news-details
ஆன்மிகம்
பொதுநிலையினரின் பாதுகாவலர் புனித தேவசகாயம்

நமது தமிழ் மண்ணின் மறைச்சாட்சி புனித தேவசகாயத்திற்குஇந்தியப் பொதுநிலையினரின் அருள்காவலர்எனும் சிறப்புப்பெயர் சூட்டித் திரு அவை அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. அதைக் கொண்டாடும் வகையில் அவர் மறைச்சாட்சியாக உயிர்நீத்த கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள தேவசகாயம் குன்றின் அடிவாரத்தில் இவ்வாண்டு சனவரி 14-ஆம் நாள் மாபெரும் விழா நடத்தப்பட்டது. பல்லாயிரம் மக்களும், ஒரு நூறு அருள்பணியாளர்களும், இரு பால் துறவியரும், தமிழ்நாட்டின் மூன்று பேராயர்களும் ஆயர்களும் பங்கேற்றனர். இவ்விழா திருப்பலியில் திருத்தந்தையின் இந்தியத் தூதர் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புனித தேவசகாயத்தைஇந்தியப் பொதுநிலையினரின் அருள்காவலர்எனும் அறிக்கையைப் படித்தார். திருப்பலி முடிவில்புனித தேவசகாயம் அருள்வாழ்வு இயக்கம்தொடங்கி வைக்கப்பட்டது. மிகச்சிறப்பாக நடந்தேறிய இந்தக் கொண்டாட்டம் தமிழ்நாடு திரு அவைக்குப் பெருமையும் பெரு மகிழ்வும் சேர்க்கிறது என்பதில் ஐயமில்லை.

மறைச்சாட்சி தேவசகாயம் ஓர் இல்லற வாழ்வு நடத்தியவர். பொதுவாழ்வில் நேர்மை மற்றும் நீதியோடு ஈடுபட்ட அரசு அலுவலர். அவரைப் போலவே இன்றைய நம் பொதுநிலையினரும் அவர்களுக்கு உரிய அழைப்பிற்கு ஏற்பத் திரு அவையிலும் சமூகத்திலும் சாட்சிய வாழ்வு வாழ்ந்திடவேண்டும்; அவர்கள் திரு அவையின் அனைத்துப் பணிகளிலும் இணைந்து செயல்படவும், தங்களுக்கே உரிய சமூகத்துறைகளில் நற்செய்தி உளப்பாங்குடனும் தலைமைப்பண்பு உள்ளவர்களாக ஆற்றலுடன் ஈடுபடவும்வேண்டும்.

பொதுநிலையினரும் இறையழைத்தல் பெற்றவர்களே!

இறையழைத்தல் என்பது அருள்பணியாளர் மற்றும் துறவியருக்கு மட்டுமே உரியது எனும் புரிதலே இன்றும் திரு அவையில் பரவலாகக் காணப்படுகிறது. இறையியல் படிப்பு, பங்கேற்பு அமைப்புகள் மற்றும் பணிக்குழுக்களின் தலைமை, அனைத்துத் திரு அவை நிறுவனங்களின் மேலாண்மை என்பன பெரிதும் திருநிலையினரது தனி உடைமையாகவே இருக்கின்றன. பொதுநிலையினர் - பணிப்பொறுப்பற்ற வெறும் பயனாளர்கள், உதவியாளர்கள் அல்லது ஆலோசகர்கள் எனும் புரிதலும் நடைமுறையுமே இன்றுவரை பெரிதும் மேலோங்கி நிற்கின்றன. இத்தகைய நடைமுறையால் திரு அவைக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் பல. ஏனெனில், உலகிற்கு ஒளியாகவும் மலைமேல் நகரமாகவும் திகழ்ந்து (மத் 5:14), இறையாட்சிக்குச் சான்றுபகர்வதும், நிலத்தின் உப்பு (மத் 5:13), மாவோடு பிசைந்து வைக்கப்பட்ட புளிப்பு மாவு (மத் 13:33) என்பவைபோல அதைப் பரவலாக்கும் கருவியாகவும் செயல்படுவதே திரு அவையின் அழைப்பும் அலுவலும்.

