news-details
ஞாயிறு தோழன்
மே 10, 2026, பாஸ்கா கால 6 - ஆம் ஞாயிறு - திப 8:5-8,14-17; 1பேது 3:15-18; யோவா 14:15-21

திருப்பலி முன்னுரை

இறைவனின் அன்பில் நிலைத்திருந்து கனி கொடுக்கப் பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இறைவனை அன்பு செய்பவர்களால் மனிதர்களை அன்பு செய்யாமல் இருக்கமுடியாது. அன்பையும் கடவுளையும் பிரித்துப் பார்க்க இயலாது. அன்புள்ளவர்கள் அனைத்திலும் கடவுளைக் காண்கிறார்கள். அன்புதான் கடவுள். கடவுள்தான் அன்பு! “அன்பு செய்யுங்கள், பிறகு அனைத்தையும் செய்யுங்கள்என்கிறார் புனித அகுஸ்தினார். நாம் செய்வது அனைத்தையும் அன்போடு செய்வோம். கடவுள் யாரையும் திக்கற்றவர்களாக விட்டுவிடுவதில்லை; அவர் நல்லோர் மேலும், தீயோர் மேலும் அன்பை அளவில்லாமல் பொழிகிறார். இறைவன் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதில்லை; தாம் தெரிந்து கொண்டவர்களைத் தகுதிப்படுத்துகிறார். அனைத்து நிலைகளிலும் அவர்களை அன்பால் அரவணைக்கின்றார். இறைவனின் சாயலைப் பெற்றுள்ள நாம், உடன்வாழும் சகோதர-சகோதரிகளில் கடவுளைக் காண்போம். அன்பு செய்யும் உள்ளம் ஆண்டவர் வாழும் இல்லம்; அன்பு நிறைந்த உள்ளத்தில் ஆவியானவர் தங்குவார்.

இந்த உலகத்தில் மக்கள் பணத்திற்காக அல்ல; மாறாக, உண்மையான அன்பிற்காகவே ஏங்குகின்றனர். பணக்காரர், பதவியில் உள்ளோர் என்று ஆதாயத்தை நோக்கி அன்பு செய்யாமல், இல்லாதவர்களையும் கைவிடப்பட்டவர்களையும், வீதியை வீடாகக் கொண்டவர்களையும், கந்தலாடை உடையவர்களையும், உறவுக்காக ஏங்குபவர்களையும், தனித்துவிடப்பட்டவர்களையும் தேடிச்சென்று அன்பு செய்வோம்; மறு கிறிஸ்துவாக மாறுவோம். நம்மீது கொண்ட அன்பினால் உயிரைக் கொடுத்து உலகை மீட்ட இயேசுவின் அன்பைப் பிரதிபலிக்கும் அன்பின் தூதுவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.  

முதல் வாசக முன்னுரை

திரு அவையின் தொடக்கக் காலங்களில் திருத்தூதர்களின் நற்செய்திப் பணியினால் மகிழ்ச்சி உண்டாயிற்று. தீய ஆவிகள் விலகி ஓடின; நோயுற்றோர் நலம் பெற்றனர்; இறந்தவர் உயிர்ப்பெற்று எழுந்தனர். திருத்தூதர்கள் தூய ஆவியின் துணையோடு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தனர். திருத்தூதர்களால் இறையாட்சி வளர்ந்தது. தூய ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ்ந்திட அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்து இயேசுவைத் தலைவராகக் கொண்டுள்ள நாம், அவரைப் பற்றி அறிவிப்பதில் கருத்தாக இருக்க வேண்டும். எத்தகைய துன்பம் வந்தாலும் இயேசுவின் மதிப்பீடுகளினின்று விலகக்கூடாது என்பதை புனித பேதுரு, “தீமை செய்து துன்புறுவதைவிட, நன்மை செய்து துன்புறுவதே மேல்என்கிறார்தீமையை விலக்கி நன்மை செய்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர், அருள்பணியாளர், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திடவும், கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப இறைச்சமூகத்தைக் கட்டியெழுப்பவும் தேவையான அருள்வரங்களைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஏழைகளின் துணையாளரே எம் இறைவா! எம் நாட்டில் திணிக்கப்படும் பொருளாதார நெருக்கடிகள், வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு இவற்றால் துன்பப்படும் எம் சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் வாழ்வாதாரங்கள் கிடைக்கப் பெற்று, மகிழ்ச்சியோடு வாழ தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்என்று மொழிந்த இறைவா! எம் குடும்பங்களுக்கு ஆசிராக வழங்கிய எம் குழந்தைகளை இறைநம்பிக்கையில்  வளர்க்கவும், தூய வாழ்வுக்கான சிந்தனைகளைக் கொடுத்திடவும், தேவையான ஞானத்தைப் பெற்றோராகிய எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

4. பாதுகாக்கும் ஆண்டவரே! மேல்நிலைக் கல்வியை முடித்து கல்லூரிகளுக்குச் செல்லவிருக்கும் குழந்தையரையும், படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இளையோரையும், குடும்பப் பாரத்தால் படிப்பைத் தொடர முடியாமல் உள்ள இளையோரையும் ஆசியளித்து வழிநடத்திக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.