news-details
சிறப்புக்கட்டுரை
தகர்க்கப்படும் சனநாயகக் கலாச்சாரம்

நாம் கொண்டாடும் இன்றைய வெற்றி, ஒரு முதல்படியே. மிகப்பெரிய வெற்றிகளையும், மாபெரும் சாதனைகளையும் இனிவரும் காலங்களில் எட்டவிருக்கிறோம் என்பதே உண்மை. நமக்குக் கிட்டிய இம்மாபெரும் வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளும்  அளவிற்கு நம்மிடம் வலு உள்ளதா? எதிர்வரும் காலங்கள் எழுப்பும் சவால்களைச் சந்திக்கும் ஆற்றலை வளர்த்துள்ளோமா?”

(ஜவகர்லால் நேரு அவர்கள் இந்தியச் சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

பண்டித நேரு அவர்கள், விடுதலை பெற்ற இந்தியா  எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்கும் ஆற்றலைப்  பெறவேண்டும் என்று விழைகிறார். இந்தியா விடுதலை பெற்றபோது இந்தியா ஓர் ஒருமித்த சனநாயகக் குடியரசாகத் திகழ முடியுமா? என்ற கேள்வி உலகில் பல இடங்களில், பலராலும் எழுப்பப்பட்டது.

இதுவரை பரீட்சித்துப் பார்க்காத (untried) அரசு, ஏற்றுக்கொள்ள முடியாத நாட்டுப் பிரிவினை, தெளிவற்ற அரசியல் அணிகள், நாடு எதிர்கொண்ட வகுப்புவாத வன்முறைகள், சமூகப் பிளவுகள் - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்.

இத்துணை அளவுள்ள பிரச்சினைகளைத் தாண்டி, இந்தியா ஒரு சனநாயகக் குடியரசாகக் கட்டப்பெறல் சாத்தியமா? என்ற கேள்விகளெல்லாம் எழுந்த நிலையிலும், இந்தியா  இன்றும் சனநாயகக் குடியரசாகவே நிற்கிறது.

இந்தியா எனும் நாடு பல்வேறு வேற்றுமைகளுள்ளும், ஒரே அரசியல் அலகாக (Political unit), அதுவும் சனநாயக அமைப்பாகச் செயல்படும் சனநாயகமாக இயங்கவே செய்கிறதுஎன்றார் அமர்த்தியாசென் (1999).

இந்தியத் தலைவர்கள் கனவு கண்ட சனநாயகம், இச்சனநாயகத்தை உள்ளீடாகக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தை மக்கள் மயப்படுத்தும் வகையில் உருவான சனநாயக நிறுவனங்கள் - இவையெல்லாம் வலுவாகவே உருவாக்கப்பட்ட பின்பும், இந்நிறுவனங்கள் மக்களில் பலருக்கும் எட்டும் (access) தூரத்தில் இருப்பதாகச் சொல்லப்படினும், இன்னும் சாத்தியப்படாதது ஏன்?

ஐக்கிய நாட்டு அவை மனித உரிமைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய 1948-ஆம் ஆண்டு உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் உருவாயிற்று. உலகில் விடுதலை பெற்ற நாடுகளில் பல இப்பிரகடனத்தின் முக்கியச் சரத்துகளை அந்தந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் இணைத்துக்கொண்டன. விடுதலை பெற்ற இந்தியா உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்திலும் உலகளாவிய பிரகடனத்தின் கூறுகள் பல இடம்பெற்றிருக்கின்றன. ஐக்கிய நாட்டு அவையின் இவ்வரிய பிரகடனத்தை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.

இப்பிரகடனம் பொதுவான மனித உரிமைப் பாதுகாப்பு அரணாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மானுட உரிமைகள் மறுக்கப்பட்ட அனைத்துச் சமூகப் பிரிவினருக்குமான மனித உரிமைகளைப் பேணுவதற்கான மனித உரிமைச் சாசனங்கள், உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் எனப் பல பரிமாணங்களில் மனித உரிமைப் பாதுகாப்புக்கென உரிமைகள் வகுக்கப்பட்டன.

சனநாயகச் சமூகத்தின் பாதியளவான பெண்கள்மீது நிகழ்த்தப் பெறும் பாகுபாட்டிற்கு எதிரான உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான உரிமைகள், அகதிகள், பூர்வீகக் குடிகள், கலாச்சார உரிமைகள், பொருளாதார உரிமைகள், குடியுரிமைகள் எனப் பல்வேறு உரிமைகள் சட்டம்போல வகுக்கப்பட்டதுடன், .நா.வின் உறுப்பு நாடுகள் இவ்வுரிமைகளைக் காப்பதற்கான ஒப்புதலும் பெறப்பட்டன. இவ்வுரிமைகள் மீறப்படாமலிருக்கக் கண்காணிப்பு அமைப்புகளும் உருவாயின.

