டாக்டர் சேவியர், அண்ணா பூங்காவில் நடைப் பயிற்சியில் நடந்து கொண்டிருந்தார். சில நாள்கள் இப்படிக் காலையில் நடப்பதுண்டு. அப்போது டாக்டர் யாழினியின் தந்தை கருணாகரன் நடந்து வந்தார்.
“வாங்க டாக்டர் வாங்க, என்ன இப்படி பார்க்கிற்கு வந்திருக்கீங்க?” என்றார் சிரித்தபடி கருணாகரன்.
“வாரத்தில் ஓரிரு நாள்கள் வருவதுண்டு. மற்றபடி இப்படி வர நேரம் கிடைப்பதில்லை” என்றார்
சேவியர்.
“நான் தினமும் வந்திருவேன். வயசாயிருச்சில டாக்டர். இப்படி நடந்தால் நல்லதுன்னு வந்திருவேன். உங்களைப் பார்த்ததில் ரெட்டிப்பு சந்தோசம்”
என்றார் கருணாகரன்.
“என்ன ரெட்டிப்பு சந்தோசம்?” என்று கேட்டார் சேவியர்.
“வேற ஒண்ணுமில்லே, என்னோட பையன் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கான். அவனோட பேரு முத்தரசன்”
என்றார் கருணாகரன்.
“அப்படியா! யாழினிக்குத் தம்பி இருக்கிறதாச் சொன்னதில்லையே?” என்றார் சேவியர்.
“இவன் கலிபோர்னியாவில் சாப்ட்வேர் இன்ஜினியராய் வேலை செய்றான். வருசத்திற்கு ஒரு தடவ வந்து இருபதுநாள் இருந்திட்டுப் போவான்” என்றார் கருணாகரன்.
“ரொம்ப சந்தோசம். ஒரு நாளைக்குச் சந்திக்கிறேன்” என்றார்
சேவியர்.
“அதைத்தான் இப்பச் சொல்ல வந்தேன். இவனுக்குக் கல்யாணம் முடிக்க பெண் பார்த்துக்கிட்டு இருக்கோம். இன்னும் முடிவாகலே”
என்றார் கருணாகரன்.
“நல்லது. காலாகாலத்தில் கல்யாணம் முடிங்க. இல்லைன்னா அங்கேயே யாரையாவது லவ் பண்ணி கட்டிடப் போறார். அப்புறம் உங்களுக்குக் கல்யாண வேலை இல்லாமல் போய்விடும்” என்று
சிரித்தார் சேவியர்.
“இப்ப நான் சொல்ல வந்தது, நாளைக்கு யாழினிக்கு பிறந்த நாள். இதை ‘கிரீன் பார்க்’ ஹோட்டலில் நடத்தலாம்னு இருக்கோம். வேற ஒண்ணுமில்லே. மதியம் ஒரு விருந்துதான். நீங்க உங்க அம்மா, தங்கச்சியோட கட்டாயம் வரணும்” என்றார் சேவியர்.
“கட்டாயம் வர்ரோம்.
நாளை லீவ் நாள்தானே”
என்றார் சேவியர்.
“டாக்டர் இஸ்மாயில் குடும்பத்தையும் யாழினிட்டே கூப்பிடச் சொன்னேன். அவங்களும் வருவாங்க”
என்றார் கருணாகரன்.
“சரி, நான் பாத்திமா சர்ச் பாதரைப் பார்க்கப் போகணும், வரட்டுமா?” என்று விடைபெற்றார் சேவியர்.
“வாங்க டாக்டர், என்ன விசேசம்? எப்படி இருக்கீங்க?” என்றார் பாதர் அந்தோணிசாமி.
“பாதர், இந்தச் செக்கை வெச்சுக்கோங்க. சர்ச் காரியத்திற்குப் பயன்படுத்திக்கோங்க” என்று
ஒரு செக்கை நீட்டினார் சேவியர்.
“பரவாயில்லை டாக்டர். மாதா மாதம் பதிமூன்றாம் தேதி மாதாவுக்குச் சிறப்பு நவநாள் நடத்தி மக்க ளுக்கு மதிய விருந்து தருவோம். அதற்கு இதைப் பயன்படுத்துறேன்” என்று
சிரித்தார் அந்தோணிசாமி.
அப்போது
அருகிலுள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளி தலைமைச் சகோதரி ப்ளோரா வந்தார்.
“வணக்கம் டாக்டர்! எங்களோட பள்ளியிலே ஒரு நாள் மருத்துவக் கேம்ப் நடத்தணும். எங்க மாணவிகளைச் செக்கப் பண்ணி மருந்து மாத்திரை குடுக்கணும்” என்றார்.
“ஒருநாள் எங்க ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர் இஸ்மாயிலைப் பார்த்துச் சொல்லுங்க. கட்டாயம் ஏற்பாடு செய்வார்”
என்றார் சேவியர்.
“நீங்க தூத்துக்குடியாமே! நானும் தூத்துக்குடி அருள்தாஸ்புரம்தான்” என்றார்
சிஸ்டர் புளோரா.
“ரொம்ப சந்தோசம் சிஸ்டர்” என்றார் சேவியர்.
“நான் சிவகங்கை பகுதிக்காரன். காளையார் கோவில் அருகே உள்ள சூசையப்பர் பட்டணம் என் ஊர். நான் பூந்தமல்லியில் படித்தபோது சென்னை டையசிஸ்க்கு வந்துவிட்டேன்” என்று
சிரித்தார் அந்தோணி.
“ரொம்ப நன்றி பாதர். நான் கிளம்புறேன்” என்று
புறப்பட்டார் டாக்டர் சேவியர்.
(தொடரும்)