news-details
ஞாயிறு மறையுரை
பிப்ரவரி 15, 2026 ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு சீஞா 15:15-20; 1கொரி 2:6-10; மத் 5:17-37 - தெளிந்த இதயம்... தேர்ந்தெடுக்கும் தெய்வீகம்!

கடவுள் மனிதரைப் படைத்தபோது, அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்தார். ஆனால், அந்தச் சுதந்திரம் என்பது நாம் விரும்புவதை எல்லாம் செய்வதல்ல; மாறாக, எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுப்பது. இதயம் என்பது வெறும் உணர்ச்சிகளின் இருப்பிடம் மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் தீர்மானங்கள் பிறக்கும் இடம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் முதலில் நம் இதயத்தில் ஓர் எண்ணமாகவோ அல்லது ஒரு தீர்மானமாகவோதான் பிறக்கிறது. நம் இதயத்தைத் தூய்மைப்படுத்தும்போது, நாம் எடுக்கும் ஒவ்வொரு சின்னஞ்சிறு முடிவும் கடவுளுக்கு உகந்ததெய்வீகத் தேர்வாகமாறும்.

இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம். இன்றைய வாசகங்கள் நாம் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்கு உகந்த வழியைத் தேர்ந்துகொள்ளவேண்டுமென அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், ‘உனக்கு முன் வாழ்வும் சாவும் - அதாவது, ‘நன்மையும் தீமையும் வைக்கப்பட்டுள்ளனஎன்கிறார் சீராக்கின் ஞான நூல் ஆசிரியர். ஒவ்வொருவருக்கும் நல்லது - கெட்டதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை - அதாவது விருப்புரிமை அருளப்பட்டுள்ளது. இதனால் ஆசிருக்கும் அழிவிற்கும் அவரவர்தான் பொறுப்பு என்று சீராக் நூல் விளக்குகிறது.

கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்பது அல்லது விட்டுவிடுவது ஒருவரின் விருப்பத்தைப் பொறுத்தது அல்லது அவரவரின் தெரிவைப் பொறுத்தது. கடவுள் அடிமையான நேர்மையாளர்களை அல்ல; சுதந்திரமான நேர்மையாளர்களையே விரும்புகிறார். “மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுளளன; உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள் (சீஞா 15:15,16) என்னும் இந்த வரி இணைச் சட்ட நூலில் மோசே வாழ்வையும் சாவையும் தெரிவுகளாக முன்வைப்பதை நினைவூட்டுகிறது (இச 30:19-20).

சீராக் குறிப்பிடும் நீரும் நெருப்பும் மிக முக்கியமான உருவகங்கள். ஒன்று, இதமான தன்மையையும்; மற்றொன்று, வெம்மையான தன்மையையும் காட்டுகின்றன. சீராக் இதனை இரண்டு எதிர்கருத்துப் பதங்களாக ஒப்பிடுகிறார். நீர் பாதுகாப்பான உருவகமாகவும் அல்லது ஆசிருக்கான உருவகமாகவும், நெருப்பு பாதுகாப்பற்ற உருவகமாகவும் அல்லது தண்டனைக்கான உருவகமாகவும் பாவிக்கப்பட்டுள்ளன. நீரா? நெருப்பா? எதைக் கைநீட்டி எடுப்பது? வாழ்வா? சாவா? எதை விரும்புவது? என்ற கேள்விகளை முன்வைக்கிறார் சீராக். எவரும் சாவை விரும்புவதில்லை. வாழ்வையே அனைவரும் விரும்புகின்றோம். இங்கு சீராக் கூறும் வாழ்வு எப்படிப்பட்டது? வெறுமனே மூச்சுவிடுவதும், இதயம் துடிப்பதும் அல்லது உடல் சார்ந்த செயல்கள் வாழ்வு என்றாகி விடுமா? இவை வெறும் உடல் இயக்கம் மட்டுமே. வாழ்வு என்பது தெரிவுகள் சார்ந்ததுஇறைவன் மீது பற்றுக்கொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. “மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது (லூக் 12:15) என்பது இயேசுவின் படிப்பினை. இங்கே இறைவாக்கினர் சீராக், வாழ்வையும் சாவையும் நம்முன் வைக்கும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா? என்ற கேள்வியை நம்மில் எழுப்புகிறார். வாழ்விற்கும் சாவிற்கும் பொறுப்பாளிகள் மனிதர்களே என்பது இங்கே புலப்படுகிறது. வாழ்வையும் சாவையும் மனிதரின் விருப்பம் இல்லாமல் கடவுளே தீர்மானிக்கிறார் என்ற கூற்று தவறானது.

