புதுமைகள் படைத்து, சமுதாயத்தை மாற்றியமைத்து, உலகில் பல துறைகளின் முன்னேற்றத்திற்குத் துணைநிற்கும் தொழில்நுட்பமாக ஏ.ஐ. இன்று விளங்குகிறது.
ஒரு
தொழில்நுட்பத்தை நன்மை அல்லது தீமையென்றில்லாமல், அதனை நாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம், கையாள்கிறோம் என்பதைப் பொருத்தே கணிக்கிறோம். ஆனால், இன்று வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பங்கள், ஆதிக்க ஆட்சி முறை தலைதூக்க ஏற்ற சூழலை உருவாக்குகின்றனவா? என்ற ஐயம் எழச்செய்கிறது.
கட்டுப்பாடு
மற்றும் சமநிலையைக் (checks and balances) கொண்டு இயங்குவதாகவே மக்களாட்சி எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இம்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களே இவற்றை மெல்ல வலுவிழக்கச் செய்கிறார்கள் என்பதே கடந்த 20 ஆண்டுகால அனுபவமாக உள்ளது. மிகச் சக்தி வாய்ந்த சில நாடுகள், உலக அரசியல் அரங்கில் நேரத்திற்கேற்ப அணி மாறுவது இதற்குச் சான்றாகவும் பார்க்கப்படுகிறது. இரட்டை வேடம் என்பது மனித உரிமைத் தத்துவத்திற்கு முரணானது என்றாலும், இன்று பெரும்பாலும் சக்தி வாய்ந்தவை என்று கூறிக்கொள்ளும் நாடுகள், இவ்வேடத்தைத் தவிர்க்க இயலாமல் உள்ளன. இந்நிலையில் ஏ.ஐ. ஓர்
இயந்திரமாக மனிதனைப் போன்று செயலாற்றலில் வளர்வதும், இதன் வேகமும் திசையும் மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தை ஒருநாள் அசைத்துவிடுமோ என்ற ஐயம் எழுகிறது.
இன்று
அதிகார வர்க்கத்தினர் அறிவாற்றல் மிக்கோரைக் (target intellectuals) குறிவைப்பதும், சாதகமானோரைப் பொறுப்பில் அமர்த்துவதும், ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் அறிவுசார் திறன்படைத்த வகுப்பினரை ஒதுக்குவதும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். இந்நிலையில் ஓரிட அதிகாரக் குவிப்பு-சர்வாதிகாரம்; மற்றொன்று, நிர்வகிக்க இயலாத அதிகாரப் பகிர்வு என்பவை ஆட்சியாளர்களின் கையில் ஏ.ஐ. உகந்த
கைப்பாவையாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மனித உரிமைப்
போராளிகளின்
ஏ.ஐ.
அண்மைக்காலமாக
மக்களாட்சித் தத்துவம் வளர்ச்சியடையாமல் தளர்ந்துவிட்டதென்பதை இன்றைய தொழிற்சங்கங்களின் வலுவிழந்த நிலையிலிருந்தே தெரிந்துகொள்கிறோம். ஆனால், இவ்வாறான குறைந்து வரும் மக்கள் பங்கேற்பிற்குத் தொழில் வளரவில்லையென்று கூற முடியாது; ஏனென்றால், பெரும் பலம் வாய்ந்த சுயநலவாதிகள் மற்றும் நிறுவனர்கள் தொழில்நுட்ப எழுச்சியின் காப்பாளர்களாக உள்ள நிலையில் சமத்துவம், மக்களாட்சித் தத்துவம் மேலோங்க முடியவில்லை என்ற பார்வையும் உள்ளது.
சில
நாடுகளில் சர்வாதிகார ஆட்சி சட்ட ஒழுங்கின்படி இல்லாமல், வைத்ததுதான் சட்டம் என்ற முறையிலிருப்பதையும் பார்க்கிறோம். இந்நிலையில் மனித உரிமைகளைக் காக்கவும், அதனை முன்னெடுத்துச் செல்லும் போராளிகள், அதிகாரத்தின் முன் பலவீனர்களாக நிதி,
கருவி, பயிற்சி என்பவற்றில் குறைந்தவர்களாகவே இருந்தனர் என்பதுதான் கடந்தகால வரலாறு. இவ்வகுப்பினரை ஏ.ஐ. கொள்கை
உருவாக்கத்தில் இணைப்பதனால் ஏ.ஐ. அமைப்புகள்
வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, மனித உரிமை என்பவைகளின் பாதுகாவலராக அமைவார்கள் என்ற கூற்றும் நிலவுகிறது.