நீங்கள்உலகின் கடை எல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் (திப 1:8) என்பது தம் சீடர்கள் அனைவருக்கும் இயேசு தந்த அழைப்பும் ஆணையும். இயேசுவின் இறையாட்சி இலட்சியத்தையும், அதன் விழுமியங்களையும் வாழ்வாக்கி, அவற்றின் சாட்சிகளாகத் திகழ்வதும், அவற்றிற்கேற்ப தங்களது சமூகத்தை வளர்த்தெடுப்பதே உண்மையான கிறித்தவச் சீடத்துவ வாழ்வு. திருமுழுக்கின் வழியாகப் பெறப்படும் இந்த அழைப்பும் பொறுப்பும் அனைத்து நம்பிக்கையாளருக்கும் உரியது என்றாலும், முதலிலும் முக்கியமாகவும் அவை பொதுநிலையினருக்கே உரியன.

திருமுழுக்குக் குருத்துவமே முதன்மையானது

இரண்டாம் வத்திக்கான் சங்கப் படிப்பினையில், திரு அவை என்பது இறைமக்களின் ஒரே குலமே! ஏனெனில், திருமுழுக்குப் பெற்ற அனைவரும் இறைமக்கள் குலத்தவரும், குருக்களின் கூட்டத்தினருமே. இதனைப் புனித பேதுரு, “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர்; அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தார்; அவரது உரிமைச் சொத்தான மக்கள் (1பேது 2:9) என எடுத்துரைக்கின்றார். “தம் செயல்கள் அனைத்தின் வழியாக ஆவிக்குரிய பலிகளைப் படைக்கவும், உலகெங்கும் கிறிஸ்துவுக்குச் சான்றுபகரவும், அரச குருக்களின் கூட்டத்தினராகவும் (1பேது 2:4-10) இவர்கள் திருநிலைப்படுத்தப் பெறுகிறார்கள் (பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி 3; திரு அவை 10) என்பது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கூற்று

திருமுழுக்கில் பெறப்படுவதே முதன்மையான குருத்துவத் திருநிலைப்பாடு. அருள்பணியாளர் மற்றும் ஆயர் திருநிலைப்பாட்டில் பூசப்படும் அதே கிறிஸ்மா எண்ணெய்யே திருமுழுக்குப் பெறுபவரது உச்சந்தலையில் பூசப்படுவது இதை அடையாளப்படுத்துகிறது. அப்பொழுது கூறப்படும் பின்வரும் வாய்ப்பாடும் இதை உறுதிப்படுத்துகிறது: “அரசரும் குருவும் ஆசிரியருமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு ஓர் உடலாக ஒன்றித்திருந்து நிறைவாழ்வு பெறுவீர்களாக.”

திருமுழுக்கில் பெறப்படும் குருத்துவத் திருநிலைப்பாடு முதன்மையானது மட்டுமல்ல; அதுவே மிக முக்கியமானதும் அனைத்திலும் உயர்வானதுமாகும். ஏனெனில், திருமுழுக்கில் பெறப்படுவது இயேசு கிறிஸ்துவோடு ஓருடலாக்கம்; அருள்பணியாளர் திருநிலைப்பாட்டில் நிகழ்வதோ ஒத்துருவாக்கம். ஓருடலாக்கம் ஒத்துருவாக்கத்தைவிட அதிக நெருங்கிய ஒன்றிப்புதானே!

திருமுழுக்கின் வழியாக இயேசுவின் குருத்துவப் பணியில் பங்குபெற்று, அவருடைய சீடர்களாக வாழவும் செயல்படவும் நம்பிக்கையாளர்கள் அனைவரும் பெற்றுள்ளது பொதுவானதும் அடிப்படையானதுமான அழைப்பு. அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய தனி அழைப்பும் உண்டு. அது தத்தம் தளங்களில் தாங்கள் பெற்றுள்ள பல்வேறு அருங்கொடைகளுக்கும், வெவ்வேறு தனி அழைத்தல்களுக்கும் ஏற்ப இறைவாக்கு உரைத்தல், புனிதப்படுத்துதல், தலைமையேற்றல் எனும் முப்பெரும் பணிகளை அவர்கள் ஆற்றுவதே. இதனால், அருள்பணியாளர் நிலையும் துறவு வாழ்வும் இறையழைத்தல்கள் என்றால் இல்லற வாழ்வும், அதற்கு இணையான இறையழைத்தலே. இவ்வழைத்தல் காரணமாக, குடும்பத்தில் பெற்றோரும், கல்விக் கூடத்தில் ஆசிரியர்களும், மருத்துவமனைகளில் மருத்துவரும் செவிலியருமே முப்பணிகளையும் ஆற்றும் முதல் நிலைக் குருக்கள். அவர்கள் தத்தம் தளங்களிலும் துறைகளிலும் நன்கு முப்பணிகளையும் ஆற்ற உதவுகின்றவரே அருள்பணியாளர்.

