news-details
தலையங்கம்
மும்மொழித் திட்டம்: கல்விக்கொள்கையா? காவிக்கொள்கையா?

இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றைத்தன்மை கொண்ட கலாச்சார மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ஒன்றிய அரசின் அதிகாரக் கரங்கள், மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டின் கல்விச் சுவர்களில் மோதி நிற்கின்றன.

மே மாதத்தில், கல்விக்கூடங்கள் கோடை விடுமுறையில் அயர்ந்திருந்த வேளையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) விடுத்த அந்த ஐந்து பக்கச் சுற்றறிக்கை, ஒரு நிர்வாக அறிவிப்பு மட்டுமல்ல; அது பன்மொழிச் சமூகம் ஒன்றின்மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுத் தாக்குதலாகும்.

2026 ஜூலை 1 முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கட்டாயம் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்றும், அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்றும் அந்த ஆணை கட்டளையிடுகிறது. ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தாலும், அது அந்த இரண்டு இந்திய மொழிகளின் கணக்கில் வராது என்பதுதான் இந்தச் சூழ்ச்சியின் உச்சம். மேலோட்டமாகப் பார்க்கையில், ‘அதிக மொழிகளைக் கற்பது அறிவு வளர்ச்சிக்கு உதவும்எனும் பொதுவான வாதத்தை முன்வைக்கும் இந்தத் திட்டம், அதன் உட்புறத்தில் இந்தி ஆதிக்கத்தை ஊடுருவச் செய்யும் ஒரு நச்சு வேராகும்.

நிர்வாக ரீதியான ஒரு சாதாரண மாற்றமாகத் தோற்றமளிக்கும் இச்செயல்பாட்டின் பின்னணியில், இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றைத்தன்மை கொண்டஇந்தி-இந்து-இந்துஸ்தான்எனும் கருத்தியலைத் திணிக்கும்காவித் திட்டத்தின்நீண்ட நிழல் படிந்திருப்பதை நாம் உணரத் தவறக்கூடாது. இது வெறும் கல்விக்கொள்கை அல்ல; இது மொழிவழித் தேசியங்களை நசுக்கும் ஓர் அதிகாரக் கொள்கை.

தமிழ்நாட்டின் மேனாள் முதல்வர் மு.. ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியது போல, இது மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டமொழித் திணிப்பே!’ தென்னிந்திய மாநிலங்களில் வாழும் ஒரு மாணவன், தன் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்திற்குப் பிறகு, மூன்றாவது மொழியாக எதைத் தேர்ந்தெடுப்பான்? ஆசிரியர் பற்றாக்குறை, பாடப்புத்தகக் கட்டமைப்பு, தேசிய அளவில் நிலவும் இந்திச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், அந்தத் தெரிவு இயல்பாகவே இந்தியை நோக்கியே தள்ளப்படும். ஆனால், இதே கேள்விக்கு மறு பக்கம் என்ன பதில்? இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழ், தெலுங்கு அல்லது மலையாளத்தைக் கற்கவேண்டிய கட்டாயம் உண்டா? இல்லவே இல்லை. அங்குள்ளவர்கள் சமஸ்கிருதத்தையோ அல்லது வேறு ஏதேனும் வட இந்திய மொழியையோ தேர்ந்தெடுத்துக் கொள்வதன் மூலம், இந்த விதியை மிக எளிதாகக் கடந்து விட முடியும். இந்தசமநிலையற்ற தன்மைதான் தமிழ்நாட்டின் கோபத்திற்குக் காரணம். சட்டப் புத்தகத்தில் சமமாகத் தோன்றும் இந்த விதி, நடைமுறையில் தென்னிந்திய மாணவர்கள்மீது மட்டும் கூடுதல் சுமையை ஏற்றுகிறது.

மொழி என்பது யாவருக்கும் அடையாளம்; அது நம் முகம்; முகவரி. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மொழி என்பது வெறும் பாடத் திட்டம் அல்ல; அது ஒரு வரலாற்றுத் தழும்பு. 1937-இல் இராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோதுதான், இந்த மாநிலத்தின் சுயமரியாதை உணர்வு பீறிட்டுக் கிளம்பியது. பெரியார் .வெ. இராமசாமி அவர்களின் தலைமையில் தாளமுத்து, நடராசன் போன்றோர் தங்கள் இன்னுயிரைத் தந்து காத்த மொழிப்போர் வரலாறு நம் இரத்தத்தில் ஊறியுள்ளது.

1965-இல் மாணவர்கள் நடத்திய அந்த மாபெரும் அறப்போர், லால் பகதூர் சாஸ்திரி போன்ற அன்றைய தலைவர்களையே பணிய வைத்தது. “இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கும்என்ற நேருவின் வாக்குறுதி ஒரு சட்டப் பாதுகாப்பாகப் பெறப்பட்டது. 1968-இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் இயற்றப்பட்டஇருமொழிக் கொள்கை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக உயர்த்தியுள்ளது. உலக வெளியில் நம் மாணவர்கள் போட்டியிட ஆங்கிலமும், நம் பண்பாட்டு வேர்களைக் காக்கத் தமிழும் போதுமானவை என்பதைத் தமிழகத்தின் வளர்ச்சி எண்கள் உரக்கக் கூறுகின்றன.

