நம் அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சந்திக்கும், நம் செயல்பாடுகளை முடக்கிப்போடும் ஒரு பொதுவான உணர்வு ‘அச்சம்.’ ‘நாளை என்ன நடக்குமோ?’ என்ற எதிர்காலத்தைப் பற்றிய பயம்; ‘நம் பலவீனங்களைக் கண்டு பிறர் என்ன சொல்வார்களோ?’ என்ற அச்சம்; ‘உண்மையைப் பேசினால் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ?’ என்ற கவலை; புறக்கணிப்பால் ஏற்படும் மன உளைச்சல் என அச்சத்தின் நிழல் நம்மை எப்போதும் துரத்திக்கொண்டே இருக்கிறது. இன்றைய நவீன உலகில், சுயநலமும் அநீதியும் மலிந்துவிட்ட சூழலில் ஓர் உண்மையான கிறித்தவ வாழ்வை வாழ முற்படும்போது, நாம் ஏளனத்திற்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. அச்சம் என்பது நம் ஆன்மிக வாழ்வை நரகமாக்கி, நம்மைச் செயலிழக்கச் செய்துவிடுகிறது. இத்தகைய எதார்த்தச் சூழலில், அச்சுறுத்தும் சக்திகள் நமக்கு எதிராக அணிவகுத்தாலும், எதிர்கொள்ள முடியாத பிரச்சினைகள் நம்மைத் துரத்தினாலும், யாருமில்லாத் தனிமையில் நாம் தவித்தாலும் அஞ்சிடத் தேவையில்லை. ஏனெனில், நம்மோடு இருப்பவர் சாதாரண மனிதர் அல்லர்; மாறாக, நமக்காகப் போரிடும் ‘வலிமை வாய்ந்த ஒரு போர்வீரர்’ என்று இன்று ஆண்டவர் வாக்குத் தருகிறார்.
ஆண்டின்
பொதுக்காலம் 12-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கும் இன்றைய நாளில், திருவழிபாட்டு வாசகங்கள் நமக்கு ஒரு மாபெரும் நம்பிக்கை அழைப்பை விடுக்கின்றன. இறைவனின் அழைப்பை ஏற்று நாம் மக்கள் பணிபுரியும் வேளையில், தீயவர்களால் வரும் துயரங்களையும், அதன் விளைவாக ஏற்படும் இலட்சிய மரணத்தையும் கூட கிறிஸ்துவுக்காக வீரமுடன் எதிர்கொள்ள இன்றைய இறைவார்த்தை நமக்கு அஞ்சா நெஞ்சத்தைத் தருகிறது.
இன்றைய
முதல் வாசகமான இறைவாக்கினர் எரேமியாவின் ‘இறுதி அறிக்கை’ பகுதியில் காணப்படும் அவரது புலம்பல்கள், அவர் அனுபவித்த துன்பங்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றன. ஏனெனில், எரேமியா இறைவாக்கு உரைத்த போது ஆண்டவரின் இல்லத்துத் தலைமை அதிகாரியான பஸ்கூர் (எரே 20:1) உள்ளிட்ட சில குருக்களாலும், பல தரப்பினராலும் கடுமையான
இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்துகிறார்கள் என்பதை மிக வேதனையோடு விவரிக்கும் அவர், தான் அறிவித்த இறைவாக்கைக் கேட்ட மக்கள் தன்னைச் சுற்றிலும் ஒரே திகில் எனக் கருதி ஏளனம் செய்ததையும், தன் மீது வெளிப்படையாகவே பழி சுமத்திப் பொய் இறைவாக்கினராகக் காட்டத் தீவிரமாக முயற்சித்ததையும், தன் நண்பர்கள்கூட தன் வீழ்ச்சிக்காகக் காத்திருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.
இருப்பினும்,
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் தாங்கள் பெற்ற இறைச்செய்தியையும் தெய்வீக அனுபவத்தையும் தங்களுக்குள்ளேயே அடக்கிவைக்க முடியாது. எத்தனை துன்பங்கள் வந்தாலும், அவர்கள் துணிவுடன் இறைவார்த்தையைத் தொடர்ந்து அறிவிப்பார்கள். மனிதர்கள் எதிர்த்தாலும், தங்களைக் கைவிட்டாலும், தங்களை அழைத்துப் பணிக்கு அனுப்பிய ஆண்டவர் எப்போதும் உடனிருந்து திடப்படுத்துகிறார் என்ற உறுதியான நம்பிக்கை எரேமியாவுக்குள் என்றும் சுடர்விடுகிறது. அதனால்தான் எரேமியா கடவுள் தன்னோடு ‘வலிமை வாய்ந்த வீரரைப் போல’
(எரே 20:11) இருப்பதாக முழங்குகிறார்.