யூத மக்கள் இறைவனின் வழி வாழ்வது என்பதை இறைச் சட்டங்களின்படி, அதாவது மோசே தந்த சட்டங்களின்படி வாழ்வது என்ற அளவில் மட்டுமே நினைத்துப் பார்த்தனர். இஸ்ரயேல் மதத்தலைவர்கள் சட்டத்தை ஒருகணக்குப் புத்தகமாகமாற்றியிருந்தார்கள். ‘இதைச் செய்தால் பாவம், அதைச் செய்தால் புண்ணியம்என்ற சுயநலக் கணக்குகளே அவர்களிடம் மேலோங்கியிருந்தன. சட்டத்தின் நோக்கம்மனிதனைப் புனிதப்படுத்துவதுஎன்பதை மறந்து, சட்டத்தை வைத்துமனிதனை ஒடுக்குவதுஎன்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். சட்டத்தைப் பின்பற்றுவது என்பது ஏதோ ஒரு கடமையை நிறைவேற்றிவிட்டு, ‘நான் நேர்மையானவன்என்று தம்பட்டம் அடிப்பதல்ல; அது இதயத்திலிருந்து வரும் அர்ப்பணிப்பு. “சட்டம் என்பது அன்பின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். அன்பு இல்லாத சட்டம் வெறும் அடிமைத்தனம்என்றார் புனித இரண்டாம் ஜான்பால். இதைத்தான் இயேசு தம் மலைப்பொழிவில் மட்டுமல்ல, தம் வாழ்நாள் முழுவதும் தெளிவுபடுத்தினார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு, “உங்கள் முற்காலத்தவருக்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் (மத் 5:21,27,33) என்று சட்டத்தைத் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு நம்மை அழைக்கிறார். “கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பொய்யாணை இடாதேபோன்ற வெளிப்படையான சட்டங்களைக் கடந்து, இதயம் எனும் ஆழமான பகுதிக்குச் செல்கிறார். அன்பு, நீதி, இரக்கம் போன்ற மனிதநேயக் குணங்களைக் கொண்டிருந்தால்தான் சட்டம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்ற புதிய வழியில் சிந்திக்க இயேசு அழைக்கிறார். சட்டங்களை வெறும் சடங்காக நிறைவேற்றாமல், அச்சட்டங்களின் பின்னணியில் உள்ள முதன்மையைக் கண்டுபிடித்து, அதை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

பழைய சட்டத்தின்படிகொலைஎன்பது ஒரு குற்றவியல் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இயேசுவின் பார்வையில், ஒருவனை மனதால் வெறுப்பதும், சினம் கொள்வதும், ‘அறிவிலியேஎனத் திட்டுவதும் கூட ஒருவகை கொலைதான். காயின் தன் சகோதரன் ஆபேலைக் கொன்ற வரலாற்றின் முதல் கொலைக்குக் காரணம் சினம், வெறுப்பு, பகையே. மனித உறவுகளை முறித்துப் பகைமையை உருவாக்கும் வன்சொற்களும்கூட குற்றங்களே. ஆகவே, உறவுகளில் விரிசல் விழும்போது இருண்ட இதயத்தோடு இறைவனை வழிபட முடியாது. முதலில், வாழ்க்கையில் நல்ல மனித உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட பிறகுதான் கடவுளுடன் நாம் சரியான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார் இயேசு.