.நா. சபை மூலம் உருவான கண்காணிப்பு அமைப்புகள் தேசிய அளவிலும், உரிமைகள் மீறப்பெறாமல் கண்காணிக்க தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், தேசியப் பெண்கள் ஆணையம் என உரிமைப் பாதுகாப்பு ஆணையங்கள் போன்றவற்றைச் சட்டப் பூர்வமாகவே உருவாக்கின. மனித உரிமை வழக்குகளை நடத்துவதற்கான தனி நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன.

இவ்வளவு பெரிய முன்னுரை இக்கட்டுரைக்கு என்ன தேவை?’ என்ற கேள்வி வாசகர்களிடம் எழுந்தால், அதில் தவறொன்றும் இல்லை.

இந்தியச் சனநாயகக் குடியரசுக்கு இன்று அகவை எழுபத்தைந்து. பெருத்த கனவுகளோடும் நம்பிக்கையோடும் உருவாக்கப்பட்ட இந்தியக் குடியரசு இன்றும் சிதையாமல் காப்பாற்றப்படுகிறது என்று  நம்புகிறோம். மகாத்மா நம்பினார்; நேரு நம்பினார்; அம்பேத்கரும் நம்பினார். நாம் கனவு கண்டசனநாயகச் சமயச் சார்பற்ற இந்தியாஇன்றும் வடிவ (forus) அளவில் காப்பாற்றப்பட்டு வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான காலத்திலேயே இச்சட்டம் இந்துப் பண்பு (un Hindu) இல்லாதது என்று மதத் தீவிரவாதம் பேசிய சங்கப் பரிவாரங்களால் இகழப்பட்டதுஉலகில் மிகப் பெரிய சட்ட வல்லுநராக மனுஸ்மிருதியைத் தந்த மனுவைத்தான் கோல்வால்க்கர் புகழ்ந்தார்.

இன்னும் இச்சாசன வடிவை, சாசனம் தரும் உள்ளடக்கத்தை நம்பாத ஓர் அமைப்பை இந்தியச் சனநாயகக் குடியரசை ஆளும் பொறுப்பேற்ற பின்பு, அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழியேற்று ஆட்சிக் கட்டில் ஏறவேண்டிய நிலையில், இந்தியச் சனநாயகம் காப்பாற்றப்பட்டதாக நாம் நம்பலாமா?

சட்டத்திற்குட்பட்டு ஒரு நிகழ்வைத் தவறாது நடத்திக் காட்டவேண்டிய சூழலில், இன்றைய ஆட்சியாளர் ஏற்கும் நிலைப்பாடு சனநாயக நெறிமுறையைக் காக்குமா? இது நாடகமில்லையா? நாளும் இன்றைய ஒன்றிய அரசு முன்னெடுக்கும் திட்டங்கள், புதிய சட்டங்கள் அனைத்தும் மதவாதக் கருத்தியலோடு ஒத்துச் செல்கின்றன எனும்போது, சனநாயகத்திற்கு இங்கு என்னதான் வேலை?

சனநாயகம் உள்ளடக்கும் அனைத்து விழுமியங்களும் குறுகிய அரசியல் நோக்கில் விலை போகும்போது, சனநாயகம் குடிமக்களின் சம பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில் தரப்பட்ட தேர்தல் முறையும்கூட குடிமக்களில் ஒரு பகுதியினரால் அவமதிக்கப்பெறும்போது சனநாயகம் எங்கே?

மனித உரிமைக் கலாச்சாரம்

சனநாயகம், சனநாயகக் குடியரசு என்பன வெறும் சொல்லாக்கங்கள் அல்ல; ஒரு வாழ்வியல் நெறி. இவ்வாழ்வியல்நெறியைச் சட்டங்களும் சாசனங்களும் மட்டும் காக்கமுடியாது. மனித உரிமைகளைக் காக்க உலகம் முழுவதும் பாதுகாப்புச் சாசனங்களும் சட்டங்களும் உருவாயின. ஏன், நிறுவனங்களும் உருவாயினஇவ்வளவு பாதுகாப்பு அரண்கள் உருவான பின்பும் சட்டங்களும் சாசனங்களும் உருவாக்கப்பட்ட பின்பும் மனித உரிமைகள் தாறுமாறாக மீறப்பட்டு வருகின்றன என்பதுதானே உண்மை!

