ஒவ்வோர் ஆண்டும் இந்திய ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்படும் மத்திய நிதிநிலை அறிக்கை என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு வரைபடம் என்றும், இந்தியாவின் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஆவணம் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால்,
2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை உற்றுநோக்கினால் இது ‘மக்களுக்கானது’ என்பதை
விட, ‘மன்னர்களுக்கானது’ (கார்ப்பரேட்
நிறுவனங்கள்) என்பது போலவே காட்சியளிக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சில தனிநபர்களின் கைகளில் குவிக்கப்படுவதையும், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் நசுக்கப்படுவதையும் இந்த நிதிநிலை அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது.
குறிப்பாக,
மக்களும், அம்மக்கள் வாழும் இவ்வுலகும் அழிந்தாலும் கவலையில்லை; பணம் சேர்ப்பதொன்றே குறி என்று இயங்கும் மிகப்பெரிய முதலீட்டாளர்களும்,
பெரிய வணிக நிறுவனங்களைக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கல்லாவை நிரப்புவதற்கான ஒரு தந்திரமான ஆவணமாகவே இது காட்சியளிக்கிறது. எனவேதான், எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, “இந்த நிதிநிலை அறிக்கை பிரதமரின் நண்பர்களான அதானி மற்றும் அம்பானிக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு பரிசுப் பெட்டி” என்றும், “இதில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தவிக்கும் இளைஞர்களுக்கோ, விலையேற்றத்தால் தவிக்கும் ஏழைகளுக்கோ எதுவுமில்லை” என்றும்
கடுமையாகச் சாடியுள்ளார்.
நாட்டின்
ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் ‘K-வடிவ’ பாதையில் பயணிக்கும் வேளையில், இந்த நிதிநிலை அறிக்கை விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பெருமுதலாளிகளின் நலன்களையே தாங்கிப்பிடிக்கிறது. மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழ்நாடு போன்ற வளர்ச்சி சார்ந்த மாநிலங்களைப் புறக்கணிப்பதும், கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பதுமான, சனநாயகத்திற்கு எதிரான முகத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்தியாவின்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது பெரிய பங்களிப்பை வழங்கும் மாநிலம் நம் தமிழ்நாடு. ஆயினும், ஒன்றிய பா.ச.க.
அரசு தமிழ்நாட்டை ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே கடந்த 12 ஆண்டுகளாக அணுகுகிறது என்பதற்கு இந்த நிதிநிலை அறிக்கையும் மற்றொரு சான்று. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி வேறாக இருப்பதாலேயே, மாநிலத்தின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன.
சென்னை
மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான நிதி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முழுமையான ஒதுக்கீடு, பேரிடர் நிவாரண நிதி என தமிழ்நாடு விடுத்த எந்த ஒரு
கோரிக்கையும் இந்த நிதிநிலை அறிக்கையில் செவிமடுக்கப்படவில்லை. ‘தமிழ்நாடு இந்தியாவின் வரைபடத்தில் இல்லையோ?’ என்று ஐயுறும் அளவிற்குப் புறக்கணிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆகவேதான்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ள ஒன்றிய பா.ச.க.
அரசு, தேர்தலில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்தே இந்த வஞ்சனையைச் செய்கிறது. மாநில சுயாட்சியை ஒடுக்கும் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு ‘வெற்று அறிவிப்பு’
ஆவணம்” என்று
கடுமையாக விமர்சித்துள்ளார். அவ்வாறே, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், “இரயில்வே திட்டங்களில் தென்னிந்தியா குறிப்பாக, தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது; இது நாட்டின் நிதிநிலை அறிக்கை அல்ல; மாறாக, பா.ச.க.-வின் அரசியல் நிதிநிலை அறிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து ‘கார்ப்பரேட்மயம்’ ஆக்கப்பட்டு
வருவதால் நாளைய நிலைகுறித்த எண்ணங்கள் பெரும் கவலையளிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் பெருநிறுவனங்களுக்கான திட்டங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி.
மற்றும் பண மதிப்பிழப்பின் பாதிப்பிலிருந்து
இன்னும் மீளமுடியாமல் விழிபிதுங்கி நிற்கும் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வட்டிச்சலுகையோ, கடன் தள்ளுபடியோ இந்த நிதிநிலை அறிக்கையில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
நாட்டில்
குடிமக்களின் பொருளாதார இயக்கத்தில் முற்றிலும் முரண் ஓங்கி நிற்கிறது. ஒட்டுமொத்தச் செல்வமும் ஒரு விழுக்காட்டு மக்களிடமே குவிந்துகிடக்கும் வேளையில், எஞ்சியுள்ள 99% மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவிக்கின்றனர். கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்ட போதிலும், ஏழைகள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் மீதான மறைமுக வரிகள் குறைக்கப்படவே இல்லை. ஆகவேதான், தொல். திருமாவளவன், “இது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளில் ஒரு பகுதியைக்கூட ஏழை விவசாயிகளுக்கு வழங்க இவர்களுக்கு மனமில்லை”
என்று சாடியுள்ளார்.