எரேமியாவுக்கு
வலிமை வாய்ந்த வீரராக வெளிப்பட்ட அதே இறைவன், இன்றைய நற்செய்தியில் மனித உருவெடுத்து நமக்கு நேரடியாக ஊக்கம் ஊட்டுகிறார். இயேசு, தம் திருத்தூதர்கள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து (மத் 10:1-4) அவர்களை இறைப்பணிக்காக அனுப்பும் வேளையில் வழங்கிய அறிவுரைகள் அனைத்தும் இன்றைய நற்செய்தியில் ஆழமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பணியாற்றச் செல்லும் சீடர்கள் எத்தகையதொரு சவாலான உலகைச் சந்திக்கப் போகிறார்கள் என்பதை இயேசு எவ்வித ஒளிவுமறைவுமின்றி மிக வெளிப்படையாகக் கூறுகின்றார்.
“இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்” (மத்
10:16) என்று எதார்த்த உண்மையை உரைக்கும் இயேசு, சீடர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் வெறுப்பும் துன்பமும் அவர்களைத் துரத்தும் (மத் 10:23) என்பதை முன்கூட்டியே அறிவிப்பதோடு, அவற்றைக் கண்டு ‘எதற்கும் அஞ்சவேண்டாம்’ என்றும்
ஊக்கப்படுத்துகிறார்.
சீடர்கள்
எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் வன்முறைகளுக்கும் சவால்களுக்கும் எதிராக இயேசு அவர்களுக்கு வழங்கும் ஒரே கேடயமும் பாதுகாப்பும், இறைவன் மீது அவர்கள் கொள்ள வேண்டிய அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே ஆகும். ‘சந்தையில் மிக மலிவான காசுக்கு இரண்டு என்ற கணக்கில் விற்கப்படும் சிட்டுக்குருவிகள் கூட தந்தையின் அனுமதியின்றி தரையில் வீழ்வதில்லை; அப்படியிருக்க, உங்களைப் பராமரிக்கும் இறைவன் உங்களையும் தீமையிலிருந்து பாதுகாப்பார் என்ற நம்பிக்கையே தம் சீடர்களை வழிநடத்தவேண்டும்’ என்று
இயேசு கூறுகிறார்.
இறை
நிழலில் வாழும் சீடர்களுக்கு இயேசு வழங்கிய இந்தப் பேராற்றலே கடந்த இருபது நூற்றாண்டுகளாகக் கோடான கோடி உன்னத உள்ளங்களை உறுதிப்படுத்தியுள்ளது. “ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” (மத்
10:28) என்று இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய சொற்கள், வரலாற்றில் எண்ணற்ற கிறித்தவர்களை மரணம் வரை துணிவுகொள்ளச் செய்துள்ளன.
இன்றைய
சூழலில் சத்தீஸ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள
தலித் மற்றும் பழங்குடியினக் கிறித்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்காகவும், நற்செய்தியை அறிவிப்பதற்காகவும் அவர்களின் வீடுகள் இடிக்கப்படுவதையும், வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்படுவதையும், இறந்தவர்களைப் பொதுக் கல்லறைகளில் அடக்கம் செய்ய உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஏன், நம்பிக்கையின் பொருட்டுக் கிறித்தவர்கள் படுகொலை செய்யப்படுவதையும் கூட அண்மைக்காலங்களில் நாம் அதிகமாகக் காண்கிறோம். இத்தகைய அச்சுறுத்தல் நிறைந்த இக்கட்டான சூழலில்தான், ‘உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்’
என்ற இயேசுவின் வார்த்தைகள் கிறிஸ்துவை நம்பி அவரை அறிக்கையிடுபவர்களுக்கும் நமக்கும் ஒரு மாபெரும் அரணாக விளங்குகின்றன.
