இத்தாலியின் போலோக்னா நகரைச் சேர்ந்த ஓர் இளம் மாணவர், புனித பக்கீத்தாவிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். “உங்களைக் கடத்தி சித்திரவதை செய்தவர்களை மீண்டும் சந்தித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”
“நான் அவர்களைச் சந்தித்தால் அவர்கள் காலில் விழுந்து முத்தமிடுவேன்; ஏனெனில், அவர்கள் என்னைச் சாட்டையால் அடித்ததன் விளைவாகப் பெற்ற 144 தழும்புகள் இல்லையென்றால், இன்று நான் ஒரு கிறித்தவளாகவும் இறைப்பணியாளராகவும் மற்றும் துறவியாகவும் இருந்திருக்க முடியாது.”
இயேசுவோடு
வாழ்ந்த திருத்தொண்டர்களைப் போலவும், எண்ணற்ற புனிதர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை ஏற்று இறைவனுக்குச் சாட்சிய வாழ்வு வாழ்ந்தனர். கிறித்தவ வாழ்வு என்பது வெறும் சடங்குகளின் தொகுப்பல்ல; நம் வாழ்வில் அர்த்தம் தரும் பயணமாகும். கிறிஸ்துவில் வைத்திருக்கும் நம்பிக்கை அவரின் பாடுகளில் அல்ல; உயிர்ப்பில்தான் உள்ளது. நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா நம் ஆன்மிகப் பயணத்திற்கு
ஒரு புதிய விடியலைத் தருகிறது.
“அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தனர். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!’ என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர்தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்’ என்றார்.
இதைச் சொன்ன பின் அவர் அவர்கள் மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” (யோவா
20:19-21) என்றார்.
கல்லறையின்
இருளை வென்ற உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த பிறகுதான் திருத்தூதர்கள் தூய ஆவியின் ஆற்றலைப் பெற்று, உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டனர். அவர்களின் வாழ்க்கை முறையை இன்றைய சூழலில் நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
1. திருத்தூதர்களின் அடையாளம்
‘திருத்தூதர்’ (அப்போஸ்தல்லோஸ்)
என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘அனுப்பப்பட்டவர்கள்’ என்று
பொருள். திருத்தூதர்கள் இயேசுவின் போதனையை வெறும் தகவல்களாகப் பறைசாற்றவில்லை; மாறாக, உயிர்த்த ஆண்டவரின் ஆற்றலைப் பெற்று அவரது நற்செய்தியைத் தங்களின் இரத்தச்சாட்சியால் அறிவித்தனர். உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தபின் இவர்கள் வீதிக்குச் சென்று துணிவுடன் உயிர்த்த ஆண்டவரிடமிருந்து பெற்ற அனுபவத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினர். இந்தத் துணிவுதான் ஒரு நற்செய்திப் பணியாளரின் முதன்மைப் பண்பாகும்.
‘அஞ்சாதீர்கள்’ என்ற
ஆண்டவரின் வார்த்தையே அவர்களின் ஆன்மப் பலமானது. “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” (திப
1:8). இது மனித பலத்தால் அல்ல; இறைவனின் ஆற்றலால் நிகழ்ந்தது.
2. ஏழு திருத்தொண்டர்களின் பணிகளும்
மற்றும்
சாட்சிய
வாழ்வும்:
1. தூய ஸ்தேவான்: இவரே
திரு அவையின் முதல் இரத்தச்சாட்சியாவார். இறைநம்பிக்கையின் முதல் மறைச்சாட்சியாளர். ஏழு திருத்தொண்டர்களில் முதன்மையான ஸ்தேவான், தூய ஆவியாலும் இறைநம்பிக்கையாலும் நிறைந்தவர். பந்திகளில் உணவு பரிமாறும் ‘டயகோனியா’
எனும் தாழ்மையான பணியைச் செய்த அதேவேளையில், இறை வல்லமையால் மக்களிடையே பெரும் அரும் அடையாளங்களையும் செய்தார். மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் அச்சுறுத்தியபோது அஞ்சாமல், நற்செய்தியைத் துணிச்சலுடன் அறிவித்தார்.