சர்வாதிகாரிகளின்
ஏ.ஐ.
ஏ.ஐ. தொழில்நுட்பத் துணையோடு
கண்காணித்தல், குறிவைத்துத் தாக்குதல், அடக்குமுறை என்பவை, வலிமையான சர்வாதிகார ஆட்சிமுறையாளர்களின் கை மேலோங்கியிருப்பதை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது. வரம்பில்லாக் கண்காணிப்புகள்,
முகஜாடை அறிதல், முன்கணிப்பு காவல்முறை (predictive policing), ஆன்லைன் தொல்லைகள், தேர்தல் குளறுபடிகள் என்பனவற்றில் ஏ.ஐ. ஒரு
சக்திவாய்ந்த கருவியாகச் சில அமைப்புகளிடம் சிக்கியிருக்கிறது.
சில
நாடுகளில் எண்ணற்ற ஏ.ஐ. முகஜாடைக்
கருவிகள் பல இடங்களில் பொருத்தப்பட்டு,
பொதுமக்கள் அனைவரும் எந்நேரமும் கண்காணிப்பு வளையத்தில், தங்கள் சுதந்திரத்தை இழக்கும் நிலையை உணர்கின்றனர். பல நாடுகளுக்கு இத்தொழில்நுட்ப
ஏற்றுமதியின் வேகம் மற்றும் வளர்ச்சி, எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது என்பதாகவும் பார்க்கப்படுகிறது.
இயந்திரக்
கண்கள்-கண்காணிப்பின் மூலம் நன்மைகளிருந்தாலும், இத்தொழில்நுட்பத்தை ஒருவரின் சாதகத்திற்கேற்ப பணிப்பது நீதிக்குப் புறம்பானதாகவும், மனித உரிமை மீறலாகவும், சில நேரங்களில் ஏ.ஜ.யினால்
தொடுக்கப்படும் செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தப் பயன்படுத்துவதையும் பார்க்கிறோம்.
உலகில்
சர்வாதிகார வர்க்கத்தினர் தங்கள் ஆட்சியைத் தக்கவைக்கவும், அடக்குமுறைகளுக்குப் பயன்படுத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு
மனித உரிமைப் போராளிகள் இளைத்தவர்களாகவே உள்ளனரென்பதே இன்றைய நிலையாகவும் உள்ளது.
ஏ.ஐ.-யின்
எதிர்காலக்
கட்டமைப்பு
அண்மையில்
‘ஓபன் ஏ.ஐ.’ நிறுவன
உலகத் தலைமை அதிகாரி கிரீஸ் லெஹேன் என்பவர் அளித்த பேட்டியில், ஏ.ஐ.யின்
எதிர்காலம் என்பது மக்களாட்சி ஏ.ஐ.-க்கும்,
சர்வாதிகார ஏ.ஐ.-க்குமான
போட்டியில் இருக்கும்; அதாவது, எத்தனை நாடுகள் இத்தொழில்நுட்பத்தால் ஆளுமை செய்யப்படுகின்றன? தனிமனித ஆட்சியா? அல்லது அரசு ஆட்சியா? என்பதைப் பொருத்து அமையுமென்கிறார்.
இன்று
இத்தொழில்நுட்பத்தில்
முதன்மை வகிக்கும், ஆனால் ஆட்சி முறையில் மாறுபட்டு விளங்கும் நாடுகளான அமெரிக்கா, சீனா இடையேயான போட்டியே இதனைத் தீர்மானிக்கும் என்கிறது ஒரு பார்வை.
மக்களாட்சி
ஏ.ஐ. அமைப்பு வெளிப்படைத்
தன்மை, சட்டம்-ஒழுங்குமுறை. தனிமனிதத் திறனை வெளிப்படுத்துதல் என்பவைகளுக்கு ஆதாரமாக விளங்கும் நிலையில் ‘சர்வாதிகார ஏ.ஐ. உருவாக்கம்’ என்பது
இயல்பாக, மத்திய ஆட்சி மையம் மற்றும் அதிகாரக்குவியல் என்றே கருதப்படுகிறது.