ஆயினும், ஒன்றிய பா.. அரசு முன்வைக்கும் தேசியக் கல்விக் கொள்கை, ‘மாணவர்களுக்குத் தெரிவு செய்யும் சுதந்திரம் இருக்கிறதுஎன்று வாதிடுகிறது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களை ஆராய்ந்தால் அந்தச் சுதந்திரம் ஒரு மாயை என்பது நன்கு புரியும். ஒரு தனியார் பள்ளியில் 50 மாணவர்கள் ஒன்பது வெவ்வேறு மொழிகளைத் தேர்ந்தெடுத்தால்ஒன்பது ஆசிரியர்களை நியமிக்க அந்தப் பள்ளி முன்வருமா?

நிச்சயமாக வராது. அங்கே ஏற்கெனவேதட்சிண பாரத இந்தி பிரச்சார சபாபோன்ற அமைப்புகள் மூலம் இந்தி ஆசிரியர்கள் எளிதாகக் கிடைப்பார்கள். மத்திய அரசு இந்தி ஆசிரியர்களை நியமிக்க நிதி ஒதுக்கும்; ஆனால், தமிழ் ஆசிரியர்களை வடமாநிலங்களில் நியமிக்க அதே ஊக்கத்தைக் காட்டாது. விளைவாக, ‘வேறு வழியின்றிமாணவர்கள் இந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படும். ஆகவே, இது ஒருகட்டமைப்புச் சார்ந்த விபத்து(Structural Accident) அல்ல; மாறாக, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டகட்டமைப்புச் சார்ந்த திணிப்பு (Structural Imposition) இது.

இந்த மொழித் திணிப்பு வெறும் கல்விக் கொள்கையோடு நிற்கவில்லை. இது ஒரு நிதி ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுவது வெட்கக் கேடு! தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதி, ‘சமக்ர சிக்ஷா அபியான்திட்டத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி கிடையாது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானது. ஒரு மாநிலத்தின் கல்வி உரிமையை, நிதியைக் கொண்டு விலை பேசுவது, ஆரோக்கியமான சனநாயகத்திற்கு அழகல்ல.

ஒரு குழந்தை தன் தாய்மொழியில் கல்வி கற்பது என்பது உலகளாவிய மனித உரிமை. மும்மொழிக் கொள்கை என்பது ஏற்கெனவே சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்களுக்குக் கூடுதல் சுமையைத் தருகிறது. ஒரு புதிய மொழியைக் கற்பதற்கானஅறிவாற்றல் திறன்குழந்தைகளுக்கு உண்டு எனும் வாதம், அந்த மொழியைக் கற்பதற்கான சூழலும், வளங்களும் இல்லாத ஏழை மாணவர்களுக்குப் பொருந்தாது. ஆங்கிலம் மற்றும் தாய்மொழிக் கல்வியே ஒருவரைச் சிறந்த குடிமகனா(ளா)கவும், உலகக் குடிமகனா(ளா)கவும் மாற்றப் போதுமானது.

ஒன்றிய பா..  அரசு இந்தியைத் திணிப்பதில் இவ்வளவு முனைப்புக் காட்டுவதன் பின்னணியில் ஓர்ஒற்றைப் பண்பாட்டுஅரசியல் மறைந்துள்ளது. பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், ஒரு மொழியை மட்டும் உயர்த்திப் பிடித்துஒரே நாடு, ஒரே மொழிஎன்பதன் மூலம் மற்ற மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்க முடியும் என்பதே அவர்களின் கணக்கு. இந்தியா என்பது ஒற்றைக் கல்லால் ஆன தூண் அல்ல; அது பல வண்ணக் கற்கள் இணையும் ஓர் அழகிய ஓவியம். தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது மற்ற மொழிகளின் மீதான வெறுப்பினால் அல்ல; மாறாக, தன் அடையாளத்தைச் சிதைக்கும் ஆதிக்கத்திற்கு எதிரான தற்காப்பு அரண் என்பதே உண்மை.

தன்னார்வமாக ஒரு மொழியைக் கற்பதை யாரும் தடுக்கவில்லை; ஆனால், கட்டாயமாகத் திணிப்பதை எக்காலத்திலும் ஏற்க முடியாது. ‘தமிழே எமது உயிர்; ஆங்கிலமே எமது இணைப்பு மொழிஎனும் எமது தெளிவான நிலைப்பாடு, வெறும் உணர்ச்சியல்ல; அது அறிவியல்பூர்வமான, வளர்ச்சிகரமான கொள்கை. ஆகவே, மத்திய அரசு தன் பிடிவாதத்தைக் கைவிட்டு, மாநிலங்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்.

கல்வியின் பெயரால் வரும் இந்தக் காவிக் கொள்கையை தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை வீழ்த்தும் என்பதே எமது எதிர்நோக்கு. 1965-இன் நெருப்பு இன்னும் அணையவில்லை என்பதையும், மொழிப்போர் என்பது இனப்போர் என்பதையும் ஒன்றிய ஆட்சியாளர்கள் நன்கு உணர வேண்டிய தருணம் இது. நம் மொழி, நம் உரிமை, நம் அடையாளம் - இதில் சமரசத்திற்கு என்றுமே இடமில்லை!

தாய்மொழி காப்போம்! மாநில உரிமை மீட்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்