news-details
சிறப்புக்கட்டுரை
திரைகளுக்கும் சமூகத்திற்கும் இடையே இன்றைய இளைய தலைமுறை

இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு இளையோரை உருவாக்குவது குறித்து மேய்ப்புப்பணிச் சிந்தனை

அன்பார்ந்த குருக்களே, துறவிகளே மற்றும் சகோதர சகோதரிகளே!

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் அமைதியும் உங்களுடன் இருப்பதாக!

ஒவ்வொரு தலைமுறையும் தனக்கே உரிய போராட்டங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்கிறது. ஆனால், இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சவாலானது மனித வரலாற்றிலேயே இதுவரை எண்ணிப் பார்த்திராத ஒன்றாகும். இதற்கு முன்பு எந்தவொரு தலைமுறையும் இந்த அளவிற்குத் தொழில்நுட்பத்தோடு இணைந்தும், அதே நேரத்தில் இவ்வளவு தனிமையோடும் வாழ்ந்ததில்லை. இத்தலைமுறைக்குத் தகவல்கள் நிறைந்திருந்தாலும் ஆழமான சிந்தனையின்றித் தவிக்கிறது. வெளித்தோற்றத்தில்  வீரியமிக்கதாகத் தோன்றினாலும், அகத்தில் பலவீனமான நிலையில் உள்ளது. நவீனத் திரைகளான திரைப்படம், கைப்பேசி, சமூக ஊடகங்கள் அல்லது எண்ம (டிஜிட்டல்) பொழுதுபோக்குகள் என எதுவாக இருந்தாலும்அவை கண்ணுக்குத் தெரியாத வகுப்பறையாகவும், அமைதியான பேச்சாளராகவும், உணர்வுகளை வடிவமைக்கும் கலைஞனாகவும், கலாச்சாரத்தைத் தீர்மானிக்கும் சர்வாதிகாரியாகவும் இன்று மாறியுள்ளது.

இன்றைய இளம் மனங்களுக்குத் தொடர்ச்சியாக ஊட்டப்படுவது ஞானம் அல்ல; மாறாக, சலனங்களும் தூண்டுதல்களுமே. உண்மை அல்ல; வெறும் பிம்பங்களே. பகுத்தறியும் திறன் அல்ல; மாறாக, உணர்ச்சிப்பூர்வமான தூண்டல்களே! திரை என்பது ஒரு புதிய அதிகார மையமாக உருவெடுத்துள்ளது. அதுவே ஆசைகளை வடிவமைக்கிறது, அடையாளங்களைக் கட்டமைக்கிறது, இலக்குகளை உற்பத்தி செய்கிறது, மேலும், ஒழுக்கநெறி உணர்வுகளையும், அவர்களின் தலைமைத்துவத்தையும் கூடத் தீர்மானிக்கிறது.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் எதார்த்தத்தை நேரடியாக எதிர்கொள்வதில்லை; மாறாக, திரைகளின் வழியேதான் அதனை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கை என்பதே பிம்பங்கள், தற்காலப் போக்குகள் (trends), இணையத்தில் பரவும் தற்காலிக உணர்வுகள், சினிமா கற்பனைகள் மற்றும் எண்மத் தொழில்நுட்ப அங்கீகாரங்கள் ஆகியவற்றின் மூலமாகவே அவர்களுக்குக் கடத்தப்படுகிறது. இதன் விளைவாக, அன்றாட வாழ்க்கையின் இயல்பான போராட்டங்களான கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், பொறுமை, நிராகரிப்பு மற்றும் பொறுப்பேற்பு போன்றவற்றை எதிர்கொள்ளும் துணிவைப் பலர் மெல்ல இழந்து வருகின்றனர்.

மாற்றங்கள் என்பவை உடனடியாக, வியத்தகு முறையில், உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே நிகழும் என்ற ஆபத்தான மாயை நம் இளைஞர்களிடையே பரவி வருகிறது. திரைப்படங்கள் நாயகத்தனமான குறுக்கு வழிகளை நல்வாக்காகக் காட்டுகின்றன. சமூக ஊடகங்கள் உழைப்பற்ற அங்கீகாரத்தை அள்ளித் தருகின்றன. எண்மத் தொழில்நுட்பக் கலாச்சாரம் என்பது நற்பண்பை விடத் தோற்றத்திற்கும், நிதானமான சிந்தனையைவிட உடனடி எதிர்வினைக்கும், நேர்மைத்தனத்தை விடப் புகழுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், சகிப்புத்தன்மையைவிடத் தப்பித்தலையும், வாழ்வின் சாரத்தைவிடத் தற்காலிகச் சலனங்களையும், நற்பண்பைவிடத் தன்னை வெளிப்படுத்துவதையும் மட்டுமே முதன்மையாகத் தேடும் ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. “நீங்கள் இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள்; மாறாக, உங்கள் மனம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடையுங்கள் (உரோ 12:2) என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புனித பவுல் நம்மை எச்சரித்துள்ளார். இன்று நாம் சந்திக்கும் நெருக்கடியும் முற்றிலும் இதுவே; சிந்தனைகள் இங்குப் புதுப்பிக்கப்படுவதில்லை; அவை நிரலாக்கம் (programmed) செய்யப்படுகின்றன.

