news-details
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு (15-02-2026) சீஞா 15:15-20; 1கொரி 2:6-10; மத் 5:17-37

திருப்பலி முன்னுரை 

இன்று மனிதநேயத்தோடு மனிதர்களை மனிதர்களாக மதித்து அன்பு, நீதி, இரக்கம் போன்ற மனிதநேயப் பண்புகளைப் பின்பற்றி, உறவோடும் நிறைவோடும் வாழ ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது.

சட்டங்கள் மனிதத்தைச் சிதைக்காமல் காப்பதாக அமையவேண்டும். பக்குவமான பண்பட்ட வார்த்தைகளைப் பேசி உடன்வாழும் சகோதர- சகோதரிகளை அன்பு செய்து வாழவும், அனைவரோடும் நல்லுறவுடன் வாழ்ந்து இறையாட்சியைக் கட்டியெழுப்பவும், சொல்வீரர்களாக அல்லாமல் செயல் வீரர்களாக வாழவும், மற்றவர்களின் சுமைகளைத் தாங்கும் உண்மை உறவாகப் பயணிக்கவும், ‘எல்லாம் இறைவனின் அதிமிக மகிமைக்காகஎன உழைக்கவும், அனைத்தையும் நல்லது எனக் காணவும், எதன்மீதும் ஆணையிடாமல் வாழவும் இயேசு இன்று நம்மை அழைக்கிறார்.

எனவே, நமது சிந்தனையை, நடத்தையை, பார்வையை மறு ஆய்வு செய்து நமது வாழ்விலும் மனத்திலும் மாற்றங்களைக் கொண்டு வருவோம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வாழும் இறைவனைக் கண்டுகொள்வோம். இன்று அன்புக்காக, அமைதிக்காக, ஆறுதலுக்காக, அரவணைப்பிற்காக, நல்வார்த்தைக்காகக் காத்திருக்கும் சகோதர- சகோதரிகளுக்கு இறைவன் கொடுத்த அற்புதமான வாழ்க்கையைப் பகிர்ந்துகொடுப்போம். இயேசு விரும்பும் சமுதாயத்தை உருவாக்க வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

நாம் என்னவாக இருக்கின்றோமோ, அது கடவுள் நமக்குக் கொடுத்த கொடை! நாம் என்னவாக மாறுகின்றோமோ, அது கடவுளுக்கு நாம் கொடுக்கும் கொடை! நல்லதைச் சிந்தித்து, நலமான வார்த்தைகளைப் பேசி, அனைவரையும் நேசித்து, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஞானத்தோடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நன்மையானவை எவை, உண்மையானவை எவை என்பதை ஞானம் நமக்கு உணர்த்துகின்றது. இந்த ஞானத்தை நமக்குத் தருபவர் தூய ஆவியானவர். வாழ்க்கையில் அனைத்து நேரங்களிலும் தூய ஆவியின் துணையை நாடித்தேடிடவும், மறைபொருளாய் இருக்கும் இறைஞானத்தை அறிந்துகொண்டு முதிர்ச்சி பெற்ற மக்களாக வாழவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்துகின்ற திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் மதிப்பீடுகளை வாழ்க்கையால் அறிவிக்கத் தேவையான ஞானத்தைத் தந்து காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வாழும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும் எங்களது வார்த்தையால் மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கவும், பிணக்குகளை எல்லாம் களைந்து அனைவரோடும் இணக்கத்தோடு வாழவும் தேவையான அருள்வரங்களைத் தந்து எம்மைக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம் வாழ்வின் வழிகாட்டியான இறைவா! எம் நாட்டு மக்கள் அனைவரும் மக்களை மனிதநேயத்தோடு வழிநடத்தக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும், பணத்திற்கு விலைபோகாமல் மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! எம் பங்கில் உள்ள இளையோர் உம்மீது ஆழமான நம்பிக்கையுடன் வாழவும், உலகப் பொருள்களின்மீது கொண்டுள்ள பற்றுதல்களிலிருந்து விலகி இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து தூய்மையான வாழ்வு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.