இரண்டாவதாக, இயேசு, விபச்சாரம் செய்வது மட்டும் குற்றமன்று; இத்தகைய பாவச்செயலுக்குத் தூண்டும் இச்சைகளை அகற்றுவதிலும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்கிறார். விபச்சாரம் என்பது உடலில் நடக்கும் ஒரு செயல் மட்டுமல்ல; அது பார்வையில் தொடங்கும் ஒரு கறை. பார்வை தெளிவாக இருந்தால் ஒழிய, உள்ளம் தூய்மை அடையாது. பெண்களை மதிப்பதும் மனைவியைச் சுயநலத்திற்காக மட்டும் பயன்படுத்தாமல் நடத்துவதும் ஒவ்வோர் ஆண்மகனும் கற்றுக்கொள்ளவேண்டும்.

மூன்றாவதாக, ‘பொய்யாணை இடாதேஎன்ற சட்டத்தைத் திருத்தி, ‘ஆணையிடவே வேண்டாம்என்று இயேசு அறிவுறுத்துகிறார். ஏனெனில், கடவுளின் பெயரையோ, விண்ணையோ, மண்ணையோ சாட்சியாக இழுப்பது ஒருவிதமானஆன்மிக மிரட்டல்.’ அது நாம் கடவுளுக்கு ஏற்படுத்தும் இழுக்கு. அது மட்டுமன்று, மனித உறவுகளுக்கும் ஏற்படுத்தும் இழுக்குதான். ஏன் மக்கள் ஆணையிடுகின்றனர்? தங்கள் பேச்சின் மீது நம்பிக்கை இல்லாததால் தான். எவரொருவர் உண்மையாக வாழ்கிறாரோ அவருக்குச் சத்தியம் என்ற கூடுதல் பாதுகாப்புத் தேவைப்படாது. அவரது வார்த்தையே ஒரு புனிதமான சட்டமாக மாறும்.

எனவே, இயேசு இன்று நம்மிடம் எதிர்பார்ப்பது, மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் விட மேலான ஒரு நெறியைத்தான். நம் கோபம், நம் பார்வையில் உள்ள அசுத்தம், நம் பேச்சில் உள்ள வன்முறை என அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கச் சொல்கிறார். “பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வரும்போது, உன் சகோதரர் மீது உனக்கு மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால், அங்கேயே காணிக்கையை வைத்துவிட்டு முதலில் போய் அவரோடு ஒப்புரவாகுஎன்று இயேசு கட்டளையிடுகிறார். இயேசு தரும் இடுக்கண் வழி அவர் போதிக்கும் இறைஞானமே. இது அன்பிற்கும் மன்னிப்பிற்கும் ஒன்றிப்பிற்கும் ஆதரவானது. ஆகவே, மனிதர் தெரிவு செய்ய வேண்டியது உலக ஞானத்தை அல்ல; மாறாக, இறைஞானத்தையே. இந்த இறைஞானம் வேறொன்றுமில்லை, அது சிலுவையின் ஞானமே என்கிறார் பவுல். எனவே, நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இறைவனின் ஞானத்தினால் வழிநடத்தப்படட்டும்.

நிறைவாக, இறைவனின் சட்டங்கள் நம்மை ஒடுக்குவதற்காக அல்ல; நம்மை உயர்த்துவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளன என்பதை இன்று நாம் உணர்வோம். அன்பினால் தூண்டப்பட்டு நம் இதயங்களைத் தூய்மைப்படுத்துவோம். நம் உறவுகள், பார்வைகள் மற்றும் பேச்சுகள் அனைத்திலும் சட்டத்தின் ஆன்மாவான அன்பைப் பொதித்து வைப்போம். நம் வாழ்வின் ஒவ்வொரு தேர்வையும் அன்பின் அடிப்படையில் எடுப்போம். அவ்வாறு தெளிந்த இதயத்தோடு நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம்மை மண்ணுலக மனிதர்களிலிருந்து விண்ணுலகின் தெய்வீகப் பிள்ளைகளாக மாற்றும் பேரொளியாக அமையட்டும்.