மேற்கூறிய பல்வேறு தனி அழைத்தல்களுக்கு இடையே மாண்பிலும் பணிப்பொறுப்பிலும் புனிதத்திற்கான அழைப்பிலும் உயர்வு தாழ்வு இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கப் படிப்பினையைப் பின்பற்றித் திரு அவைச் சட்டம் இதைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் பின்வருமாறு எடுத்துரைத்துள்ளது: “கிறிஸ்து இயேசுவுக்குள் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் மாண்பிலும் செயல்பாட்டிலும் சமமானவர்கள் (திரு அவைச் சட்டம் 208; 2வத். திரு அவை 32).

புனிதம் அடைவதற்கு அவர்கள் அனைவருக்கும் அருளப்பட்டிருக்கும் அழைத்தலிலும் உயர்வு-தாழ்வு இல்லை: “அனைத்து மனிதரின் பல்வேறு வாழ்க்கைமுறைகளிலும் பணிப்பொறுப்புகளிலும் ஒரேவகைத் தூய்மைநிலையே செயலாக்கம் பெறுகிறது (இரண்டாம் வத். திரு அவை 41). ஏனெனில், அன்பு மற்றும் தியாகத்தின் உயர்வால் மட்டுமே புனிதத்தில் உயர்வு வருமே அன்றி எவரும் பெறும் திருநிலைப்பாட்டாலோ வகிக்கும் பதவியாலோ, நிலையாலோ அல்ல.

பொதுநிலையினரின் பங்கேற்பையும் பணிகளையும் ஊக்கப்படுத்துவோம்

பொதுநிலையினர் முப்பணி ஆற்றும் முதல் தளம் அவர்களது குடும்பம். பெற்றோரே அங்கு முதன்மையான இறைவார்த்தை அறிவிப்பாளர்கள்; அவர்களைப் புனிதப்படுத்துபவர்கள், அவர்களை நன்நெறிப்படுத்துபவர்கள். சாதி, சமய, இன, மொழி, படிப்பு, பதவி, பணம் எனும் வேறுபாடு பாராது உற்றாருடனும் உறவினருடனும் அடுத்திருப்போருடனும் நல்லுறவு கொண்டு, விருந்தோம்பல் செய்து, ஏழைகளுக்கு உதவி வாழ்வதும் அவர்கள் முப்பணி ஆற்றும் முறைகளே. இவ்வாறு தங்கள் குடும்பத்தை இல்லத் திரு அவையாகயும் முதல்நிலை இறையாட்சிக் குழுமமாகவும், வளர்த்தெடுப்பதுவே அவர்களது குருத்துவப் பணி. அதுவே அவர்கள் புனிதம் அடையும் முதல் தளம்.

அவர்கள் முப்பணிகளை ஆற்றும் அடுத்தத் தளம் அவர்களது கிறித்தவக் குழுமம். அதன் வழிபாட்டிலும், பல்வேறு பணிகளிலும் தங்களால் இயன்ற முழு ஈடுபாட்டுடன் பங்கேற்பதன் வழியாக அவர்கள் இறையாட்சிப் பணி ஆற்றுகின்றனர். இவற்றுள் முக்கியமான ஒன்று, அவர்கள் தங்களது அன்பியத்தில் தன்னார்வ நற்பணிகளில் ஈடுபடுவது, பங்கில் உள்ள பணிக்குழுக்கள், திருத்தூதுக் குழுமங்கள் என்பனவற்றுள் ஒன்றில் இணைந்து ஆர்வமுடன் பணியாற்றுவது, பங்கு அருள்பணிப் பேரவை, நிதி குழு என்பவற்றின் உறுப்பினர்களாகச் செயல்படுவது என்பவையும் பொதுநிலையினரின் இறையாட்சிப் பணிமுறைகளே.

(தொடரும்)