2. பிலிப்பு: பிலிப்பு
ஒரு சிறந்த நற்செய்தி அறிவிப்பாளராக விளங்கினார். சமாரியா நகருக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்ததோடு, தூய ஆவியாரின் தூண்டுதலால் எத்தியோப்பிய அரச சபையின் அதிகாரிக்குத் திருவிவிலியத்தை விளக்கி அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். இதன்மூலம் நற்செய்திப் பணி என்பது எல்லா இனத்தவருக்கும் உரியது என்பதைத் தனது வாழ்வால் நிலைநாட்டினார்.
3. புரக்கோரோ: புரக்கோரோ
திருத்தூதர்களால் வழங்கப்பட்ட நிர்வாகப் பணிகளை மிகவும் செம்மையாகவும் நேர்த்தியாகவும் செய்தவர். திரு அவை பாரம்பரியத்தின்படி, இவர் திருத்தூதர் யோவானின் உதவியாளராக இருந்து அவருக்குப் பணிவிடை செய்தார். பிற்காலத்தில் நிக்கோமீடியா பகுதியின் ஆயராகப் பொறுப்பேற்று, அங்கிருந்த மக்களுக்கு இறைவார்த்தையை அறிவித்தார்.
4.நிக்கானோர்: தொடக்கத் திரு
அவையில் எபிரேய மற்றும் கிரேக்க மொழி பேசும் இறை நம்பிக்கையாளர்களிடையே நிலவிய பிரிவினைகளைத் தீர்ப்பதில் நிக்கானோர் முக்கியப் பங்காற்றினார். உணவுப் பங்கீட்டில் கிரேக்கக் கைம்பெண்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த இவர், ஏழை விதவைகளுக்குத் தேவையான உதவிகளை முன்னின்று அளித்தார். ஸ்தேவான் கொல்லப்பட்ட அதே நாளில், இவரும் கிறிஸ்துவின் மீதிருந்த பற்றுறுதிக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து இரத்தச்சாட்சியானார்.
5. தீமோன்: திரு
அவையில் ஒழுங்குமுறையைப் பராமரிப்பதிலும், பந்திகளில் அனைவருக்கும் சமமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதிலும் தீமோன் கடுமையாகவே உழைத்தவர். பிற்காலத்தில் பெரோயா பகுதியின் ஆயராக நியமிக்கப்பட்ட இவர், அங்கு நற்செய்திப் பணிகளை விரிவுபடுத்தினார். கிறிஸ்துவின் மதிப்பீடுகளைப் பரப்பியதற்காகப் பல சித்திரவதைகளையும் துன்பங்களையும் அனுபவித்தபோதிலும்,
இறுதிவரை இறைநம்பிக்கையில் உறுதியாக இருந்து உயிர் துறந்தார்.
6. பார்மனா: திருத்தூதர்களுக்குப்
பணிவிடை செய்வதிலும், நம்பிக்கையாளர்களின் அன்றாடத் தேவைகளைக் கவனிப்பதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். எளிய பணிகளின் வழியாகவும் இறைவனுக்கு மகிமை சேர்க்க முடியும் என்பதை இவர் உலகுக்குக் காட்டினார். பிலிப்பி நகரில் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இறை நம்பிக்கைக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தார்.
7. நிக்கொலா: அந்தியோக்கியாவைச்
சேர்ந்த நிக்கொலா, பிற இனத்தைச் சார்ந்தவராக இருந்து யூத மதத்தைத் தழுவி, பின்னர் கிறித்தவத்திற்கு மாறியவர். கிரேக்க மொழி பேசும் பிற இனத்தவர்களிடையே நற்செய்தியை அறிவித்தார். திரு அவையின் நிர்வாகப் பணிகளைத் துல்லியமாகவும் நேர்மையாகவும் கையாண்ட இவர், நற்செய்திப் பணி என்பது அனைத்துப் பின்னணி கொண்டவர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தனது இறைப் பணியின் மூலம் உறுதி செய்தார்.
