனால், தூய லூக்கா மரியாவை  ஓர் இறைவாக்கினராக அழைக்கின்றார்.

அன்னா 84 வயது நிறைந்தவராகவும், பல ஆண்டுகளாக விதவையாகவும் இருந்தார். தன்னையே முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணித்து, “கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார் (காண். லூக் 2:37). அவர் மெசியாவை மிகவும் ஏக்கத்தோடு எதிர்பார்த்து வாழ்ந்து வந்ததனால், அது இயேசுவில் நிறைவேறுவதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்த பலரையும் பிரதிபலிக்கின்றார். இதையே நற்செய்தியாளர், “அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்தார் (லூக் 2:38) என்று குறிப்பிடுகின்றார்.

ஆலயத்தில் தொடர்ந்து தங்கியிருந்ததால், ஆண்டவருக்காக அர்ப்பணிக்கப்பட்டதும், திருவசனத்தைக் கேட்பதாலும் செபத்தாலும் செழுமைப்படுத்தப்பட்டதுமான ஒரு வாழ்வின் முடிவில் சிமியோனை விடவும் ஒருவேளை அவரால் எளிதாக இயேசுவைச் சந்திக்க முடிந்தது.

மீட்பின் தொடக்கத்தில் தனது புனித வாழ்வாலும், செபத்தோடு கூடிய எதிர்பார்ப்பாலும் கிறிஸ்துவின் பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ளவும், அவரது முடிவில்லா இரக்கத்தால் பெற்றுக்கொண்ட அற்புதங்களுக்காக ஒவ்வொரு நாளும் கடவுளைப் புகழவும் தயாராக இருக்கும் எல்லாப் பெண்களையும் இந்த இறைவாக்கினரான அன்னாவில் காண முடியும்.

அன்னா: நற்செய்தியைப் பரப்புகின்ற பெண்களின் அடையாளம்

குழந்தை இயேசுவைச் சந்திப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிமியோனும் அன்னாவும், மரியா மற்றும் சூசையோடு இயேசுவின்  உடனிருப்பினுடைய மகிழ்ச்சியைப் பகிர்வதிலும், அதை அவர்கள் வாழ்ந்த இடத்தில் பரப்புவதிலும் ஆழமானதோர் அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, அவரது சாதாரண மற்றும் அசாதாரணமான நம்பிக்கையினால் சான்றுபகர்வதன் வழியாக, அன்னா இயேசுவைப் பற்றிப் பேசுவதில் வியக்கத்தக்கதோர் ஆர்வத்தைக் காட்டுகிறார். இந்த நம்பிக்கை மற்றவர்களும் அவர்கள் வாழ்வில் மெசியாவை ஏற்றுக்கொள்வதற்கான முன்தயாரிப்பாக இருக்கின்றது

எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார் (லூக் 2:38) என்ற தூய லூக்காவின் கருத்தானது, நற்செய்தியைப் பரப்புவதில் தங்களை அர்ப்பணித்து, மீட்பிற்கான நம்பிக்கையைத் தூண்டி வளர்க்கும் பெண்களின் அடையாளமாக அவரைக் கருதுவதாகத் தெரிகிறது.

மூலம்: Pope John Paul II, Christ calls women to share his mission, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 15 January 1997, p.11.