இந்திய அரசமைப்பின் விதி 17- தீண்டாமை ஒழிக்கப்பட்டதாகக் கூறுகிறதுஅதன் உண்மை என்ன? நாளும் பொழுதும் திராவிடத்தின் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை எவ்வளவு? தீண்டாமையை வன்முறையாக வர்ணித்தவர் மதவாதியால் கொல்லப்படுகிறார். பெண்ணடிமைத்தனம் ஒழியவில்லை. மதவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மதச்சிறுபான்மையினர்... இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்.

மனித உரிமைப் பாதுகாப்பிற்கென மிகப்பெரிய முன்னெடுப்புகளை முன்னெடுத்த .நா. அவை, இரண்டாயிரத்தின் இறுதியில் உலக நாடுகளைக்  கூட்டி, மனித உரிமைகளின் இன்றைய நிலை என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய முனைந்த போது, .நா.வும் உலக நாடுகளும் அதிர்ந்து போயின.

மனித உரிமைகள் காக்கப் பெறவில்லை என்றாலும் கூட பரவாயில்லை; மனித உரிமைகள் தாறுமாறாக மீறப்பட்டு வருகின்றன என்ற செய்திகளும் தரப்பட்டன. எனவே, .நா. ஒரு முடிவைத் தந்தது. உரிமைகளைச் சட்டங்களாலும் சாசனங்களாலும் காக்க முடியாது.

உரிமைகள் மனித வாழ்வின் வாழ்வியல் நெறியாக, மக்களின் வாழ்வோடு இணைந்த ஒரு கலாச்சாரமாக மாறாதவரை உரிமைகள் சட்டப் புத்தகத்தில் மட்டுமே இடம்பெறும். மனித உரிமைகள் ஒரு பண்பாடாக மாறவேண்டுமானால், பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு மனித உரிமைகளைக் கல்வியாகக் கொண்டு செல்ல .நா. அறிவுறுத்தியது.

அரசமைப்பே கலாச்சாரமாக...

அரசமைப்பும், அரசமைப்பின் முகப்புரையும் புரட்சிகரமானது. முகப்புரையின் சனநாயகம், சமமின்மை, சமயச் சார்பின்மை, இறையாண்மை, குடியரசு... எவ்வளவு அரிய விழுமியங்கள்! இந்திய அரசமைப்பில் மிகத் தெளிவாகவே இடம்பெற்றுள்ள அரிய பொக்கிசங்கள்! தங்க முலாம் பூசப்பட்ட ஒரு படிவத்தில் எவ்வளவு நாள் வைத்துக் காப்பாற்றப் போகிறோம்? இம்முகப்புரையின் உள்ளடக்கத்தை மக்கள் வாழ்வியல் அறமாக மாற்றுவதற்கு என்ன செய்யப் போகிறோம்?

அரசியல் பங்கேற்பில் தயக்கம் காட்டலாம்; பண்பாட்டுத்தளத்தில் செய்யவேண்டிய பணி நிறையவே உள்ளது. நிறையவே செய்வதற்கான வெளியும் நிறைய உள்ளது. செய்ய என்ன தயக்கம்?

குடிமைச் சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், சமய ரீதியான அமைப்புகள், திரு அவையின் பல்வகைப் பணித்தளங்கள் இப்பணியை முன்னெடுக்க முடியும்.

மனித உரிமைப் பணி ஏதோ ஒரு தனித்த நிறுவனம் சார்ந்த பணி மட்டுமல்ல; அனைத்துக் குடிமைச் சமூக அமைப்புகளுக்குமானது. அனைவரும் இப்பணியை முன்னெடுக்கும்போது சனநாயகம்  மக்கள் கலாச்சாரமாய் மாறும்.

இன்றைக்கு மதவாத அரசு கலாச்சாரத் தளத்தை அரசியல்மயமாக்கி, உண்மையைத் திரித்து மக்களைத் திசைதிருப்பி வருகிறது. மக்கள் மயப்பட்ட இப்பொய்மைகளை, இப்புனைவுகளை உடைத்து மக்களிடம் உண்மையைக் கொண்டு  செல்ல வேண்டிய கட்டாயம் நிறையவே உள்ளது.

இவ்வுண்மையில் நாம் தெளிவு காட்டினால், திடீரென்று தோன்றி அதிர்ச்சி காட்டும் வெற்று அரசியல் வளர்ச்சி கண்டு அச்சம் கொள்ளும் அவசியம் இருக்காது.