தமிழ்நாட்டில் தேர்தல் களத்தைவிட, தேர்தல் கூட்டணி அமைப்பே பெரும் சவால். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என இருபெரும் கழகங்களும் சந்தித்த அழுத்தங்கள் பெரும் துன்பவியல். தேசியக் கட்சிகள் எனும் காங்கிரஸ் மற்றும் பா.ச.க. கட்சிகள் மாநிலக் கட்சிகளை நசுக்கிப் பிதுக்கிவிட்டன. தி.மு.க.வின் கனிமொழி கருணாநிதி காங்கிரஸ் கட்சியிடம் தூது போனார். காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், கே.சி.வேணுகோபால், கீரிஷ் சோடங்கர் எனத் தி.மு.க.விடம் ‘த.வெ.க. பூச்சாண்டி’ காட்டி தி.மு.க.வை நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.
அ.தி.முக.வின்
எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச ஐந்து முறையும், கூட்டணி முடிவானவுடன் தொகுதி பேரம் பேச நான்கு முறையும் மொத்தம் ஒன்பது முறை டெல்லி சென்றார். பலமுறை இரகசியப் பயணமாக கார் மாறி கார் சென்று, இறுதியில் தனித்துச்
சென்று கூட்டணியை முடிவு செய்தார்.
புது
டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாட்டு மக்கள் நலன் குறித்துப் பேசினாரா? தொடர் இந்தித் திணிப்புக் குறித்து வாய் திறந்தாரா? பா.ச.க.வின் மதவாதம் குறித்து அறிவாரா? தமிழ்நாட்டுத் திட்டங்கள் குறித்து அழுத்தம்
கொடுத்தாரா? போதிய நிதி ஆதாரங்களை ஒன்றிய அரசிடம் பெற்றுத் தருவாரா? சனாதனத் திணிப்பு குறித்துக் குரல் கொடுப்பாரா? போன்ற கேள்விகளுக்கு விடையாக எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவைச் சந்தித்தார். என்.டி.ஏ. கூட்டணி
முடிவானது என்கிறார்கள். தமிழ்நாடு என்.டி.ஏ. கூட்டணிப்
பொறுப்பாளர் பியூஸ் கோயலிடம் பிடி கொடுக்காத எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் வசமாக மாட்டிக்கொண்டார் என்பதே அ.தி.மு.க.வின் அடிமை
அரசியலாகும்.
‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’
என்பதைப் போல, ஒரு காலத்தில் டெல்லி அரசியல் தலைவர்கள் போயஸ் தோட்டத்தில் அம்மாவின் தரிசனம் பெற அழைப்பிற்குக் காத்திருப்பார்கள். இதைப் பலரும் சுட்டிக்காட்டிய பின் அமித்ஷா ஆணைப்படி, இராயப்பேட்டை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில்
என்.டி.ஏ. கூட்டணி
ஒப்பந்தம் கையொப்பமானது. 2024 - மக்களவைத் தேர்தல் முதல் அ.தி.மு.க.வுடனான பா.ச.க. கூட்டணிக்குப்
பாடுபட்ட ஜி.கே. வாசன்
எம்.ஜி.ஆர். மாளிகை
செல்லவில்லை. அவர் தனியே பியூஸ் கோயலைச் சந்தித்துத் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்கிறார்.
தேர்தல்
களத்தைப் பொறுத்தவரைத் தேர்தல் திட்டமிடுதல் தொடங்கி கூட்டணி என்பதிலும், தேர்தல் பணிகளைக் கட்டமைப்பு செய்வதிலும் தி.மு.க.
தொடக்கம் முதலே முதல் பந்திலிருந்து கடைசி பந்துவரை ஆக்ரோச அதிரடி வெறியாட்டம் நடத்தும். பந்து வீச்சு என்றால் பவுன்சர், கட்டர், ஸ்பிளிட்ஸ் என மட்டையாளரை மடக்கும்.
தடுப்பாட்டம் நடத்தத் தூண்டும். தி.மு.க.
ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள எல்லா நிலைகளிலும் பூதாகரமாய் எழுந்து நிற்கிறது. மக்கள்
நலத்திட்டங்கள், கட்சிக் கட்டமைப்பு, பலம் வாய்ந்த கூட்டணி, நுண்ணியல் தேர்தல் பணிகள், பணபலம், ஆட்சி பலம் என வலுவாய் உள்ளது.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தொடர் தோல்விகளிலிருந்து மீளவேண்டும். தி.மு.க.
அரசின் மீதான அதிருப்தி வாக்குகளைப் பெறவேண்டும். என்.டி.ஏ. கூட்டணி
ஆட்சி என்பதிலிருந்து தப்பிக்க தனிப் பெரும்பான்மை பலத்துடன் தனித்து வெற்றி பெறுவது என்பதும் கட்டாயமானது. 2021-ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் 21 தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை
அ.ம.மு.க.
தடுத்தது. அதே வழியில், 2026 தேர்தலில் மருத்துவர் இராமதாஸ் அவர்களும், சசிகலா அவர்களும் அ.தி.மு.க. வாக்குகளுக்கு முட்டுக்கட்டை
போடுகிறார்கள். தி.மு.க.
எதிர்ப்பு வாக்குகளை நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என மேலும் இருவரும்
பிரிக்கிறார்கள்.