இயேசு
கிறிஸ்துவின் வழியாக ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் இந்த அஞ்சா நெஞ்சத்தை இறைவன் அருளாகப் பொழிந்துள்ளார் என்பதைப் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் மிக அழகாக விளக்குகிறார். ஆதாம் வழியாய் உலகிற்குள் நுழைந்த பாவமும் மரணமும் மனிதனை அடிமைத்தனமான பயத்திற்குள் தள்ளியது என்றால், இயேசு கிறிஸ்துவின் வழியாய் வந்த மீட்பின் அருளானது நமக்கு முழுமையான விடுதலையையும் வீரத்தையும் தருகிறது. சவால்களும் துன்பங்களும் நம்மைச் சூழ்ந்தாலும், கிறிஸ்து நமக்குத் தந்த அந்த அருள்கொடை எத்தகைய சவால்களையும் அச்சத்தையும் வெல்லும் பேராற்றல் கொண்டது என்பதை பவுலடியார் ஆழமாகப் பதிவு செய்கிறார்.
இவ்வாறு
மூன்று வாசகங்களும் நமக்குத் தரும் ஒட்டுமொத்த இறைச்செய்தி: ‘சவால்கள் நிறைந்த இந்த உலகினில் இயேசு கிறிஸ்துவை நம் வாழ்வின் முன்மாதிரியாகக் கொண்டு நாம் எதற்கும் அஞ்சாமல் வாழவேண்டும்.’ இந்த இறைவார்த்தைகளின் ஒளியில், நம் எதார்த்த வாழ்வை மாற்றி அமைக்கக்கூடிய மூன்று முக்கிய வாழ்வியல் சிந்தனைகள்:
முதலாவது,
அச்சத்தை எதிர்கொள்ளும் ஆன்மிகத் துணிவை நாம் நமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இறைப்பணியிலும், நம் அன்றாடக் குடும்ப வாழ்விலும் அச்சங்கள் வருவது இயல்பான ஒன்றுதான்; ஆனால், அந்த அச்சத்தைக் கண்டு நாம் பின்வாங்காமல், நம்மைத் தாங்கி நடத்தும் கரம் சாதாரண மனிதனுடையது அல்ல; அது அகில உலகையும் படைத்துக் காக்கும் வல்லமை வாய்ந்த வீரரின் கரம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நம் உள்ளத்தில் எழவேண்டும்.
இரண்டாவது,
நாம் கடவுளின் பார்வையில் எவ்வளவு விலைமதிப்பற்றவர்கள் என்பதை ஆழமாக உணர்ந்துகொள்ளவேண்டும். நம்முடைய ஒவ்வொரு தேவையையும் பலவீனத்தையும் ஏன், நம் தலைமுடியின் எண்ணிக்கையைக் கூட அவர் அறிந்துள்ளார். இத்தகைய ஆழமான இறைப்பராமரிப்பின் மீதான நம்பிக்கை, நம் இதயத்திலிருந்து அனைத்து அச்சங்களையும் வேரோடு விரட்டியடிக்கவேண்டும்.
மூன்றாவது,
இந்த உலகிற்கு முன்பாகக் கிறிஸ்துவைத் துணிவுடன் அறிக்கையிடும் உண்மையான சாட்சிகளாக நாம் மாறவேண்டும். நற்செய்தி விழுமியங்களின்படி நேர்மையாக வாழும் போது நாம் தனிமைப்படுத்தப்படலாம். ஆனால், “மனிதர் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்ளும் எவரையும், விண்ணகத்திலுள்ள என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்” என்ற
இயேசுவின் வாக்குறுதி, நமக்கு மாபெரும் சாட்சிய வாழ்விற்கான ஆன்மிக வலிமையைத் தருகிறது.
நிறைவாக,
கடலில் புயல் வீசும்போது படகில் இயேசு தூங்கிக் கொண்டிருந்தாலும், அவர் அதே படகில்தான் இருக்கிறார் என்ற உண்மை சீடர்களுக்குப் பாதுகாப்பைத் தந்ததுபோல, நம் வாழ்வின் புயல்களின் நடுவே, சவால்களின் மத்தியில் இறைநம்பிக்கையோடு நாம் அச்சத்தை எதிர்கொள்வோம். இறைப்பணி செய்யவோ, நற்செய்தி விழுமியங்களின்படி வாழவோ நாம் இனி எதற்கும் அஞ்சத் தேவையில்லை. வலிமை வாய்ந்த வீரராக நம் பக்கத்தில் நிற்கும் ஆண்டவரைத் துணையாகக் கொண்டு, அஞ்சாமல் புறப்படுவோம், கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாய் வாழ்வோம்!