இந்தியாவின்
ஒட்டுமொத்தக் கடன் சுமையும் இன்று அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. 2026-ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, நாட்டின் கடன் - ஜி.டி.பி.
விகிதம் சுமார் 55.6 விழுக்காடாக உள்ளது. அரசு வாங்கும் கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே நிதிநிலை அறிக்கையின் பெரும்பகுதி செலவிடப்படுகிறது. ‘வருமானம் இல்லை; ஆனால், கடன் மட்டும் மலைபோல உயர்கிறது’
என்பதுதான் இன்றைய இந்தியாவின் எதார்த்த நிலையாக உள்ளது. இந்தக் கடன்சுமை எதிர்காலத் தலைமுறையினரின் தோள்மேல் சுமத்தப்படும் பெரும் பாரமாகும்.
இன்று
இந்திய மண்ணில் பாமரன் படும்பாடு, பெரும்பாடு! ஒருபுறம், சிலிண்டர் விலை உயர்வு; மறுபுறம், பெட்ரோல், டீசல் விலையேற்றம். நிதி நிலை அறிக்கையில் இதற்கான எந்தவொரு தீர்வும் இடம்பெறவில்லை. தனிநபர் வருமான வரி விகிதத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாதது நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆகவே, நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகளின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவது, கிராமப் புற ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
பொருளாதாரம்
வளர மக்கள் பொருள்களை வாங்கவேண்டும். ஆனால், இன்று
நுகர்வில் சரிவு ஏற்பட்டுள்ளது. வருமான வரி அடுக்கில் பெரிய மாற்றங்கள் இல்லாததால், நடுத்தர வர்க்கத்தினரின் கையில் செலவு செய்யப் பணம் இருப்பதில்லை.
இந்நிலையைக்
கூர்ந்து நோக்குகின்ற பொருளாதார வல்லுநர்கள், “இந்த நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட் வரிக்குறைப்பு மற்றும் சலுகைகள் மேல்நோக்கிய கோட்டை வலுப்படுத்துகின்றன; ஆனால், ஏழைகளுக்கான மானியக் குறைப்பு கீழ் நோக்கிய கோட்டை மேலும் பள்ளத்தில் தள்ளுகிறது” என்கின்றனர்.
மேலும், ஒன்றிய அரசு வசூலிக்கும் ‘செஸ்’ வரிகள் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இந்தப் பட்ஜெட்டில் ‘செஸ்’ வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன; இது மாநிலங்களின் நிதிச் சுயாட்சியைப் பறிக்கும் செயல் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அவ்வாறே,
கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடும் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளது. இவ்வேளையில்...
‘எங்கள் வீட்டில்...
எரியும்
அடுப்பில் எண்ணெய் இல்லை;
எங்கள்
தலையிலும் எண்ணெய் இல்லை!
பிறகே
காரணம் அறிந்து கொண்டேன்...
எங்களை
ஆள்பவர்கள் தலையில்
எதுவுமே
இல்லையென்று!’
எனும்
புதுக்கவிதை வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.
இன்றைய
ஒன்றிய அரசோ பொருளைச் சேர்ப்பதில் காட்டுகின்ற ஆர்வமும் திட்டமும் சூழ்ச்சியும், அதை முறையாகப் பகிர்ந்தளிப்பதில் காட்டுவதில்லை. மாற்றாந்தாய் மனநிலையில் பாரபட்சமே காட்டுகிறது. தன் விருப்பத்திற்கு இணங்கும் மாநிலங்களுக்கு வாரி வழங்குவதும், உரிமைக் குரல் எழுப்பும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பட்டினி போடுவதும் எந்த விதத்தில் அறமாகும்?
பட்ஜெட்
என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல; அது மக்களின் நம்பிக்கை. ஆனால், 2026-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, பெருநிறுவனங்களின் கல்லாவை நிரப்பும் ஒரு கருவியாகவே உள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் இந்தப் போக்கு இந்தியச் சனநாயகத்திற்கு நலமானதல்ல. மாநிலங்களின் பங்களிப்பை அங்கீகரிக்காத எந்த ஒரு நிதிநிலை அறிக்கையும் முழுமையானதாக இருக்க முடியாது.
இறுதியாக,
தமிழ்நாட்டைப் புறக்கணிப்பது என்பது வெறும் அரசியல் இலாப-நஷ்டம் அல்ல; அது ஒரு தேசியக் குற்றம். கார்ப்பரேட் முதலாளிகளின் கைத்தடியாகச் செயல்படுவதை நிறுத்தி விட்டு, பாமர மக்களின் பசி தீர்க்கும் திட்டங்களை அரசு முன்னெடுக்காதவரை இத்தகைய நிதிநிலை அறிக்கைகள் காகிதப் பூக்களாகவே இருக்கும். அவை மலர்ந்திருக்கும்; ஆனால், மணமிருக்காது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்