சமூகத்தின் உணர்ச்சிமயமாக்கல்

திரைக் கலாச்சாரத்தின் மிகக் கடுமையான ஆபத்துகளில் ஒன்று, பொது வாழ்க்கையை உணர்ச்சிமயமாக்குவதாகும். உணர்ச்சிகளைத் தூண்டும் பிரச்சினைகள், வியத்தகு கதையாடல்கள், இணையத்தில் பிரபலமாகும் ஹேஷ்டேக்குகள் (hashtags), சினிமா முழக்கங்கள் மற்றும் கூட்டு உத்வேகம் ஆகியவற்றால் இளைஞர் மிக எளிதாகத் திரட்டப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் நீண்ட கால எதிர்காலம், சமூக நீதி, கல்வி, சுற்றுச்சூழல், மொழி, கலாச்சாரம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நாகரிகப் பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதிக்கும் ஆழமான பிரச்சினைகள் எழும்போது இதேபோன்ற ஆற்றல் பெரும்பாலும் காணப்படுவதில்லை. இது, எதிர்வினை ஆற்றக்கூடிய  ஆனால், நிதானமாகச் சிந்திக்காத; கூட்டமாகக் கூடக்கூடிய ஆனால், ஒருங்கமையாத; போராடக்கூடிய ஆனால், விடாமுயற்சியுடன் நிலைத்திருக்காத ஒரு சமூகத்தையே உருவாக்குகிறது.

ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்குக் கேள்வி கேட்கக்கூடிய, பகுத்தாயும் திறன் கொண்ட, நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் ஆற்றல் கொண்ட, ஆரோக்கியமாக விவாதிக்கவும் விமர்சனப் பூர்வமாகச் சிந்திக்கவும் திறன் கொண்ட இளைஞர் தேவைப்படுகிறார்கள். அதற்கு மாறாக, உணர்ச்சித் தூண்டல்களாலும் டிஜிட்டல் போக்குகளாலும் மட்டுமே இயக்கப்படும் ஒரு தலைமுறையை உருவாக்கிவிடும் அபாயத்தில் நாம் இருக்கிறோம். வாசிப்புப் பழக்கம், தத்துவார்த்தச் சிந்தனை, வரலாற்று விழிப்புணர்வு மற்றும் அறிவுசார் ஒழுக்கம் ஆகியவற்றின் வீழ்ச்சி மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. “பேதைகள் எதையும் நம்புவர்; விவேகிகளோ தங்கள் நடையின்மேல் கண்ணாயிருப்பர்என்கிறது நீதிமொழிகள் (14:15). இன்று அந்த விவேகம் மறைந்து வருகிறது; பகுத்தறியும் திறன் பலவீனமடைந்து வருகிறது; ஞானத்தின் இடத்தை ஆரவாரம் ஆக்கிரமித்துக் கொள்கிறது. பகுத்தறிவை விட உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்தும்போது, மனிதர்களைத் தங்களுக்குச் சாதகமாகத் திசை திருப்புவது எளிதாகிவிடுகிறது. ஆழமான கொள்கைகளின் இடத்தைத் தற்காலப் போக்குகள் மாற்றியமைக்கும்போது, உண்மை என்பது பலவீனமாகி விடுகிறது. கல்விக்கு மாற்றாகப் பொழுதுபோக்கு அமையும்போது, ஒட்டுமொத்த நாகரிகமே பாதிப்பிற்குள்ளாகிறது.

துன்பங்களைக் கண்டு அஞ்சும் ஒரு தலைமுறை

இன்றைய நம் இளையோர் வசதி வாய்ப்புகளில் வளர்ந்து வருகிறார்கள்; ஆனால், சவால்களைத் தாங்கும் மனவலிமையில் (resilience) பெரும்பாலும் சுருங்கிப் போகிறார்கள். எண்மத் தொழில்நுட்ப உலகம் என்பது வலிகளிலிருந்து மிக எளிதாகத் தப்பித்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால், போராட்டங்கள் இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது.

அர்ப்பணிப்பு இல்லாமல் எந்தவொரு நாகரிகமும் கட்டியெழுப்பப்படவில்லை. ஒழுக்கநெறி இல்லாமல் எந்தவொரு புனிதரும் உருவாகவில்லை. துன்பங்களைச் சந்திக்காமல் எந்தவொரு தலைவனும் முதிர்ச்சியடையவில்லை. கிறிஸ்துவே,  “என்னைப் பின்பற்றிவர விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, நாள்தோறும் தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23) என்று முழங்கினார். இன்றைய எண்மத் தொழில்நுட்பக்  கலாச்சாரத்தில் சிலுவை என்பது நாகரிகமானதென்றாகக் கருதப்படுவதில்லை. தியாகம் என்பது பழித்துப் பேசப்படுகிறது. அர்ப்பணிப்பு என்பது அஞ்சப்படுகிறது. சகிப்புத்தன்மை என்பது தவிர்க்கப்படுகிறது. ஆனால், கடின உழைப்பையும் துன்பங்களையும் சகித்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளாமல், இளையோரால் பொறுப்புள்ள குடிமக்களாகவோ, நம்பிக்கையுள்ள  நம்பிக்கையாளர்களாகவோ, அர்ப்பணிப்புள்ள தம்பதியராகவோ, நேர்மையான தலைவர்களாகவோ அல்லது சமூகத்தின் இரக்கமுள்ள பணியாளர்களாகவோ மாறமுடியாது.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)