நடிகர்
விஜய் அவர்களை அ.தி.மு.க. கரூர் பெருந்துயர
நிகழ்வில் தாங்கியது. அ.தி.மு.க. கூட்டணிக்காகத் த.வெ.க.வை
விமர்சிக்க மறுத்தது. அரசியல் பிழை செய்தது. அ.தி.மு.க.வை அடிமைகள்
மற்றும் பலர் என்று விஜய் பேசிய பின் விழித்தது. கரூர் பெருந்துயர நிகழ்வு சட்டமன்ற விவாதத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி குரல் உயர்த்தியது பலே இரகம்!
90 சீட்டுகள்.
2.5 ஆண்டுகள் முதல்வர் எனப் பேசப்பட்டதாக, த.வெ.க.வின் ஆதவ் அர்ஜூனா பேசியபோது, எடப்பாடி பழனிச்சாமி மறுத்தார். பா.ச.க.,
த.வெ.க., அ.தி.மு.க.
கூட்டணி எனப் பேசிய
போது எடப்பாடி பழனிச்சாமி அது என்.டி.ஏ. கூட்டணி என்பதற்கான
ஆட்சிக்கான அச்சாரம் என உணர்ந்து விழித்துக்
கொண்டார், மறுத்தார்.
பிரதமர்
மோடி மதுராந்தகம், மதுரை, திருச்சி என
எங்குமே ‘எடப்பாடி பழனிச்சாமி அவர்களே...’ என விளிக்க மறுக்கிறார்.
தேர்தல் களத்தில் என்.டி.ஏ. கூட்டணி
என்பது இரு வழிகளில் பயணிக்கிறது. தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி
ஆட்சிக்குப் பா.ச.க.
முயற்சிக்கிறது. ஒன்றியத்தில் 21 மாநிலங்களில் பா.ச.க.
ஆட்சி நடந்தாலும், அவர்களுக்குப் பெரும் தலைவலியே தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க.
என்ற கட்சியும், அவர்களது ஆட்சியும்தான். தி.மு.க.
ஒன்றிய அரசின் அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களையும் எதிர்க்கிறது. மாநில உரிமை பேசுகிறது. இந்தித் திணிப்பிற்குப் போராடுகிறது. மாநில ஆளுநர்கள் அதிகாரம், முடிவெடுக்கும் காலம், இட ஒதுக்கீடு என
உச்ச நீதிமன்றம் சென்று ஒன்றிய அரசிற்கு எதிரான தீர்ப்புகளைப் பெறுகிறது. எதிர்க்கட்சி முதல்வர்களுக்குக் கடிதங்கள்
எழுதுவது, திரட்டுவது, ஒன்றிய அரசிற்கு எதிரான கூட்டங்களை ஒருங்கிணைப்பது என வலுவாக உள்ளது.
பா.ச.க.வின்
தாய் வீடான ஆர்.எஸ்.எஸ். கொள்கையான தி.மு.க.வின் சனாதன எதிர்ப்பு என்பதும் அடிப்படை எதிர்வீச்சாக அமைகிறது. அ.தி. மு.க.வின் வெற்றியோ,
தோல்வியோ, இரண்டாம் கட்ட
அ.தி.மு.க.
தலைவர்கள் வழி அ.தி.மு.க.வை முற்றிலும்
கைக்கொள்ளும் பா.ச.க.
திட்டமும், என்.டி.ஏ. கூட்டணியின்
உள்ளடக்கமாக உள்ளது. ‘அண்ணா தி.மு.க.’
என்பது ‘அமித்ஷா தி.மு.க.’
வாகி விட்டது. தமிழக என்.டி.ஏ. கூட்டணி
குறித்த அனைத்து முடிவுகளையும் அமித்ஷா அவர்களே எடுக்கிறார் என்பதே நடப்பு தமிழ்நாட்டு அரசியலாகும்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் களத்தில் டெல்லிக்குப் பணிந்த மாநில அரசால் ஒன்றிய அரசின் நிதி, மாநிலங்களுக்கான திட்டங்கள் என்பதில் இரட்டை இஞ்சின் எனப் புதுப்புரளி கிளப்புகிறார்கள். வட இந்திய மாநிலங்களின்
வளர்ச்சி, கல்வி, சட்டம் ஒழுங்கு, மகளிர் நிலை, சாலை வசதி, போக்குவரத்து இவைகளைக் கண்ணோக்கி ஆய்ந்தால், அத்தனையும் முழுக்க முழுக்க வடிகட்டிய பொய் என அறிய வரும்.
அண்மைக்காலத்தில்,
புது டெல்லி உத்தம் நகரில் நடந்த கலவரக் காணொளி பார்த்தேன். நான்கு மணி நேரமாகத் தொடர்ந்து, மதக்கலவரம் நடக்கிறது. வீடுகள் தாக்கப்படுகிறது. இருமதப் பிரிவினரும் வெறிகொண்டு தாக்கிக்கொள்கிறார்கள். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இந்திய தலைநகர், புது டெல்லியில் இரட்டை எஞ்சின் ஆட்சிதான் நடக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற இரட்டை எஞ்சின் நடக்கும் மாநிலங்களின் வறுமை உலகம் அறிந்ததே. இரட்டை எஞ்சின் சர்க்கார் நடக்கும் மாநிலங்களுக்குப் பெரும் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. அது கடலில் கரைத்த பெருங்காயமானது என்பதே
நாட்டு நடப்பாகும்.
அ.தி.மு.க.
மூகமூடி அணிந்து வருகிற என்.டி.ஏ. கூட்டணியை
அடையாளம் காண்பது காலகட்டாயமானது. மத நல்லிணக்கம், சமூக
நீதி என்பதில் ஒன்றிணைவோம். சிறுபான்மை மக்களாகிய நாம், மதச்சார்பற்றக் கூட்டணியை ஆதரிப்போம்.