திருப்பலி முன்னுரை:
இன்றைய
இறைவார்த்தைகள் ‘இறைவனை நம்புகிறவர் ஒருபோதும் கைவிடப்படமாட்டார்’ என்ற
ஓர் ஆழமான ஆன்மிக உண்மையை எடுத்துரைக்கின்றன. தொடக்கக் காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்களை வேதகலாபனைக்கு ஆளாக்கிக் கொன்றனர். அப்படிப்பட்ட சூழலில் இயேசுவின் வார்த்தைகள் ஆற்றலாக இருந்ததையும் இருப்பதையும் நாம் உணரலாம். “உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்; மாறாக, ஆன்மாவையும் உடலையும் நரகத்திற்குத் தள்ள எல்லாம் வல்ல கடவுளுக்கே அஞ்சுங்கள்”என்கிறார்
இயேசு.
இந்த
உலகில் உண்மையாக வாழ விரும்புகிறவர்களுக்குப் பல சோதனைகள் வரலாம்;
நல்லதைச் செய்தாலும் குறைகூறப்படலாம்; நீதிக்காக நின்றாலும் தனிமைப்படுத்தப்படலாம். இறைவாக்கினர் எரேமியா தன் வாழ்வில் பல துன்பங்களையும் எதிர்ப்புகளையும்
சந்தித்தார். அவர் வரவிருக்கும் தண்டனையை இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்து எச்சரிக்கை தந்ததால் அவரை ‘அழிவின் இறைவாக்கினர்’ என்று
துன்புறுத்தினார்கள்.
ஆனால், இறைவனின் அழைப்புக்கு முழுமையாகத் தன்னையே அர்ப்பணித்து இறைவனைச் சார்ந்து வாழ்ந்ததால் இறைவாக்கினர் எரேமியா ‘ஆண்டவர் என்னோடு இருக்கிறார்’ என்ற
உறுதியான நம்பிக்கையில் இறைவனுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தார்.
இறைவனின்
பிள்ளைகளாகிய நாமும் நாம் வாழும் சமூகத்தில் இறையாட்சின் மதிப்பீடுகளை விதைக்க ஒவ்வொரு நாளும் முயற்சி எடுப்போம். நொடிதோறும் செடி வளர்வதுபோன்று ஒவ்வொரு நிமிடமும் இறையுறவில் வளர்ந்து ‘இறைவனே எனக்கு நிலையான பலம்’ என்ற நம்பிக்கையோடு வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்
முதல்வாசக முன்னுரை
இறைவாக்கினர்
எரேமியா எதிர்ப்புகளும் துன்பங்களும் சூழ்ந்த நிலையிலும் ஆண்டவரை நம்பி நிற்கிறார். மனிதர்கள் தன்னை நிராகரித்தாலும் ஆண்டவர் தன்னோடு இருக்கிறார் என்ற உறுதியை அவர் வெளிப்படுத்துகிறார். ‘படைகளின் ஆண்டவரே! நேர்மையாளர்களைச் சோதித்து அறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே’ என்று கூறி, உடனிருக்கும் இறைவனை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
ஆதாமின்
பாவத்தால் உலகில் பாவமும் மரணமும் வந்ததையும், இயேசு கிறிஸ்துவின் மீட்பின் மூலம் மனிதன் புதிய வாழ்வைப் பெறுகிறான் என்பதையும், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு என்பதை விளக்கிக் கூறி ஞானமுள்ளவர்களாய் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எம் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும் துன்பங்களிலும் சோதனைகளிலும் மனந்தளராமல் இறைவனின் சாட்சிகளாய் தொடர்ந்து வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. இரக்கத்தின்
இறைவா! உலக நாடுகளை ஆளும் தலைவர்கள் நீதியுடனும் அன்புடனும் மக்களை வழிநடத்தி, அமைதி மற்றும் சகோதரத்துவத்தை மக்களிடையே வளர்க்க அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நம்பிக்கையின்
ஒளியே எம் இறைவா! பயம், துன்பம், நோய் மற்றும் மனவேதனையில் வாழும் மக்கள் அனைவரும் ‘அஞ்சாதீர்’
என்ற ஆண்டவரின் வார்த்தையில் நம்பிக்கைகொண்டு வாழ தேவையான சக்தியைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நீதியின்
தெய்வமே எம் இறைவா! கிறித்தவர்கள் என்ற முகவரியைப் பெற்ற நாங்கள் அனைவரும் எரேமியா இறைவாக்கினரைப் போல அச்சமின்றி ஆண்டவரைப் பற்றி எடுத்துரைக்கத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.