3. நம்பிக்கைக்கொண்டோரின் வாழ்வுமுறை
திருத்தூதர்கள்
தங்களின் சிந்தனையாலும் செயலாலும் ஒன்றிணைந்த வாழ்வை வாழ்ந்தனர். இதுவே பல்வேறு சமூகக் காரணங்களால் பிரிந்து கிடக்கும் உலகிற்குத் திருத்தூதர்கள் தந்த சிறந்த எடுத்துக்காட்டாகும். சுயநலத்தைத் துறந்து, தங்களுக்குள் இருந்தவற்றைத் தாராளமாகப் பகிர்ந்து கொண்டனர். ‘எனது’ என்பது ‘நமது’ என்று மாறிய போது, அங்கே வறுமை நீங்கி இறையாட்சி புலர்ந்தது. தனிமனித ஆதிக்கத்தைவிட பொதுநலமே மேலானது என்பதை அவர்கள் உலகிற்குக் கற்பித்தனர். திருத்தூதர்கள் எத்தகைய துன்பத்திலும் இறைவார்த்தையை விட்டுக்கொடுக்கவில்லை. சோதனைகளை வேதனைகளாகப் பார்க்காமல், இறைவனுக்கு ஆற்றும் தொண்டாகப் பார்த்தனர்.
4. இன்றைய சூழலில் திருத்தூதுப்
பணி
திருத்தந்தை
பிரான்சிஸ், “நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு நுகர்வுப் பொருள் அல்ல; அது ஒரு கொண்டாட்டம்” என்று
கூறுகிறார். நற்செய்தி அறிவிப்பவர் முகத்தில் மகிழ்ச்சி இருக்கவேண்டும். உயிர்த்த ஆண்டவரைச் சுமப்பவர்கள் ஒருபோதும் விரக்தியில் மூழ்கமுடியாது. சோகமான முகம் நற்செய்தியின் வீரியத்தைக் குறைத்துவிடும். நற்செய்தி ஒருவரைப் பயமுறுத்துவதற்கு அல்ல; மாறாக, இறைவனின் பேரன்பால் அவரை மாற்றியமைக்கவே அறிவிக்கப்படுகிறது.
மக்களின்
காயங்களைக் குணப்படுத்துவது உடல் ரீதியான நோய்களைத் தாண்டி, மனக்காயங்களை ஆற்றும் மருந்தாக நற்செய்தி இருக்க வேண்டும். உலகம் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதே நற்செய்திப் பணியாகும். நம் வாழ்வு மக்களை நோக்கி புறப்பட்டுச் செல்லும் திரு அவையாக மாறி, இறைவன் தரும் மகிழ்ச்சியை விதைக்கவேண்டும். நம் பணி தேங்கி நிற்கும் குட்டையைப் போல இல்லாமல், ஓடும் நதிபோல நற்செய்தியை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லவேண்டும். இப்படிப்பட்ட நற்செய்திப்
பணியை ஆற்றிடத் திரு அவை நம்மை அழைக்கிறது.
உயிர்ப்புப்
பெருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு இதுவே. உயிர்த்த ஆண்டவர் நம்மீது அருள்பொழியும் ஆவியைப் பெற்று, திருத்தூதர்களைப் போல நாமும் நம் அச்சத்தைத் துறப்போம். நாம் ஒவ்வொருவரும் தனித்துவமான சமூக அடையாளங்களைப் பெற்றிருந்தாலும், கிறிஸ்துவின் அன்பில் நாம் அனைவரும் ஒன்றாக வாழ அழைக்கப்படுகிறோம். “ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை
விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” (லூக்
4:16-18) என்பதற்கிணங்க,
திருத்தொண்டர்கள் வழியில் பிறரன்புப் பணியிலும், மனவுறுதியோடு நற்செய்தியை அறிவிப்போம்.
எனவே,
நாம் சொல்லால் மட்டும் நற்செய்தியை அறிவிப்பவர்களாக இல்லாமல், நம்முடைய அறச்செயல்களால் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும். இருள் சூழ்ந்த இந்த உலகிற்கு நாம் வெறும் விளக்குகள் அல்ல; உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் அணையாத சுடர்களாவோம். ஏனெனில், உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே நம் ஆற்றல். அவரின் நற்செய்தியே நம் வாழ்வு!