உறவுக்குக் கைகொடுத்தார்; மக்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தார்; அன்புக்கு ஒளி கொடுத்தார்; உலக அமைதிக்கு வழிவகுத்தார்; மீட்புக்கு உயிர் கொடுத்தார்; இறையாட்சிக்கு விதை விதைத்தார்.
“உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல; தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்” என்கிறது யோவான் நற்செய்தி. மீட்பு என்பதற்கு உண்மையான பொருளே முழுமையான விடுதலை என்பதுதானே! கிறிஸ்து மண்ணகத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மரித்தது எல்லாமே மானுட மீட்புக்காகத்தான்.
இறைத்தூதராக
மண்ணில் பிறப்பெடுத்த இயேசு அரசக் குலத்திலேயே அவதரித்திருக்கக் முடியும். ஆனால், ஆடம்பர வாழ்க்கைச் சிந்தனையிலிருந்து மக்களை மீட்பதற்காகத்தான் ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எளிய மனிதர்களின் தோழனாகவும் வாழ்ந்து காட்டினார்.
அறியாமை
இருளிலிருந்து மீண்டு, மனிதர் ஞானஒளி பெற வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டவே, குறுக்குப் புத்தியுடன் கேள்வி கேட்ட சதுசேயருக்கும் பரிசேயருக்கும் தமது 12-வது வயதிலேயே ஆலயத்தில் வைத்துப் பதிலடி கொடுத்தார். பெண் விடுதலையை மீட்டெடுக்கவே, ஒரு விபச்சாரப் பெண்ணை அவர் முன் நிறுத்தி, தண்டனை வழங்கக் கோரிய பரிசேயருக்கு, “உங்களில் பாவம் செய்யாதவன், முதலில் இவர்மீது கல் எறியட்டும்” என்று
கண்டனம் தெரிவித்தார்.
யூதக்குலம்
என்ற உயர் குடியில் பிறந்தாலும் அடிமைத்தளையிலிருந்து மனிதரை மீட்டெடுக்கவே ஒடுக்கப்பட்ட பிற இனத்தாரோடும், ஒதுக்கி வைக்கப்பட்டத் தொழுநோயாளியரோடும் நெருங்கிப் பழகி இயைந்த வாழ்க்கை நடத்தினார். இறைவன் உறையும் ஆலயத்தை வியாபாரியிடமிருந்து மீட்கவே அன்று கோவிலைச் சந்தையாக்கிய
அந்தக் கொள்ளையருக்குச் சாட்டையடி கொடுத்து சரித்திரம் படைத்தார்.
பகைமை,
வெறுப்பு வேற்றுமைகளிலிருந்தெல்லாம் மனிதகுலத்தை மீட்டு, அவர்களிடையே
அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளைத் தழைக்கச் செய்யத்தானே அன்று மலைப்பிரசங்கம் முழங்கினார்! மலைப்பிரசங்கம் வழியாகப் பொதுவுடைமைச் சிந்தாத்தத்தை முழங்கிய முதல் புரட்சியாளன் இயேசு கிறிஸ்துதாம் என்பதை யாரும் மறுக்க முடியுமா? பசியிலிருந்தும் பட்டினியிலிருந்தும் மனிதரை மீட்கவே அன்றொரு நாள் அப்பத்தையும் மீனையும் ஆசிர்வதித்து, அதை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கக் கூறினார். இவரது பிறப்பு இயற்கை அமைத்த ஒரு குகையில்; இறப்பு இயற்கையினால் கிடைத்த சிலுவை மரத்தில்; திருமுழுக்கு யோர்தான் நதியில்; தமது சீடரைத் தேர்ந்தெடுத்தது கடற்கரையில்; கெத்சமெனித் தோட்டத்தில்தான் செபித்தார்; கெடுதலான அலகையை மலையில்தான் சபித்தார்; வானத்துப் பறவைகளைப் பார்க்கக் கூறினார்; வளர்ந்து நிற்கும் நெற்கதிரை
நோக்கக் கூறினார்; இயற்கைப் பேரழிவிலிருந்து உலகை மீட்கவே, இயற்கையை
நேசித்து அவற்றோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார் இயேசு.
அநீதிகள்,
அக்கிரமங்களின் பிடியிலிருந்து நீதியையும் நேர்மையையும் நியாயத்தையும் மீட்கத்தானே அன்று அதிகாரத்தின் உச்சத்திலிருந்த பிலாத்து அரசன் கன்னத்தில் அறைந்தபோது, ‘நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யவில்லையெனில் ஏன் என்னை அறைந்தாய்?’ என்று போர்க்குரல் எழுப்பினார்.
கயவரின்
நயவஞ்சகங்களைச் சந்திக்கிறபோது, பொறுமை உணர்வை மீட்டெடுக்கவே
கொடூரமான முள்முடியையும், அவமானகரமான சிலுவைச் சாவையும் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்க ஏற்றுக்கொண்டார். இதைத்தான் எசாயா 53:4-6 வசனங்களில்,
“அவர் நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்” என்று கூறப்பட்டிருக்கிறது.
குறைந்த
வயதிலேயே மரணத்தை எய்தினாலும், குறிக்கோள் மாறாத ஆன்மிக நாயகனாகவும்,
உயர்ந்த சமூகப் போராளியாகவும், குவலயத்தில் வாழ்ந்து காட்டியவர் இயேசு கிறிஸ்து. எனவே, அவர் காட்டிய மீட்பின் வழி நடப்போம். அனைத்து ஆனந்தங்களையும்
பெறுவோம்.